04.நெஞ்சில் உறையும் தெய்வம் - ஆத்மா
நெஞ்சில் உறையும் தெய்வம் - ஆத்மா
N. அசோகன்
நாடு பெற்ற விடுதலையை நாமும் பெறவேண்டும். நாம் விடுதலை பெறுவதென்றால் முடியாதது, முடியவேண்டும். அழும் குழந்தையைச் சிரிக்கவைப்பதும், காலம் கடந்தபின் கண்ணிறைந்த கணவன் அமைவதும், சரியும் மார்க்கெட்டில் கம்பெனியை லாபகரம் ஆக்குவதும், வறட்சியான பருவத்தில் பயிரிடுவதும், எல்லையில் நின்று மிரட்டும் எதிரியை எதிர்கொள்வதும் முடியாதவையாக மாறும் நேரம், நெஞ்சைத் தொட்டு ஆத்மாவை நினைவுகூர்ந்தால் "அவை முடியும்' என மாறும். விடுதலை பெற்ற இந்தியா விருதாகப் பெற்று வரும் அனுபவம் இது.
மனிதன் என்பவன் மனத்தால் வாழ்பவன். மனத்தின் திறமைக்கு எல்லையுண்டு; ஆத்மா வரையறையற்றது.
காலையில் குழந்தைகள் பள்ளிக்குப் புறப்படும் நேரம், கணவன் பஸ்ஸைப் பிடிக்க வேண்டும் எனில் தினமும் வீடு அமர்க்களப் படுகிறது. "இது இப்படித்தான்' என மனம் ஏற்கிறது; டென்ஷன் நிலைபெறுகிறது. பெரிய படிப்பு, சிபாரிசில்லாமல் நல்ல வேலை கிடைக்கவில்லை. சொற்ப சம்பளத்தைக் "கர்மம்' என நாம் ஏற்கிறோம். இன்று வீடு கட்டாதாரில்லை. குடும்பம் பெரியதானதால், "நமக்கு அந்த பாக்கியமில்லை' என முயற்சியைக் கைவிடுகிறோம். பாஷன் மாறியதால் மார்க்கெட்டே மறையும்போது "நமக்கு மட்டுமா?' என மனத்தை அமைதி செய்துகொள்கிறோம். சுதந்தரம் வரும் முன் இது போன்ற தோல்விகள் 100க்கு 95. நாடு அன்னியனிடமிருந்து விடுதலை பெற்று சுமார் 20 அல்லது 25 ஆண்டுகள் ஆனாலும் நிலைமை மாறவில்லை.
40 வயதுக்குட்பட்டவர் இன்று சுதந்திர மண்ணில் பிறந்தவர். நாடு பெற்ற விடுதலை, உடல் பெற்ற விடுதலை. அடுத்து உயிரும், மனமும், ஆத்மாவும் விடுதலை பெறும் நேரம் 1970, 1980க்குப்பின் வந்துவிட்டது. அன்று நடக்காதவை, இன்று ஓரளவு நடக்கின்றன.
"நாட்டை யார் ஆண்டால் என்ன? ஆத்மாவை யார் அடிமைப் படுத்த முடியும்? ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும் அவசியமில்லை. ஆத்மசுதந்திரம் அனைத்தையும் சாதிக்கும்'' என்ற பொருள்பட மகாத்மா காந்திக்கு டால்ஸ்டாய் எழுதினார். பிறந்தமண் விடுதலை பெறாமல் ஆத்மா சுதந்திரம் பெற முடியாதுஎன்பது ஆன்மீகச் சட்டம். நம் நாடு பெற்ற விடுதலை 45 நாடுகளையும் விடுவித்தது. நாடு ஆயுதம் தாங்கி விடுதலைப் போராட்டம் நடத்தவில்லை. ஆத்ம சக்தியான சத்தியாக்கிரகத்தால் விடுதலை பெற்றது. கடந்த 20, 30ஆண்டுகளாக இங்குமங்குமாக மக்கள் தங்களையறியாமல் அன்று மகாத்மா காந்தி பயன்படுத்திய ஆயுதத்தை அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுத்துகின்றனர்.
