Skip to Content

04.நம்பிக்கை

 நம்பிக்கை

N. அசோகன்

இன்றைய விஞ்ஞான உலகில் இறை நம்பிக்கை என்பது தேவை இல்லாத ஒன்று என்ற ஒரு கருத்து விஞ்ஞானிகளிடையே அதிகம் பரவி இருக்கிறது. விஞ்ஞானிகள் மற்றும் பகுத்தறிவாளர்களின் பேச்சைக் கேட்டுப் பொதுமக்களும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞானிகள் குறிப்பாக மூடநம்பிக்கைகளைத் தாக்குகிறார்கள். ஐரோப்பாவில் வானஇயல் நிபுணர் கோப்பர் நிகேஸ் மற்றும் கலிலியோ என்ற இரு விஞ்ஞானிகளும் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற மூடநம்பிக்கையை 16ஆம் நூற்றாண்டில் தகர்த்து எறிந்தார்கள். அன்றிலிருந்து மூடநம்பிக்கைகளின்மேல் விஞ்ஞானத்தின் தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் டார்வின் என்ற ஆங்கில விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பரிணாம ரீதியாகத் தோன்றியவன் என்று ஆதாரங்களுடன் நிரூபித்தார். இந்த நிரூபணம் மனிதனைக் கடவுள் படைத்தார் என்ற பைபிள் கதையை பொய்யாக்கியதால் கத்தோலிக்க மடத்திற்கு இது ஒரு பெரிய அடியாக வீழ்ந்தது. இப்படி மூடநம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தது விஞ்ஞானம் உலகத்திற்குச் செய்த பெரிய சேவை என்று எடுத்துக்கொண்டாலும் இறை நம்பிக்கை நமக்கு இன்னமும் அவசியமாகத்தான் இருக்கிறது. மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்ததைப்போல் இறை நம்பிக்கையைத் தாக்குவது சரியில்லை.

ஆன்மீக விஷயங்களில் நம்பிக்கை ஒரு பெரிய இடத்தை வகிக்கிறது. விஞ்ஞானத்திற்குப் பரிசோதனை எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு ஆன்மீகத்திற்கு நம்பிக்கை முக்கியம். விஞ்ஞானி தம்முடைய பரிசோதனையில் கிடைக்கின்ற தகவல்களையும், புள்ளி விவரங்களையும் எந்த அளவிற்கு நம்புகிறாரோ அதே அளவிற்கு ஆன்மீகவாதி தன்னுடைய ஆன்மீக முயற்சிகள் வெற்றி அடைவதற்கு இறையருள் உதவும் என்று திடமாக நம்புகிறார். ஆகவே இரண்டு பேரும் நம்பிக்கையை வைத்துதான் செயல்படுகின்றனர். முறைதான் வேறேயொழிய, சாதனம் ஒன்றுதான். ஆன்மீகத்திற்கு மட்டும்தான் நம்பிக்கை அவசியம் என்றில்லை, நம்முடைய அன்றாட வாழ்க்கை கூட நம்பிக்கைகளில் தான் ஓடுகிறது. இந்த இடங்களில் உள்ள நம்பிக்கையை நாம் எடுத்துவிட்டால் நம் அன்றாட வாழ்க்கைகூட ஸ்தம்பித்துப் போய்விடும்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கை நமக்கு ஏன் தேவைப்படுகிறதென்றால் நம் வாழ்க்கையில் எல்லா அம்சங்களும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. ஆகவே நம் கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் நாம் மற்றவரை நம்பிச் செயல்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. நாம் நம்மை மட்டும் தான் நம்புகிறோம் என்றால், நம்முடைய சாப்பாட்டை நாமே சமையல் பண்ணிக்கொள்ள வேண்டும். எங்கே செல்ல விரும்பினாலும் நாமே வண்டியை ஓட்டிக்கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய ஷாப்பிங் வேலையையும் நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் உண்மையில் நாம் என்ன செய்கிறோம். ஹோட்டல்களில் மற்றவர்கள் சமைத்த உணவைச் சாப்பிடுகிறோம். முன்பின் தெரியாத ஓட்டுநர் ஓட்டும் பேருந்து, ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்கிறோம். கம்பனி வைத்திருந்தால் நம்முடைய கம்பனி பணத்தை வங்கியில் கொண்டு போய் டெபாசிட் செய்வது, எடுத்துவருவது என்ற வேலைகளை மற்றவர்களுக்கும் கொடுக்கிறோம். இதிலிருந்து தேவைப்படுகின்ற இடங்களில் நாம் மற்றவரை நம்புகின்றோம் என்று தெரிகிறது. ஆனால் அடுத்தவர்களை நம்ப முடியவில்லை என்ற நிலைமையில் நாம் இருந்தால், வெளியூருக்குப் பிரயாணம் செய்ய முடியாது; வெளியூர் ஹோட்டல்களில் சாப்பிட முடியாது; நம் பணத்தை அடுத்தவரிடம் ஒப்படைக்க முடியாது. சொந்தமாகக் கார் வைத்திருந்து நமக்கே ஓட்டத் தெரிந்தால்தான் நாம் வெளியூருக்கே செல்ல முடியும். நம் உடம்புக்கு வந்துவிட்டால், டாக்டர் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை நமக்கு இல்லாவிட்டால் சிகிச்சைக்காக அவரிடம்கூடச் செல்ல முடியாது. கோர்ட், கேஸ் என்று வந்துவிட்டால், வக்கீல்மேல் நம்பிக்கை இல்லாவிட்டால், நம்முடைய கேஸை நாமே வாதாட வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் தம்முடைய சேமிப்புகளை வங்கிகளில் போடுகிறார்கள் என்றால், தம்முடைய பணம் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் வங்கிகளில் போடுகிறார்கள். இந்தியாவில் எண்ணற்ற இளைஞர்களும், இளம் பெண்களும் தம் பெற்றோர் தமக்காகப் பார்த்துவைத்திருக்கும் முன்பின் தெரியாத வரனைத் திருமணம் செய்து கொள்வதைப் பார்க்கும்பொழுது, தமக்கு ஒரு நல்ல வாழ்க்கை தம்முடைய பெற்றோர்கள் அமைத்துக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையின் பேரில்தான் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வதாகத் தெரிகிறது.

