Skip to Content

10. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

2. சத்திய ஜீவியம்

1972இல் வேலை தேடி வந்த ஓர் இளைஞரை, மைய வெளியீடு ஒன்றை விற்றுச் சேவை செய்யுமாறு கூறினேன். "10 பிரதிகளை விற்றாலே பலன் இருக்கும்'' என்றேன். மூன்று பிரதிகளை விற்றவுடனேயே அவருக்கு நல்லதொரு வேலை கிடைத்துவிட்டது. வேலை கிடைக்க வேண்டியே புத்தக விற்பனையாகிய சேவையை அவர் ஏற்றுக்கொண்டார். "விற்பது எத்தனை சிரமம்?" என்பதை எடுத்த எடுப்பிலேயே அவர் புரிந்துகொண்டார். பொழுதைப் போக்குவதற்காகவே படிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு மத்தியில், தெய்வம், சத்தியம், ஒழுங்கு என்று அறநெறி வகுப்பு நடத்தும் நல்ல நூல்கள் எப்படி விற்பனையாகும்? அவர் புத்தகத்தை நீட்டினாலே எல்லாரும் ஓட ஆரம்பித்து விடுகிறார்கள். இருந்தாலும் அவர் முயற்சியை விடவில்லை. தோல்வியிலும் துவளாத அவருடைய முயற்சி அற்புதமானது. "வேலை கிடைக்க வேண்டும்' என்பதற்காக சேவையை மேற்கொண்ட அவர், பிறகு வேலையையே மறந்துவிட்டு, புத்தக விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவிட்டார். அவருடைய ஈடுபாடு புனிதமானது. அதன் காரணமாக அவருக்கு விரைவிலேயே ஒரு வேலை கிடைத்துவிட்டது. எனினும், சேவையை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் நூற்றுக்கும் அதிகமான பிரதிகளை விற்று மகிழ்ந்தார்.

பலன் கருதித்தான் அவர் சேவையைத் தொடங்கினார் என்றாலும், பலன் கருதாது செய்தார். அது பவித்திரமான சேவையாகின்றது. அதனுடன் உயர்ந்த முயற்சியும் சேர்ந்து கொள்கின்றது. சேவையும், முயற்சியும் உள்ள இடத்தில் ஆர்வம் தானாக வருகின்றது. இவற்றில் ஒன்று இருந்தாலும் அன்னையால் விரைந்து செயல்பட முடியும். அந்த இளைஞரிடம் அத்தனையும் சேர்ந்து அமைந்திருந்தன.

ஒரு கோடி ரூபாயை இழந்து திவாலான அமெரிக்கர் ஒருவர், அன்னைக்குக் காணிக்கை செலுத்தி, இழந்ததைப் போல இரண்டரை மடங்கு பெற்றார். அவருக்கு ஆரம்பத்தில் அன்னையின் மீது நம்பிக்கை இல்லை. அதோடு அவருடைய தம்பி தியானமையத்தில் சேர்ந்துவிட்டதால், அவருக்கு மையத்தின் மீது வெறுப்பு. அப்படிப்பட்டவர் விஷயத்தில் எப்படி அன்னையின் அருள் பேரளவில் விரைந்து செயல்பட முடிந்தது?

ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவன் எதையாவது பற்றிக்கொண்டு கரை சேரத் துடிப்பான். அதே போல அந்த அமெரிக்கருக்கும், "எதையாவது பற்றிக்கொண்டு கஷ்டத்திலிருந்து கரை சேர்ந்தால் போதும்' என்ற நிலை. அன்னையின் அருள் தம்மைக் கரை சேர்க்கும் என்று நம்பத் தொடங்கினார். "அன்னைக்குக் காணிக்கையாக 10 டாலர்களை அனுப்புங்கள்' என்று எழுதினால், 20 டாலர் அனுப்பினார். "நீங்கள் குறித்து அனுப்பிய எல்லா வழி முறைகளையும் முழுமையாகப் பின்பற்றுகிறேன்' என்று எழுதினார்.

வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது பெரிய மன மாற்றம். மனத்தை மாற்ற எடுக்கும் முயற்சி, மனித வாழ்வில் பெரு முயற்சி. அது ஓயாது உழலும் உணர்வால் செய்யும் முயற்சி என்பதால், உடலால் செய்யும் உழைப்பைவிட உயர்ந்தது. அந்த அமெரிக்கர் சொல்லியவண்ணம் செய்தார். சுத்தம், ஒழுங்கு, தணிந்த பேச்சு, நிதானம் போன்ற அன்னையின் எல்லா முறைகளையும் அவரும், அவர் மனைவியும், அவருடைய இரு குழந்தைகளும் கடைப்பிடித்தார்கள். அன்னையை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.

அவருடைய பெற்றோர் மிகவும் பிடிவாதக்காரர்கள். மையத்தில் இருந்த தம் இளைய மகனைப் பார்க்க வந்துவிட்டு அமெரிக்கா திரும்பியபொழுதெல்லாம் தந்தைக்கு 40 இலட்சம், 4 கோடி என்றெல்லாம் வர இருந்த சமயங்களிலும், 30 கோடிக்கு ஒரு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்த சமயத்திலும், "அன்னைக்கு காணிக்கை அனுப்புங்கள்'' என்று அவருடைய இளைய மகன் வேண்ட, "எனக்கு வருவதெல்லாம் என் உழைப்பால் வருகிறதே தவிர, அன்னையால் வரவில்லை'' என்று காணிக்கை அனுப்ப மறுக்க, வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போனதுபோல, வர வேண்டிய பெரிய பணத்துடன், இருந்த பணமும் சேர்ந்து போக, "அன்னை காப்பாற்றினால்தான் உண்டு' என்ற நம்பிக்கையும், சரணாகதியும் ஊற்றுக்கண் போலப் பெருக, மனத்தை மாற்றிக் கொண்டு, தம் பெரிய மகனோடு சேர்ந்து, தம் பங்காக 100 டாலரை அன்னைக்குக் காணிக்கையாக அனுப்பினார்.

அவர் முன்னால் செய்தது பிடிவாதம்; பின்னால் செய்தது சரணாகதி. பிடிவாதத்தை விட்டது சிறந்த மனப்பான்மை. தாய், தந்தை, மகன், மருமகள், பேரக் குழந்தைகள் என்று குடும்பத்தோடு அன்னையைச் சரணாகதி அடைந்தது மிகப்பெரிய மாற்றம். இவ்வாறு குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் பலனை, செய்து பார்த்தால்தான் உணர முடியும். மேலும் அவர்கள் அன்னையை மட்டுமே வழிபடவும் முடிவு செய்தனர். அதன் காரணமாகத்தான் அன்னையால் பூரணமாகவும், விரைவாகவும் செயல்பட முடிந்தது.

70 வயதுக்கும் மேலான வீர சைவப் பிரம்மச்சாரியான ஒருவர் நீரூற்றுக் கண்டுபிடிப்பு நிபுணர். அன்னையின் பக்தரான பின்பு, தாமே வலிய முன் வந்து ஆரோவில் நகரில் 18 இடங்களில் நீரூற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு அன்னையைத் தரிசிக்க வந்தார். அப்பொழுது அவர், "காணிக்கை தேவையில்லை; ஆசீர்வாதம் மட்டுமே வேண்டும்'' என்று கூறிவிட்டுக் கடலூருக்குத் திரும்பினார். பிறகு ஒரு வருடத்திற்குள் அவருடைய தொழில் 30 ஆண்டுகளில் செய்த அளவுக்குப் பெருகியது. ஆனால் வருமானம் மட்டும் பெருகவில்லை. எல்லாம் நிலுவையாக நின்றன. அவர் அதை என்னிடம் கூறி வருத்தப்பட்டார். அப்பொழுது நான், "நீங்கள் "அன்னைக்குக் காணிக்கை தேவை இல்லை; ஆசீர்வாதம் மட்டும் போதும்' என்றீர்கள். அதனால் உங்களுக்கு அன்னையின் ஆசீர்வாதம் கிடைத்தது. அதனால் தொழில் பெருகியது. செய்த தொழிலில் பணமும் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் அன்னைக்குக் காணிக்கையும் செலுத்தி இருக்க வேண்டும்'' என்றேன்.

