Skip to Content

10.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

                                                  (சென்ற இதழின் தொடர்ச்சி....)   கர்மயோகி

42. வெட்கப்படக்கூடிய காரியங்கள் மீது ஆசைப்படாதே.

ஆசை எழுவது வெட்கப்படக்கூடியதின் மீதே எழும்.

அதனால் 'ஆசை வெட்கமறியாது' என்றனர்.

தன்னைப் போன்ற மாமன் மகனிடம் 'உன் வீட்டை எனக்குக் கொடு' எனப் பல்கலைக்கழக ஆசிரியர் கேட்டார்.

தொழில் ஆரம்பித்து மானேஜரை நியமித்தவுடன் 'இத்தொழிலை எனக்கே கொடுங்கள்' என்றார் ஒரு புண்ணிய ஆத்மா.

2 வீடு பெற்றுள்ள பேராசிரியர் வீடில்லாத பள்ளி ஆசிரியரை 'நீங்கள் வாங்கிய வீட்டை என் நண்பருக்குப் பரிசாகக் கொடுங்கள்' என்றார்.

'என்னைப் பிரதமராக்குங்கள்' என்றார் ஒருவர்.

சினிமா நடிகையை மணக்கக் கனவு காணும் கிராமத்து இளைஞர்கள் உண்டு.

இவற்றைச் சொல்ல வெட்கப்படுபவர் உண்டு, வெட்கப்படாதவருண்டு.

பரம்பரையாக ஏழ்மையாக இருந்தவருக்கு இந்த எண்ணம் தோன்றும்.

ஏழ்மையுடன் தன் ஜாதியால் தன்னை உயர்வாக நினைப்பவர் வெட்கமில்லாமல் கேட்பார். கேட்பதுடன், 'எனக்கு நீ இந்தச் சேவை செய்வது உனக்கு நான் செய்யும் ஆசிர்வாதம்' எனவும் வாய்விட்டுக் கூறுவார்.

மனிதன் என்ற நிலைக்கு வரமுடியாதவர் மனநிலையிது.

நம்முள் ஓரளவு இருக்கலாம். இருந்தால் அதைக் களைவது உத்தமம்.

திருவுருமாற்றுவது யோகம்.

10 ரூபாய் கடன்பெற நகையை அடைமானம் வைக்க 10 நடை நடந்தவருக்கு 1000 ரூபாய் லோன் அவர்கள் ஊரில் கொண்டுவந்து கொடுத்த பாங்கை 'ஏன் எங்கள் வீட்டில் கொண்டுவந்து கொடுக்கக் கூடாது?' என்று கேட்டார்.

இலஞ்சம் வாங்குபவன் நான் செய்யும் சலுகைக்குப் பதிலாகப் பெறுவது இலஞ்சம் என்பார்.

கொஞ்ச நாள் கழித்து அவன் தன் மனத்தைச் சோதித்தால் யாரிடம் பணமிருந்தாலும் அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என நினைப்பது தெரியும்.

வழக்கமாகக் கடன் பெறுபவரும் அப்படிப்பட்ட மனநிலையுள்ளவரே.

தன்மானம், கௌரவம் மனதில் ஏற்பட்டால் இவை அழியும். நான் ஒரு மனிதன், எனக்கு ஒரு கௌரவம் உண்டு என்பது தன்மானம்.

எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்பவர் இப்படித்தான் வாழவேண்டும் என்று முடிவு செய்தால் தன்மானம் எழும்.

அதற்குப் பிறர் வெட்கப்படக்கூடியதைச் செய்யும்பொழுது நம் மனம் அதைக் கண்டிக்க வேண்டும்; அதற்கு வெட்கப்பட வேண்டும்.

இவற்றை நாம் நம்வீட்டில் ஆரம்பிக்க வேண்டும்.

நாம் செய்வது கால்பங்கு என்றால் வீட்டார் செய்வது முக்கால்பங்காக இருக்கும்.

நாம் செய்வதை அறவே அழித்துவிட்டு நம்வீட்டார் செய்வதை நாம் செய்வது என ஏற்றுக்கொண்டால் வழி பிறக்கும்.

நெறி உயர்ந்தது, கடுமையானது.

மனம் உயர்ந்தவர்க்கு இயல்பானது; மனம் தாழ்ந்தவர்க்குக் கடுமையானது.

வாய் ஓயாமல் பேசுபவரைப் பேசாமலிருக்கச் சொன்னால் தலை வெடித்துவிடும்.

