03.உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்
உலகம் - மோட்சம் - ஸ்ரீ அரவிந்தம்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- முழுமையை முடிவாக அறிய வேண்டும் என்பதால் ஞானம், அஞ்ஞானம் என்ற விளக்கம் அதற்குச் சாதகமாக, பொருத்தமாக இருப்பது அவசியம்.
- ஞானம் தன்னை அளவுக்குட்படுத்துவதால் அஞ்ஞானம் ஏற்படுகிறது என்பது பகவான் கூறியது. அளவு அகன்றால் அஞ்ஞானம், ஞானமாகிறது. ஞானம் என்ற முழுமையை நாமடைய முடியும்.
- வேதம், கடவுள், உலகம் என்று பிரித்து, கடவுளை அறிவது ஞானமாகவும், கடவுளை அறியாதது அஞ்ஞானமெனவும் கூறுகிறது. வேதவிசாரம் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளில் முடிவதால், உலகம் விலக்கப்படுகிறது. அதனால் முழுமைக்கு வழியில்லை.
- உபநிஷதம் கூறுவது வேறு:
கடவுளை அறிவது வித்யா, உலகை அறிவது அவித்யா என்று உபநிஷதம் கூறுகிறது. கடவுளும், உலகமும் பிரிக்கப்படுகின்றன. அவை சந்திக்க வழியில்லை. அதனால் முழுமை எழ வழியில்லை.
- வேதம், உபநிஷதம், கீதை ஆகியவை மனம் என்ற கருவியை பயன்படுத்தின. மனம் பகுக்கும் கருவி. மனத்தால் முழுமையை அடைய முடியாது. அதனால் அவ்விளக்கங்கள் பூரண யோகத்திற்குப் பயன்படா.
- மேலும் சத்தியஜீவியம் ஞானம், மனம் அதை மறக்காதவரை ஞானத்தின் கருவியாகும். அதை மறந்தால் அஞ்ஞானத்தின் கருவியாகிறது. அம் மறதியின் நிலைகள் ஏழு. அவ்வேழுவகை அஞ்ஞானம் நாம் அறிய வேண்டியது. அஞ்ஞானத்தைப் பூரணமாக அறிய நாம் ஞானத்தை, அதன் நான்கு வகைகளை அறிவது அவசியம். ஞானம் என்றால் இறைவனை உலகமாக அறிவது என்பது விளக்கம்.
1) இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலை ஞானம், உயர்ந்த நிலை ஞானம்.
2) அவனிடமிருந்து அகந்தையால் பிரிந்து நின்று தன்னை வேறாக அறிவது பிரிந்த நிலை ஞானம். இது கடைசி கட்டமான தாழ்ந்த நிலை.
3) இவற்றிடையேயுள்ளவை இரண்டு.
• ஒன்று intuitionநேரடி ஞானம்.
• Subliminal அடிமனம் பெறும் பிரபஞ்ச ஞானம்.
நாமுள்ள அகந்தை நிலையிலிருந்து அடிமனத்தில் பிரபஞ்ச ஞானம் பெற்று, அங்கிருந்து உயர்ந்து நேரடி ஞானமடைந்து, முடிவாக இரண்டறக் கலந்த ஞானம் பெறுவது யோகம்.
பூரணமான அஞ்ஞானம்
ஞானம் அஞ்ஞானமாக மாறும் நிலைகள் பல. அவற்றை ஏழு நிலைகளாகக் கூறுகிறோம். அஞ்ஞானம் பூரணமானால் சிருஷ்டி முடியும். பரிணாமம் ஆரம்பிக்கும். அது பூரணம்பெற, பரந்த பிரபஞ்சம் குறுகிய மனிதனாக வேண்டும். அடிமனம் மேல்மனமாகிறது.இம்மாற்றம் சிறப்பெய்த மேல்மனம் தலைகீழாக மாற வேண்டும். பரந்த அடிமனம் காலத்தாலும், மனத்தாலும் குறுகி, அகந்தையால் மேலும் சிறுத்து, சிறுமையின் முடிவு (கண்டம், infinitesimal) மேல்மனச் செயலானால் அஞ்ஞானம் பூர்த்தியாகும். சிருஷ்டியின் 8 நிலைகளில் ஒரு நிலையினின்று அடுத்த நிலைக்குவரத் தலைகீழ் மாற்றமுண்டு. இதை பகவான் reversal of consciousness தலைகீழாக மாறிய ஜீவியம் என்கிறார். இந்த மாற்றம் ஓர் அத்தியாயமாக விளக்கப்படுகிறது.
