06.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் (சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
20. எட்டு தலைகீழ் (reversal) மாற்றத்தை அறிவது.
தோல்வியே வெற்றி; வலிஆனந்தம்; எதிரி ஏற்றமிகு நண்பன்; அநியாயம் ஆண்டவனின் நியாயம்; நடப்பவை இறைவன் செயல் என்ற கருத்துகளை ஏற்பது.
21. துர்அதிர்ஷ்டம், பேராபத்து கொண்டு வருபவை வாய்ப்புஎன அறிந்து மகிழ்தல்.
1. | மேல்மனம் | கணவன் மனைவி பூசல். அன்பே வெறுப்பு. | முரண்பாடு உடன்பாடு. தடை வாய்ப்பாகும். |
2. | மேல்மனம் பொருள் | தோல்வி வெற்றிக்கு ஆரம்பம். நஷ்டமடையாமல் செல்வம் சம்பாதிக்க முடியாது. டைபாய்டிலிருந்து பிழைத்து ஊனம் மாறும். | லிங்கன் மனைவி கணவனை துடைப்பத்தால் அடித்து விரட்டினாள். சாக்ரடீஸ் மனைவி மலம் நிறைந்த பானையைத் தலையில் போட்டு உடைத்தாள். |
3. | உள்மனம் | உணர்ச்சி சூட்சுமமாகும். மனிதன் பேசுவதும் நினைப்பதும் வேறு வேறு. | அகல்யா இந்திரனை விரும்பினாள். பஞ்சகன்னிகைகளில் அவளொருத்தி. |
4. | உள்மனம் பொருள் | அகந்தை மனோமயப்புருஷனாகும். சிந்தனை மௌனமாகும். காலம் தன்னைக் கடக்கும். | நளாயினி சூரியனை நிறுத்தினாள். |
5. | அடிமனம் | உலகம் பிரபஞ்சமாகும். காலத்தை கடந்தது. மூன்றாம் நிலைக் காலமாகும். | அனுசுயா திருமூர்த்திகளை சிசுவாக்கியது. |
6. | அடிமனம் பொருள் | வலி ஆனந்தமாகிறது. | கிருஷ்ணன் பீஷ்மருடைய வலியை விலக்கியது. |
7. | வளரும் ஆன்மா | ஆனந்தம் நிரந்தரமாவது. அகந்தையும், மனோமயப்புருஷனும் (சைத்தியப்புருஷனாக) வளரும் ஆன்மாவாவது. | கோபிகைகள் கிருஷ்ணனுடன் செய்த லீலை. |
8. | வளரும் ஆன்மா பொருள் | தீமையும், வலியும் திருவுருமாறி அற்புதமாவது. பாதாளமும், பரமாத்மாவும் மனத்தில் சந்திக்கின்றன. | புலி தன்னைச் சாப்பிட விழைந்தது. |
. நஷ்டப்படாதவன் கோடீஸ்வரனானதில்லை.
. அடிக்கும் கையே அணைக்கும்.
. காய்க்கும் மரம் கல்லடி படும்.
. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
. ஆவாதவன் ஆபத்தில் உதவுவான்.
. கொலை செய்வாள் பத்தினி.
. அரிச்சந்திரன் பொய் சொல்ல மறுத்ததால் பட்டபாடு பெரியது,
ஆகியவை உலக வழக்கு. இந்த 8 தலைகீழ் மாற்றங்களை அடுக்கடுக்காக வரிசைப்படுத்திக் கூறுவது சிரமம். ஏனெனில் 4, 5 நிலைகளில் உள்ளவை 1, 2 நிலைகட்கும் வரும். மரபு ஏற்கும் கருத்து இது என அறிவது போதும். செயல்படுத்த தெளிவுவேண்டும். ஏதாவது ஒரு நிலையில் ஒரு விஷயம் தெளிவுபட்டால் மற்றவை புரியும். இரண்டு அரசியல் தலைவர்கட்கிடையேயுண்டான போட்டிக்குப் பலியானவருக்கு வாரண்ட் வந்தது. அதிலிருந்து தப்ப முடியாது என்றநிலையில் "நான் செய்த தப்புக்குத் தண்டனையை ஏற்கிறேன்'' என்றார் பலியானவர். தவற்றை மனம் ஏற்றதால், வாரண்ட் இரத்தாயிற்று. வாரண்ட்டைப் பிறப்பித்தவர் நண்பரானார். நண்பர் பலியானவரை உச்சிக்குத் தூக்கி வைத்துவிட்டார்.
