Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV                                                கர்மயோகி

 

721) பிரபஞ்சம் மனிதனில் தன்னை ஒருநிலைப்படுத்தி மனோமயப் புருஷனை உற்பத்தி செய்தது. மனோமயப் புருஷன் பிரகிருதியில் வெளிப்பட்டு, சைத்தியப் புருஷனாகி, பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தில் பூர்த்தி செய்து கொள்கிறான். பிரபஞ்சம், பிரகிருதி, சைத்தியப் புருஷன் இயற்கையின் ஆன்மா.

. பிரபஞ்சம் ஜீவாத்மாவை உற்பத்தி செய்தது.

. ஜீவாத்மா பிரகிருதியால் சைத்தியப் புருஷனாகிறது.

       மனிதன் என்பதை ஆன்மீகப் பாஷையில் ஜீவாத்மா என்கிறோம். பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடைப்பட்ட நிலையில் பிரபஞ்சமும், அதன் ஆத்மாவான பிரபஞ்சத்தின் ஆத்மாவும் (Universal Soul) உள்ளன. பகவான் ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியை விவரிக்கும்பொழுது பரமாத்மா ஜீவாத்மாவாக மாறுவதே சிருஷ்டி என்கிறார். முதலில் பரமாத்மா பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி முடிவாக ஜீவாத்மாவாகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். Supreme,Self-conscious Being, Transcendent என்பவை பரமாத்மாவைக் குறிக்கும். Ego, individual, central being, self, jiva, jivatman என்பவை ஜீவாத்மாவைக் குறிக்கும்.

       இவற்றிடையேயுள்ளது பிரபஞ்சம் (universe, cosmos). பரமாத்மா முதலில் பிரபஞ்சமாகி, பிறகு ஜீவாத்மாவாயிற்று என்பது தத்துவ விளக்கம். பரமாத்மா பிரபஞ்சமானபொழுது, பிரபஞ்சம் அகண்டமாக விரிந்துள்ளதால் தன்னைத்தான் பரமாத்மாவில் பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான செறிவு (density, intensity) அதற்கில்லை. எனவே தன்னுள் பிரபஞ்சம் ஆயிரக்கணக்கான புள்ளிகளை எடுத்து, தான் முழுதும் ஏற்படுத்த முடியாத செறிவை இப்புள்ளிகளில் ஏற்படுத்தியது. இப்புள்ளிகள் அச்செறிவால் ஜீவன் பெற்றன. பிரபஞ்சம் என்பது இயற்கை எனும் பிரகிருதி, அதில் ஆன்மீகச் செறிவில்லை. இயற்கை - பிரகிருதி - செறிவு பெற்றால் ஆன்மா ஜனிக்கிறது. அப்படி உற்பத்தியான ஆன்மாவே ஜீவாத்மாவாகும்.

       ஜீவாத்மாவுக்குப் பிறப்பில்லை, வளர்ச்சியில்லை, அழிவில்லை என்பது மரபு. ஆதியும், அந்தமுமில்லாதது என்கிறோம். ஸ்ரீ அரவிந்தர் ஜீவாத்மாவை இரு பகுதிகளாகப் பிரிக்கிறார். ஆதியும் அந்தமுமில்லாத பகுதி. இது வளராது. பிரபஞ்சத்தினுள் - பிரகிருதியினுள் - ஆன்மா உண்டு. பிரபஞ்சம் பெறும் அனுபவத்தால் இந்த ஆன்மா வளர்கிறது. இதை சைத்தியப் புருஷன் என்கிறார்.

       மனிதனுள் ஜீவாத்மா பல பகுதிகளாகப் பிரிந்துள்ளது. உடல், உணர்வு, மனம் ஆகிய ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்றாக அன்னமயப் புருஷன், பிராணமயப் புருஷன், மனோமயப் புருஷன் என ஜீவாத்மா பிரிகிறது. அதேபோல் சைத்தியப்புருஷனும் பகுதிக்கு ஒன்றாக 3 ஆகப் பிரிகிறது. உடலுக்குரிய சைத்தியப் புருஷன், பிராணனுக்குரிய சைத்தியப் புருஷன், மனத்திற்குரிய சைத்தியப் புருஷன் (physical psychic, vital psychic, mental psychic) எனவாகப் பிரிகிறது. இவை அனைத்தும் சேர்ந்தது Central psychic சைத்தியப் புருஷன் என்பது நெஞ்சுக்குப் பின்னாலிருப்பது, கட்டைவிரல் அளவுள்ளது.

      ஸ்ரீ அரவிந்தம் புரிய பரமாத்மா, பிரபஞ்சத்தின் ஆத்மா, ஜீவாத்மா, அன்னமயப் புருஷன், பிராணமயப் புருஷன், மனோமயப் புருஷன், 4 நிலைகட்குரிய சைத்தியப் புருஷன்களை விவரமாகத் தெரிவது பயன் தரும்.

