Skip to Content

02. எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

                                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)

பார்ட்னர் : இந்த பாக்டரி விஷயங்களுக்கு எல்லாம் நீங்கள் பொறுப்பேற்பீர்களா?

தாயார் : அன்னை கூறியவற்றை நான் கூறலாம். என் கணவருக்கோ, உங்களுக்கோ, நான் புத்திமதி சொல்லக்கூடாது. அது முறையன்று.

கணவர் : உனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரியவில்லை.

தாயார் : தெரிந்தாலும் சொல்லாமலிருப்பது என் கடமை.

பார்ட்னர் : தெரிந்தவர், தெரியாதவர்க்குச் சொல்லாமலிருக்கும் கட்டுப்பாடு உயர்ந்தது. சரி, நாங்கள் கேட்டுச் செய்கிறோம்.

பெரியவன் : இனிமேல், இது அம்மா பாக்டரி. நீங்கள்தான் சேர்மன்.

பார்ட்னர் : ஒரு கம்பெனியைப் பற்றி 8 கோடி, 80 கோடி என்று ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறதா? அது என்ன?

தாயார் : ஒரு கம்பெனி நஷ்டத்திலிருப்பதால் நம் முறைகளைக் கடைப்பிடிக்கும் கன்சல்டண்ட்களைக் கூப்பிட்டார்கள். ஜூன் மாதம் கான்ட்ராக்ட் எழுதினார்கள். ஏப்ரல் முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. மாதம் 5 கோடி முதல் 6 கோடிவரை வசூலாகிறது. 7½கோடி வசூலானால் கட்டுப்படியாகும். நம் கான்ட்ராக்ட் எழுதும் முன்னே force செயல்பட்டது 8 கோடி வசூலாயிற்று. கன்சல்டண்ட் தீவிரமாக வேலை செய்கிறார்.கம்பெனிக்குச் சந்தோஷம். 30 மாதமாக ஒரு முறையும் அந்த 8 கோடி வசூலாகவில்லை.

பார்ட்னர் : தவறு எங்கே?

தாயார் : கன்சல்டண்டிற்கு நம்பிக்கை பணத்தில், வேலையில். அன்னையிலில்லை, ஜீவனிலில்லை.

பார்ட்னர் : 80 கோடி என்பதென்ன?

தாயார் : எப்படி நாம் வேலையை ஆரம்பிக்குமுன் 8 கோடி வந்ததோ, அதேபோல் ஜீவனுடன் வேலை செய்தால் 80 கோடி அதே மாதம் வரும்.

கணவர் : அது பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஜீவனோடு என்றால்.....

பார்ட்னர் : ஆர்வத்துடன்.

தாயார் : உண்மையுடன்.

பெண் : பக்தி, நம்பிக்கையுடன்.

பெரியவன் : குதர்க்கமில்லாமல்.

சிறியவன் : அம்மா சொற்படி.

பார்ட்னர் : நமக்கு இதுவரை அப்படித்தானே நடக்கிறது.

தாயார் : இது 8 கோடிபோல் நாம் ஆரம்பிக்கும்முன் தானே நடப்பது.

கணவர் : ஆரம்பிக்கவே பயமாகயிருக்கிறது. 1 மாதம் நாம் அனைவரும் அன்னைச் சட்டப்படிச் செயல்படலாமா?

தாயார் : அது செய்தால் போதும்.

பார்ட்னர் : அது என்ன என்று சொல்லவில்லையே.

கணவர் : அனைவருக்கும் தெரியும். அவரவரும் குதர்க்கம், கேலி, கிண்டல், பராமுகம், அதிகாரம்,பொறாமை, வம்புப் பேச்சு, ஆகியவையில்லாமல் அன்னை நினைவுடன்,சமர்ப்பணத்தை முடிந்தவரை ஏற்று முழுக் கட்டுப்பாட்டுடன், மனத்தால் அடக்கமாகச் செயல்பட்டு ஆயிரம் நல்லவை நடப்பதைக் கண்டு 1 மாத முடிவில் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இதற்குள் ஏற்பட்ட ஆயிரம் நல்ல விளைவுகளால் அன்று ஒரு மாதமுன் என்ன வியாபாரம் turnover திட்டமிட்டார்களோ, அது இன்று நிகர இலாபமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த 30 நாட்களில் குடும்பங்களின் நிலை 80 நிலைக்கு உயர்ந்துவிட்டதாய்த் தெரிகிறது.

பார்ட்னர் : மதர் பெரிய தெய்வம் என்பதில் ஆட்சேபணையில்லை.

கணவர் : இந்த ஒரு மாதத்தில் வாழ்நாள் முழுவதும் நடக்காதவை நடந்துவிட்டன.

பெரியவன் : அம்மா பேசலாமா?

தாயார் : சந்தேகமானால் பேசாதே.

பெண் : நாமெல்லாம் இன்னும் ஒன்றும் செய்யவில்லை.

சிறியவன் : அப்பா, நடந்தது, நடக்கவேண்டியது, நாம் செய்ய வேண்டியது, எல்லாம் விளக்கமாகச் சொல்லுங்கள். நீங்க கண்டிக்காமல் நாங்கள் திருந்தமாட்டோம். கண்டித்துவிடுங்கள்.

