1. சும்மாயிருந்து சுகம் பெறுவது எக்காலம்?
சும்மாயிருந்து சுகம் பெறுவது எக்காலம்?
கர்மயோகி
இது ஞானியின் வாக்கு.
ஞானி வாழ்வை விட்டகன்று ஆன்ம ஞானம் தேடுகிறான்.
பக்தனுக்குப் பாட்டும், கூத்தும் அவசியம்.
ஹட யோகி, தந்திர யோகிக்கு ஆசனம், பிராணாயாமம், ஜபம் உண்டு.
ஞானிக்கு அதுவுமில்லை.
ஞானி ஞானத்தை அடைய மௌனத்தைத் தேடித் தவம் செய்கிறான்.
தவம் அவன் ஆன்மாவை அவனிடமிருந்து பிரிக்கிறது.
தவம் கடும் தவமாகும்.
உடலில் செல் புற்று ஏறும்.
சூடு போட்டாலும் தெரியாது.
தவம் சித்தித்தால் ஆன்மா விழிக்கும்; சித்திக்கும்.
சித்தித்த ஆன்மாவுக்கு அக்ஷர புருஷன் எனப் பெயர்.
அவன் சாட்சி புருஷன்.
பிரகிருதி எது செய்தாலும் சாட்சி புருஷன் கண்டிப்பதில்லை.
சும்மா இருப்பான்.
பார்த்துக்கொண்டிருப்பான்.
பார்ப்பதுடன் அனுமதி அளித்தபடியிருப்பான்.
தான் சிருஷ்டித்த உலகம் இயங்குவதை, அதன் இஷ்டப்படிச் செயல்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பான்.
அப்படிச் சும்மாயிருப்பது ஆண்டவன்.
அது அவனுக்குச் சுகம் தரும்.
ஞானி அந்நிலையை நாடிப் பெறுகிறான்.
அதைத் தேடும்பொழுது அவன் கூறும் சொல்லைத் தலைப்பாக எழுதினேன்.
இந்திய யோகப் பரம்பரையின் சிகரம் சும்மாயிருந்து சுகம் பெறுவது.
வாழ்விலுள்ள குடும்பஸ்தனுக்கு இது இல்லை.
ஸ்ரீ அரவிந்தம் அடுத்த உயர்ந்த நிலைக்குப் போகிறது.
அங்கு ஞானிக்குள்ள சுகம் குடும்பஸ்தனுக்கும் உண்டு எனக் கூறுகிறது.
இது யோகம் வாழ்வாவது.
சச்சிதானந்தம் என்பது சத்.
சத் உயர்ந்ததெனினும் பகுதி.
சத்தின் அடுத்த பகுதி அசத்.
சத்தும், அசத்தும் சேர்ந்ததே முழுமை.
ஞானி பிரம்மம் என்று கூறுவது சச்சிதானந்தம்.
ஸ்ரீ அரவிந்தம், பிரம்மம் என்று கூறுவது சத்தும், அசத்தும் சேர்ந்த முழுமை.
சத்தியஜீவியத்திற்கு இந்த முழுமையுண்டு.
இம்முழுமையைப் பெற்றவர் வாழ்விலும் சும்மாயிருந்து சுகம் பெறலாம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
பெறுவது எங்ஙனம்?
நமக்கு வேண்டியது, வேண்டாதது என உண்டு.
இரண்டும் பகுதிகள்.
இரண்டும் சேர்ந்தது முழுமை.
வேண்டாததை விலக்காமல் சேர்த்தால் முழுமை எழும்.
சேர்க்கும்முன் வேண்டாததைத் திருவுருமாற்ற வேண்டும்.
கோபம், பொறாமை போன்றவை விலக்கப்பட வேண்டியவை.
அவற்றைத் திருவுருமாற்றினால் கோபம் சாந்தமாகும்; பொறாமை உதார
குணமாகும்.
அப்படித் திருவுருமாற்றி அவற்றைச் சேர்த்தால் முழுமை உற்பத்தியாகும்.
நம் வேலைகளைக் கவனித்தால் சிறப்பாக நடக்கும்.
கவனிக்காவிட்டால், வேலை கெடும்.
மனம் முழுமை பெற்றபின், வேலைகள் நாம் கவனிக்காமல் சிறப்பாக நடக்கும். அதுவே முழுமை பெற்றதற்கு அறிகுறி.
