Skip to Content

பகுதி 5

சாப்பிடச் சொல்கிறோம், பள்ளிக்கு அனுப்புகிறோம். பத்து நாள் அழுதால், பிறகு பழக்கமாகி விடும். சில தாயார்களிடம் குழந்தை சாப்பிட அடம் பிடிப்பதில்லை. பள்ளிக்கூடம் போக அடம் பிடிப்பதில்லை என்பதையும் நாம் பார்க்கிறோம். சாப்பிடாமல், விளையாடும் குழந்தையைக் கண்டித்துச் சாப்பிட வைப்பதற்குப் பதிலாக, சாப்பாடும், விளையாட்டும் குழந்தைக்கு அவசியம். நாம் சாப்பாட்டை முக்கியமாகக் கருதுகிறோம். குழந்தை விளையாட்டை முக்கியமாகக் கருதுகிறது, என்று நாம் புரிந்துகொள்ளப் பொறுமை வேண்டும், மன உறுதி தேவை. பொறுமையும் உறுதியும் உயர்ந்த மனநிலை. அது நமக்கிருந்தால் குழந்தை அடம் பிடிப்பதற்குப் பதிலாக, சொல்வதைக் கேட்கும். விளையாட்டு ஒரு பகுதி, சாப்பாடு ஓர் அம்சம். விளையாட்டும், சாப்பாடும் சேர்ந்ததே முழுக் குழந்தை. நம் மனம் பகுதியான சாப்பாட்டை விட்டகன்று, முழுமையான குழந்தை நலனில் லயித்தால் நம் மனம் உயர்ந்த நிலையை அடைகிறது. உயர்ந்த நிலைக்கு அதிகத் திறனுண்டு. அதிகத் திறனுள்ள மனம் செயலில் ஜெயிக்கும். குழந்தை சொல்வதைக் கேட்கும். சிறு குழந்தை புரண்டு புரண்டு அழுவதைத் தாயார் பார்த்து, 'நீ எவ்வளவு அழுதாலும் நான் விடப் போவதில்லை' என்று போனபின், அங்கிருந்த வேறொருவர், குழந்தையை விசாரித்தார். குழந்தை ஒரு head band  தலையில் போடும் வளையம் கேட்கிறது. தாயார் மறுக்கிறார் என அறிந்தார். குழந்தையைக் கடைக்கு அழைத்துப் போனார், அங்கு பொம்மை, வளையல் சாக்பீஸ், சாக்லேட், வளையம் எல்லாம் இருந்தன. எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றார். இந்த குழந்தைக்கு வளையல் அதிகப் பிரியம். 40, 50 வளையல்களை போட்டுக் கொள்வது வழக்கம். குழந்தை தனக்கு வளையம் மட்டும் போதும், வேறெதுவும் வேண்டாம் எனத் திட்டவட்டமாகச் சொல்லியது. நம் மனம் உயர்ந்தவுடன், குழந்தை உயர்ந்த மனத்திறனுக்குக் கட்டுப்படுகிறது என்பதை அன்று அவரால் காண முடிந்தது.

மாமியார் மருமகளைக் குறை சொல்வார். அனைவரிடமும் சொல்வார். அடிக்கடியும் சொல்வார். மருமகளைக் குறை சொன்னாலும் அது தன் குடும்பத்தைக் குறைவாகப் பேசுவதாகும் என அவர் அறியவில்லை. மருமகள் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படுவதைக் கருதுபவர். மாமியாரும், மருமகளும் எதிர் முனைகள். இருவரும் சேர்ந்ததே குடும்பம். இருவரில் ஒருவர் தம் மனநிலையைக் குடும்பம் என்ற உயர் நிலைக்குக் கொண்டு வந்தால், அடுத்தவர் மனம் மாறும் சந்தர்ப்பம் உண்டு. இம் மனநிலையில் அன்னையைக் கருதினால், நம் மனநிலை அன்னையால் அளவு கடந்து உயர்ந்து விடுவதால், அடுத்தவர் அதற்குக் கட்டுப்படுவார். மாமியாரின் மட்டமான போக்கு மருமகன் உயர்ந்த மனநிலையால் குடும்பத்தைப் பாதிக்கவில்லை.

வாழ்வில் முரணானவை ஆயிரம். அவற்றை நாம் சந்திக்கும்பொழுது, நாம் ஒரு பகுதியுடன் சேராமல், மனத்தை உயர்த்தி, முழுமையை நாடினால், எதிர்ப்பு அடங்கும். இல்லறமும், துறவறமும் எதிர் முனைகள். ஆனால் இரண்டும் சேர்ந்தது வாழ்வு. இல்லறத்திலிருந்து துறவறத்தைத் எதிர்க்காமல் -- துறவறத்திலிருந்து இல்லறத்தைத் துச்சமாக நினைக்காமல் -- மனநிலையை வாழ்வின் முழுநிலைக்கு உயர்த்தினால், துறவறத்தின் தூய்மை இல்லறத்தின் வளத்திற்கு வந்து வாழ்வு வளம் நிறைந்த தூய்மையுடையதாகும். முரண்பாடு விலகும்.

பிறர் நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்தால் அவர்கள் மதிப்பதில்லை. இதன் பின்னால் வேறொரு உண்மையுண்டு. பிறர் மதிப்பதில்லை என்பது நடைமுறை நிகழ்ச்சி. பார்வைக்கு அது உண்மை. நாம் மனதைச் சோதனை செய்தால் அங்கு வேறோர் உண்மையிருக்கும். என்னை அவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று நாம் ஆழ்ந்து

நம்புகிறோம் என்று தெரியும். அது தெரிந்தால் அதன் பிரதிபலிப்பே பிறர் நடைமுறை என அறிய முடியும். நம் எண்ணம் ஒரு பகுதி, அவர்கள் நடத்தை மறுபகுதி. இவற்றுள் எதையும் வலியுறுத்தாமல், இவையிரண்டும் நம் உறவின் இருபகுதிகள் என நினைத்தால் மனத்தின் நிலை உயருகிறது. அடுத்தவர் மரியாதையோடு பழகுகிறார் என்பதே உண்மை.

சத் + அசத் = பிரம்மம் என்பது தத்துவம். நம் நடைமுறை வாழ்வில்,

இரவு

+

பகல்

=

நாள்

சொர்க்கம்

+

நரகம்

=

மோட்சம்

வெற்றி

+

தோல்வி

=

காரியம்

மரியாதை

+

அவமானம்

=

வாழ்வு

நாம் பகுதியிலிருந்து முழுமைக்குப் போனால் மனிதவாழ்வு யோகவாழ்வாகிறது. வாழ்வில் எல்லா முரண்பாடுகளையும் கடக்கும் மனநிலை மனமாற்றத்திற்குரிய உண்மை நிலை.

பக்தர் ஒருவர் 650ரூபாய் பணத்தைத் தொலைத்து விட்டார். இரண்டு நாள் தேடியாயிற்று. பணம் வீட்டை விட்டுப் போக வழியில்லை. ஆனால் கிடைக்கவில்லை. உடனே தாம் செய்த வேறொரு தவறு நினைவுக்கு வந்தது. அந்தத் தவற்றைத் திருத்தாமல் பிரார்த்தனை எப்படி பலிக்கும் என்று தோன்றியது. சில வருஷங்கட்கு முன் தாம் ரூ.150 தொலைத்தபொழுது, சமாதி தரிசனம், ஸ்ரீ அரவிந்தர் அறை தரிசனம், 3 நாள் இடைவிடாத பிரார்த்தனை செய்தும் பலிக்கவில்லை. அப்பொழுது பணம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். ஆனால் பர்ஸை ஜன்னல் பக்கத்தில் வைத்ததால் தொலைந்து விட்டது. ஆனால் தாம் தவறு செய்தவர் என்பதை அவர் மனம் அன்று ஏற்கவில்லை.

