Skip to Content

பகுதி 19

அவசரம்: போதுமான திறமையில்லாதபொழுது தமக்குத் திறமை இருக்கிறது எனக் காட்ட மனிதன் அவசரப்படுவான். அவசரம் திறமைக் குறைவு. புறத்தில் தெரியும் அவசரம் சிறு காரியங்களில் வெளிப்படும். பெரிய காரியங்களில் அகத்தின் அவசரம் வரும். அகம் அதை அறிவாலும், உணர்வாலும், சமர்ப்பணத்தாலும் கடந்தால், வாய்ப்பு பலிக்கும்.

இவற்றைச் செய்யும்பொழுது மனம் எதிர்பார்க்கும். இந்தக் காரியம் எப்படி, எவ்வளவு நாளில் பூர்த்தியாகும் என்பது தெரியாதவரை எதிர்பார்ப்பு எழும். அது தெரிந்தால் எதிர்பார்ப்பு இருக்காது. அனுபவக் குறைவு எதிர்பார்ப்பு. அவசரமும், எதிர்பார்ப்பும் இணைந்தவை. அவசரம் ஒரு பழக்கமும்கூட. சமர்ப்பணம் எந்தக் கட்டத்தில் தடைப்படுகிறதோ, அந்தக் கட்டக் குறையை விலக்கினால் தடை விலகும். அப்படிப்பட்ட குறைகள்,

  • ஒரு வேலையை கடைசி நாள்வரை ஒத்திப்போடும் பழக்கம்.
  • பிடிக்காத வேலையைச் செய்யப் பிடிக்காதது.
  • தவறு இருந்தாலும், பலன் வரும் என்ற மூடநம்பிக்கை.
  • நமது குறையால் செய்யும் காரியத்தைப் பிறரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்வதாக நம்புவது.
  • பிறரைத் திருப்திப்படுத்த முயல்வது.
  • சும்மாயிருக்க முடியாமல் எதையாவது செய்யத் தூண்டுவது.
  • இரகஸ்யத்தைக் காப்பாற்ற முடியாதது.

முதல் இக்குறைகள் நேரடியாகப் பாதிக்கும். ஓரளவில் அவற்றை விலக்கினால், அக்குறைகள் அடுத்த முறை நமக்கு வேண்டியவர்மூலம் - எவரை நாம் விலக்க முடியவில்லையோ - அவசியம் வரும். அதையும் விலக்கினால் மனிதர்மூலம் வருவது நிகழ்ச்சிமூலம் வரும். குறை நிறையாகத் திருவுருமாறும்வரை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்தபடியிருக்கும். அதனால் திருவுருமாற்றம் அவசியம். திருவுருமாற்றத்திற்குச் சரணாகதி அவசியம்.

  • சரணாகதிக்குமுன் சமர்ப்பணம் வேண்டும்.
  • நம்மையும் நம் பழக்கங்களையும் அறவே விடாமல் சமர்ப்பணம் வாராது.
  • பழக்கங்களை ஜீவியத்தில் விட்டால், பொருளில் எழும் (மேலெழுந்த பழக்கம் மாறினால், ஆழ்ந்த பழக்கம் வரும்).

  • எதுவும் அப்படித் தொந்தரவு செய்யாவிட்டால் மனம் குறையாகஇருக்கும்.
  • குறை நிறைவானால், அக்குறையிருக்காது.
  • நம்மிடம் உள்ள பெரிய தடைகளில் முக்கியமானவை,
  • - நட்பு, உறவு, வயது, முறை
  • - நியாயம், தர்மசங்கடம்
  • - ஆகியவற்றை மீறிச் செயல்பட முடியாது.
  • மனத்தின் அடியில் காரணமில்லாமல் சந்தோஷம் எழுவது இவற்றை எல்லாம் கடந்ததற்கு அடையாளம்.

மேற்கூறியவை எல்லாக் குறைகட்கும் பொருந்தும் என்றாலும், நடைமுறையில் ஒவ்வொரு குறை எழும்பொழுதும், அவற்றை அலசி, ஆராய்ந்து, புதிது புதிதாகப் புரிந்துகொள்வது அவசியம்.

இவற்றிற்கும் மேலாகத் தெரிந்த தவற்றைத் திரும்பத் திரும்பச்

செய்வது. அதற்குப் பரிகாரமில்லை. அனுபவிக்க வேண்டும்.

  பிறரைத் திருப்தி செய்வது: நம் கடமையைச் செய்யலாம். எவரையும் திருப்தி செய்ய முடியாது, கூடாது. பிறர் திருப்தியடையாவிட்டால், நமக்குத் திருப்தி ஏற்படாது என்பது நமது நிலை. பிறருடைய அநியாயத்தை மீறி நாம் அவரைத் திருப்திப்படுத்த முயல்வது நாம் நம் அநியாயத்தை வளர்ப்பதாகும். It is immaturity.. இது சிறுபிள்ளைத்தனமானது. பெரியவர்கள் - மகாத்மாக்கள் - சிறியவர்களைப் பாராட்ட இதுபோல் நடந்தவை நம் மனதிலிருப்பதால் இப்படி நடக்கிறோம். அதிலுள்ள விஷயங்கள்,

  • பெரியவர்கள் பெருந்தன்மையாகச் செய்ததை நாம் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தால் பலன் மனநிலைக்கு வரும், செயலுக்கு வாராது.
  • உலகில், வாழ்வில் பெருந்தன்மைக்குப் பாராட்டுண்டு. யோகம் சூட்சுமமாக இருப்பதால், எதிரி hostile force - அந்த ரூபத்தில் நம் பெருந்தன்மைமூலம் நம்மை அழிப்பான்.

அவசரத்தில் சொல்லிய அத்தனைக் குறைகளும் இதற்கும் மற்ற எல்லாக் குறைகட்கும் பொருந்தும்.

பிறர் புரிந்ததைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை: நமக்குப் புரிந்ததை நாம் செய்யாதபொழுது, எப்படிப் பிறரை எதிர்பார்க்க முடியும்? ஏதாவது ஒரு காரணத்தின்மூலம் செய்ய முனைந்துவிட்டால் initiative பின்வாங்கப் பிரியப்படாதபொழுது, இக்காரணங்களைச் சாக்காகக் கூறுவதாகும்.

சமர்ப்பணமில்லாதது: நாம் எதையும் சமர்ப்பணம் செய்வதில்லை. அதனால் இதையும் செய்யலாம் என நினைக்கிறோம். இது பெரிய விஷயம், அப்படிச் செய்ய முடியாது எனப் புரிவதில்லை. இதைச் சமர்ப்பணம் செய்வது அவசியம். அதற்காக எல்லாக் காரியங்களையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என நினைப்பது சரியாகும்.

Commitment: நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வது. நாம் சிறு விஷயங்களிலேயே பழக்கப்பட்டவர்கள். அங்குக் கட்டுப்படுவதுபோல் பெரிய விஷயங்களில் கட்டுப்படமுடியாது. தராதரம் தெரியாமல் நடப்பதால் எழும் பிரச்சினை இது.

மறைக்காமல் பேசுவது: வேண்டியவரிடம் மறைக்கக்கூடாது என்பது அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சரி. அதுவும் அவர்கள் பாதிக்கப்பட்ட

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  • இந்தச் சட்டங்கள் எல்லாம் இதுவரை வெளியான புத்தகங்களில் விவரமாக உதாரணத்துடன் விளக்கப்பட்டவை.

இடங்களில் சரி. அப்பொழுதும், காரியம் கூடி வர மறைப்பது அவசியமானால், மறைக்க முடியவேண்டும். It is a moral view. காரியம் பெரியது. நியாய மனப்பான்மையைவிடக் காரியம் பெரியது என்பதால், நியாயத்தைவிட்டுக் காரியத்தையும், அதைக் கடந்து ஆன்மீகக் கடமையையும், அதைக் கடந்து அன்னைக்குச் சரணாகதியையும் நாம் கருதவேண்டும். பார்ட்னருக்கு அறிவு அதிகம், அனுபவம் - அன்னை விஷயத்தில் - குறைவு. வாழ்க்கை அனுபவம் உண்டு என்பதால் அன்னை அவருக்கு நன்றாகப் புரிகிறது. கணவருக்கு எதுவும் புரிவதில்லை. பார்ட்னருக்கு உதவி செய்வதைக் கடந்து அவரால் எதுவும் செய்ய முடியாது.

