Skip to Content

7. யோக வாழ்க்கை விளக்கம் .

யோக வாழ்க்கை விளக்கம் .

(சென்ற இதழின் தொடர்ச்சி....)
 

கர்மயோகி


 919) எதிர்கால இலட்சியங்களை - சொத்துரிமையை அழிப்பது, பெண் விடுதலை - மனம் ஏற்றுக்கொண்டாலும் உடல், உணர்வு எதிர்த்துப் புரட்சி செய்யும்.

மனம் ஏற்ற இலட்சியங்களை உணர்வு எதிர்த்துப் புரட்சி செய்யும்.

  • 1942இல் போர் நடந்தது. வங்காளத்தில் பஞ்சம். 30 இலட்சம் பேர் இறந்தனர். தமிழ்நாட்டில் அரிசிப் பற்றாக்குறை. அரிசிக்குப் பதிலாக ரேஷன் கடையில் கோதுமை கொடுத்தனர். ஹோட்டல் சாப்பிடப் போனால், முதல் கோதுமைப் பண்டமான பூரியைக் கொடுத்துபிறகு அரிசி அளவோடு தருவான். அந்த நாளில் ஹாஸ்டல் இட் லி போடும்அன்று, மற்ற மாணவர்கள் இட்லி போடும்செக்ஷனுக்கு ஏராளமாக வந்து சாப்பிடுவார்கள்.
  •       பழக்கமான சாப்பாடு ருசி மிகுந்தது.
  • 30 வருஷத்திற்கு முன் ஒரு பெண் சுப்ரீம் கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்தவள், பேண்ட் போட்டுக்கொண்டு வந்தாள். ஜட்ஜ் அவளை "போய்ப் புடவை கட்டிக்கொண்டு வா'' எனத் திருப்பி அனுப்பிவிட்டார்.
  • பார்த்துப் பழகிய புடவை பவித்திரமான ஆடை.
  • 1915ஆம் ஆண்டு ஆறாஅமுதன் என்ற ஐயங்கார் சிறுவன் ஸ்ரீ அரவிந்தரை நாடி வந்தான். ஏழைப் பையன் என்பதால் அவனால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியவில்லை. பகவான் அவனை சென்னைக்கு அனுப்பி, B.A. படிக்க வைத்தார். பகவானுடனிருந்த பலரும் கல்கத்தாவிருந்து வந்தவர்கள். அப்பொழுது 1911 வரை கல்கத்தா இந்தியாவின் தலைநகராக இருந்ததால், ஆங்கில மோகம் அதிகமான இடம். அவர்கள் அனைவரும் கிராப் வெட்டிக் கொண்டவர்கள். ஆறாஅமுதன் குடுமி வைத்திருந்தான்.ஆறாஅமுதன் என்ற பெயரை பகவானுக்கு உச்சரிக்க முடியவில்லை என்பதால், அமிர்தா என அவர் பையனை அழைப்பார். பையன் ஆசாரமான குடும்பத்தைச் சார்ந்தவன். பூணூலும், குடுமியும் ஆசாரச் சின்னங்கள். 1920இல் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தொண்டர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். எவரும் ஷர்ட் போடவில்லை. அனைவரும் குடுமி வைத்திருந்தனர். காலம் வேறு. அமிர்தாவின் குடுமி கேலிக்குரியது ஆயிற்று. அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. பூணூல், குடுமி எல்லாம் சுவாமி விக்ரகம் போல் கருதப்பட்ட காலம். ஒரு நாள் அமிர்தா தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவர் நண்பர்கள் குடுமியை வெட்டிவிட்டனர்; பூணூலை உருவினர். அந்தக் கோலத்துடன் அமிர்தா வீடு சென்றார். வீட்டினர் அனைவரும் துக்க செய்தி வந்ததாக "' என அழுது ஓலமிட்டனர்.