குறை, தவறு, பொய், தீமை
ERROR, MISTAKE, FALSEHOOD, WRONG, EVIL
இரண்டாம் புத்தகம் முதற்பகுதியின் 14 அத்தியாயம் இத்துடன் முடிகின்றன. மேற்கூறியவை அஞ்ஞானத்தின் இருண்ட பகுதிகள், இருள் திரண்டு கருமை, கடுமையாவது தீமை. எளிமையான மாறுபாடு சிக்கலான குதர்க்கமாவது தீமை என்கிறார் பகவான். Simple contrary becoming complex perversity. இங்கு,
- சிருஷ்டியில் தீமை படைக்கப்படவில்லை.
- அகந்தை பிரபஞ்சத்திலிருந்து பிரிந்து தனித்து வேறுபட்டு உலகை வேறாகக் காண்பதால் நோய், வலி, கவலை, மரணம்,தீமை உற்பத்தியாயின என்கிறார்.
- பிரிந்தது கூடினால் தீமை கரையும்,
என்பவை முக்கியக் கருத்துகள் . தீமையைப் பற்றி அறிவு ஏற்கும் வகையில் கூறப்பட்ட ஒரே விளக்கம் இதுவே. உலகம் கேட்டறியாத விளக்கமிது. இந்த 14 அத்தியாயங்களில் ஞானம் எப்படி அஞ்ஞானத்தினின்று எழுகிறது, அஞ்ஞானம் எப்படி ஞானமாகிறது என்பது கூறப்படுகிறது. அடுத்து வரும் 14 அத்தியாயங்களில் ஞானம் பரிணாமத்தால் எப்படி ஆன்மாவாகிறது என்பது விளக்கப்படுகின்றது.
இரண்டாம் புத்தகம் இரண்டாம் பாகம்: ஞானம் ஆன்மீகப் பரிணாமத்தால் ஆத்மாவாகி வளர்வது, இப்பாகம். இதன் கட்டங்கள்
- இதுவரை நாம் ஞானம் என்றது, அஞ்ஞானத்திற்கு எதிரான ஞானம். இது மனிதனுக்குரியது, மனத்திற்குரியது, காலத்துள் , மேல்மனத்தில் செயல்படுவது. இப்பகுதியில் பேசப்படும் ஞானம் பூரண ஞானம் (integral knowledge)மனிதன் பெறும் ஞானம் பொருள்களைப் பற்றியது, நிகழ்ச்சிகளைப் பற்றியது. பகுதியானது. பூரண ஞானம் சத்தியத்தைப் பற்றியது (Reality) சத்தியம் என்பது எல்லா உலகங்களையும் தழுவியது. இதை அடிமனத்தால் பெறவேண்டும். நாம் அறிவை மனத்தால் பெறுவது போல், பூரண ஞானத்தை சத்தியஜீவியத்தால் பெற வேண்டும். நாம் கண் விழித்துப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரைத் தெரிகிறது. பூரண ஞானத்தின் பார்வைக்குப் பிரபஞ்சம் முழுவதும் தெரியும். இது காலத்திற்கு உட்பட்டதன்று. முக்காலமும் தெரியும் ஞானமிது. முதல் அத்தியாயம் இஞ்ஞானத்தை பெறும் வகைகளைக் கூறி, இஞ்ஞானத்தின் எல்லா அம்சங்களையும் விவரிக்கிறது.
--இதைப் பெற முக்கிய நிபந்தனை அகந்தை கரைவது.
--இந்த ஞானத்திற்கும் நமது அறிவுக்கும் உள்ள வித்தியாசம் மனித அறிவுக்கும் விலங்கின் அறிவுக்கும் உள்ளது. நாம் இந்த உலகையறிவோம், ஊரை அறிவோம். நம் வீட்டு நாய்க்கும் அறிவுண்டு. அதுவும் இந்த ஊரை அறியும். இவற்றிடையேயுள்ள வித்தியாசம் நாமறிவது.
நமது இலட்சியம் தெய்வீக வாழ்வென்பதால், இப்பூரண ஞானம் நம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். ஆதி மனிதன் உலகில் வாழ்ந்தான். நம் மனம் வளர்ந்து விஞ்ஞான அறிவு பெற்று, நகரத்தில் வாழ்கிறோம். ஆதி மனிதன் காட்டில் வாழ்ந்தான். அவன் வாழ்வு விலங்கின் வாழ்வு. அதிலிருந்து நாம் வளர்ந்து விட்டோம். அதே போன்ற மாற்றம் அடுத்த கட்டத்தில் வரும். இப்பூரண ஞானம் எந்த வாழ்வில் வெளிப்பட வேண்டும்? வாழ்வு என்றால் என்ன?
