Skip to Content

10. அமுதசுரபி

அமிர்தத்தைத் தேடி பாற்கடலைக் கடைய, ஆரம்பத்தில் கிடைத்தது ஆலகாலம். அதுவே சிருஷ்டியின் அமைப்பும், சிறப்பும் ஆகும். வாழ்வின் இருபுறங்கள் ஒளியும், இருளும் ஆகும். அதைப் போன்றே ஆலகால விஷமும், அமிர்தமும் சிருஷ்டியின் இரு கோடிகள் ஆகும். சுவர்க்கத்தை நாடிப் போனால் வழியில் நரகம் வரும். நரகத்தைத் தாண்ட மறுப்பவர்கள் சுவர்க்கத்தை அடைய முடியாது என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் வாக்கு. ஆதிநாள் முதல் இன்றுவரை உள்ள நிலை இது. பூரணயோகம் மனித வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்ற முயலும்பொழுது சிருஷ்டியின் அடிப்படையையே மாற்றிவிடுகிறது. சிருஷ்டியின் அஸ்திவாரம் ஆலகாலமென்றால், பூரண யோகம் ஆலகாலத்திலிருந்து ஆரம்பித்து அமிர்தத்தை நாடும் மனிதனுக்கு ஆலகாலத்தை அமிர்தமாக மாற்றிக் கொடுக்கிறது. இதுவே பூரணயோகத்தின் இலட்சியம். இந்த யோகத்தை மேற்கொள்ளும் சாதகனைப் பூரணயோகம் அத்தகைய மாற்றத்தை அவனுள் ஏற்படுத்தக் கோருகிறது. சாதகன் தன்னுள் உறையும் ஆலகாலத்தைத் தன் ஆத்ம சக்தியினால் அமிர்தமாக மாற்ற வேண்டும். சாதகன் மனித குலத்தின் பிரதிநிதியானதால் அவனுள் ஏற்பட்ட மாற்றம் பின்னர் உலகத்தில் ஏற்பட வாய்ப்புண்டு.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் பூரண யோகத்தை மேற்கொண்டு சிருஷ்டியை முழுவதும் ஒளிமயமாக்க முயன்றனர். அவர்களை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வழங்கும் பரிசு சிறப்பானது. எளிய மனிதன் தன் உள்ளுணர்வால் பவித்திரப்பட்டு,

பக்தி மேலிட்டு, நேர்மையான வாழ்க்கையை மேற்கொண்டு, அன்னையை நாடி, அவர்களுடைய தெய்வப்பிறப்பின் சிறப்பை அறிந்து வழிபட ஆரம்பித்தால், அவனது வாழ்வை அன்னை அமுதசுரபியாக மாற்றிவிடுகிறார். அதாவது, கொள்ளத்தான் குறையாது', தொட்டனைத்தூறும் மணற்கேணி' என்பதற்கேற்ப வாழ்வின் வளங்கள் எடுக்க எடுக்க அபரிமிதமாக உற்பத்தியாகும். அமுதசுரபி எனும் வாழ்வை அவனுக்குப் பரிசாக அன்னை அளிக்கின்றார். இது பொதுவான பலன். வாழ்வில் சிறப்பான மனிதர்கள் உண்டு. அவரைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்', சாந்தமே உரு ஆனவர்', எதிரியும் வாழ நினைப்பவர்', எதற்கும் கலங்காதவர்', அவரைப் பார்த்தபின் அவரிடம் பொய் சொல்ல வாய் எழவில்லை', உத்தமமான மனிதர்', நடமாடும் தெய்வம்' என்பன போன்ற எண்ணங்கள் எழும் பல வகையான சிறப்பான மனிதர்கள் உண்டு. இவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டால் அன்னை அவர்களுக்குப் பரிசளிப்பதில்லை. வாழ்க்கைக்குப் பரிசாக அவர்களை அன்னை அளிக்கின்றார். அத்தன்மையான மனிதர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவர்கள் தங்கள் ஆத்மாவில் அன்னையைப் பிரதிஷ்டை செய்துவிடுகின்றார்கள். அதன்பின் தங்கள் வாழ்க்கையை அன்னை வாழ்க்கையாக மாற்றி, வாழ்க்கையில் தங்கள் திறனை வெளிப்படுத்த முயலாமல் அன்னையை வெளிப்படுத்த ஆர்வமாகச் செயல்படுகின்றார்கள். சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை அமுதசுரபியாக மாற்றிக் கொடுக்கும் அன்னை சிறப்பான மனிதனுக்குக் கொடுப்பது வேறு. அவனையே அமுதசுரபியாக மாற்றி வாழ்க்கையை அவன் மூலம் வளப்படுத்துகிறார் அன்னை. மனித வாழ்வை தெய்வீக வாழ்வாக மாற்றும் கருவியாக அவனை அன்னை மாற்றி, ஏற்றுக் கொள்கிறார்.