முறை பெரியது; செய்தால் பலிக்கும்.

பலிப்பது பெரிய விஷயம். பலிப்பது விஷயமன்று; அன்னை.

மனம் நெறியை ஏற்றுப் போற்ற வேண்டும்.

இவையெல்லாம் எனக்கில்லை என்பவருக்கு இவை பலிக்கவே பலிக்கா.

43. ஆபத்தை அறைகூவி அழைக்காதே.

குரங்கு ஆப்பைக் கழற்றி அவதிப்பட்டது கதை.

அதைச் செய்யாமலிருக்க, குரங்கால் முடியாது.

இதையே நாம் தவறாமல் செய்வதை நாமறிவதில்லை.

ஊரை ஏமாற்றிச் சொத்துச் சேர்த்தவனை நாடி, பெருந்தொகையை வியாபாரத்தின் பேரில் கொடுத்தவர், தான் செய்ததை அறியார்.

உதவியைக் கெஞ்சிக் கேட்பவரும் உதவி பெற்றபின் நமக்கு ஊறு செய்ய முடியும் என்று தோன்றுவதில்லை. எது எப்படியானாலும் நிலைமை மாறி நாம் ஒருவருக்கு அடங்க நேரிட்டால், அவரால் நமக்குத் தீங்கு செய்ய முடியும் என்றால் அவருக்கு உதவக் கூடாது என்பது விவேகம். இந்த விவேகமற்றவர் உதவியால் உபத்திரவம் பெறுவர்.

. இது ஆபத்தில் மாட்டிக்கொள்வது எனத் தெரிவதில்லை.

இது கருதி 'பிறன் கையிற் கொடுத்த பேதை' என்றனர் இப்படிப்-பட்டவரை.

மனிதனை நம்பாமல் நிலைமையை நம்புவது உலக ஞானம், விவேகம்.

விவேகமில்லாதவர் பெரிய உதவிசெய்ய முன்வரக்கூடாது. அப்படிப்பட்ட நிலை வந்தால், 'இது பெரிய விஷயம், நான் சிறிய மனிதன்' என விலக வேண்டும். அப்படியில்லையெனில் இந்த இடத்தில் அடிமட்டமான மனிதன் என்னவெல்லாம் செய்ய முடியும் என யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் யோசனை செய்தால், யோசனை தான் செய்யலாம், வாழ்க்கையை நடத்த முடியாது எனத் தோன்றும்.

இது சரியில்லை என்றால், இதே துறையில் அனுபவம்வாய்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தால், அவர்கள் இந்த எச்சரிக்கைகளை மேற்கொள்வார்கள்.

. பெருந்தொகையைப் பிறர்க்குக் கொடுக்க ஒரு சட்டம் உண்டு. அது ரசீது பெற்றுக் கொண்டு தர வேண்டும் என்பது. நான் எப்படி அண்ணனிடம் ரசீது கேட்க முடியும் என்றால், கேட்காதது பண்பு. ஆனால் இந்தத் தொகை எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யும் என நமக்குத் தெரியாது. அண்ணன் மகனும், நம் மகனும் சண்டையிட்டுக் கொண்டால் அடுத்தாற்போல் அண்ணன் மைத்துனன் "எப்படி அத்தொகையை வாங்குவான் எனப் பார்ப்போம்'' என்பார். அது பிரச்சினையாகும். நாம் கொடுத்த பணம் பிரச்சினையான பின் 'இப்படியாகும் என்று தெரிந்தால் ரசீது பெற்றிருப்பேன்'எனத் தோன்றும். தொகை எதுவானாலும், 'அண்ணன் முக்கியம், கேட்கமாட்டேன்' என்பது பெருந்தன்மை. பிரச்சினைக்கும் தொகைக்கும் சம்பந்தமில்லை. 'அது இல்லையென எப்படிச் சொல்வது? அதை உடனே கொடுத்து விடுகிறேன். முடியாவிட்டால் நானே ரசீது எழுதி அனுப்புகிறேன்' என்று கூறும் அண்ணன் பண்புள்ளவன்.

சமர்ப்பணம் சந்தர்ப்பத்தால் ரசீது பெறச் செய்யும்.

அண்ணன் உறவைவிட தொகை பெரியதானால் தொகைக்குரிய முறையைக் கடைப்பிடிப்பது சரி. அதை உதாசீனம் செய்வது ஆபத்தை அறைகூவி அழைப்பதாகும்.