சரணாகதியும், சமர்ப்பணமும்: எப்படிச் சரணாகதி செய்வது என்ற கேள்வி அறிவு எழுப்புவது. அக்கேள்வி நம்மை நம்பிக்கையிலிருந்து நம்மை அறியாமல் அறிவுக்கு அழைத்துச் செல்வதை நாம் உணருவதில்லை. எப்படிச் சரணாகதியைச் செய்வது, என்ன செய்வது எனக் கேட்டவனால் சரணம் செய்ய முடியாது. கண்டதும் எழாத காதல், காதலில்லை என்பது இலக்கிய மரபு. ஓர் ஆத்மா, அல்லது ஜீவன் அறிவைக் கடந்து சரணாகதிக்கு உரிய பக்குவம் பெற்றிருந்தால், அன்னை ஸ்ரீ அரவிந்தரைக் கண்ட மாத்திரம் இவரே என் கிருஷ்ணா என அறிந்ததுபோல் அறிவார்.

அறிந்தவரை அறியாமல் நடப்பது ஆத்மாவின் சரணாகதி.

ஆத்மா பக்குவமடைந்து தனக்குரிய குருவுக்காகக் காத்திருக்கிறது. ஏதோ காரணத்தால் அவரைக் கண்டமாத்திரம் சரணடைகிறது. என்ன நடந்தது என்பது நெடுநாள் கழித்தே தெரியவரும். பூரண யோகத்தில் சரணாகதி அதையும் தாண்டிய அடுத்த கட்டத்திற்குப் போகிறது. பூரண யோகம் தேடுவது மனித குரு இல்லை. மனதில் உறையும் ஜகத்குருவை, உள்ளிருந்து நம்மை ஆளும் குருவாக ஏற்பது பூரண யோகம். அறிவின் ஆட்சி முடிந்து, மௌனம் கனத்து முதிர்ந்து, நிகழ்காலம் முழு காலமுமானால் -

காலத்தின் முழுமையைப் பெற்றால் - சிறியது பெரியதாகும். அதன் மாற்றம் அகந்தையின் கூடு கரைவதாகும். அந்நிலையில் உள்ளிருந்து ஆத்மா - சைத்தியப்புருஷன் - வெளியில் வந்து சஞ்சாரம் செய்ய நாம் அவனுக்குச் சரணடைய வேண்டும்.

  • மனித முயற்சி சமர்ப்பணம்.
  • தெய்வ அனுக்கிரஹம் சரணாகதி.
  • சமர்ப்பணம் சரணாகதியாக மாறுவது தவம், யோகம் பலிப்பது.
  • சரணாகதி எழுந்து கனிந்த சமர்ப்பணத்தை ஏற்பது அருள்.
  • சைத்தியப்புருஷன் மலர்ந்து மனத்தை ஆட்கொண்டபின் நடந்தது சரணாகதி என அறிவது பேரருள்.
  • மனித குருவை ஏற்பது மற்ற யோகங்கள்
  • ஜகத்குருவை ஏற்பது பூரண யோகம்.
  • உள்ளிருந்து ஜகத்குரு எழுந்து நம்மை அரவணைத்து ஆட்கொள்ளும்பொழுது அது அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் என அறிகிறோம். அவர் மனித குருவாக வந்த ஜகத்குரு.
  • அன்னையை அப்படி அறிந்தவர் அன்னையின் ஆன்மீகத்தைக் கண்டவர்.
  • சரணாகதியில் அறிவுக்கு வேலையில்லை.
  • தனக்கு வேலையில்லை என்று அறிவு அறிவது சரணாகதிக்குரிய ஞானம்.
  • நேரம் வந்தால் இது க்ஷணத்தில் நடக்கும்.
  • க்ஷணத்தில் நடக்காதது சரணாகதியில்லை.
  • நேரம் வருவது என்பது நாம் அன்னையை அறிவது.
  • அன்னையை ஏற்கும் அளவிற்கு அறிவது நேரத்தை வரச் செய்வதாகும்.
  • சமர்ப்பணம் ஆரம்பிப்பதைப் பூர்த்தி செய்வது சரணாகதி

  • அடுத்த speciesஐ உற்பத்தி செய்யும் சரணாகதி கடினம் என்பது ஆச்சரியமில்லை.

இவ்வளவு தத்துவ விளக்கங்களையும் டெய்வான் பேங்க் வாய்ப்பில் தாம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற முடிவை பார்ட்னர் எடுத்தார். அவர் மௌனமாக எடுத்த முடிவு கணவருக்கும், தாயாருக்கும் சூழல்மூலமாக சூட்சுமமாகத் தன்னை அறிவித்தது. சொர்க்கம் வந்து நம்மைத் தட்டி எழுப்புகிறது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிந்தது.

  • அன்னை நம்மை நாடுகிறார்.
  • நாம் அதையறியாததால், நமக்குரிய அதிர்ஷ்டம்மூலம் வருகிறார்.
  • அதிர்ஷ்டத்தை மனம் நாடினால் நாம் அதை நெடுநாள் தேடவேண்டும்.
  • அதிர்ஷ்டத்தின் பின்னாலுள்ள அன்னை கண்ணுக்குத் தெரிந்தால் நேரத்திற்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக நேரத்தை வரவழைத்து விட்டோம் என்றாகும்.
  • அன்னை கண்ணில் படுவது நேரம் வருவதாகும்.

Let thy will be done not my will அன்னையின் சித்தம், என் பாக்கியம்:

இதை முன்பே பார்த்தோம். அன்னையே எழுதியது. இது சக்திவாய்ந்த மந்திரம். ஆத்ம விழிப்போடு சொல்லவேண்டியது. அப்படிச் சொன்னால் அதன் சக்தி ஆத்ம சக்தியாகும். சொல் எழுமுன் ஆத்மா கண் திறக்கவேண்டும். நாம் இம்மந்திரத்தைச் சொல்லும்பொழுது முறையாகச் சொன்னால் அகந்தை கரையும் என்கிறார் அன்னை. முறையாக என்பது ஆத்ம விழிப்போடு சொல்வதாகும். அது இல்லாதபொழுது மந்திரம் வெறும் சொல்லாகும். வெறும் சொல்லே பிரச்சினைகளைத் தீர்க்கிறது என்பதால் நாம் அதைப் போற்றுகிறோம். சமர்ப்பணத்திற்கு வெறுஞ்சொல் பயன்படாது.

சொத்தையானவர்க்கு ஆத்ம விழிப்பில்லை. அவர்கள் ஆத்ம விழிப்புக்குரிய பக்குவமிருப்பதால் அவர் முயற்சி விழிப்பிலும், சமர்ப்பணத்திலும் முடியும். நடைமுறைச் சமர்ப்பணம் சரணாகதியாகும். இது நடந்தால் அடுத்த கட்டம்.

