Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே

தெய்வீக அன்னையின் மலர்திருவடிக்குச் சமர்ப்பணம்

ஸ்ரீ அன்னையின் அருளால் நலம்.

நான் கடலூர், ஜோதிநகரில் வசிக்கிறேன். எனக்கு 26.10.2002 அன்று மஞ்சள்காமாலை வந்தது. அதற்காக டாக்டரிடம் சிகிச்சை எடுத்தேன்; குணம் ஆகவில்லை. நோய் அதிகமாகிக்கொண்டே வந்தது. பிறகு சென்னையில் இருந்து கடலூர் வரும் டாக்டரிடம் (Gastrospecialist) காட்டினேன். அவர் சில டெஸ்ட் எடுத்து பார்த்துவிட்டு, இது சாதாரண மஞ்சள்காமாலை இல்லை. இது auto immune hepatitis எனக் கூறினார். Auto immune hepatitis என்றால் நம் உடலில் நோய் வாராமல் பாதுகாக்க வேண்டிய செல்களே நமக்கு எதிராக மாறுவது. இது மிகவும் rare case எனக் கூறினார். இதற்கு (steroid) ஸ்டிராய்டு தான் ஒரே மருந்து எனக் கூறினார். ட்ரீட்மெண்ட்டுக்காக சென்னை வரச்சொன்னார். அங்கு, மேலும் பல டெஸ்ட் எடுத்து கன்பர்ம் செய்துவிட்டு steroid வாழ்நாள் முழுவதும் சாப்பிடவேண்டி இருக்கும்; நிறுத்தினால் இந்த நோய் மீண்டும் வர சான்ஸ் உள்ளது எனக் கூறினார். இந்த மருந்தால் நிறைய பக்கவிளைவுகள் வரும் எனச் சொன்னார். நோய் மிகவும் முற்றிவிட்டதால் உயிர் காக்கும் மருந்தாகச் (steroid) சாப்பிட ஆரம்பித்தேன். ஹாஸ்பிடலில் 20 நாட்கள் இருந்தேன். அப்போது ஒரு நாள் ஹாஸ்பிடலில் இருக்கும் டி.வி.யில் காலை 5.55க்கு ஸ்ரீ அன்னையின் தரிசனம் கிடைத்தது. உடனே என் கணவரிடம் ஸ்ரீ அன்னையின் படம் எனக்கு வேண்டும் எனக் கேட்டேன். அவரும் மாம்பலம் தியானமையம் போய் விசாரித்துவிட்டு, ஸ்ரீ அன்னையின் படம் கிடைக்காது எனக் கூறி, ஸ்ரீ அன்னையின் மலர்ப்பிரசாத பாக்கெட்டும், "அன்னையின் தரிசனம்'' புத்தகமும் கொடுத்ததாக என்னிடம் கொடுத்தார். பிறகு, "எங்கு இருந்து வருகிறீர்கள்'' எனக் கேட்டுவிட்டு, "கடலூரில் இருந்து வருகிறோம்'' எனச் சொன்னவுடன் கடலூர் ஜோதி நகரில் ஸ்ரீ அன்னையின் தியானமையம் செயல்படுகிறது என அவர்கள் கூறியவுடன் தான் எங்களுக்கு கடலூர் ஜோதிநகரில் ஸ்ரீ அன்னையின் தியானமையம் இருப்பது தெரிய வந்தது. அன்னையின் தரிசனம் புத்தகத்தில் "கர்மத்தின் ஆணிவேரை கரைக்கும் சக்தி ஸ்ரீ அன்னைக்குமட்டும்தான் உண்டு" என எழுதி இருப்பதைப் பார்த்தபின் தான் எங்களுக்கு ஸ்ரீ அன்னையின் மேல் நம்பிக்கை வந்தது.

