Skip to Content

04. ‘சிறு குறிப்புகள்’

"என் வீடு"

நான் நெடுநாளாக அன்னையை வழிபடுகிறேன். வீட்டைச் சுத்தம் செய்தால் கணவருக்குப் பிடிக்கவில்லை, பிள்ளைகள் மறுத்துப் பேசுகிறார்கள் என்பதால் சுத்தம் செய்ய முடிவதில்லை. சாதாரண மனிதர்கள் வீடுபோல குப்பையும், கூளமுமாக மலிந்து கிடக்கிறது. எவருக்கும் தெரியாமல் தியானம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் கேலி செய்வார்கள். அல்லது குடும்பம் நடத்தும் வீட்டில் தியானம் எதற்கு என்பார்கள்.அன்னைக்குகந்ததது போல் சடங்குகளிலிருந்து விலகலாம் எனில் நாம் குடும்பம் செய்கிறோம், ஊரில் குடியிருக்கிறோம், காட்டிலில்லை எனக் காட்டுக் கத்தலாகக் குரல் கேட்கும். அதனால் சடங்குகளை விடமுடியவில்லை. யாராவது போனில் வீட்டில் ஒருவரைக் கூப்பிட்டால், நான் போனில் பேசும் பொழுது அவரைக் கூப்பிடுகிறேன் என்றால் வீட்டில் விபரீதம் நடக்கும். இந்த அநியாயமுண்டா? வீட்டு மனிதர்களே துரோகம் செய்தால் எப்படிக் குடும்பம் உருப்படும்? கூப்பிட்டால் இல்லை என்று சொல்லாமல் என்னைக் காட்டிக் கொடுப்பவரைத் தாயார் என எப்படி நான் சொல்வது என்று என் பெரிய மகன் திட்டுவான். பதில் சொல்ல முடியாமல் தவிப்பேன். இருந்தாலும் நான் பொய் சொல்வதில்லை. உடைந்த பொருட்களை ரிப்பேர் செய்ய எவருக்கும் தோன்றாது. தெருவில் வருபவர்களைக் கொண்டு முடிந்தவரை யாரும் வீட்டில்லாதபோது ரிப்பேர் செய்வேன். அதனால்,

  • வீடு களேபரமாக, குப்பையாக இருக்கிறது.
  • வாய் நிறைய எல்லோரும் பொய் சொல்கிறார்கள், நானும் பொய் சொல்லவில்லை என மட்டமாகத் திட்டுகிறார்கள்.
  • ஒரு மகள் எப்படி எல்லோரையும் ஏமாற்றினேன் என்று பெருமைப்படுகிறாள்.

அன்னை பக்தர்கள் வீட்டுக்கு வருவது வீட்டில் எவருக்கும் பிடிக்கவில்லை என்று ஒரு பக்தர் தன் மனம் திறந்து தன் நெடுநாளைய நண்பரிடம் சொல்லியபொழுது, அவர் தம் அபிப்பிராயத்தைக் கூறினார். எனக்கு 12 ஆண்டுகட்கு முன் தெரிந்த நண்பராக நீங்கள் இல்லை, உங்கள் முகம் பிரகாசமாகவும், மனம் அமைதியாகவுமிருக்கிறது. உங்கள் வேலையில் 3, 4 உயர்வு வந்துள்ளது. செல்வம் அளவு கடந்து பெருகியுள்ளது. அன்னை குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் செயல்பட்டுள்ளார்கள் என்று கூறியபொழுது பக்தர் மீண்டும் அவரைக் கேட்டார்,

"அன்னை நான் சரியேயில்லாத பொழுது முழுவதும் சரியாக இருப்பது போல் அருள் பாலித்துள்ளார்கள்,

"நான் அன்னைக்குச் சரியாக நடந்துகொள்ள வேண்டாமா?"

நண்பர் பதிலாக,

"நீங்கள் உங்கள் வீட்டினருக்குச் சரியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது தேவையில்லை. அன்னைக்குச் சரியாக இருந்தால் அனைத்துக்கும் சரியாக இருந்ததாக அர்த்தம்" என்றார்.

***

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனித உறவுகள் பல. அவற்றுள் அன்பு ஒன்று. ஓர் ஆன்மாவின் தொடர்பு அடுத்த ஆன்மாவுடன் இருந்தால் அஃது அன்பான தொடர்பாகும்.

அன்பு ஆன்மாவின் ஸ்பர்சம்.

 



book | by Dr. Radut