      ஆன்மா பரிணாம வளர்ச்சியடைகிறது என்கிறார் பகவான். உடலும், மனமும் பரிணாம வளர்ச்சியடைகின்றன என உலகம் அறியும். ஆன்மா வளரக்கூடியதன்று எனவும் உலகம் கூறும். பரிபூரண யோகத்தை ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்குரிய யோகம் என்கிறார்.

      ஜீவாத்மாவின் பகுதிகளானவை அன்னமயப் புருஷன், பிராணமயப் புருஷன், மனோமயப் புருஷன். உடலில் ஆன்மா உற்பத்தியானதே பரிணாம வளர்ச்சி. அது முதிர்ந்து மனோமயப் புருஷனாகியுள்ளது. இன்றைய பரிணாமத்தின் உச்சகட்டம் மனிதன் என்பதைப்போல், ஆன்மீகப் பரிணாமத்தின் உச்சகட்டம் மனோமயப் புருஷன். மனோமயப் புருஷன் பரிணாம வளர்ச்சியால் உயர்ந்து சத்திய ஜீவனாவது அடுத்த கட்டம்.

       பிரபஞ்சம் - universe - தான் வளர்ந்து உயர வேண்டும், உயர்ந்து பரமாத்மாவை அடையவேண்டும், அதையடைய பிரபஞ்சமான பிரகிருதி நேரடியாகச் சாதிக்க முடியாது. தன் ஆன்மீக சக்தியால்தான் முடியும் என்பதால், தன்னுள் செறிந்து அடர்ந்த புள்ளிகளாக ஜீவாத்மாக்களைப் பிரபஞ்சம் ஏற்படுத்தியது. ஜீவாத்மா பரிணாம வளர்ச்சியால் மனோமயப் புருஷன்வரை உயர்ந்துள்ளது.

       பிரகிருதியின் ஆத்மா சைத்தியப் புருஷன். அவன் வளர்ந்து சத்திய ஜீவனாக வேண்டும். இதற்கு முன்னுள்ள நிலைகளை ஸ்ரீ அரவிந்தர் அநேக இடங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.

. ஆசையழிய வேண்டும்.

. பிராணமயப் புருஷன் வெளிவருதல்.

. அகந்தை அழிதல்.

. சைத்தியப் புருஷன் வெளிவருதல்.

. சைத்தியப் புருஷன் பிரபஞ்சம் முழுவதும் பரவுதல்.

. சைத்தியப் புருஷன் வளர்ந்து சத்திய ஜீவியமாகுதல்.

. சத்திய ஜீவியம் செறிந்து சத்திய ஜீவனாகுதல்.

       சைத்தியப் புருஷன் பிரபஞ்சம் முழுவதும் பரவிய நிலையில் பிரபஞ்சத்தின் ஆத்மாவாக – universal man, விஸ்வமானவா - மாறுகிறான். இம்மாறுதலால், மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தில் பூர்த்தி செய்து கொள்கிறான்.

****

722) மனிதன் முன்னேற தானுள்ள நிலையில் தன் அனுபவத்தைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதாவது, அந்நிலைக்குரிய அறிவு, பலனளிக்க வேண்டும். தானுள்ள நிலையில் பூர்த்தியாகாத மனிதன் முன்னேற முடியாது. ஏதாவது ஒரு பலத்தால் முன்னேறுவதுண்டு. முன் நிலையில் ஓர் அம்சம் குறைவாயிருக்கும்வரை, புது நிலையில் வேலை பூர்த்தியாகாது.

ஆசையைப் பூர்த்தி செய்ய விழைபவன், அதைப் பூர்த்தி செய்யாமல் மேலே போக முடியாது, அனுபவிப்பது அவசியம், ஆனால் அது முறையாக மட்டும் இருக்க வேண்டும்.

ஆசை பூர்த்தியாகாமல் அடுத்த நிலையில்லை.

       5ஆம் வகுப்பு படிக்குமுன் 9ஆம் வகுப்புக்குப் போக முடியாது. குழவிப் பருவம் தாண்டாமல் மனிதனாக முடியாது. வித்து முளைவிடாமல், செடியாகாமல் மரமாகாது. அறிவால், அனுபவத்தின் செறிவால், விஞ்ஞானத்தால் ஒரு பருவத்திற்குரிய காலத்தைச் சுருக்கலாம்.

       எந்தப் பருவத்தையும் மனிதன் தவிர்க்க முடியாது.

