Skip to Content

V. நோய்

V. நோய்

1. கான்சர்

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் செய்த யோகத்தின் பலன்கள் பல. நேரடியான தெய்வீக அனுக்கிரகம் போக, தீய சக்திகளை அழித்து, உலகில் போர் இருத்தல் கூடாது என்பதற்காகவும், நோயின் மூலத்தை அழித்தும் பல வேலைகளைச் செய்திருக்கிறார்கள். ‘சூட்சும உலகில் காச நோயையும், கான்சரையும் அழித்துவிட்டோம். எனவே, அவை இனி உலகைவிட்டுப் போய்விடும்’ என அன்னை கூறி இருக்கிறார்.

‘ஒரு செயல் உலகில் நிறைவேற வேண்டுமானால் அச்செயல் சூட்சும உலகில் முதலில் முழுமையாக உருப்பெறுகிறது. அதன் பின்னரே ஸ்தூல உலகமான நம் உலகத்தில் நடைபெறுகிறது’ என்பது ஆன்மீக உண்மை. அதனால்தான் எதிர்காலத்தில் நடக்கக் கூடியவற்றை சகுனங்களால் அறிய முடிகிறது; கனவில் காண முடிகிறது; ஜோதிடரால் முன் கூட்டியே பலன் சொல்ல முடிகிறது; ‘இந்தக் காரியம் இத்தனை மணிக்கு நடக்கும்’ என்று நாடி ஜோதிடரால் சொல்ல முடிகிறது.

சுமார் 60 வயதுள்ள பிரம்மச்சாரி, பெரிய இடங்களில் அவர்களுக்கு ஆகவேண்டிய காரியங்களில் துணை நின்று காலத்தை ஓட்டிவிட்டார். அவருக்கென்று குடும்பம் இல்லை. ஆனால் அவருடைய தம்பிக்குக் குடும்பம் இருந்தது. பிரம்மச்சாரி அவருக்கு உதவி செய்ய நினைத்தார். அதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு இரண்டு பிளாட் வாங்க முடிவு செய்து, அதுபற்றி அவரிடம் பேசினார்.

தம்பிக்காரர் ஜோதிடத்தில் வல்லவர். அண்ணனுடைய ஜாதகத்தைப் பார்த்தார். பிறகு, ‘இன்னும் நான்கு நாட்களில் உங்கள் பெயரில் ஒரு பெரிய வீடு ரிஜிஸ்டராகப் போகிறது. அதற்குள் எதற்காகப் பிளாட் வாங்க வேண்டும்?’ என்று கேட்டார்.

‘எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பமா?’ பிரம்மச்சாரியால் நம்ப முடியவில்லை. ‘எனக்குத் தெரியாமல் அப்படி ஒரு பெரிய வீடு வானத்தில் இருந்தா குதித்துவிடப் போகிறது? எதற்கும் நான்கு நாள் பொறுத்துப் பார்க்கலாம்’ என்று முடிவு செய்தார். இரண்டு நாட்கள் சென்றன. அவர் வேலை செய்த பெரிய இடத்து முதலாளியும், அவரால் பயன் அடைந்த மற்ற முதலாளிகளும் அவரை அழைத்து, ‘உங்கள் சேவைக்குப் பிரதிபலனாகவும், உங்கள் அறுபதாம் ஆண்டு நினைவுப் பரிசாகவும் அளிப்பதற்கு ஆறு இலட்ச ரூபாயில் ஒரு பெரிய வீட்டை விலை பேசி முடித்திருக்கிறோம். நாளை மறுநாள் பத்திரப் பதிவு நடக்க இருக்கிறது’ என்றார்கள். அவர்கள் அப்படியொரு முடிவு செய்திருப்பது அவருக்குத் தெரியாது. ஆனால் ஜோதிடரான அவர் தம்பிக்கு அது சூட்சுமமாக முன்கூட்டியே தெரிந்திருந்தது.

பிரபா என்பவர் தஞ்சை மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. அவர் அன்னையை வணங்க ஆரம்பித்த பிறகு, தன் தந்தைக்கு ஏற்பட்ட நோய் குணமாவதைப் பற்றி பக்தியோடும், பரவசத்தோடும் குறிப்பிட்டு எனக்கொரு கடிதம் எழுதினார். அதை அப்படியே தருகிறேன்:

“நான் டிசம்பர் 1985 முதல் அன்னையின் பக்தையாகி, அவரை இடைவிடாது பிரார்த்தனை செய்து வருகிறேன். அன்று முதல் இன்று வரை நான் அன்னையிடம் செய்து கொண்ட எல்லாப் பிரார்த்தனைகளும் நிறைவேறிவிட்டன. எந்த ஒரு தீர்க்க முடியாத கஷ்டமும் அன்னையிடம் முறையிட்டால் தீரும் என்பதனை, என் தந்தையின் நோய் நீங்கியதிலிருந்து உணர்ந்து கொண்டேன்”. “என் தகப்பனாருக்குத் தற்சமயம் 65 வயது. அவர் 1984-ஆம் ஆண்டு முதலே திட உணவுகளை உண்ணும் போது அதிகமாக இருமுவார். நிறையத் தண்ணீர் குடித்துத்தான் கஷ்டப்பட்டுத் திட உணவுகளைச் சாப்பிடுவார். அன்னையை நான் தெய்வமாக உணர்ந்த பிறகு, ‘அன்னையே! அவருக்கு ஏன் சாப்பிடும் போது இருமல் வருகிறது என்றே தெரியவில்லை. நீங்கள் தான் என் அப்பாவைக் குணப்படுத்த வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்வேன். அவர் உணவை விழுங்கும்போது தொடர்ந்து இருமியதால், எங்கள் வீட்டில் எல்லாரும் மிகவும் பயந்து போனார்கள்”.

1987-ஆம் ஆண்டு முதல் அவர் சாப்பிடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். நான் அது பற்றி டாக்டரிடம் கேட்டபோது ‘இது வயதுக் கோளாறு’ என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டார். 15-09-87 முதல் அவர் திட உணவை எப்படிச் சாப்பிட்டாலும், அது சளியுடன் வாந்தியாக வர ஆரம்பித்தது. அது பற்றி நான் மறுபடியும் கேட்டதற்கு, ‘சில பரிசோதனைகள் செய்ய வேண்டும். அவருடைய உணவுக்குழாயில் கட்டி ஏற்பட்டு இருக்கலாம்; புண்ணாகவும் இருக்கலாம்; புற்று நோயாகவும் இருக்கலாம்’ என்றார் அவர்.

நான் அன்னையிடம், ‘என் அப்பாவை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டு சிறு காணிக்கையை அனுப்பி வைத்தேன். இதற்கிடையில் செய்த பரிசோதனையில் உணவுக் குழாயும் வயிறும் சேரும் இடத்தில், உணவுக்குழாயின் முனையில் கான்சர் இருப்பதாய் த் தெரிய வந்தது. அதை வேறு சில பரிசோதனைகளும் உறுதிப்படுத்தின.

05-10-87 அன்று என் தந்தையின் உணவுக் குழாயினுள் ஏற்பட்டிருந்த சதை வளர்ச்சியின் சிறு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்தச் சோதனையின் முடிவும் உணவுக் குழாயில் புற்று நோய் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது. என் சகோதரி ஒரு பெரிய மருத்துவமனையில் பணியாற்றுகிறாள். அவள், “அறுவை சிகிச்சையின் மூலம் புற்று நோய் ஏற்பட்டுள்ள பகுதியை நீக்க முடியுமா?” என்று பல மருத்துவர்களை அணுகிக் கேட்டாள்.

அவர்கள் அனைவரும், “புற்று நோய் பகுதி மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதால், தஞ்சையில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம், மேலும் அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரம் கழித்துத்தான் நோயாளியின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியும்” என்று கூறி விட்டனர்.

அதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் பயந்தனர். ஆனால் நானோ கலங்காமல் “அன்னை காப்பாற்றுவார்” என்று உறுதியாக நம்பி இடைவிடாமல் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். 25-10-87 அன்று அறுவை சிகிச்சைக்காக நாள் குறிக்கப்பட்டது.

இதற்கிடையே செப்டம்பர் இறுதியில் ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கு என் தகப்பனாருக்கு ஏற்பட்டிருந்த புற்று நோயைப் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். அதற்கு அவர், “அன்னையின் பேரருட் சக்தியால் புற்று நோய் எளிதில் தீரும். கவலை வேண்டாம்” என்று பதில் எழுதினார்கள். நானும் என் தந்தையின் நீண்ட ஆயுளுக்காக ஸ்ரீ அரவிந்தர் - அன்னை சமாதியில் வாடா மல்லிகை மலர்களை வைத்துப் பிரார்த்தனை செய்தேன்.

ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எழுதியுள்ள ‘அன்னையின் தரிசனம்’ மூலம் ‘வாடா மல்லிகை மலருக்கு உயிருக்கு வந்த எந்த ஆபத்தையும் போக்கி, நீண்ட ஆயுளைக் கொடுக்கக் கூடிய வல்லமை உண்டு’ என்பதையறிந்தேன். என் தந்தைக்குப் புற்று நோய் என்று அறிந்தது முதல், தினமும் வாடாமல்லிகை மலர்களை அன்னையின் திருவுருவப் படங்களுக்கு வைத்து வணங்கி வந்தேன்.