கணவர் : அம்மாவைப் பேசச் சொல்.

தாயார் : மனம் எப்படியிருக்கிறது? அந்தஸ்து என்ன ஆயிற்று? என்று கூறுங்கள்.

பெண் : மனம் காற்றில் பறக்கிறது.

பெரியவன் : பெரிய அந்தஸ்து வந்துவிட்டது.

தாயார் : பணத்தைவிட இவையிரண்டும் உயர்ந்தவை, முக்கியமானவை. அதனால் காப்பாற்றுவது கடினம். கண்டித்தால் குறைந்தபட்சம் காப்பாற்றலாம். தானே திருந்தினால் அதிகபட்சம் வளரும். இது எல்லா அன்பர்கட்கும் தவறாது நடந்தது. காப்பாற்றியவர் குறைவு, கர்வமாக நிமிர்ந்தவர் அதிகம், செய்தவரைக் குறை கூறியவர் உண்டு, எதையும் அறியாதவர் ஏராளம். நாம் எப்படியிருக்கப் போகிறோம்?

கணவர் : நீ சொல்வதுபோல் மனம் நிறைவாக இருக்கிறது என்பது உண்மை. நம்மைவிடப் பெரிய இடங்களிலிருந்து அழைப்பு வந்தால் அங்கெல்லாம் போய்ப் பழகத் தெரியவில்லை.

பெண் : நமக்கு அவர்கள் குறை தெரிகிறது.

பார்ட்னர் : நம்மை அனைவரும் அன்பாகவும், பிரியமாகவும் நடத்தினார்கள்.

பெரியவன் : எல்லோருக்கும் நம் வண்டவாளம் தெரியும்.

தாயார் : நம் வண்டவாளம் வெளிவருமுன் நாமே முயன்று அதை வெளிப்படுத்திவிடவேண்டும்.

பார்ட்னர் : பெரிய இடத்திற்குச் சமமாக நாம் உயர்வது சாத்தியமா?

தாயார் : அன்னையை முன்னிருத்தி முயன்றால் பலன் பேசும்.

கணவர் : அது தெரிகிறது. அங்கேதான் பயமாக இருக்கிறது.

பெரியவன் : அம்மா எனக்குச் சொல்லிக்கொடுங்கள். நான் கற்றுக்கொள்கிறேன்.

சிறியவன் : நானும் வர்ரேன்.

பெண் : ஊம்.

கணவர் : சரி, சொல்லு.

பார்ட்னர் ரொம்ப சந்தோஷம். அம்மா என்ன சொல்வாங்க, இதைச் சந்தோஷமாகச் செய்யவேண்டும் என்பார்கள்.

தாயார் : இது போதும். குறைந்தபட்சம் சாதிக்கலாம். சந்தோஷமாகச் செய்தால் அதிகபட்சம் கிடைக்கும். நாமனைவரும் பார்ட்னர் குடும்பம் போலிருக்க வேண்டும்.

பார்ட்னர் : எனக்கு உங்களுடைய நம்பிக்கை வேண்டும். தினமும் நாம் சேர்ந்து நடந்தவற்றை விமர்சனம் செய்து, நடக்கவேண்டியதை விவாதித்தால் சரியாகிவிடும்

தாயார் : அது போதும்.

கணவர் : ஊரில் பாக்டரியைக் கவனிக்காதவரில்லை.

பார்ட்னர் : அதனால் நாம் உஷாராக இருக்கவேண்டும். நல்ல சொல் மட்டுமே நம் மனதில் எழவேண்டும்.

கணவர் : எனக்குப் பெரிய இடத்து அழைப்புதான் டென்ஷன் தருகிறது.

தாயார் : அதுவே செல்வத்திற்கு அறிகுறி. அழைப்பு வந்தவுடன் ஒரு நாள் முழுவதும் அழைப்பிலிருந்தால் டென்ஷன் குறையும்.

கணவர் : அதுவும் பார்த்திருக்கிறேன். மனம் அழைப்பை நாடமாட்டேன் என்கிறது.

தாயார் : வேலை உள்ளேயிருக்கிறது என்பது அதுதான்.

பார்ட்னர் : குறை என்றிருந்தால், முனைந்து களைந்தால் போய்விடும்.

தாயார் : குறை குணமாகி, அது குணத்தின் குறையாகி, சிக்கல், முடிச்சு விழுந்துவிட்டால் எடுப்பது கஷ்டம்.

பெண் : என்னம்மா அது?

தாயார் : நீ நல்ல டிரஸ் வேண்டும் என்றால், பணமிருந்தால் எடுக்கிறோம், இல்லாவிட்டால் இல்லை. இருந்து செலவு செய்ய மனம் வாராதது குறை. நல்ல டிரஸ் போட்டுக்கொள்வது தவறு என நினைப்பது குணம். பெண் மீது பொறாமைப்படும் தாயார் பணம் செலவு செய்யமாட்டாள், நல்ல டிரஸ் வாங்கமாட்டாள், தன் பெண்ணுக்குக் கொடுக்கக் கூடாது என்பது அடுத்த கட்டம். அதைக் குறை, குணம், குணக்குறை எனவும்,சிக்கல், முடிச்சு எனவும் கூறுகிறோம்.

