Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி


928) ஒரு புது விஷயத்தை நமக்கு ஏற்கனவே தெரிந்ததைக் கொண்டு புரிந்துகொள்வது அறிவு. புது விஷயத்தை அதன் கோணத்தில் புரிந்துகொள்வது சிந்தனையாகும்.

உள்ளதை உள்ளபடி அறிவது சிந்தனை.


 

பாங்க் லோன் கொடுக்கிறது. பெறுபவர் வட்டிக் கடையை அறிவார். வட்டிக்காக பாங்க் லோன் கொடுக்கிறது என்பது அறிவு. நாடு முன்னேற சர்க்கார் பாங்க் மூலம் ஏழைகட்கு ஈடு இல்லாமல் பணம் கொடுத்து, ஏழ்மையை விலக்க முயல்கிறது என்பது சிந்தனையால் தெரிந்து கொள்வது.

. அறிவு நமது அனுபவம் (Subjective) -- அகம்.

. சிந்தனை உள்ளதை அறிவது (Objective) -- புறம்.

பயங்கரவாதிகள் தங்கள் மதத்தைப் பரப்ப எதிரியைத் தாக்குகிறார்கள் என்பது அறிவு.

நாட்டில் ஏழ்மை மலிந்துள்ளதால், படித்த இளைஞர் வேலையில்லாமல் இருப்பதால், பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறிவது -- சிந்தனை.

மேல்நாட்டார் வேவு பார்க்க இந்தியாவுக்கு வருகின்றனர் என்பது மனிதன் தனக்குத் தெரிந்ததன் மூலம் தெரியாததை அறிவது --அறிவு எனப்படும்.

ஆன்மீகத்தை நாடி இளைஞர்கள் இந்தியா வருகின்றனர் என்பது சிந்தனையின் தெளிவு.

கல்லூரி நடத்துவது இலாபகரமானது என்பதால் கல்லூரிகள் பரவுகின்றன -- அறிவு.

சுதந்திரம் வந்தபின் நாடு சுபிட்சம் பெற அறிவை நாடுவதால் கல்லூரிகள் ஏராளமாக ஏற்படுகின்றன -- சிந்தனையின் முடிவு.

மேல்நாட்டார் மார்க்கட் தேடி இந்தியா, சைனா வருகின்றனர் --அறிவு.

மனித குலம் ஒன்றுபட வியாபாரம் மூலம் முயல்கிறது -- சிந்தனை.

சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி வருகிறது -- அறிவு.

உடலால் சர்க்கரையை ஜீரணம் செய்ய முடியாத பொழுது வரும் வியாதிக்கு நீரிழிவு, சர்க்கரை வியாதி எனப் பெயர் -- சிந்தனை.

அரசியல் கட்சிகள் போட்டியால் பத்திரிகைகள் வளர்கின்றன --அறிவு.

கல்வி பரவுவதால், மக்கள் படிக்க ஆர்வத்தால் பத்திரிகைகள் வளர்கின்றன -- சிந்தனை.

ஜனத்தொகை பெருகுவதால் நீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது -- அறிவு.

நாகரீகம் உணர்ச்சியை வறட்சியாக்கியதால் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது -- சிந்தனை.

நான் உதவ முடியாததால் என் நண்பன் எதிரியாகிவிட்டான் -- அறிவு.
 

உதவி பெற்றதால் தாழ்வு மனப்பான்மை அவனை எதிரியாக்கிவிட்டது -- சிந்தனை.

பக்தியால் நாம் அன்னையை நாடி வருகிறோம் -- அறிவு.

அன்னை நம்மை நினைப்பதால் நாம் அன்னையை நாடி வருகிறோம் -- சிந்தனை.

****

929) ஆண், பெண் கவர்ச்சி இயற்கைக்குரியது. மனைவி தன்னைப் பாராட்டி அன்பு செலுத்துவாள் என்பது உணர்வு. மனைவியின் ஆன்மாவுடன் கணவன் ஆன்மா கலப்பது ஆன்மீகம்.