. வாழ்வின் சிக்கல்கள் ஏராளம்; பாசம், பிரியம், பழக்கம் ஆகியவை எளியவை. எனவே வாழ்வுக்குரிய முறைகளைத் தவறாமல் பின்பற்றுவது ஆபத்தை விலக்குவதாகும்.

. நல்லது, பண்பு, உயர்ந்த செயல் என்பவை அந்த நேரத்திற்குச் சரி. நெடுநாளைக்கு அவை பயன்படா. முறை, ரசீது, சட்டம், ஊர், ஒழுங்கு ஆகியவை பேசும். ஆபத்தைத் தேடுவது இதில் ஒரு முறை;

பல உண்டு.

. எதையும் நேராக, அனைவருக்கும் பொதுவாக, எந்த நாளைக்கும் சரி வரும்படிச் செய்வது ஆபத்தைத் தடுக்கும்.

. ஆபத்தை விலக்குவது அவசியம்.

44.உள்ளத்தின் உண்மையை ஓரிழை உயர்த்து.

உள்ளத்தின் உண்மை நேரம் வந்தால் அதற்குத் தகுந்தபடி மாறும்;

அதாவது கூடும் அல்லது குறையும்.

உண்மையுண்டு என நாம் நினைப்பது, நேரம் வந்தால் தான் தெரியும்.

13,500 ரூபாய் சம்பளம் என்பதை 14 ஆயிரம் எனக் கூற எழும் ஆசை உண்மையில்லை.

என் தகப்பனார் இலஞ்சம் வாங்குவார் என்பதைக் கூறவேண்டிய நேரம் வந்தால் நம்மனம் படும் போராட்டம் தெரியும். முடிவில் வருவது உண்மையாக இருக்காது. அந்நேரம் நமது பேச்சுத் திறமை நமக்கே வியப்பாக இருக்கும்.

. அப்படியெல்லாம் இல்லை;

. எனக்கு அது தெரியாதே;

. சும்மா பெறுவதில்லை, வேலைக்குப் பலன்தானே;

. தகப்பனார் வாங்கமாட்டார், மற்றவர் கட்டாயப்படுத்துவார்கள்;

. பார்ட்டி வம்பு செய்து தந்தால் எப்படி மறுப்பது?

உண்மை நேர் எதிராக இருக்கும்.

இதில் இரகஸ்யம் என்னவென்றால் உள்ளது என நாம் நினைப்பதைக் காப்பாற்றுவதே சிரமம். உயர்த்துவது நடவாத காரியம்எனப் புரியும். அதனால்தான் ஷேக்ஸ்பியர் "இருப்பதை உயர்த்த முயன்றால், உள்ளதும் போகும்'' என்றார்.

உயர்த்துவது சிரமம். 1% உயர்த்துவதும் அதனால் முக்கியம் பெறும்.

தொடர்ந்து மாதம் ஓரளவு உயர்த்துவது, 6 மாதத்திற்கொரு முறை உயர்த்துவது என்பதும் கடினம். தினமும் 1% அல்லது 1/10%ஆவது உயர்த்த முயல்வது முறை.

உண்மையை உயர்த்த முயன்று வெற்றிபெற மற்ற எல்லா விஷயங்களையும் உயர்த்த வேண்டும் என்பது இப்பொழுது புரியும்.

10 வார்த்தைகளில் சொல்ல வேண்டிய பதிலை 20 வார்த்தைகளில் சொல்கிறோம். பணம் உள்ளபொழுதும் போன்பில் கடைசி தேதிவரை காத்திருந்து கட்டுகிறோம். இதுபோல் அலட்சியமானவற்றை விலக்காமல் உண்மையை ஓரளவு உயர்த்த முடியாது.

எது உண்மை?

எனக்குள்ள நிலம் 102.48 ஏக்கர் என்பதை 100 ஏக்கர் என்றால் உண்மையில்லை; 102ம் உண்மையில்லை. 102.48 எனச் சொல்வது உண்மையா என்றால்,

எந்த மனநிலையில் சொல்கிறோம் என்பதே முக்கியம். 100க்கும் 102.48க்கும் நமக்கு ஆதாயமில்லை; அதில் பொய் பெறும் இலாபமில்லை. அது பொய்யாகாது.  

ஓட்டு யாருக்குப் போடுவது என்ற உண்மையை வேட்பாளரிடம் கூறும் பொழுது மனம் போராடும். அங்கு உண்மை வெளிப்படுவது கடினம். உங்களுக்கில்லை என்பதை உண்மையாகச் சொல்லி பிரச்சினையை எழுப்பலாமா?