ஸ்ரீ அன்னையின் மலர்ப்பிரசாதத்தைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கியதில் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. டெஸ்ட் எடுத்துப்பார்த்ததில்  நோயின் தீவிரம் குறைந்து இருப்பது தெரிந்தது. நான் ஹாஸ்பிடலில் இருக்கும் போது "இந்த மருந்தை (steroid) நான் அதிகநாள் சாப்பிடக்கூடாது, எனக்கு எந்தப் பக்கவிளைவும் வரக்கூடாது'' என்று ஸ்ரீ அன்னையிடம் வேண்டிக்கொண்டேன். பின் டிஸ்சார்ஜ் ஆகி கடலூர் வந்தேன். அங்கு ஜோதிநகரில் ஸ்ரீ அன்னையின் தியானமையத்துக்கு நானும், என் கணவரும் சென்றோம். அங்குத் தியானமையப் பொறுப்பாளர் என் நிலைமையைக் கேட்டுவிட்டு, ஸ்ரீ அன்னையை ஏற்கும் முறை பற்றித் தெரிவித்தார். அதன்படியே செய்துவந்தோம். பொறுப்பாளர், மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டிக்கு அழைத்துச்சென்று, அங்குள்ள அன்பர்கள் மூலம் ஸ்ரீ அன்னையை எப்படி வணங்கவேண்டும், என்னென்ன மலர்கள் வைத்து வணங்க வேண்டும் என்றும், தினமும் 'சாவித்ரி' புத்தகம் (310 - 348 பக்கம்) படிப்பது ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள உதவினார். ஸ்ரீ அன்னையின் தியானமையத்தில் தினமும் நடைபெறும் தியானக் கூடலின்போது 'சாவித்ரி' புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பை அன்னை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். எந்த நேரமும் ஸ்ரீ அன்னையின் நினைவால் மருந்து சாப்பிட்டு கொண்டு, வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருந்தேன். வாரா, வாரம் தியானமையத்தைச் சுத்தம் செய்யும் பாக்கியத்தையும் அன்னை எனக்குக் கொடுத்தார்கள். ஸ்ரீ அன்னையிடம் எந்த நேரமும் "எனக்கு மருந்து வேண்டாம், எந்தப் பக்கவிளைவும் வரவேண்டாம்'' என வேண்டிக்கொண்டேன். சாவித்ரி புத்தகத்தில் (310 - 348 பக்கம்) தினமும் ஒரு பக்கம் வீட்டில் எழுதினேன். ஸ்ரீ அன்னையை மட்டும் வீட்டில் வணங்கி வருகிறோம். தினமும் மலர்கள் வைத்து எந்த நேரமும் ஸ்ரீ அன்னையின் நினைவால் இருப்பதால் ஸ்ரீ அன்னை என்னை எல்லா வேலைகளையும் நன்றாகச் செய்ய வைக்கிறார். எந்தப் பக்கவிளைவும் இல்லை. 22 மாதங்கள் மருந்து சாப்பிட்டுவிட்டு (7.11.2004) கடலூரில், ஸ்ரீ அன்னையின் 10ஆம் ஆண்டு விழா அன்று டெஸ்டை பார்த்த டாக்டர் மருந்து வேண்டாம் என நிறுத்திவிட்டார். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஸ்ரீ அன்னைக்கு நன்றி கூறினோம். பிறகு ஆண்டுவிழாவில் கலந்துகொண்டோம். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும் என்ற என் நிலையை மாற்றிய ஸ்ரீ அன்னையைப் பணிந்து வணங்குகிறேன்.

ஸ்ரீ அன்னைக்கும், ஸ்ரீ பகவானுக்கும், ஸ்ரீ அன்னையைத் தெரியவைத்த அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

பெரிய திட்டங்களை மனதிலிருந்து அகற்றினால் தான் பெரிய ஆன்மீக அனுபவங்கள் கிட்டும் என்கிறார் அன்னை. வளர்ந்த மனமுடைய மனிதன் எதையாவது செய்தபடி இருக்கும் மனநிலையையே அன்னை இங்குக் குறிக்கின்றார்.

திட்டங்கள் விலகினால் அனுபவம் கிட்டும்.

******

Comments

04.அன்பர் கடிதம்   Para 1  - 

04.அன்பர் கடிதம்
 
 Para 1  -  Line 37  - "சாவித்ரி'    -    'சாவித்ரி'



book | by Dr. Radut