கவர்ச்சி இயற்கை; அன்பு உணர்ச்சி; ஆன்மா இரண்டறக் கலக்கும்.


 

சேவல், பெட்டை என ஆண், பெண் கோழியைக் கூறுகிறோம். பெண் என்ற சொல் விலங்கினத்திற்குரியதன்று, மனித குலத்திற்குரியது.

மனைவி என்பது குடும்பத்தில் கணவனை ஏற்றுக்கொண்ட பெண்ணுக்குரியது.

ஆன்மீக அம்சம் பெற்ற மனைவி, சக்தியாகிறாள்.

பெட்டை, பெண், மனைவி, சக்தி என்பவை பெண் உயரும் பாதை.

காளை, ஆண், புருஷன், ஈஸ்வரன் என்பவை அதே நிலைகளைக் குறிக்கும் ஆணுக்குரிய சொற்கள்.

. கவர்ச்சி உணர்ச்சியாவது விலங்கு மனிதனாவது.

. மனிதன் தெய்வமாக புருஷன் ஈஸ்வரனாகவும், மனைவி சக்தியுமாக வேண்டும்.

. திருமணமாகி, பிள்ளை பெற்று, குடும்பம் நடத்துவது ஆண்,

பெண்ணுக்கு உரிய முதல் நிலை.

. திருமணத்தில் கவர்ச்சியான இளமை மாறி, பொறுப்பால் பண்பு

எழுந்து, அப்பண்பு மனைவி மீது அன்பாகும் பொழுது ஆண்மகன்

புருஷன் என்ற தகுதி பெறுகிறான்.

. ஆண்மகனுக்குரியது ஆண்மை.

ஆண்மை என்பது வீரம்; மனைவியையும், குடும்பத்தையும் பாதுகாக்கும் தைரியம்.

போரில் வீரமாக எதிரியை அழிப்பது தைரியமாக ஆண்மை செயல்படுவது.

வாழ்வில் வீரம் என்பது மரியாதை, கட்டுப்பாட்டால் எழும் கண்ணியமான அந்தஸ்து.

தன் மரியாதையையும், தன் குடும்ப அந்தஸ்தையும் காப்பாற்றுபவன் ஆண்மகன், புருஷன்.

வாழ்வில் மரியாதை தருவது வருமானம்.

பொருள் ஈட்டுபவன் வீரமான ஆண்மகன், புருஷனாக அதன் மூலம் மாறுகிறான்.

மனைவி வசதியாகவும், மக்கள் கல்வி பெற்று உயரவும் தகுதி பெற்ற புருஷன் வீரமானவன்.

. வாழ்வில் வீரம் என்பது கண்ணியம்.

கண்ணியம் கட்டுப்பாட்டால் வருகிறது.

. ஆணுக்குரிய கண்ணியம், இலட்சியமான திறமை தரும் வருமானம்.

. பெண்ணுக்குரிய கட்டுப்பாடு குடும்ப கண்ணியத்தைக் காப்பாற்றுவது.

. குடும்பத்தின் மீதுள்ள பொறுப்பு பாசமாவது கட்டுப்பாடு.

.ஆணுக்கும், பெண்ணுக்கும் அக்கட்டுப்பாடு முழுமையாக உண்டு.

. புருஷன் தரும் அந்தஸ்து பெண்ணுக்குரியது.

மனைவியின் அன்பு புருஷனுடைய அந்தஸ்து.

மனம் தரும் மரியாதை அந்தஸ்து, அன்பாகும்.

மனைவியை மனதால் போற்றும் கணவன் அந்தஸ்து உயர்ந்தபடி இருக்கும்.

கணவனை மனதால் பாராட்டும் மனைவி சுமங்கலி, சுபிட்சத்தின் உற்பத்தி ஸ்தானம்.

. கணவன், மனைவி அன்னையை ஏற்பதால் ஆன்மாவில் இணைகிறார்கள்.

