9. சுப சகுனம்
சுப சகுனம்
கர்மயோகி
- சுபமாக முடிவதைச் சுப சகுனம் காட்டும்.
- சுப சகுனம் அர்த்தமுள்ள ஆரம்பம்.
- அது முடிவைத் தன்னுட்கொண்ட அர்த்தபுஷ்டியுள்ள ஆரம்பம்.
- ஒருவர் மகாபுருஷனாக உலகில் வாழ்வதை அவர் பிறந்த சமயம் சுற்று வட்டாரம் பெற்ற சுபிட்சம் குறிக்கும்.
- நம் வாழ்வின் முடிவில் நம் உலகம் செழிப்பாக, இன்று நம்மைச் சுற்றியுள்ளவர் அதன் அறிகுறியைக் காண வேண்டும்.
நம்முள் - அகத்தினுள் - அவ்வறிகுறி நல்லெண்ணம்.
அகத்தின் நல்லெண்ணம் புறத்தின் கலகலப்பான குதூகலம்.
அன்னை அதை cheerfulness சந்தோஷம் என்கிறார்.
- ஒருவர் சந்தோஷம் அவர் உலக சுபிட்சம்.
சுபிட்சம் சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.
சுபிட்சத்தை நாடுபவருடைய ஆரம்பம் சந்தோஷம்.
- சாதனையை நாடுபவரின் சந்தோஷம் தெம்பான திறமை.
தெம்பான திறமை சுறுசுறுப்பால் வெளிவரும்.
சுறுசுறுப்பு சும்மா உட்கார விடாது.
சாதனையின் ஆரம்பம் வேலை செய்யும் விறுவிறுப்பு.
- பெரும் படிப்பின் ஆரம்பம் பார்ப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம்.
- ருசியான சமையல் பிறர் சாப்பிட்டு மகிழ்வதில் பெறும் சந்தோஷம்.
- தலைமையின் ஆரம்பம் பிறர் விரும்பக் கட்டுப்படுவது.
- சங்கீத மேதையாவதின் ஆரம்பம் இசை குரலாக எழுவது.
- பெரும் செல்வம் சேர்வதன் ஆரம்பம் அயராத உழைப்பு.
- பிரபலத்தின் ஆரம்பம் இனிமையான சொல்லின் புன்னகை.
- சுமுகமான திருமணத்தின் ஆரம்பம் பிறர் இனிக்க நடப்பது.
காதலின் ஆரம்பம் ஜீவன் ஜீவனோடு இணைவது. - பண்பின் சிறப்பு பலருக்கும் பயன்படுவதின் ஆரம்பம், கருணை நிறைந்த கனிவான உணர்வு.
- குடும்பத்தின் பிரபலம் பொறுப்புணர்ச்சியில் ஆரம்பிக்கிறது.
- ஆரம்பம் அழிவது சரணாகதி யோகமாவது.
- விஞ்ஞானத்தின் ஆரம்பம் வினோதம் கண்ணில் படுவது.
- எதிர்காலம் புரிவதின் ஆரம்பம் கடந்தகால சுபிட்சம்.
- நல்ல முடிவின் ஆரம்பம் இனிமையான மலர்ச்சி.
- வெற்றியின் ஆரம்பம் பொங்கி வரும் சந்தோஷம்.
- புரிவதின் ஆரம்பம் படிக்க ஆர்வம்.
- தெளிவின் ஆரம்பம் நிதானம்.
- வளரும் செல்வத்தின் ஆரம்பம் நல்லெண்ணம் நயமான நாகரீகமாகி, நாலு பேர் அகமகிழ்தல்.
- பெருமகசூலின் ஆரம்பம் களை வளராத பயிர்.
- சுதந்திரத்தின் ஆரம்பம் தியாகம்.
- பெருவாரியான நண்பர் குழாம், நட்பில் பெறும் பெருமையில் ஆரம்பிக்கிறது.
- தெய்வ தரிசனத்தின் ஆரம்பம் சத்தியம் நெஞ்சில் இனிப்பது.
- சொல் நிலைப்பதின் ஆரம்பம் சுருதி ஜீவனை ஆட்கொள்வது.
ஸ்ரீ அரவிந்த சுடர்
ஆத்ம சமர்ப்பணம் பூர்த்தியாகும்பொழுது மனிதன் காலத்தைக் கடந்தவனாகிறான். சிருஷ்டி, தன் பூர்வோத்திரத்தை நாடும் மார்க்கம் அது.
என்னை உன் உடமையாக்கிக்கொள்.
- Login to post comments