06.அன்பர் கடிதம்
நெஞ்சம் விம்மும் அன்னையைப் பற்றிய சிறு துளிகள்
M. மணிவேல்
சத்தியஜீவிய அன்னை தன்னை, நெஞ்சில் வைத்து,
நினைவுகொண்டால்,
நித்தியகருமம் நிலைபெறும், வெற்றியைக் கண்டிடலாம்;
சித்தத்தை வைத்து, சீராய் சமர்ப்பணம் செய்திட்டால்,
சத்தியமாய் வந்து, அன்னை கைகொடுப்பார் என்று,
கோவலூர் நல்லோன் சொல்லிய சொல்லை,
ஆவலாய் பற்றினேன், மனத்தில், பக்தியாய்க்கொண்டேன்.
அன்னை நீ, அன்னிய மண்ணில் தோன்றி,
இந்திய நாட்டில் நிலைத்திட்டாய்!
முன்னம் நீ, ஆத்மதரிசனம் கண்டாய்,
கிருஷ்ணதரிசனம் பெற்றாய்!
அவரே பகவான், ஸ்ரீ அரவிந்தர் எனக் கண்டாய்!
பொன்னே உன் திருமேனி, தரையைத் தொட,
தலையாலே வணங்கினாய்!
மௌனம் நிலைத்தது, மின்னென, பிரம்மம் சித்தித்தது!
அன்னே! மேலைநாட்டுப் பழக்கம் மீறி,
இந்திய ஆன்மீகம் ஆட்கொண்டதே!
என்னே! ஆச்சர்யம்! இந்த ஆன்மீக அற்புதச்சங்கமம்!
அன்னையே! உன் பொன்மலர் திருவடிக்கு, ஒரு விண்ணப்பம்;
என் குணக்குறை காணாது, கனிவாக ஒரு சொல்,
சொல்லுவாய் அம்மா!
அன்னை நீ, ஆதிபராசக்தி அல்லவா? அந்தமும் ஆதியுமாகி,
அண்டமெலாம் உனதாளுகை அல்லவா?
பந்தமும், பல்வினை சூழ் உலகில்,
நீ மானிட வடிவம் எடுத்ததென்ன? எடுத்ததென்ன?
*******
விந்தையாய் நீ கேட்ட காரணம், யாதாயின்,
சொல்லுவேன், மகனே! நீ கேளாய்!
முடிவிலா, துன்பமென, பேரிடர்களென, பிணிகளென, மரணமென,
நொந்து மடியும் மனிதனை, மீட்க வந்தேன்! மீட்க வந்தேன்!
முந்திய வல்வினை அழித்து,
சிந்தையுள் தெளிவுமாக்கி, மீட்க வந்தேன்!
சத்தியஜீவிய மனிதனாக, திருவுருமாற்றம் செய்திடவே வந்தேன்!
நித்தமும் அவன்பின் நிற்கின்றேன்! அந்தோ! அவன்!
சித்தம் மயங்கி, திரும்பிப் பார்க்க மறுக்கின்றான், மறுக்கின்றான்!
அகத்தை மறந்து, புறத்தைப் போற்றி, தேடித் தேடி ஓடுகின்றான்!
பகவான் ஸ்ரீ அரவிந்தர், சூட்சும உலகில், யோகத்தில் ஆழ்ந்துள்ளார்!
வெகுவாய் மனிதனை, திருவுருமாற்றம் செய்திடவே முனைகின்றார்!
என்றோ ஒரு நாள், சத்தியஜீவன் பிறப்பான், மகனே!
அன்றே உலகில், துன்பமும் மரணமும் அழியும் மகனே! நீ அறிவாய்!
*******
நன்றி அன்னையே! தெளிந்தது மனம், புரிந்தது விளக்கம்!
மாறிவரும் உலகம், வெகுவாய், மாற்றம் பல கண்டதன்றோ!
முதன் முதலாய் மனிதன், ரயிலைப் பார்த்தான்,
அதை அவன் வீழ்ந்து கும்பிட்டான்;
மதயானை வாழும், காட்டுமனிதன்,
இதமான ரேடியோவைக் கண்டான்.
அதில், மனிதன் எங்கே என்று, உற்று உற்றுப் பார்த்தான்!