இன்று நம்முடைய வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. இன்று புழக்கத்திலிருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துவிட்டால் நம்முடைய பொருளாதார வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். பணத்தினுடைய சக்தி எங்கிருந்து வருகிறது என்று புரியும். பணத்திற்கு இவ்வளவு மதிப்பு வருவதற்குக் காரணமே நாம் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கின்ற நம்பிக்கைதான். இதில் நாம் பணம் என்று சொல்வது உண்மையில் வெறும் பேப்பர்தான். அரசாங்கம் அதை அச்சடித்து, 'இது பணம்' என்று சொல்வதால் அதை நாம் பணம் என்று ஏற்கிறோம். தங்கத்திற்கும், வெள்ளிக்கும் இயற்கையிலேயே ஏதோ ஒரு மதிப்பு இருக்கிறது. 'பளபள'என்று ஜொலிப்பதால், அந்த ஜொலிப்பை வைத்து அதற்கு ஒரு மதிப்பை வைத்து, அதைப் பணமாக ஏற்றுக்கொள்ள மனம் முன்வருகிறது. ஆனால் இவ்வளவு சுலபமாக, பேப்பர் கரன்ஸிக்கு நாம் மதிப்பை வழங்கிட முடியாது. முதலில், அரசாங்கம் பேப்பர் கரன்ஸியைப் பணம் என்று சொல்வதை நாம் ஏற்க வேண்டும். இரண்டாவதாக, சமூகத்தில் எல்லோரும் பேப்பர் கரன்ஸியைப் பொருளாதார மதிப்பின் சின்னமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தவர் கொடுக்கின்ற பணத்தை நாம் ஏன் வாங்கிக்கொள்கிறோம் என்று பார்த்தால், அந்தப் பணத்தை மற்றவருக்குக் கொடுத்தால் அவர் அதை வாங்கிக்கொண்டு நமக்கு வேண்டியதைத் தருவார் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் நாம் அந்தப் பணத்தையே வாங்கிக்கொள்கிறோம். அடுத்தவர் இதைப் பணமாக வாங்கிக்கொள்ள மாட்டார்என்று நாம் நினைத்தால், நம்முடைய பொருளை நாம் யாருக்குமே கொடுத்துப் பதிலுக்குப் பணத்தை வாங்கவேமாட்டோம். ஏனென்றால் அந்தப் பணம் செல்லும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

