Skip to Content

02.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் பாதமலர்களைப் பணிகின்றேன்!

அன்னையை அறிந்திருந்தாலும், மூன்றாண்டுகளுக்கு முன்னரே ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளத் தொடங்கினேன். குடும்பத்தோடு பாண்டிக்கும் சென்று வந்தோம்.

எதிர்பாராதவிதமாக என் வேலை வேறோர் பகுதிக்கு மாறியது. வேலையும் புதியதாய் இருந்தது; மானேஜரும் மிகக் கடுமையாக நடந்துகொண்டார். வேலை பிடிப்பது கஷ்டமாக இருந்தது. ஆரம்பத்தில் பயத்தோடு வேலைக்குச் செல்லத் தொடங்கிய நான், நாளடைவில் மனக்கலவரம் கொள்ளலானேன். அலுவலகத்திலிருந்து பாதி நாளில் வீட்டிற்கு வந்துவிடுவேன். சில சமயம் வேலைக்குச் செல்லும் வழியிலிருந்தே திரும்பி வந்துவிடுவேன். நான் இயல்பிலேயே பயந்த சுபாவம் உடையவன். இப்போது மனக்குழப்பம், தடுமாற்றம், வீட்டார்க்கும் கஷ்டம் என நிலைமை மோசமாகிவிட்டது. மூன்று மாதமாக நரக வேதனையை அனுபவித்தேன். சொல்லில் விவரிக்க முடியாது.

அன்னையின் அருளால் அச்சமயம் "மலர்ந்த ஜீவியத்தில்' அன்பர் கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியங்களைப் படித்தேன்.

"அன்னையிடம் பூரண நம்பிக்கை வைத்து நம் குறைகளை, நம் தேவைகளை, நம் பிரச்சினைகளை மறைக்காமல் சொல்லி முழுமனத்துடன் சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்தால், கண்டிப்பாக அன்னை எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து நம் பிரச்சினைகளைத் தீர்த்து நம் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார். ஆகவே, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராமல் அன்னை நமக்கு நல்லதே செய்வார் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம்".

ஏற்கனவே அன்னையின் அற்புதங்களைப் படித்து அவற்றை நம்பியிருந்த நான் இப்பகுதியை வாசித்ததும் துணிவு கொண்டேன். விடாமுயற்சியோடு நேரம் கிடைத்தபோதெல்லாம் அவ்வாக்கியங்களைக் குறிப்பேட்டிலும், தாளிலும் எழுதத் தொடங்கினேன். மனம் மிகமிக நொந்து போயிருந்த சமயங்களிலும் நம்பிக்கையோடு அதனைப் பல முறை எழுதினேன். கண்ணீர் மல்க, "அன்னையே நீயே தஞ்சம்.என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுவாய்'' எனப் பிரார்த்தித்தேன். அவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலும், அன்னை நல்லதே செய்வார் என நம்பினேன்.

நான் பட்ட துன்பங்களை, மனக்குமுறலை இக்கடிதத்தில் நான் விவரிக்கவில்லை. முக்கியமானது என்னவென்றால், அன்னை அன்பரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக வெளிப்பட்ட (மேலே குறிப்பிட்ட) பகுதி எனக்குப் புத்துயிர் கொடுத்தது. எனக்கு இதமளித்தது.

அதனை எழுதி பிரார்த்தனை செய்தபின், என் பிரச்சினைகள் அற்புதமாக அகன்றன. என்னுடைய கற்பனை பயங்கள் (phobia) நீங்கின. அன்னையின் அருளால் வேலையில் முன்னேற்றமும்,பொறுப்புகளை ஏற்கும் தன்னம்பிக்கையும் பெருகின. எதையும் கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வம் பிறந்தது. அன்னையின் அருளுரையின் உள்ளர்த்தமும் புரியத் தொடங்கியது. நான் புது மனிதன் ஆனேன்.

அன்னையின் அன்பர்கள் ஆயிரமாயிரம் பேர் உறுதிப்படுத்தும் அதே certitudeஐ நானும் மனமுவந்து சொல்கிறேன். தளரா நம்பிக்கையோடு, அன்னையே தஞ்சம் எனப் பிரார்த்தனை செய்தால், அன்னை கட்டாயம் அருளுவார். இது நிச்சயம், நிச்சயம், நிச்சயம்.

*******



book | by Dr. Radut