Thy will,Thy will என்பது அடுத்த கட்டம். முடிவானது சரணாகதி, உடல் சித்தித்து முழு மனிதன் சிறு குழந்தையாகி I an eternally yours, நான் என்றென்றும் உனக்கே உரியவன் என்று குழந்தை உருவத்தில் அன்னையின் குவிந்த கைகளில் தன்னைக் கற்பனை செய்வது. இரண்டாம் கட்டத்தைச் சொல்லால் செய்ய முடியாது. சொல்லழிந்தபின் செய்யவேண்டியது அது. உணர்வால், உருவகம் அதைச் சாதிக்கும். மூன்றாம் கட்டம் சொல்லாலோ, உணர்வாலோ செய்யக்கூடியதில்லை. உடல் உணர்வால் செய்ய வேண்டியது என்று கூறலாம். உடல் - existence - உணர்வைக் கடந்து நன்றியால் பூரணமாகி உள்ளிருந்து பூரித்தால் அன்னையின் உள்ளங்கை உருவகம் பலிக்கும். சொல்லாலும், உணர்வாலும் எழுப்புவதை உடன் ஜீவன் - சைத்தியப்புருஷன் - கேட்டு வெளிவந்து மலர்ந்து மகிழ்வது அந்நிலைக்குரிய அகநிலை. ஆரம்பத்திலேயே நாம் இத்தவற்றைச் செய்தபொழுது மகிழ்ந்தது நம் அகந்தை என்பதை நாம் கண்டுகொள்வதில்லை. இப்பொழுது நினைவுபடுத்திப் பார்த்தாலும் அது தெரியும். அகந்தை சந்தோஷப்படுவது மனத்திற்கு இதமாக இருக்கும். ஆத்மா மலர்வது நெஞ்சு குளிரும். இவை தெளிவாகத் தெரியும். அது விலக்கில்லாத விதி.

குடும்பம் உயர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் பெரியவனுடைய நண்பன் அமெரிக்காவில் இருப்பவன் மீண்டும் நம்மூர் வர முயல்வதாகவும், ஏதாவது பெரிய தொழில் செய்ய விரும்புவதாகவும், பெரியவனை பார்ட்னராக எடுக்க விரும்புவதாகவும் செய்தி. தொழிலுக்கு முக்கியமானது அந்த நாளில் முதல். முதல் எந்த நாளிலும் முக்கியமானதே. இன்று பாங்க் முதல் தருவதால், முக்கியமானது முதல் மார்க்கட், இரண்டாவது டெக்னாலஜி.

பெரியவனின் நண்பன் இன்ஜினீயர். டெக்னாலஜியில் விருப்பம் உள்ளவன். அவன் புதிய டெக்னாலஜி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு அக்கம்பெனியைப் போய்ப் பார்த்து விவரம் விசாரித்து சேகரம் செய்ததைப் பெரியவனுக்கு ஈ-மெயில்மூலம் அனுப்பியுள்ளான். இந்தியாவில் ஏராளமான மார்க்கட் உள்ள பொருள் இது. சரக்குக்கு அதிகபட்ச கிராக்கியுண்டு. அடுத்த 10 ஆண்டு, 30 ஆண்டுகளுக்கு சரக்கை வாங்கிக்கொள்ள விரும்பும் மாநிலச் சர்க்கார்கள் உள்ளன. சரக்கின் தரம் 1 முதல் 100 ஆனால், இந்த டெக்னாலஜி 100ஆம் தரத்தைத் தயார் செய்கிறது. இந்தியாவில் தரம் 10 முதல் 15 வரையுள்ளது. முதல் தரமாக சிறு அளவில் விற்பதின் தரம் 30வது பாயிண்ட் ஆகும். பெருமுதல் தேவை. டெக்னாலஜியை விற்கும் கம்பெனி அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தொழிற்சாலையை நடத்த ஒத்துக்கொள்கிறது. மிகப்பெரிய முதலானாலும் வேலை செய்பவர் 9 பேர்கள். முழுவதும் தானே இயங்கும் (automatic play) தொழில். நம் நாட்டில் 10 முதல் 15 வரை சுத்தமான சரக்கு 3 1/2 பைசாவுக்கு விற்கிறது. அமெரிக்க சரக்கு 100% சுத்தமானது,

8 1/2   பைசாவாகிறது. 30% சுத்தமான சரக்கு அதே அளவுக்கு விலை 36 ரூபாய். 81/2 பைசாவுக்கு உற்பத்தி செய்து ஏராளமாக கிராக்கியாயுள்ள மார்க்கட்டில் 31/2 பைசா முதல் 36 ரூபாய் வரை விற்கலாம். இது பெரிய வாய்ப்பு. முதல் பல நூறு கோடி ரூபாயாகும். பாங்கில் 3/4 பாகம் முதல் உண்டு. மார்க்கட்டும், விலையும் உள்ள பொருளுக்கு வெளிநாட்டு பாங்க்குகள் 13% வட்டி முதல் 6% வட்டிவரை 3/4 பாகம் முதல் தரக் காத்திருக்கிறார்கள். கால் பாகம் முதல் 100 கோடிக்கு மேலாகும். டெக்னாலஜி, இலாபம், மார்க்கட், அரசியல் சூழ்நிலை சிறப்பாக இருந்தால் venture capitalist இப்பணத்தை ஏராளமான வட்டிக்குத் தருவார்கள். 60% வட்டி கேட்பார்கள் அல்லது 25% இலாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால் பணம் கிடைக்கும். முதலையும் - தவணை - வட்டியையும் திருப்பிக்கொடுத்தபின் நிகரமாக இலாபம் கணிசமாக நிற்கும். அது ஆண்டிற்கு 30 கோடிகளாகும். திறமையும் நாணயமுமுள்ள இளைஞர்கட்கு உலகில் இதுபோன்ற வாய்ப்புகள் உண்டு. அது இன்றுள்ள நிலை.

அன்பர்கட்கு அவ்வாய்ப்புகள் ஏராளம். பெரியவனின் நண்பன் அவனைக் கூட்டாக அழைக்கிறான். பொறுப்பும், உழைப்பும் பெறுவது பொக்கிஷம். இவையெல்லாம் முன் தலைமுறையிலில்லை. நினைக்க முடியாது. அப்படியிருந்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைகட்குண்டு.

  • அன்று கோடீஸ்வரனுக்கும் இல்லாததை இன்று அன்பர்கட்கு அன்னை மார்க்கட்மூலம் வழங்குகிறார்.
  • பெறும் தகுதியுண்டா?

பிள்ளை எப்படியாவது திருந்தமாட்டானா?

தம் பிள்ளை கெட்டுப்போனால், அவன் திருந்தவேண்டும் எனப் பெற்றோர் விரும்புவார்கள்.

காரணம் தெரிந்தால் காரியம் கூடிவரும்.

பையன் கெட்ட சகவாசத்தால் கெட்டுப்போய்விட்டான் என்பது உண்மையானாலும், அது புறத்தில் உள்ள காரணம்.

புறம் புரியும், அகம் மாற்றும்.

அகம் என்பது பெற்றோர். பெற்றோர் குணம் பிள்ளைக்கு வரும் வழிகள் பல.

  1. தகப்பனார் கெட்ட குணம், பிள்ளைக்கு அதிகமாக வரும்.
  2. தகப்பனாருக்குக் கெட்ட குணமேயில்லை எனில் பிள்ளைக்கு அது மட்டுமிருக்கும்.
  3. தகப்பனாருக்கு ஒரு விஷயத்தில் கெட்ட குணமிருந்தால், மகனுக்கு வேறு விஷயத்திலிருக்கும்.

முதல் நிபந்தனை கெட்ட குணம் தகப்பனாரில் முழுவதும் வளரவில்லை என்பதால் பிள்ளையிடம் மீதி வளர்கிறது. இரண்டாவது

தகப்பனார் கெட்ட குணத்தை மறைத்து வைத்தது பிள்ளையில் வெளிப்படுகிறது. மூன்றாவது கெட்ட குணம் அடுத்த அனுபவங்களை நாடுகிறது. அன்னை மேற்சொன்னபடிக் கூறுவதால் அதை அப்படியே வேதவாக்காக ஏற்க முடிந்தால் அடுத்த நிமிஷம் மகனில் மாறுதல் தெரியும். அன்னை கூறும் உண்மையை உள் மனம் உண்மையென்றால், அம்மனம் மாற விருப்பப்பட்டால், பையன் தலைகீழே நடப்பான். மகன் மாறும் வழி இது ஒன்றே. ஆனால் மனம் மற்ற எல்லா வழிகளையும் - கற்பனையாக - நினைத்து மனப்பால் குடிக்கும். தான் மாற விரும்பாதபொழுது அப்படியெல்லாம் நினைக்கும்.