. கணவன், மனைவி நிலை யோகத்தில் ஈஸ்வர சக்தியாக உயரும்.

****

930) பல்வேறு புருஷர்கள் - அன்னமயபுருஷன், பிராணமய புருஷன், மனோமயபுருஷன் - அவற்றின் பிரகிருதிக்கு உட்பட்டுள்ளார்கள். புருஷ - பிரகிருதிக்கு உள்ள தொடர்பால் இது சாத்தியமாகிறது. பிராணனில் ஆசையும், மனத்தில் அகந்தையும், புருஷனை பிரகிருதி ஆளப் பயன்படுகிறது. இத்தொடர்பை அறுத்தால் புருஷனுக்கு விடுதலை; கரைத்தால் புருஷனுக்குப் பிரகிருதி அடங்கும்.

தொடர்பை அறுத்தால் ஆட்சி கலையும்.


 

. சாட்சிபுருஷன் என்பது மனோமயபுருஷன். அது சாட்சியாகவே இருக்கும்.

அது சாட்சியாகவே இருந்தாலும், பிரகிருதி செயல்பட அதன் சக்தியையே பயன்படுத்துகிறது.

கணவன் மனைவிக்கு அடங்கியவன் என்றால், கணவனுக்குரிய அதிகாரத்தை மனைவி செலுத்துவாள். என்றாலும், அவள் பயன்படுத்துவது கணவனுடைய உரிமையே. எந்த நிமிஷமும் கணவன் விழித்துக்கொண்டால், மனைவி அடங்குவாள். அப்படி விழித்துக் கொள்ளும் புருஷனுக்கு ஈஸ்வரன் எனப் பெயர்.

பிரம்மம், மாயை.

புருஷன், பிரகிருதி.

ஈஸ்வர, சக்தி என்பவை மூன்று நிலைகள்.

புருஷன் சாட்சிபுருஷனாக இருக்கும்வரை பிரகிருதி அடங்காது.

புருஷன் உத்திரவு இட ஆரம்பித்தால் பிரகிருதி அடங்கும்.

உத்திரவு இடும் புருஷன் ஈஸ்வரனாக மாறும்.

அப்பொழுது பிரகிருதி சக்தியாகும்.

. மானேஜருக்கு முதலாளி அடங்கியுள்ள நிலையுண்டு.

தொண்டருக்கு தலைவர் அடங்கியுள்ள நிலையுண்டு.

.பிராணனில் ஆசையில்லை எனில் பிராணமயபுருஷனுக்கு விடுதலை உண்டு.

மனத்தில் அகந்தையில்லை எனில் மனோமயபுருஷனுக்கு விடுதலை உண்டு.

உடல் பழக்கத்திற்கு அடிமையாகவில்லை எனில் அன்னமய புருஷனுக்கு விடுதலையுண்டு.

. ஆத்மாவுடையது ஞானம்.

பிரகிருதி பெற்றது அஞ்ஞானம்.

அஞ்ஞானத்தைப் பிரகிருதி இழந்தால், அது ஆத்மாவாகும்.

மனம், உயிர், உடலின் அஞ்ஞானம் அகந்தை, ஆசை, பழக்கமென இருக்கிறது.

ஆத்மா அஞ்ஞானத்தை இழந்தால், வளரும்.

வளரும் ஆத்மாவுக்குச் சைத்தியபுருஷன் எனப் பெயர்.

சைத்தியபுருஷன் வெளிப்பட்டால் வாழ்வு அற்புதமாகும்.

. சைத்தியபுருஷனுக்கு 3 பகுதிகள் உள்ளன.

மனத்தில் அவனுக்கு மனத்தின் சைத்தியபுருஷனெனவும்,

உயிரில் அவனுக்கு பிராணசைத்தியபுருனெனவும்,

உடலில் அவனுக்கு உடலின்சைத்தியபுருஷனெனவும் பெயர்.