25-10-87 அன்று என் தங்கை பணி செய்யும் மருத்துவ மனையிலேயே என் தந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பாதியில் என் தங்கையை அந்த அறுவை சிகிச்சை அறைக்குள் வருமாறு அழைத்தனர். அங்கு போய்விட்டுத் திரும்பி வந்த பொழுது அவள் முகம் களை இழந்திருந்தது. ‘நான் என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.

என் தந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக ‘ஓப்பன்’ செய்தவுடன், உணவுக் குழாயில் மட்டுமல்லாது வேறு பல இடங்களிலும் நோய் பரவி இருந்ததை மருத்துவர்கள் கண்டனர். உடனே அவர்கள் என் தங்கையை அழைத்து, ‘அம்மா! நோய் மிகவும் பரவி விட்டது. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியாது அதனை உன்னிடம் காட்டி, அவருக்கு வயிற்றில் ஆகாரம் செல்ல ஒரு ரப்பர்க் குழாய் போட அனுமதி வாங்கவே உன்னை அழைத்தோம்’ என்றார்கள்.

அவளும் அனுமதி தந்து விட்டுக் கண்ணீருடன் வெளியே வந்து என்னிடம் விஷயத்தைத் தெரிவித்தாள்.

மேலும் மருத்துவர்கள் அவளிடம், ‘உன் தந்தையின் உணவுக் குழாய் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முற்றிலும் அடைபட்டுவிடும். பிறகு தண்ணீர்கூட அதன் வழியே செல்ல முடியாது. அதிகமாகப் போனால் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரைதான் அவர் உயிரோடு இருப்பார். அதுவரை வயிற்றில் போட்டுள்ள ரப்பர்க் குழாய் வழியாக அவருக்கு ஆகாரம் கொடுக்கலாம்’ என்று பீதியைக் கிளப்பிவிட்டார்கள்.

என் தந்தையை அறுவை சிகிச்சை அறையிலிருந்து அவருக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குக் கொண்டு வந்தனர். நானும், என் சகோதரர்களும் வீட்டுக்குக் கிளம்பினோம். எங்கள் பின்னாலேயே தொடர்ந்து வந்த என் தங்கை, எங்கள் தந்தையின் நிலையைக் கூறி அழுதாள். என் சகோதரர்கள் மிகவும் கலங்கிப் போனார்கள். நான் மட்டும் கொஞ்சமும் கலங்காமல், ‘யாரால் முடியாவிட்டாலும் என் அன்னை காப்பாற்றுவார்!’ என்று உறுதியாய்க் கூறினேன்.

அறுவை சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தார் என் தந்தை. அப்பொழுதெல்லாம் அவர் வாயாலேயே பெரிய மாத்திரைகளை விழுங்குவார். இதற்கிடையே chemotherapy ஆரம்பிக்க சென்னை மருத்துவரிடம் சென்றோம். அவர், ‘இவர் பிழைப்பது மிகவும் கஷ்டம்’ என்று கூறிவிட்டார். என்றாலும் எங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிகிச்சையை ஆரம்பித்தார். அச்சமயம் என் தந்தை வாயால்தான் ஆகாரங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அன்னை சமாதி அடைந்த நாளான நவம்பர் 17-ஆம் தேதி அன்று நான் உள்ளம் உருகி என் இல்லத்திலிருந்து அன்னையைப் பிரார்த்தனை செய்தேன். அதற்குப் பிறகு என் தந்தை திட உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வாயால் சாப்பிட ஆரம்பித்தார். அவருடைய ஜாதகமோ ‘இதுதான் அவருடைய முடிவு காலம்’ என்றது.

01-01-88 அன்று பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியில் என் தந்தையின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு, ஸ்ரீ கர்மயோகி அவர்களிடமும் ஆசி பெற்றேன். அதற்குப் பிறகு என் தந்தைக்கு வேறு சில பரிசோதனைகளும் நடந்தன. அந்தச் சோதனைகளின் மூலம் என் தந்தையின் உணவுக் குழாயில் ஏற்பட்டிருந்த பாதகமான வளர்ச்சி மறைந்து விட்டது தெரிந்தது. அன்னையின் அருளால் நிகழ்ந்த அற்புதம் இது! என் தந்தைக்கு மேலும் சில காலம் ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

என் தந்தையின் வயிற்றில் போடப்பட்ட குழாய் வழியாக நாங்கள் ஒரு நாள் கூட அவருக்கு ஆகாரம் கொடுக்கவில்லை. அந்தக் குழாய் 26-03-88 அன்று அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது. ஏப்ரல் மாதக் கடைசியிலிருந்து அவர் மற்றவர்களைப் போலத் திட உணவுகளைச் சாப்பிட்டு வருகிறார். மேலும் அவர் தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதோடு, முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்.

15-06-88 அன்று அவருக்கு எண்டாஸ்கோப் பரிசோதனை நடந்தது. அதன் முடிவு: “நோயாளிக்குப் புற்று நோயின் சுவடே இல்லை.”