  • எப்படியும் எல்லாம் நல்லபடியாக முடியவேண்டும் என்று எதிர்பார்ப்பதை நடக்கும் என நினைப்பது.
  • என் மகன் உள்ளபடி நல்லவன், ஏதோ கொஞ்சம் மாறிவிட்டான், ஜாதகம் சரியில்லை.
  • என் வயிற்றில் பிறந்தவன் எப்படிக் கெட்டுப் போவான்?
  • அதெல்லாம் ஒன்றுமில்லை. என் மகன் அப்படியெல்லாம் கெட்டுப் போகவில்லை.

நமது ஆசை மனத்திருந்தால் அது அறிவால் மாறும். உணர்விருந்தால் மாறுவது சிரமம். உடலிருந்தால் - பாசம் - இல்லாததைக் கற்பனை செய்து மனப்பால் குடிக்கும். தவறான தொடர்பு ஆரம்பத்திலிருந்து தவற்றைக் காட்டியபடியிருக்கும். நாம் நமக்குள்ள பிரியத்தால், அதைப் புறக்கணித்து, நல்ல அறிகுறி வரும்வரை அதை வைத்திருப்போம். எப்பொழுது தொட்டாலும் தவறு அதன் குணத்தைக் காட்டும். செய்தபிறகுதான் தெரிகிறது. முன்பே தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டேன் என நினைக்கிறோம். முன்பே தவறு அதன் குணத்தைக் காட்டியதையும், நாம் புறக்கணித்ததையும், அலட்சியப்படுத்துவோம்.

தாயாருக்குப் புரிகிறது. மற்றவர்க்கு இது புதிராக உள்ளது. பெரியவனுக்கு இதைப் பெற்று அனுபவிக்கும் தகுதியில்லை. ஆனால்

ஏதோ ஒரு தகுதியிருந்ததால்தான் அவனைத் தேடி இது வருகிறது, தேடி வந்ததைப் போற்றிப் பாராட்டி மனத்தால் தகுதிபெற முழு முயற்சி செய்தால் பெரியவனுக்கு இது பலிக்கும். அவன் முன்வருவானா என்பதே கேள்வி. முன்வந்தால் தொடர்ந்த ஆர்வம், நம்பிக்கை இருக்குமா என்பதே கேள்வி. இந்த புராஜெக்ட்டை ஏற்றுக்கொண்டால் பெரியவன் இந்தியாவிலும், நண்பன் அமெரிக்காவிலும் ஆரம்பத்தில் செய்யவேண்டிய வேலைகள் ஏராளம். அதனால் பெரியவனுக்கு இது வருகிறது.

  • வருவதை நன்றி, அடக்கத்துடன் பெற்றுப் பாராட்டிப் போற்றினால் பலித்து நீடிக்கும்.
  • திறமைசாலி பல தலைமுறைகளில் பெறுவதை பக்தி உடனே தருவதை அன்பர்கள் திறமையுடன் அனுபவிப்பது அடுத்த உயர்ந்த கட்டம்.

இந்தக் குடும்பம் என்ன செய்யப்போகிறது? தாயார், பூசலார் மனத்தில் கோவில் கட்டியதுபோல் கட்டப்போகிறாரா? அனைவரும் ஒத்துழைப்பார்களா? தெரியவில்லை. பெரியவனுக்கு வந்துள்ளது பெரிய வாய்ப்பு என்பதை அறியும் அறிவும், திறனுமில்லாதவன் அவன். என்ன சொல்வான், என்ன செய்வான் என்பதைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்காவில் 200, 300 ஆண்டுகட்குமுன் நிலம், வியாபாரம், தங்கம், பெட்ரோல், போன்ற நூற்றுக்கணக்கான பொருள்கள் ஏராளமாகக் கிடைத்தன. சர்க்கார் இல்லை. யாருக்குத் தங்கம் கிடைக்கிறதோ, சுரங்கம் அவருக்கே. அப்படி இலட்சக்கணக்கானவர் கோடீஸ்வரரானார்கள். அவர்கள் உயிருக்கு ஆபத்து எந்த நேரமும் உண்டு என்பதைப் பொருட்படுத்தாமல் இரவும், பகலும் உழைத்தனர். இன்று அமெரிக்கா உலகுக்குத் தலைமை வகிக்கிறது. அந்த வாய்ப்பையும் இலட்சக்கணக்கானவர் பெற்றாலும் பெறாதவர் கோடிக்கணக்கானவர். இன்றைய இந்தியா 300 ஆண்டுகட்கு முன்னிருந்த அமெரிக்கா போன்றது. நாடு முழுவதும்

வளரும் மார்க்கட். மார்க்கட்டில்லை என்பது பிரச்சினையில்லை. டெக்னாலஜி அபரிமிதம். முதல் பாங்க் 75% தருகிறது. 90% சிலருக்குத் தருகிறது. 100% பெறும் தகுதியும் ஒரு சிலருக்குண்டு. பொறுப்பு, திறமை, நாணயம், உழைப்புள்ளவர்க்கு முடிவற்ற அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அதுவே அன்பர்க்குப் பல மடங்குண்டு. பெரியவன் நண்பன் தரும் வாய்ப்பைப் பெற்றால் கனவு காண முடியாத பெரிய இலாபத்தில் பங்குண்டு. பெறும் தகுதியைப் பெரியவன் பெறுவானா? இவன் ஏற்காவிட்டால், ஏற்றுப் பலனடையாவிட்டால்,

  • வாய்ப்பு அழியாது, அடுத்தவர்க்குப் போகும்,
  • வாய்ப்பு அழிவற்றது, பெறுவது நிலையற்றது.

இந்த நாட்டில் உள்ள மார்க்கட் வாய்ப்பு, எல்லா நாடுகளிலும் ஓரளவுண்டு. ஆன்மீக நாடு என்பதால், ஸ்ரீ அரவிந்தர் பிறந்த இடம் என்பதால், இங்கு அதே வாய்ப்புகள் ஏராளம். இந்தக் குடும்பத்தில் அது representative பிரதிநிதியாகத் தெரிகிறது. இக்குடும்பத்தின் மனநிலை, ஆன்மீகத் தகுதி ஓரளவு நாட்டில் மனநிலை, ஆன்மீகத் தகுதியைப் பிரதிபலிக்கும். நாட்டையாளும் சட்டமும், இக்குடும்பத்தைப் பராமரிக்கும் சட்டமும் ஒன்றே. நாட்டின் நிலையையறிய இக்குடும்பத்தை அறிந்தால் போதும்.

பெரியவன் கிளப்புக்குப் போனபொழுது அவன் நண்பர்கள் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவன், "டேய், உன்னை திட்டுவதை நீ பொறுத்துக்கொள்ளக் கூடாது. ஜாதி புத்தியைக் காட்டிவிட்டான் என உன் கேப்டன் கேட்கிறான். விடாதே'' என்றான். பெரியவனுக்கு ஆத்திரம் வந்து கொட்டித் தீர்த்துவிட்டு, "நான் அவனை நேரில் போய்க் கேட்கிறேன்'' என வீராவேசமாக அம்மாவிடம் நடந்ததைக் கூறி தான் சண்டைப் போடப் போவதாக் கூறினான்.

தாயாருக்கு ஏன் இது வந்தது எனத் தெரியும். இந்த கலாட்டாவில் பெரியவன் நிதானமிழந்தால் அமெரிக்க நண்பன்

கொடுக்கும் வாய்ப்பு பலிக்காது. அந்த வாய்ப்பு வந்ததால், இவனை ஒருவன் சீண்டுகிறான். அவனிடம் எதுவும் பேசாமல் விஷயத்தை சமர்ப்பணம் செய்தார். சமர்ப்பணமாய்விட்டது. பேசாமலிருந்தார். பெரியவன் 3 நாட்களாய் கேப்டனைத் தேடுகிறான், கிடைக்கவில்லை. ஒரு முறை அவன் வீட்டிற்கே போய் "எப்படி நீ என்னைத் திட்டலாம்'' எனக் கேட்கப் போனான், அவனில்லை. அவனுடைய தம்பியும், தாயாரும் பெரியவனைப் பார்த்துப் பிரியமாகப் பேசி, "நாங்கள் கேள்விப்பட்டோம். என் மகன் அப்படிப் பேசியது தவறு'' என்றார்கள். பெரியவனுக்குச் சமாதானமாகிவிட்டது. தாயாரிடம் வந்து விஷயத்தைச் சொன்னான்.