நம் சொந்த வாழ்வில் ஏற்பட்ட நிகழ்ச்சி தெளிவாகப் புரியும். அதை மனம் உண்மையாக ஆராய்ந்து ஏற்றால் தெளிவு வரும்.
. பங்காளி சவால் விட்டிருக்காவிட்டால் நான் M.P.யாயிருக்கமாட்டேன்.
. என் பங்காளி மானேஜராக இருந்து என் கண்களில் விரலைவிட்டு ஆட்டினான். அதனால் M.L.A.ஆனேன்; மந்திரியுமானேன்.
. நாத்தனார் உயிரை எடுத்தாள். அதனால் அமெரிக்கா வர முடிந்தது.
. என் கல்யாணத்தன்று என் நாத்தனார், வேறு பெண்ணை தம்பிக்கு மணம் முடிக்க ஆர்ப்பாட்டம் செய்திராவிட்டால், என் கணவர் இவ்வளவு ஆதரவு தந்திருக்கமாட்டார். அதனால் மாமியார், தாயார் போல நடந்தாள். 60 ஆண்டுகட்குப் பின் என் மகன் பேராசிரியராக இருக்கிறான். கங்கணம் கட்டியவர் பிள்ளைகள் ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள்.
. என் உடன்பிறந்தவர் செய்த கேலியால் நான் பல நூறு கோடி வியாபாரம் செய்கிறேன். என்னைப் பாசமாக நடத்தியிருந்தால் நானும் அவர்களைப் போலத் திவாலாகியிருப்பேன்.
. தாயாரும், உடன்பிறந்தவரும் செய்த கொடுமையால் திருமணமாகாது என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வெளிநாட்டு வரன் வந்து நானே நாட்டைவிட்டு வந்துவிட்டேன்.
. எனக்கு விசாவை மறுத்தார்கள். பட்ட சிரமம் ஏராளம். இன்று 10வருஷத்திற்கு விசா கிடைத்துள்ளது. Visa on demand விசா ஏர்போர்ட்டில் டிக்கட் வாங்குவதுபோல் கொடுக்க சட்டம் பிறப்பிக்க யோசனை பிறந்துள்ளது.
. அமெரிக்கா என்றால் கேலிசெய்த உலகம் அமெரிக்காவைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது.
. சிஷ்யனைக் கொலை செய்ய முயன்ற குரு அவனுக்கே சிஷ்யனானார்.
நிலைமை மாறி, நமக்கு நல்லது நடக்க நாளாகும். மனம் மாறினால் நிலைமை மாறும். மனம்மாற க்ஷணம் போதும். மாற நாம் முடிவு எடுக்க நாளாவது அறியாமை. மேற்சொன்னவற்றைக் கருதினால், பகவான் கூறுவதை ஏற்றால், அறியாமை விலகும்; நாளாவது குறையும். எந்தப் பிரச்சினைக்கும் உரிய மனநிலை எது, அது எந்தச் செயல் வெளிப்படுகிறதுஎன அறிவது சிரமமில்லை. அச்செயலைத் தவிர்த்து,மனத்தை மாற்ற வேண்டும்.
22. முக்கியமான சிறிய நிகழ்ச்சிகளில் சிருஷ்டிச் சிறப்பை அறிவது (Small significant acts). சிறிய நிகழ்ச்சிகள் பெரிய காரியத்தைப் பூர்த்தி செய்வது உண்டு. அவை சொர்க்க வாயில். அவற்றைக் காணும் சூட்சுமம் தேவை.
. 1956-58இல் ஆசிரியர் தம் வீட்டில் வாழும் மாணவனை "நீ தொழிலதிபராக வேண்டும்'' என்பார். 1975இல் மாணவன் ஒரு கம்பனி முதலாளியானான். இன்று அவனது கம்பனியில் 15 அல்லது 20 பாக்டரிகள் உள்ளன. ஆசிரியர் கூறியது மாணவனுக்கு நினைவிருக்கிறது; ஆசிரியருக்கு நினைவில்லை. நினைவிலும் இல்லாத நிகழ்ச்சி நிதர்சனமாவதை அவர் 2 ஆண்டாக அடிக்கடி கூறியது காட்டுகிறது.
. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். எல்லா நிகழ்ச்சிகளையும் அறிவு புரிந்துகொள்ள முடியாது. அதனால் அனைவரும் புரிந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைச் சகுனம் என்றனர். நிறைகுடம், வாய்ச்சொல், சுமங்கலி, தேவடியாள், அழுக்கைச் சுமக்கும் வண்ணான், கழுதை கத்துவது ஆகியவை சுபசகுனங்கள். சுபசகுனங்களை ஏற்று, அபசகுனங்களை எச்சரிக்கையாகக் கொள்கிறோம். அன்பர்நிலை அதுவன்று. அபசகுனங்களை சுபசகுனமாக்கும் திறனும், சுபசகுனங்களை உயர்த்தும் திறனும் சமர்ப்பணத்திற்குண்டு. . சூழலை அறிய முயல்வது நல்லது.
. விவசாயம் செய்யும் அன்பருக்குப் பெரிய புத்தகக்கடை நண்பர் 15 அல்லது 20 குழந்தைப் புத்தகங்களை அன்பளிப்பாக அனுப்பினார். நன்றியுடன் பெற்றுக்கொண்டார். அவற்றுள் "விவசாயக் கையேடு' என்ற சர்க்கார் பிரசுரமிருந்தது. "என்னைத் தேடி இது வரக் காரணம் என்ன" என்று கருதி அதைப் புரட்டிப் பார்த்தார். அவர் செய்யும் விவசாயத்திற்கு அரசு பண உதவி செய்யக்கூடிய பார்லிமெண்ட் சட்டம் நிறைவேறியதைப் புத்தகம் கூறிற்று. அது 1968. பாங்க் விவசாயத்தில் பங்குகொள்ளாத காலமிது.
. காமராஜ் அரசியலில் 1930இல் நுழைந்தார். 1960இல் அகில இந்தியப் பிரசித்தி பெற்றார். காந்திஜி 1915இல் இந்தியா வந்தார். இந்தியா புகழ்மாலை சூட்டி வரவேற்றது. 1919இல் அகில இந்தியாவும் அவரை ஏற்றது.
. ஒரு காரியம் 50 ஆண்டில் பூர்த்தியாகும்.
சூட்சுமம் தெரிந்தால் 5 ஆண்டிலும் பூர்த்தியாகும்.
. நம் வாழ்வு அனைத்தும் சூட்சுமமானது.
சிறு விஷயங்களை அலட்சியம் செய்யாமல் கவனித்தால் புரியும்.
சூட்சுமம் புரிந்தால், சூட்சுமத்திற்கேற்ப நடக்க மனம் மாற வேண்டும்.
சூட்சுமம் சொர்க்க வாயில், மனமாற்றம் கருவி.
சத்தியம் மனமாற்றத்தை நிலைபெறச் செய்யும்.
எதிர்காலத்தை இன்று நடப்பவை தவறாது காட்டும்.
அதை அறிய முயல்வது ஆபத்தை விலக்க உதவும்; அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த உதவும்.
நம் விருப்பத்தை ஒதுக்கி, நடப்பவற்றை அன்னைச் செயலாக ஏற்பது சரியான மனநிலை.
5 அல்லது 10 ஆண்டாக அரைகுறையாக உள்ள பெருங் காரியத்தை அதுபோல் இன்று கவனித்து, மனம் மாறி, சத்தியமாகப் பின்பற்றினால் வளரும் தாமதம் விலகி, முடிவு உடனே நம்மை எதிர்கொள்ளும்.
எரிச்சலைத் தவிர்த்து, நம்மை வலியுறுத்தாத பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும்.
23.நீ பாடும் சிறப்பான பாட்டை மேலும் சிறப்பாகப் பாட முயலுதல்.
. ஆண்டவனை நோக்கி ஓர் அடி வைத்தால் ஆண்டவன் நம்மை நோக்கி 10 அடி எடுப்பான்.
. ஆண்டவனை நோக்கி ஓர் அடி எடுப்பது என்றால் என்ன?
. வாழ்வு புனிதமானது, அதனால் வாழ்வு ஆண்டவன். வாழ்வு செயலாலானது, அதனால் செயல் ஆண்டவன். சிறப்பு இறைவன். அதனால் சிறப்பை நாடுவது ஆண்டவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைப்பதாகும்.