காலம் சுருங்கி, காரும் வந்தது, கட்டை வண்டியும் மறைந்தது.
வானத்துப் பறவை பார்த்த மனிதன்,
விண்ணில் விமானம் செலுத்தினான்!
தொலைதூரத் தொடர்புகொள்ள, தொலைபேசி வந்தது!
உலவும் போதும், ஊர்ப் பயணம் போதும், நிற்கின்ற போதும்,
செல்லுகின்ற போதும், சொகுசாய் பேசிட, செல்போன் வந்தது!
நேற்றையச் சமூகம் காணாத வசதி,
இன்றைய மனிதன் பெறுகின்றான்!
மாற்றம் உடையது பரிணாமம், அதுவே படைப்பின் ரகசியம்!
சத்தியஜீவன் வருவான், அதுவே அன்னைவாக்கு! சத்தியவாக்கு!
ஐயம் போக்கிய அன்னை நீ! அன்புடன் காக்கும் அன்னை நீ!
உன் செவ்விய பாதம் பணிந்து வணங்குகின்றேன்!
புண்ணியபூமி புதுவை போவாய், என இறைவன் குரல் கேட்டே,
திண்ணியமாய் வந்தார், பகவான் ஸ்ரீ அரவிந்தர்;
அலைகடலோரம் அமர்ந்திட்டார்!
எண்ணில் சாதகர், பூரணயோகம் பயின்றிடவே,
அமைத்திட்டார் ஆசிரமத்தை!
அன்னை வந்தார்! அங்கே, ஆன்மீகம் மலர்ந்தது!
ஆசிரமமும் வளர்ந்தது!
பொன் மகள் வாசமோ? கலைமகள் வாசமோ? ஆங்கே,
அன்னை ஒளியுடன், சாந்தியும் நிலவியதே! என்னே இறைமாட்சி!
அன்னைக் கட்டுப்பாடு, கசப்பென உணர்ந்தோருண்டு!
அது, சாதனைக்கு இட்டுச்செல்லும், நல்வழிப்பாதையென அறிந்திலர்!
கட்டுப்பாட்டை ஏற்றவர், அருளைப் பெற்றிட்டார்!
ஈதென்ன கட்டுப்பாடு என்றவர் சொல்லாமல் விலகிப்போனார்!
குடதிசை ஏகினார் அன்னை! அருள்நகர் தன்னை நோக்கி,
படர் திசைதோறும் பரவியதே, அன்னை(யின்) ஒளிச்சூழல்!
நன்மையும், செல்வமும், நலமுடன் வழங்கிட,
அருள்மழை பொழியுதங்கே! அருள்மழை பொழியுதங்கே!
"எங்கள் குடும்பம்'' செய்தியை சற்றே காண்போமா?
சிந்தையில் எண்ணி மகிழ்ந்திட, தெளிவானதோர் செய்தி!
விரிவானது! புரியும் விளக்கங்கள், பல கொண்டது, எளிதானது!
"லைப் டிவைனை'' புரிய வைப்பது!
சிந்தையில் செம்மையாய், சினந்தனை தணிந்தார்க்கு,
பாவமும், தீமையும் சிதைந்து தொலைந்திடுமே!
கொடுமையும், கடுமையும்,
அன்னை(யின்) கருணை முன் கரைந்திடுமே!
போட்டி, பொறாமை, பொய்யின் அரசாட்சி!
வாய்மையும், தூய்மையும், மெய்ம்மையின் மனசாட்சி!
மனிதன் வினோதமானவன்; அவன் உணர்வால் செயல்படுபவன்;
எதிரியை வீழ்த்தி, அழித்திட முனைந்திடுவான்!
கொட்டமடிக்கும் அகங்காரம், கொதித்து எழும் கோபம்,
கொக்கரிக்கும் ஆணவமும், கூடி இருக்கும் இடம் தேடி,
வரமாட்டார் அன்னை! அங்கே நாடி வரமாட்டார்!
அன்னை(யின்)சட்டம், தீமைக்குப் புறம்பானது,
அது முரணானது என, அறிந்திடாத மனிதன்,
கறைபட்ட மனத்தினால், குறை கூறும் இயல்பினன்!
அன்னை அருள், செயல்படவில்லையே என அரற்றுவான்,
அவன் பிதற்றுவான், பேதமையால்!