ஒரு 10 நாட்கள் கழித்து தாயார் குடும்பத்துடன் பேசும்பொழுது, வாய்ப்பு வரும்பொழுது எப்படிச் சூழல் நம்மைச் சீண்டும் என்பதைப் பற்றிப் பேசினார்.

பெரியவன் : கேப்டன் திட்டியது அது போலவா?

தாயார் : திட்டுவது கேப்டனில்லை, சூழல்.

சிறியவன் : நீ என்னைத் திட்டுவதால், கேப்டன் உன்னைத் திட்டுகிறான்.

பெரியவன் : நான் திட்டுவதை நிறுத்திவிட்டேனே.

பெண் : இத்தனை நாள் திட்டியதற்குச் சிறு பலன்.

பெரியவன் : அம்மா, எனக்குச் சொல்லுங்கள்.

தாயார் : அதிர்ஷ்டம் பலிக்க நிதானம் வேண்டும்.

பெரியவன் : திட்டினால் திருப்பிக் கேட்டால் தப்பா?

தாயார் : உனக்குக் கோபம் வந்துவிட்டது.

கணவர் : எப்படி வாராமலிருக்கும்? உன் அதிர்ஷ்டம் அவன் கிடைக்கவில்லை.

சிறியவன் : கேப்டன் அதிர்ஷ்டம்.

கணவர் : பார்த்தால் எப்படிச் சண்டை போடாமலிருக்க முடியும். என்னைச் சொல்லியிருந்தால் அறைந்திருப்பேன்.

பெண் : ஏம்மா, நீங்கள் பேசவில்லை?

தாயார் : எல்லோரும் பேசுகிறார்கள், கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

பெரியவன் : எது சரி?

தாயார் : திட்டினால் திருப்பித் திட்டுவது சரி.

பெரியவன் : அது போதும்.

பெண் : நிதானம் வேண்டும் என்கிறீர்களே.

தாயார் : அதிர்ஷ்டம் வேண்டும் என்றால்தானே.

பெரியவன் : நான் வேண்டாம் என்றா சொல்கிறேன்.

பெண் : அம்மா, விவரமாகப் பேசுங்கம்மா.

கணவர் : அதிர்ஷ்டத்திற்கும், சண்டை போடுவதற்கும் என்ன சம்பந்தம்?

சிறியவன் : நிதானம் வேண்டும் என்று சொன்னீர்கள், சண்டை போட்டால் நிதானம் எங்கே?

கணவர் : எனக்கு விவரம் புரியக் கேட்கிறேன். டேய் சும்மா இருங்கடா, அம்மா பேசட்டும்.

தாயார் : ஒரு சட்டம். அதிர்ஷ்டம் வரும்பொழுது சூழல் நம்மைச் சீண்டும்.

கணவர் : ஏன்?

தாயார் : அதிர்ஷ்டம் என்பது சாதனை. அதைப் பெற weight தகுதி வேண்டும். தகுதி குறைவாயுள்ளவர்க்கு அருளால் அதிர்ஷ்டம் வந்தால், சூழல் அனுமதிக்காது. அவனைச் சீண்டும். அவன் துள்ளினால் அதிர்ஷ்டம் போய்விடும். நிதானமாக இருந்தால் வரும்.

பெரியவன் : நான் சண்டை போடப் போனது தவறா? ஏன் என்னை நீங்கள் தடுக்கவில்லை?

தாயார் : நீ சூடாக இருந்தாய்.

பெண் : அண்ணா, நீ அம்மாவைக் கேட்டாயா?

பெரியவன் : கேட்கவில்லை.

பெண் : எப்படிச் சொல்வார்கள்?

பெரியவன் : அம்மா சொல்லக்கூடாதா?

சிறியவன் : அம்மா சொன்னால் நீ கேட்பாயா?

கணவர் : நீ சொல்றது, சொரணை கூடாது என்றாகிறதே.

தாயார் : சொரணை, சூடு துள்ளுபவர்க்கு. அதிர்ஷ்டம் நிதானமானவர்க்கு.

கணவர் : எனக்கு அந்த நிதானமில்லையே. நான் என்ன செய்ய?

தாயார் : பெரியவனுக்கு இதுபோன்ற சண்டை இதுவரை வந்திருக்கிறதா?

கணவர் : அமெரிக்கன் டெக்னாலஜியால் வருகிறது என்று கூறுகிறாயா?

தாயார் : இதுவரை வந்தனவெல்லாம் பெரியவைதாமே.

பெரியவன் : என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கம்மா, நான் செய்கிறேன்.

தாயார் : நாம் நிதானத்தை இழக்கக்கூடாது.

பெரியவன் : சரிம்மா, எனக்குத் தெரியாது, தெரிந்தால் சண்டை போடுவேனா?

தமக்குச் சமர்ப்பணம் பலித்ததால் பையன் இதுவரை இல்லாததுபோல் பேசுகிறான் என்று தாயார் புரிந்துகொண்டு மேலும் பேசாமல் நடப்பதைக் கவனித்தார். சமர்ப்பணம் இந்த விஷயத்தில் பலித்ததால், தொடர்ந்து அது சம்பந்தமானவற்றைச் சமர்ப்பணம் செய்ய முடிவு செய்தார். கணவரும் சற்று மாறிப் பேசுவதைக் கண்டார். இதைக் கண்டு சந்தோஷப்பட்டார். நன்றி உணர்வது நல்லது என நினைத்தார். முதன்முறையாகச் சமர்ப்பணம் பலிப்பது பற்றி மகிழ்வெய்தினார். நிலைமை மாறியவுடன், அந்தஸ்து உயர்ந்ததால் வீட்டு மனிதர் மனநிலையும் மாறுவதைக் கண்டார். இம்மாற்றத்தை அவர் சமர்ப்பணம் கொண்டு வரமுடியவில்லை எனத் தெரிந்தது. புதிய அந்தஸ்து கொண்டுவந்த மாற்றத்தைத் தம் சமர்ப்பணம் கொண்டுவர முடியவில்லை. இனியாவது அந்தக் கட்டத்திற்குப் போகலாமா என நினைத்தபொழுது, அந்நினைவும் சமர்ப்பணத்திற்குரியதே, எண்ண ஓட்டத்திற்கன்று எனத் தோன்றியது.

பெரியவனைப் பொருத்தவரை தாயாருக்கு அவன் மனநிலை தெரியும். ஏனெனில் அதுவே ஆரம்ப நாளில் அவருடைய மனநிலை. ஆரம்ப நாட்களிலேயே எல்லாப் புத்தகங்களையும் அவர் படித்துவிட்டதால், இன்று தெரிவனவெல்லாம் அன்றே தெரியும். அன்று முதல் நிலையினின்று செயல்பட்டார். இன்று முடிவான நிலையிலிருந்து செயல்படும் அவசியத்தை உணர்கிறார். முதல் நிலையினின்று பல கட்டங்கள் நகர்ந்து வந்துவிட்டார். அவனை இன்று அதிகமாக எதிர்பார்க்க முடியாது என அறிவார்.

  • சூழல் அமெரிக்க  projectஐத் தந்தவுடன் மனம் ஏற்கும். அது முடிந்தால் தாம் என்னென்ன செய்ய முடியும் என மனம் ஓடும். அதுவே முதல் நிலை. அந்நிலையில் வந்ததைச் சமர்ப்பணம் செய்யவும் தோன்றாது. வந்ததைப் பலரிடமும் சொல்வது பொதுவான வழக்கம்.