• புவி வாழ்வு ஒரு நிலை.
• பிரபஞ்ச வாழ்வு அடுத்தது.
• பிரபஞ்சத்தைக் கடந்த வாழ்வு அடுத்தது.
• இவையனைத்தும் இணைந்த வாழ்வும் உண்டு.
நாம் 4ஆம் வாழ்வை மேற்கொள்கிறோம். புவியும், பிரபஞ்சமும், அதைக் கடந்த நிலையில் உள்ள வாழ்வில் பூரணஞானம் வெளிப்பட்டு அது சிறக்க வேண்டும். அது அடுத்த அத்தியாயம். துறவறம் வாழ்வை விலக்கியது. கிரகஸ்தன் புவிவாழ்வை மேற்கொண்டான். பூரணயோகி வாழ்வின் மூன்று நிலைகளையும் இணைத்து அதைப் பூரண ஞானம் மூலம் வாழ முடிவு செய்ததை விளக்கும் அத்தியாயம் இரண்டாம் அத்தியாயம்.
பாதாளமும், பரமாத்மாவும் ஐக்கியத்திற்காக இணைய வேண்டும். அடுத்த கட்டத்தில் ஆன்மா வளர இணைய வேண்டும். இணைந்தது உயர வேண்டும். உயர்ந்தால் பரிணாமத்தால் வளரும். அந்த வளர்ச்சிக்கு 7 வகை அஞ்ஞானம் 7 வகை ஞானமாக வேண்டும். இந்த ஆன்மீக மாறுதல் மறுபிறப்புத் தேவையில்லாமல் செய்கிறது. உடல் பரிணாம வளர்ச்சி பெற்றால் மறுபிறப்புத் தேவையில்லை. ஆன்மா வளரும் பொழுது, அதற்கேற்ப மனமும் உயிரும், உடலும் அன்மீக வளர்ச்சி பெற்றால் மறுபிறப்புத் தேவையில்லை அதுவே மனித இலட்சணம். அவனை பகவான் மனிதன் பிறந்தான் என்கிறார். அத்திறனை அடுத்தவர்க்கு அளிப்பவன் ஆன்மீக மனிதன். மனிதன் ஆன்மீக மனிதனான பின் திருவுருமாற வேண்டும். அத்திருவுருமாற்றம் 3 நிலைகளில் உள்ளது. சைத்தியத் திருவுருமாற்றம், ஆன்மீகத் திருவுருமாற்றம், சத்தியஜீவியத் திருவுருமாற்றம் என அவை மூன்றாகும். அதன் மூலம் சத்தியஜீவியத்தை எட்டலாம். அதனால் சத்தியஜீவன் பிறப்பான். அவன் வாழ்வு தெய்வீக வாழ்வு. இத்துடன் நூல் முடிகிறது. மேலும் முக்கிய விஷயங்கள் , சிக்கலானவை, சிக்கலான சிறப்புடையவை என விஷயங்கள் , சிக்கலானவை, சிக்கலான சிறப்புடையவை என 50 முதல் 300 வரை ஏராளமானவையுண்டு. அவற்றுள் பலவற்றைக் காண்பது பலன் தரும்.
தெய்வீக வாழ்வு
இது மனத்தை மையமாகயுடையதன்று. சத்தியஜீவியத்தை மையமாக உடையது. இதன் வாழ்வு பிரபஞ்சம் முழுவதும் பரவும். இதன் சக்தி என்றும் தோற்றதில்லை. இதைக் கடந்து எதுவுமில்லைஎன்ற முழுமையையுடையது. என்றும் ஆத்ம விழிப்புடையது. இதைத் திருவுருமாற்றத்தால் மட்டும் அடைய முடியும். திருவுருமாற்றம்பெற ஒரே கருவி சரணாகதி. அப்படிப்பட்ட தெய்வீக வாழ்வு,
- எளிமையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
- எளிமையாகவோ, வளமாகவோ இருக்கலாம்.
- எப்படியுமிருக்கலாம் என்பது வழக்கமான பழக்கங்களிலிருந்து நாம் பெறும் சுதந்திரம்.
- Freedom is the final law and last consummation.
- பூரணச் சுதந்திரமே முடிவான கட்டுப்பாட்டின் சட்டம்.