உவகையால் உள்ளங்கனிந்து, உண்மையாய் அன்னையை ஏற்றவர்,
எவ்வகைத் துயருமின்றி, இன்பமுடன் நீடு வாழ்வார், உலகினில்!
வாய்ப்பு வந்தபோது, "வாய்ப்பே அன்னை!'' என்று ஏற்றவர்,
வாய்ப்பின் வரவேற்பை, சமர்ப்பணம் செய்திட்டால்,
மனத்திலே சமர்ப்பணம் கைகூடும்,
ஜீவன் அங்கே சரணாகதியில் நிலைத்திடும்!
சரணாகதியுடன் சமர்ப்பணமும், சேரும் நேரம்,
அன்னை வரும் தருணம்! அது,
அதிர்ஷ்டம் வரும் நேரம்! வாய்ப்பை இழந்தால்
அங்கே வாழ்வு சுருங்கும்!
முன்னுக்கு வரும் குடும்பம், அருளால் வந்ததென உணர்ந்தால்,
நன்றியுடன் அன்னையை நினைத்திட்டால்,
நித்தமும் அவர் பெறுவது பேரருளாகும்!
பகவான் தருவது, உலகில் இல்லாதது!
அது, பெரும்பலனைத் தரவல்லது!
அந்தப் பங்கை, பகவானே ஏற்றால் என்ன?
என்று கேட்டான் அகந்தை மனிதன்!
இதனை அறிந்தார் அன்னை!
மனிதனால் முடியாதென முன்வந்தார்!
தானே செயல்பட்டார்! யோகத்தில் பகவானைக் கடந்துசென்றார்!
சூட்சுமஉலகில் பகவானை, சந்தித்தார் அனுதினமும்!
அவரது யோகம் வெற்றிபெற, உதவினார் அன்னை!
அங்கே, சூட்சும லோகத்தில்!
இந்த யோகம் பெறமுடியாதெனின், அதைக் கொண்டுவர,
ஆர்வமாய் முன்வரவேண்டுமன்றோ!
அதை அவரிடமே கேட்பது சரிதானா?
நமக்கு அது "பலிக்காதென்று''
உணர்த்துவதே அதன் நோக்கம்!
உள்ளே உறைபவர் எவரோ, அவரே ஜகத்குரு!
அவரே அன்னை! ஸ்ரீ அரவிந்தர் என்றறிவோம்!
பூரணமானவர், அகமும், புறமும் அறிந்தவர்,
"எங்கள் குடும்பம்'' தாயார்!
பிரச்சினையொன்று உருவானால், உரை சொல்லுவார்,
அவர் வழி சொல்லுவார்!
குறையொன்றுமில்லாக் குணமுடையார்! அவர்,
குடும்பக் கட்டுக்கோப்புத் தலைவி ஆவார்!
அவரது உரையினைக் கேட்போர்,
"திருவுருமாற்றம்'' நாடுவார், திடமாக!
"பார்ட்னர்'' பண்பைப் போற்றி,
பலரும் உயர்ந்திட விழைவார், விரைவாக!
இன்னும் பல உள, "எங்கள் குடும்பம்'' செய்தி,
என்னால் விளம்பிட முடியுமோ "அன்னை வாழ்வு''?
"கொடுப்பது அன்னை! பலிப்பது
நம் பவித்திரம்''
அன்னவர் எம் குருவே என்று,
அவரது இணையடி போற்றி,
தொழுதேத்தினேன்!
-ஓம்-
*****
ஸ்ரீ அரவிந்த சுடர்
எதிரெதிரானவை (ஒளி - இருள்; உயர்வு - தாழ்வு) வாழ்க்கைக்கு ஆழ்ந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.வெறுப்பவன் வெறுப்பின் எல்லைவரை செல்வான். வாழ்வின் தாழ்ந்த ருசியைக் கடந்தவனே இம்முரண்பாட்டைக் கடந்தவனாவான்.
முரண்பாட்டைக் கடந்த உயர்ந்த ருசி.
*****
- Login to post comments
Comments
06.அன்பர் கடிதம் Para 13 -
"கொடுப்பது அன்னை! பலிப்பது
நம் பவித்திரம்"