  • இரண்டாம் நிலையில் பிறரிடம் சொல்வதில்லை. ஒரு பேச்சாக வந்ததைச் செயலாக வேண்டும் என்று சமர்ப்பணம் செய்வதில்லை, செய்யவும் தோன்றாது.
  • சமர்ப்பணம் செய்தால், வெளியில் சொல்லாவிட்டால், உடன் வேலை செய்பவர்கள் நாம் முன்பிருந்த நிலையில் - பிறரிடம் சொல்வது, சமர்ப்பணம் செய்யாதது - இருப்பார்கள். அதை நாம் கண்டு பேசாமலிருக்கிறோம்.
  • - அதையும் சமர்ப்பணம் செய்யத் தோன்றாது.
  • - எதைக் காண்போமோ அது சமர்ப்பணத்திற்குரியது எனத் தோன்றாது.
  • - அப்பொழுது உடனிருப்பவர் குறையால் விஷயம் கெடும்.
  • வெளியில் பேசாதது, சமர்ப்பணம் செய்வது, உடனுள்ளவர் குறைகளையும் சமர்ப்பணம் செய்வது, எதையும் பேசாமல் கண்டுகொள்ளாமல் கண்டதைச் சமர்ப்பணம் செய்வது என்பது அடுத்த கட்டம். அது தெரியாது. தெரிந்தால் செய்ய முன்வரமாட்டோம்.
  • அடுத்த கட்டத்தில் முதற்கட்ட நிலை சற்று மனதில் தலைதூக்கும். அதை மறுக்க, அடக்கம் பெரும்பாடுபட்டு தோல்வி, வெற்றியைக் கண்டாலும் - பெரிய தோல்வி, சிறிய வெற்றி - மறுப்பதற்குப் பதிலாக அதையும் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்ற நினைவே வாராது.
  • மேலும் பக்குவம் வந்தால், முன்னுள்ள குறைகள் 95% விலகும். 5% குறைகளை அடுத்தவரிடம் காணலாம். என்ன செய்யலாம் என யோசிப்போம். யோசனை பலவாறு சென்று முடிவில்லாமல் நிற்கும். யோசனை சமர்ப்பணத்திற்குரியது!
  • யோசனை சமர்ப்பணத்திற்குரியது என்ற யோசனை The Life Divine,Synthesis, படித்தது, கேட்டது, செய்தது ஆகிய இடங்களுக்குப் போகும். சமர்ப்பணம் நினைவு வாராது.சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நினைவு வாராது.

  • அடுத்த கட்டத்திலும் சமர்ப்பணம் எழாது. மற்ற எல்லா முயற்சிகளும் தோன்றும்.

பிறர் எப்படித் தோல்விக்குக் காரணம்?

என்ன இல்லை?

என்ன செய்யலாம்? யார் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?

என்றெல்லாம் தோன்றும். சமர்ப்பணம் தோன்றாது.

தோன்றினால் செய்யமாட்டோம்.

  • இவையெல்லாம் நமக்கு taste of ignorance, occupation, இருப்பதை விடமுடியவில்லை என்று தெரிந்தால், தெரிந்ததோடு நின்றுவிடும். இவை நமது பிடிப்பு தரித்திரத்தின் மீதுள்ளது என்பதோ, அதை விடமுடியும் என்பதோ, அவையும் சமர்ப்பணத்திற்குரியவை என்பதோ காத தூரத்திலுமிருக்காது.
  • எந்த வகையான சிந்தனையும் அழியவேண்டும் என்று தெரிந்தாலும் நினைவு வாராது. மனம் சிந்தனையை நாடும், ரசிக்கும், திளைக்கும்.
  • இதைச் சமர்ப்பணம் கடந்தால், இதேபோல் உணர்வையும், உடலையும் கடக்க வேண்டும் என்று தோன்றும். தோற்றம் மலைப்பாக இருக்கும். சமர்ப்பணம் என்ற சொல்லே மறந்துபோகும்.
  • வாய்ப்பு வந்தமாத்திரம் வாய்ப்பே அன்னை என வரவேற்று, வரவேற்பைச் சமர்ப்பணம் செய்து, மனம் சமர்ப்பணத்திலும், ஜீவன் சரணாகதியிலும் நிலைப்பதே சரி என வெகுநாள் முன் பெற்ற தெளிவு சில சமயங்களில் மேலெழும். பல சமயங்களில் இருக்காது.
  • ஏதாவது ஒரு சிறு விஷயத்தை - போனில் பேசுவது போன்றது - அதுபோல் பூரணச் சமர்ப்பணத்திற்கு உட்படுத்தி வெற்றி பெறுவது ஆரம்பம் என்று தெரிந்தாலும், அது போன்ற முயற்சிகளில் பழைய தோல்வி நினைவு வருமே தவிர, புது முயற்சி எழாது.
  • புது முயற்சி என்றவுடன் இதையும் சமர்ப்பணம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் தோன்றி சமர்ப்பணத்திற்குத் தடையாகும்.

இவ்வளவையும் தாம் பல முறை எண்ணியதால் பெரியவன் இன்று சொல்லுங்கள், செய்கிறேன் என்கிறான் என்று புரிவதும், எண்ணமே, எண்ணமில்லாவிட்டால் மனமே என நினைத்தபொழுது பெரியவன் வந்து தம் மனத்திலுள்ளவற்றை ஏற்றதுபோல் பக்குவமாக உட்கார்ந்தான். அமெரிக்காவிலிருந்து நண்பன் வந்திருப்பதாக, அது சம்பந்தமான ஆயிரம் விவரங்களைத் project தவிர மற்ற எல்லா விவரங்களும் - கூறினான். அமைதியாக இருந்தான். அவன் நிலையைக் கண்ட தாயார் 10 ஆண்டுகளுக்குமுன் தம் நிலையை நினைத்துப் பார்த்தார். இதுபோன்ற பக்குவம் தமக்கு வந்தபிறகு,

  • தாம் முதல் நிலையிலும், இரண்டாம் நிலையிலும், மாறி, மாறி இருந்தது நினைவுக்கு வந்தது.
  • பழைய எதிரிகளை ஒழித்துக்கட்டவேண்டும்,

செயலால் பழிவாங்க வேண்டும்,

சொல்லால் அவமானப்படுத்தவேண்டும்,

பெருந்தன்மையாக மன்னிக்கவேண்டும்,

அவர்கட்கும் நல்லது செய்யவேண்டும், என்றெல்லாம் தாம் அன்று நினைத்தவை மகன் மனதிலும் இருக்கும் என நினைத்தார்.

  • தனக்கு இன்றுவரை அது அடியோடு போகவில்லை என்பதற்கு அவை திருவுருமாறாததே காரணம் எனத் தெரியும்.
  • தம்மைப்போல ஏன் மகனிருக்கவேண்டும், அவன் தம்மைவிட உயர்ந்திருக்கக் கூடாதா எனவும் நினைத்தார். அந்நினைவு சமர்ப்பணத்திற்குரியதாயிற்றே!
  • விஷயம் என எழுந்தவுடன் செய்யாத முழுச் சமர்ப்பணம் சமர்ப்பணமில்லை.

அது நினைவை அழித்து,

பரவசமாக்கி,

மனம் கனிந்து,

ஆத்மா மலர்வதாகும்.

  • ஆத்ம மலர்ச்சிக்குப்பின் ஆத்மா உள்ளே போய்விட்டால்
  • மனம் முன்போல் அலைஅலையாக லேசாகச் சுருதி கூட்டுவது

அழிந்த மனத்தில் சுடுகாடாகவோ,

அழிய மறுக்கும் மனம் உயிர் பெறுவதாகவோ இருக்கலாம்.

தம் நிலையென்ன என்று அறிய முனைந்தார். அறிவு சமர்ப்பணத்திற்குரியது!

இவ்வறிவை ஸ்ரீ அரவிந்தர் censor எச்சரிக்கும் மனம் என்கிறார்.