        பூர்த்தி செய்யும் வகை மாறலாம், சுருங்கலாம், தவிர்க்கும் உரிமை மனிதனுக்கில்லை. ஆசையை அனுபவித்துத் தீர்க்கலாம், அதன் வழி ஆசையைத் தாண்ட முடியும், ஆசையை அடக்கி, கடந்த பலனைப் பெறலாம். ஆசையை அதன் மூலம் அறிந்து, அறிவின் செறிவால் பல நாள்களில் அனுபவிப்பதை சில நாள்களில் கடக்கலாம்.

       அனுபவிப்பது இரு வகையானது. இளம் பிராயத்தில் இளமையின் வளமையை விளையாட்டில் அனுபவிப்பது ஒரு வகை. குறும்புகளை கற்றுக் கொண்டு அனைவருக்கும் தொந்தரவாக மாறி, இளமையின் திறமையைக் கடப்பது அடுத்த வகை. முதல் வகை முறையானது. அடுத்தது முறையற்றது. முறையற்றதானாலும், இளமையின் ஆசைகளைக் கடக்கலாம். கடந்தாலும், முறையற்ற வழி அடுத்த நிலைக்குப் போக உதவாது. மனம் மாறினால், அதாவது திருவுருமாறினால், கடக்கும் உரிமை எழும்.

. ஆசை பூர்த்தியாவது அவசியம்.

. பூர்த்தி செய்வதின் முறைகள் பல.

. முறையான வழி பலன் தரும்.

. முறை தவறிய வழியும் ஆசையைக் கடக்க உதவும். ஆனால் மனம் மாறிய பின்னரே அடுத்த கட்டம் போகலாம்.

. ஆசை பூர்த்தியானதால் மட்டும் நிலையைக் கடக்கும் உரிமையில்லை.

. கடக்கும் நேரத்தைச் சுருக்கலாமேயன்றி, கடப்பதைத் தவிர்க்க முடியாது.

. ஆசைக்குரிய சட்டமே மற்ற அனைத்து நிலைகட்கும் உரிய சட்டம்.

. இளமை, பயிற்சி, ஆசை, கோபம், குணம், சுபாவம், பருவம், ஆகியவை இப்படிக் கடக்க வேண்டிய நிலைகளில் பல.

. எதற்கும் உரிய முறை அனுபவம் பூர்த்தியாவது.

      பத்து மாடி கட்ட விரும்புபவர் மூன்றாம் மாடி கட்டாமல், மேலே போக முடியாது என்பதுபோல், ஒரு நிலை பூர்த்தியாகாமல், அடுத்த நிலைக்கு மனிதன் போக முடியாது. வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் பல்வேறு நிலைகளுள்ளன. உதாரணமாக

கூலிக்காரன், குத்தகைக்காரன், சிறு விவசாயி, பெரிய மிராசுதார்

என்பவை அடுத்தடுத்த நிலைகள். அதேபோல் உத்தியோகம், அரசியல், படிப்பு, வியாபாரம், குடும்பம், தொழில், மனவளர்ச்சி ஆகிய இடங்களும் பல்வேறு நிலைகளாகப் பிரிகின்றன. ஒரு கல்லூரி ஆசிரியர் இளைஞராக இருப்பதால் IAS எழுத முயன்று வெற்றி பெறும் வாய்ப்புள்ள நிலையில், அவருக்கு இது தான் படித்த கல்லூரி, இங்குத் தன் டிபார்ட்மெண்ட்டில் புரொபசராக வேண்டும் என்ற கனவுண்டு என்றால், அந்த ஆசை, திறமையிருந்தும், IAS பாஸ் செய்தும் நேர்முகத் தேர்வில் பாஸாகத் தடையாக இருக்கும். ஆசையிருந்தால், அது பூர்த்தியாகும்வரை அடுத்த கட்டம் போக, வாய்ப்பு, தகுதி, திறமையிருந்தும் ஆசை தடையாக இருக்கும்.

       ஒரு நிலை பூர்த்தியாக வேண்டும் எனில் அந்நிலைக்குரிய அறிவு, நுகர்வு, திறமை பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். குடும்பஸ்தனுக்கு சன்னியாசம் வாங்கும் தகுதியும் நோக்கமும் இருந்தாலும், புத்திர சந்தானம் மனதிலிருப்பதால் குழந்தை பிறக்கும்வரை சன்னியாசம் பலிக்காது.

       ஆசைகள் சிறியவை, பெரியவை, நல்லவை, தவறானவை எனப் பலவகைகள் உண்டு. எல்லா ஆசைகளுக்கும் சட்டம் இதுவே. ஆசையை அனுபவித்துப் பூர்த்தி செய்ய வேண்டும் எனில், அடுத்த கட்டம் போக அது நல்ல முறையில் பூர்த்தியாக வேண்டும். அரசியல் தொண்டன், தலைவனாகும் தகுதி பெற்றிருந்தாலும் செல்வம் சேகரம் செய்யும் ஆசையிருந்தால், அது பூர்த்தியாகும்வரை தலைவர் பதவி கிடைக்காது. செல்வத்தை நேர்மையாகப் பெறாவிட்டால், செல்வம் கிடைக்குமே தவிர அடுத்த கட்டமான தலைமை கிடைக்காது.