தினமும் வைக்கும் இடம்தானே. இத்தனை நாள் தொலையாதது இன்று தொலைந்தால் தவறு என்னுடையது எப்படியாகும் என்று நினைக்கும்வரை எதுவும் பலிக்கவில்லை. அத்தவற்றை அன்று உணர்ந்தவுடன் பர்ஸ் கிடைத்தது என்று, இன்று நினைவுக்கு வந்தது. எனவே தம் மனம் நினைவு படுத்திய தவற்றை உடனே திருத்திக் கொண்டார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. எனவே எதுவும் புரியவில்லை. தவற்றைத் திருத்தினால் பிரார்த்தனை பலிக்கவேண்டும். ஏன் பலிக்கவில்லை? என விளங்கவில்லை.

இதே நிலைமையில் மற்ற இருவர் செய்வது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு எல்லாம் பலிக்கின்றன. அன்னையிடம் சொன்னேன். பலித்தது என்பார்கள். அம்முறையைக் கையாளலாம் என நினைத்து, எனக்கு எதுவும் புரியவில்லை. பணம் தொலைந்து விட்டது. அன்னையே நீங்கள் அதைத் தேடிக் கொடுங்கள்' என்று பிரார்த்தனை செய்தார். 10 நிமிஷம் கழித்து கைப்பையைத் திறந்தார். இதுவரை அதில் பணத்தைப் பலமுறை தேடியாயிற்று. இப்பொழுது பணம் அதில் இருந்தது. கிடைத்த பின்னும் எதுவும் புரியவில்லை, கிடைத்தது புரிகிறது. எப்படி என்பது புரியவில்லை.

தன் தவற்றை உணர முடியாத அறியாமை மூலம் அன்னை பலிக்க முடியாது. உணர்ந்தவுடன் முதல் முறை பலித்தது.

இரண்டாம் முறை மனம் 'தவற்றைத் திருத்தினால் பர்ஸ் கிடைக்கும்''என்ற சட்டத்தை நம்புகிறது. கடந்த வருஷங்களில் தன் மனம் வளர்ந்துவிட்டது. இனி சட்டத்தையும் நம்பக் கூடாது. சட்டத்தை நம்பாமல், அன்னையை நம்புவது மேல் என்று தன்னையறியாமல் தெரிந்தவுடன், அன்னை செயல்பட்டார்.

  • தவற்றைத் தவறு என ஏற்கமாட்டேன் என்பது ஒரு நிலை.
  • தவற்றை உணர்வது அடுத்த நிலை.
  • சட்டத்தை நம்புவது அதனால் ஏற்பட்ட மனநிலை.
  • சட்டத்தை நம்புவதைவிட அன்னையை நேரடியாக நம்புவது அதை விட உயர்ந்த நிலை.

குழந்தையுள்ளம் உள்ளவர்கட்குப் பலிப்பது அவர்கள் அன்னையை நேரடியாக நம்புவதால்தான். நிலைகள் பல. நாம் எந்த நிலையிருக்கின்றோமோ, அதற்குரிய நம்பிக்கை தவறாது பலன் தரும். ஒருவருக்கு முதல் நிலை பலன் தரும். அடுத்தவருக்கு 4 ஆம் நிலை பலன் தரும். ஒருவர்க்கே ஒரு விஷயத்தில் முதல் நிலையிலும், அடுத்த விஷயத்தில் 4ஆம் நிலையிலும் பலன் தரும். பலன் மனநிலையைப் பொறுத்தது. எவருக்கும் பலன் உண்டு. நம் நிலை அறிந்து நாம் செயல்பட வேண்டும்.

உலக அரசியல் பெருமாற்றங்கள் ஏற்படுவதுண்டு. எதேச்சாதிகார நாட்டில் எதுவும் நிலையில்லை. இன்றைய பிரதமர், நாளைய கைதியாகலாம். இதுபோன்ற செய்திகளை நாம் ஏராளமாக அறிவோம். வல்லரசுகளில் இதுபோன்ற நிலை அதிகமாக ஏற்படுவதில்லை. ஒரு வல்லரசின் அதிபர் வீழ்த்தப்பட்டார். அந்நாட்டின் பரம்பரையில் கடந்த 1000 வருஷமாக வீழ்ந்தவன் எழுந்ததில்லை. இது ஒரு பெரிய துர்அதிர்ஷ்டம்.

ரேடியோ செய்தி வந்தவுடன் பக்தர் சிலர் சேர்ந்துள்ள இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியை முதலில் கேட்டவர் இவர்களுக்கு, போன் மூலம் சொன்னார். இது உலகத்திற்கே பெரிய செய்தி. பக்தர்கள் குழுமி விமர்சனம் செய்த பொழுது, ஒருவர் 'ஏன் நாம் விமர்சனம் செய்ய வேண்டும், நாமெல்லாம் அன்னை பக்தரில்லையா? நம்மால் விழுந்தவரை மீண்டும் பதவியில் அமர்த்த முடியாதா?'' என்றார். ஒருவர் முடியும் என்றார். அடுத்தவரும் முடியும் என்று

நம்பிக்கையில்லாமல் சொன்னார். 'நீங்கள் இருவரும் சம்மதித்தால் அவரை மீண்டும் பதவியில் இருத்தலாம்' என்று கூறி, செய்தி சொல்லிய நண்பரை அழைத்து அவர் சம்மதம் கேட்டார்கள். 3 நாள் இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொள்ள முடிவு செய்தனர். காலை 11 மணிக்குப் பிரார்த்தனை ஆரம்பம், 72 மணி நேரம் ஆன பின் நிறுத்துவதாகத் திட்டம். அடுத்தநாள் போயிற்று. அதற்கடுத்த நாள் மாலை 5 மணிக்கு அரசியல் நிலை மாறி அந்த நாட்டில் கைது செய்யப்பட்ட தலைவர் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார். போனில் கூப்பிட்டு முதல் செய்தியைச் சொன்னவர் முதல் நாள் மட்டும் 4 மணி நேரம் பிரார்த்தனை செய்ததாகவும், தம்முடன் வேறொருவர் சேர்ந்து கொண்டதாகவும் சொன்னார். உலகத்தைக் குலுக்கும் நிகழ்ச்சியை, பக்தர் பிரார்த்தனை மாற்ற முடியும் என்பதை இவர்கள் மேலும் ஒரு முறை கண்டார்கள்.

இவர்களில் ஒருவர் வேறொரு சமயம் வியாபார விஷயமாகச் செயல்படும்பொழுது இவரைத் தேடி வந்த இரண்டு பேரம் அதிக வருமானம் தரக் கூடியவை, ஆனால் அவை முடியவில்லை என்ற செய்தியை நண்பருக்கு விளக்கினார். 'செயல் சரியாக இருந்து, மனம் விஷயத்தில் ஈடுபட்டால் பிரார்த்தனை தவறாது' என்றார் நண்பர். அதன் பேரில் இவர் 3 நாள் பிரார்த்தனையை அதிதீவிரமாக முடித்தார். பலன் தானே வரும் என எதிர்பார்த்தார். வரவில்லை. இவரே சம்பந்தபட்டவர்களை போனில் கூப்பிட்டார். ஒருவர் 4 நாள்வரை கிடைக்கவில்லை. அடுத்தவர் 11 நாள் வெளிநாடு போயிருப்பதாகச் செய்தி வந்தது. அதன் பின்னும் அந்த பேரங்கள் முடியவில்லை. பெரிய காரியம் 3 நாள் முடியுமுன் கூடி வந்தது. ஏன் இது - சிறிய காரியம் - பலிக்கவில்லை? என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த பேரங்கள் அவரைத் தேடி வந்தபொழுது,

ஆரம்ப நாட்களில் அவர் மனம் நினைத்தது சரியாக இருந்தால், அல்லது இப்பொழுது சரி செய்ய முடியுமானால் பேரம் முடியவேண்டும் என்பது சட்டம். இவர் இலட்சியவாதி. 1966-இல் சமூகத்தை எதிர்த்து புரட்சி செய்த இளைஞர்களில் ஒருவர் இவர். பணம் சம்பாதிப்பது தவறு. அதுவும் அதிகப் பணம் சம்பாதிப்பது குற்றம். வியாபாரம் தவறான துறை என்பன அப்பொழுது இவர் கொள்கைகள். இந்த பேரம் வந்தவுடன் இதனால் இவருக்கு வரக் கூடிய கமிஷன் சுமார் ஓராண்டில் இவர் சம்பாதிக்கக் கூடியது என்பதால் இவர் மனம் திக் என்றது. இவ்வளவு கமிஷன் பெறுவது தவறு என்று நினைத்தது நினைவு வந்தது. இன்றும் அந்நினைவு ஓரளவு மனத்திலிருப்பது தெரிய வந்தது. அதனால் பிரார்த்தனை பலிக்கவில்லை எனப் புரிந்தது.

