04.அன்பர் கடிதம்
அன்பர் கடிதம்
அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன.
1995-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அமுதசுரபித் திங்கள் இதழ்களில் வெளியான அன்னைக் கட்டுரைகளைப் படித்து நான் அன்னையிடம் வந்தேன்.
அமுதசுரபி இதழில் வந்த அன்னையின் படத்தைக் கத்தரித்து எனது வீட்டுச் சுவரில் ஒட்டி, வணங்கிவந்த எனக்கு ஒரு மாத காலத்திற்குள் எவ்விதச் சிரமமுமின்றி அன்னையின் படங்களும், நூல்களும் எப்படி அபரிமிதமாக என்னை வந்தடைந்தன என்பதை மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டிக்கு எழுதினேன்.
இதில் விந்தை என்னவென்றால், நான் முதன்முதலாக மாம்பலம் சீனிவாசா தெரு தியான மையத்திற்குச் சென்று "மலர்ந்த ஜீவியம்'' செப்டம்பர் 1995 இதழினை வாங்கிப் பார்த்ததும் அதில் சொசைட்டிக்கு நான் எழுதிய விவரம் "அன்பர் அனுபவம்'' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளிவந்ததைப் பார்த்ததும் திகைத்துவிட்டேன்.
பின்னர் நாள் தோறும் மாம்பலம் தியான மையத்தில் நடக்கும் தியானத்திலும், இரண்டாம் ஞாயிறு தக்கர் பாபா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டுத்தியானத்திலும் கலந்துகொண்டு அன்னையைப் பிரார்த்தித்து வந்தேன்.
அப்போது அன்னை அன்பர் ஒருவரிடம் என் மகனுக்கு வங்கி வேலை அல்லது அரசு வேலை வேண்டுமென அன்னையிடம் வேண்டி வருவதாகவும், ஆனால் இதுவரை கிடைக்கவில்லையெனத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் வங்கி வேலை அல்லது அரசு வேலை என்றால் தேர்வு எழுதவேண்டும், நேர்முகத் தேர்வு செல்லவேண்டும். இவற்றிற்கெல்லாம் காலம் அதிகம் பிடிக்கும். எனவே அன்னையிடம் குறைந்த சம்பளம் என்றாலும் உடனடியாக வேலை கிடைக்க வேண்டும் எனவும், அவ்வாறு வேலை கிடைத்தால் அதனை மனநிறைவுடன் செய்துகொண்டு வங்கி வேலைக்குப் பிரார்த்தனை செய்யுமாறு கூறினார்கள்.
மறுநாள் சொசைட்டியின் வெளியீடான "அன்னையின் அருள்'' என்ற நூலினைப் படித்தேன். அதில்,
"போனால் உயர்ந்த வேலைக்குத்தான் போவேன் என்ற வறட்டுப் பிடிவாதத்தையும் வீறாப்பையும் விடவேண்டும்''.
"அன்னையிடம் வந்தபிறகு சிறிய வருமானத்தில் உள்ள தங்களின் நிலை மாறும்என நம்பிக்கை வைத்தால் அன்னையின் அருள் செயல்படும்''
என கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிணங்க பிரார்த்தனையை மாற்றியதும் அன்னை அவர்கள் காரில் கை அசைத்துக்கொண்டே செல்லும் காட்சி கனவிலும், தியானத்திலும் தொடர்ந்து கிடைத்தது. ஒரு மாதக் காலத்திற்குள் தனியார் நிறுவனத்தில் சுமாரான ஊதியத்தில் கார்களுக்கு நிதியுதவி வழங்கும் பிரிவில் என் மகனுக்கு வேலை கிடைத்தது.