எடுக்க எடுக்கக் குறையும் என்ற நியதியை நாம் அறிவோம். எடுக்க எடுக்கக் குறையாது என்று புராணங்களில் கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு நிலை இருக்க முடியுமா? எடுக்க எடுக்க வளரும் நிலை

உண்டா? வாழ்க்கையில் அத்தகைய நிகழ்ச்சிகளை நாம் காண முடியுமா? முடியும் என்றால் எப்படி அந்த நிலை ஏற்பட்டது? எங்கிருந்து மேலும் சுரந்து வருகின்றது?

கிணற்றிலுள்ள நீரை இறைத்தால் நீர்மட்டம் குறையும். இறைப்பதை நிறுத்தினால் ஊற்றுக் கிளம்பி நீர் மட்டத்தை பழைய நிலைக்குக் கொண்டுவரும். கிணறு உள்ள இடம் ஏரிக்குச் சற்று தூரத்தில் அமைந்திருந்தால், கிணற்று நீரை இறைக்கும்பொழுது பூமியில் ஊற்று கிளம்பி மீண்டும் மீண்டும் கிணற்றை நிரப்பும் சமயத்தில் கிணற்றின் ஊற்றுக்கும், ஏரியில் உள்ள நீரூற்றுக்கும் தொடர்பு ஏற்படுமேயானால் கிணற்றின் நிலை வேறு. இறைக்க இறைக்க நீர் மட்டம் குறைவதற்குப் பதிலாக உயர்வதைக் பார்க்கலாம். ஏரியின் ஊற்றுநீர் கிணற்றடியில் உள்ள ஊற்றோடு தொடர்பு கொண்டுவிட்டதால் கிணற்றுக்கு ஏரியிருந்து நீர் வர ஆரம்பிக்கும். கிணற்று நீரை இறைக்காவிடில், அடி ஊற்றுகள் சிறியதாகவே இருக்கும். கிணற்று நீரை இறைத்தால், அடி ஊற்றுகள் கண்' பெரியதாகி அதிக நீரைக் கொடுத்து, நீர் மட்டத்தை உயர்த்தும்.

சிறிய ஊற்றான கிணறு, பெரிய ஊற்றான ஏரியுடன் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட விளைவு, கிணற்றை அமுதசுரபியாக்குகிறது. எந்தச் சிறிய செயலும், பெரிய நிலைகளுடன் தொடர்புகொண்டவுடன், வற்றாத வளம் கொண்டதாக மாறும். அதுவே அமுதசுரபியின் அடிப்படை. தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்பதில் உள்ளது இந்தத் தத்துவமே. பயில் தோறும் நூல் நயம் போல்' என்பதிலும் இதே அடிப்படை செயல்படுகிறது. நூல் என்பதில் எளிமையானது செய்தி; செய்தியை வெளிப்படுத்துவது கருத்து; கருத்துக்கு அடிப்படை இலட்சியம்; இவற்றை இணைப்பது இலக்கியம். இலக்கியத்தைச் சிறப்புறச் செய்வது இலக்கணம். மாணவன் முதலில் செய்தியை அறிகிறான். ஊன்றிப் படித்து, கருத்தை உணர்கிறான். இலட்சியத்தைப் புரிந்துகொண்டபொழுது அவனுக்கு வியப்பு ஏற்படுகிறது. மேலும் இலக்கண, இலக்கிய சிறப்புகள் நயம்பட வெளிப்படுகின்றன.

அடுக்கடுக்காக உயர்ந்த கட்டங்கள் பின்னணியில் இருப்பதால் நூலைப் பயில்தொறும் நயம் மிகுந்து காணப்படுகிறது.