  • காரியம் எவ்வளவு பெரியதானாலும், மனம் நேராக இருந்தால் பலிக்கும்.
  • காரியம் சிறியதானாலும், மனத்தில் குறையிருந்தால் பலிக்காது.

காரியம் பெரியதா, சிறியதா என்பது முக்கியமில்லை. மனம் முழுமையாக இருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்.

அன்னை வாழ்வை ஏற்ற பின், அது உயர்ந்தது என்பதால் நமக்கு ஏற்படும் மாற்றங்கள் பல. அவற்றுள் நம் உறவினர், நண்பர்களுடன் உள்ள தொடர்பு ஒன்று. வாழ்வில் செல்வம், பதவி பெற்று உயர்ந்தவர்களுக்கு அவர்களுடைய உறவினர், நண்பர்களுடைய தொடர்பு அல்லது உறவு புதிய நிலைக்குப் போகும். நல்லவர்கள் தங்கள் உயர்வால் உயர்ந்ததாகக் கருதாமல் நண்பர்களுடன் பழையபடியே பழகுவார்கள். ஆனால் உறவினர், நண்பர்களில் சிலரால் பழைய மனநிலையுடன் பழக முடிவதில்லை. புதிய அந்தஸ்துக்குரிய முறையில் உயர்ந்தவரை நடத்த நினைப்பார்கள். அவர்களுக்குள்ள புதிய செல்வாக்கால் பலன் பெறவும்

நினைப்பார்கள். இவர்கள் உறவை உயர்ந்தவர் தொடர்ந்து நீடிக்க முடிவதில்லை. சந்தர்ப்பங்கள் இவர்களை, கொஞ்சம் கொஞ்சமாக விலக்கும். உயர்ந்தவர் முயன்று விரும்பி இவர்களில் எவரையும் விலக்கக் கூடாதென நினைத்தாலும், இவர்களுடைய புதிய பழக்கம், புதிய நினைவு, செயல் உறவைக் குறைக்கும். தாம் உயர்ந்ததால், பழைய உறவுகளை உடனே விலக்குபவரும் உண்டு. நல்லவரானாலும், மற்றவரானாலும், அந்தஸ்து உயர்ந்த பின் பழைய உறவை நீடிக்க முடிவதில்லை. புதிய அந்தஸ்திற்குரிய புதிய உறவுகள் எழுவது வழக்கம்.

அன்னையை ஏற்ற பின், ஏற்று உள்ளபடியாக உயர்ந்தபின், பழைய உறவுகள் என்னாவது? சில அனுபவங்களை உத்தமர்கள் வாழ்வின் வாயிலாகச் சொல்ல முயல்கிறேன்.

பேராசிரியர் மாணவன் வீட்டுக்கு அவன் அழைக்காத நிலையிலும், ஏன் என்னை அழைக்கவில்லை? எனக் கேட்டு அடிக்கடியும் வந்து, அன்பின் வெளிப்பாடாகத் தங்குபவர். அவன் தம்மை அவனுடைய திருமணத்திற்கு அழைக்காத பொழுதும், நீ என்னை அழைக்காவிட்டாலும், நான் வருகிறேன் என்று வந்து கலந்து கொண்டார். 100ரூபாய் சம்பளம் வாங்கும் நண்பர் 300ரூபாய் கடன் கேட்டுப் பத்திரம் எழுத முனைந்தபொழுது, ரசீது இல்லாமல் பணத்தைக் கொடுக்க முன் வந்து, ரூ.15,000 கொடுத்ததோடு இல்லாமல், சில நாட்களுக்குப் பின் இலட்ச ரூபாய் அவரிடம் கொடுத்துத் தம் சொத்தை நிர்வாகம் செய்யும் பொழுது, 'கணக்கு எழுதக் கூடாது' என நிர்ப்பந்தம் செய்தார் ஒருவர். தம் மனைவியின் 45 பவுன் நகைகளை விற்றுக் கடன் கொடுத்தவர், வாங்கியவர் மறந்த நிலையில் நினைவு படுத்தாமலே விட்டுவிட்டார்.

தம்மைப் பாம்பு கடித்த பின், ஆஸ்பத்திரிக்கோ, மந்திரவாதியிடமோ போகாமல் நண்பர் வரும்வரை பல மணி நேரம் காத்திருந்து, உங்களிடம் சொல்லவே காத்திருந்தேன்.

மருந்தோ, மந்திரமோ நம்பிக்கைக்கு உரியதன்று என்று சொல்லி விஷம் தலைக்கேறியதைக் கண்டவர் ஒருவர்.

பக்தர் அன்னையை அதிகமாக நெருங்க நெருங்க மேற் சொன்ன உறவுகள் மறைந்து அழிந்து போயின என்பது மேற் சொன்ன பக்தர்கள் அனுபவம், அன்னையை நெருங்கும் பொழுது உறவுகளும், நட்பும் தளரும், வெட்டிக்கொள்ளும், விலகும். உறவினர்களும் அன்னையை நம்போல் ஏற்று கொண்டால் உறவு குறைவதில்லை. ஒருவர் அன்னையை நெருங்கினால், மற்றவர்கள் பின் தங்கினால், உறவோ, நட்போ, தொடர்போ குறைந்து மறையும் என்பது சட்டம், அன்பர் அனுபவமும்கூட.

நாம் அன்னையை ஏற்றுக்கொண்ட பின் குடும்பம், உத்தியோகம், சொத்து, சமூகத் தொடர்பு எல்லாம் குறையும், அவற்றின் மீதுள்ள பற்று குறையும். அவை நம் வாழ்வில் பேரளவில் செயல்படுவதால், அன்னை ஒரு பக்கம், சமூகத்தின் அங்கமாக இவை மற்றொரு பக்கம் என்றிருக்கும். அப்படியே நின்று விடுவது வழக்கம். ஆசிரமம் வரும் பொழுதும், தியானம் செய்யும் பொழுதும் அன்னை, மற்ற நேரங்களில் பழைய சமூக மனநிலை என வாழ்வு இரண்டாகப் பிரிந்து நிற்பதுண்டு. அப்படியில்லாமல் மனம் அன்னையை மேலும் மேலும் நெருங்கினால் பிளவு அதிகமாகி பிரச்சினை ஏற்படும். இது பல வகைகளாக வெளிப்படுவதுண்டு. ஒருவர் அனுபவத்தை எழுதுகிறேன்.

அன்னையை அறிந்து, முதன் முறை ஆசிரமம் வருமுன் 10 மடங்கு வருமானம் அதிகரித்து, ஓராண்டில் தம் சர்வீஸ் முடிவில் வாங்கக் கூடிய சொத்தை வாங்கி, அன்னையை மனத்திலும், வாழ்விலும் முதன்மையாக்கிய நிலையில் டாக்டர், 'மனைவி பிழைக்க முடியாது, ஆப்பரேஷன் செய்து பார்த்தால் தெரியும்' என்ற பொழுது பிரசாதம் மனைவியை

ஆப்பரேஷனின்றிப் பிழைக்க வைத்தது. அடுத்த ஆண்டு உத்தியோகம் போயிற்று. அன்னையிடம் காலையில் சொன்னவுடன் மாலையில் அது திரும்பி வந்தது. அடுத்து பெற்ற பெருஞ்சொத்து, பொறாமையாலும், துரோகத்தாலும் கை விட்டுப் போய் மூன்றாம் நாள் திரும்பி வந்தது. பக்தர் மனைவியையும், உத்தியோகத்தையும், சொத்தையும் தம் உடமையாக வைத்திருந்தததால், அன்னை அவற்றை அவரிடமிருந்து அகற்றி, தம் பரிசாகத் தூய்மைப்படுத்திக் கொடுத்தார். நாம் அன்னையை நெருங்கினால், உறவு, உரிமை, உடமை பழைய நிலையை இழந்து புதிய புனிதம் பெறும்.