. இதெல்லாம் என்னால் முடியாதுஎன எவரும் கூற முடியாது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
பாட்டுப் பாடுவதும், நாட்டை ஆள்வதும் இறைவனுக்குச் சமம்.
பாட்டின் தரம் உயர்வது எவரும் செய்யக்கூடியது.
(செயலின் தரம் உயர்வது இறைவனை நாடுவது).
பாட்டு உதாரணம். எந்தச் செயலுக்கும் இது பொருந்தும்.
மேலும் சிறப்பாக நாம் பாடும் பாட்டைப் பாட எவரும் விரும்புவர்.
ஆண்டவனை நாடுவது ஆனந்தமான செயல்; கடுமையான விரதமன்று.
கடுமையான விரதத்தைத் தவிர்த்து இனிமையான சிறப்பை நாடுவது ஸ்ரீ அரவிந்தம்.
அம்முயற்சிக்கு முடிவில்லை.
தானே ஓரளவுக்குச் செய்யலாம்.
மீதியுள்ளதை அடுத்தவர் உதவியால் சாதிக்கலாம்.
பிறர் உதவியை நாடும்பொழுது பிறரை இறைவனாகக் கொள்வதால்
அதுவே பெருமுயற்சியாகும்.
சங்கீதத்தில் குரல் ஒரு பகுதி, பாட்டு அடுத்த பகுதி, சாகித்தியம்
அடுத்தது, பயிற்சி பெரும்பகுதி, நமக்கு இனிப்பது ஒன்று,
அடுத்தவர் ரசிப்பது அடுத்தது, பலரும் பாராட்டுவது முடிவானது.
குரல் இனிக்க நாம் செய்யக்கூடியதுண்டு.
குரலை அன்னையாக உருவகப்படுத்தினால் குரல் இனிமை கூடும்.
பாட்டின் கருத்தை அறியாமல் பாடுவதுண்டு.
அர்த்தம் புரிந்து பாடினால், கருத்து கண்டத்து ஒலியாகக் கணீரென ஒலிக்கும்.
சாகித்தியம் பெரிய சாஸ்த்திரம்.
அதை அறிவதற்கு முடிவில்லை.
ராகம் ஒரு சமுத்திரம்.
பயிற்சியை விரும்பி ஏற்க வாழ்க்கையில் கட்டுப்பாடு வேண்டும்.
பயிற்சிக்கும் பல மணி தேவை. அதற்கு வாழ்க்கை ஒத்து வர வேண்டும்.
வாழ்வு ஒத்துழைக்க மனம் இசைவது அன்னையை ஏற்பது.
பாடுவது வேறு, இனிப்பது வேறு.
பாட்டு இனித்தால் முடிவாக உடல் புல்லரிக்கும்.
நமக்கு இனிப்பது வேறு, அடுத்தவர் ரசிப்பது வேறு.
(ஐன்ஸ்டீன் கண்டது அவருக்கு மட்டும் புரிந்தது.
பகவான் வகுத்தது அவர் மட்டும் விளங்கிக் கொண்டது).
அடுத்தவர் ரசிக்க நாம் அடுத்தவர் மனம்மூலம் சிந்திக்க வேண்டும்.
உலகம் பாராட்ட உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும்.
எந்தக் காரியத்தையும் ஒரு படி உயர்த்த முடியும். அதன் முடிவு ஆண்டவன்.
24. சிறப்பாகச் செய்யும் சமையலை, மேலும் இனிப்பாக, சுவையாகச் செய்வது.
சமையல் வேலை எளிமையானது. பாத்திரம் தேய்ப்பதற்கு சற்று மேலானது.
சமையலுக்குச் சிறப்புண்டு.
ருசியான சமையலை இனிமையாகப் பரிமாற மனம் உயர்ந்திருக்க வேண்டும்.
சமையல் ருசி திறமையைப்பொருத்தது; இனிமை குணத்தைப் பொருத்தது.
நம்மவர் அதை இராசி என்பர்.
சமையலில் நல்ல பேர் வாங்கியவருண்டு.
அதன் தரத்தையும் உயர்த்த முடியும். அது ஒரு நுணுக்கமான கலை.
"பதமாகப் பழகுபவர்', "சமையல் பதம்' என்பவை உயர்ந்த தமிழ்ச் சொற்கள் (excellent Tamil idioms).
சாம்பார் செய்யும்பொழுது தண்ணீர் மாறினால் ருசி மாறும்.