சொல்லும், செய்தியும் சிறிய ஊற்றானால், கருத்தும், இலட்சியமும் பெரிய ஊற்றாகி, பயில்தொறும் நயத்தை இடையறாது வழங்குகிறது. மிகச் சிறிய அளவில் வாழ்வில் இத்தகைய நிலையை நாம் காணலாம். பொதுவாக அன்னையிடம் வரும் அன்பர்களை வளப்படுத்த அன்னை கையாளும் முறைகளில் இது ஒன்று. வாழ்வில் எந்தப் பகுதியில் ஊற்றுக்குப் பின் பேரூற்றுள்ளதோ அங்கு அன்னை அன்பர்களை அழைத்துச் செல்வார். பின்னர் தொட்டதெல்லாம் பலிக்கும்; எதிர்பாராத அளவில் பலிக்கும். இப்படியெல்லாம் சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன என்பதையே நானறியேன்' என்றவர் பலர். அகில இந்திய ஸ்தாபனத்தின் தலைவர் ஒருவர் அன்னை பக்தர். மற்றொரு பக்தருடைய திட்டத்தில் சிறு அளவு பங்கு கொண்டார். சிறிய திட்டம் வெற்றி கண்டது. அடுத்த கட்டத்திற்குப் போகலாம் என்றார்கள்; போனார்கள். எல்லோரும் பாராட்டிப் பேசினார்கள். திட்டத்தை இந்தியாவில் எங்கும் பரப்பலாம் என்றார்கள். அதுவும் வெற்றியோடு பரவியது. ஸ்தாபனத்தின் தலைவருக்கு அந்த ஸ்தாபனத்தில் 130 ஆண்டுகளாக இல்லாத பெருமை அடுக்கடுக்காக வர ஆரம்பித்தது. "ஏதோ ஸ்டண்ட் என்று நினைத்து முதலில் இதற்கு இசைந்தேன். இந்தியா முழுவதும் வெற்றியுடன் இந்த அளவுக்குப் புகழ் பரப்பும் என நான் கனவிலும் நினைக்கவில்லை'' என்றார் அந்தத் தலைவர்.

அனுபவமான பக்தர்கள் ஒரு காரியத்தை நாடிப் போகும் பொழுது, ஒரு முடிவு எடுக்கத் தயங்குவார்கள். உதாரணமாக மகனை இன்ஜினீயராக்க வேண்டும் என்று ஒருவர் பிரியப்பட்டால், அன்னை அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறார். தம் விருப்பம் எவ்வளவு பெரியதானாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு "அன்னை எந்த வழி காட்டுகிறாரோ அதையே நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று அவர் விரும்பினால், அன்னை அவரை ஒரு பேரூற்றருகில் கொண்டு

போய் விடுவார். Dr.M.S. சுவாமிநாதன் பட்டம் பெற்றபின் I.P.S. பரீட்சைக்குச் செல்ல அவருடைய தகப்பனார் பிரியப்பட்டார். அவரும் I.P.S. எழுதிப் பாஸ் செய்தார். பாஸ் செய்தபின் தகப்பனாரிடம் தமக்கு (research) ஆராய்ச்சியில் ஆர்வம் இருப்பதாகவும், I.P.S.ஐ விரும்பவில்லை என்றும் தம் கருத்தைத் தெரிவித்தார். தகப்பனார் தம் கருத்தை விலக்கி, மகனுடைய விருப்பத்தை ஏற்று agriculture research-க்கு அனுப்பினார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக சுவாமிநாதன் விளங்கியபொழுது ஒரு பத்திரிகை, "அன்று அவர் தகப்பனார் சொற்படி I.P.S.இல் சேர்ந்திருந்தால், சுவாமிநாதன் இன்று I.G.ஆக ரிடையர் ஆகியிருப்பார். உலகம் ஒரு விஞ்ஞானியை இழந்திருக்கும்'' என்று எழுதியது. தம் கருத்தை விட்டுக்கொடுத்து பிறர் கருத்தை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் ஆண்டவன் செயல்பட முடிகிறது. தம்மை விலக்கி அன்னையை ஏற்றுக்கொண்டால் அன்னை நம்மை வாழ்க்கையில் உள்ள ஓர் அமுதசுரபியில் கொண்டு சேர்க்கின்றார்; ஒன்று பத்தாகிறது; தொட்டதெல்லாம் பலிக்கிறது. வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்ற நிலை மாறி, வற்றாத ஊற்றுகள் நிறைந்ததே வாழ்க்கை என உணர முடிகிறது.