SPIC முதலாளி சிதம்பரம் செட்டியார்.
அவர் மகன் தொழிலை நடத்துகிறான்.
பேரனும் தொழில் சேர்ந்துவிட்டான்.
செட்டியார் 80 ஆண்டிருந்தார்.
கடைசி நேரத்தில் படுக்கையானார்.
கடைசி மூச்சுள்ளவரை பேரனும், மகனும் எந்த விஷயத்தையும் அவர் அனுமதி பெற்றே செய்வார்கள்.
கடைசிவரை நிர்வாகம் அவரிடமேயிருந்தது.
இது பொதுவாக நாம் காண்பது.
பிடி பெரியவரிடம் உள்ளவரை நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.
இது பெரியது; ஆனால் முழுமையில்லை.
1915இல் மகாத்மா இந்தியா வந்தார்.
காங்கிரசில் சேர்ந்தார்.
1920இல் மகாத்மாவானார்.
காங்கிரஸின் தலைவரானார்.
10 ஆண்டுகட்குப் பிறகு தலைவர் பதவியைக் கைவிட்டார்.
காங்கிரஸை விட்டு ராஜினாமா செய்தார்.
உறுப்பினராகவுமில்லை.
எந்தப் பதவியுமில்லாமல் சும்மாயிருந்தார்.
ஆனால் நேருவும், பட்டேலும், மற்ற தலைவர்களும், மத்திய, மாநில
மந்திரிகளும் காந்திஜியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். அவரை மீறி எவரும் செயல்படமாட்டார்கள்.
மகாத்மா சும்மாயிருந்தாலும், பதவியைத் துறந்தாலும் மனத்தால் அரசியல்
முழுமை பெற்றதால், முழு ஸ்தாபனமும் அவருக்குத் தானே வயக்
கட்டுப்பட்டது.
முழுமை
சுபாவம் முழுமை பெறுவது, மனம் முழுமை பெறுவது, திறமை முழுமை பெறுவது, செயல் முழுமை பெறுவது என்றுண்டு.
- வேண்டாத சுபாவத்தை விலக்காமல் - விலக்கினால் பகுதியாவோம் -திருவுருமாற்றிச் சேர்த்தால் முழுமை பெறும்.
நம் கோபத்தைக் கிளப்புபவரை விலக்குவது எளிது.
அன்னை அதை விரும்பவில்லை.
அவர் நம் கோபத்தைப் பிரதிபப்பதால், விலக்க வேண்டியது அவரல்ல, நமது கோபம்.
நம்மால் அவரைக் கண்டு கோபப்பட முடியாவிட்டால், அவர் நம்மைவிட்டுத் தானே அகல்வார், அல்லது மாறிவிடுவார். அதுவே திருவுருமாற்றம்.
திருவுருமாற்றம் முழுமை தரும்.
- மனம் எதிரானதை விலக்கும்.
எதிரானதை ஏற்றால் நாம் திருவுருமாறுவோம்.
- காரியங்களை முடிப்பது திறமை.
அது உயர்ந்ததெனினும் பகுதி.
நம் காரியங்களை எவராலும் கெடுக்க முடியாத நிலை முழுமை.
- சுபாவத்தாலும், மனத்தாலும், திறமையாலும், செயலாலும் முழுமை பெற்றவர் சும்மாயிருந்து சுகம் பெறலாம்.
செயல் முழுமை பெறச் செயலை முடித்தால் போதாது.
நம் செயலை எவரும் கெடுக்க முடியாது என்பதும் போதாது.
நம் செயலை அனைவரும் ஏற்றுச் செய்வது செயல் முழுமை பெறுவதாகும்.
- நாம் செய்வதை உலகம் ஏற்பது செயல் முழுமை பெறுவதாகும்.
அப்படிச் செய்யும்பொழுது செயலுக்கு எதிரானவை திறனற்றுப் போகும்.
எதிரானது தானே அடங்கி, திருவுருமாறி, நம்முடன் சேர்ந்து நமக்கு முழுமையளிக்கும்.
நாம் ஏற்ற நல்ல பழக்கங்களை நம்முடன் உள்ளவர் அனைவரும் ஏற்றால் நம் செயல் முழுமை பெறும்.