      ஆசை பூர்த்தியாகாமல் மேலே போக முடியாது.

      ஆசை நல்ல முறையில் பூர்த்தியாக வேண்டும் என்பதும் அவசியம்.

****

 723) புறக்கணிக்க முடியாத ஞானம் என நான் இன்று அறிந்தது 30 வருஷங்களாக, சொல்லப் போனால், 30 வருஷங்கட்கு முன் எண்ணங்களாக அறிந்தவை. மனம் அன்று புரிந்து கொண்டதை, உணர்வு ஏற்க 30 ஆண்டுகளாயின.

ஒரு ஜென்மத்தில் அறிவு உணர்வாகும்.

       ஆங்கிலத்தில் compelling knowledge என்பதை புறக்கணிக்க முடியாதது என்று கூறுகிறேன். 1958இல் நான் ஆசிரமம் வந்தேன். 1958 முதல் 60 வரை ஆசிரம Bulletin, Mother India பழைய பிரதிகளை reading roomஇல் படிப்பேன். 1960இல் தான் Synthesis of Yoga வாசிக்கத் தொடங்கினேன். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடமிருந்து நான் ஏற்றுக் கொண்ட கருத்துகள் ஏராளம். அவற்றில் ஏராளமானவற்றைப் பின் பற்றுகிறேன். பலன் பல அளவுகளில் வருகின்றது. பின்பற்ற முடியாதவையுண்டு. அறிவு ஒத்துக் கொண்டதை உணர்வு ஏற்பதை பின்பற்றுவது என்கிறேன். உடலும் ஏற்றால்தான் யோகத்திற்கு ஞானம் பயன்படும்.

       சூழலைக் கவனிப்பது, சிதறாமல் பார்ப்பது, பேச்சைக் குறைப்பது போன்றவற்றைப் பின்பற்றினேன். இன்றுவரை எனக்குப் பெரிய சிரமமான கருத்து, நாமே முன்வந்து பிறருக்கு உதவுவது சிரமம் தரும், ஆபத்தில் முடியும் என்பது. இன்றுவரை எனக்கு எவராலும் நானே போய் வலிய வம்பை விலை கொடுத்து வாங்காமல் தொந்தரவு கொடுக்க முடிந்ததில்லை. ஆனால் எனக்கு வந்த தொந்தரவுகள் ஏராளம். அன்னைக்குச் சேவை செய்ய விரும்பி என்னை எதிரியாய் நினைப்பதை அறியாமல், வலிய உதவப் போய் பட்டவை பாரதம். இக்கருத்தை நான் 1958, 59, 60இல் அறிவேன். மனம் தெளிவாகப் புரிந்து கொண்டது. உணர்வு ஏற்கவில்லை. ஒரு காரியம் என்றால் உணர்வு முந்தும். அதற்கு மனம் சமாதானம் சொல்லிக்கொள்ளும். உணர்வின்படி நடப்பேன். சிக்கல் எழும். அதை அவிழ்க்க பெரும்பாடுபட வேண்டும். மனம் ஏற்றதை உணர்வும் ஏற்றிருந்தால், சிரமம் வந்திருக்காது.

        உணர்வு ஏற்க நெடுநாளானால், உடனே ஏற்கும்படிச் செய்ய வழியில்லையா என்று கேட்கலாம். இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அகத்தைச் சேர்ந்தது, அடுத்தது புறத்திற்குரியது.

1. அகம் என்பது மனம். மனம் இரு பகுதிகளாலானது. ஒன்று அறிவு. அடுத்தது உறுதி will. மனம் புரிந்து கொண்டதை உறுதி ஏற்றால் அது முடிவாகும். மனம் மட்டும் புரிந்து கொண்டால் அது opinion கருத்தாகும். உறுதியும் அதை ஏற்றால் அது முடிவு ஆகும். முடிவு மேல் மனத்திற்குரியது. மேல் மனம் ஏற்ற முடிவை, ஆழ்ந்து மனம் ஏற்றால் அது தீர்மானமாகும் (determination). இவ்விரு நிலைகளை பகவான் consciousness, substance என்கிறார். Consciousness ஜீவியம் சூட்சுமமானது. அது திடமானதன்று. substance என்பது உடல். இங்கு மூளையாகும். மூளை சூட்சுமமானதன்று, ஜடமானது. சூட்சுமமான மேல் மனம் ஏற்ற முடிவை, திடமான மூளையும் ஆமோதித்தால் முடிவு, தீர்மானமாகும். அது நிறைவேற்றப்படும்.

