Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்  

       உயர்திரு, மதிப்பிற்குரிய அப்பா அவர்களுக்கு தங்களின் வழியாக அன்னையின் கருணையை அனுதினமும் அனுபவித்து வரும் தங்கள் பக்தை எழுதுவது.

       தங்களுடைய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியையாவது வாழ்வில் அவ்வப்பொழுது அனுபவித்து அன்னையையும், தங்களையும் தினமும் நன்றியுடன் நினைத்து வந்து கொண்டிருக்கிறேன். இன்று இந்த மாத மலர்ந்த ஜீவியத்தில் வந்த தேடினால் கிடைக்காது, பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் என்பதை படித்த 2ம் நாளே அதை எங்கள் வாழ்வில் அனுபவித்த அந்த நிகழ்ச்சியை தங்களுக்கு தெரிவிக்கும் கடமையில் இதை எழுதுகிறேன்.

       என் பெரிய பெண்ணும், என் கணவரும் அவளுக்குப் பிறந்த நாளுக்கென்று வாங்க கடைக்கு போவதற்காக கிளம்பினார்கள். என் பெண் flat கதவைத் திறந்து வெளியே செல்லும் சமயத்தில் தன் காது தோடு கழன்று திருகு கீழே விழுவதை உணர்ந்தாள். உடனே இருவருமாக தேடினார்கள். சிறிது நேரத்தில் என் கணவர் இரண்டாவது பெண்ணை அழைத்துவர stationக்கு சென்று விட்டார். பிறகு கீழ் portionல் இருக்கும் 2 வீட்டுக்காரர்களுமாக சேர்ந்து என் பெண் தொலைத்த திருகை torch light வைத்து சுமார் பதினைந்து நிமிடம் தேடி இருக்கிறார்கள். (அப்பொழுது மணி சுமார் 8½ இரவு) ஆனால் திருகு கிடைக்கவில்லை. பிறகு கீழே இருப்பவர்கள் காலையில் வெளிச்சம் வந்தவுடன் பார்க்கலாம் என்று சொல்ல என் பெண் மேலே வந்து என்னிடம் விஷயத்தைச் சொன்னாள். அதுவரை அவள் கடைக்குப் போயிருப்பதாக தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவள் வந்து திருகு காணாமல் போய்விட்டது. தேடினோம் கிடைக்கவில்லை என்று சொன்னாள். அப்பொழுது நான் அவளிடம் தேடினால் கிடைக்காது. பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் என்று படித்தது ஞாபகம் வரவில்லையா? அன்னையிடம் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வா. இப்பொழுதே கீழே சென்று பார்ப்போம். கிடைத்துவிடும் என்று சொல்ல அவளும் அன்னையை நமஸ்கரித்துவிட்டு வந்தாள். இருவருமாகச் சென்று பார்க்கும் நேரத்தில் என் கணவரும் இளைய மகளும் வந்துவிட்டார்கள். அன்னையிடம் திருகு இருக்கும் இடத்தை நீங்கள் தான் கண்ணில் காட்ட வேண்டும் என்று கூறி நால்வருமாகத் தேட ஆரம்பித்தோம். ஒரு நிமிட நேரத்திற்குள் திருகு தரையில் மண்ணில் இருப்பது கண்ணில்பட்டது. அன்னையின் அந்த அருள் செயல்படும் விதமும், அப்பாவின் எழுத்திற்கு உள்ள மந்திர சக்தியும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. கீழே இருப்பவர்கள் இவ்வளவு நேரம் தேடியும் கிடைக்காதது ஒரு நிமிடத்தில் எப்படி கிடைத்தது என்று வியப்பும், ஆச்சரியமுமாகக் கேட்டார்கள். அது அன்னை சக்தி என்பதை அவர்களுக்கு எனக்குத் தெரிந்த அளவுக்கு விளக்கி சொன்னேனே தவிர அந்த நிமிடம் நான் அடைந்த மனநெகிழ்ச்சிக்கு எழுத எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை. தங்களின் எழுத்தை எப்பொழுதும் பக்தியுடன் படிக்கும் எனக்கு மேலும் பக்தியை உண்டு பண்ணிய இந்த நிகழ்ச்சியை நான் தங்களுக்கு மிகவும் பண்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். கீழ் portionல் உள்ளவர்கள் அன்னை photo மற்றும் தங்கள் புத்தகம் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அன்னையின் அருளை அனைவரும் பெற அருள வேண்டும். தங்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

****

 



book | by Dr. Radut