நம் வாழ்வில் ஒரு பகுதி அன்னை, மறுபகுதி பழைய வாழ்வு என்றிருக்கும். முழுவதும் அன்னை வாழ்வாக வேண்டுமானால், பழைய வாழ்வின் பகுதியான வேலை, சொத்து, உறவால் வாழ்வதைத் தவிர்த்து, புதிய புனித வாழ்வுக்குக் கிடைக்கும் பலனால் மட்டுமே வாழ முயல வேண்டும். சக்ரவர்த்தியான ஒளரங்கசீப் அல்லாவுக்குச் சேவையாகக் குல்லாய் தைத்து அவ்வருமானத்தால் வாழ்ந்தார். பக்திக்காகவும், சமர்ப்பணத்திற்காகவும், சேவைக்காகவும் வரும் வருமானமே வாழ்வுக்குரிய வருமானம் என்று வாழ்வை மாற்றும் பக்தர் பழைய வாழ்வின் பிடியிலிருந்து விலகுவார். ஒருவருக்குப் பூர்வீகச் சொத்து இருக்கும். பிள்ளைகள் சம்பாதிப்பார்கள். சம்பளம் வரும் அல்லது பென்ஷன் வரும். தாம் அன்னைக்கு ஏற்ற சேவை மூலமாக ஒரு சிறு வருமானமோ, காணிக்கையோ வந்தால், அதுவே தனக்குரியது என்று அந்த எல்லைக்குள் தம் வாழ்வை அடக்குவது, அன்னையின் எல்லைக்குள் தம்மை இருத்துவதாகும். இது எல்லோருக்கும் அவசியமானதன்று என்றாலும், யோக வாழ்வை ஏற்க முனைபவர்கட்கு இது பெரும்பலன் தரும்.

இதில் ஒரு முறையைப் பின்பற்ற முயல்வதைத் தவிர்த்து, இதன் உட்கருத்தைக் கண்டு, பின்பற்ற முயன்றால் அது

உயர்ந்ததாகும். ஒரு பக்தர் அன்னையை ஏற்றுக் கொண்டு பின், அவர் மூலம் அன்னையிடம் வந்தவர்கள் அவருக்குப் பரிசாக அளிக்கும் பொருள்கள் அவருடைய பக்திக்கு வரும் காணிக்கையாகும். இது அவருடைய முழுத் தேவையில் கால் பங்கானால், அவர் தம் வாழ்க்கைச் செலவுகட்கு, என் சம்பளம் வேலைக்குரிய ஊதியம், என் வீட்டு வாடகை என் தகப்பனார் கொடுத்தது, என் மகன் சம்பாதிப்பது, என் உடலின் பகுதியான மகனுடைய உறவாலும், பாசத்தாலும், வருவது, பக்தர்கள் அளிப்பது என் பக்திக்கும் நம்பிக்கைக்கும் உரிய காணிக்கை. வேலையால் கிடைப்பது வேண்டாம். பூர்வீகச் சொத்து எனக்குரியதன்று. மகன் கொடுப்பது பாசத்தாலும் கடமையாலும் வருவது. அவற்றால் நான் வாழ விரும்பவில்லை. காணிக்கை உருவத்தில் வருவதையே நான் நாடுகிறேன். அதனால் வாழ்வதே அன்னை வாழ்வு என்ற முடிவால் வாழ்ந்தால், அவர் பக்தியால் மட்டும் வாழ்பவர். இது பவித்திரமான வாழ்வு. இது நல்ல இலட்சியம். ஆரம்பத்தில்லாவிட்டாலும், முடிவில் நம் வாழ்வும், அதற்குரிய செலவுகளும், பக்தியால் மட்டும் நடப்பது சிறப்பு. வேலை, வாரிசு, பாசம் இருளுக்குரியவை. பக்தி அருளுக்குரியது. அன்னை கோட்பாடுகளை மட்டும் மேற்கொண்டு ஒருவர் தொழில் நடத்தினால் அவர் வருமானம் 10, 100, 1000 மடங்கு எனப் பெருகும். அதனால் வரும் செல்வம் அருளால் வரும் செல்வம். அது அன்னை வாழ்வுக்குரியது. இதுபோல் பெருகுவதும் உண்டு. நம் நிலை இருளுக்குரியதானால், அன்னை கோட்பாடுகளை ஏற்று வேலை செய்தால் வேலையில் தொந்தரவு வரும், அல்லது வேலையே போகும். வேலை போனால் நம் இருள் போனதாக அறிய வேண்டும். நிலை மாறி வருமானம் அதிகரித்தால் அது நம் மனத்தூய்மையைப் பிரதிபலிக்கும். அநேகமாக அது பழைய வருமானத்தை எட்டப் பல ஆண்டுகளாகும். அதை

உயர்த்த முயன்றால் சிறு பலன் தெரியும். பெருமுயற்சி சிறு பலனில் முடிவதைக் காணலாம்.

  • அருளால் பெறும் வருமானம் அன்னை வாழ்வுக்குரியது.
  • அருளால் பெறும் வருமானம் வளர மறுப்பது இயல்பு.
  • அருளால் வருமானம் உயர்ந்தால் யோகம் பலிக்கும்.
  • அருளால் வருமானத்தை உயர்த்துவது யோகசித்தி.

மனித உறவு (human relationship) என்பதை, சொந்தம் என்று கருதுகிறோம். தொடர்பு என்ற பொருளில் இங்கு எழுதுகிறேன். நட்பும் தொடர்பும் இதனுள் அமையும். மனிதனுக்கு உறவு முக்கியம். உறவைப் புனிதப்படுத்தி மனிதன் ஏற்படுத்தியது குடும்பம். அதன் சிகரம் பெற்றோர், பிள்ளைகள் உறவு. அதனினும் நெருங்கக் கூடியது கணவன் மனைவி உறவு. பெற்றோர் பிள்ளை உறவின் சிறப்பு இரத்தப்பாசத்தால் உயர்வது. கணவன் மனைவி உறவு உணர்வின் செறிவால் உயர்வது. உணர்வு செறிந்தால் நெருக்கம் அதிகமாகும் என்று நாம் நினைக்கிறோம். அந்நிலை உறவு புளிக்கும் என்பது அனுபவம். அது உலகவாழ்வு. பாசம் வளர்ந்தபடியிருக்கும் என்பதை எதிர்பார்க்கிறோம். பாசம் சிறியது. குறுகிய காலத்தில் முடிவடையக் கூடியது. முடிந்தால் பாசம் எரிச்சலாக மாறும் (frustration) என்பது உலகம் கண்ட உண்மை. உலகம் கண்டதை அன்னை ஏற்பதில்லை. உலகம் கண்ட உண்மை பொய்த்து, நெருக்கம் இனிமையைத் தர வேண்டுமானால், பாசம் காலத்தால் வளர வேண்டுமானால், இரு தரத்தாரும் அன்னையை ஏற்று, அன்னை கோட்பாடுகள் மூலம் வாழ முன் வர வேண்டும். தாயார், தகப்பனார், கணவன், மனைவி, மகன், மகள் என்ற உறவு பின்னணிக்குப் போய் அன்னை பக்தருக்குரிய அன்பைச் செலுத்த முயன்று வெற்றி பெறுதல் வேண்டும். இதில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று நம் கடமை. அடுத்தது பிறர் நிலைமை.

