Skip to Content

10.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

கடன், பாங்க்

       ஒருவர் அழகை இன்று அடுத்தவருக்குத் தரமுடியாது. ஒருவர் புத்திசாலித்தனத்தையும் அடுத்தவருக்கு தர இயலாது. அதுபோல் பிறருக்குத் தரமுடியாதவை பல. கடன் கொடுப்பது என்ற பழக்கம் ஏற்படும்வரை ஒருவரால் அடுத்தவருக்குப் பலனில்லை. கல்வி போதிப்பதால் ஒருவர் புத்திசாலித்தனம் ஓரளவுக்கு அடுத்தவருக்குப் போகும். டாக்டர் சிகிச்சை செய்வதால் டாக்டரால் நமக்கு ஆரக்கியம் தரமுடிகிறது. ஆனால் ஒருவர் உடல் நலத்தை அடுத்தவருக்கு தரமுடியாது. கடன் தருவது என்ற பழக்கம் நெடுநாள் முன் ஏற்பட்டது.

கடன் உலகை நாகரீக உலகமாக்கியது.

       ஒருவர் வாழ்வில் அடுத்தவர் பங்கு கொள்ள வழியாக அமைந்தது கடன். கடன் நாகரீகத்தின் சின்னம். ஒத்துழைப்புக்கு உருவம் தருவது கடன். கடன் தரும் பழக்கம் ஏற்பட்டபின் உலகம் நாகரீகத்தில் ஒரு படி முன்னேறியது. இன்று கடன் தரும் பழக்கம் வேண்டாம் என உலகம் முடிவு செய்தால், எந்த அளவுக்கு வாழ்வு சுருங்கும் என விளங்கும். கடைத்தெருவில் பாதிகடைகளை மூடிவிடுவார்கள். ரோட்டில், லாரி, பஸ், கார் 100 போகுமிடத்தில் ஒன்று, இரண்டு தான் போகும். 1500 A.Dயில் இருந்தது போல் வாழ்வு மாறும்.

- பணம் வந்தபிறகு வாழ்வுக்கு உயிர் வந்தது என்றால்,

- கடன் வந்தபிறகு பணத்திற்கு உயிர் வந்தது என்று கூறலாம்.

- கடனில்லாமல் பணத்திற்கு மகத்துவமில்லை.

- கடன், அடமானம், போக்கியம், தவணை விற்பனை ஆகியவை பணப்புழக்கத்தை பல மடங்கு இன்று பெருக்கி விட்டன.

       10 லட்சம் போட்டு வீடுவாங்கினால் குடியிருக்கிறோம். 10 லட்சம் வீடாயிற்று. வீட்டுக்குப் பயன் உண்டு, மதிப்புண்டு. அடமானக் கடன் என்பது முதலிலில்லை. இன்றுண்டு. 10 லட்ச ரூபாயை ஒரு வீட்டில் போட்ட பின், அந்த வீட்டை அடமானம் வைத்து 6 லட்சம் வாங்க முடியும். 6 லட்சத்திற்கு வேறு வீடு வாங்கலாம். அப்படி அனைவரும் செய்வதில்லை. அதை அடமானம் வைத்து 4 லட்சம் கடன் வாங்கலாம். 4 லட்சத்திற்கு மற்றொரு வீடு வாங்கலாம். அதன் மீது 2 லட்சம் கடன் வாங்கி 2 லட்சத்திற்கு வீடு வாங்கலாம். எவரும் இப்படியெல்லாம் செய்வதில்லை. வியாபாரத்தில் ஓரளவு செய்வதுண்டு. 10 லட்சம் பணம் மேலும் 8,6,4,2 என 30 லட்சம் பெறுமான வீடுகளை வாங்க உதவும் என்பது இந்த விளக்கம். ஒரு பாங்கில் ஒருவர் 1 கோடி டெபாசிட் போட்டால் அந்த பேங்க் 90 லட்சத்தை அடுத்த பேங்கிலும், அந்த இரண்டாம் பாங்க் 81 லட்சத்தை வேறொரு பாங்கிலுமாக 90% அடுத்த அடுத்த பாங்கிற்குப் போனால் முடிவில் 1 கோடி டெப்பாசிட் 9 கோடி ரூபாய் டெப்பாசிட்டாக மாறுவதாக பாங்க் அனுபவம்.