Gas நின்று 5 நிமிஷம் கழித்து மீண்டும் ஏற்றினால் அது சாம்பாரின் ருசியை மாற்றவல்லது.
உப்பு சற்று குறைவாக இருப்பதால் இரண்டாம் முறை சேர்த்து சரி செய்தால் சாம்பாரில் (original taste, ரஸா) மணம் மாறும்.
சாம்பாருக்குரிய பருப்பின் தரம் எவ்வளவு நாள் பழகியது, செய்யும் பாத்திரம், எரியும் அடுப்பு, துழாவும் பாணிஎன ஒவ்வோர் அம்சமும் ருசியை நிர்ணயிக்கவல்லது.
அவை அனைத்தையும் சிறப்பாக உயர்த்த ஒரு பட்டமளிப்பு விழாவை நடத்த எடுக்கும் முயற்சியை மனத்தால் எடுக்க வேண்டும். அது கலையின் சிகரம்.
இதுவரை பொருள்; அடுத்தது மனம்.
சமையல் ருசிக்க மனம் இனிக்க வேண்டும்.
வீட்டில் 5 பேர் சாப்பிட்டால் 5 பேருடைய தேவைகளும் மாறுபட்டிருக்கும்.
சாப்பிடுபவர் விரும்பும் உப்பு, காரம், சூடு, பதம் செய்பவருக்குத் தானே தெரிவது psychic qualityஆன்மாவின் சுவை.
செய்தவர் வயிறு, சாப்பிடுபவர் சாப்பிடும்பொழுது குளிர்வது நல்ல சமையலுக்கு அடையாளம்.
பொருள் சிறப்பாக இருந்து, மனம் மணமாக இருந்தால் அன்றாடச் சாப்பாடு அமிர்தமான விருந்தாகும்.
சமையல் செய்ய விரும்புகிறவர்க்கு உரிய யோகப் பயிற்சியிது.
சமையல் தரத்தை இழைஇழையாக உயர்த்துவது அப்பயிற்சி.
சமையல் உச்சியைத் தொட்டால், எடுத்துக்கொண்ட காரியம் முழுவதும் குறைவற நிறைந்து பூர்த்தியாகும்.
எந்த வேலையையும் சிறப்பாகச் செய்தால் சிறப்பு நிறையும்பொழுது நம் வாழ்வில் உள்ள திட்டம் project அபரிமிதமாகப் பூர்த்தியாகும் என்பது சட்டம்.
சமையலில் நாட்டம் உள்ளவர்க்குரிய பயிற்சி இது.
சமையல் உண்மையிலேயே ஒரு சிறந்த கலை.
சிறந்த கலையை உன்னதமாக்கி உயர்த்துவது வாழ்வை யோகம் ஆக்குவதாகும்.
25. மனம் எழுப்பும் தவறுகளை, தவறாது நேர்படுத்துதல்.
மனிதனுக்குப் பிரச்சினையில்லை; அவனே விரும்பி ஏற்படுத்துவதே பிரச்சினை என்பது ஆன்மீகச் சட்டம்.
சுமார் 100 ஆண்டுகட்குமுன் நியூயார்க்கில் கூலிக்காரர் சில மாதங்களில் மத்தியதரக் குடும்பமாயினர். அங்கு கூலி 10 மடங்கு அதிகம். வரலாற்று ஆசிரியர் ஒருவர் "இன்று ஒருவர் இங்கு பட்டினியிருந்தால், அதற்கு அவரே பொறுப்பு'' என்றார். சாதாரண மனிதனுக்கு வாழ்வில் ஒரு முறையும் வாராத வாய்ப்புகளை அன்னை பல முறையும் அடுக்கடுக்காக வழங்கும்பொழுது, மனிதன் அவ்வாய்ப்பை இழந்தால் எவரும் அவருக்குத் துணைபோக முடியாதுஎன நான் கூற விரும்புகிறேன்.
பெரிய வாய்ப்பு வரும்பொழுது மனம் தவறாது இதுவரை இல்லாத தவற்றைச் செய்யத் துடிக்கும்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தவரை பட்டமளிப்பு விழாவில் பேச அழைத்தால், அந்த நேரம் அவருக்கு எதிர்வீட்டு மனிதனின் அல்பத்தனத்தைப் பற்றிப் பேசத் தோன்றும்.