பெண் : அவற்றையெல்லாம் என்ன செய்வது?

தாயார் : அவையெல்லாமிருந்தால் கூடவே பொய், கேலி,குதர்க்கம், குத்தல், கிண்டல், வெறியேற்றுவது வந்துவிடும்.

பெண் : அப்படிப்பட்ட தாயார் முதலில் அவற்றிற்கெல்லாம் இங்கே பணமில்லை என்பாள். அல்லது உனக்கு அப்படிப்பட்ட டிரஸ் கேட்கிறதா என்பாள். எந்த ராஜாவைக் கட்டிக்க இந்த டிரஸ் தேவை, பாரேன் நினைப்பை, என்ன டிரஸ் கேட்கிறாள் என்று பேச்சு வரும்.

தாயார் : நீ விவரமாகச் சொல்கிறாய்.

பெண் : நீங்க அழகாகப் பேசவேண்டும் என்பதை இப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதா?

பார்ட்னர் : இங்கே பிரச்சினை என்ன? கொடுக்க மனம் வரவில்லை, சிறிய மனசு. அதனால் பரந்த மனம் முக்கியம்.

கணவர் : நாம் அடிப்படையில் மாற வேண்டும், அளவுகடந்து உயர வேண்டும், அபரிமிதமான பெரிய மனசு வேண்டும், இது சரியான திருவுருமாற்றம். ஏன் அன்னை இருந்தவரை அவரைத் தமிழ்நாடு அறியவில்லை, உலகமறியவில்லை என இப்பொழுது விளங்குகிறது. மனிதன் மட்டமானவன், சிறியவன், இவனால் உயர முடியாது.

பார்ட்னர் : சைத்தியப்புருஷன், ஜீவாத்மாவைவிட நமக்குப் பலன் தருவதிலும், உண்மையிலும் உயர்ந்தவன் என்பதை அறிய விரும்புகிறேன்.

தாயார் : ஜீவாத்மா என்பது spirit சைத்தியப்புருஷன் என்பது spirit in life. ஒரு கம்பெனியின் கொள்கை போன்றது ஜீவாத்மா.நடைமுறையில் அக்கொள்கைகளைப் பின்பற்றுவது சைத்தியப்புருஷன்.

கணவர் : Punctualityஐ உதாரணமாக்கிச் சொல்லேன்.

தாயார் : ஒரு கம்பெனியில் ஆண்டுதோறும் punctualityஐப் பற்றி சொற்பொழிவாற்றுகிறார்கள், இந்தக் கம்பெனியின் உயிர்நாடி punctuality என்கிறார்கள், டைரக்டர் மீட்டிங்கில் punctuality அழுத்தமாகப் பேசப்படுகிறது. அது கொள்கை, ஜீவாத்மா போன்றது. நடைமுறையில் punctuality சில இடங்களிலிருக்கும், பல இடங்களில் இருக்கா. உண்மையான,punctualityஐப் பரம்பரையாகப் பின்பற்றும் கம்பெனிகள் punctuality ஐப் பற்றிப் பேசமாட்டார்கள். ஆனால் ஒரே ஓர் இடத்திலும் psychic being தவறாது. அந்தக் கம்பெனி ஆட்கள் தங்கள் சொந்த வாழ்விலும் punctualityஐக் கடைப்பிடிப்பார்கள். தொழிலாளிகள் மனத்தில் எழுந்த punctualityகம்பெனியின் வளரும் ஆன்மா, psychic being. பேசலாம், பின்பற்ற முடியாது. பேசாமல் பின்பற்ற வேண்டும்.

பார்ட்னர் : ஜீவாத்மா உள்ளேயிருப்பதை அறிவது பேசுவது போன்றது. அது வெளிவந்து செயல்படுவது சைத்தியப்புருஷன் போன்றது.

தாயார் : நமக்குள்ள ஜீவாத்மாவை நாம் அறியோம். தபஸ்வி நிஷ்டையில் அறிவார். அறிந்தபின் விழிப்பு வந்தால் மறந்துவிடும், மறைந்துவிடும். நாம் உடல் ஆன்மா, மனம் ஆன்மா, சொல் ஆன்மா, என உணர்ந்து அது வெளிப்படும்படி, சமர்ப்பணத்தால் செயல்படும் பொழுது அரை க்ஷணம் சைத்தியப்புருஷன் வெளிவரும். வெளிவருவது நிலைப்பது சைத்தியப் புருஷன் சித்திப்பது.

பார்ட்னர் : இரண்டுக்கும் உள்ள தூரம் அதிகம்.

