05.சாவித்ரி
"சாவித்ரி"
P.47, And temples to the Godhead none can see.
கட்புலன் காணாத கடவுள் சன்னிதானம்.
. கண்டதின் சிதைந்த நினைவு கற்பனையில் சிறக்கின்றது.
. அறிவு ஞானமாகி திருஷ்டி பெற உள்ளே போவதுண்டு.
. பூமாதேவியின் அஞ்ஞானத்திரை ஊனக் கண்ணை விட்டு விலகும்நேரம் உண்டு.
. மின்னலென மீண்டும் அற்புதம் தோன்றி மறையும்.
. இறுகிய இதயத்தின் குறுகிய எல்லை.
. வாழ்வின் பரந்த பரிணாமம் பார்வைக்கு எட்டுவதில்லை.
. வானத்தை எட்டித் தொடும் சிறுபிள்ளைத்தனத்தின் சில்லரைச் செயல்கள்.
. அந்தரங்கத்தில் ஆத்மாவிற்கு உயர்ந்த உன்னதமுண்டு.
. அழியாத ஜோதியின் அமைதியான அரங்கம்.
. மௌனமே சக்தி பெற்று மூலத்தைக் காணும் முழுப் பார்வை.
. தண்ணிலவின் தழலென எழும் விரைந்து செல்லும் ஆழம் காணாத ஆனந்தம்.
. அமைதியின் அகண்டம் ஆத்மாவின் இருப்பிடம்.
. சிருஷ்டி எனும் ஆத்ம மலர்ச்சி.
. கண்ட காட்சியின் புரியாத புதிர்.
. மனம் எனும் மகத்துவம் மனிதனைப் பாத்திரமாக்கும்.
. சொர்க்கத்தின் சுவடு சுகந்தமாக உள்ளெழும்.
. புனிதம் பிறந்து, இலட்சியக் கலங்கரை விளக்கமாகிறது.
. அங்கமெலாம் பெறும் அமைதி ஆனந்த மௌனம்.
. பளிங்குக் கல்லின் பவித்திரமான சிலை.
. உடலின் அமைதி மலையின் நியதி.
. அனந்தமான சாந்தியின் அற்புத உருவம்.
. சித்தி பெற்ற சக்தி புயலென வீசும்.
. அகண்டத்தைக் கடந்த பிரம்மாண்டம் அசைகிறது.
. ஒளிமயமான அலைகள் ஞானத்தின் வீச்சாக எழும்.
. இயற்கையின் இதயம் இதமாக நடுங்கும் தழல்.
. பெரியது சிறியதை ஆட்கொள்ளும் அற்புதம்.
. பெற்றதைப் பெற்ற பேற்றை அறியாத பேதை மனம்.
. ஆத்மாவின் தலைவனை நெகிழ்ந்தழைக்கும் நிகழ்ச்சி.
. அகந்தையின் கூடு உடைந்த குவியலாகும்.
. நான் எனும் எண்ணம் நாணம் தரும்.
. குறுகிய உள்ளத்தைக் குலவிளக்காகப் போற்றும் மனநிலை மாறும்.
. இயற்கையும் இறைவனும் இணையும் இடம் நம் இதயம்.
. உள்ளத்தின் ஒளி தழலின் நிழலென எழும்.
*******
- Login to post comments