நம்முடைய அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளே நம் உடம்பின்மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொருத்துதான் நடக்கிறது. நாம் சாப்பிடும்பொழுது நம்முடைய வயிறு நாம் சாப்பிடும் சாப்பாட்டை முறையாக ஜீரணம் செய்யும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் நாம் சாப்பிடுகிறோம். நாம் ஒரு கடுமையான வேலை செய்கிறோம்; அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்கிறோம் என்றால், அதற்கேற்ற எனர்ஜியை நம்முடைய இதயமும், நுரையீரலும் இரத்த ஓட்டத்தையும், சுவாசிப்பையும் உயர்த்தி அதன்மூலம் வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் நாம் அந்த வேலையிலேயே ஈடுபடுகிறோம். B.P. மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தங்கள் இதயமோ, நுரையீரலோ அதிக எனர்ஜியை வழங்கி ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. இந்த நம்பிக்கை இல்லாதபட்சத்தில் அவர்கள் கடுமையான வேலையோ, உடற்பயிற்சியோ செய்ய முன்வருவது இல்லை. ஒரு பெண் கர்ப்பம் அடையும்பொழுது அவளுடைய உடம்பு அந்த கர்ப்பத்தை முறையாகத் தாங்கி குழந்தையைப் பெற்றுத்தரும் என்று அவள் நம்புகின்றாள். உடல் பலஹீனமான இடத்தில் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை இல்லையென்றால், கர்ப்பம் தரிக்க ஒரு பக்கம் ஆசை இருந்தாலும் பயம் காரணமாக ஒரு பக்கம் பின்வாங்கவும் நேரிடலாம். முதல் கர்ப்பம் நிற்காமல் miscarriageஆன பெண்களை எடுத்துக் கொண்டால், நான் சொல்வது புரியும். அடுத்த முறை கர்ப்பம் தரிக்கும் பொழுது இதுவும் நிற்காமல் போய்விடுமோஎன்று அவர்களுக்கு வருகின்ற கவலையை நாம் பார்க்கும்பொழுது, நம்பிக்கை மனிதனுக்கு எந்த அளவு உதவுகின்றதுஎன்று புரியும். சைவ சாப்பாடு சாப்பிடுகிறவர்கள் வெளிநாடு செல்லும்பொழுது அசைவ சாப்பாடு சாப்பிட்டால் தம் வயிறு ஜீரணம் செய்யுமோ, செய்யாதோஎன்று பயம் வந்து, தாம் விரும்பிய சைவ சாப்பாட்டைத் தயார் செய்துகொள்வதற்கு மிகுந்த சிரமம் எடுப்பதைப் பார்க்கலாம். சாதாரண, அன்றாடச் செயல்பாடுகளுக்கே இவ்வளவு நம்பிக்கை தேவைப்படுகிறது என்றால், புதுமையான,creativeஆன வேலை செய்வதற்கு எவ்வளவு நம்பிக்கை தேவைப்படும்என்று எண்ணிப்பார்க்க வேண்டும். எல்லா creativeஆன வேலைகளிலும், இதற்குமுன் பரிச்சயம் இல்லாத இடங்களிலும் ஆராய்ச்சி செய்யவேண்டி இருக்கும். கண்டுபிடிப்பாளர்கள் தங்களுடைய முயற்சி எப்பொழுது, எப்படி வெற்றி பெறும் என்று தெரியாமலேயே தங்கள் வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குச் செல்வதற்கு மேற்குத் திசையில் வழி கண்டுபிடிக்க வேண்டுமென்று கப்பலில் கிளம்பிய ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில்தான் பயணத்தைத் தொடர்ந்தார்கள். தாங்கள் சரியான பாதையில் தான் செல்கிறோமா, இந்தியா கண்ணுக்குத் தென்படுமா, உயிருடன் திரும்பி வரமுடியுமா என்பனவெல்லாம் தெரியாத நிலையில், தொடர்ந்து முயன்றால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வடதுருவம் மற்றும் தென்துருவத்தைத் தேடிச் சென்ற ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையில்லாமல் சென்றிருந்தால் எதையுமே சாதித்திருக்க முடியாது. இடையில் வந்த சிரமங்களால் மனமுடைந்து பாதியிலேயே திரும்பி இருப்பார்கள். எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் கடும்குளிர், புயல், காற்று, பட்டினி, உடல்நலக்குறைவு, இருட்டு போன்ற எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டிச் சென்றிருக்கிறார்கள்.

போர்க்காலத்தில் நம்பிக்கை இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஏனென்றால் எதிரி நம்மைவிடப் பல மடங்கு பெரிய படையுடன் வரலாம். அப்பட்சத்தில் நம்மைவிடப் பெரிய படையை முறியடிக்கக்கூடிய தைரியம் நமக்கு வரவேண்டுமென்றால் நமக்கு நம்பிக்கை இருந்தால் தான் தைரியம் வரும். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மானிய விமானத் தாக்குதலில் இருந்து இங்கிலாந்து நாட்டை சர்ச்சில் காப்பாற்றியது இதற்கு ஒரு நல்ல உதாரணம். ஜெர்மானிய விமானப் படையையும், இங்கிலாந்தின் விமானப் படையையும் ஒப்பிடும்பொழுது, ஐந்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது. ஐரோப்பாவில் உள்ள மற்ற அனைத்து நாடுகளும் ஜெர்மனிக்கு சரண் அடைந்திருந்தனர். உடனடி உதவி எதுவும் கிடைக்காதுஎன்ற நிலையில், இங்கிலாந்து மட்டும் தனித்து ஹிட்லரை எதிர்க்கத் துணிந்தது. சர்ச்சில் தமக்கிருந்த அபார நம்பிக்கையை ஆங்கிலேய மக்களுக்கும் வழங்கி, ஜெர்மானியப் படையெடுப்பை முறியடிக்க அவர்களையும் ஊக்கப் படுத்தினார். இறுதியில் ஜெர்மானிய விமானப் படைதான் பின்வாங்கியது. ஒரு தனி மனிதனுடைய தன்னம்பிக்கைக்குமுன் ஒரு படையே பின் வாங்குகிறது என்றால், நம்பிக்கையினுடைய பலம் என்ன என்பதை நாம் உணரலாம்.

இலட்சியச் சேவை மற்றும் புரட்சிகரமான வேலை என்று வரும் பொழுது, தன்னுடைய இலட்சியத்தின்மேல் அபார நம்பிக்கையில்லாமல் அதைச் செய்வது கடினம். மகாத்மா காந்தி அவர்கள் அஹிம்சை மற்றும் சத்தியாகிரகத்தின் மூலம் இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கித் தருவேன் என்று அறிவித்தபொழுது, இவற்றின்மூலம் ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு வெளியேற்ற முடியுமாஎன்று பெரும்பான்மையான மக்கள் சந்தேகப் பட்டனர். ஆனால் மக்களுடைய சந்தேகம் அவருடைய நம்பிக்கையைக் குறைக்கவில்லை. அவர் தம்முடைய சத்தியாகிரகப் போராட்டத்தைத் துவக்கினார். பல தடவை சிறைவாசம் அனுபவித்த பின்னர், இறுதியாகத் தம் இலட்சியம் வெற்றிகரமாகப் பலித்ததைக் கண்டார். அவரைவிட மனோதிடம் குறைந்த எவராக இருந்தாலும், ஒன்று வன்முறைக்கு மாறி இருப்பார்கள், அல்லது அரசியலைவிட்டு விலகி இருப்பார்கள்.