       1 கோடி பணம் பாங்க்கால் 9 கோடியாக மாறுகிறது. கடன் என்ற முறை 1 கோடி பணத்திற்கு 9 கோடி புழக்கம் தருகிறது.

       பணம் வேறு பணப்புழக்கம் வேறு. கைமாறினால் பணம் புரள்கிறது. பணம் புரண்டால் பணத்திற்கு உபயோகம் அதிகம். 1 லட்ச ரூபாய் சரக்கு 1 வருஷத்தில் விற்றால் 10,000ரூ இலாபம் ஒரு மாதத்தில் விற்றால் வருஷத்தில் 1,20,000 ரூபாய் இலாபம். பணம் வேகமாக நடமாடினால் பெருகும் என்பது வியாபாரம் அறிந்த செய்தி. நாள் கணக்கில் ஒரு பாங்க்கிலிருந்து அடுத்த ஊர் பாங்க்கிற்குப் போன பணம் இப்பொழுது கம்ப்யூட்டரில் நிமிஷக் கணக்கில் மாறுகிறது. பணம் பெட்டியிலிருப்பதை விட கைமாறினால், நடமாடினால், புழக்கம் அதிகமாகும், பணத்தைப் பலரும் பயன்படுத்துவார்கள்.

- வேகம் அதிகரித்தால் பணம் பெருகும்.

- அதிகமாகக் கைமாறினால் பணம் பெருகும்.

- நாட்டில் எந்த முன்னேற்றம் வந்தாலும் அதன் மூலம் பணம் பெருகும்.

       ஏற்றம் போட்ட தண்ணீர் இறைத்த நிலத்தில் ரூ 1000 முதலீடு செய்தால் 200ரூபாய் பலன் தருகிறது. ஏற்றம் மோட்டாரானால் அதே ரூ 1000க்கு அதே நிலம் 400 ரூபாய் பலன் தரும். டெக்னாலஜி முன்னேறினால் பணம் பணம் ஈட்டும் திறனை அதிமாகப் பெறும். 5 வகுப்பு படித்தவனிடம் இலட்ச ரூபாய் முதல் கொடுத்தால் அவன் ரூ 5000 இலாபம் சம்பாதித்தால் அதிகம் படித்தவன், அதே இலட்ச ரூபாய்க்கு ரூ 10,000 இலாபம் சம்பாதிப்பான். நாட்டில் படிப்பு வளர்ந்தாலும், நகர வாழ்வு அதிகப்பட்டாலும், நாகரீகம் உயர்ந்தாலும், டெக்னாலஜி பெருகினாலும், எந்த முன்னேற்றம் ஏற்பட்டாலும், ஓட்டுரிமை வந்தாலும்,

பணத்திற்கு பணம் சம்பாதிக்கும் திறன் வளரும்.

       பணம் பெருக நாம் நமக்குள்ள அத்தனை திறமைகளையும் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். 1969ல் பாங்க் தேசீய உடமையாக்கப் பட்டபொழுது இந்தியாவிலிருந்த அத்தனை பாங்க்களிலும் 4000 கோடி ரூபாய் டெபாசிட்டாக இருந்தது. இன்று 4 லட்சம் கோடி ரூபாய் என்ற கட்டத்தைக் கடந்துவிட்டது. இப்பணத்தை 10 மடங்காக்கும் திறன் இப்பாங்குகட்குண்டு. அதற்கு தேவையானது பணப் புழக்கம், நாணயம்.