நிலைமை மாறும் என்ற நம்பிக்கையுடன் 7 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணியாற்றியதும், 5 ஆண்டுகள் நிதியுதவி வழங்கும் பிரிவில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள் தேவையென ஐசிஐசிஐ வங்கி விளம்பரம் நாளிதழ்களில் வெளியானது. என் மகன் அதற்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதி, பம்பாய்க்கு நேர்முகத் தேர்வுக்கும் சென்றுவந்தான். அன்னை அருளால் ஐசிஐசிஐ வங்கியில் பிப்ரவரி 2002-இல் நியமன ஆணை கிடைத்தது. (வங்கிக்கான நியமன ஆணை அன்னை பிறந்த பிப்ரவரித் திங்களில் கிடைத்ததும் அன்னையின் அருளே!)
இதேபோன்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு என் மகள் விண்ணப்பம் செய்திருந்தாள். நேர்முகத் தேர்வுக்கு மகளை அழைத்துக்கொண்டு சென்றேன். நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களில் என் மகள்மட்டுமே குறைந்த கல்வித்தகுதி. பி.ஏ. பட்டப்படிப்பு படித்திருந்தாள். ஏனைய அனைவரும் எம்.ஏ., எம்.காம்., எம்.சி.ஏ., எம்.ஏ., பி.எச்.டி.,படித்தவர்கள். இதைப் பார்த்ததும் என் மகள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லாமல் வீட்டிற்குப் போய்விடலாம் என்று கூறினாள்.
எனக்கு உடனே "அன்னையின் அருள்'' எனும் நூலில் "ஒரு திட்டத்தில் நம்மால் தேவைப்பட்ட உழைப்பு 60%எனில் அதனை முற்றிலும் பூர்த்தி செய்துவிட்டால், அன்னை திட்டத்தை 100% பூர்த்திசெய்வார்'' எனக் குறிப்பிட்டது நினைவுக்குவந்தது. என் மகளிடம், "இன்டர்வியூவில் கலந்துகொள். முடிவை அன்னையிடம் விட்டுவிடுவோம்'' என்று கூறி, நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு வீடு திரும்பினோம்.
இரண்டு நாளில் மகளுக்கு வேலை உத்திரவு வந்தது. கம்பனியில் விவரம் கேட்டதில் உயர்ந்த படிப்பு படித்தவர்கள் அனைவரும் சம்பளம் குறைவு என வேலை வேண்டாம்என மறுத்துவிட்டதால் என் மகளுக்கு வேலை கிடைத்துவிட்டது.
என் மகள் திருமணம் தொடர்பாக ஜாதகம் பொருத்தமில்லையென பல வரன்கள் அமையாது தொடர்ந்து தடை ஏற்பட்டது. ஒரு நாள் சொசைட்டியின் வெளியீடான "ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம்'' என்ற நூலில்" ஜாதகத்தின்படி சொல்வது முடிவானதன்று! நட்சத்திரங்கள் நம் வாழ்வை நிர்ணயிப்பதில்லை. இறைவன் மீது நம்பிக்கையில்லாதவரே ஜாதகத்தை நம்பிச் சஞ்சலமடைகிறார்கள். யோகிகளால் மட்டுமே எதிர்காலத்தை நிர்ணயமாகச் சொல்லமுடியும்!'' எனும் ஸ்ரீ அன்னையின் கருத்தைத் தெரிவித்திருந்ததைப் படித்தேன்.
இதைப் படித்ததும் அன்னையிடம் நம்பிக்கை வைத்து இனி ஜாதகம் பார்ப்பதில்லை. அடுத்து வரும் வரன் எதுவென்றாலும் ஏற்றுக்கொள்கிறேன் எனப் பிரார்த்தனை செய்தேன். அடுத்து வந்த வரன் நல்ல வரனாக அமைந்ததுடன், அவர்களும் ஜாதகம் பார்ப்பதில்லையெனக் கூறி திருமணம் சுமுகமாகவும், சிறப்பாகவும் நடந்தது. திருமணத்தன்று, திருமண விழாவிற்கு இடையூறு இல்லாமல் அன்னையின் அருள் மழையாகப் பொழிந்தது. திருமண வரவேற்பு மெல்லிசைக்குழுவில் மூவர் அன்னை அன்பர்கள். மணமேடையில் ஸ்ரீ அன்னையின் படத்தைப் பார்த்ததும் அன்னையின் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்கள். குடும்பத்தினர் அனைவரும் ஆனந்தக்கண்ணீர் மல்க அன்னைக்கு நன்றி கூறினோம்.