ஆன்மீகமான இலட்சியமாக இருந்தால், நம்பிக்கை இன்னும் பல மடங்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும். 1914ஆம் ஆண்டு பகவானை புதுவையில் அன்னை சந்தித்த பொழுது, "எண்ணற்ற மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தாலும் பகவான் ஒருவர் பூமியில் இருந்தால் போதும், உலகம் இருளின் பிடியில் இருந்து நிச்சயமாக வெளிவரும்'' என்று எழுதினார். இந்த முழுஉலகமே சத்தியஜீவியத்தின் வருகையைப் பற்றி அறியாமல் இருந்தாலும், பகவான் ஒருவருக்காக சத்தியஜீவியம் வரும்என்று அன்னை எழுதுகிறார் என்றால், பகவான்மேல் அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்திருப்பார்என்று நாம் உணர வேண்டும்.

ஆன்மீகத் துறை கண்ணுக்குத் தெரியாத துறையாக இருப்பதால் நம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. கண்ணுக்குத் தெரியாத ஒரு துறையில் முன்னேற வேண்டுமென்றால் நம்பிக்கை இல்லாமல் முடியாது. நாம் காணுகின்ற ஜட உலகு நம் கண்ணுக்குத் தெரிந்த பொருட்களால் நிறைந்தது. ஆகையால் இவ்வுலகை நாம் அறிவால் புரிந்துகொண்டு செயல்படலாம். ஆன்மீகம்என்பது சூட்சும உலகத்தைச் சார்ந்தது. சூட்சும உலகமோ கண்ணுக்குத் தெரியாது. ஆகவே நாம் அதை அறிவால் புரிந்துகொள்ள முடியாது. ஒரு நம்பிக்கையின்பேரில்தான் அந்த ஆன்மீகத் துறையில் நாம் செயல்பட முடியும். ஆன்மீகத்தில் நம்பிக்கை என்றால் என்ன என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆன்மாவிற்கு உண்மை என தெரிந்தது அறிவு நிலையில் நம்பிக்கையாக மாறுகிறது. மனித மனம் அறியாமையில் இருப்பதால் ஆன்மா தன்னுடைய ஞானத்தை அறிவுக்கு நேரிடையாக வழங்க முடியாது. ஆகவே புரியாத விஷயங்களை அறிவு அப்படியே நம்பிச் செயல்பட்டால் போதும் என்றாகிறது.

ஆன்மீகத் துறையில் ஆன்மீக முன்னேற்றத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்களும் உள்ளார்கள். இறையருளால் வாழ்க்கையிலுள்ள பிரச்சினைகள் தீர்ந்தால் போதும்என்று பிரார்த்தனை செய்கின்ற சாதாரண அன்பர்களும் இருக்கின்றார்கள். ஆன்மாவைக் கண்டுபிடிக்க முயலும் சாதகனாக இருந்தாலும் சரி, அல்லது ஐஸ்வரியத்தைத் தேடும் அன்பனாக இருந்தாலும் சரி, இருவருக்கும் அவரவர் நிலையில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். தன்னுடைய அகந்தையை வென்று, ஆன்மாவை நெருங்க முடியுமா என்று எழுகின்ற சந்தேகங்களை முறியடிக்க சாதகனுக்கு நம்பிக்கை வேண்டும். சூழ்நிலையில் உள்ள இடர்ப்பாடுகளையெல்லாம் முறியடித்து அருள் தான் விரும்பிய வருமானத்தைக் கொடுக்குமாஎன்ற இடத்தில் எழுகின்ற சந்தேகங்களை முறியடிக்க அன்பருக்கு நம்பிக்கை வேண்டும்.

