04.பின்தொடரும் வெற்றியின் அறிகுறி
பின்தொடரும் வெற்றியின் அறிகுறி
N. அசோகன்
வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையிலுள்ள பல இரட்டைகளில் முக்கியமானவை. "எப்பொழுதுமே தோல்வியைக் கண்டதில்லை' என்று எவருமே கூற முடியாது. அதே சமயத்தில் "தோல்வியைத் தவிர வேறெதையும் சந்தித்ததில்லை' என்று எவரும் சொல்ல முடியாது. வெற்றி-தோல்வியின் விகிதங்கள் மாறுபடலாமேயொழிய இரண்டும் எவர் வாழ்க்கையிலும் கலந்துதானிருக்கும். வெற்றி அதிகமாகவும்,தோல்வி குறைவாகவும் இருக்க வேண்டுமென்றுதான் விரும்புவோம்.
வாழ்க்கையில் நம் நிலை உயர, உயர நம்மைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் அந்த அளவுக்கு மாறுகின்றன. அரசாங்க ஊழியர்களுக்கு ஆண்டில் சில நாள்கள் casual leave என்று கொடுக்கப்படுகிறது. அமைச்சரவையில் அமைச்சராகச் சேரும்பொழுது வேலை நாள்களைப் பற்றிய சட்டம் மாறுகிறது. அமைச்சர் தம்முடைய வேலையின் தேவைக்கேற்ப நாள்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஏழைகளுக்குக் கடன் கொடுக்கின்ற வங்கி, பணக்காரர்களிடமிருந்து டெபாசிட் தேடுகிறது. வாழ்க்கையின் தரம் உயரும்பொழுது தேவைகளும், சூழ்நிலைகளும் மாறுகின்றன.
மாறுபாடு கொண்டுள்ள இருவர் நீதிமன்றத்திற்குச் செல்லும் பொழுது ஒருவர் வெல்வதும், அடுத்தவர் தோற்பதும் தவிர்க்க முடியாதவை. ஆனால் தீர்ப்புக் கூறும் நீதிபதிக்கோ வெற்றியோ, தோல்வியோ இல்லை. அவருடைய கடமை, தம்மிடம் வந்துள்ள வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதே.
வாழ்க்கை நிலைகளை நாம் கீழ்நிலை, சராசரி நிலை மற்றும் உயர்நிலைஎன்று மூன்று விதமாகப் பிரிக்கலாம். சராசரிக்குக் கீழ்நிலையில் வெற்றி, தோல்வி இரண்டுமே கலந்திருக்கும். சராசரிக்கு மேல்நிலையில் தோல்வி என்பதில்லை. அங்கே சிறிய வெற்றியிலிருந்து பெரிய வெற்றிக்குப் போவதுஎன்பது மட்டுமே இருக்கிறது.
ஆன்மசக்தியைக் கண்டுபிடித்துவிட்டவர்கள் மேற்கண்ட வாழ்க்கை நிலைக்குச் செல்கிறார்கள். இந்நிலைக்குச் சென்று விட்டவர்களுக்குத் தோல்விஎன்பது பின்னால் வருகின்ற பெரு வெற்றியைக் காட்டுகிறது.
. ஒரு பொருளுக்கான விநியோக உரிமையைப் பெற முடியாதவர் அப்பொருளைத் தயாரிக்கும் கம்பெனியிலேயே டைரக்டராகச் சேர்ந்தார்.
. மூன்று வங்கிகளில் எழுத்தர் வேலைக்கு நிராகரிக்கப்பட்டவர், அவற்றைவிட, பெரிய வங்கியில் அதிகாரியாகத் தேர்ந்-தெடுக்கப்பட்டார்.
. ரூ.25,000 கடன் கேட்டு வந்த மனுவை உள்ளூர் நிலவுடைமை வங்கி ஏற்கத் தயக்கம் காட்டியது. அதன் பின்னர் தேசியமயம் ஆக்கப்பட்ட ஒரு பெரிய வங்கி அதே மனுவை ஏற்று ரூ.1,50,000 கடன் வழங்க முன்வந்தது.
இது எப்படிச் சாத்தியமாகிறதுஎன்று கேட்கலாம். ஒரு போட்டியில் தோற்பவர், மற்றவர் முந்திக்கொண்டு போவதைப் பார்க்கிறார்.முன்னால் போகின்றவர்களைச் சென்றடைய வேண்டும் என்றால், பின்தங்கியவர் அவர்களைவிட அதிக வேகமாகச் செயல்பட வேண்டும்.அவர்களை எட்டிவிட்ட பிறகும் அதே வேகத்தைக் கடைப்பிடித்தார் என்றால், அவர்களைத் தாண்டியும் செல்கிறார். இத்தகைய வாய்ப்பை உணர்த்துவதற்காக வாழ்க்கை சிலரைக் கீழே தள்ளுகிறது. இத்தகைய உண்மையை அறிந்தவர்கள், வாழ்க்கை கீழே தள்ளுவதற்கு முன்பே விழித்துக் கொள்ளுகிறார்கள். இப்படி விழித்துக்கொள்பவர்களைப் பாராட்டி, வாழ்க்கை அவர்களுக்குப் பெரிய பரிசைத் தருகிறது. நம்முடைய விழிப்புணர்வு அதிகரிக்கும் வரையில் வாழ்க்கை காத்திருக்கிறது. அந்த விழிப்பு வாராவிட்டால் ஒரு தோல்வியைத் தந்து, அவ்விழிப்பை வரவழைக்கிறது. உண்மையில் வாழ்க்கையில் தோல்வியில்லை; வெற்றியும், பெருவெற்றியுந்தான் உள்ளன. வெற்றி-தோல்வி என்பவை மனிதனுடைய கருத்துகள். மேல் நிலையில் இரண்டுமே இல்லை. உயர்ந்த ஆன்மீக நிலையில் வாழ்க்கை ஆனந்தமயமாக உள்ளது. ஆன்மீக ஆனந்தத்தை அன்னை நமக்கு வாழ்க்கையில் பேரின்பமாக அளிக்கிறார்.
ஆன்மீக வாழ்க்கை என்பது வேறு. வாழ்க்கையில் ஆன்மாவைக் காண்பதுஎன்பது வேறு. வாழ்க்கையில் ஆன்மாவைத் தேடும்பொழுது தோல்வியைச் சந்தித்தால், பின்வருகின்ற பெருவெற்றிக்கு அது அறிகுறி என்று நிச்சயம் நம்பலாம்.
****
ஸ்ரீ அரவிந்த சுடர் புரிய வேண்டும் என்பது அறிவின் ஆர்வம். உடமையாக்கிக் கொள்ள வேண்டும்என்பது உயிரின் ஆர்வம். இடைவிடாது திரும்பத் திரும்ப ஒன்றையே செய்வது உடலின் ஆர்வமான பழக்கம். புரிய வேண்டும்என்ற அவசியமில்லை என்றால் மனத்தின் எல்லையைக் கடக்க முடியும். சொந்தமாக்கிக் கொள்ள முயல்வதைத் தவிர்த்தால், ஆசை அழியும். செய்ததையே திரும்பத் திரும்பச் செய்ய விருப்பமில்லைஎன்றால் உடலின் பிடியிலிருந்து விடுபடலாம். இவை, பிரகிருதியின் பிடியில் இருந்து மனிதனை விடுவித்து ஆன்மாவை நோக்கிச் செல்ல உதவும். அறிவையும், உணர்வையும் கடந்த ஆன்மசித்தி. |
- Login to post comments