Skip to Content

12. உண்மை முழுமையில் இருக்கிறது பகுதியில் இல்லை

 உண்மை முழுமையில் இருக்கிறது பகுதியில் இல்லை.

       முழுமை என்பது காலத்தைக் கடந்தது. உண்மை, சத்தியம் என்பதும் காலத்தைக் கடந்தது என்பதால் உண்மை முழுமையில் உறைகிறது. காலம் பகுதி, சத்தியம் முழுமை, குறுகிய காலம் சிறிய பகுதி. நெடுங்காலம் பெரிய பகுதி. எனவே உண்மை குறுகிய காலத்தை விட நெடுங்காலத்தில் உறைகிறது. இன்றைய வசதி உண்மையில், நெடுநாள் நீடிக்கக் கூடியது உண்மையாகும்.

       வீடு என்பதை முழுமை எனக் கொண்டால், குடும்பம் முழுமை, சுயநலம் பொய். தான் முதல் என்பது பொய். குடும்பம் முதலில் என்பது மெய். குடும்பம் ஜாதியின் பகுதி. ஜாதி முதலில் என்பது உண்மை. என் குடும்பம் என்பது பொய். ஜாதி ஊரில் ஓர் பகுதி. ஊர் உண்மை, ஜாதி பொய். உலகத்தில் ஊர் பகுதி. உலகம் உண்மை.

பகவான் முழுமையை நாடினார். அவர் நாடிய முழுமை இன்று உலகத்திலில்லாதது.

மனிதன் கேள்விப்படாதது. இல்லறமும், துறவறமும் சேர்ந்த முழுமை வாழ்வென்றார்.

       இல்லறத்தை எப்படி நடத்துவது என்பது உலகறிந்தது. துறவியின் பெருமையை உலகம் அறியும். இல்லறமும், துறவறமும் எதிர்முனைகள். நீரும், நெருப்பும் எதிரிகள். அவை சேர வழியில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அதற்குரிய வழியைக் கண்டார். அந்த வழி முழுமை. நீரும், நெருப்பும் சேரா. சேர்ந்தால் ஒன்று மற்றதை அளிக்கும். ஆனால் அதற்கடுத்த கட்டத்தில் அவை சேரும் முழுமையுண்டு. அது நமக்கு நீரிலும், நெருப்பிலும் தெரிவதில்லை. ஆனால் இல்லறத்திலும், துறவறத்திலும் தெரிய முடியும். இவை வாழ்வில் எதிரிகள். அந்த வாழ்வு மனிதன் அறிந்த வாழ்வு. இறைவன் ஏற்படுத்திய வாழ்வில் இல்லறமும், துறவறமும் பகுதிகள். ஏனெனில் சமூகம் என்பதே இறைவன் ஏற்படுத்திய வாழ்வின் பகுதி. இல்லறம் சமூகத்தின் பகுதி. துறவறமும் அதன் பகுதியே. அவை சேருவது எப்படி? துறவறம் தூய்மையானது. இல்லறம் ஆசைகளுக்குட்பட்டது. ஆசைகளுக்கு அப்பாற்பட்ட இல்லறத்தை துறவறத்தின் தூய்மையுடன் நடத்தினால் நிலை உயரும். உயர்ந்து முழுமையை அடையும். அம்முழுமைக்கு உண்மையுண்டு. பகுதியில் அவ்வுண்மையில்லை.

       மேல்நாட்டார் விஞ்ஞானத்தை வளர்த்தனர். வசதி ஆயிரம் மடங்கு பெருகியது. வாழும் இடம் சொர்க்கமாயிற்று. 30 ஆண்டுகளாயின. குற்றம், வன்முறை, மனத்தில் வெறுப்பு, வெற்றிடம் தோன்றியது. வசதி என்பது பகுதி. மனம் என்பது பகுதி. ஓர் பகுதியைப் பாராட்டியதில் அடுத்த பகுதி குறையாகிறது.

