08.யோக வாழ்க்கை விளக்கம் V
யோக வாழ்க்கை விளக்கம் V
கர்மயோகி
841) வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் அதற்குரிய கட்டுப்பாடுகள், அனுபவிக்கக்கூடிய சந்தோஷங்களுண்டு. எவருக்கும் அது பயன் தரப் போவதில்லை. அடுத்த உயர்ந்த நிலைக்குரிய கட்டுப்பாட்டை நினைத்து, தன்நிலையில் அவற்றை அறிவில்லாமல் பின்பற்ற முயலும் அறிவீனம் மனிதனுக்குண்டு. குழந்தை விளையாடவேண்டும். குடும்பஸ்தன் தான் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவிக்க வேண்டும்.
உரிய இன்பத்தைக் குறைவற ஏற்பது நல்லது.
படிக்கும் மாணவன் விளையாடக்கூடாது என்ற கருத்து நிலவிய நாட்களுண்டு. ஊரில் பெரிய அந்தஸ்தில் வாழ்பவர் பொதுவாக வெளியில் போவது மரியாதையில்லை என்பது பழைய கருத்து; இன்றும் சில இடங்களில் உண்டு. பெண்கள் பாடுவது சரியில்லை, நடனமாடுவது பெரிய தவறு என்பவை 50 ஆண்டுகட்கு முன்னிருந்த கருத்து. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது குற்றம்என்றும் கருதப்பட்டது.இவை சமூகநம்பிக்கைகள். இவற்றுள் உண்மை ஏதேனும் உண்டா?இருந்தால் அது என்ன? மாணவன் ஆசிரியரை எதிர்த்துப் பேசக்கூடாது என்பது, ஆசிரியரிடம் ஐயம் கேட்கக்கூடாதுஎன்று நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டது.
- உலகம் இன்பத்திற்காக ஏற்பட்டது.
- துன்பம், தவறு, குற்றம் என்பவை அகந்தைக்கே; ஆத்மாவிற்கன்று.
- அகந்தையினின்று செயல்படாவிட்டால், எந்தச் செயலும் ஆனந்தம் தரும்; அதில் குற்றம் வாராது.
- நல்ல எண்ணம் நாளடைவில் தலைகீழேமாறி கெட்ட செயலாவதுண்டு.
- நம் நிலைக்கு மேற்பட்ட பழக்கம் நமக்கு தண்டனையாக அமையும்.
- நம் நிலைக்குக் கீழ்பட்ட பழக்கம் நம்மை கேலிக்குரியதாக்கும்.
- எந்த நிலைக்கும் உரிய ஆனந்தம் ஆயிரம் வகை; அதை முழுவதும் அனுபவிப்பது முறை.
- இருக்கிறது என்பதால் அளவுகடந்து அனுபவிப்பது தவறு என்ற கருத்து தடம்புரண்டு தண்டனையாவதுண்டு.
- அர்த்தமற்றவன் அர்த்தமுள்ளதை அர்த்தமற்றதாக்குவான்.
- அர்த்தமுள்ளவனுக்கு எந்தக் காரியமும் அர்த்தமற்றதாகாது.
- கற்பனை உலகில் இலட்சியத்தை எழுப்பி, நடைமுறையில் வாழ்வைச் சிறையாக்குபவரும் உண்டு.
- நமக்குப் பொருத்தமற்ற discipline கட்டுப்பாடுகளை ஏற்க விரும்பி
- காலை 4½ மணிக்கு பிரம்மமுகூர்த்தம் என்று பாக்டரி தொழிலாளி வீட்டாரை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தால், நாள் முழுவதும் வேலை செய்ய முடியாமல் சோர்வாக இருக்கும்.
- உள்ளதை உள்ளபடி அனுபவிக்க உள்ளத்தில் உண்மையிருந்தால் போதும்.
- வாழ்வு ஓர் ஆறு. எதிர்நீச்சல் போடவேண்டிய அவசியமில்லாத பொழுது எதிர்நீச்சல் மூச்சுவாங்குவது மனித இயல்பு.
- அனுபவிப்பது ஆனந்தம்; அதுவே வாழ்வுக்குரிய உண்மை. வாழ்வின் ஆத்மா வெளிப்பட்டால் அனுபவமே ஆனந்தமாகும்.
