Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

கலியுக தெய்வமாம் அன்னை சமீபத்தில் என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதத்தை மலர்ந்த ஜீவியம் அன்னை பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அன்னையின் அற்புதத்தை நினைத்து நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியப்படுகிறேன்.

ஜனவரி 26ஆம் தேதி 2010, நான் என் மனைவி, மகளுடன் மகளின் திருமணத்திற்கு சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் சில கடைகளில் சுமார் 12 ஆயிரத்திற்கு ஜவுளிகள் வாங்கினோம். பின்பு அதே தெருவில் உள்ள முதல் மாடியில் ஒரு டெய்லரிடம் ரவிக்கைகள் தைக்கக் கொடுத்துவிட்டு காத்துக் கொண்டிருந்தோம். கடைக்கு வெளியில் உள்ள மாடிப்படியில் ஜவுளிகளை வைத்துக் காத்துக் கொண்டிருந்தோம். இரவு 9 மணிக்கு ரவிக்கைகள் தைத்து முடிந்துவிட்டதுஎன டெய்லர் கூறியதில், ஒரு நிமிடம் எங்களை மறந்து ஜவுளிகளை மாடிப்படியில் வைத்துவிட்டு பணம் கொடுக்க உள்ளே சென்றோம். உள்ளே சென்ற நான் தவற்றை உணர்ந்து உடனடியாக மாடிப்படிக்கு விரைந்தபோது நாங்கள் விட்டுச் சென்ற 3 பைகளில் 1 பையை காணவில்லை. அதனுள் ரூ.7,000/-ற்கு மேலான ஜவுளி இருந்தது. ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை. எங்களை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் ஆனது. சுற்றி இருந்தவர்களைக் கேட்டால் தெரியாதுஎனக் கூறுகிறார்கள். மனம் பித்துப் பிடித்ததுபோல் இருந்தது. அன்னையே நீதான் எங்களை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்என ஆழ்மனத்திலிருந்து வேண்டிக்கொண்டே கீழ்த் தளத்திலும், மேல் மாடியில் உள்ள சில அறைகளிலும், அவர்கள் அனுமதியுடன் தேடினோம். எங்கும் கிடைக்கவில்லை. மனம் மட்டும், பொருளை எங்களிடம் சேர்ப்பிக்கச் சொல்லி அன்னையிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தது. எதற்கும் மேல் மாடியிலிருந்து பக்கத்தில் எங்காவது போட்டிருப்பார்களாஎன மனதிற்குத் தோன்றவே, நான் அங்கிருந்த சில பேருடன் மொட்டைமாடிக்குச் சென்றேன் (3வது மாடி). அங்கிருந்து கீழே எதுவும் தெரியவில்லை. அன்னையின் அருளால் அங்கிருந்த உடைந்த ப்ளாஸ்டிக் தண்ணீர் தொட்டியைப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அங்கே, தொலைந்த அந்தப் பை எவ்வித சேதாரமும் இன்றி அப்படியே இருந்தது. எந்தப் பொருளும் களவாடப்படவில்லை. காணாமல்போன பாஸ்போர்ட்டை கண்டுபிடித்துக் கொடுத்தார் அன்னை என "அன்னையின் தரிசனம்' என்ற புத்தகத்தில் படித்து, இவ்வாறு நடக்குமாஎன்று நினைத்த எனக்கு, நிதர்சனமாக, "நான் இருக்கிறேன். என்னை நம்பியவர்களை கைவிடுவதில்லை' என உணர்த்திய அன்னையின் அற்புதத்தை அனுபவித்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்எனவும், நீங்களும் அன்னையின் அருள்பெற அன்னையைச் சரணடைய வேண்டும்எனவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

-- ல. நாகராஜன், மதுரை

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உறவை விடாமல் சமர்ப்பணத்தை மேற்கொண்டால் பெரும்பாலோர் விலகுவது தெரியும். அவர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள். மீதியிருப்பவர்கள் மூன்று வகையினர்.
  1. யோகத்திற்குரியவர்கள்.
  2. யோகத்தின் எதிரிகள்.
  3. உன்னால் விடமுடியாதவர்கள்.
 சமர்ப்பணம் மனிதர்களை விலக்கும்.

******

 



book | by Dr. Radut