தகப்பனாருக்குரிய கடமையை, மகனாகச் செய்வதை விட பக்தனாகச் செய்ய ஆரம்பித்தால், கடமை சிறப்புறும். 3000ரூபாய் சம்பாதிப்பவர் பிடித்தம் போக 1600ரூபாய் வீட்டுக்கு எடுத்து வரும் பொழுது, வெளியூரிலுள்ள தகப்பனாருக்கு எவ்வளவு அனுப்ப முடியும்? 100ரூபாய் அனுப்ப அவர் படும்பாடு பெரியது. அதை மாதாமாதம் செய்ய, கடமையுணர்வு அதிகமாக வேண்டும். மகன் மனநிலை பக்தனாக மாறினால் அதை இரு மடங்கு அனுப்பலாம். அப்படி அனுப்பியவரும் ஒருவர். மகன் மனநிலை பக்தியால் செயல்பட்டால், தகப்பனார் பெறுபவர் என்பதால் அவர் நிலையும் மகன் வருமானத்தை நிர்ணயிக்கும். பெறுபவர் வருவதை வருமானமாகப் பெற்றால் மகன் தொடர்ந்து அதை அனுப்பமுடியாது. கடமையுணர்வால் அதை வலியுறுத்தினால், மகனுக்குரிய வருமானம் சுருங்கி நின்று விடும். இவை வாழ்வில் நடைமுறை உண்மைகள். ஏனெனில் மனித உறவு, மனித உணர்ச்சியை அறிவோம். இனிமை, உணர்வு, சிறப்பு, நெகிழ்வு, இலட்சியம், கனிவு, கட்டுப்பாடு ஆகியவை உணர்ச்சியில் குறைவு. கோபம், எரிச்சல், பொறாமை, அவசரம், சந்தேகம் இயல்பானவை. அண்ணன் தம்பியின் நல்ல உறவில் கோபம் போன்றவை அடிக்கடி எழுந்து உறவைச் சிதைக்கும். பாசம் உயர்ந்து சிதைந்ததைப் புதுப்பிக்கும். பாசம் அதிகமானால் உறவு நீடிக்கும். சிதைவு வளர்ந்தால் உறவு விட்டுப் போகும். கசந்து போகும்.

  • என் தகப்பனார் பாரபட்சமானவர். எனக்கு உரியதைத் தம்பிக்குக் கொடுப்பார். அதெல்லாம் என் பாசத்தைத் தொட்டதில்லை.
  • என் தமக்கை, எனக்கு சூன்யம் வைத்தார். என்றாலும் என் பிரியம் குறையவில்லை. கடமையை நான் நிறுத்த முடியவில்லை.

  • தன்னை விட நல்ல மாப்பிள்ளையை எனக்கு முடிவு செய்த அன்று என் தமக்கை ஓர் அவச்சொல் சொன்னார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவேயில்லை.
  • என் மனைவியை நான் மீறவே முடிவதில்லை. ஆனால் என் தாயார் விஷயத்தில் அவள் சொல்வது காதில் விழாது.
  • எங்கள் தகப்பனார் முன் நின்று நாங்கள் எவரும் பேசியதேயில்லை. கடைசி காலத்தில் எல்லோரும் வந்து நெருங்கி விட்டோம்.
  • எனக்கு ஜுரம் 103 டிகிரி இருக்கும்பொழுது, என் பெண் சினிமாவுக்குப் போகத் துடிப்பதை நான் பார்த்த பின், இவளும் ஒரு மகளா என என் மனம் விட்டுப் போயிற்று,

என உறவின் சிறப்புகள் சில, கசப்புகள் பல.

அசம்பாவிதமாகப் பேசுவது, அவசரப்பட்டு நடப்பது, சந்தேகப்படுவது, சுயநலமாக நினைப்பது, எரிச்சலை அடக்க முடியாதது, உறவை உடனே பாதிக்கும். நிரந்தரமாகப் பாதிப்பதும் உண்டு.

அன்னையை ஏற்றுக் கொண்ட பின் சிறு நல்ல குணங்களுக்கும் பெரிய நல்ல பலன் கிடைப்பதைப்போல், சிறு குறைகளுக்கும் பெரிய கெட்ட பலன்கள் உண்டு. அன்னை சக்தி, எதையும் வளர்க்கும் தன்மையுடையது. நல்ல குணத்தை வளர்ப்பதைப்போல், கெட்ட குணமும் வளரும். தண்ணீர் செடியை வளர்க்கும். கழனிக்கு நீர் இறைத்தால் பயிர் செழித்து வளரும். பயிருடன் களையிருந்தால் களையும் செழித்து வளரும். அன்னை சக்திக்கு நல்லது மட்டும் செய்யும் குணம் உண்டு. தண்ணீர்போல், இருப்பதை வளர்க்கும் பொது

இயல்பும் உண்டு. எந்த இயல்பு எப்பொழுது செயல்படுகிறது என நாம் அறிய வேண்டும். புதுமையும், (freshness) இனிமையும், நிரந்தரமாக இருப்பது நல்லது. அது சிரமம். சிரமத்தை மேற்கொள்பவருக்கு அன்னையின் பலன் உண்டு.

உயர்ந்த திறமையும், தாழ்ந்த குணங்களும் சேர்ந்திருப்பதுண்டு. ஒன்று மற்றதை (neutralise) அழிக்கும். அல்லது உயர்ந்தது உயர்ந்த பலனையும், தாழ்ந்தது தாழ்ந்த பலனையும் அளிப்பதுண்டு. அளவு கடந்த திறமையும், அல்பபுத்தியும் கலந்துள்ள ஒருவருக்கு இனிமை ஏராளமாக இருந்தது. இவர் திறமை இவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. அல்பபுத்தி அருகிலுள்ளவர்க்கு இவரை அடையாளம் காட்டியது. அவரது நாட்டில் உச்சகட்ட பதவியைப் பெறவும் அவ்வினிமை உதவியது.

தாம் கற்றவற்றையெல்லாம் பின்பற்றியவர்கள் சிலர். அவர்கள் அதிகம் கற்றுக் கொள்ள விரும்புவார்கள். நடைமுறையில் ஏதாவது புதியதாகத் செய்ய விருப்பப் படுவதால், புதியதாக தெரிந்து கொள்ள விரும்புவதுண்டு. இது அரிய குணம். இதற்கு எடுத்துக்காட்டாக அமைய விரும்புவர்கட்குப் புதிய அறிவு பெரும்பலன் தரும். முன்னேற்றத்திற்குரிய முறை இது. எதையும் கேட்டுக் கொள்ள மறுப்பவர், தெரிந்து வைத்துக் கொள்வதோடு சரி என்பது ஒரு வகை, தெரிந்ததைச் செய்வது வேறு ஒரு வகை. மூன்றாம் வகைக்கு உதாரணமாக விளங்க முன் வருபவர் குறைவு. பொதுவாக 40 வயதுக்கு மேல் இனி மேலா நான் மாறப் போகிறேன், இதற்கு மேல் எப்படி மாறுவது? என்பவரே அதிகம். நல்லது என்பதை எப்பொழுதாயினும் செய்ய வேண்டும் என்பவர் முன்னேறக் கூடியவர். 30 ஆம் வயதில், இனி பொய் சொல்லக் கூடாது என்று நினைத்தவர், எவரையும் துச்சமாகப் பேசுபவர் 53 ஆம் வயதில் இனி அழகாகப் பேச வேண்டும் என்று முயன்றவர், 72 ஆம் வயதில் நல்லது

என்றால் மாறுவது சரி என மாறியவர், 78 ஆம் வயதிலும் இது நாள்வரை வெறுத்தது நல்லதா கெட்டதா என சோதிக்க விரும்பியவர் உண்டு.

இதுவரை நான் கற்றவை அனைத்தையும் செய்துவிட்டேன். இனி ஏதாவது உண்டா என்று கேட்டவர் நிச்சயம் முன்னுக்கு வருவார். அவர் அன்னை முறைகட்கு உரியவர்.' '

நம் குறைகளைக் கடமையில் மறப்பதுண்டு. தொடர்ந்து மறந்தால், மறைந்து விட்டன என நாமும், பிறரும் நினைக்கும் அளவுக்குக் கடமைகளில் லயிப்பது உண்டு. 10 வருஷமாக எழாத கோபம், 20 வருஷமாக மறந்த ஆசை, சிறு வயதில் விட்டுப் போன கெட்ட எண்ணம், சந்தர்ப்பம் எழுந்தவுடன் தலை தூக்குவதைக் கண்டால், நாம் அதிர்ச்சியடைகிறோம், ஆச்சரியப்படுகிறோம். மனைவியை இழந்தவர், விதவை, மனப்போக்கை மாற்றி அழகாக வாழும் பொழுது இல்லாத சந்தர்ப்பம் பிற்காலத்தில் ஏற்பட்டால், காலம் கடந்து திருமணம் செய்ய ஆசை எழுவதைக் காணலாம்.