அமர வாழ்வு
துறவிகளில் பலர் காயகல்பம் தேடினர். அவர்களில் பலர் பெரிய வைத்தியரானார். மரணமிலா வாழ்வு பெருவாழ்வு. அதைப் பெறும் நிலைகள் பல. வேத ரிஷிகள் அதை யோக லட்சியமாகக் கருதினர். அதை ஆத்மா அடைவது பேறு. அதன் இறுதி இலட்சியம் உடல் மரணத்தை வெல்வது. மருத்துவம் வலியை வென்றது. வாழ்வை நீட்டித்தது. மரணத்தை வெல்ல முயல்கிறது. ஆத்மா அழியும் உடலை விட்டு அடுத்த உடலை நாடி மறுபடியும் பிறக்கிறது. ஆத்மாவுக்கு அடுத்த பிறப்பற்ற நிலை உலகிலில்லை. பிரபஞ்சத்திலுண்டு. அதை Non-birth, Non-becoming என்பார்கள். ஆத்மா அதனுலகில் பிறவியை வெல்லுதல் வேதம் நாடிய அமரவாழ்வு. ஆத்மா வளரும் பொழுது உடல் வளராவிட்டால் சிறுகுடும்பம் பெரிய குடும்பமாகும் பொழுது சிறுவீட்டை விட்டு பெரிய வீட்டுக்குப் போவதுபோல் ஆத்மா அடுத்த உடலை நாடுவது மறுபிறப்பு, புனர்ஜன்மம். குடும்பம் பெரியதாகும் பொழுது வீடும் பெரியதாக முடியுமானால் வீடு மாறவேண்டியதில்லை. பகவான் கூறும் அமர வாழ்வு அத்தகையது. அவ்வாழ்வு வந்தபின் மனிதன் பிறக்கிறான் என்று கூறுகிறார் (Evolution of Man).
ONENESS IS DIFFERENT FROM ONE
ஒன்று என்பது ஒருமையிலிருந்து வேறுபட்டது
நான் மனித குலத்தைச் சார்ந்தவன். மனிதர்கள்எத்தனை கோடியானாலும்எத்தனை கோடியானாலும் நான் அவர்களுடன் ஒன்றிய மனிதன் என்பது மாறாது. ஒன்று என்பதும் ஒருமை என்பதும் வேறு வேறான கருத்து. இது ஒரு பேனா. அது ஒன்று. ஆயிரம் பேனாக்களுடன் இதுவும் ஒரு பேனா என்பது இதற்குப் பேனா என்ற அம்சமுண்டுஎனக் காட்டுகிறது. ஒருமையைத் தவறாக ஒன்றுஎனப் புரிவது குழப்பம் விளைவிக்கும்.
கடவுள், சுதந்திரம், ஜோதி, அமரவாழ்வு
நூலின் முதல் அத்தியாயத்தில் முதற் பாராவில் மனிதன் தேடுவது கடவுள். அதை ஜோதியாகவும், சுதந்திரமாகவும், அமர வாழ்வாகவும் தேடுகிறான். (God, Light, Freedom, Immortality) என்கிறார். கடவுள் என்பது பிரம்மம். மனத்தில் அது ஜோதியாகவும், உடலின் ஆழத்தில் மரணமிலா வாழ்வாகவும், ஜீவனில் சுதந்திரமாகவும் காணப்படுகிறது. பூரணயோகம் எல்லாப் பகுதிகளிலும் கடவுளை நாடுகிறது. தவம் ஆன்மாவுக்கு மட்டும் விடுதலை மோட்சம் தேடுகிறது. இந்த இலட்சியத்தை ஆரம்பத்திலேயே பகவான் குறிப்பிடுகிறார்.
மாயை
இது நாமறிந்த சொல். “மாயமாய் மறைந்து விட்டது” என்கிறோம். மாயம் என்றால் புரியாதது, மறைவது, இல்லாதது என்பது வழக்கு. மயன் என்பவன் தெய்வலோக சிற்பிஎன அறிவோம். இந்தச் சிற்பி கட்டுவது கட்டடமில்லை. பாண்டவர் இந்திரப்பிரஸ்தத்தில் மாளிகைகள் கட்டியது மயன். மயன் கட்டிய கட்டடம் உலகம், சொர்க்கம். இவன் பிரம்மாவின் சிற்பி. உலகை ஏற்படுத்தியது மாயை என்பதை பகவான்
- மாயை - தெய்வீக மாயை - பிரம்மத்தின் ஜீவியம் என்கிறார்.