பணமும் ஸ்தாபனமும்

       நர்சரி பள்ளியும், ஆங்கில மீடியமும் வந்த பிறகு கல்விக்கு முக்கியத்துவம் வந்துவிட்டது. அடி மட்டததிலிருந்து Ph.Dவரை படிப்புக்கு நாட்டில் முக்கியத்துவம், மகத்துவமும் ஏற்பட்டுவிட்டது. நைலான், நைலக்ஸ், பாலியஸ்டர் வந்தபின் டிரஸ்ஸுக்கே மரியாதை அதிகமாகிவிட்டது. டிரஸ் என்றும் உள்ளது. நைலான் புதியதாக வந்தது. புதியதாக வந்த நைலான் மனிதன் பிறந்த நாளாக உள்ள டிரஸ்ஸுக்குப் புது மரியாதையைக் கொடுத்தது, ஆங்கில மீடியம் கல்விக்கே மதிப்பை ஏற்படுத்திவிட்டது. இது உலகிலுள்ள வாழ்வு முறைக்குரிய அம்சம். எந்த புது ஸ்தாபனம் வந்தாலும் எல்லா பழைய ஸ்தாபனங்கட்கும் மரியாதை சற்று உயரும். எந்த புதிய ஸ்தாபனம் வந்தாலும், புதிய டெக்னாலஜி வந்தாலும், எந்த மாற்றம் எங்கு வந்தாலும், பணத்திற்கு மதிப்பும், மரியாதையும் உயர்ந்துவிடும். இதுவரை பணத்தின் மதிப்பு உயர்ந்தது ஏராளம். இனி உயரப் போவதை கற்பனை செய்யமுடியாது. எதிர்காலத்தில் சமூகம் பெறப் போவதை அறிவால் ஒருவர் இன்று பெற முடியுமானால் அவர் முன்னோடி, அவர் பெறுவது அளவுக்குட்பட்டதல்ல. அபரிமிதமான செல்வம்.

       பேசுவதற்கு முன் மனிதன் சைகை காட்டினான். அது அவனுடைய அன்றைய மொழி. அதனுடன் இன்று வழங்கும் மொழியை ஒப்பிட முடியுமா? அதே போல் பணமும் வளர்ந்துள்ளதை நாம் கருதுவதில்லை. எதிர்காலத்தில் பணம் அதே போல் அளவுகடந்து வளரும், பெருகும். 1960ல் M.A. பட்டம் பெற்று வேலையில் உள்ள பெண் தன் குழந்தைகள் கையில் காசு இருப்பதைக் கண்டு, இது என்ன அநியாயம், நான் 1945ல் வேலைக்குப் போகும் வரை நாலணா காசையும் கையால் தொட்டுப் பார்த்ததில்லை. என் குழந்தைகள் 8 அணா காசைக் கையில் வைத்திருக்கின்றன. எனக்குப் பொறுக்கவில்லை என்றார். கொடுப்பது யார், பெற்றோர்கள் தான். 1945லிருந்து 1960 வரைக்கும் இந்த மாறுதல். அது போன்ற மாறுதல்கள் ஏற்பட்டபடியிருக்கின்றன. நாட்டில் பணம் பெருகியதை இவை குறிக்கின்றன. 50 ஆண்டுக்குப் பின் என்ன மாறுதலிருக்கும். சமூகம் அம்மாறு தலையடைந்து பின்னர் தனி மனிதனுக்கு அவ்வுரிமையை கொஞ்ச நாள் கழித்துத் தரும்.

இன்று அதை நாம் பெறலாம்.

என்பது இக்கட்டுரை.