அவர் தம் தவற்றை உணர்ந்தார். மாதம் ஒன்றுக்கு 30 ரூபாய் மட்டுமே செலவிட்டு வாழ்க்கையைச் சிக்கனமாக ஓட்டிக்கொண்டிருந்த அவர், நூறு ரூபாயைக் காணிக்கையாக அனுப்பினார். அவருக்கு வர வேண்டிய பெருந் தொகை முழுவதும் உடனே வந்துவிட்டது. ஏதோ மந்திர சக்தியைப் போல அது வேலை செய்தது. அந்தப் பெருமாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஒரு நீரூற்றைக் கண்டுபிடிக்க ரூ.50 வாங்கும் அவர், அன்னையின் நகரான ஆரோவில்லுக்குச் சேவையாக 18 நீரூற்றுகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். இது மாபெருஞ்சேவை. யாராலும் தூண்டப்படாமல் தாமே முன்வந்து அந்தச் சேவையைச் செய்தார். அந்தச் சேவைக்குப் பெரும்பலன் உண்டு. அன்னையை முதன்முதலில் தரிசிக்க வந்தபொழுது, "இங்கே என்ன முறை?'' என்று கேட்டார். "ஆத்மீகப் பலனுக்கு மலரும், வாழ்க்கை வளத்திற்குக் காணிக்கையும் செலுத்துவது முறை'' என்றேன்.

"காணிக்கை தேவை இல்லை'' என்று கூறிவிட்டு, அன்னைக்கு மலர்ச் சமர்ப்பணம் செய்துவிட்டுத் திரும்பிய அவர் முகத்தில் தெய்வீக தேஜஸ் ஜ்வலித்தது. கடுமையான அவர் குரல் கடுமையை இழந்திருந்தது. படபடப்பான அவர் சுபாவம் பதப்பட்டிருந்தது. அமைதியை அறியாத அவர் மனம் அமைதியால் சூழப்பட்டது. அன்னையை வாரந்தோறும் வந்து வழிபட்டார். அவர் சமர்ப்பித்த மலர்க் காணிக்கை ஆத்மாவை மலரச் செய்தது. ஒவ்வொரு முறையும் அன்னையைத் தரிசித்த பிறகு ஆர்டர்கள் வந்து குவிந்தன. ஆனால் பணம் மட்டும் வரப் பல்லாயிரம் தடைகள் இருந்தன. அவருடைய குறையை எடுத்துக் காட்டியவுடன் மனத்தை மாற்றிக்கொண்டார். "நான் பேசினால் மற்றவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டுமே தவிர, எதிர்த்துப் பேசக்கூடாது' என்ற சுபாவம் உள்ள அவர், மனத்தை மாற்றிக்கொண்டது பெரிய விஷயம். தம் சேவையாலும், பிரம்மச்சரியத்தாலும், தரிசனத்தாலும் விளக்கம் பெற்றவர், குதர்க்கப் புத்தியால் "காணிக்கை தேவையில்லை' என்றார். சேவையின் காரணமாகத் தொழில் பெருகியது. அவர் சொல் பலித்தது. ஆனால் பணம் வர மறுத்தது. அதற்குத் தன் புத்தி தடையாக இருந்ததை உணர்ந்து மாறினார். சேவையுடன் கூடிய மனம் பிரவாகமாக வந்தது. சேவைக்கு மகத்துவம் உண்டு; காணிக்கைக்குப் பொருள் உண்டு.

ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளரைச் சந்தித்து, அந்நிறுவனத்தின் வளர்ச்சி குறித்துப் பேசினார் என் நண்பர். அது நம் நாட்டின் மிகப்புகழ் பெற்ற நிறுவனம். அது 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரவு-செலவு செய்யக்கூடியது. அந்நிறுவனத்தின் உரிமையாளரை ""Businessman of the year” என்று அந்த வருடம் தேர்ந்தெடுத்திருந்தனர். அந்நிறுவனத்தை எப்படி மேலும் சிறப்புறச் செய்யலாம் என்பது பற்றி என் நண்பர் விளக்கியதைக் கவனமாகக் கேட்ட பிறகு, "நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. இங்குள்ள நிலவரத்தை நேரில் பார்க்காமலே உங்களால் எப்படி இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடிகிறது?'' என்று வியந்த உரிமையாளர், "எங்கள் நிறுவனத்தை study செய்து ஒரு ரிப்போர்ட் கொடுத்து உதவுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.