சுபாவமும், மனமும், திறமையும், செயலும் ஒருவருக்கு முழுமை பெற்ற பின் அவர் செய்ய எதுவுமில்லை.
அவர் அகத்திலும், புறத்திலும் சும்மாயிருக்கலாம்.
அவர் சும்மாயிருந்தாலும் எல்லாக் காரியங்களும் செவ்வனே நடக்கும்.
- அக்ஷர பிரம்மம் சும்மா சாட்சியாகவிருந்து, பிரகிருதி உலகை இயக்க அனுமதியளிக்கிறது.
- க்ஷர, அக்ஷர பிரம்மங்கள் சேர்ந்தது முழுமையான பிரம்மம்.
- முழுமையான பிரம்மம் மௌனத்தின் பின்னுள்ள மௌனமானது.
மூன்றாம் நிலைக் காலத்தில் செயல்படுவது.
அதில் காலமும், கடந்ததும் இணைந்துள்ளன.
தீமை உயர்ந்த நல்லதாகத் திருவுருமாறி, நன்மையுடன் சேர்ந்து
நன்மையை உயர்த்துகிறது (good becomes GOOD).
இருளை ஒளியாக்கி, ஒளியை ஆன்மீக ஒளியாக்குகிறது.
வலியை ஆனந்தமாக்கி, ஆனந்தத்தை ஜடத்தில் வெளிப்படுத்துகிறது.
- அசத் உயர்ந்து, அதனுடன் சத்தும் உயர்ந்து முழு பிரம்மமாகிறது.
- மாயையும், பிரகிருதியும் சக்திக்குள் நுழைந்து இணைகின்றன.
- பொய் மெய்யாகத் திருவுருமாறி, மெய்யைச் சத்தியமாக்குகிறது.
- பலஹீனம் பலமாகத் திருவுருமாறி, பலத்துடன் இணைந்து சக்தி ஆக்குகிறது.
- வெறுப்பு அன்பாக மாறி, அன்புக்குச் சுவை சேர்க்கிறது.
- விகாரம் அழகாக மாறி, அழகின் நிலையை ஆனந்தமாக்கும்.
- வருத்தம் சந்தோஷமாகி, சந்தோஷம் ஆனந்தமாகும்.
- மனித வாழ்வு அன்னை வாழ்வாக மாறும் பாதையிது.
* இதற்கு ஜடத்தில் சுத்தம் தேவை.
* சூழல் அமைதி தேவை.
* மனத்தில் மௌனம் தேவை.
கடமையைச் செய்த கற்புக்கரசிக்கு ஞானமுண்டு.
திருவுருமாற்றத்தை ஏற்ற குடும்பஸ்தனுக்கு முழுமையுண்டு.
முழுமை பெற்றவர் சும்மாயிருக்கலாம்.
சும்மாயிருப்பது அக்ஷர பிரம்மத்திற்குச் சுகம்.
அது செயலிலிருந்து விலகியுள்ள சுகம்.
முழுப் பிரம்மம் செயலுள் நுழைந்து செயலாகி, செயன்
அடிப்படையாகி, செயல் நடக்கும்பொழுது தான் அசையாமல், ஆடாமல், பதட்டப்படாமல்,பொறுமையாக, மௌனத்தின் பின் மௌனமாகச் செயலை நடத்தும்; உலகையியக்கும். அப்படி இயக்குவது ஆனந்தம்.
- அது ஸ்ரீ அரவிந்தம் கூறும் தத்துவம்.
- செயல்படும் முழுத் திறமையிருந்தும், திறமைக்குரிய அதிகாரம், பிடியிலிருந்து விலகி சும்மாயிருப்பது ஸ்ரீ அரவிந்த முழுமை. அது தரும் ஆனந்தம் பூலோகச் சுவர்க்க ஆனந்தம்.
***
ஜீவியத்தின் ஓசை பெரியது முடியவில்லை என்றால் சிறியதும் முடியாது.முடிந்தால் எல்லாம் முடியும். முடியாவிட்டால் எதுவும் முடியாது. அதிர்ஷ்டம் வேண்டுமென்ற ஆர்வம் அதிகமானால் அதிர்ஷ்டம் அரை நிமிடம் காத்திருக்காது. |
- Login to post comments