‘அமுதசுரபி’ (பிப்ரவரி 87) இதழில் ஸ்ரீ கர்மயோகி அவர்களின் கட்டுரையில், அன்னையார் முற்றிய நிலையில் இருந்த நுரையீரல் புற்று நோயைப் போக்கி அருளியதைப் படித்தேன். என் வாழ்விலும் அன்னையின் அருளைப் பெரும் அளவில் உணர்ந்துவிட்டேன். அன்னையின் எல்லை இல்லாத கருணையே என் தந்தையைக் கொடிய நோயிலிருந்து காப்பாற்றியது. மருத்துவ உலகம் வியக்கும் வண்ணம் அவர் சாதாரணமாகவும், தாராளமாகவும் சாப்பிட்டுக் கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்.

முதலில் என் தந்தைக்குப் புற்று நோய் என்று கண்டுபிடித்த டாக்டரே பிறகு என்னிடம், “உங்கள் அன்னை சக்தி வாய்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். என்றாலும் அவருடைய சக்தியை உங்கள் தந்தையின் நோய் குணமானதில்தான் நான் முழுமையாக உணர்ந்தேன்!” என்று கூறினார்.

இவ்வளவுக்கும் என் தந்தை அன்னையின் அடியார் அல்லர். அவர் அடியாராக இருந்திருந்தால், அன்னையின் அருள், மருத்துவம் இல்லாமலேயே குணப்படுத்தி இருக்கும். புற்று நோய்க்கான எல்லா மருத்துவங்களும் அவருக்குச் செய்யப்பட்டன. அம் மருத்துவத்தின் தீய விளைவுகள் எதுவும் அன்னையின் அருளால் அவருக்கு ஏற்படவில்லை. அவர் அன்னையிடம் நம்பிக்கை இல்லாதவராக இருந்ததால், அன்னை அவரை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தி விட்டார். எளியவளாகிய என் பிரார்த்தனையை ஏற்று, இவ்வளவு பெரிய உதவியைச் செய்த தாயின் கருணைக்கு என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகளோ, வழிகளோ இல்லை.

என் தந்தைக்குத் தன்னை மருத்துவம் கைவிட்டு விட்டதும் தெரியாது; அன்னைதான் குணப்படுத்தினார் என்பதும் தெரியாது. ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த எல்லா மருத்துவர்களுக்கும் அன்னைதான் குணப்படுத்தினார் என்பது தெரியும்.

நான் ஸ்ரீ கர்மயோகி அவர்களிடம், “புற்றுநோய் என்றால் ஆயுள் முடிவு என்று உலகமே பயப்படுகிறது. அன்னையின் அருள் என் தந்தையைப் போலவே எல்லா நோயாளிகளையும் குணப்படுத்தும் என்பதை, இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு இதனை எழுதியுள்ளேன்.

“அன்னையின் அடியார்கள் வாழ்வில் அற்புதங்கள் தினமும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் அன்னையின் ஒளி, என்னை ஒளிமயமான வாழ்க்கைப் பாதையில் அழைத்துச் செல்கிறது. அன்னைக்கு என் நன்றியைத் தெரிவிக்க நினைக்கும் போது வாயிலிருந்து வார்த்தைகளே வருவதில்லை; தொண்டை அடைத்து, கண்களிலிருந்து கண்ணீர்தான் புரண்டு வருகிறது.”

*************

அன்னையின் தரிசனம்

‘அமுதசுரபி’யில் 1980, 1981-இல் வெளிவந்த 25-க்கு மேற்பட்ட கட்டுரைகளை நம்முடைய முதல் வெளியீடாக 1986-இல் பிரசுரித்தோம். அதன் பின் பல புத்தகங்கள் வெளியிட்டாலும், அன்பர்கள் இப்புத்தகத்தையே விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அன்னை கடல் தேவதையுடன் உரையாடியது, ஆரோவில் நகரத்திலுள்ள ஆலமரத்தின் துன்பத்தைப் போக்கியது, விநாயகர் அன்னையிடம் வந்து தன் பிரகாரத்திற்கு இடம் கேட்டது ஆகிய நிகழ்ச்சிகள் இதில் விவரிக்கப்படுகின்றன.

சில அமெரிக்க அன்பர்களின் அனுபவங்களும், மெக்சிகோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியும், ரிஷ்ய சிருங்கரின் அம்சம் உள்ள ராபர்ட்டைப் பற்றிய கட்டுரையும், 1½ கோடியை இழந்து திவாலான அமெரிக்கர் அதைத் திருப்பிப் பெற்றதும் போன்ற கட்டுரைகள் முதல் பாகத்தில் வெளியாகியுள்ளன.

அன்னையின் தரிசனம் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்திருக்கிறது.

***********



book | by Dr. Radut