"கேட்க உங்களுக்கு உரிமையுண்டு. யாருக்குப் போடவேண்டும் என்ற சுதந்திரம் எங்களுக்கு வேண்டும்'' என்று கூறலாமா?

"முடிவு செய்யவில்லை'' என்று சொல்லலாமா?

"அவசியம் உங்களுக்கே போடுகிறேன்'' என்று பொய் சொல்ல ஆசைப்பட்டுச் சொல்வது பொய். ஆசை பொய் சொல்லும்.

"உங்களுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்பது அவசியம்'' என்பது சாதுர்யமான பதில்.

எதையும் மனம் கருதாவிட்டால் வேட்பாளர் நம்மை வற்புறுத்தமாட்டார் என்பது ஓர் உண்மை.

அவருடன் வருபவர் நாம் சொல்ல வேண்டியதைச் சொல்வார், "நீ கேள். அவர் இஷ்டத்தைக் கேட்காதே'' என்பார்.

அன்னை நமக்குப் பொய் சொல்லும் சந்தர்ப்பம் தரமாட்டார்.

45. தவறு சரியென மாறும்பொழுது செய்ய மறுக்காதே.

கோபம், ரௌத்திரமாகும் பொழுது தடை செய்யாதே.

. மகன் போதைமருந்து சாப்பிட்டால், அதைத் திருடிக் குப்பையில் போடுவது திருட்டு என நினைப்பது தவறு. இந்நிகழ்ச்சியில் திருட்டு புண்ணியமாகிறது.

. திருமணமானபின் கணவன் 6 மாதம் வடநாட்டில் ஜெயிலிலிருந்தான் என்ற செய்தி வெளிவந்தால் அதை வெளியில் கூறுவது உண்மையாகாது. அதைக் கூற மறுப்பது பொய்யாகாது. இந்நிகழ்ச்சியில் பொய் மெய்யாக மாறுகிறது. செய்தி பெண்ணுக்கு வந்து தம் வீட்டாருக்குச் சொல்லாமலிருப்பது, அனைவரும் குடும்பத்தில் அறிந்து வெளியில் சொல்லாதது

பொய்யன்று; மெய்.

தவறன்று; சரி.

ஈஸ்வரன் அன்பு பேரன்பாகி, அது பூர்த்தியாகச் சக்திக்குச் சரணடைய முடிவு செய்து சரணாகதியை மேற்கொண்டால், சக்தி அளவுமீறிச் செயல்படுவதும் உண்டு. அதைச் சற்று அடக்க வேண்டும் என பகவான் எழுதியுள்ளார்.

கோபம் வந்தால் அடங்க நேரமாகும்; சமயத்தில் நாளாகும்.

கோபம் தெய்வாம்சம் பெறுவது ரௌத்திரம். நரசிம்ம அவதாரம் போன்றது.

நரசிம்மனுக்கு அது அடங்க 6 மாதமாயிற்று.

அன்னை அன்பருக்குக் கோபம் ரௌத்திரமானால் க்ஷணத்தில் முகம் மலரும்.

சக்தி ஈஸ்வரனிடம் அத்துமீறி நடப்பதுபோல் நிகழ்ச்சிகள் எழுவதுண்டு.

அப்பொழுது கோபம், ரௌத்திரமாகும்.

கோபம் தவறு என்ற கொள்கை அங்குச் சரியாகாது.

அக்கோபத்தை வெளியிட்டால் பிரச்சினை கரையும்.

10,000 ரூபாய் செலவாகும் வீட்டில் ஒருவர் 30,000 ரூபாய் வீண்செலவு செய்வதைப் பொறுத்துக்கொள்வது கடினம். அது 15 வருஷம் தொடர்ந்து வீட்டில் 1 இலட்சம் ரூபாய் செலவாகும் பொழுது வேட்டை விட்ட தொகை 3½ கோடி என்றால், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு
 

பணத்தை அவனிடமிருந்து எடுப்பதும்,

அவனை அளவுகடந்து கண்டிப்பதும்

சரி, தவறன்று.

அதைச் செய்யாதது தவறு.

செய்வது புண்ணியம்.

அப்படிப்பட்ட புண்ணியத்தை

எந்த 'பாவ'மான காரியம்மூலமும் செய்வது அவசியம்.