நண்பரும், நானும் சேர்ந்து ரிப்போர்ட் தயார் செய்தோம். ரிப்போர்ட்டில் குறிக்கப்பட்ட அத்தனை யோசனைகளும் அன்னையின் முறையை அடிப்படையாகக் கொண்டவை. பொதுவாக அன்னையின் முறைகளை முழுமையாகப் பின்பற்றினால், 12 மாதங்களில் வருமானம் இரண்டு மடங்காகப் பெருகும். "சிறப்பாக அவற்றைப் பின்பற்றினால் ஒவ்வோர் ஆண்டும் வருமானம் இரட்டிப்பாகக் கூடும்' என்பது எங்கள் அனுபவம். "அவையெல்லாம் அந்த மிகப்பெரிய நிறுவனத்திற்குப் பொருந்துமா?' என்ற ஐயமும் கூடவே எழுந்தது. அதனால் எங்கள் ரிப்போர்ட்டில் அதை வலியுறுத்திக் குறிப்பிடாமல், பொதுவான 4 கருத்துகளையும், குறிப்பாக 120 யோசனைகளையும் மட்டுமே தெரிவித்திருந்தோம்.

உரிமையாளர் ரிப்போர்ட்டைப் பெரிதும் விரும்பினார். "ரிப்போர்ட்டில் காணப்படும் யோசனைகளைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்' என்று ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த நிறுவனத்தின் வருடாந்திரக் கணக்கை ஒவ்வோர் ஆண்டும் ஜூனில் முடிப்பார்கள். நாங்கள் ரிப்போர்ட் கொடுத்த ஓராண்டுக்குப் பிறகு ஜூன் மாதம் வரவு-செலவுக் கணக்கை எடுத்துப் பார்த்தார்கள். வரவு-செலவு 440 கோடியிலிருந்து 600 கோடியைத் தாண்டிவிட்டிருந்தது. நிகர லாபம் 20 கோடியிலிருந்து 60 கோடியாக உயர்ந்துவிட்டது. இரு மடங்குகளுக்கும் மேலான பலனை அளித்தது அன்னை முறை. அதற்குக் காரணம் என்ன?

அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் தரத்திற்குப் பெயர் போனவை. உற்பத்தி செய்யும் இடத்தில் காணப்படும் சுறுசுறுப்பு வியப்புக்குரியது. அதன் உரிமையாளர் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி. ஏராளமான சிஸ்டங்களைக் கையாள்கின்றார். மேலும் புதிய முறைகள் இருந்தால், அவற்றை ஆர்வத்துடன் பின்பற்றத் தயாராக இருக்கின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக அவார்டு வாங்கிய பிறகும் மற்றவர்களிடமிருந்து புதியனவற்றைக் கற்றுக்கொள்ள விழையும் மனப்பான்மை இருக்கின்றது. அது அடக்கத்தின் சிகரம் போன்றது. தரம், இலட்சியம், system, சுறுசுறுப்பு, அடக்கம் போன்ற உயர்ந்த அம்சங்கள், அன்னையின் சக்தி பெரிய அளவில் செயல்படத் துணையாக நின்றன.

"சத்தியம்' என்பது அஞ்ஞானக் கலப்பு இல்லாமல் உறையும் உலகம் (Supramental world). தெய்வலோகத்திற்கும் மேலேயுள்ள உலகம் "விஞ்ஞான லோகம்' எனப்படும். அந்த உலகத்தின் சக்தியை அன்னை நம் வாழ்வில் செயல்படச் செய்கின்றார். அதன் விளைவுகள் அற்ப, சொற்பமாக இரா. பெரிய மாற்றங்களாகவும், ஏற்றங்களாகவும் இருக்கும் என்பதை, மேற்கூறிய சான்றுகள் தெளிவாகச் சொல்கின்றன.