உலகம் மாயை என்பதை சங்கரர் கருத்து மூலம் ஏற்கின்றனர். சங்கரர் மாயை என்பதை இல்லாதது என்று கூறுகிறார். பரமாத்மா சத்தியம், உள்ளது, நிலையானது. மற்றவையெல்லாம் ஜீவாத்மா உட்பட மாயை இல்லாதன. அதனால், இல்லாத மாயையை விட்டகன்று, இருக்கும் பரமாத்மாவை நாடுவது அத்துவைதம்.
பகவான் மாயை என்பதை பிரம்மத்தின் ஜீவியம் என்றார். இது இரு உலகங்களையும் சிருஷ்டித்தது என்றார். அவற்றை அஞ்ஞான மாயை, ஞான மாயை (higher and lower Maya) எனப் பிரித்தார். அஞ்ஞான மாயை ஜீவாத்மாவுக்கே அர்த்தமில்லை என்கிறது. அஞ்ஞான மாயையை ஏற்றுத் தழுவி, அதைக் கடந்து தெய்வீக மாயையை - higher Maya, ஞான மாயை - ஏற்க வேண்டும் என்கிறார். அஞ்ஞான மாயையும், தெய்வீக மாயையும் கருத்தில் சந்திக்குமிடத்தை நாம் அறிவது அவசியம் என்கிறார் பகவான். அது அஞ்ஞானம், ஞானமாகுமிடம். அஞ்ஞானமும், ஞானமும் சேர்ந்த முழுமை பூரண யோக அடிப்படை. அடிப்படையைக் கருதினால் அர்த்தம் அர்த்தபுஷ்டியாகும். சிருஷ்டியின் இரகஸ்யம் (key)தெரிந்து விட்டது. எந்தப் பூட்டில் இந்தச் சாவியைத் திறப்பது தெரியவில்லை என்கிறார். அந்த பூட்டு சிருஷ்டி. சிருஷ்டியின் முழுமையை அறிவது தெய்வீக மாயையும், அஞ்ஞான மாயையும் எண்ணத்தில் சந்திக்குமிடம். இக்கருத்து ‘தெய்வீக மாயை’ என்ற அத்தியாயத்தின் கரு, சூட்சுமம், இலட்சியம், இரகஸ்யம். இதன் வழி பகவான் சங்கரர் அத்துவைதத்தைக் கடந்து வருகிறார். புத்தரைக் கடந்து வந்த சங்கரரை பகவான் கடந்து வந்த வாயில்கள் அநேகம். அதனுள் முக்கியமானவற்றுள் இது ஒன்று.
ஜீவியம், பிரகிருதி, இயற்கை, புறம், சலனம்
ஜீவன் செயல்பட ஜீவியம் உதவுகிறது.
புருஷன் பிரகிருதியால் செயல்படுகிறான்.
இறைவனின் கருவி இயற்கை.
அகம் புறமாக வெளிப்படுகிறது.
அமைதியின் செயல் சலனம்.
வாய் செயல்படுவது பேச்சு.
உடலின் அசைவு செயல்.
ஒரு நிலை அடுத்த நிலைக்குப் போகும் பொழுது அதன் பெயர் நிலைக்கேற்ப மாறுகிறது. பெயர் எதுவானாலும் கருத்து ஒன்றே. பிரம்மம் செயல்பட மாயை உதவுகிறது. மாயை பிரம்மம் செயல்பட உதவும் அடுத்த நிலைக் கருவி. இவை தத்துவம் பயன்படுத்தும் சொற்கள். எனவே மாயை என்றாலும் ஜீவியம் என்றாலும் ஒன்றேயாகும். அகம் புறமானதால் - பிரம்மம் செயல்பட முடிவு செய்ததால் -பிரம்மத்தின் அகம் பிரம்மம், அதன் புறம் சிருஷ்டி. சிருஷ்டிக்கு இரகஸ்யம் அகம், புறமாவது. அது பிரம்மம் எடுத்த முடிவு. பகவான் கூறுவது, பிரம்மம் வேறு, உலகம் வேறு, எப்படி உலகம் சிருஷ்டிக்கப்டது எனத் தெரியவில்லை என்பதன் முதற்பலன்,
- நம் வாழ்வு கர்மத்திற்கும், காலத்திற்கும் கட்டுப்பட்டது.
- நாம் பிரகிருதியை மட்டும் அறிந்து, புருஷனிலிருந்து எப்படி பிரகிருதி எழுந்ததுஎன அறியாவிட்டால் கடைசிக் கட்டமான சட்டம் கர்மம். அசையாத புருஷன், அசையும் பிரகிருதியாயிற்று என்று அறிந்தால், முடிவான சட்டம் ஜீவன். ஜீவனுக்குக் கர்மமில்லை. காலம் ஜீவனைக் கட்டுப்படுத்தாது. உலகம் பிரகிருதியில் வாழ்வதை பகவான் ஜீவனுக்கு - புருஷனுக்கு - மாற அழைக்கிறார்.