காம உணர்வைக் கட்டுப்படுத்துவது இளமையில் கடினம். கட்டுப்பாட்டில் இல்லாத பிசாசு இது. தம்பி, தங்கைகள் வாழவேண்டும் என்பதற்காக, தகப்பனார் இறந்த பின், திருமணத்தை விலக்கி, தூய்மையான எண்ணத்துடன் குடும்பத்தை வளர்த்தவர் 15, 20 வருஷத்திற்குப் பின் தாம் மறந்த உணர்வு, பின்னணியில் இருப்பதைக் காணலாம். உணர்வைக் கட்டுப்படுத்தலாம். உணர்வு தன் தன்மையை இழந்ததுபோல் தோன்றலாம். இவை தோற்றம். உணர்வு அழிவதில்லை. கட்டுப்பட்டு மறையும் தன்மையுடையது. அன்னை இவ்வுணர்வை உயர்த்தி மாற்றும்படிச் (sublimate) சொல்கிறார். காம உணர்வு தன் தன்மையில் உயர்ந்து -- உடல் உணர்வு உயிருக்குரிய உணர்வாகி -- அன்னையை

ஏற்று மாறும். அது சிரமம். ஆனால் முடியும். அப்படி மாறுவது திருவுருமாற்றம். மாறிய உணர்வு நரம்பில் அமிர்த ஓட்டத்தை அளிக்கும். தன் தாழ்ந்த குணத்தை இழக்கும். மனித உறவை நாடியது, மனிதனில் தெய்வத்தை நாடும். இன உணர்வு தன் இயல்பான சுறுசுறுப்பை இழந்து இனிமையாக மாறும். சுறுசுறுப்பு உடலுக்குரியது. இனிமை உணர்வுக்குரியது. இளமை துடிக்கும். துடிப்பு மாறி உயர்ந்தால் இனிமையாகும்.

எல்லா எண்ணங்களுக்கும் திருவுருமாற்றமுண்டு. உணர்வுகளும் அப்படியே. யோகத்தை ஏற்று, அதற்காக, பிரம்மச்சரியத்தையும் ஏற்பவர்கட்கு, காமக்குரோதலோப மோகம் அழிய வேண்டும் என்பதற்காக, பல முறைகளை வற்புறுத்துவதுண்டு. உதாரணமாக காலை 4 1/2 மணி முதல் 6 மணிவரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப் படுவதுண்டு. இரவு நீங்கிப் பகல் எழும் நேரம் அது. இரவு கழிவதால், அணையும் விளக்கு பிரகாசப்படுவதைப்போல் அது போகும் நேரம் அதன் குணம் மிகைப்படும். இன உணர்வு இரவுக்குரியது. அதனால் இரவு நீங்கும் நேரத்தில் அது மிகைப்படும். யோகம் சம்பந்தப்பட்ட ஆசிரமங்களில் சாதகர்களை 4 மணிக்கு எழுந்து குளித்து விட்டு மந்திரம் சொல்லும் ஏற்பாடுண்டு. இம்முறை அவர்கள் இவ்வுணர்விலிருந்து விடுபடப் பயன்படும். ஸ்ரீ அரவிந்தாசிரமத்திலும் இம்முறையுண்டு. ஆனால் மந்திரஜபம் இல்லை. மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே பொது நியதி. ஓர் அமெரிக்க இளைஞர் தம் உணர்வு எந்தப் பொது நியதிக்கும் கட்டுப்படாததைக் கண்டு, அன்னையிடம் முறையிட்டார். இன உணர்வு இயற்கையில் ஏற்பட்டது. கட்டுப்பாட்டில் அமைந்தாலும், காலம் கடந்து பார்த்தால் கட்டுப்பாட்டின் பொழுது அது தலைமறைவாக

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- * பார்த்தாலும், பக்க நின்று கேட்டாலும், ஈர்த்தாலும், பிடித்தாலும், இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே. - வள்ளலார்.

வளர்ந்துள்ளதைக் காணலாம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் 20 ஆண்டுகட்கு மேலாக இருந்தவர் அதை விட்டு நீங்கிய பின் தம் 80ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். அன்னையை இவர் ஏற்றதில்லை. ஏற்க மறுத்தவர் இவர். அன்னை அந்த அமெரிக்கர்க்குச் சமர்ப்பணத்தைக் கூறி, இவ்வுணர்வை 5 ஆண்டு முறையாகச் சமர்ப்பணம் செய்தால் அது திருவுருமாற்றமடையும் என்றார். திருவுருமாற்றமடைந்த உணர்வு தித்திக்கும். இவ்வுணர்வு மாறி, தித்திப்பதை வள்ளலார் தம் பாடல் விவரிக்கின்றார்.* தாழ்ந்த உடல் உணர்வு, உயர்ந்த உணர்வின் வெளிப்பாடாக மாறிய பின் நரம்பில் அமிர்த ஓட்டமாகும். உணர்வு எழும்பொழுது, அதைச் சமர்ப்பணம் செய்ய முடிந்தால் கிளர்ச்சியும், சுறுசுறுப்பும் மாறி அடங்கும். நயம்மிகு இனிமையாக மாறி அமிர்த உணர்வை அளிப்பதைக் காணலாம்.

ஜீவன் மோட்சமடைய தபஸ்வி தவத்தை மேற்கொள்கிறார். ஜீவன் சித்தித்தால், அவனை ஜீவன் முக்தன் என்போம். ஜீவன் சித்திப்பது முடிவு. பூரண யோகத்தை ஆரம்பிக்க முதலிலேயே ஜீவன் சித்திக்க வேண்டும். யோகவாழ்வு அவ்வளவு பெரிய இலட்சியமில்லை. இன்றைய மனிதநிலையிலிருந்து உயர்ந்த அடுத்த நிலையாகும். பூரணயோகத்தை ஆரம்பிக்க ஜீவாத்மா சித்திக்க வேண்டுமெனில், யோகவாழ்வு சித்திக்க என்ன வேண்டும்?

வாழ்வு நல்ல முறையில் அன்னை கோட்பாட்டின்படி வளம் பெற்று மலர வேண்டுமானால், வளத்தின் அடிப்படை இரண்டு.

  • 1. ஜோதி,
  • 2. சுமுகம்.

சுமுகமான சூழ்நிலையில் அறிவால் (ஜோதி) செயல்பட்டால், வாழ்வு வளத்தால் நிறையும். வளம் என்பது பொருள், கைக்கு மெய்யாகக் கிடைக்கும் பலன். அறிவு உயர்ந்தால் பலன் அதிகப்படும். சுமுகம் உயர்ந்தால் அபரிமிதமான பலன் எழும். அறிவு குறைவானவன் செய்யும் வேலைக்குக் குறைந்த ஊதியமும், அதிகமானவனுக்கு அதிகச் சம்பளமும் கிடைக்கிறது. செல்வம் நிறைந்த குடும்பங்களில் வளரும்பொழுது சுமுகம் உயர்வதையும், பிணக்கு ஏற்பட்ட பொழுது குடும்பம் உடைந்து நஷ்டம் வருவதையும் காணலாம்.

அறிவும் சுமுகமும் சித்தித்தால் யோகவாழ்வை ஆரம்பிக்கலாம்.