ஆன்மீகம் என்பது அதனுடைய எல்லாப் பாகங்களிலும் ஒரு நேர்த்தியை நாடுகிறது. ஆன்மீகப் பண்புகளான நன்றியறிதல், பணிவு, உண்மை பேசுதல், இறையார்வம், தன்னைப் பிறருக்கு வழங்குவது, சரணாகதி மற்றும் சமர்ப்பணம்என்று இவையெல்லாம் முழுமையாக இருக்கும்பட்சத்தில் தான் அவற்றிற்குரிய முழுப்பலன் கிடைக்கும். இதே நியதி நம்பிக்கைக்கும் பொருந்தும். 'அன்னையின் அருளால் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வது' என்று ஓர் அன்பர் முடிவு செய்துவிட்டபிறகு, அருளின்மேல் வைக்கின்ற நம்பிக்கையை பாதிக்கக்கூடிய எந்தச் சந்தேகத்தையும் அவர் அனுமதிக்கக் கூடாது. நம்பிக்கை மற்றும் சந்தேகம், இவையிரண்டும் நேர் எதிரிகள். சந்தேகத்தை அனுமதிக்கும் அளவுக்கு நம்பிக்கை குறைந்துபோகும். உதாரணமாக, ஓர் அன்பர் தம் சக்திக்கு மீறிக் கடன் வாங்கிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்; கடனைத் திருப்பும் அளவுக்குத் தம் வருமானத்தை உயர்த்தும்படி அன்னையிடம் கேட்பதாக வைத்துக் கொள்வோம்; அதன்பின்னர் அருளால் அவருடைய வருமானத்தை எப்படி உயர்த்த முடியும்என்றோ, அது சாத்தியமாஎன்றோ கேள்விகள் எழ மனதில் அனுமதிக்கக்கூடாது. வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவருடைய அறிவு அவருக்குச் சொல்லலாம். ஆனால் அறிவு எழுப்பும் சந்தேகங்களைப் பொருட்படுத்தாமல் அருள் அவர் வாழ்க்கையில் செயல்படுவதற்கு உதவக்கூடிய பண்புகளான சுத்தம், காலம் தவறாமை, முறையாகக் கணக்கெழுதுதல், பரநலம் பாராட்டுதல் போன்ற நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேலை, வருமானம், மனித உறவுகள், சாதனை ஆகியவற்றைப் பற்றிய அன்னையின் கருத்துகளைத் தெரிந்துகொள்கின்ற அன்பர் அவற்றை எந்தச் சந்தேகமும் இல்லாமல் அவருடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார் என்றால், இவ்விஷயங்களில் அவர் அன்னையை முழுமையாக நம்புகிறார் என்று அர்த்தம். அன்னையை நம்புவதாகச் சொல்கின்றவர் அதே சமயத்தில் தம் சொந்த வாழ்க்கையில் பிரச்சினை வரும்பொழுது அன்னையின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தயங்குகிறார்என்றால், உண்மையில் அவருடைய நம்பிக்கை முழுமையானது இல்லை என்று அர்த்தம். உதாரணமாக, கையிலிருக்கின்ற பணத்தைப் போட்டுச் செய்ய வேண்டிய வேலையைச் செய்தால், மேற்கொண்டு தேவையான பணம் தானாக வரும் என்ற அன்னையின் விதிமுறையை அன்பர் ஒருவர் கேள்விப்படுவதாக வைத்துக்கொள்வோம். இந்த விதிமுறையை நம்புகிறார் என்றால், தம் கையிலிருக்கின்ற பணத்தைப் போட்டு அவர் உடனே வேலையை ஆரம்பிக்க வேண்டும். ஒரு சில அன்னை அன்பர்கள் இம்மாதிரி செயல்பட்டு இருக்கிறார்கள். அம்மாதிரி செயல்படும்பொழுது கையிலிருக்கின்ற பணம் தீருகின்ற கட்டத்தில் வேலைக்குத் தேவையான கூடுதல் பணம் தானாக வருவதைப் பார்த்துமிருக்கிறார்கள். இப்படிச் செயல்படாமல் வேலைக்குத் தேவையான எல்லாப் பணமும் கைக்கு வந்தால்தான் வேலையைத் துவங்குவேன்என்று ஓர் அன்பர் பேசினாரென்றால், இவ்விஷயத்தில் அவர் அன்னையை முழுமையாக நம்பவில்லைஎன்று அர்த்தம்.

நம்பிக்கையின் பேரில் ஒருவர் செயல்படுவதாகச் சொல்லும்பொழுது வரம்பற்ற ஜீவிய நிலையின் உயர்ந்த செயல்பாட்டை அவர் நம்புகிறார் என்று அர்த்தம். வரம்பற்ற நிலையினுடைய செயல்பாடு வரம்புக்கு உட்பட்டதனுடைய செயல்பாட்டிற்கு நேர் எதிர்மாறானதாக இருக்கும். நாம் அற்புதம்என்று சொல்வது இந்த உயர்ந்த வரம்பற்ற நிலை வரம்புக்கு உட்பட்ட ஜடநிலைக்கு இறங்கி வந்து, அங்கே தன் ஆற்றலை நிரூபிப்பது ஆகும். ஆகவே, இவ்விடத்தில் அருளை நம்பிச் செயல்படுகின்றவர்கள் மேற்கண்ட உயர்ந்த, வரம்பற்ற நிலையின் செயல்படும் தன்மை மற்றும் குணவிசேஷங்கள் என்னஎன்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. குறிப்பாக வரம்பற்ற நிலை வரம்புக்குட்பட்ட நிலையிலிருந்து எந்த அளவுக்கு மாறுபடுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. வரம்பற்ற நிலையின் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு, அதன்படி செயல்படுகின்றவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் மற்றவர்களுடைய கேலியைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்களுடைய செயல்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.

வரிசை எண்

வரம்புக்குட்பட்ட நிலையின் செயல்பாடு

வரம்பற்ற நிலையின் செயல்பாடு

1

வளர்ச்சி என்பது வெளியிலிருந்து வாங்கிக்கொள்வதால் மட்டும் வருகிறது.

பிறருக்குக் கொடுப்பதால் அதிக வளர்ச்சி வருகிறது.

2

சேமிப்பு செய்வதால் பணம் பெருகுகிறது.