பணம் என்பது நம்பிக்கை

       ரூ 100 நோட்டு வெறும் பேப்பர். இந்த பேப்பருக்கு இம்மதிப்பு எப்படி வந்தது. ரூ 1000 நோட்டு இனி செல்லாது என 40 வருஷத்திற்கு முன் ஒரு சட்டம் வந்தது. அன்று ஒரு பெட்டிக் கடைக்காரன் 1000ரூ நோட்டில் பாக்கு மடித்துக் கொடுத்தான். 40 ஆண்டுக்கு முன்னும் பம்பாய் பெட்டிக் கடையில் 1000ரூ நோட்டு புழங்கியது. கரன்சி என்பது தாள், பேப்பர். அதற்கு மதிப்பில்லை. அதில் ரிஸர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துள்ளது.. I promise to pay Rs.100 to the bearerஇந்த நோட்டைக் கொண்டு வருபவருக்கு ரூ 100 தர நான் வாக்களிக்கிறேன் என்று கவர்னர் கையெழுத்திட்ட பிராமிசரி நோட்டு கரன்சி. சர்க்கார் மீது நமக்கு நம்பிக்கை இருப்பதால் பேப்பர் பணத்திற்கு மதிப்பு வருகிறது. பணம் என்பது நமக்கு சர்க்கார் மீதுள்ள நம்பிக்கை. நாணயம் பவுனால், வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நம்பிக்கை சர்க்கார் மீதில்லை. பவுன் மீது நம்பிக்கை. பவுனுக்கு உலகெங்கும் மதிப்பிருந்தது. ஒரு ரூபாய் நாணயம் வெள்ளியாலானது. அதிலுள்ள வெள்ளி 1 ரூபாய் பெறும். மனிதன் வெள்ளியை நம்பினான். சர்க்காரையில்லை. காகித நோட்டு வெளியிடும்பொழுது ஆயிரம் கோடி நோட்டு அடிக்க, சர்க்கார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பவுனை ரிஸர்வ் பாங்க்கில் வைத்துவிட்டு, நோட்டை அடிப்பது வழக்கம். ஆயிரம் கோடி பவுனை வைத்துவிட்டு, 1100 கோடி ரூபாய் நோட்டு அடிக்க பார்லிமெண்ட் அனுமதிக்காது. அப்படி அடித்தால் 100 கோடி ரூபாய்க்கு மதிப்பில்லை. அதுவே inflation பணவீக்கம் என்பது. 1/11 பாகம் ரூபாய் மதிப்பு குறைந்துவிடும். 1ரூபாய்க்கு 91 பைசா மதிப்பு தான் உண்டு. பவுன் மீதிருந்த நம்பிக்கை உலக யுத்தத்திற்குப் பின் சர்க்கார் மீது வந்தது. உலகில் எல்லா சர்க்காரும் பவுனை ரிஸர்வ் பாங்க்கில் வைப்பதை (gold standard) நிறுத்திவிட்டனர். உலகம் முன்னேறியது. இது நம்பிக்கையால் வந்த முன்னேற்றம். எந்த சர்க்கார் இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கிறார்களோ அவர்கள் கரன்சிக்கு உலகில் மதிப்புண்டு. டாலர் அந்த இடத்தைப் பெற்றுள்ளது. பார்லிமெண்ட் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எந்த அளவு சர்க்கார் தகுதி பெற்றுள்ளதோ, அந்த அளவுக்கு அந்த நாட்டு கரன்சிக்கு உலகில் இன்று மதிப்புண்டு.

- பணம் என்பது நம்பிக்கை. நம்பிக்கையுள்ளவனுக்குப் பணம் புரளும். இன்று புதிய கம்பனி ஆரம்பிக்கின்றார்கள். அன்று புதிய கம்பனி ஆரம்பித்தால் அதன் முதல் மீது நம்பிக்கை இருக்கும், முதலில்லாவிட்டால் ஷேர் விலை போகாது.

- இன்று கம்ப்யூட்டர் கம்பனிகள் ஆரம்பித்தார்கள். முதலில்லாவிட்டாலும் technologyயை நம்பி கம்பனிகள் 1000 மடங்கு, 10,000 மடங்கு வளர்ந்தன.