       மனதில் வெற்றிடமில்லாமல் நிறைவு ஏற்படும் வசதியுண்டா? அவ்வசதிக்கு முழுமையுண்டு. நாம் வசதியை எப்படி தேடுகிறோம்? சுயநலமாகத் தேடுகிறோம். விஞ்ஞானி ஒன்றைக் கண்டுபிடித்தால், அது அவருக்கே சொந்தம். இது சுயநலம், இன்று ஏற்பட்ட வசதிகளின் அடிப்படை சுயநலம். சுயநலம் பகுதி. அதனால் அதில் உண்மையில்லை. நாம் பெறும் படிப்பு பகுதி. அறிவு மட்டும் வளரும் படிப்பு நாம் பெறுவது. மனமும், உணர்வும், குணமும் மற்ற பகுதிகள். அவைகளும் வளரும் படிப்புக்கு முழுமையுண்டு.

       5000 ஆண்டுகட்கு மனிதனுக்கு உணர்ச்சி தெரியாது, அறிவு கிடையாது. உடலை மட்டும் பேணினான். நெடுநாள் வாழ்ந்தான். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தான். இன்று அதுபோல் வாழும் மனிதனில்லை. இருந்தால் அவனை விலங்கு என்போம். உடல் பகுதி. முழுமையில்லை. இன்றைய மனிதனை ஆதிமனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவன் பகுதி, நாம் முழுமை. எதிர்காலத்தில் வரும் மனிதனைக் கருதினால் நாம் பகுதி, அவன் முழுமை.

       இனிமையாகப் பழகினால் உயர்ந்தது. கெட்ட செய்தியையும் நல்ல சொற்களில் சொல்வது king's manners அரணுடைய பழக்கம். ஆனால் பழக்கம் வாழ்வில் ஓர் பகுதி. 25ம் வயதில் வாழ்க்கையை பட்டம் முடித்து ஆரம்பித்த இளைஞரின் ஒரு லட்சியம் ஒரே இலட்சியமானால் அது அவர் வாழ்வை நடத்துகிறது. 20 ஆண்டுக்குப் பின் தன் வாழ்வில் கணக்குப் போட்டுப் பார்த்தார். தன்னை ஒத்தவர்கள் பலரை நினைத்துப் பார்த்தார். அனைவரும் குடும்பத்துடன் வாழ்கின்றனர். எவர் கையிலும் 1 கோடிக்குள் குறையாமல் பணமிருக்கிறது. தன்னை நினைத்துப் பார்த்தார். நிலத்தில் வேலை செய்தேன். கூலிகள் இனிக்கப் பழகினேன், பாக்டரியை நிர்வாகம் செய்தேன். ஆட்கள் இனிக்கப் பழகினேன் பெரிய தொழிலதிபர்கள் பழகினேன். அனைவரும் என்னை விரும்பினர். இன்று அந்த கூலிகள் சொந்த நிலம் வைத்து இருக்கிறார்கள். அந்தத் தொழிலாளிகள் குடும்பத்துடன் வாழ்கின்றனர். அத்தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தனர். நான் எதை சாதித்தேன்? குடும்பம் உண்டா? இல்லை. பணம் சேர்த்தேனா? இல்லை. பிறகு எதைச் சாதித்தேன்? தெரியவில்லை. ஏன் சாதிக்கவில்லை? என்ற கேள்வியை எழுப்பினார். பதிலில்லை. அவருக்குரிய பதில் உண்டு. இனிய பழக்கம் உயர்ந்தது. ஆனால் பகுதி. பகுதியில் உண்மையில்லை. அது வாழ்வின் பகுதி. வாழ்வு முழுமையானது. அதற்கு உண்மையுண்டு. கூலிகளும், தொழிலாளிகளும், தொழிலதிபர்களும் வாழ்வை நாடினார்கள், சாதித்தார்கள். நான் பகுதியை முழுமை என நினைத்தேன். சாதிக்கவில்லை. தன்னை மட்டும் கருதும் பகுதியை நாடுகிறார். குடும்பம் முழுமை. கல்லூரியில் விளையாடடு, படிப்பு, டிகிரி, ஆகியவை பகுதி. மனிதன் முழுமை முதல் ராங்க் வாங்குபவனை தன் சுபாவத்தையும் தன் வாழ்வையும் முக்கியமாகக் கருதிய மாணவர்கள் வாழ்வில் அதிகமாக சாதிப்பதைக் காணலாம். வாழ்வு முழுமையுடையது. மற்றவை பகுதி.