- இதன் இரகஸ்ய சூட்சுமம் முழுமையிலுள்ளது. ஆபீசில் அதிகாரியின் சட்டத்திற்கு ஊழியர் கட்டுப்பட்டவர். 10 நிமிஷம் வெளியே போக உத்தரவு வேண்டும். அதிகாரிக்கு உத்தரவு தேவையில்லை. நாம் ஊழியராகவோ, அதிகாரியாகவோ இருக்கும் (choice)முடிவு நம்முடையது.
கம்பனியில் சிருஷ்டி
இறைவன் என்பது அனந்தம், அனைத்தையும் தன்னுட் கொண்டவன், அவனன்றி அணுவும் அசையாது, உலகமே அவன், அவனைக் கடந்து எதுவுமில்லை, அவனில் இல்லாதது அவனியிலில்லை என நாம் கூறுகிறோம். இதை தத்துவமாக
- இறைவனை அனந்தம் (infinity) என்கிறார்.
- இறைவனை அனந்தம் எனக் கூறியவர் உலகிலுள்ள அனைத்தும், அணுவும், அனந்தம் என்கிறார்.
- அது உண்மையானால் அணுவினின்று அனந்தம் வெளிவரும். வாழ்வை இறைவனுக்கு ஏற்ப வாழ்ந்தால் நமக்கு ஏழ்மை, பஞ்சம், பற்றாக்குறையில்லைஎன ஆகும். இதை Practical concept of infinityதொட்டனவெல்லாம் பொன்னாக வேண்டும் என்று அறியலாம். வாழ்வு சுபிட்சமாவது வாழ்வு தெய்வமாவது.
- இறைவனில் அனைத்தும் அனைத்துள் உள்ளது (all is in all) அதை மாயை சிருஷ்டியாக மாற்றுகிறது. இங்கு அனைத்தும் ஒன்றிலும், ஒன்று அனைத்துள்ளும் உள்ளன, (all is in each, each is in all.)
கம்பனியின் முதலாளி இறைவன். கம்பனி உலகம். கம்பனியெனில் பணம், சரக்கு, அதிகாரம், சட்டம், சம்பளம், போனஸ், இலாபம், நஷ்டம் எனப் பல உண்டு. அவ்வளவும் முதலாளியுள் உள்ளன. பணமே சரக்கு, சரக்கே இலாபம், இலாபமே நிர்வாகம்என அனைத்தும் அனைத்தில் உள்ளன. முதலாளி கம்பனியானபின் பணம்என்பது சரக்காகவும், சட்டமாகவும், ஒழுங்காகவும், உற்பத்தியாகவும் காணப்படுகிறது. அதேபோல எதுவும் அனைத்துள் உள்ளது. அனைத்தும் இதனுள் காணப்படுகிறது சிருஷ்டியில் இதைச் செய்வது மாயை. கம்பனியில் இதைச் செய்வது முதலாளியின் செயல். அதை முதலாளியின் ஜீவியம் எனலாம்.
புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும்
நாட்டில் ஒரு புதுச் சட்டம் ஏற்பட நாம் நினைத்தால், பலருக்கு அது நினைவாகவே இருக்கும். சிலருக்கு அதைச் செய்ய முடியும். எவ்வளவு நாளில் அது முடியும்என்பது அவர் யார்என்பதைப் பொருத்தது. சிறிய மனிதனுக்கு நெடுநாளாகும். பெரிய மனிதனுக்கு சீக்கிரம் முடியும். சிறிய மனிதன், பெரிய மனிதன், மக்கள் அனைவரும் புறம், சர்க்கார் அகம். பிரதமர் அகத்தின் மையம். வெளியிலுள்ள மனிதர் பிரதமரானால், எண்ணம் உடனே சட்டமாகும்.