2. புறம் என்பது சமூகம், ஸ்தாபனம். ஸ்தாபனம் சட்டம் போட்டால் நாம் அதற்கு உட்படுவோம்.

     உதாரணமாக, குறித்த நேரத்தில் செயல்படுவதை நாம் ஏற்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் காலம் கடத்தியிருக்கும் நிலையில், நம் மனம் தீர்மானம் செய்தாலும், ஆபீஸ் சட்டம் போட்டாலும், உடனே அது நிறைவேற்றப்படும். Opinion, decision, determination, கருத்து, முடிவு, தீர்மானம் ஆகிய நிலைகளைச் செயல் கடந்து வந்தால் எண்ணம் செயல்களாக மாறும்.

       அண்ணன் உழைப்பாளி, தொடர்ந்து முன்னேறுகிறான். தம்பி உழைக்கக் கூடியவன், ஆனால் உழைப்பதில்லை, முன்னேறுவதில்லை என்றால் தம்பி என்ன நினைக்கின்றான், உழைக்காமல் முன்னேற முடியும் என்று நினைக்கிறானா எனில், உழைப்பு அவசியம் என்பதை நான் அறிவேன். உழைக்காமல் முன்னேற முடியாது என்பது தெரியும், ஆனால் உழைப்பை என்னால் ஏற்க முடிவதில்லை என்று நினைக்கிறான் என்று நாம் காண்பதுண்டு.

       தாய் மொழியே பிரதானம் என்பதை அறிவு ஏற்கிறது. உணர்வு ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுக்கிறது. அறிவு ஏற்றதை உணர்வு உடனே ஏற்பதில்லை. இதுபோல் நம் மன நிலைளைச் சோதனை செய்தால், அறிவு ஏற்றதை, உணர்வு ஏற்காத இடங்கள் பல காண முடியும்.

      Compelling ideas புறக்கணிக்கப்பட முடியாத அறிவு என 30 ஆண்டுகட்கு முன் நான் (ideas) எண்ணமாகப் பெற்றதை, என் உணர்வு ஏற்க 30 ஆண்டுகளாயின. அவற்றுள் சில:

. இலட்சியத்தை ஏற்பவர் மட்டுமே அன்னையிடம் நெருங்க முடியும்.

. சுயநலமான மனிதன், தன் சுயநலம் பாதிக்கப்படும் பொழுது தயங்காமல் துரோகம் செய்வான்.

. ஒருவரைத் தகுதிக்கு மேல் உயர்த்தினால், முதற் காரியமாக உயர்த்தியவருக்குத் தீங்கு செய்வார்.

. தான் நாடும் காரியம் முடிந்தபின் நன்றி என்பதைச் சொல்ல 36 பேரில் 6 பேரே முன்வந்தனர்.

. தகுதிக்கு மீறிய பலனைப் பெற்றவர், பலனை அடைய உதவி செய்தவரைத் தவிர மற்ற அனைவரையும் நினைவு வைத்திருப்பார். உதவி செய்தவரையும், உதவியையும் மனம் நினைவில் வைத்திருப்பதில்லை.

.சுயநலத்தில் சுய உருவமானவர் தன் பரந்த மனப்பான்மையைப் பறைசாற்றாமலிருக்கமாட்டார்.

. அளவுக்கு மீறிப் பலனைப் பெற்றவரால் துரோகம் செய்யாமலிருக்க முடியாது.

     அறிவு தெளிவு பெறுவது குறைவு. ஏற்ற அறிவை உணர்வேற்று அதன்படி நடப்பது என்பதை காண்பது அரிது. அதையும் தாண்டி உடலும் ஏற்று, அதை வாழ்க்கைப் பாணியாக்குவது என்பது அடுத்த பிறவியில்தான். இதே பிறவியில் அது நடக்கும் நேரம், புனர்ஜென்மமெடுக்கும் நேரமாகும். அன்னையின் சிறப்பு அதுவேயாகும்.

        எந்த விஷயத்தை அன்னையின் உணர்வு எவ்வளவு ஆழத்தில் ஏற்றுக்கொள்கிறதோ, அந்த அவ்விஷயத்தை அந்நிலை பூரணமாக ஏற்கும். அன்னையை எந்த அளவு நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதற்கு இது ஓர் அளவுகோலாகும்.

****

724) ஒரு நிலையில் அன்னையை ஏற்றுக்கொண்டால் அந்நிலையிலுள்ள அறிவு பூரணம் பெற்று ஞானமாகும். அடுத்த நிலைகளில் (உயர்ந்தது, தாழ்ந்தது) உனக்குள்ள அறிவையும் இந்நிலையில் தெளிவு படுத்தும்.