சொல் வாயைவிட்டு வெளிவந்த நேரம் அழைப்பு ரத்தாகும்.
அன்பர்கட்கு வாராத வாய்ப்பில்லை; அவர்கள் தவறவிடாதவையுமில்லை.
. 1½இலட்சத்திற்கு மேல் ஆர்டர் வாராத கம்பனிக்கு 2½ கோடி ஆர்டர் வருவது.
. முனிசிபல் கௌன்சிலராக நிற்க முடியாதவருக்கு M.P.. சீட் வருவது.
. எந்தப் பத்திரிகையிலும் ஓய்வு பெறும்வரை எழுதியறியாதவர்க்கு புத்தகம் எழுதும் வாய்ப்பு வருவது.
. கலெக்டர் ஆபீசிற்குப் போய் வரும்பொழுது தாசில்தாருக்குக் கும்பிடு போடுபவர்க்கு முதல்மந்திரியிடம் அணுகும் நேரம் வருவது.
. டெல்லிவரை போகாதவர் அமெரிக்கா போவது. அதை 20 முறையும் ஏற்பது.
இதுபோன்ற நேரங்களில், அதே நேரம், குணம் எழுந்து நேர்எதிராகச் செயல்படும். அப்பொழுது,
. டிரைவரைக் காரமாகத் திட்டத் தோன்றும்.
. காபியில் சர்க்கரை சரியில்லையென தூக்கி எறிவார்.
. தனக்குப் பேர் உதவி செய்பவருக்கு ஒரு (motive) காரணம் கற்பிப்பார்.
. டஜன் 85 ரூபாய்க்கு வழக்கமாக வாங்கும் பழத்தை 5 ரூபாய் குறைத்து அதிக பேரம் செய்வார்.
. பையன் சினிமாவுக்குப் போகப் பணம் கேட்டால் பெருமை பிடிபடாமல் 1000 ரூபாய் எடுத்துக்கொடுப்பார்.
. இதுவரை வாயில் வாராத மட்டமான சொல் தானே வெளிவரும்.
மனம் அவசரப்படும், பொறாமைப்படும், குதர்க்கமாகப் பேசும்,பேராசைப்படும், நமக்கு உரிமையில்லாததைக் கேட்கும், பிறர் உரிமையை பறிக்கத் துடிக்கும், கேலியாக நினைக்கும். Self-awareness தன்னை அறிவது மனத்தை நமக்கு விளக்கும். இவை பிறவியுடன் வந்ததால் நம்மை மீறிச் செயல்படுபவை. இவற்றை மனத்தால் கட்டுப்படுத்த முடியாது. அன்னையிடம் விட்டுவிட்டால் அன்னை கட்டுப்படுத்துவார். கடைத்தெருவில் சிறுகுழந்தையை கன்ட்ரோல் செய்வதைப் போன்ற கடுமையான காரியம். பல சிறுகுழந்தைகள் அடக்கமாக இருப்பதையும் நாம் காண்கிறோம். அதுபோல் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதை அன்னையால் செய்தால் நம் முயற்சியின்றி மனம் தானே அடங்கும். அதைச் செய்தபின்,
1) இன்றுள்ள எந்தப் பிரச்சினையும் இருக்காது.
2) இன்றில்லாத அத்தனை வாய்ப்புகளும் ஒரே நேரம் வரும்.
தொடரும்...
ஸ்ரீ அரவிந்த சுடர்
மனிதனின் நிலைகள் பல. மேலெழுந்த மனதிலும் ஆழ்ந்த உணர்விலும், சூட்சும உடலிலும், உணர்விலும், உடலிலும், காரணதேகத்திலும், அகந்தையிலும், சைத்தியப்புருஷனிலும், புருஷனிலும், ஈஸ்வரனிலும் மனிதன் நிலைபெற்றிருக்கிறான். இந்த எல்லா நிலைகளிலும் அன்னை இருக்கின்றார். நம் அழைப்பின் திறனுக்கேற்ற நிலையிலிருந்து அன்னை பதில் அளிக்கிறார். ஆழ்ந்த நிலைக்குப் போனபின்னும் மேல்மனத்தின் பழக்கம் அங்கும் வருமானால், அந்தக் குறையால் அழைப்பின் திறன் குறையும்.
அன்னையில்லாத இடமில்லை.
பழைய பழக்கம் அழைப்புக்குத் தடை.
- Login to post comments