"கட்டுக்குடுமியுடன் ராஜா போல் இலட்சணமாக இருந்தான் பிள்ளை.கிராப்புத் தலையுடன் குரங்கு மாதிரி வந்து நிற்கிறான்' என்றனர். இன்று யார் குடுமி வைத்துக்கொள்ள முடியும்?

  • வரும் காலத்தில் சொத்துரிமை இருக்காது, திருமணம் இருக்காது. இரண்டாவது பழக்கம் மேல்நாட்டில் வந்துவிட்டது. என்றாலும் இவற்றை ஏற்க முடியாது. "நான் சம்பாதித்த பணத்தை என் பிள்ளை அனுபவிக்காமல் யார் அனுபவிப்பது?' என மனம் கேட்கும். அறிவு ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொண்டாலும்,
  • உணர்வு புரட்சி செய்யும்.

          "என் காதில் போடாதே, நாராசமாக இருக்கிறது' என்று கூறும்.

  • மனம் ஏற்காத விஷயங்களைக் கையால் தொடக் கூசும்.

        சொல்லாகப் பேச வாயெழாது.

920) ஜீவியம் மாறித் தயக்கம் மறைந்தாலும் உடலுணர்வின் எதிர்ப்பு சமூகச் சூழ்நிலை மாறும்வரை இருக்கும். அது போன்ற தயக்கத்தைவிட மனிதன் சில சமயங்களில் தன் இலட்சியங்களை அளவுகடந்து (overdoing) பின்பற்றுகிறான்.

தயக்கத்தைத் தவிர்க்க அதை அதிகமாகப் பின்பற்றுகிறான்.

  • நன்கொடை வசூல் செய்யும்பொழுது பலர் பணம் தருவார்கள். மற்றவர் பிறகு தருவதாக ஒரு தொகையைக் குறிப்பிடுவார்கள். யார் ஒரு ரூபாய்கூடக் கொடுக்கப் போவதில்லையோ, அவர் அதிகபட்சத் தொகையைக் குறிப்பிட்டிருப்பார்.
  • பொதுவாகக் கல்யாண வரிசைகளில், அதிகத் தொகை, வசதி குறைவானவரிடமிருந்து வரும்.
  • ஒரு ஸ்தாபனத்திற்குப் புதியதாக வந்தவர், வந்தவுடன் திருமணம் செய்து கொண்டார். இரண்டாண்டில் அவருக்குக் குழந்தை பிறந்தது. செய்தி மாமியார் வீட்டிலிருந்து தந்தி மூலம் வந்தது. உடனே அவர் லீவு போட்டுவிட்டுக் குழந்தையைப் பார்க்கப் போனார். அவர் போய்ச் சேருவதற்குள் அவர் ஸ்தாபனத்திலிருந்து ஒருவர் வாழ்த்துத் தெரிவித்துத் தந்தி அனுப்பியிருந்தார். பொதுவாகக் குழந்தை பிறந்த செய்தி தெரிந்தால், நண்பர்கள் பார்த்தபொழுது வாழ்த்துவார்கள். நெருங்கியவர் வீட்டிற்கு வந்து வாழ்த்துத் தெரிவிப்பார்கள். 50 ஆண்டுகட்கு முன் நம் ஊரில் தந்தி மூலம் வாழ்த்து அனுப்புவது இல்லை. ஸ்தாபனத்திலிருந்து எவரும் கடிதம் மூலமும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. நேரில் பார்த்தபொழுது வாழ்த்தினர். தந்தி அனுப்பியவருக்குப் பிள்ளையில்லை.
  • பதவி, வசதி, படிப்பு குறைவானவர் உடைக்கு அதிக கவனம் செலுத்துவார்கள்.
  • பேச்சாளர் குரல் அவர் அறிவைப் பிரதிபலிக்கும். விபரம் தெரிந்தவர் சாதாரணக் குரலில் பேசுவார்கள். விவரம் தெரியாதவர் உரத்த குரலில் பேசுவார்கள்.
  • பழைய, பெரிய கம்பனி போர்ட் சிறியதாகவும், புதிய, சிறிய கம்பனி போர்ட் பெரியதாகவுமிருக்கும்.
  • அமெரிக்காவில் விலையுயர்ந்த பெரிய கார்களை அதிகமாக வாங்குவது வருமானம் குறைந்தவர்கள், நீக்ரோக்கள்.
  • அகம் தயங்கிச் சுருங்கினால், புறம் மலர்ந்து விரியும்.
  • வாழ்வில் முன்னேற்றம் வர அகம் நிறைந்து புறத்தில் வெளிப்பட வேண்டும்.
  • அகம் அரைகுறையாக இருக்கும்பொழுது புறத்தில் மனம் பலனை எதிர்பார்க்கும்.