வாழ்வு மனத்தையும் உடலையும் இணைக்கும் லோகம்
உடல் உணரும் உணர்ச்சிகளை வாழ்வு மனத்திற்குக் கூறி அவ்வுணர்வுகளை எண்ணமாக மாற்றுகிறது. அந்த எண்ணத்திற்கு உடல் கட்டுப்படுகிறதுஎன்பது நம் அனுபவம். காற்று சில்லென வீசினால் உடல் குளிருகிறது. உடல் ஜடமாக இருந்தால், அது குளிரால் வாடும். என்ன செய்வதுஎன உடல் அறியாது. ஆடு அதுவும் செம்மறி ஆடு மடமைக்குப் பெயர் போனது. ஓர் ஆடு தவறி பள்ளத்தில் விழுந்தால், அதன் பின் எல்லா ஆடுகளும் பள்ளத்தில் விழும். என்ன செய்கிறோம் என அறியாமல், அறிய முடியாமல் செய்வது அறியாமை, மடமையாகும். நமக்கு மனம்என ஒன்றில்லையெனில், வாழ்வுமில்லா விட்டால், உடல் குளிரால் நடுங்கினால், என்ன செய்வதுஎன அறியாது. நடுங்கிக் கொண்டேயிருக்கும். உணர்ச்சிஎன்பது உயிருக்குடையது. நாம் அதை வாழ்வு என்கிறோம். காற்று சில்லென வீசினால் உணர்ச்சி அறிவுக்கு அதை அறிவிக்கிறது. அறிவு அவ்வுணர்வை எண்ணமாக்கி, எழுந்து கதவைச் சாத்து என உத்தரவிடுகிறது. உயிர், வாழ்வு என்பதன் தன்மை,
- உடலையும், மனத்தையும் இணைப்பதாகும்.
- இணைப்பதன் மூலம் உடலை மனத்தின் அதிகாரத்துள் கொண்டு வருவதாகும்.
காலம், இடம்
காலம், இடமில்லாமல் உலகமில்லை. நாம் சிந்தனையிலாழ்வது கற்பனை. இறைவன் கற்பனை செய்தால் அகத்தில் எழுவது காலம், புறத்தில் எழுவது இடம்.
- காலம் இறைவனின் கற்பனை.
- காலம் அகம், இடம் புறம்.
SPIRITUAL RANGES OF MIND
தெய்வீக மனம், ஆன்மீக மனம் என்பவை நான்கு நிலைகளில் அடுக்கடுக்காக அமைந்துள்ளன
- ஜடமான உடல், சக்திமயமான உயிர் (பிராணன்), அறிவின் உறைவிடமான மனம், மௌனமாய் சிந்திக்கும் முனிவர் மனம்,ஞானதிருஷ்டியுள்ள ரிஷியின் மனம், நேரடி ஞானம்பெற்ற யோகியின் மனம், தெய்வங்கள் பெற்றுள்ள தெய்வீக மனம், சத்தியஜீவியம்பெற்ற சத்தியஜீவியம், ஜீவியம், ஜீவன், பிரம்மம் ஆகியவை மனித ஜீவனின் பகுதிகள். அது போக இருண்ட பாதாளம், அதைக் கடந்த ஜடமான இருள், நம்மைச் சூழ்ந்துள்ள சூழலின் ஜீவியம், நம் கரணங்களிடையே சூட்சுமமாக நிலவும் ஜீவியம் ஆகியவையும் நம் ஜீவனுக்குரிய பகுதிகள் (Parts of the Being) கை, கால், கண், மூக்கு, இதயம், ஈரல் போன்றவை உடலின் உறுப்புகள் (Parts of the body). அதேபோல் ஜீவன், மனித ஜீவனுக்கு இத்தனைப் பகுதிகள் உண்டு. அவற்றுள் மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடையேயுள்ள நான்கு நிலைகளை ஆன்மீக மனம்என பகவான் பெயரிட்டழைக்கிறார். முனிவர் மனத்திலிருந்து சத்புருஷன்வரை உள்ள பகுதிகளை நாம் அறிய முடியவில்லை என்பதால் அவற்றை Superconscient பரமாத்மா எனக் குறிப்பிடுகிறார்.
ஜீவியம் என்பது Consciousness. சிருஷ்டிக்குரிய முறைகள் மூன்று. அவை தன்னிச்சையாக சிந்திப்பது (Self-conception), தன்னைத் தானே அளவிட்டுக் கொள்வது (Self-limitation), தன்னைத் தன்னுள் கிரகிப்பது (Self-absorption) என்பவை. ஜீவியம் தன்னைத் தன்னுள் கிரகித்துக் கொண்டால் ஜீவியம் அறிய முடியாத நிலை ஏற்படுவதை Superconscient பரமாத்மா என்ற நிலை எழுகிறது. எந்த நிலைக்கும் எதிரான நிலையுண்டு என்பதால் inconscient ஜட இருளும் ஏற்படுகிறது. ஜட இருளுக்கும் சக்தியுண்டு. அது அளவு கடந்த சக்தி. உலகம் அதனால் இயங்குகிறது. அது ஜடம், இருண்டது, ஆனால் சக்தியுடையது, இயங்க வல்லது. அந்த இயக்கமே பூவுலக வாழ்வு, மனித வாழ்வு. இங்கு ஆன்மீக மனம் என்ற 4வாழ்வு, மனித வாழ்வு. இங்கு ஆன்மீக மனம் என்ற 4 நிலைகளை மட்டும் விளக்குவோம்.