கல்வி அறிவு மனத்தை உயர்த்தும். தொழில் அறிவு வளத்தை உயர்த்தும். சிறு வயதிலிருந்தே குழந்தைகள், சிறுவர்கள் செய்யும் காரியங்களில் அவர்கட்குத் திறமையைக் கற்பித்தால் இந்த அறிவுக்குரிய அஸ்திவாரம் ஏற்படும். பெரியவர்களுக்குள் பிணக்கிருந்தால், சிறுவர்களுக்குள் சுமுகம் ஏற்படாது. பிணக்கை ஏற்படுத்துவது அவசரம், பொறாமை போன்ற குணங்கள். சிறுவர்களுக்குள் போட்டி மனப்பான்மையைப் பெரியவர்கள் ஏற்படுத்தினால், அது பிணக்கை வளர்ப்பதாகும். பிறர் பெறும் நலன், நாம் பெறும் நலன், போற்றற்குரியது என்ற பழக்கத்தைச் சிறு வயதில் கற்பிப்பது நல்லது. முதல் மார்க் வாங்கிய பையனை மட்டமாகப் பேசுவது, காப்பியடித்து வாங்கினான் என்று பேசாமல், அவனைப் பாராட்டக் கற்றுக் கொடுத்தால், பாராட்டுவது நல்ல பழக்கம் என்று கற்பித்தால், அது சுமுகத்திற்குரிய அஸ்திவாரமாகும். இது அனைவரும் அறிந்ததே எனத் தோன்றும். அது உண்மை. ஆனால் இது பின்பற்றப் படாத ஒன்று என்பதும் தெரியும். 3 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் அல்லது 3 இளைஞர்கள் உள்ள குடும்பத்தில் மட்டம் தட்டிப் பேசுதல், பொறாமையாகச் சவால் விடுதல்,

பிறர் முன்னுக்கு வருவதைத் தடுக்க முயலுதல் போன்றவற்றை, பெரியவர்கள் முயற்சியால் பாராட்டிப் பேசுதல், பிறர் முன்னுக்கு வருவதற்கு முயன்று உதவி செய்தல் என மாற்றினால், அதேபோல் அவர்கள் பொருள்களை -- சைக்கிள், பேனா, காமிரா - நன்றாக வைத்துக்கொள்ளப் பயிற்றுவித்தால், வீடு மாறி களையுடன் விளங்கும். வளம் பெருகுவதையும் காணலாம்.

நம் பிரார்த்தனை பலித்தால் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. நமக்குப் பலிக்காமல், மற்றவர் பிரார்த்தனை பலித்தால், பிரார்த்தனை பலிக்கிறது நமக்குப் பலிக்கவில்லை என்று புரிந்து கொள்கிறோம். எனக்குப் பலித்தால்தான் நான் நம்புவேன் என்பது விவேகமாகாது. 'ஏன் எனக்கு மட்டும் பலிக்கவில்லை?' என்று சிந்திப்பது முறை. கல்லூரி இல்லாத ஊருக்குக் கல்லூரி வந்தால், பலரும் சேர்ந்து பயன் பெறுகிறார்கள். நம் வீட்டுப் பையன் சேரமாட்டேன் என்கிறான். சேர்ந்து பெயிலாகிறான் எனில், என் பையன் பட்டம் பெற்றால்தான் கல்லூரியிலிருப்பதை நான் ஏற்றுக் கொள்வேன்'என்று சொல்ல முடியுமா?

அன்னை நம் வாழ்வில் அருள் மூலமாகப் பலிக்கிறார். அத்துடன் நமக்குள்ள திறமைகள் மூலமாகப் பலிக்கின்றார். நமக்கு அதிகத் திறமையிருந்தால், அருள் அதன் மூலமாக அதிகமாகப் பலிக்கின்றது. இதை விளங்கிக் கொள்ள capacity,skill,talent,ability, திறமைகளின் பல நிலைகளை அறிதல் பயன்படும். மேலும் attitudes that accomplish சாதிக்கும் நோக்கங்கள், மனப்போக்கு mental attitudes, சமயோசிதம், விழிப்பு, வழிவகை strategy தந்திரயுக்திகள், எதையும் தவறாமல் சாதிக்கும் யுக்தி master stroke, எவர் இரகஸ்யத்தையும் அறியும் நுணுக்கம் penetration into secrets, சூட்சுமங்கள், சூட்சும யுக்திகள், இரகஸ்யங்கள், இவற்றை எல்லாம் பெறும் சுருக்கு வழி clues ஆகியவற்றை இந்நோக்குடன் அறிதல் பயன்படும். புராணங்களில் இவை போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

  • பாரதயுத்தம் ஜெயிக்க அரவானை பலியிட வேண்டும்.
  • 13 வருஷ'வனவாசம் 13 நாளில் முடிந்து விட்டது.
  • விஸ்வரூப தரிசனம் கிடைக்கக் கிருஷ்ணன் மீது முழு நம்பிக்கை வேண்டும்.
  • அனுசுயாவின் குரல் பரம் பொருளை நாடியதால் திருமூர்த்திகள் குழந்தைகளானார்கள்.
  • நளாயினி கற்பின் திறத்தால் சூரியனை நிறுத்தினாள்.
  • துரௌபதி துகிலுரியப்படுவதை, தெய்வ நம்பிக்கை தடுத்தது.

வாழ்வில் நாம் வெற்றி பெற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கின்றோம். 5000ரூபாய் முதலுடன் ஒரு தறி போட்டு வியாபாரத்தை ஆரம்பித்தவர் இதே தலை முறையில் பல கோடி வியாபாரம் செய்வது எப்படி? பஸ் டிரைவராக இருந்தவர் எப்படி பஸ் முதலாளியானார்? என யோசிக்கும் பொழுது, அவர் சரக்கு தரமானது அதனால் அது பலித்தது என்கிறார்கள்.

சரக்கு அவரைப் போலவே பலருக்குத் தரமாக இருக்கிறது. ஏன் பலிக்கவில்லை? என்ற கேள்விக்குப் பதிலில்லை. டிரைவர் உழைப்பால் முதலாளியானார் எனில் இவர் மட்டுமா உழைப்பாளி' என்ற கேள்வி எழுகிறது. மேலே சொல்லியவற்றை விளக்கமாக அறிந்தால் ஒரளவு இது நமக்குப் புரியும். உழைப்பால் திறமை skill ஏற்படுகிறது. அது ஒரு காரியத்தில் திறமையாகும். பல skills திறமைகள் உழைப்பால் சேர்ந்தால் அது capacity பொதுத்திறமையாகிறது. பொதுத்திறமை ஒரு திறமையில் செறிவாகச் சேர்ந்தால் அது குறிப்பான திறமை talent ஆகிறது. பொதுத்திறமை

பரவலானது. குறிப்பான திறமை ஒரு விஷயத்தில் மட்டும் வெளிப்படும். இவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்டால், அன்னை அவரவர்கட்குரிய திறமை மூலம் வெளிப்படுவார்கள். எழுத்துத் திறமையுள்ளவர் அன்னையிடம் வந்த பின் 70 புத்தகம் வெளியிட்டார். பாட்டுத் திறமையுடையவர் அன்னையிடம் வந்த பொழுது உலகப் புகழ் எய்தினார். பொதுச்சேவையில் ஈடுபட்டவர் பக்தர் மூலம் அருள் பெற்ற பொழுது உலகப் பரிசு பெற்றார். நமக்குள்ள திறமைகளை அதிகப்படுத்திக் கொண்டால், அத்திறமைகள் மூலம் அன்னை வெளிப்பட்டு நம் வாழ்வில் செயல்படுவார்.

சாதனை:

நான் எழுதும் கட்டுரைகளிலெல்லாம் சாதனையைக் (accomplishment) குறிப்பிடுவதுண்டு. நான் குறிப்பிடும் சாதனை வாழ்வில் பெறும் சாதனை. அதுவும் அன்னை சக்தியால் பெறும் சாதனை. நடக்குமா எனப் பலரும் வியக்கும் சாதனை அன்னை வாழ்வில், நிபந்தனைகள் பூர்த்தியானால் தவறாது நடக்கும் என்பதால், அதை விவரமாக அறிய வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் சொல்கிறேன்.

  • வாழ்வில் முடியாதது, அன்னை வாழ்வில் முடியும்.
  • ஆயிரத்திலொருவருக்கு வாழ்வில் பலிப்பது இங்கு அனைவருக்கும் பலிக்கும்.
  • நாம் செய்ய வேண்டியது நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது.
  • நம் சாதனையின் எல்லைக்குள் அதிகபட்ச குறிக்கோளுக்கு முயல்வது.