- முதலில் சர்க்கார் மீது நம்பிக்கை

- அடுத்தாற் போல் பவுன், வெள்ளி மீது நம்பிக்கை

- அடுத்த உயர்ந்த கட்டத்தில் சர்க்கார் மீது அதிக நம்பிக்கை

- கம்பனி முதல் மீது நம்பிக்கை

- கம்பனி டெக்னாலஜி மீது நம்பிக்கை

அப்படி கம்ப்யூட்டர் கம்பனிகள் பெருகின, வளர்ந்தன. அந்த நம்பிக்கையை நல்லபடியாகப் பயன்படுத்தாவிட்டால், கம்பனிகள் சரிந்து விடுகின்றன.

- இவையெல்லாம் செய்வது மனிதன். உலகில் மனிதன் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. அது ஏற்பட மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கையுள்ள மனிதன் ஏராளமான பணம் உற்பத்தி செய்யமுடியும். உலகிலுள்ள பணம் முழுவதும், அவனைத் தேடிவரும். நாணயஸ்தனுக்கு அந்நிலையுண்டு. அதையும் கடந்தது அன்னை மீது நம்பிக்கை. இன்று கம்ப்யூட்டர் கம்பனிகள் (dot.com companies) சரிகின்றன. ஏனெனில் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கம்பனிகள் பாத்திரமாக இல்லை. அப்படி ஒரு கம்பனியிருந்தால் அது வளரும். யாருக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதோ, அன்னை மீது நம்பிக்கையிருக்கிறதோ, அவர் கம்ப்யூட்டர் கம்பனிகள் சரிவதைத் தடுக்க முடியும்.

- தன்னம்பிக்கையுள்ளவர் எந்த அளவு பணமும் தன் வாழ்வில் உற்பத்தி செய்யமுடியும் என்பது இங்கு கருத்து. அது அன்னை மீதுள்ள நம்பிக்கையானால் அதற்கு அளவில்லை.

- பணம் என்பது நம்பிக்கை, சர்க்கார் மீது, பவுன் மீது, சர்க்காரின் நாணயத்தின் மீது, முடிவாக தன்மீது, அதையும் கடந்து அன்னை மீது உள்ள நம்பிக்கை பணம். அந்த

நம்பிக்கை பணத்தை உற்பத்தி செய்யும். எப்படி என்பதை கூறுவோம்.

- இதன் அம்சங்கள் ஆயிரம். நடைமுறை அம்சங்கள் அதைவிட அதிகம். அந்த கோணங்களிலிருந்து பணம் உற்பத்தி செய்வதை விளக்க எழுதப்பட்ட நூல் இது.

- இதுவரை உற்பத்தியான பணம் ஏராளம். ஆனால் எவ்வளவு பணம் உற்பத்தி செய்யமுடியுமோ அதில் உற்பத்தியானது கடுகளவு. அபரிமிதமாகப் பணம் உற்பத்தி செய்யும் வழிகள் அனந்தம்.

       அன்பு, அதிகாரம், சந்தோஷம், அறிவு, நல்லது, செயல்திறன், மனித ஒற்றுமை ,அழகு மௌனம், சாந்தி போன்ற எந்த உயர்ந்த அம்சத்தையும் அளவு கடந்து உற்பத்தி செய்யலாம் என்பது தத்துவம்.. புதியன வரும்பொழுது ஆபத்து எனக் கூக்குரல் எழுகிறது. சர்க்கார் புதியதாக வருபவை - அணுகுண்டு,cloning, பிளாஸ்டிக் - எவையானாலும் அவற்றை நல்லதற்கு மட்டும் பயன்பட சட்டம் இயற்றுகிறது. அபரிமிதமான பணத்திற்கும் அது போன்ற சட்டப் பாதுகாப்புண்டு.

 

தொடரும்...

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிறர் அறியாமை மூலம் இறைவன் உனக்குத் தெளிவேற்படுத்த விரும்புவதைக் கண்டு கொள்வது அடக்கம், நம் அறிவுக்குப் பின்னுள்ள அறியாமையையும் பிறர் அறியாமையைச் சூழ்ந்துள்ள அறிவையும் காண்பது அடக்கம்.

 

 



book | by Dr. Radut