இதனை அடுத்து என் மகனின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு ஒரு வாரம்முன், அது தொடர்பான வேலைகளைக் கவனிக்க திருநெல்வேலி சென்றோம். என் மகன் கோவையில் பணிபுரிந்துகொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு தொலைபேசிச் செய்தி, "உங்கள் மகன் பைக்கில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறான்'' என வந்தது. எல்லோரும் பதறிவிட்டார்கள். எனக்கு "அருளமுதம்'' என்ற நூலில் உள்ள கீழ் குறித்த கருத்துகள் நினைவுக்கு வந்தன.
"அன்னையை வந்தடைந்த பின் நல்லது மட்டுமே நடக்கும்''.
"வருத்தப்படக்கூடிய செய்தி வந்தபின், நிகழ்ச்சி நடந்தபின் வருத்தப்படமாட்டேன் என்ற உறுதி, அந்தச் செய்தியை மாற்றவல்லது. மனம் உறுதியானால் வாழ்க்கை அதற்குட்பட்டு வளைந்துகொடுக்கும்''.
இதை நினைத்ததும் நான் நிதானமாக நடந்து கொண்டேன். மகனுக்கு எதுவும் நடந்திருக்காது என்று கூறினேன். ஒரு பையில் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் தொடர்பான நூல்களையும், எனது டிரஸ்களையும் நிதானமாக எடுத்துவைப்பதைப் பார்த்ததும் என் மனைவி உள்பட உறவினர் அனைவரும் என்னிடம் கோபித்துக்கொண்டு விரைவுபடுத்தினர். பின்னர் வாடகை கார் அமர்த்திக்கொண்டு கோவை புறப்பட்டோம். காரில் உறுதியுடன் அன்னையைப் பிரார்த்தித்துக்கொண்டே சென்றேன்.
இரவு கோவை மருத்துவமனை சென்றதும் தலையில் அடிபட்ட நபர் என் மகனின் பெயர்கொண்ட மற்றொரு நபர் எனவும், என் மகனுக்குக் கையில் மட்டும் லேசான அடி எனவும், 4 நாட்கள் மருத்துவமனையில் கை அசைக்காமல் ஓய்வெடுத்தால் போதும் எனவும் மருத்துவர் கூறினார். மேலும் ஒருவர் மட்டும் உடன் இருக்குமாறும், மற்றவர்கள் நிச்சயதார்த்த திருமண வேலைகளைக் கவனிக்கச் செல்லலாம் எனவும், நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்னர் டிஸ்சார்ஜ் செய்துவிடுவதாகவும் டாக்டர்கள் விவரம் தெரிவித்ததும் ஆனந்தப்பெருக்குடன் அன்னைக்கும், அப்பா அவர்களுக்கும் நன்றி கூறினேன். குறிப்பிட்ட நாளில் நிச்சயதார்த்தம், திருமணம், வெளிநாட்டில் திருமண வரவேற்பு, அனைத்தும் அன்னையின் அருளால் இனிதே நடந்தேறின. நான் படித்த அன்னை நூல்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டிருப்பதுபோல அன்னை அன்பர்கள் வாழ்வில்"அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன".
*****
ஸ்ரீ அரவிந்த சுடர்
சிந்திக்காமல் புரிவது மனத்தின் உயர்வானால், உணர்வுக்கு அதுபோன்றது எதுஎன அறிந்து செய்தால் உணர்வு முனிவர் மனத்தைப் பெறும். உணர்வு வெளிப்படையாகச் செயல்படாமல் சாதிப்பது அதுபோன்றது.
சலனமற்ற உணர்வு முனிவருக்குரியது.
*****
- Login to post comments
Comments
Please remove extra special
Please remove extra special characters and blank lines, empty rectangle box after 'ஸ்ரீ அரவிந்த சுடர்'
04.அன்பர் கடிதம் Para 5