கல்வி, விவசாயம், மார்க்கட், நட்பு, ஸ்தாபனம் போன்ற வாழ்க்கையின் கூறுகளுக்கெல்லாம் சில இடங்களில், சில நேரங்களில் அமுதசுரபியின் அம்சம் ஏற்படுவதுண்டு. பல உதாரணங்கள் மூலமாக அவற்றை விளக்கலாம். அதைத் தவிர்த்து, அன்னையின் ஒளியால் மனிதன் தன்னை எப்படி அமுதசுரபியாக மாற்றிக்கொள்கிறான் என்பதை மட்டும் கவனிப்போம்.

பொதுவாகச் சொன்னால், பக்தி சிரத்தையுடன் அன்னையைத் தெய்வமாக வணங்கும் ஒருவர் நல்லவர், சிறப்பானவர்' என்ற விளக்கத்திற்கு உரியவரானால், அவரது வாழ்க்கையில் மேற் சொல்லியது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி காணலாம். சாதாரண வாழ்க்கையில் சிறப்பானவை எனக் கருதக்கூடியவை அவரது வாழ்வில் நிறைந்திருக்கும்.

உடலால் செய்வது உழைப்பு. அதற்கு ஆர்வமும், அறிவும் துணை நிற்காவிட்டால் உழைப்புக்குப் பலனாக ஊதியம் கிடைக்கும். அந்தத் திறமை மட்டும் உள்ளவன் கூலி வேலைதான் செய்ய முடியும். ஆர்வத்தோடு உழைப்பவனுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். அவன் தலைவனாகிறான். தலைவனானாலும் அவனுக்குத் தெளிவு இருக்காது, திறமை மட்டுமே மிஞ்சி நிற்கும். ஆர்வத்தோடு உழைப்பவனுக்கு அறிவு தெளிவாக இருந்தால், அவனால் பல தலைவர்களை' கட்டுப்படுத்த முடியும். தலைவனுக்கு மனிதன் கட்டுப்படுவதைப் போல், அறிவுள்ள ஒருவனுக்குப் பல தலைவர்கள் அடங்குவார்கள். அப்படிப்பட்டவர்களே அரசியல், தொழில் முதலிய துறைகளில் முன்னோடியாக நிற்பார்கள். அந்த அறிவும் இலட்சியத்திற்குக் கட்டுப்படுமேயானால், சுதந்திர இயக்கம் போன்ற பெரிய இயக்கங்களை நடத்தும் தலைவர்களாவார்கள். ஆர்வம் நிறைந்த உழைப்பை, இலட்சிய அறிவுக்கு உட்படுத்தி செயலாற்றும் பெருமக்கள் ஆத்ம விளக்கம் பெற்றவர்களானால், அவர்களால் உலகில் சாதிக்க முடியாதது என்று ஒன்றில்லை. பொதுவாக அப்படிப்பட்டவர்கள் வாழ்வை விட்டு விலகி, அகவாழ்க்கையில் ஈடுபட்டுத் தவம் போன்ற நிலையில் இருக்கப் பிரியப்படுவார்கள். உலக மக்களிடையேயுள்ள நிலைகளின் தரத்தை அடுத்தடுத்துப் பார்த்தோம். இதற்கும் மேலே ஒரு கட்டம் உண்டு. ஆத்ம விளக்கம் பெற்றவர்கள், தாம் பெற்ற ஜோதியை உலகுக்குக் கொடுக்க தம் அறிவைக் கருவியாக்கி, எழுத்தையோ, இலக்கியத்தையோ படைத்தால் உபநிஷதம் போன்றவை உற்பத்தியாகின்றன. (தம் ஆத்ம பலனை வாழ்வில் செயலால் விளக்கம் பெற அவர் விழைந்தால், கிருஷ்ண பரமாத்மாவைப் போல் போர்க்களத்தினிடையே நின்று கீதோபதேசம் செய்து 56 தேச மன்னர்களிடையே தர்மத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகின்றவர் ஆவார்). ஆத்மா பெற்ற விளக்கத்தை உடன் அணுக்கள் பெற்று, அவை வாழ்வின் அஸ்திவாரமாக வேண்டுமென விழைந்தால், உடன் அணுக்கள் பொன்னொளியால் மிளிர்ந்து உலகத்தின் இருளையும், பொய்மையையும் கரைக்க முற்படும். அதுவே

பூரண யோகத்தின் பாதை. அன்னையை வந்தடைந்த அன்பன் தன் வாழ்வு தன் கையில் இல்லை, பிரச்சினையால் நிறைந்தது என உணர்ந்த நிலையில் அவன் உள்ளுணர்வில் ஏற்றுக்கொண்ட அன்னை அவனது பக்குவத்திற்கேற்ப செயல்படுகிறார். அன்னையை ஏற்றுக் கொண்ட அளவில் பக்தனுடைய வாழ்க்கை விளக்கம் பெறுகிறது.