. எங்கு அன்னையைப் பூரணமாக ஏற்றாலும், அங்கு அன்னை எல்லா ஞானத்தையும் பூர்த்தி செய்வார்.

. பூரணமாக அன்னையை நாடினால், ஞானம் அந்நிலையில் பூரணம் பெறும்.

. ஞானத்தையும் பூர்த்தி செய்வார்.

         நமக்கு அறிவு, அனுபவம் பல திறத்தவை. வீட்டு நிர்வாகம், ஆபீஸ் வேலை, நண்பர்களுடன் உறவு, இவை எல்லாம் போக சொந்த வேலை எனப் பலப் பகுதிகளாக வாழ்வு அமைந்துள்ளது. யாருக்கும் இவற்றுள் ஒன்றில் அதிகத் திறமையிருக்கும், மற்றதைப் பொதுவாக கவனிப்பார்கள். இதையே வேறு வகையாகவும் உடல், உணர்வு, அறிவு என்ற நிலைகளில் நாம் வாழ்வின் திறமை வேறுபட்டிருக்கும் எனவும் கூறலாம். அன்னையை ஒருவர் ஏற்றால் அவர் சிறப்பு என்பது

நாம் எந்த நிலையில் அன்னையை ஏற்றாலும் நமக்கு

எல்லா நிலைகளிலும் உள்ள அறிவைச் சேர்த்து, நாம்

அன்னையை ஏற்ற நிலையில் ஞானமாக மாற்றுவார்.

     அன்னையை ஏற்ற அன்பர், தம் ஆபீஸ் வேலையில் மட்டும் அன்னையை ஏற்றார் என்று கொள்வோம். அப்படிச் செய்தவுடன் அவர் வீட்டு அனுபவம், நட்பில் உள்ள அறிவு, இதர சொந்த வேலையின் திறமைகளையும் ஆபீஸ் வேலையில் அன்னை பலிக்கச் செய்கிறார். அதன் விளைவாக ஆபீஸ் வேலை,

. அபரிமிதமாக பலிக்கும்.

. இதர பகுதிகளில் வாழ்வு நிலை கணிசமாக உயரும்.

     உதாரணமாக ஆபீஸில் அன்னையை ஏற்றவுடன், இன்க்ரிமெண்ட், பிரமோஷன், சர்வீஸ் ரிஜிஸ்டரில் பாராட்டு, ஆபீஸ் எலக்ஷனில் தேர்ந்தெடுக்கப்படுவது போன்றவை எழும். இதுபோல் என் ஆபீஸ் வேலையிருந்ததில்லை எனும்படி ஆபீஸ் வாழ்வு மாறும். அத்துடன் நண்பர்களில் ஒருவருக்கு ஒரு பரிட்சை விஷயமாக உதவி செய்தால், ஆபீஸ் பரிட்சையில் பாஸ் எதிர்பார்த்திருந்த நேரம் I class பாஸ் வரும். வீட்டை வெள்ளையடிக்க முயன்று சுத்தம் செய்தால், ஆபீஸில் ஸ்பெஷலாக வெள்ளையடிக்க, பெயிண்ட் அடிக்க பணம் சாங்ஷனாகி, உத்தரவு வரும். சுருக்கமாக எங்கு எந்த வேலை செய்தாலும், அவையெல்லாம் ஆபீஸில் செய்யப்பட்டதுபோல் ஆபீஸிலிருந்து பலன் அபரிமிதமாக வரும். இது அன்னையின் அம்சம். எந்த முனையில் மனம் தீவிரமாக ஈடுபட்டாலும், எல்லாப் பகுதிகளின் திறனும் சேர்ந்து அம்முனையில் பலன் தருவது அன்னைக்குரிய அம்சம். அதே சமயம் எல்லாப் பகுதிகளும் பொதுவாக உயர்ந்திருக்கும்.

. வாழ்வில் செய்த வேலைக்கு, செய்த இடத்தில் செய்த அளவில் பலன் தரும்.

. அன்னையிடம் எங்கு வேலை செய்தாலும், தேவைப்பட்ட இடத்தில் அப்பலன் நம்மைத் தேடி வரும்.