கணவர் : எனக்குச் செல்வாக்கு இருப்பதால் நான் போய் மந்திரியை, முதல் மந்திரியைப் பார்ப்பது எனக்குரிய நிலை. அது என் தொகுதிக்குப் பயன்படாது. நான் மேலே போகவேண்டிய பாதை வேறு. M.L.A.. ஆகி சட்டசபைக்குப் போவது. அப்படிப் போனால் என் அந்தஸ்து தொகுதிக்குச் சேவை செய்யும். M.L.A.ஆக இருந்து மந்திரியாகவும், முதன் மந்திரியாகவுமாக மாறினால் என் தொகுதிக்கு நான் சேவை செய்யலாம்.

பார்ட்னர் : ஒன்று ஜீவாத்மா, அடுத்தது சைத்தியப்புருஷனா?

தாயார் : ஆம்.

பார்ட்னர் : நமது கம்பெனியில் எது ஜீவாத்மா, எது சைத்தியப்புருஷன்?

தாயார் :இதுவரை நாம் பேசியது எல்லாம் ஜீவாத்மா போன்றது. இதை அனைவரும் பின்பற்றுவது சைத்தியப்புருஷன் ஆகும்.

கணவர் : இந்த ஒரு மாதத்தில் நமக்கு நூறு சந்தர்ப்பங்கள் எழுந்தன. பணமில்லாமல் காரியம் நகராது என்று, ஓர் இடத்திலும் பணத்தைப் பற்றிப் பேச்சே எழவில்லை. இடம் பெரியது என்பதால் எவரும் கேட்கவில்லை.

பார்ட்னர் : இப்பொழுதெல்லாம் டெலிபோன் இன்ஜினீயர் வீட்டில் டெலிபோன் ரிப்பேர் செய்தாலும் மாமூல் நிற்காது. அது இல்லாவிட்டால் வேலை நடக்காது. கேட்கவில்லை என்பது நமக்குள்ள செல்வாக்கால் அன்று. நம்மைவிட அதிகச் செல்வாக்குள்ளவர் எல்லாம் பணம் தருகிறார்கள். அன்னையிருப்பதால் எவரும் கேட்கவில்லை.

பெண் : இது எப்படியம்மா புரியும்?

கணவர் : அதுதான் புத்தி என்பது.

தாயார் : இது புரிந்தால்தான் தொடர்ந்து மேலே போகலாம்.

சிறியவன் : எனக்குத் தோன்றவில்லையே.

கணவர் : எனக்கும் புரியவில்லை.

தாயார் : புரிவது அருள், செய்வது பேரருள்.

ஒரு நாள் கணவரும், பெரியவனும் வந்து தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் பக்கத்துத் தெருவிலிருந்து ஒரு டிபுடி கலெக்டர் வந்தார். அனைவரும் தாயாரைச் சந்திக்க வந்துள்ளனர். அந்த டிபுடி கலெக்டர் பெரியவனுடைய நண்பனின் மாமா.

கணவர் : ஒரு நல்ல காரியம் நம்மால் முடியும் என்றால் செய்வது நல்லதுதானே.

பெரியவன் : அதுவும் கேட்காமல் செய்வது உயர்ந்ததன்றோ?

டி.கலெக்டர் : எப்படி இதை நீங்கள் நம்புகிறீர்கள்?

கணவர் : உங்கள் நண்பருக்குக் குணமானால் நம்புவீர்களா?

டி.கலெக்டர் : குணமானால் உங்களாலாயிற்று என்று எப்படித் தெரியும்?

பெரியவன் : வேறு எப்படிக் குணமாகும்?

டி.கலெக்டர் : இத்தனை நாள் மருந்து சாப்பிட்டதால் இன்று குணமாயிற்று என்று கொள்ளலாமன்றோ?

கணவர் : அதுவும் சரிதான். என் மனைவி பதில் சொல்வாள்.

பெரியவன் : அம்மா எல்லாக் கேள்விகட்கும் பதில் சொல்வார்கள்.

டி.கலெக்டர் : இது முற்றிய கான்சர். குணமாகும் என உங்கள் அம்மா கியாரண்டி கொடுப்பார்களா?

பையன் அம்மாவை அழைக்கப் போனான். அம்மாவுக்கு வரும் சந்தர்ப்பமில்லை. கணவரே மனைவியைக் காண வந்ததால், மனைவி சிரமத்தைப் பாராட்டாது எழுந்துவந்து அனைவருடனும் கலந்துகொண்டார்.

டி.கலெக்டர் : பிரார்த்தனை கான்சரைக் குணப்படுத்தும் என்பது பொருத்தமாகாது.

கணவர் : என் மனைவியை உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பொதுவான தத்துவ விவாதத்தை எடுத்துக்கொள்ளலாம். இன்று உடம்பு முடியவில்லை.

டி.கலெக்டர் : எனக்கு உத்தரவாதமளிப்பீர்களா?

தாயார் : எதற்கு, ஏன்?

டி.கலெக்டர் : கான்சரைப் பிரார்த்தனை குணம் செய்யும் என்று. அதுவும் உங்கள் பிரார்த்தனையால் என் நண்பர் கான்சர் குணமாயிற்று என்பதை நிரூபிக்கவேண்டும்.

தாயார் : பிரச்சினை என்ன?

பெரியவன் : கான்சர்.

கணவர் : கான்சருக்குப் பிரச்சினையில்லையே.