Censor எச்சரிக்கை செய்யும் மனம் அடங்கும்வரை சமர்ப்பணம் இல்லை. அது முழுவதும் அடங்கி, Life Response எழும்வரை பொறுமையாக இருப்பதே பொறுமை. எந்தக் கட்டத்திலும் நமக்குப் பொறுமை போகலாம். அங்குச் செயல்பட ஆரம்பித்தால் அந்தக் கட்டம் வரும்வரை பலிக்கும். முழுவதும் பலிக்காது. தாயாருக்குத் தாம் கடைசி கட்டத்திற்கு முன்நிலைக்கு வந்தது தெரிகிறது.

அடுத்த கட்டம் பூர்த்தியாகி, அனைத்தும் சமர்ப்பணமாகும்வரை தாம் பொறுமையாக இருக்கவேண்டிய அவசியத்தைத் தாயார் உணர்ந்தார்.

இம்மனநிலையில் Let Thy will be done,Not my will என்பதை முன்பைவிட அதிகமாகச் சொல்ல முடிவதையும், சொல் மனத்திலிருந்து நெஞ்சுக்கு நகர்வதையும் உள்ளே கண்டார்.

ஒரு பிரச்சினையில் பல நிலைகள் இருப்பதுபோல், ஒரு வாய்ப்பிலும்

பல நிலைகள் உண்டு. முதல் நிலை வழிவிட்டவுடன் நாம்

திருப்திபட்டு மீண்டும் நம் பழைய பழக்கத்திற்கு வந்து சமர்ப்பணத்தை

விட்டுவிடுவதால் நமக்கு வாய்ப்புகள் பூர்த்தியாவதில்லை. இனி

இத்தவற்றைச் செய்வதில்லை எனத் தாயார் உறுதி பூண்டார்.

சமர்ப்பணம் பூரணமாகி சரணாகதியானால் பிரச்சினையில் குறையிருக்காது. பிரச்சினையால் வந்த நஷ்டம் ஈடு செய்யப்பட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் நமக்கு நஷ்டமேற்படுத்தியவனை ஊரார் மதிக்கிறார்கள் என்றால், பொருள் வந்துவிட்டாலும், மனம் திருப்திபடாது. அவனைத் தவறானவன் என உலகம் கருதினால் மனம் நிறைவடையும். பொருள் கிடைக்கும்வரை சமர்ப்பணம் செய்யலாம். பிரார்த்தனையே அதைச் செய்யும். அவனுடைய தவறு வெளிவர, நம் தவற்றை நாம் உணரவேண்டும். நாம் செய்த தவற்றால் பொருள் பறிபோயிற்று, அதற்கு நாம் வெட்கப்படும் அளவுக்கு, அவனுடைய தவற்றை உலகம் கண்டிக்கும். மனிதச் சுபாவம் தன் குறையை ஏற்கும், பிறர் குறையைக் கண்டிக்கும். தன் குறைக்கு வெட்கப்படாமல் பிறர் குறையைக் கண்டிக்க முடியாது என்பது வாழ்வுக்குரிய சட்டம். சமர்ப்பணம் நமக்குப் பூரணமாகப் பலிக்கிறதா என அறிய, நமது அனுபவம் ஒன்றை மனதால் திருப்பினால், அது மீதியுள்ள குறையை நிறைவாக்கினால், பலிக்கிறது என அறியலாம். அந்நிலையில் அது - சமர்ப்பணம் - பூரணமாகும்.

  • நாம் இடம் தாராமல் பொருள் நஷ்டமாயிருக்காது என்பதுபோல,
  • நாம் மனத்தில் இடம் தாராமல், மனம் இன்று குறைப்படாது.
  • நாம் அன்று மனத்தில் கொடுத்த இடத்தை இன்று விலக்க வேண்டும்.
  • அந்த சக்தி எண்ணத்திற்கில்லை. எண்ணம் ஏற்ற உணர்வுக்குண்டு.
  • உணர்வைத் தாங்கும் உடல் அக்குறையுடன் பிறந்ததால், அடிப்படையில் அது இருக்கும். சமர்ப்பணம் சரணாகதியாகும்பொழுது அதுவும் மாறி வருத்தம் சந்தோஷமாக மாறும்.
  • அம்மாற்றம் திருவுருமாற்றம்.
  • உள்ளுணர்வில் நாம் உணராத வெட்கத்தைப் புற நிகழ்ச்சி கொண்டுவருவது புறத்தின் அருளாக நாம் கருதாமல் தொந்தரவு எனக் கொள்கிறோம்.
  • சமர்ப்பணம் சந்தோஷம் தரும்பொழுது பூரணமடைகிறது.

பெரியவன் தாயார் சொன்னதை முக்கியமாக எடுத்துக்கொண்டு தன் மனத்தைச் சோதனை செய்தான். மனம் சுடுகாடாயிருக்கிறது. 10 வருஷங்கள் குடியில்லாத வீடுபோல் குப்பை, கூளம், ஒட்டடை, பாசி, மண், தூசி படிந்த வீடுபோல் மனம் அவலமாய் இருப்பதைக் கண்டான். தன்னால் இம்மனத்தைச் சுத்தம் செய்ய முடியாது என தீர்க்கமாக அறிந்தான். விரக்தியடைந்து அன்னை ஸ்ரீ அரவிந்தர் புத்தகங்களில் இது சம்பந்தமானவற்றைப் படிக்கலானான். மனம் அனைவரிலும் இது போன்றதே என்று படித்தபிறகு சமாதானமடைந்தான். எது முடியாவிட்டாலும், இந்த வீட்டிலுள்ள பாம்பு, தேள், நட்டுவாக்களிகளை அடித்துப்போடுவது அவசியம் என்பதுபோல் தன் மனத்திலுள்ள பெரிய கெட்ட எண்ணங்களை விலக்கவேண்டும் என உறுதிபூண்டான்.

  • தனக்கு எதிரி என்றால் அவனை ஒழித்துக் கட்டவேண்டும் எனத் துடிக்கும்.
  • தன்னைவிட எவர் மிஞ்சினாலும் அவர்மீது பொறாமை எழும்.
  • மறுத்துப் பேசினால் மனம் கொந்தளிக்கும்.
  • மனம் இருளால் நிரம்பியுள்ளது அவனுக்குத் தெரிந்தது.

தனிமையில் தன் மனம் இப்படிப் பொருமிய பழைய நேரங்களைச் சிந்தனை செய்தான். அது சம்பந்தப்பட்டவர் ஒருவர் ஆஸ்பத்திரிக்குப் போனார். அடுத்தவர் காலை ஒடித்துக்கொண்டார். மற்றொருவர் இறந்துபோனார். இவற்றை நினைத்தபொழுது அவன் மனம் துணுக்குற்றது. எவரிடமும் கூறத் தைரியமில்லை. தனியாகத் தாயாரிடம் பேசினான். இவற்றைத் தான் ஏற்கனவே அறிந்திருப்பதாக கூறியவுடன் பெரியவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. எதையும் அன்னை விலக்குவார் என்று தாயார் கூறியபொழுது மனம் சமாதானம் அடைந்தது. தீவிரமாகத் தனிமையில் முயன்றதன் பலனாக ஒருநாள் அக்கறுப்பு சக்திகள் தன்னைவிட்டுப் போனதைப் பார்த்தான். மறுநாள் பேப்பரில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு அதிசயம். திருடன் ஒருவன் மனச்சாட்சிக்கிணங்கி தானே வந்து

சரணடைந்தான். அடுத்த நாள் வேறொரு போலீஸ் ஸ்டேஷனில் அதே செய்தி. தன் மனம் மாறியதை புற நிகழ்ச்சி காட்டுவதை அறிந்து அம்மாவிடம் கூறினான். அம்மா, தென்னந்தோப்பில் திருடு நின்றதையும், 4 திருடர்களில் ஒருவனுக்கு எலக்ட்ரிக் ஷாக்கால் கை ஊனமானதையும், அடுத்தவனை அவனுடைய ஊரார் பிடித்து "எங்கள் மானத்தை வாங்குகிறாயே'' என அடித்ததையும், மேலும் இருவர் முதலாளியிடம் வந்து திருட்டை ஒப்புக்கொண்டு வேலை கேட்டதையும் எடுத்துக் கூறினார். பெரியவனுக்குத் தன் மனத்திலுள்ள ஒரு கெட்ட எண்ணம்தான் வெளியேறியுள்ளது, மீதி அப்படியே பழைய நிலையில் உள்ளது தெரியும். "நான் மாறிவிட்டால், என் மனம் இருளையும், குப்பையையும் விட்டகன்றால், உலகமே திருந்திவிடும் போலிருக்கிறதே'' என நினைத்தான். அதுவே தத்துவம் என அவனுக்குத் தெரியாது.