*******
842. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பரிணாமத்திற்குரிய சிருஷ்டி என்றவொன்றுண்டு; அதுவே நமக்கு அன்னை.
அன்னை என்பது அந்நேரத்திற்குரிய சிருஷ்டி.
அரச குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் அரசுக்குரிய வாரிசு ஒருவனிருப்பான். வாரிசு இல்லாமலிருக்க முடியாது. நாட்டுக்குத் தலைவர் உள்ளது போல் ஊருக்கும், மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும், வட்டத்திற்கும் தலைவர் உண்டு.
அளவு எதுவானாலும் அந்த அளவுக்குத் தலைமையுண்டு.
மூளை தலையிலிருக்கிறது. என்றாலும் எல்லாப் பகுதிகளிலும் மூளையின் பிரதிநிதியுண்டு. அது செல்வரைக்கும் உண்டு. அன்னை அதைச் செல்லுலர் மனம் cellullar mind என்கிறார். சிருஷ்டி பெரியது என்றாலும் an act செயல் என்பது அதன் அடிக்கல் (unit). அன்னை சிருஷ்டியில் செயல்படுவதுபோல் செயலிலும் செயல்படுகிறார். பகல், இரவு என்றுண்டு. ஆபீஸ் பகலில் நடக்கிறது; மற்ற நேரம் மூடியிருக்கிறது. மரமும் தூங்கும் நேரம் உண்டு. ஜவுளிக்கடைக்கு தீபாவளி சீசன்; புத்தகக்கடைக்கு ஜூன் மாதம் சீசன்; மழைக்கு கார்த்திகை சீசன். எதற்கும் பருவம் உண்டு. வக்கீல்தொழிலில் பலர் பிழைத்துக்கொள்வார்கள். சிலர் ஓஹோ என இருப்பார்கள். வருமானமே இல்லாமல் நெடுநாளிருக்கும் வக்கீல்களும் உண்டு. அவர்கட்கும் கடைசி நேரத்தில் 4, 5 வருஷம் அமோகமான வருமானம் வரும். தொழில் ஒரு நம்பிக்கை, "எந்த வக்கீலும் ஒரு நேரம் சிறப்பாகச் சம்பாதிப்பான்''. விளையாடுபவர்கள் ஒரு நேரம் உற்சாகமாகவும், மற்ற நேரம் ஜீவனற்றும் இருப்பார்கள். ஆனால்,
எந்தச் செயலுக்கும், எந்த நேரத்திலும் அதற்குரிய சிருஷ்டித்தன்மையுண்டு.
அன்னையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள், அன்னையின் செயல்களை அவர் விரும்பியபடிச் செய்தவர்கள், அன்னைநினைவு மேலோங்கிய நேரம் செயல்பட்டவர்கள்,
எல்லா நேரங்களும், எல்லாச் செயல்களிலும் ஜீவனோடு மலர்வதைக் காண்பார்கள்.
அன்னையிருந்தால் ஜீவனுண்டு; இல்லாவிட்டால் இல்லை என்பது அனுபவம். செயலைப் புரிந்துகொண்டால், அதன் இரு புறங்களை அறிந்தால், அவை ஜீவனோடு இணைவதைக் காணும்திறன் பெற்றால்,அவை இணையும்நேரம் அன்னை வெளிப்படும் நேரம்எனக் காணலாம்.
- கடைக்கு வருபவர்கள் முகம் மலர்ந்து வரவேற்பவருக்காக வாங்குவதுண்டு.
- எவர் கடைக்கு வந்தாலும் அவருக்காகவே ஏதாவது வாங்கிப் போவார்கள்.
- நாம் நமக்காக வாங்குகிறோம் என்றாலும், முகம் மலர்ந்து அழைப்பவருக்காகவும் வாங்குகிறோம்.
- செயலில் அன்னையைக் காண்பவருக்கு எல்லா நேரங்களும், எந்தச் செயலும், எந்த இடமும் அற்புதமே.
தொடரும்.....
*****
ஜீவிய மணி
திரும்பத் திரும்பச் சொன்னால் திருப்திப்படும்.
*****
- Login to post comments
Comments
08.யோக வாழ்க்கை விளக்கம்