டி.கலெக்டர் : உங்கள் கணவர் கூறுவது பிரச்சினை.

தாயார் : (கணவரை நோக்கி) என்ன கூறினீர்கள்?

கணவர் : நீ அவருடைய நண்பர் கான்சரைக் குணப்படுத்துவாய் என்றேன்.

தாயார் : (டிபுடி கலெக்டரை நோக்கி) நான் அன்னையைப் பற்றிப் படிப்பேன். நான் படிப்பதை என் கணவரிடம் சொல்வேன். கணவர் நான் பொதுவாகப் பேசியதை இப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்.

டி.கலெக்டர் : அப்படியானால் என் நண்பருக்குக் குணமாகாதா?

கணவர் : என் மனைவி அடக்கமாகப் பேசுகிறாள். அவளால் முடியும்.

தாயார் : நோயாளிக்கு அன்னைமீது நம்பிக்கையிருந்தால் அவரே பிரார்த்தனை செய்யலாம்.

டி.கலெக்டர் : அவருக்கு நம்பிக்கையில்லை. உங்கள் பிரார்த்தனையால் பலிக்கவில்லை என நிரூபிப்பதே அவர் நோக்கம்.

தாயார் : என்ன பிரச்சினை, அது யாருடையது?

டி.கலெக்டர் : உங்கள் கணவர் சொல்வதை, "இல்லை' என நான் நிரூபிக்க விரும்புகிறேன்.

தாயார் : என் கணவர் என்னைப் புரிந்துகொள்ளாமல் பேசியிருக்கிறார்.

டி.கலெக்டர் : கணவரிருக்கட்டும். உங்களால் என் நண்பரைக் குணப்படுத்த முடியுமா?

தாயார் : இந்த கேள்வி ஏன் எழவேண்டும்? எனக்கு அதெல்லாம் முடியாது.

டி.கலெக்டர் : நான் ஜெயித்துவிட்டேன்.

தாயார் : நான் போகலாமா?

கணவர் : ஏன் இப்படிப் பேசுகிறாய்? கலந்து பேசக்கூடாதா?

தாயார் : அன்னை விஷயம் அவரவர் சொந்த நம்பிக்கை. மூன்றாவது பேர்வழியின் விவாதத்திற்குரியதன்று.15 நாட்கள் கழித்து டிபுடி கலெக்டரும் அவர் நண்பரும் வந்தார்கள். சற்று அடக்கமாக இருந்தார்கள். இந்த 15 நாட்களில் 15 மாதத்தில்லாத குணம் நோயாளிக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் வந்திருக்கிறார்கள். தாயாரைக் கூப்பிட்டதற்கு, "என்னிடம் கான்சர், அன்னை தவிர வேறு எது பேசவேண்டுமானாலும் வருகிறேன். அவற்றைப் பேச என்னைக் கூப்பிடாதீர்கள்'' எனக் கணவரிடம் கூறினார். எப்படி இக்குணம் தெரிகிறது எனக் கணவர் கேட்டார். எதிர்த்துப் பேசும்பொழுது அன்னையையே நினைத்ததால் அக்குணம் தெரிகிறது என்று மனைவி சொல்லியதையும் கணவர் கலெக்டரிடம் சொல்லிவிட்டார். டிபுடி கலெக்டர், மனைவியைப் பார்க்கவேண்டும் என்றும், கான்சரைப் பற்றிப் பேசவில்லை என்றும், அன்னையைப் பற்றி மட்டும் பேசுவேன் என்றார். மனைவி அதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

நோயாளி : எனக்கு அன்னை பற்றிச் சொல்வீர்களா? நான் AG'sofficeஇல் A.O.வாக வேலை செய்கிறேன். எனக்கு குணமானால் A.G.'s Officeஇல் உள்ளவர்கள் அன்னை பக்தர்கள் ஆகிவிடுவார்கள்.

மனைவி : அன்னையைப் பற்றி அறிய ஏராளமான நூல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்ளன.

டி.கலெக்டர் : ஏன் நீங்கள் அன்னையைப் பற்றி எங்களுக்குச் சொல்லக் கூடாது? உங்கள் கணவர் எல்லோரிடமும் பேசுகிறாரே?

மனைவி : நான் அன்னையின் பக்தை. அதைப் பிறரிடம் எப்படிப் பேசுவேன்?

டி.கலெக்டர் : என்ன தவறு?

மனைவி : ஓர் இளைஞனுக்கு ஒரு பெண் மீது தீராக் காதலிருந்தால் அதைப் பிறரிடம் பேசுவானா?

நோயாளி : அன்னை தெய்வமாயிற்றே.

மனைவி : பலருக்குத் தெய்வம். எனக்குச் சொந்தமானவர். நான் பேச முடியாது.

நோயாளி : எனக்கு 15 நாட்களில் நம்பிக்கையில்லாதபொழுது நல்ல குணம் தெரிகிறது.

மனைவி : நீங்கள் சாப்பிட்ட மருந்தாயிருக்கக் கூடாதா? எப்படி அன்னையால் என நினைக்கிறீர்கள்?