       அகம் நிறைய முடியாத நிலையில், புறம் வெட்கப்படும்.

       அகம் காயாக இருந்தால், புறம் பதைபதைக்கும்.

      அகம் புறத்திற்கு எதிரான பாதையில் போனால், புறம் காயாக     இருக்கும்

  • அகம் தானே நிறைந்து, பொங்கி, புறத்தில் வழியும்வரை மனம் நிதானமாக இருக்காது. அந்நிலைகளில் மனித சுபாவம் செயல்படும் வகைகளில் மேற்சொன்னதும் ஒன்று.

921) அதிகமாகப் பின்பற்றுவதும், உடன் எதிர்ப்பும் - ராகு காலம், சிறு வயது திருமணத்தை அழிப்பது - எதிர்பாராத,அசம்பாவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விஷயத்தைப் பொருத்தவரை உள்ளுணர்வு உடல் அளவில் திருவுருமாற்றம் அடையும் வரை அவை இருக்கும்.

எதிர்ப்பு எதிர்பாராத விளைவைத் தரும்.  

  • மன மாற்றம், செயல் மாற்றம் என்பவை இயல்பாக இருப்பது நன்று. இராகு காலத்தைப் பரம்பரையாய்ப் பின்பற்றிய குடும்பப் பையன், கல்லூரிப் படிப்பில் இது மூடநம்பிக்கை எனப் புரிந்து, அதைக் கைவிட முன்வரலாம். அவன் கைவிடும் பழக்கத்தை அவன் மனம் கைவிடாது; உணர்வு கைவிடாது; உணர்விற்குக் கீழேயுள்ள உடல் கைவிடாது. அந்த நிலையில் பழக்கத்தை மட்டும் மாற்றினால், ராகு காலம் அதன் வேலையைச் செய்யும். அப்படி ஒருவர் வேலையில் சேரும்பொழுது இராகு காலத்தில் வேண்டுமென்றே வேலையை ஏற்றுக்கொண்டார். ஓராண்டில் இறந்து போனார். இந்த அசம்பாவிதம் இன்றி மாற்றம் வர
  • அறிவு ஏற்றுக்கொண்டதை உணர்வு ஏற்றுக்கொள்ளும்வரை
    பொறுத்திருக்க வேண்டும்
  • "எனக்கு இராகு காலத்தில் நம்பிக்கையில்லை'' என்பவர் உடனே தன் பழக்கத்தை மாற்றாமல், தன் காரியங்களைக் கவனிக்க வேண்டும். இயல்பாக இனி வரும் வேலைகள் இராகு காலத்தில் வராவிட்டால், அறிவு ஏற்றதை உணர்வும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.  அப்படியில்லாமல், இந்த முடிவுக்குப் பின் முக்கியமான விஷயங்கள் இராகு காலத்திலேயே அமைந்தால், உணர்வு அறிவை ஏற்கவில்லை எனப் பொருள். உணர்வு ஏற்கும்வரை காத்திருக்க வேண்டும். அல்லது கடந்த நாட்களில் அவர் செய்த முக்கிய வேலைகள் இராகு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், அவை எப்படி முடிந்தன எனப் பார்க்க வேண்டும். பலன் இராகு காலத்தால் பாதிக்கப்படவில்லை எனில், அவருக்கு உண்மையிலேயே இராகு காலத்தில் நம்பிக்கையில்லை எனப் பொருள். அவர் இராகு காலத்தைக் கைவிட்டால், அதனால் பாதிக்கப்படமாட்டார். மேலும் அதை உறுதி செய்ய அவர் கண்ணில், மனதில் படும் முக்கிய நிகழ்ச்சிகள் எப்படி எனக் கவனிக்கலாம். அவை இராகு காலத்தில் அமைந்தால், மேலும் சற்றுப் பொறுக்க வேண்டும் எனப் பொருள். உணர்வு ஏற்றுக்கொண்டாலும், சூழல் ஏற்றுக்கொள்ளவில்லை எனப் பொருள்.
  • மனித சுபாவம் ஆழமானது; எளிதில் மாறாது. மாமிசம் சாப்பிடும் குடும்பத்தில் மாமிசம் சாப்பிடப் பிரியப்படாதவர் ஒருவர். வீட்டில்  அவரை யாரும் மாமிசம் சாப்பிடக் கட்டாயப்படுத்தமாட்டார்கள். மாமிசம் சாப்பிடும் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களுடன் சாப்பிடும்பொழுது இவரும் மாமிசம் சாப்பிடுவார். அதன் ருசி அவருக்குப் பிடிக்கும். அதனால் பிரச்சினையில்லை. சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து வயிற்றைப் புரட்டும்.