அபாண்டப் பொய்யை 50 வருஷமாகச் சொல்லி, அது 1000த்தைக் கடந்தபின், அவர் மனம் புண்படும் எனத் தயங்குவது தவறு. அவர் மனம் புண்பட வேண்டியது அவசியம். உலகத்தில் பொய்யை அழிக்க நாம் செய்யும் புண்ணியம் அது.

46. அனைவரும் அர்த்தமில்லாமல் போற்றுவதை நீயும் போற்றாதே.

கடைக்குப் போகச் சந்தர்ப்பம் வந்தால் மனமும், உணர்வும், உடலும், ஜீவனும் பூரித்துப் புளகாங்கிதமடைபவருண்டு.

ஆசிரமம் வந்து அன்னை வாழ்வை மேற்கொண்டபின் மனம் விசேஷங்களை நாடுகிறது. சிறியதாய் ஆரம்பிக்கும் விசேஷம் வீட்டைக் கல்யாண வீடாக்குகிறது. ஜென்மம் சாபல்யமடைகிறது.

M.A, Ph.D. பட்டம் பெற்றவர் வாரப்பத்திரிகைகளைத் தமிழில் படித்து ஒரு நோட்டில் அதில் வரும் 'பொன்மொழி'களை எழுதி வருவது அவர் மனவளர்ச்சியைக் (retarded) காட்டுகிறது.

அர்த்தமற்றவை அர்த்தமற்றவர்க்கு அர்த்தபுஷ்டியுள்ளதாகும். நாம் அவர்களை விமர்சனம் செய்வது சரியில்லை. நாம் அவர் போலிருப்பது சரியென நினைத்தால், நினைப்பே சரியில்லை.

உலகில் பெரிய (intellectuals) அறிஞர்கள் 15 பேர் வரலாற்றை ஒருவர் எழுதினார்.

அத்தனை பேரும் உலகப் புகழ்பெற்றவர்கள்.

ஒருவர் பல ஆண்டுகளாக, ஆண்டில் 300 புத்தகம் படித்தவர்.

அடுத்தவர் தத்துவப் பேராசிரியர். அவர் இங்கிலாந்து பிரதமரின் பேரன்.

அவர் எழுதிய தத்துவத்தைவிட அவர் ஆங்கில நடை ஆற்றொழுக்காக அமைந்ததால் தத்துவத்திற்கு இல்லாத நோபல் பரிசை அவருக்குரிய ஆங்கிலப் புலமைக்கு அளித்தனர்.

வேறொருவர் எழுதிய நூல் உலகை இன்று அடியோடு சோஷலிஸப் பாதைக்கு மாற்றியது.

இத்தனை பேரும் ஓர் அந்தப்புரம் வைத்திருந்தனர்.

மேதாவிலாசமும், நடத்தையும் வேறு என்று அதை உலகம் புறக்கணித்து அவர்கள் பெருமையை ஏற்றது.

எவர் வேண்டுமானாலும் (irrational) அறிவுக்குப் பொருத்தமில்லாமல் பேசலாம். இவர்களில் ஒருவரும் அப்படிப் பேசக்கூடாது.

இவர்களில் ஒருவர் ஆயுளில் குளித்ததேயில்லை.

அது அவர் நாட்டுப் பழக்கம் எனக் கொள்ளலாம்.

ஆனால் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லை இவர் போன்றவர் ஒருவர்கூட, ஒரு முறைகூடப் பேசக்கூடாது.

. அப்படிப் பேசினார்கள்.

. அது மன்னிக்க முடியாதது.

எனக்குப் பெரியவர்கள் குறையைப் பற்றிப் பேசுவது நோக்கமன்று.

அவர்களிடம் இது இருப்பதால், நம்மிடமில்லை எனக் கூற முடியாது.

அதைக் களைவது அவசியம்.

அதுபோன்ற செய்கை மனிதனைப் பூரிப்படையச் செய்யும். அர்த்தமற்ற பூரிப்பு, நம்மை அர்த்தத்திலிருந்து விலக்கும்.

மனம் அதை நாடுவதையும் நாம் அனுமதிக்கக்கூடாது.

இம்முறையைக் கைக்கொள்ள முயன்றால் நம் சுபாவம் நம்மை மீறுவது தெரியும். ஒரு முறையும் கட்டுப்படாது.

முழுவதும் கட்டுப்படுவது அவசியம்.

47. உன் சுபாவத்தை சுட்டிக்காட்டும் உடற்குறை சிறியதானாலும் அதை அகற்ற முயல வேண்டும்.

நம்வியாதி நம்குணத்தைக் குறிக்கும்.