அப்படி முயன்றால் முடியாததில்லைஎன்பது அனுபவம். சிறிய விஷயங்களிலிருந்து பெரிய கம்பெனி நிர்வாகம்வரை, தோல்வியின்றிச் செயல்படும் இச்சக்தியின் வெளிப்பாடுகளை எல்லாத் துறைகளிலும் விளக்கிக் கூறலாம்.
சுமார் பத்து, பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு வடநாட்டில் 40 கோடி கம்பெனி ஒன்றை மூட முடிவு செய்தனர். 40 கோடி செலாவணியும், ரூ.2 கோடி லாபமும் உள்ள கம்பெனி அது. ஆத்ம சக்தி தவறாதுஎன்ற அடிப்படையில் நிர்வாகத்துறை நிபுணர்கள் இக்கம்பெனி நிர்வாகத்தை அணுகி, "கம்பெனியை மூடவேண்டிய அவசியமில்லை. மேலும் லாபம் 4 கோடியாகும்'' என்றனர். "25 ஆண்டுகட்கு முன் டெக்னாலஜி மாறிய காலத்தில் சொற்ப விலைக்கு வந்ததால் அதை வாங்கினோம். இன்று எங்கள் சரக்கை உலகில் பயன்படுத்தும் கம்பெனியை விரல்விட்டு எண்ணலாம். மூடுவதே உசிதம்'' என்றனர். ஆயினும் நிபுணர்கள் சொல்லை ஏற்று, அவர்களை ரிப்போர்ட் தயார் செய்யச் சொன்னார்கள். 3 மாதத்தில் ரிப்போர்ட் 4 கோடி லாபமுள்ள இடங்களைக் காட்டியது. நிபுணர்கள் மூவர். அவர்களில் ஒருவர், "நம் ரிப்போர்ட்படி லாபம் 4 கோடியாகும்.மானேஜ்மென்ட் இதன் சூட்சுமத்தை ஏற்றால் லாபம் 6 கோடியாகும். இரகசியத்தை ஏற்றால் 12 கோடியாகும்'' என்றார். ரிப்போர்ட் எழுத வேண்டியவர் தம்மால் அப்படி எழுத முடியாது என்றார். முடிவாக 4, 6, 12 கோடி லாபத்தை குறிப்பிட்டு ரிப்போர்ட் எழுதப்பட்டது.
நிர்வாகி, "வெளியிலிருந்து வந்த நீங்கள் 12 கோடி லாபத்தைக் கண்டுவிட்டீர்கள். நாங்கள் அதைக் கண்டுபிடிக்கிறோம்'' என்றார். இந்த ஆண்டு அந்தக் கம்பெனி 500 கோடி செலாவணியுடன் லாபகரமாயும் நடக்கிறது.
எப்படி ஆத்மாவை அன்றாட வாழ்வில் செயல்படச் செய்வது? அதற்குரியவை என்ன முறைகள்? அதைச் செய்தவர்கள் அனுபவங்களை விவரிக்க முடியுமா? என்பவை முக்கிய கேள்விகள். அத்தகைய அனுபவங்களை அதற்குரிய முறைகளுடன் விவரிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடரின் முதற்கட்டுரை இது.
****
ஸ்ரீ அரவிந்த சுடர்
உயிரைக் காப்பாற்றுதல், வளர்ச்சி; அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சி, பரிணாம வளர்ச்சி. நாம் வாழும் நிலையில் எல்லாத் திறமைகளும் குறைந்தபட்ச அளவில் பூர்த்தியானால்தான் உயிர்வாழ முடியும். அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சிபெற இத்திறமைகள் அதிகபட்ச அளவில் பூர்த்திபெற வேண்டும். வளர்ச்சி இவற்றிற்கு இடைப்பட்டது. அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சி, மனிதனை அவனுள்ள நிலையிலுள்ள பல சிறு நிலைகளுக்கு உயர்த்த வல்லது. திறமையை வளர்த்தால் அனுபவம் பெற்று அடுத்த நிலைக்குப் போகலாம்.
பரிணாம அனுபவத்தின் சாரத்தால் வளர்வது, அந்த சாரம்
ஜீவனின் மூலை முடுக்குகளில் சேருகிறது.
- Login to post comments