        வாய்க்கு ஒத்துவரும் உணவு வயிற்றுக்கு ஒத்து   வருவதில்லை. ஏதோ ஒன்று அவருள்ளே மாமிசத்தை எதிர்க்கிறது.

        இது மனித சுபாவத்தில் உடல் செயல்படும் வகை

  • நண்பனிடம் வாங்கிய புத்தகத்தைத் திருப்பித் தர மறந்துவிட்டார் ஒருவர். வாங்கியதே நினைவு வரவில்லை. நண்பர் புத்தகத்தைக் கேட்டபொழுது கோபம் வந்தது. கோபமாகப் பேசினார். வீட்டிற்குப் போனபின் புத்தகத்தைப் பார்த்து, நண்பனிடம் மன்னிப்புக் கேட்டு,திரும்பக் கொடுத்துவிட்டார். சில வருஷம் கழித்து அந்த நிகழ்ச்சி நினைவு வந்தபொழுது "என்னிடம் புத்தகம் கொடுக்காமலேயே அவன் பேசுகிறான்' என்று அந்நிகழ்ச்சி மனதில் எழுகிறது. மனிதன் தன் தவற்றை ஏற்கமாட்டான்
  • மாற வேண்டுமெனில் மனம் புரிந்து, தெளிந்து ஏற்கும் வரை பொறுத்திருந்து, உணர்வும், சூழலும் ஏற்றபின் மாறுவது நல்லது. சமர்ப்பணம் உண்மையானால், இவ்வளவையும் சேர்த்துச் சமர்ப்பணம் செய்வது, தவறான பின்விளைவை அகற்றும்.

தொடரும்.....

ஜீவிய மணி


 

அன்பை அன்பிற்குரியவர் பெற முடியும்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

     கீழே வரும்பொழுது ஆசை, மேலே போகும்பொழுது

     அன்பாகும்.

     கீழே வரும்பொழுது ஆனந்தம், மேலே எழும்பொழுது

     சிருஷ்டியின் ஆனந்தமாகும்.

      கீழே வரும்பொழுது ஜீவியமாக இருப்பது, மேலே

     போகும் பொழுது சித்-சக்தியாகிறது.

    சத்தியமாக (நிலைத்த சத்தியம்) கீழே வருவது, மேலே

    போகும் பொழுது (active truth of ordered being)

    முறையான ஜீவனின் பரிணாம சக்தியாகும்.


 


 


 


 



book | by Dr. Radut