உலகத்திற்குப் புதிதாகக் கிடைத்துள்ள தெய்வீகச் சக்தி அது. உலகம் பொய்ம்மையால் நிறைந்ததானாலும், அதன் ஆத்மீக அடிப்படையான சத்தியத்தையும், அதன் வடிவங்களான விசுவாசம், நம்பிக்கை, முயற்சி, விடா முயற்சி, தெய்வ நம்பிக்கை, பக்தியுடன் கூடிய ஆர்வம், நேர்மை, அடக்கம் போன்ற அம்சங்களையும் கடைப்பிடித்தால், அன்னையின் சக்தி நம் வாழ்வில் சிறப்பாக வெளிப்பட முடியும்.

இந்தப் பெரிய இலட்சியங்களை நடைமுறை வாழ்வில் நாம் எந்த உருவில் சந்திக்கின்றோம்? அவற்றுக்கு மாறானவை எவை? அறிவால் செயல்படுபவன் வாழ்வில் காணும் அம்சங்கள் என்ன? உடல் உழைப்பு நிறைந்த இடத்தில் என்ன காணப்படுகின்றது? மற்றவர்களுடன் பழகும்பொழுது இந்தத் தெய்வீகச் சத்தியம் எந்த உருவில் நம்முள் வருகின்றது? - இவைதாம் ஓர் எளிய மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள். ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் எழுதியுள்ளவற்றிலிருந்து தொகுத்து மனம், வாழ்வு, உடலுக்குப் பொருத்தமான சத்திய வடிவங்களையும், அவற்றை ஒட்டிய அடைப்புக்குள் அவற்றிற்கு எதிரான பொய்யின் உருவங்களையும் கீழே தருகின்றேன்.

உழைப்பு நிறைந்த வாழ்வில் காணப்படுபவை: (1) சுறுசுறுப்பு (சோம்பேறித்தனம்), (2) தூய்மை (அழுக்கு), (3) அமைதி (மந்தம்), (4) நம்பிக்கை (சந்தேகம்), (5) உழைப்புக்கு வேண்டிய சக்தி (உறக்கம்), (6) ஒழுங்கு முறை (ஒழுங்கீனம்), (7) நேரத்தோடு செயல்படுதல் (கால தாமதம்), (8) அறிவு (மடமை), (9) செயலின் தெளிவு (குழப்பம்), (10) மற்றவரை அனுசரித்தல் (பிடிவாதம்), (11) மாற்றிக்கொள்ள முன்வருதல் (மாற்றத்தை மறுக்கும் குணம்), (12) பெருந்தன்மை (இழிகுணம்), (13) முறைகள் - systems (திட்டமின்றிச் செயல்படுதல்).

வாழ்வில் முக்கியமான அம்சங்கள்: (1) தன்னலமற்ற தன்மை (சுயநலம்), (2) அடக்கம் (கர்வம்), (3) பொறுமை (கோபம்), (4) அவா அடக்குதல் (பேராசை), (5) நிதானம் (வேகம்), (6) நல்லுணர்வு (கிளர்ச்சி), (7) தாமாக வருவனவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ளுதல் (வலிந்து கேட்டுப் பெறுவது), (8) பணிவு (செருக்கு), (9) இனிமையாகப் பழகுதல் (பிறர் மனத்தைப் புண்படுத்துதல்), (10) மகிழ்ச்சி (சலிப்பு, விரக்தி), (11) நல்ல எண்ணம் (கெட்ட எண்ணம்).

அறிவுக்குப் பொருத்தமானவை: (1) பிறர் நோக்கைப் புரிந்துகொள்ள முயல்வது (தன் கருத்தை வலியுறுத்துவது), (2) அறிவில் தெளிவு (மனக் குழப்பம்), (3) உயர்ந்த புத்தி (மந்த புத்தி), (4) புதிய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை (குறுகிய நோக்கம்), (5) நினைவாற்றல் (மறதி), (6) சீரிய சிந்தனை (சிறிய சிந்தனை).

பொய்களை விலக்கும்போது மனத்தின் இருள் மறைகின்றது; சத்தியத்தின் வெளிச்சம் பரவுகின்றது. இந்த வெளிச்சமே அன்னையின் அருள் வெளிப்பாட்டுக்கு வைகறையாக அமைகின்றது.

தொடரும்....



book | by Dr. Radut