       பகுதியை முழுமை எனக் கருதி அட்டகாசம் செய்பவர்கள் அதிக நாள் உயரத்திருப்பதில்லை. பெரிய ஸ்தாபனத்தில் புதியதாக சேர்ந்த இளைஞர் ஸ்தாபன சேவையைக் கருதினார். ஸ்தாபன தலைவர் நிலைக்கு ஓராண்டில் உயர்ந்தார். வேறொரு உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தாபனத்தில் மேல்மட்டத்திலுள்ளவர்கள் தன் சொந்தப் பலனை மட்டும் கருதினார். 5 ஆண்டுகளில் அப்பதவி போயிற்று. ஸ்தாபனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

       முழுமையைக் கருதுபவர்கள் விவரம் புரியாமல் முழுமையைத் தலைமையில் காண்பார்கள். தலைமைக்கு வால் பிடிப்பார்கள்.

       அன்னையை அறிந்தவர் ஒருவர் வாழ்வே அற்புதமாயிருக்கிறது என்று அன்னையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மனம் மாறி மகிழ்வின் உறைவிடமாயிற்று. உடன் பிறந்தவர் வாழ்வின் சிறுமைகள் கண்டு பதறினார். அவை விலகின. அவரும் அன்னைக்குரியரானார். அடுத்து அடுத்து குடும்பத்தில் பலரும் அன்னையை ஏற்றுக் கொண்டனர். இதுவரை காணாத நல்ல சிறு செயல்கள் ஆயிரமாயிரம் நிகழ்ந்தன. அன்னையைப் பற்றி தான் கேட்டது, படித்தது, அறிந்தது அத்தனையும் உண்மை என்று கண்டார்.

       ஆனால் தான் கண்ட உண்மைகள் அனைத்தும் பகுதியின் உண்மைகள் என அறியவில்லை. முழுமை எது எனவும் அவர் அறிந்து கொள்ள முயலவில்லை. அடுத்த முறை ஆசிரமம் வரவேண்டியிருந்தது. ஆசிரமத்தைச் சார்ந்த ஒருவருக்குப் போகும் பொருள் ஒன்று அவருக்காகக் காத்திருந்தது. இவரிடம் கொண்டு வந்து கொடுத்து ஆசிரமம் போகும் பொழுது அங்கே இதை உடையவரிடம் சேர்த்துவிடுங்கள் என்றார்கள். சற்று யோசனை செய்தார். அவரை நானுள்ள இடத்தில் வந்து எடுத்துப் போகச் சொல்லுங்கள் என்றார். அவர் முழுமையில் உள்ளவர், இவர் பகுதி என்றறியாமல் பேசினார். ஆசிரமத்தில் அவர் வந்து தனக்குரிய பொருளை எடுத்துச் சென்றார்.

       கொஞ்ச நாளாயிற்று. இவர் ஊரில் தியான மையம் இடம் மாற வேண்டிய நேரம். இவரைப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். ஏற்றார். அதில் ஓர் கேள்வி. கேள்வி எழுந்த நேரம் இவர் மனம் பேசியது, அன்று முழுமையை நான் ஏற்காமல் என்னை நாடி வரச் சொன்னேன். இன்று முழுமை என்னிடம் வந்தபின், கேள்வி எழுகிறது. இயல்பு தானே என்றது.

       உண்மை பகுதியில் இல்லை, முழுமையிலிருக்கின்றது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சில சமயங்களில் அன்னை ஆத்மாவின் பலனுக்காக அதன் குறைகள் மூலமே செயல்பட முடிகிறது.

குறை மூலம் நிறைவு தருவதும் அன்னை செயல்.

 

 

 

 

 

 

 



book | by Dr. Radut