அளவுகடந்து உணர்ச்சியில் பயம் உள்ளவர்க்கு ஏராளமாகத் தும்மல் வரும்.

பாசம் அதிகமானவர்க்கு மலச்சிக்கலுண்டு.

சிடுமூஞ்சிக்கு வயிறு எரியும் வியாதி வரும்.

திடீரென ஜுரம் வருவது insecurity பாதுகாப்புப் போய்விடும் என்ற பயத்தால் வரும்.

உடல் உள்ள மரு, மச்சம் ஆகியவை குறிப்பிட்ட துர்அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

பெற்றோர், உடன்பிறந்தோர் மரணத்தைக் குறிப்பவை - மச்சம் - உண்டு.

வறுமையைக் கைரேகை காட்டும்.

தனரேகை அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.

வறுமைக்கேயுரியவர் - தரித்திரம் - அன்னையை ஏற்றுச் செல்வம் பெற்றால், தனரேகை உற்பத்தியாகும்.

ரேகை நம்முள் ஆழத்திலிருப்பது.

வியாதி லேசானது.

பிரார்த்தனையாலும், குணத்தை மாற்றுவதாலும், மனம்மாறச் சம்மதிப்பதாலும் உடற்குறை - மலச்சிக்கல், மச்சம் - குறையும், மறையும்.

ஏதாவது ஒரு விஷயம் அப்படி நம் முயற்சியால் மாறினால் இப்பயிற்சி பலன் தரும்.

தீயசக்தியின் ஆக்ரமிப்பில் உள்ளவர் கண்மூடினால் அது தொடர்ந்து சிமிட்டும்.

சர்க்கரை வியாதி, B.P.. பிரார்த்தனையால் குணமாகியிருக்கிறது.

Kidney stone சிறுநீரகக் கல் பிரார்த்தனையால் மறைந்துள்ளது.

கோபம் தன் குறியை உதடு துடிப்பதில் காட்டும்.

ஏதாவது ஒரு மச்சத்தை அடிக்கடி சமர்ப்பணம் செய்தால் அது மறையும்.

அன்னையிடம் வந்து நாளானால் பல மச்சங்கள் மறைந்தது தெரியும்.

Ulcer வயிறு எரிவது சிடுமூஞ்சித்தனத்தால்;

குணத்தை இதமாக, இனிமையாக மாற்றினால் ulcer இருக்காது.

வியாதியை, சமர்ப்பணத்தால் விலக்குவது பெரியது.

ஒரு கை விரல் படபடப்பது tension படபடப்பு இருப்பதால்;

முயன்று படபடப்பை விலக்கினால் கை ஆட்டம் குறைந்து, மறையும்.

திடீரென முழுவதும் மறைவதும் உண்டு.

வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் (vital) குணத்தோடு அதிகத் தொடர்பு உள்ளவை.

பயம் உள்ளவர்க்கு வயிற்றுப்போக்கு எழும்.

பயத்தைத் தைரியமாக மாற்றினால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வியாதியைக் குணப்படுத்துவது வேறு; குணத்தைக் குறிக்கும் வியாதியைக் குணப்படுத்துவது வேறு.

எந்த முயற்சிக்கும் பலன் உண்டு.

இந்த முயற்சிக்குப் பெரும்பலன் உண்டு.

எதுவும் செய்யாவிட்டாலும் அன்னையை அறிந்தபின் ஏராளமான பலன் தொடர்ந்து வந்து நிறையும்.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பொறுமைக்குக் கிடைக்கும் பலன் சுபாவத்தைப் பொருத்தது. எதிரெதிரான முறைகளில் அன்னை இதை நிறைவேற்றுகிறார். அவசரப்பட்டவனுக்குப் பலனைத் தள்ளிப் போடுகிறார்.இது சட்டம். அன்னை சட்டத்தின்மூலம் செயல்படுகிறார். மனிதன் வலியுறுத்துவது எது? அன்னையா? அவசரமா? என்பது முடிவை நிர்ணயிக்கும். கருமி, ஒரு பேரத்தில் அன்னையை வலியுறுத்தினால், அடுத்தவனுடைய குதர்க்க புத்திமூலம், தான் விரும்பிய விலையில் பாதி விலைக்கு அன்னை பேரத்தைக் கருமிக்குப் படிய வைக்கின்றார்.

அன்னைக்கு சுபாவமும் கருவியாகும்.


 


 


 


 


 



book | by Dr. Radut