அவனது உடல் சிறு ஊற்று; வாழ்வு அதைவிடப் பெரியது; மனம் உயர்ந்தது; ஆத்மா சிகரமானது. ஆத்மாவை வெளிப்படுத்தும் மனம், ஆத்மாவைவிட உயர்ந்தது. ஆத்ம விளக்கம் பெற்ற வாழ்வு அதைவிடச் சிறந்தது. ஆத்ம ஒளியால் சுடர்விடும் உடல் எல்லாவற்றையும்விடச் சிறந்தது. இவையெல்லாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் அமைந்த பேரூற்றுகள்.

சேவை செய்யும் பக்தனது உடல் விளக்கம் பெறுகிறது. யோக நூலைப் படிப்பவர்க்குத் தியானம் சித்திக்கிறது. உணர்வால் பெருகுபவர்க்கு உள்ளம் சிறப்படைகிறது. பொதுவாக ஒருவரிடம் இந்த எல்லா அம்சங்களும் கலந்து, ஒன்று அதிகமாகவும், மற்றது குறைந்தும் காணப்படும். ஆனால் இந்த எல்லா நிலைகளும் வாழ்வைவிடப் பெரியவை; பெரிய ஊற்றுகளாகும். வாழ்க்கையின் பிடியில் உள்ள பக்தன் பிரச்சினை வரும்பொழுது அன்னைக்குப் பிரார்த்திக்கின்றான். நேரம் கிடைத்தபொழுது யோக நூலைப் படிக்கிறான். முடிந்தால் சேவை செய்கிறான். அவனது முயற்சிக்குத் தக்கவாறு அன்னை அவனை நாடி வருகிறார். அப்படியின்றி அன்னையை அன்னைக்-காகவே விழைந்து அன்னையை நோக்கி ஆத்மா விரைந்து செல்லுமானால், அவனது ஆத்மாவில் அன்னை தோன்றி, நின்று, நிலைக்கின்றார். இது பெரும்பேறு எனினும், பலருக்குக் கிடைக்கக் கூடியது. குறிப்பாகப் பக்குவமான ஆத்மாக்களுக்கும், சேவையை அர்ப்பணிப்பவர்களுக்கும் கிடைக்கக்கூடியது. அந்தப் பேற்றைப் பெற்றவர்கள் அதன்பின் தங்கள் சுபாவத்தையும், பிரியத்தையும், அறிவையும் வெளிப்படுத்தாமல் அன்னையின் ஒளியை மட்டும்

வெளிப்படுத்த முயன்றால், அவர்கள் வாழ்வு அன்னையின் அருள் சுரக்கும் அமுதசுரபியாக மாறுகிறது. அவர்கள் வாழ்வைவிடப் பெரியவர்கள். வாழ்க்கையால் அவர்களுக்குச் சேவை செய்ய முடியாது. அவர்களே வாழ்க்கைக்கு வளத்தைக் கொடுத்து சேவை செய்வார்கள்.

எந்தத் துறையில் அவர்கள் செயல்பட்டாலும் அந்தத் துறையில் அவர்களது செயல் அமுதசுரபியாக இருக்கும். பல துறைகளில் செயல்பட்டால் அவர்களது ஆன்மீக வாழ்வு அமுதசுரபிகள் ஜனிக்கும் அமுதசுரபியாக விளங்கும்.

அன்னையை நாடி வந்த செயல் திறம் மிக்கவர்க்கும், நேர்மை நிறைந்தவர்க்கும், பண்பால் பக்குவம் அடைந்தவர்க்கும், அறிவின் பிழம்பானவர்க்கும், சேவையை ஏற்றுக்கொண்டவர்க்கும் இந்த நிலையை அடையும் வாய்ப்புண்டு.

*******



book | by Dr. Radut