4. பிரார்த்தனையின் வலிமை
பிரார்த்தனையின் வலிமை
N. அசோகன்
பிரார்த்தனை என்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் ஆகும். தேவை எழும்பொழுது அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனையிலேயே மூன்று வகைகள் இருக்கின்றன. பலனுக்காகப் பிரார்த்தனை செய்வது இவற்றில் சாதாரண ஒன்றாகும். ஸ்ரீ அரவிந்தருடைய "சாவித்திரி' காவியத்தில் "ஒரு பிரார்த்தனை மற்றும் வல்லமை மிகுந்த செயல் ஆகியவை இறைவனை அடையும்பொழுது, அற்புதங்கள் சாதாரண நிகழ்ச்சிகள் ஆகின்றன' என்றொரு வரி இருக்கிறது. எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் தவறாமல் நிறைவேற்றப்படுகின்றன. அதிலும் ஆபத்தான நேரங்களில் நம்முடைய ஜீவனின் ஆழத்திலிருந்து ஒரு நோயாளியைக் கைவிடும்பொழுதும், ஒரு கம்பெனி தயாரித்துள்ள பொருளுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் (Demand) குறையும்பொழுதும் இம்மாதிரி இக்கட்டான நேரம் எழுகிறது. திடீரென விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகும்பொழுதும் இம்மாதிரி நிலைமை உருவாகிறது. இம்மாதிரியான நேரங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அவருடைய கருணையால் காப்பாற்றப்பட்டதாக நாம் சொல்க்கொள்கிறோம். இறைவன் என்பது உள்ளுறையும் ஆன்மாவைக் குறிக்கும்.
ஒரு சேவை ஸ்தாபனத்தினுடைய கிராமியத் திட்டம் ஒன்று அந்த ஸ்தாபனத்தில் பணிபுரியும் ஒரு சேவை அன்பரின் கீழ் இயங்கிக் கொண்டிருந்தது. அவ்வன்பரின் கீழ் ஒரு மேனேஜரும் பணியாற்றிக் கொண்டிருந்தார். சேவை ஸ்தாபனமாக இருந்ததால் எல்லோரும் ஊதியத்திற்காகப் பணியாற்றாமல் சேவை அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அடித்த ஒரு புயலால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 80க்கும் மேற்பட்ட ஊழியர்களுடைய உயிருக்கும்
ஆபத்து வந்தது. ஆனால் அவர்களுடைய ஆழ்ந்த பிரார்த்தனையால் அந்த ஆபத்து விலகியது. இருந்தாலும் திட்டம் பெரும் நாசம் அடைந்து, அங்கிருந்த கொட்டகைகள் மற்றும் எல்லா உபகரணங்களும் கடும் சேதம் அடைந்துவிட்டன. சேவை அன்பரும், மேனேஜரும் இடத்தைப் பார்வையிட்டார்கள். தாம் ஆசையாய்ப் போட்ட திட்டம் இப்படிப் பாழாகிவிட்டதே என்று மேனேஜருக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்தவர்களின் பரிதாபமான நிலையைக் கண்டு சேவை அன்பருக்கு மனம் கலங்கியது. அவ்விடத்தைச் சீரமைக்கும் பணிக்கு உடனடியாக ரூ.5,000 தேவைப்பட்டது. இரண்டு லட்சம் முதலீடு செய்திருந்த சேவை அன்பர் செயலிழந்த நிலையில் இருந்தார். 1972இல் ரூ.5,000 என்பது அங்கு 10 ஏக்கர் நிலத்தின் விலைக்குச் சமானமாகும். அந்நேரம் வரையிலும் உள்ளிருக்கும் ஆன்மாவின் சக்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்ட மேனேஜரும் அதே நிலையில்தான் இருந்தார். அவர் ஏற்றுக்கொண்டிருந்த ஆன்மீக இயக்கத்தில் சரணாகதிதான் முக்கியமான கொள்கையாக இருந்தது. அந்தச் சரணாகதி முறையை இப்பொழுது செயல்படுத்தத் துணிந்தார்.வழிபாட்டு மையத்திற்கு உடனே சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வெளியில் வரும்பொழுது கண்ணில் தென்படும் முதல் அன்பரிடம் நிதி உதவி கேட்பது என்று முடிவு செய்தார். வழிபாட்டு மையத்திற்குப் போகும் வழியிலேயே ஒரு முதிய அன்பர் இவரைச் சந்தித்து தம் வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தினார். இந்த முதியவரிடம் தான் திட்டமிட்டபடி ரூ.5,000 நிதியுதவி கேட்கலாம் என்று மேனேஜர் துணிந்தார். கடனாகக் கேட்டதை முதியவர் அன்பளிப்பாக வழங்கினார்.
ஒரு சிறு தொழிலதிபர் மிகுந்த சிரமத்தில் மூழ்கியிருந்தார். நிறைய பில்களுக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. ஏதேனும் ஒரு சிறு வருமானம் வந்தால், அதைப் போன்ற ஐந்து மடங்கு செலவு காத்திருப்பதைக் கண்டார். கடன்காரர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் போய்விட்டது. சிலர் திட்டவும் செய்தார்கள். மற்றும் சிலர் அவருடைய வீட்டில் ஜன்னல் கதவுகளையும் உடைத்தார்கள்.அவருக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களிடமும் அவர் செய்த பிரார்த்தனைகள் எல்லாம் பலிக்காமல் போய்விட்டன.அதிர்ஷ்டவசமாக ஆன்மாவின் சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதனுடைய சக்தியைத் தனக்குச் செயல்படும்படி வேண்டிப் பிரார்த்தனை செய்தார். மூன்று வாரங்கள் நிம்மதியாகக் கழிந்தன. இருந்தாலும் மீண்டும் தொந்தரவு ஆரம்பித்தது. ஆனால் அவர் இப்பொழுது அமைதியாக இருந்தார். திடீரென்று ஒரு வங்கி மேனேஜர் தானாக அவரை அணுகி மூன்று லட்சம் நிதியுதவி வழங்கினார். அது அவருக்குப் பேருதவியாக அந்நேரம் இருந்தது. மும்பையிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பழைய நண்பர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்புள்ள ஒரு மின்நிலையத்திற்கு டெண்டர் சமர்ப்பிக்கும்படி இவரைக் கேட்டார்.
ஆன்மா நம் அழைப்பிற்கு பதிலளிக்கத் தவறுவதில்லை. ஒரு நொடிப்பொழுதிலும் அது பதில் தரலாம். அல்லது நிதானமாக அது முடிவு செய்த நேரத்திலும் பதில் தரலாம். எப்படி இருந்தாலும் பதில் என்பது கண்டிப்பாக உண்டு.
ஸ்ரீ அரவிந்த சுடர் விஸ்வாசம், துரோகம் என்பவை நம்மை ஒத்தவருடன் உள்ள தொடர்புகளாகும். உன் தகுதிக்குக் கீழ்ப்பட்டவரால் உனக்குத் துரோகம் செய்ய முடியாது. அவர்களால் உன்னிடம் விஸ்வாசமாகவுமிருக்க முடியாது. நம் வீட்டு மாடு நம் பயிரை மேய்வது துரோகமல்ல. அதன் இயல்போடு மாடு செயல்படுகிறது என்று அர்த்தம். நம்மையொத்தவரே துரோகம் செய்ய முடியும். |
- Login to post comments