செலவு செய்வதால் பணம் பெருகுகிறது.

3

புறம் அகத்தை நிர்ணயிக்கிறது.

அகம் புறத்தை நிர்ணயிக்கிறது.

4

நம் கண்ணோட்டம் மற்றவர் கண்ணோட்டத்தை விட முக்கியம்.

அடுத்தவர் கண்ணோட்டம் நம் கண்ணோட்டத்தைவிட முக்கியம்.

5

கடந்த கால தவறுகளைச் சரி செய்வது சிரமம்.

சமர்ப்பணத்தின்மூலம் கடந்த காலத் தவறுகளைச் சரி செய்யலாம்.

6

பகுதி முழுமையைவிடச் சிறியது.

பகுதி முழுமையைவிடப் பெரியதாக இருக்கக்கூடும்.

7

இயற்கை வளங்கள் அளவுக்குட்பட்டு இருப்பதால் வளர்ச்சியும் அளவுக்குட்பட்டுதான் இருக்கும்.

நம்முடைய அறிவுத்திறன் அளவுகடந்து இருப்பதால் வளர்ச்சிக்கு வரம்பில்லை.

8

காலம் மற்றும் இட தடைகளை வெல்ல முடியாது.

கால, இட தடைகளை வெல்ல முடியும்.

9

பணம், பொருள், மனிதர்கள் என்று இவற்றின்மேல் அகந்தைக்குள்ள பிடியை வலுப்படுத்த வேண்டும்

இவ்விஷயங்களில் அகந்தை தன் பிடியைத் தளர்த்தி ஆன்மா செயல்பட அனுமதிக்கும்.

10

அகந்தை தன் அதிகாரத்தை வலியுறுத்தி வளரும்.

ஆன்மா தன்னுடைய மௌன சக்தியால் வளரும்.

 

வரம்பற்ற நிலையின் மேற்கண்ட விதிமுறைகளைத் தெரிந்து கொள்கின்றவர்கள் இவ்விதிமுறைப்படித் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். இவ்விதிமுறைகளை நம்புகின்ற அன்பர் தொழில் செய்பவராக இருந்தால் ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க முன்வர வேண்டும். ஊதியத்தை அதிகரிக்கும்பொழுது அவருடைய உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதனால் விற்பனை அதிகரித்து, வருமானம் அதிகரிக்கும். செலவைக் குறைப்பதற்காகச் சம்பள விஷயத்தில் சிக்கனம் காட்டுகின்ற மற்ற சாதாரணத் தொழிலதிபர்போல இவர் செயல்படக்கூடாது. தம்முடைய கஸ்டமர்களுக்கு விலையை சந்தோஷமாகக் குறைக்க முன்வர வேண்டும். எப்பொழுது விலையை ஏற்றலாம்என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. மார்க்கெட்டிலிருந்து கிடைக்கும் ஆதரவு மற்றும் மலிவான கச்சாப் பொருட்கள் என்று இவற்றை நம்புவதைவிடத் தம்முடைய ஸ்தாபனத்தி-னுடையorganisational பண்புகள் மற்றும் ஊழியரின் திறமைகளை அதிகமாக நம்ப வேண்டும். எல்லா வியாபார நடவடிக்கைகளையும் அடுத்தவர் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க வேண்டும். அன்னையிடம் வருவதற்குமுன் நஷ்டப்பட்டிருந்தாலும் அன்னையிடம் வந்தபிறகு ஆத்ம சமர்ப்பணத்தின்மூலம் கடந்தகாலத் தவறுகளைச் சரி செய்து நஷ்டத்தில் இருந்து மீளலாம்என்று நம்ப வேண்டும். தம் நிறுவனத்தையே இழந்திருந்தாலும் தம்மால் மீண்டும் ஒரு புதிய நிறுவனத்தை நிறுவி, முன்னைவிடப் பெரிதாக வளர முடியும்என்று நம்ப வேண்டும். பழைய கம்பெனியைக் குறிப்பிட்ட அளவு வளர்ப்பதற்குப் பத்து வருடம் ஆகிறதென்றால், புதிய கம்பனியை அதில் பாதி வருடங்களில் இரண்டு மடங்கு பெரிதாக்க முடியும்என்று நம்ப வேண்டும். ஊழியர்கள் கம்பனியை விட்டு விலகி தாமே சொந்தமாக ஒரு நிறுவனம் அமைக்க விரும்பினால், அதைக் கண்டு அஞ்சக்கூடாது. மார்க்கெட்டைத் தேடி தாம் போவதற்குப் பதிலாக மார்க்கெட் தம்மை நாடி வருமளவிற்குப் புற நிகழ்ச்சிகளை அக உணர்வுகளால் நிர்ணயிக்க வேண்டும்.