1) முனிவர் மனம் - இது நம் மனத்தைவிட ஏராளமான சக்தியுடையது. சிந்திக்காமல் புரியும் சக்தியுடையது. நம் மனம் அறிவால் செயல்படுவது. புலன்களால் நம் மனம் உலகையறியும். சிந்தனையால் புரிந்து கொள்ளும். இன்று உலகில் நாம் காணும் விஞ்ஞான விந்தைகளை எல்லாம் உற்பத்தி செய்தது நம் மனம், மனித மனம். முனிவர் மனம் மௌனம் காப்பது. பார்த்தவுடன் அறியும் பாங்குடையது.சிந்தனை அறிவின் கருவி. முனிவர் மனம் சிந்தனையற்ற மௌனமுடையது. Silent Will சக்தி வாய்ந்தது. அதன் உறைவிடம் முனிவர் மனம்.
• சிந்தனை அறிவின் ஊற்று.
• சிந்தனையற்ற மௌனம் பெரிய ஊற்று.
2) ரிஷியின் மனம்
மனிதச் சிந்தனையை முனிவர் கடந்து மௌனத்தில் உறைந்து பெரிய ஞானம் பெறுகிறார். ரிஷி மௌனத்தைக் கடந்து ஒளியை நாடி திருஷ்டி பெற்று, ஞானத்தை ஞானதிருஷ்டியாக அடைகிறார்.
3) யோகியின் மனம்
அறிவின் கருவிகள் பல. மனிதனுக்குச் சிந்தனை, முனிவர்க்கு மௌனம், ரிஷிக்கு ஜோதி. யோகிக்கு எந்தக் கருவியும் தேவையில்லை. அவர் ஞானத்தை நேரடியாகப் பெறுகிறார். அதை நேரடி ஞானம் intuition என்கிறார்.
4) தெய்வீக மனம்
மனிதனும், முனிவரும், ரிஷியும் கருவிகள் மூலம் ஞானத்தைப் பெறுகின்றனர். யோகி கருவியின்றி ஞானத்தைப் பெறுகின்றார். தெய்வத்திற்கு இவை எதுவும் தேவையில்லை. தெய்வீக மனம் ஞானத்தைப் பெறவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஏற்கனவே அங்கு ஞானம் உள்ளது. ஆனால் ஞானம் மட்டுமன்று, அத்துடன் அஞ்ஞானமும் கலந்துள்ளது. அதற்குக் காரணம் தெய்வீகமனத்தில் அகந்தையுள்ளது. தெய்வீக மனமானாலும், அது மனம். இது சத்தியஜீவியமன்று. தெய்வங்கள் சிலசமயங்களில் நம்மைப்போல் வம்பில் மாட்டிக் கொண்டு தவிப்பதுண்டு. விஷ்ணு வந்து காப்பாற்றுவார். விஷ்ணு தெய்வீக மனத்தின் சிறப்பான உச்சகட்டம். இது சத்தியஜீவியப் பிரதிநிதி. இதற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடையே பொன்மூடி ஒன்றுண்டு.
கிருஷ்ணாவதாரம் இந்நிலைக்குரியது . பிரம்மா இந்த லோகத்தைச் சேர்ந்தவர். அதனால் பிரம்மா உலகை சிருஷ்டித்தார்எனில் மனம் உலகை சிருஷ்டித்தது எனப் பொருள். இதன் திறன் infinityயை finite ஆக்குவது. அகண்டத்தைக் கண்டமாக்குவது. அதைக் கடைசிவரை செய்வதால் ‘துச்சேன’ என்று கூறப்படும் (infinitesimal)அணுவரை தெய்வீக மனம் பொருள்களைப் பிரிக்கும்.
சத்தியஜீவியம் சத்திய லோகத்திற்குரியது. நம் லோகம் அசத்தியமான லோகம். தெய்வீகமனம் சத்தியஜீவியத்தின் பிரதிநிதியாக நம் லோகத்திற்கு வந்துள்ளது.
தொடரும்..
- Login to post comments