       அன்னை என்பது சக்தி. சக்தி என்பதுடன் தானுள்ள நிலையில் எதையும் பூர்த்தி செய்யும் திறனுடைய சக்தி. கிளார்க், (P.A) பர்சனல் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, டெபுடி போன்ற உத்தியோகம் எல்லா நிலைகளிலும் உண்டு. பஞ்சாயத்து சேர்மனுக்கு மேற்சொன்னவர்கள் உண்டு. இலாக்கா டைரக்டருக்கும் உண்டு. மந்திரி முதன் மந்திரி, மத்திய மந்திரி, கம்பனி டைரக்டர் ஆகியவருக்கும் இது போன்ற உதவியாளர்கள் உண்டு. எந்த இடத்தில் வேலை செய்தாலும் கிளார்க்குக்குச் சம்பளம், வேலை, பொறுப்பு ஒன்றேதான். அதே போலவே மற்ற உத்தியோகங்கட்கும் அடிப்படைச் சம்பளம், வேலை போன்றவை எல்லா நிலைகளிலும் ஒன்றேதான். ஆனாலும் நிலையுயர உயர செல்வாக்கு உயரும். முனிசிபல் சேர்மன் ஆபீஸ் கிளார்க்கும், கலெக்டர் ஆபீஸ் கிளார்க்கும், டைரக்டர் ஆபீஸ் கிளார்க்கும், பிரதம மந்திரி ஆபீஸ் கிளார்க்கும் பேரளவுக்கு அவர்கள் உள்ள ஆபீஸின் அந்தஸ்தால் பயன் பெறுவர்.

       நாம் எந்த நிலையிலிருந்தாலும் அன்னை சக்தி, நாமுள்ள நிலைக்கு அன்னையின் சூழலை - "செல்வாக்கை'' - அளிக்கவல்லது.

      பேப்பர், பேனா, புத்தகம், நோட்டு ஆகியவற்றை நாம் அறிவோம். வெளிநாட்டில் அதே பேப்பர், பேனா, புத்தகம், நோட்டு ஆகியவற்றின் தரம் மிக உயர்ந்ததாக இருப்பதைக் காணலாம். அன்னையை ஏற்றுக்கொண்டால், அன்னையின் தரம் நம்மை வந்தடையும். அறிவு ஞானமாவதைப்போல் அன்னையை ஏற்றுக் கொண்டபின், உணர்வு கவலையை இழந்து சந்தோஷமாகும், செயல் தோல்வியை அறியாத தொடர்ந்த வெற்றியாகும், ஆரோக்கியம் வியாதியை அறியாததாகும். குடும்பம் பிணக்கொழிந்த ஸ்தாபனமாகும், கருத்து பிறர் மறுக்காமல் ஏற்றுக் கொள்வதாகும், வாழ்வு குறை நீங்கிய நிறைவுடையதாகும், உறவு வளரும் இனிமையுள்ளதாகும், ஸ்தாபனம் வாய்ப்புகளைப் பெறும் சந்தர்ப்பமாகும், பிரயாணம் - விபத்து நீங்கிய - இனிமையையும் உறவையும் வளர்க்கும் இயல்புடையதாகும், வயோதிகம் - தளர்ச்சி - விலகி, அதற்குள்ள நிறைவை நிரம்பப் பெற்ற சாதனமாக அமைவது அன்னை சக்தியின் இயல்பு.

****

725) பிறர் சுயநலத்தை வளர்ப்பது பலஹீனம், பாவம். அதைச் செய்தால் பிறகு உன் சுயநலத்தை அழிக்க அது உதவும். முடிவாக உலகத்தின் சுயநலத்தையும் அழிக்க உதவும். அகந்தை உள்ளவரை இந்தச் சட்டங்கள் செல்லும். அகந்தை அழிந்தபின் சுயநலம் என்பதும், பரநலம் என்பதும் மற்ற குணங்களைப்போல் ஒரு குணமாகும்.

. சொந்த சுயநலம் குற்றம்.

. பிறர் சுயநலத்தை வளர்ப்பது பாவம்.

. அகந்தை அழிந்தால் சுயநலம் பரநலமாகும்.

       சுயநலம் குறுகியது, வளர்ந்தால் இறுகும். திறமை மிக்கவருக்குச் சுயநலம் திறமையை வளர்க்கவும் உதவும். சுயநலம் நம்மை மட்டும் அறியும், பிறரைப் புரிந்து கொள்ள மறுக்கும். புரிய முனையாது, முனைந்தால் தவறாகப் புரிந்துகொள்ளும். சுயநலம் ஜீவனற்றது. கடுமை, கொடுமையை உற்பத்தி செய்யவல்லது. சுயநலத்தை வளர்ப்பது தவறு, பாவம், அதுவும் பிறர் சுயநலத்தை வளர்க்க உதவுவது மேலும் தவறு. ஏன்?

       நம்மிடம் உள்ள தவற்றை வளர்ப்பது தவறு எனில், பிறர் தவற்றை வளர்க்க முயன்றால், சுயநலத்தை நல்லதாகக் கருதுவதாக அர்த்தம்.

. சுயநலத்தைக் களைய முயலாவிடில் தவற்றை விலக்கவில்லை என்றும்,

. சுயநலத்தை வளர்க்க முயன்றால், அதைச் சரி என நினைப்பதாகவும் பொருள்.