டி.கலெக்டர் : இந்த 15 நாட்களும் அன்னையைப் பற்றித்தான் பேச்சு.அதனால் நம்புகிறேன்.

மனைவி : இந்தப் 15 நாட்களில் இருவர் வீட்டிலும் ஏராளமான தவறுகள் நடந்திருக்குமே.

நோயாளி : ஆமாம், ஏன்?

மனைவி : நாம் வேறு விஷயங்கள் பேசுவோம்.

மனைவி எழுந்து போய்விட்டபின் மீதி நால்வரும் தொடர்ந்து விவாதிக்கிறார்கள். அதாவது,

பெரியவன் : அப்பா, அம்மா யாரிடமும் அன்னையைப் பற்றிப் பேசமாட்டார்கள் என உங்களுக்குத் தெரியுமே.

கணவர் : டிபுடி கலெக்டர் நண்பராயிற்றே, அவருக்கு உதவலாம் என நினைத்தேன்.

பெரியவன் : அவர் உதவி கேட்கவில்லையே.

டி.கலெக்டர் : எனக்கு உதவி வேண்டும், விபரம் தெரியவேண்டும்.

நோயாளி : அம்மாவுக்கு அதிக பக்தி. நாம் அன்னையைப் பற்றி எளிதாகப் பேசுவது அவர்கட்குப் பிடிக்கவில்லை.

கணவர் : எங்களுக்கெல்லாம் சொல்வதைப்போல் உங்களுக்கும் சொல்வாள் என எதிர்பார்த்தேன்.

பெரியவன் : நமக்கே அம்மா சுலபமாகச் சொல்வதில்லையே.

நோயாளி : தம்பி, எனக்குக் குணமாக என்ன செய்யலாம்.

பெரியவன் : அம்மா என்ன சொல்வார்கள் என எனக்குத் தெரியும். 3 நாட்கள் இடைவிடாமல் பிரார்த்திக்கச் சொல்வார்.

டி.கலெக்டர் : 3ஆம் நாள் குணமாகுமா?

பெரியவன் : கேள்வி கேட்டால் பதில் வரும், குணம் வாராது.

நோயாளி : கேலிஅப்புறம். அதுபோல் குணமாயிருக்கிறதா?

பெரியவன் : குணம் உதாரணத்திற்கில்லை, நம்பிக்கைக்கு.

டி.கலெக்டர் : 3 நாட்களில் குணமாகுமா? 15 நாட்களில் ஏராளமான தவறுகள் ஏற்பட்டன என்று அம்மாவுக்கு எப்படித் தெரியும்?

பெரியவன் : இப்படியெல்லாம் பேசினால் அப்படியெல்லாம் நடக்கும்.

நோயாளி : மதரை மறுத்துப் பேசினால் எப்படிக் குணமாகும்?

பெரியவன் : மதரையே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?

டி.கலெக்டர் : அந்த நினைவுக்கு இந்த பலன் உண்டா?

அடுத்த 15, 20 நாட்களில் அவர் பூரணமாகக் குணமானார். தாயாரைப் பார்க்க அவரும், டிபுடி கலெக்டரும் பிரியப்படுகிறார்கள். தாயார் ஊரில்லை. வந்தபிறகும் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை.இடைப்பட்ட நாட்களில் கான்சர் குணமானதைப் பற்றியே பேச்சு, வேறில்லை.

தாயார் : நீங்கள் எது செய்வதானாலும் அன்னையை அதில் சம்பந்தப்படுத்தவேண்டாம். அதைச் செய்தாலும், என்னைப் பிறருடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்.

கணவர் : நல்ல காரியமன்றோ!

தாயார் : இது கெட்ட காரியம் என்கிறார் அன்னை.

கணவர் : அவர் ஒரு டிபுடி கலெக்டர். நண்பர் AG's officeஇல் A.O. பெரிய உத்தியோகஸ்தர்களாயிற்றே.

தாயார் : அதெல்லாம் நட்புக்குரியது. பக்தி பவித்திரமானது. நட்பையும் பக்தியையும் இணைக்கலாமா?

கணவர் : நீ சொல்வனவற்றையெல்லாம் நான் அவரிடம் சொல்வேன். அவர் உன்னிடம் பேசப் பிரியப்படுகிறார்.

தாயார் : நான் அதற்குத் தயாரில்லை.

கணவர் : எதிர்த்துப் பேசினால் கான்சர் குணமாகிறது என்றால் வழிபட்டால் எப்படியிருக்கும்!

தாயார் : அப்பலனிருக்காது.

பெரியவன் : ஏம்மா?

தாயார் : வழிபாட்டுக்கு எதிர்ப்புக்குள்ள தீவிரமில்லை.

கணவர் : குணம் சக்திக்கா, தீவிரத்திற்கா?

தாயார் : தீவிரத்திற்கு.

கணவர் : நிறைய தவறுகள் எப்படி நடந்தன?

தாயார் : எதிராகப் பேசுவதால்.

கணவர் : இரண்டும் கலந்திருக்குமா?

தாயார் : கலப்பை நாம் காணாத இடமுண்டோ?

