07.யோக வாழ்க்கை விளக்கம் V
யோக வாழ்க்கை விளக்கம் V
(சென்ற இதழின் தொடர்ச்சி...)
கர்மயோகி
843) இன்னல்களைக் கடந்து, சவாலை ஏற்று வாழ்வில் முன்னேறுவது வாழ்வில் இன்பம். தனக்கே சவால் எழுப்பினால் அதைவிடப் பெரிய இன்பம் காத்திருக்கிறது. ஆன்மா அளவுகடந்த இன்பத்தைத் தேடி, தன்னை அறியாமையிலிருந்து மீண்டும் கண்டுபிடிக்க முயல்கிறது. அதுவே லீலை.
உலகிலில்லாத இன்பத்தை நாடுவது லீலை.
- விஞ்ஞானம் உலகில் இதுவரையில்லாததைக் கண்டுபிடிக்கிறது.
- லீலை பரிணாமத்தின்மூலம் இதுவரை உலகிலில்லாத ஆனந்தத்தை நாடுகிறது.
- மோட்சம் தரும் இன்பம் அதுவரை உலகம் அறியாத ஆன்மீக இன்பம்.
- வாழ்வுஎன்பது பிரச்சினைகள் நிறைந்தது.
- எல்லாப் பிரச்சினைகளையும் - எந்தப் பிரச்சினையையும் - தீர்ப்பது அன்னையின் அருள்.
எல்லா வாய்ப்புகளையும் பெற்றுத்தருவது அன்னைச் சூழல், அன்னைக் கோட்பாடுகள்.
- பிரச்சினைகளையும், வாய்ப்புகளையும் கடந்தது இன்பம்.
- பிரச்சினை தீருவதால் துன்பம் விலகுகிறது.
- வாய்ப்பு கிடைப்பதால் இன்பம் வருகிறது.
- இன்பத்தின்பின் பெரிய இன்பம் இருந்து மனிதனுக்கு சவால் விடுகிறது. தன்னைப் பெற்று அனுபவிக்க மனிதனை அழைக்கிறது.
- முதல் நிலை இன்பம் உடலுக்குரியது
- உணவு, வசதி, தூக்கம், உடை, வீடு.
- இரண்டாம் நிலை இன்பம் வாழ்வுக்குரியது
- உறவு, வாழ்வு, தாழ்வு, விழா.
- மூன்றாம் நிலை இன்பம் மனத்திற்குரியது
- அறிவு, கவி, இலக்கியம், கணிதம், விஞ்ஞானம்.
- நான்காம் நிலை இன்பம் ஆன்மாவுக்குரியது
- ஜபம், தியானம், சமாதி, மோட்சம், சித்தி.
- ஐந்தாம் நிலை இன்பம் வளரும் ஆன்மாவுக்குரியது
- சுமுகம், சிருஷ்டி, திருவுருமாற்றம், முழுமை;
- பிரம்ம ஜனனம், அற்புதம், லீலை.
பிரம்மம் தன்னை அஞ்ஞானத்தில் இழந்து, மீண்டும் நினைவுகூர்ந்து, எழுந்து வெளிவருதல் அஞ்ஞான ருசியைக் கடந்து வருதலாகும். அந்த இன்பத்தை நாடி பிரம்மம் சிருஷ்டித்தது. நாம் காலத்துள் வாழ்கிறோம். தபஸ்வி தபோவலிமையால் காலத்தைக் கடந்த ஆன்மாவில் இலயித்துள்ளார்.
பிரம்மம் மௌனத்திலிருப்பதைப்போல் செயலிலும் இருக்கின்றது. செயலில் பிரம்மம் பிரகிருதியைக் கடந்து மிளிரும்பொழுது காலமும், கடந்த நிலையும் இணைந்து செயல்படுகின்றன.
- அதுவே லீலை, அற்புதம், பூலோகச் சொர்க்கம்.