வரம்பற்ற உயர்நிலை நம் வாழ்க்கையில் செயல்பட வேண்டுமென்றால் அந்நிலையின் மீது நமக்கு அளவுகடந்த நம்பிக்கை வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதற்கேற்ற அளவுக்குப் பலன்களும் கிடைக்கும். சமூகம் பொதுவாகப் பணம், பதவி, அந்தஸ்து, ஊர் வழக்கம் போன்றவற்றின் மேல் நிறைய நம்பிக்கை வைத்திருக்கும். உயர் நிலைக்கு நம்பிக்கையை கொண்டுபோக விரும்புகின்றவர் சமூகம் நம்புகின்ற விஷயங்களின் மேல் தமக்குள்ள நம்பிக்கையைக் கைவிட வேண்டும். அவருக்குப் பிரச்சினை என்று வந்தால் தம்முடைய பண பலத்தாலோ, பதவி பலத்தாலோ அல்லது தமக்குள்ள சமூகச் செல்வாக்கை வைத்துக்கொண்டோ அந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாமா என்று எண்ணக்கூடாது. இந்த எல்லா அணுகுமுறைகளையும் பயன்படுத்திப் பார்த்து பலனில்லாதபட்சத்தில் அன்னையிடம் பிரார்த்தனை செய்தாரென்றால், அது நம்பிக்கைக்கு அடையாளமாகாது. ஆனால், துவக்கத்திலேயே பிரச்சினை வந்தவுடன் அன்னையிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு, அருள் காட்டும் வழிகளில் செயல்பட முன்வந்தாரென்றால் அவர் அருளைப் பரிபூரணமாக நம்புகிறார் என்று அர்த்தம். உதாரணமாக, ஒரு பணக்கார அன்பரை இன்னொருவர் வழக்குத் தொடுத்து, கோர்ட்டுக்கு இழுப்பதாக வைத்துக்கொள்வோம். அன்பர் உடனே ஒரு பெரிய தொகை கொடுத்து, ஒரு பெரிய வக்கீலை நியமித்து வழக்கை எதிர்கொள்ளத் தீர்மானிக்கிறாரென்றால் அவர் தம் பண பலத்தைதான் நம்புகிறார்என்று அர்த்தம். அல்லது தமக்குத் தெரிந்த சமூகத்திலுள்ள பெரிய மனிதர்கள் சிலரைத் தமக்கு சாட்சியாக கோர்ட்டிற்கு வரும்படி அழைக்கிறாரென்றால் அவர் தம் சமூகச் செல்வாக்கைத்தான் நம்புகிறார் என்று அர்த்தமாகிறது. தன்னிடம் இருக்கின்ற பத்திரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வைத்து வழக்கில் ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார் என்றால், அவர் தம்மைத்தான் நம்புகிறார்என்று ஆகிறது. வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதுஎன்று கேள்விப்பட்டவுடன் தம் பணபலம், பதவிபலம், சமூகச் செல்வாக்குஎன்று எல்லாவற்றையும் மறந்து, அன்னைதான் அவருக்கு முதலில் நினைவுக்கு வருகிறதென்றால், அவர் நம்பிக்கை முழுமையானதுஎன்று சொல்லலாம். பணபலம், பதவி பலம் என்று இவற்றை நம்புவது வேறு; நம்பிக்கை அன்னை பேரில் இருக்க, வழக்காடுவதற்குத் தேவையான வக்கீல் சம்பளம் மற்றும் சாட்சிகளைச் சேகரிப்பது என்ற இடத்தில் இவற்றைச் சாதனமாகப் பயன்படுத்துவது வேறு. நம்பிக்கை அன்னையின் பேரில் இருந்தால் பணம் மற்றும் சாட்சிகள் எல்லாம் கருவிகள்தாம் என்ற நிலையில் அன்பர் இருந்தால், இவர் மேல் வழக்கைத் தொடுத்தவர் மனம் மாறி சமாதானத்திற்கு வரலாம். அல்லது பெரிய வக்கீல் அவருடைய நிலைக்கேற்ற பெரிய சம்பளம் கேட்காமல் இவருக்கு வேலை செய்யலாம். இவருக்குப் பிரச்சினை வந்துவிட்டதுஎன்று தெரிந்தவுடன் சமூகத்தில் செல்வாக்கு உள்ள இவருடைய நண்பர்கள் இவர் கேட்காமலேயே தாமாக சாட்சிகளாகச் செயல்பட முன்வரலாம். அல்லது எதிராளி தொடுத்த வழக்கு ஆதாரமில்லாததுஎன்று கூறி நீதிபதி தள்ளுபடி செய்யலாம். அன்பரின் நம்பிக்கை முழுமையாக இருந்தால் இவையெல்லாமே சாத்தியம். ஆனால், அன்பருக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிந்தால், அவருடைய பதவி, பணபலம், சமூகச் செல்வாக்கு மற்றும் ஆவணங்களின் ஆதாரம் என்று எதுவுமே அவரைக் காப்பாற்ற முடியாமலும் போகலாம். அன்னையின் அருள்தான் தமக்கு ஒரே பாதுகாப்பு என்று அவர் உணரும் கட்டத்தில்தான் அவருக்கு அந்த வழக்கிலிருந்து விடுதலை கிடைக்கலாம்.