  • ஒருவர் மனத்துள் உள்ள உலகம் அவனுலகம் மட்டுமன்று, பிரபஞ்சம் முழுவதும் ஒருவர் மனத்துள் உள்ளது.
  • பிரபஞ்சத்தைக் கடந்த பரமாத்மாவும், பிரம்மாவும் ஒருவர் மனத்துள் சூட்சுமமாக இருக்கிறார்கள்.
  • The Life Divine Book II,Chapter II ,The Eternal and The Individual  என்பதின் கருத்து இது.

நான்' செய்யும் சமர்ப்பணம்:
நான்' என்பது அகந்தை. சமர்ப்பணம் செய்தபின் அகந்தை அழியவேண்டும். அகந்தை அழிந்தால் ஏற்படுவது புருஷன்.

  • அகந்தை தியானத்தால் அழிந்தால் வெளிப்படுவது புருஷன் - ஆத்மா.
  • அகந்தை சமர்ப்பணத்தால் அழிந்தால் வெளிப்படுவது ஆத்மா - வளரும் ஆத்மா என்ற சைத்தியப்புருஷன்.
  • சமர்ப்பணம் மனத்திலுள்ள சைத்தியப்புருஷனை வெளிப்படுத்தும்.
  • மனத்தின் சைத்தியப்புருஷனை நாடுவது சமர்ப்பணம்.

  • இதற்கு 3 கட்டங்கள் உள்ளன.
  • 1. சிந்தனை அழிந்த மௌனம் - மனம்.
  • 2. உணர்வில் சலனமற்ற அமைதி - உயிர்.
  • 3. பழக்கத்தைக் கடந்த பலம் - உடல்.
  • இந்த மூன்று பகுதிகளையும் (நெ.1, நெ.2, நெ.3 ஆகியவை 1ருந்து 9வரை என்ற அட்டவணைக்குரியன) மனத்துள் காண்பது மனத்திற்குரிய சமர்ப்பணம்.

"'நான் இந்த projectஐ ஏற்கவேண்டும்'' என்ற எண்ணத்தை சமர்ப்பணம் செய்யவேண்டுமானால், முதல் இந்த எண்ணத்தினின்று நாம் detach விடுபடவேண்டும், விலக வேண்டும். விலகுவது சமர்ப்பணமாகாது. விலகாமல் சமர்ப்பணம் செய்ய முடியாது. நாம் விலகினால் மனம் force சுதந்திரமாக, லேசாவது தெரியும். நான் - என் மனம் - இவ்வெண்ணத்தை ஏற்றுக் செயல்படுவதைவிட இதை அன்னையிடம் கொடுத்துவிடுவது மேல் என்பது சமர்ப்பணம். அதுவும் அன்னையிடம் கொடுப்பது - ஓர் எண்ணம். அந்த எண்ணத்தைப் பற்றி நமக்கு ஓர் உணர்ச்சியிருக்கும். அது நல்லது என்ற உணர்விருக்கும். அவ்வுணர்விலிருந்து விலகி அவ்வுணர்வைச் சமர்ப்பணம் செய்யவேண்டும். சமர்ப்பணமானால் நெஞ்சு நிறையும். சமர்ப்பணம் நமக்கு ஒரு பழக்கமாக இருக்கும். பழக்கம் உடலைச் சேர்ந்தது. அப்பழக்கத்திலிருந்து விலகி, அப்பழக்கத்தைச் சமர்ப்பணம் செய்யவேண்டும். பழக்கம் சமர்ப்பணமானால் புராஜக்ட் பூர்த்தியாகும். புராஜக்ட் கூட்டாளிகளால் பேசப்படும் நிலையில் ஒரு பார்ட்னருக்கு பழக்கம் சமர்ப்பணமானால், புராஜக்ட்க்கு லைசென்ஸ் கிடைத்துவிடும். எந்தச் செயலுக்கும் எண்ணம், உணர்ச்சி, பழக்கம் சமர்ப்பணமானால் அச்செயல் பூர்த்தியாவதைக் காணலாம். ஒருவரைக் கூப்பிட நினைத்து இதுபோல் சமர்ப்பணமானால் அவர் நம்முன் நிற்பார். கூப்பிடலாமா, வேண்டாமா என முடிவு செய்வது மனத்துடைய முடிவு, சமர்ப்பணமன்று. எது சரியான முடிவு என மனம் தேடுவதை நாம் சமர்ப்பணம் என நினைப்பது இயல்பு. அது தவறு. சரியான முடிவை

எடுத்தபின் நாம் நம் முடிவை நம்புகிறோம். அது சமர்ப்பணமன்று. முடிவை எடுத்து சமர்ப்பணம் செய்ய முயன்றால் முடிவு பூர்த்தியாகும். அதுவும் சமர்ப்பணமாகாது. முடிவைப் பூர்த்தி செய்யும் திறனாகும். நாம் முடிவை எடுக்காமல், முடிவை அன்னைக்குக் கொடுத்து, அவர்கள் முடிவை நாம் ஏற்க முன்வருவதே சமர்ப்பணம். முடிவு சமர்ப்பணமானால், அதேபோல் உணர்வும், பழக்கமும் சமர்ப்பணமானால் சமர்ப்பணம் சரணாகதியாகும். 5 ஆண்டுகள் கழித்து நிறைவேற வேண்டிய புராஜக்டின் பலன் இப்பொழுதே கைக்குக் கிடைக்கும். இது செயலுக்குரிய சரணாகதி. நம்மையே சரணம் செய்வது - ஜீவனுக்குரிய சரணாகதி - என மனம், உயிர், உடல் சரணம் செய்யப்படவேண்டும்.

Culture is compassionate knowledge of Life.கருணை என்பது இறைவன் இக வாழ்வில் செயல்படுவது. மனிதன் விலங்குபோல் வாழ்ந்த நாளுண்டு. இன்று நாகரீகமடைந்துவிட்டான் என்றால், விலங்கு போலில்லாமல், மனிதனாக வாழ்கிறான். நகர வாழ்வில், நாகரீகத்தை - மனிதத்தன்மையை - ஏற்காமல் வாழும் மனிதன் அளவுகடந்து ஜெயிப்பது உண்டு, அளவுகடந்து அழிக்கப்படுவதும் உண்டு. நாகரீகத்தைக் கடந்தது பண்பு. பண்பாக வாழ்தல் என்றால் என்ன?

  • வாழ்க்கைக்கு ஜீவனுண்டு.
  • அதன் ஜீவனுக்கு சத்தியமில்லை, அது பொய்.
  • அதை ஏற்று வாழ்பவன் விலங்கைவிட திறமையான மனித விலங்காகும்.
  • அவன் பண்பிற்கும், நாகரீகத்திற்கும் விலக்கானவன்.
  • சமூகத்தின் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவன் நாகரீகமானவன்.
  • அதைக் கடந்தது மனச்சாட்சி.
  • மனச்சாட்சிக்குட்பட்டு வாழும் மனிதன் மனிதர் குல மாணிக்கம்.
  • மனிதப் பண்பு மனச்சாட்சியைக் கடந்தது.



book | by Dr. Radut