பெரியவன் : அந்தக் கான்சர் பேஷண்டும், நீங்களும் பேசுவதைக் கேட்க எனக்கு ஆசையாக இருக்கிறதம்மா.

கணவர் : வழிபாட்டுக்கு எப்பொழுது தீவிரம் வரும்?

தாயார் : ஆசை போன பிறகு வரும். டிபுடி கலெக்டர் முதலில் வந்ததிலிருந்து எல்லாம் அப்படியே நின்று போய்விட்டதைக் கவனித்தீர்களா?

கணவர் : இனி நான் அவர்களிடம் தொடர்புகொள்ளவில்லை.

பார்ட்னர் வந்தார். முகமும், உடலும் கனிந்துபோய் பழுத்த பழமாக இருந்தார். ஏதோ பெரிய விஷயத்தோடு வந்திருக்கிறார்.பேச முடியவில்லை. பேசப் பிரியப்படவில்லை. பெரியவனைப் போகச் சொல்லிவிட்டார்கள்.

பார்ட்னர் : இதுவரை நடந்தது நினைக்க முடியாத பெரியது.நீங்கள் சொன்னபடியெல்லாம் இத்தனை நாட்களாக - கெட்டதை விலக்கி, நல்லதைச் சேர்த்து - மனத்தைப் பக்குவப்படுத்திப் பவித்திரமாக்க முயன்றேன். இந்த உலகத்திலேயே இல்லை நான். உள்ளும் புறமும் தித்தித்தது. இன்று காலை நம் பேங்க் சேர்மன் வந்திருப்பதாகக் கூப்பிட்டு அனுப்பினார்கள், போனேன். நடந்தது நம்பக்கூடியதாக இல்லை. இப்பவும், பேச நா எழவில்லை. இந்த அதிசயம் நடக்கும் என நான் நினைக்கவில்லை. நாணயம் முக்கியமானது எனக் கண்டேன்.அவரால் பேசமுடியவில்லை எனக் கண்டு மேலும் அவரிடம் விபரம் கேட்கவில்லை. அவர் தழுதழுத்துப்போய் கொஞ்ச நேரமிருந்து போய்விட்டார். நெடுநாள் எவரும் அதைக் கிளறவில்லை. கணவருக்குத் தாங்கவில்லை என்ற நிலையில் கணவனும் மனைவியும் கலந்தனர்.

கணவர் : நான் போய்ப் பார்ட்னரைக் கேட்டுவிடுகிறேன். இனி எனக்குத் தாங்காது.

மனைவி : தாங்காது என்ற நேரம் கேட்டால், தாங்கமுடியாத பாரம் தலைக்கு வரும்.

கணவர் : என்னால் முடியவில்லை.

மனைவி : முடியவில்லை என்பதால், கூடிவந்தன எல்லாவற்றையும் நாசமாக்கலாமா? மனிதனுடைய பிரச்சினையே அதுதானே. நாமே அதற்குப் பலியாகலாமா?

அந்த நேரம் பார்ட்னரிடமிருந்து போன் வந்து, கணவரிடமிருந்து ஏதோ ஒரு சிறு செய்தி வேண்டுமெனத் தெரிந்தது. கணவர் நேரடியாகப் போய்வரப் பிரியப்பட்டார். மனைவிக்கு இஷ்டமில்லை. இஷ்டப்படாமலிருப்பது தமக்குச் சரியில்லை என்பதால் சமாளித்துக்கொண்டு சந்தோஷமானார். பார்ட்னரும் கணவரும் சந்தித்துப் பேசினர். பார்ட்னரைப் பார்த்தபின் கணவருக்குத் தாம் நினைத்த கேள்வியைக் கேட்கும் தைரியமில்லை. புறப்படும் நேரத்தில் பார்ட்னரே பேசினார்.

பார்ட்னர் : நேரம் வரட்டும்.

கணவர் : நான் குறுக்கே நிற்கமாட்டேன்.

பார்ட்னர் : நாம் மூவரும் பேசவேண்டியது.

கணவர் : நான் படும் அவசரம் என் மனைவிக்குச் சம்மதமில்லை.

பார்ட்னர் : எனக்கு உள்ளே அவசரம் உள்ளவரை பேசக் கூடாதில்லையா? நாணயம் நாட்டை ஆளும், அதற்கும் மதிப்புண்டு என்பது விசேஷம்.