நிறைய பேர் physical levelனுடைய வரம்புகளை நிலையானது என்று எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வரம்புகளை மீறி அருள் நமக்கு வேண்டியதைப் பெற்றுத்தரும் என்று நம்புவதே அவர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. ஒருவரிடம் டாக்டர் அவருக்கு கேன்சர் வந்திருக்கிறது; குணப்படுத்த முடியாதளவிற்குப் பரவிவிட்டதுஎன்று சொல்கிறாரென்றால், டாக்டர் சொல்லியதை அப்படியே நம்பி, நோயாளி உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை இழக்கிறார். ஒரு கூட்டம் அதிகமான இடத்தில் தம்முடைய பணத்தையோ, மோதிரத்தையோ அல்லது செல்போனையோ தொலைக்கின்றவர், 'போனது போனதுதான்' என்று நம்பிக்கையை இழக்கிறார். பணத்தையோ, பொருளையோ கவனிக்காமல் விட்டுவிட்டு வந்துவிட்டால், அது திருடுபோகும் என்பது ஒரு பரவலான நம்பிக்கை. அதை நம்புகிறவர்களுக்கு அதுவே பலிக்கிறது. தவறவிடுகின்ற வாய்ப்புகள் திரும்ப வருவதில்லை என்பதும் ஒரு பரவலான நம்பிக்கை. நீண்ட நாள் கடினமாக உழைத்தால்தான் நிறைய சம்பாதிக்க முடியும்என்பது ஒரு நம்பிக்கை. நீண்ட நாட்கள் தேவையில்லை; குறைந்த நாட்களிலேயே நிறைய சம்பாதிக்கலாம்என்று இப்படிப்பட்டவர்களிடம் சொன்னால் அவர்களால் அதை நம்ப முடியாது.

ஆனால் உண்மையில் எந்தச் சூழ்நிலையையும் நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். நாம் அருளைப் பரிபூரணமாக நம்புகிறோம்என்ற ஓர் ஒத்துழைப்பை நாம் வழங்கினால்போதும். 1983இல் மாரீஸ் குட்மென் என்ற ஓர் அமெரிக்க பைலட் ஓட்டிய விமானம் விபத்துக்குள்ளாகியதால் முதுகெலும்பில் அடிபட்டு நடக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் நோயாளியாகச் சேர்ந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் தம்முடைய முதுகெலும்பு, குரல்வளை, உதரவிதானம் என்று எல்லாவற்றை- யும் காயப்படுத்திவிட்டதால் அவரால் நடக்கவோ, பேசவோ, சாப்பிடவோ, சுவாசிக்கவோகூட முடியாதுஎன்று பேசினார்கள். ஆனால் அவர்கள் சொன்ன எதையும் இவர் நம்பத் தயாராக இல்லை. தாம் குணமாகி ஆறே மாதத்தில் மருத்துவமனையை விட்டு நடந்தே வெளியேற வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்கு ஏற்றளவு தம்முடைய மனோதிடத்தை வலுப்படுத்தினார். தாம் பூரண குணம் அடைந்து எல்லோரையும்போல் செயல்படுவதுபோல தம்முடைய அகக்காட்சியில் கற்பனையாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவர் சொன்னதுபோலவே ஒன்றன் பின் ஒன்றாகத் தம்முடைய உடல் குறைபாடுகளைச் சரி செய்துகொண்டு, அவர் முடிவு செய்திருந்த நாளில் மருத்துவமனையைவிட்டு நடந்தே வெளியேறினார். அவரைக் காப்பாற்றியது அவருக்கிருந்த இறை நம்பிக்கை. அவருடைய Higher Selfஐ மட்டும் முழுமையாக நம்பி, டாக்டர்கள் சொன்னதை உதாசீனம் செய்தார். அவருடைய Higher Selfஐ அவர் நம்பியது அவர் அன்னையை அழைத்ததற்குச் சமமாகும். அன்னையைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் Higher Self என்ற ரூபத்தில் அன்னையின் அருள்தான் வாழ்க்கையில் செயல்பட்டு அவரைப் பிழைக்க வைத்தது என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவன் முழுவதும் நிலைப்பது, விழிப்பில் ஏற்படுவது; தியானத்தில் அன்று.

விழிப்பில் ஜீவன் முழுவதும் தியானத்தில் ஆழ வேண்டும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சரியாகச் செய்தால் 'திருவுளம் நிறைவேறட்டும்' என்பது அகந்தையைக் கரைக்கும் என்கிறார் அன்னை. எது சரி? பேச்சு, நோக்கம் போன்றவற்றிற்கு நோக்கம் இருப்பதைப் போல் 'திருவுளம் நிறைவேறட்டும்' என்பதற்கும் ஓர் உண்மை உண்டு. வாயால் சொன்னால் அது சப்தமாகி, சீக்கிரம் அலுத்துவிடுகிறது. ஆழத்திலிருந்து, உண்மையில்லாமல் சொன்னால் சீக்கிரம் எரிச்சல் வரும். ஒவ்வொரு சமயத்திலும் நம் இச்சை (will) ஓர் அபிப்பிராயம், பிரியம், வேகம், உந்துதலாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். இறைவனை அழைப்பதன் முன் நம்மை ரத்து செய்ய வேண்டும். ஆழ்ந்த இடத்தில் திருவுள்ளத்தை நாட வேண்டும். அது சரி. அப்படி உச்சரித்தால், அது உள்ளுறை பிரம்மத்தைத் தொடும். அதற்கு மேல்உலகம் குரல் எழுப்பும்.

ஆழ்ந்து திருவுள்ளத்தை நாடினால் உலகம் குரல் எழுப்பும்.


 


 

 



book | by Dr. Radut