அன்னை வாழ்வு என யோக வாழ்வைக் குறிப்பிடுகிறேன். வாழ்வில் முடியாதது அன்னை வாழ்விலும் முடியாதது

என்பவர் அன்னையை அறிந்தவரில்லை. அன்னை மீது நம்பிக்கையுள்ளவரில்லை. அந்நம்பிக்கை எழுந்த பின், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து அதிகபட்சக் குறிக்கோளை முன் வைத்து முயல்வது சரி. தவறாமல் பலன் உண்டு. குறிக்கோள் எனில் எதைக் குறிக்கின்றோம்? நம்மையொத்தவர் வாழ்வில் அதிகபட்சம் பெற்றதை நாம் பெற முடியும். அதுவே நம் குறிக்கோள். நிபந்தனைகள் என்பன எவை? தவறானவற்றை அறவே ஒழித்து, முறையான, நல்ல, முழு முயற்சியே நிபந்தனை.

மாதம் 10,000ரூபாய் சம்பாதிக்கும் இன்ஜினீயர் இதைக் கருத முன் வந்தால், அவருக்கு நான் சொல்லக் கூடியது என்ன? இது சம்பந்தமான கருத்துகள் அனைத்தையும் பயின்ற பின், முதற் கேள்வி அவருக்கு நம்பிக்கை எழுகிறதா? என்பதே. இல்லை என்று பதில் வந்தால், நம்பிக்கை இல்லாதவரை சாதனையில்லை. ஜீவியம் மலரும், மாற்றம் (shift) ஏற்படும், ஆயிரத்திலொருவருக்குக் கிடைப்பது தமக்குக் கிடைக்கும், இது நடக்கும் என்ற நம்பிக்கை எழாவிட்டால், அக்கட்டமே முயற்சியின் முடிவு. நான் பத்தாயிரம் சம்பாதிக்கிறேன். எனக்கு எப்படி மாதம் இலட்சரூபாய் வரும்? என்று கேள்வி எழுந்தால், பயின்றதன் பலனாக நம்பிக்கை எழவில்லை எனப் பொருள். அந்நிலையிருந்த ஒருவருக்கு ஓரளவு நம்பிக்கை எழுந்தது. அம்மாற்றம் 3, 4 நாட்களில் ஏற்பட்டது. அவரிருந்த இடத்திற்கு அந்நேரம் ஒரு செய்தி வந்தது. நல்ல (project) திட்டங்களிருந்தால் 30 கோடி வரை மூலதனமிடச் சிலர் விரும்புகிறார்கள் என்று செய்தி சொல்லிற்று. இன்ஜினீயர் பயிற்சி பெற்றுள்ள இடத்தில் ஒரு திட்டத்தில் 3 கோடி மூலதனத்திற்கு 30 இலட்சம் இலாபம் வரும். அவருள்ள இடத்திலேயே அவருக்கு நேரடி பயிற்சியில்லாத இடத்தில் 3 கோடி மூலதனத்தில் 1 கோடி இலாபம் வரும் என்றொரு திட்டம் உண்டு. மூலதனம் அளிக்க விரும்புபவர்

தங்கள் மூலதனம் பத்திரமாக இருந்தால் பாங்க் வட்டிக்கு 4 ஆண்டு மூலதனம் கொடுத்துப் பின் அதைத் திரும்பப் பெற நினைக்கிறார்கள். நம் நாட்டு பாங்க் வட்டி அவர்கள் நாட்டு பாங்க் வட்டியைப் போல 21/2மடங்கு என்பதால் அவர்கள் விருப்பப்படுகிறார்கள். மனத்தில் நம்பிக்கை எழ ஆரம்பித்தவுடன் (life response) வாழ்வு மாறி பலன் தரும் அறிகுறிகளைக் காட்டுகிறது. முழு மனமாற்றம், பூரண நம்பிக்கை, அயராத உழைப்பு உள்ளவருக்கு அன்னை திட்டமாக எழுவார். மூலதனமாகக் காட்சியளிப்பார்.

இந்த இன்ஜினீயருடன் பயின்றவர் இன்று ஒருவர் தொழில் நடத்தினால் அவர் சம்பாதிப்பது இலட்சமானாலும், பல இலட்சங்களானாலும், இவர் முயற்சிக்கு அது பலன் தரும். தம் நண்பர்கள் இன்று அதிகபட்சம் பெற்றது 30 கோடிக் கம்பனி அல்லது 50 கோடிக் கம்பனியானால், அவர் அதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். சாதனை என்பது அதுவே. இதன் முழு சூட்சுமமும் அன்னை மீது நமக்குள்ள நம்பிக்கையில் இருக்கிறது. சாதிப்பவர்கள் மாறுவார்கள், (shift) மாறுபவர்கள் சாதிப்பார்கள்.

ஆன்மிகம் வாழ்விலிருந்து வேறுபட்டது. அது அடிப்படை வேறுபாடு. அதை ஊன்றிக் கவனித்தால் அன்னை வாழ்வின் அம்சங்கள் குழப்பமின்றி எளிதில் புரியும். முரண்பாடு மனித வாழ்வுக்குரியது. முரண்பாடு வாழ்வுக்கு அவசியமில்லை. மனிதனுக்கு அவசியம். நல்லதும் கெட்டதும் முரண்பாடானவை. வாழ்வு எனில் இரண்டும் கலந்து தானிருக்கும் என்பது நெடுங்கால உண்மை. ஆன்மிக வாழ்வில் கெட்டதில்லை, நல்லதுண்டு. கெட்டதொழிந்த நல்லதுள்ள வாழ்வு ஆன்மிக வாழ்வு. (ஆன்மிக வாழ்வு, அன்னை வாழ்வு, யோக வாழ்வு) என்பவை ஒரே வாழ்வைக் குறிக்கும்).

கெட்டதற்ற நல்லது மட்டுமுள்ளதே அன்னை வாழ்வு. இருள் அற்ற ஒளி மட்டுமுள்ளது அன்னை வாழ்வு. துன்பமற்ற இன்பம், மரணமற்ற வாழ்வு. பொய்யொழிந்த சத்தியம், தீமையற்ற நன்மை, சிறியதில்லாத பெரியது அன்னை வாழ்வுக்குரியவை.

இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும், இருள் இல்லாத ஒளியில்லை, இரவில்லாமல் பகல் ஏற்படாது, பிறப்பில்லாத வாழ்வில்லை, மரணமற்ற வாழ்வை உலகம் அறியாது, தீமையற்ற நன்மையில்லை, வெற்றி கலவாத தோல்வியில்லை, நஷ்டமில்லாத இலாபமில்லை என்ற நமக்கு அன்னை வாழ்வு புதிராக இருக்கிறது. அது தெளிவு பெறுவதுடன், அதன் உண்மையை நாம் உணருவது அவசியம். மாற்றத்திற்கு இது தேவை. ஆங்கிலத்தில் capital பெரிய எழுத்து இருப்பதால், தீமை நன்மை என்பதை evilXgood என்றும், தீமை என்ற எதிர்ப்பில்லாத நன்மையை Good என்றும் பகவான் எழுதுகிறார். good நன்மை மனித வாழ்வுக்கும், Good நன்மை அன்னை வாழ்வுக்கும் உரியது. அன்னை வாழ்வுக்கு Good நல்லது. இல்லாவிட்டால் good இருந்தால் போதும். ஆனால் அது அன்னை கோட்பாடுகளால் செயல்படுவதாக இருக்க வேண்டும். இந்த நன்மையும் good பரந்திருப்பதால், தாழ்ந்த மனித எல்லையும், உயர்ந்த அன்னை எல்லையும் அதற்குண்டு. நான் உயர்ந்த அன்னையின் எல்லையை வலியுறுத்துகிறேன்.

பணத்தைத் தொழில் மூலமும், உத்தியோகம் மூலமும், சம்பாதிக்கலாம். உயர்ந்த மனிதர் சேவையை மேற் கொண்டால், அவரைத் தேடி அவர் சேவைக்காகப் பணம் வருகிறது. சேவை சம்பந்தமாக அவர் செய்யும் தொழில், சேவையாக மாறிப் பணத்தை ஈட்டுகிறது. இது எல்லோருக்கும் முடியாத உயர்ந்த நிலை. இதைத் Good தீமையொழிந்த நன்மைக்கு உதாரணமாகச் சொல்லலாம். தொழில் பணத்தை



book | by Dr. Radut