       பெற்றோர் பிள்ளைகள் சுயநலத்தை வளர்க்க முயல்வதுண்டு. இதைச் செய்தவர்களில் ஒருவர் தவறாமல், பிள்ளைகளால் பழி வாங்கப்பட்டது உண்மை. அரசியல்வாதி, பொதுமக்கள் சுயநலத்திற்குத் துணை போனால், குப்புற வீழ்வதைக் காண்கிறோம்.

        சுயநலம் என்பது அகந்தையின் மறு உருவம். அகந்தை அழிந்தபின் சுயநலமிருக்காது என்பதுடன், அதன் இலட்சிய உருவமான பரநலமும் இருக்காது. பரநலம் பாராட்டும் மனிதர் இருவகையினர்.

1. பரந்தமனமுடையவர் இயல்பாகப் பரநலமுள்ளவர்.

2. சுயநலமான குணமுள்ளவர்கள், நல்லது செய்யக் கருதி பரநலத்தை மேற்கொள்வதுண்டு.

       முதல் வகையைச் சார்ந்தவர்கள் இயல்பையொட்டி செயல்படுவதால், அங்குத் தவறு எழாது. அடுத்தவர்கள் சுயநலத்திற்கு எதிராக பரநலத்தை மேற்கொள்கிறார்கள். அது நல்ல பலனை ஆரம்பத்தில் தரும். பின்னர், பரநலத்தின் பேரால் தங்களை அறியாமல் சுயநலத்தை வளர்க்க முயல்வார்கள். இது நடந்தால், “பரநலம்” சுயநலத்தைவிடத் தீங்கு விளைவிக்கும். அகந்தையே சுயநலத்திற்குரிய மண் என்பதால், சுயநலத்தை அழிக்க விரும்புபவர் அதற்காகப் பரநலத்தை மேற்கொள்வதைவிட, அகந்தையைக் களைய முயல்வதே முறை.

       குழந்தையைச் செல்லமாக வளர்ப்பதோ, தலைவருக்கு அதிகமாகப் பணிவதோ, நண்பனுடன் ஒத்துப் போக விரும்பி அவன் வழி செல்வதையே ஒரு பழக்கமாகக் கொள்வதோ, பிறர் சுயநலத்தை வளர்க்க உதவும். பிறர் சுயநலத்தை வளர்ப்பது, நம் சுயநலத்தை வளர்ப்பதைவிட அதிகத் தவறு. அதை (polite behaviour) நாகரீகத்திற்காகவோ, நயத்திற்காகவோ செய்வதாக நினைப்பவர்கள், நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்தால், பலஹீனத்தால் செய்கிறோம் என அறியலாம். சுயநலம் பல தீயகுணங்களுக்கு அடிப்படை என்பதால், அதை வளர்ப்பது பாவம்.

       அன்னையை ஏற்றுக் கொண்டவர்க்கு இதுபோன்ற நிலையிலும் முடிவாகத் தாழ்வு வாராது, நல்லது வரும். பிறர் சுயநலத்தை வளர்த்தால், அதன் பலனாக வளர்த்தவருடைய சுயநலம் முழுவதும் அழியும் சந்தர்ப்பங்கள் எழுந்தபடியிருக்கும். பலஹீனத்தால் செய்தாலும் இது நடக்கும். பலஹீனமன்றி பிறர் சுயநலத்தை வளர்த்தால் அது அறிவீனமாகும். பலஹீனமும், அறிவீனமும் இல்லாவிட்டால் பிறர் சுயநலத்தை வளர்க்கும் நிலை எழாது. இதன் முதற்பலன் தன் சுயநலம் அழியும். முடிவான பலன் உலகத்தில் சுயநலம் அழிய இதைச் செய்தவர் ஒரு கருவியாக அமைவார். அகந்தை உள்ளவரைதான் இந்தச் சட்டங்கள். அகந்தை அழிந்தால் சட்டம் வேறு. எந்தக் குணமும் திருவுருமாறினால், முதலில் வெறும் குணமாகும், பிறகு குணத்தின் சுவடு இல்லாமல் போகும்.

       சுயநலம் என்பது செறிவான குணம். இது திருவுருமாறி ஆழ்ந்த அறிவுடைய முயற்சியாகும் தன்மையுடையது. சுயநலம் (organised) சிறந்த திறமையுடையது. சுயநலம் அழிந்தால் அதன் திறமையழியாது. பொதுவாகத் திருவுருமாற்றம் சுயநலத்தை பரநலமாக்கும். பரநலத்திற்கு அத்திறமை ஏற்படும்.

 

...தொடரும்.

****

ஜீவிய மணி

தீமையின்றி வாழ்வில் நன்மைக்கு ஜீவனில்லை.

 

 

 

 

 

 

               



book | by Dr. Radut