இதன்மூலம் கணவர் விஷயம் எத்தனை பெரியது எனப் புரிந்துகொண்டார். ஓரளவு மனம் அடங்கியது. தாம் பக்குவப்படுவதே சரி என சும்மாயிருந்துவிட்டார். மனம் ஓரளவு அடங்கினாலும் உடல் பதட்டம் குறையவில்லை. வீடு முழுவதும் மாறிவிட்டது. தாயார் மேலும் அமைதியடைந்தார். தமக்கு எந்த ஆழத்தில் அமைதி தேவையோ அங்கில்லை என அவர் அறிவார். அவர் கனவில் அன்னை தோன்றினார். இந்தியா படத்தில் நடுநாயகமாக இருந்த அன்னை சிறு உருவம் பெற்று பாக்டரியிலும் வேறு பல இடங்களில் அன்னை தோன்றினார். க்ஷண நேரம்தான். விழிப்பு வந்தது. உடலெல்லாம் பூரித்தது. சுமார் 20 அல்லது 30 இடங்களில் பாக்டரி பரவப்போவதை தாயார் தெளிவாகப் புரிந்துகொண்டார். அதற்குரிய ஆன்மீகத் தகுதி தாம் பெறவேண்டுமென நினைத்தார். கனவு சூட்சுமம், நம் உலகம் ஸ்தூலம். மகான்கள் சூட்சுமத்தில் கண்டது பலிக்க 100 ஆண்டுகளாகியிருக்கிறது. கனவை எப்படிப் புரிந்துகொள்வது? பார்ட்னருக்கு நண்பராக மேல்மட்டத் தொடர்புகள் உண்டு. அந்த அளவில் அவருடைய மதர் பக்தியை அறிந்த ஒருவர் அவரை அணுகி தம் பாக்டரியில் 2000 தொழிலாளிகள் அடாவடியாக வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும், அது நடந்தால் பல கோடி நஷ்டமாகும் எனவும், அதற்கு ஒரு வழி வேண்டும் எனவும் செய்தி வந்துள்ளது. தொழிலாளிகட்கு சர்க்கார் ஆதரவிருப்பதால் நியாயத்திற்குக் கட்டுப்படமாட்டேன் என்கின்றனர். பார்ட்னர்மூலம் பலன் பெற விரும்புகின்றனர். அதனால் பார்ட்னர் வர இருக்கிறார் என்று செய்தி வந்தது. பார்ட்னர் வந்தார். அந்த ஆலையில் தொழிலாளிகள் கேட்டதைக் கொடுத்தபின் வாங்க மறுத்து, ஸ்டிரைக் வர இருக்கிறது எனக் கூறினர். தாயார் அதுபோன்ற நிகழ்ச்சி முதலாளியிடமோ, மேனேஜ்மெண்ட்டிடமோ உண்டா எனக் கேட்டு அனுப்பினார். பல உண்டு என பதில் வந்தது. மானேஜ்மெண்ட் சட்டமாக இனி அப்படிச் செய்யக்கூடாது என முடிவு செய்தால் ஸ்டிரைக்கால் நஷ்டம் வாராது என்று தாயார் சொல்லியதை முதலாளி கேட்டு ஆச்சரியப்பட்டு நம்பமுடியாமல் நேரில் பார்க்க விரும்பினார்.

தாயார் : வேலை முடிவதுதான் முக்கியம். என்னைப் பார்ப்பதன்று.

பார்ட்னர் : முதலாளி உங்களைச் சந்திப்பது நல்லது என நினைக்கிறார்.

தாயார் : நான் பார்க்க மறுக்கவில்லை. விசேஷம் பார்ப்பதில் இல்லை. மேனேஜ்மெண்ட் மனம் மாறுவதிலிருக்கிறது. சரி, நான் அவரை 2 நாட்கள் கழித்துச் சந்திக்கின்றேன்.

அவர் வருவதன்முன் தொழிலாளிகள் ஸ்டிரைக் நோட்டீஸை வாபஸ் செய்தனர். அவரால் நம்பமுடியவில்லை. அதன்பின் பொறுக்க முடியாமல் பார்ட்னருடன் தாயாரைப் பார்க்க வந்தார்.

முதலாளி : வேலை முடிந்தபின்னும் என்னால் நம்ப முடியவில்லை.

பார்ட்னர் : முதலாளிக்கு ஸ்டிரைக்கைவிட இதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

முதலாளி : எனக்கு அன்னை முக்கியம். அம்மா முக்கியம். சற்று விவரம் சொல்லுங்கள்.

தாயார் : உலகம் மனத்திற்குக் கட்டுப்பட்டது. மனம் மாறினால் மக்கள் மாறுவார்கள்.

முதலாளி : நாங்கள் மாறியனவெல்லாம் ஆயிரம், பத்தாயிரம். ஸ்டிரைக் கோடிக்கணக்காகும்.

பார்ட்னர் : முதலாளி உங்களுக்கு ஏதாவது செய்யப் பிரியப்படுகிறார்.

தாயார் : ஆலையில் அன்னை முறைகளைக் கடைப்பிடித்தால் எனக்குச் சந்தோஷம்.

முதலாளி : இல்லை, தனிப்பட்ட முறையில் நான் என்ன செய்யலாம்? என் ஆபீசர்களைச் சந்தித்துப் பேச முடியுமா?

தாயார் : எனக்கு மேடைப் பிரசங்கம் வாராது.

முதலாளி : நான் மீண்டும் வருகிறேன். மறுபடியும் உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்கள் கம்பெனிக்கு ஏதாவது உதவ முடியுமா?

பார்ட்னர் : வேண்டுமானால் வந்து கேட்கிறோம். எந்தச் சட்டப்படி இது நடந்தது?


 

தொடரும்

*******

.

ஜீவிய மணி

அடம் பிடிப்பது உடலுக்குரியது (physical).

அடம் உடலின் அணிகலன்


 


 


 


 


 


 



book | by Dr. Radut