- அது இன்று உலகிலில்லாத இன்பம்.
*******
844. மனம், எண்ணம்; உணர்வு, நரம்பு; உடலுணர்வு, உடல்; ஆகியவை சேர்ந்து புறமனிதன் ஆகிறான். உள்மனம் விழிப்புற மனத்தில் எண்ணமற்று, அசைவற்ற உடல் உடலுணர்வுகளற்றுப் போகவேண்டும்.
எண்ணமற்று, உணர்வற்றபின் உள்மனம் விழிக்கும்.
புறம் - அகம்:
- உலகில் பிறரைக் கண்டு அவருடன் தொடர்புகொள்கிறோம்.
- பொருள்களுடன் தொடர்புகொள்கிறோம்.
- இவை அனைத்தும் சேர்ந்தது புறவாழ்வு.
- பெரும்பாலும் அவை நம்மை உள்ளே பாதிக்கா.
- பிறரைப் பற்றி நாம் நினைப்பதும், பிறபொருள்களைப் பற்றி நாம் ஆழ்ந்து கருதுவதும், நம்மைப் பற்றியும், நமக்கு முக்கியமான விஷயங்களைப் பற்றியும் நாம் நினைப்பதும் அகவாழ்வாகும்.
- புறம் முக்கியமாகும்வரை அகமில்லை.
- ஜடப்பொருள்கள் முக்கியமாக இருக்கும்வரை அகவாழ்வில்லை.
- அகம் என்பது உள்மனம்.
- மேல்மனத்தின் ஆழ்ந்த பகுதி உள்மனம்.
- மேல்மனம் காலம், அகந்தைக்குரியது.
- உள்மனம் புருஷன், நிர்வாணத்திற்குரியது.
- மேல்மனம் ஜடமானது, ஸ்தூலமானது.
- உள்மனம் சூட்சுமமானது என்றாலும் ஆன்மீகமானதன்று.
- மரபின் யோகமெல்லாம் மேல்மனம், உள்மனத்துடன் முடிந்து விட்டன.
- தியானத்தில் புலன்கள் அவிழ்ந்து உள்மனம் செல்கிறோம்.
- பூரணயோகத்தில் புலன்கள் விழிப்பாக இருக்கும்பொழுது புலன்களைத் தூய்மைப்படுத்துவதால், உள்மனம் திறந்து வழிவிடுகிறது.
- யோசிக்காமலுள்ளபொழுது திடீரென எழும் சரியான முடிவுகள் உள்மனத்திற்குரியவை.
- உள்மனம் மோட்சத்திற்கும், நிர்வாணத்திற்கும் உரிய மௌனம் உடையது.
- உள்மனம் திறந்தால், ஆன்மீகமனத்திற்கு உயர வழிவிடும்.
- உள்மனம் திறந்தால் நிஷ்டை பலிக்கும்.
- உள்மனம் திறந்து, ஆன்மீகமனம் அதன் வழியடைவதை இரு வழியாகச் செய்யலாம்.
- நிஷ்டைமூலம் சென்று மோட்சம் பெறலாம்.
- சமர்ப்பணம்மூலம் சென்று திருவுருமாறலாம்.
- சமர்ப்பணம் உள்மனத்தைத் திறந்தால் நாம் அதன் வழி மோட்சத்தையோ, பரிணாமத்தையோ நாடுவது நம் அபிப்பிராயத்தைப் பொருத்தது.
தொடரும்.....
ஜீவிய மணி
சிறு நதியை அகண்ட சமுத்திரமாக்குவது சரணாகதி.
நதியின் கதி சமுத்திர சாகரம்
*****
ஸ்ரீ அரவிந்த சுடர்
அருள் செயல்படும் நேரத்தில் மனதில் ஆயிரம் எண்ணம் ஏற்பட்டுச் சிறப்பதுண்டு.
*****
- Login to post comments
Comments
07.யோக வாழ்க்கை விளக்கம்