****

931) மனம் சத்தியஜீவியத்தினின்று பிரிவதற்கு, அறியாமை எனும் பிரிவினைக்குரிய தீவிரம். அதை அடுத்த நிலையில் உறுதிப்படுத்துவது அகந்தை.


 

அகந்தையும், அறியாமையும் மனத்தை சத்தியஜீவியத்தினின்று பிரிக்கின்றன.


 

.சத்தியஜீவியம் என்பது சிருஷ்டிகர்த்தா, கடவுள்.

அது இரண்டாகப் பிரிகிறது.

அவற்றிற்கு ஹிரண்ய கர்ப்பம், விராடபுருஷன் எனப் பெயர்.

ஹிரண்ய கர்ப்பம் காலத்தைக் கடந்தது, மேலேயுள்ளது.

விராடபுருஷன் கீழேயுள்ளது, காலத்தில் இருப்பது.

இப்பிரிவினையால் மனம் உண்டாகிறது.

மனம் இவையிரண்டிற்கும் இடையில் உள்ளது.

. சத்தியஜீவியத்திற்கு முழுப் பார்வையுண்டு.

பிரபஞ்சம் முழுவதும் அதன் ஒரே பார்வைக்குட்பட்டது.

மனத்திற்கு முழுப்பார்வையில்லை.

பார்வையிரண்டாகப் பிரிகிறது.

காலத்தில் உள்ள உலகைப் பார்க்கலாம்.

திரும்பி காலத்தைக் கடந்த கடவுளைப் பார்க்கலாம்.

காலத்தைக் காண்பவன் சம்சாரி.

கடவுளைப் பார்ப்பவன் சன்னியாசி.

மனிதன் இரண்டையும் மாறிமாறிப் பார்க்க முடியும் என்றாலும்,

ஒன்றைப் பார்ப்பவன் அடுத்ததைப் பார்க்க மறுக்கிறான்.

பார்க்க மறுப்பது அஞ்ஞானம்.

அதுவே அஞ்ஞானம் பிறந்த இடம்.

. பார்க்க மறுத்ததுடன் மனம் தன்னைத் தன் செயலில் மறப்பது

அஞ்ஞானம் வளர உதவும்.

தன்செயலில் தன்னை மறந்த மனம் தன்னில் தன்னை இழக்கும்.

இது அகந்தை.

இது மேலும் அஞ்ஞானம் வளர உதவும்.

அடுத்த கட்டத்தில் மனம் தன்னைப் பிராணனில் இழக்கும்.

முடிவாக மனம் தன்னை உடலில் இழக்கும்.

. உடலில் இணைந்த மனம் அதனின்று பிரிந்தால்,

பிராணமயபுருஷன் வெளிப்படுவான்.

உயிரில் கலந்தவன் அதனின்று பிரிந்தால்,

மனோமயபுருஷன் வெளிப்படுவான்.

மனத்திலிருந்து மனிதன் பிரிந்தால்,

சத்தியஜீவியம் வெளிப்படும்.

. அஞ்ஞானம் உற்பத்தியான வரலாறு இது.

அதனின்று மீளும் வகையும் இதுவே.

. அஞ்ஞானமின்றி சிருஷ்டியிருக்க முடியும்.

ஆனால் இந்த சிருஷ்டிக்கு முடியாது.

தொடரும்.....

****


 

ஜீவிய மணி


 

ஆழத்தின் அஸ்திவாரம் அவசியமற்றதை நீக்கும்.



 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனித்தன்மையைச் சிருஷ்டிப்பது இயற்கைக்கு முன்னேற்றம்.தனித்தன்மை, பொதுத்தன்மையாவது, தனித்தன்மைக்கு முன்னேற்றம். அதற்குத் தனித்தன்மை, தன்னை இழந்து மற்றதுடன் கலக்க வேண்டும். இயற்கை, முரண்பாடுகளால் முன்னேறும் முறை இது.

தனித்தன்மை தன்னையிழந்து பொதுதன்மையாகிறது.


 



book | by Dr. Radut