Skip to Content

11.வாழ்வில் வளமாக எழும் ஆன்மா

வாழ்வில் வளமாக எழும் ஆன்மா

உலகம் ஆன்மாவை அறியும்; வாழ்வையும் அறியும்; வாழ்வில் ஆன்மீகம் மலர்ந்து வாழ்வு அற்புதமாகும் என்பது The Life Divine கூறும் அற்புதம். இது தத்துவம்; புரியாது; புரிந்தால் மனத்தைத் தொடாது;தொட்டால், நடைமுறையில் பயன்படாது. விளைநிலம் ஏக்கர் 1இலட்சமானால், அது மனையானால் 10 இலட்சமாகும். அதை அப்படி மாற்றுபவன் பணக்காரனாகிறான். அற்புதமான சரக்கை விற்கத் தெரியாமல் மனிதன் தற்கொலை செய்துகொண்டபின், அதை ஒரு சிறு பாலித்தீன் பையில் போட்டால் விற்கும் எனக் கண்டவன் கோடீஸ்வரனானான். இவர்கள் வாழ்வில் ஆன்மா எண்ணமாக மலர்கிறது; அதிர்ஷ்டமாக மாறுகிறது.

50 கோடி பெறுமான கம்பனியை 60 கோடி ரூபாய்க்கு விற்கமுடியும் என்ற சந்தர்ப்பம் வந்தவுடன் கம்பனி கற்பக விருக்ஷமாகிறது. அவருள் அன்பர் ஓருவர் இருந்தால், அவர் மனம் சுயநலமற்ற தூய்மையான பொறுப்பால் நிறைந்து இருந்தால், அவருக்கு அவர் கம்பனி சரக்கைப் பற்றிய அப்படியொரு கருத்து தோன்றும். அக்கருத்து நிலைமையை மாற்றும். 60 கோடி ரூபாய் பெறுமானமுள்ளதை 75க்குக் கேட்பார்கள்; 100 கோடியில் பேரம் முடியும். இதற்குரிய புதிய எண்ணம் ஆன்மீக எண்ணமாக மலர்வது, அது வாழ்வில் அதிர்ஷ்டமாக வெளிவருவது. இன்று அது பலர் வாழ்வில் நடக்கிறது. அன்னையை அறியாதவர், தூர இருப்பவர். ஆனால் ஏதோ ஒருவகையில் இந்த பேரத்தைப் பொருத்தவரையில் அந்தத் தூய்மையுள்ளவரிடம் இந்த அற்புதம் காணப்படுகிறது.

இது எந்த அன்பர் வாழ்விலும் தவறாது நடக்கும். அதற்குரிய நிபந்தனை என்ன என்று கேட்பவர், அதைப் பின்பற்றப் பிரியப்படாதவர் எனப் பொருள். எந்த அன்பருக்கும் எல்லா நிபந்தனைகளும் தெரியும்.

தெரிந்ததைப் பின்பற்றுபவர்க்குத் தெரியாதனவெல்லாம் கூடிவரும்.

தெரியமுடியாதனவெல்லாம் பலிக்கும்.

****


 



book | by Dr. Radut