Skip to Content

02. பகுதி - 2

தம்பி - நன்மையும் தீமையும் எப்படிக் கலந்துள்ளன?

அண்ணன் - தீமை சமையலறைபோன்றது, நன்மை சமையல் போன்றது. சமையல் வேண்டும், சமையலறை வேண்டாம் என்று கூறமுடியாது. நன்மையால் வெளிப்படுத்த முடியாதவற்றைத் தீமை வெளிப்படுத்துகிறது என்கிறார். வீட்டிலுள்ள பொருள்கள் 50 ஆயிரம் அல்லது லட்சம் பெறும். அப்பொருள்களால் 2 கோடியை வெளிப்படுத்த முடியாதன்றோ! அது பணமாக இருக்கிறது. நாம் அதை விலக்க முயல்கிறோம்.

தம்பி - தீமை பணம் போன்றது என்பது நம்பமுடியாத ஒன்று.

அண்ணன் - பகவான் சொற்களில் நம்பமுடியாதவை என்பதில் உயர்வுள்ளது. ஆமாம், அறியாமை அறிவைவிட உயர்ந்தது என்கிறார்.

தம்பி - உலகிலேயே முதலில் தீமையைப் பற்றிப் பேசியவரே பகவான்தானே. தீமை என்பது தீமையில்லை. உலகில் தீமையேயில்லை என்பதைக் கூறியவரே ஸ்ரீ அரவிந்தரல்லரோ? அதனுள் உள்ள நன்மையைப் பெறும் மார்க்கத்தையும் கூறுகிறாரே.

அண்ணன் - இவ்வளவு இருக்கும்பொழுது நமக்குத் தொந்தரவை எத்தனைப் பேர் கொண்டு வருகிறார்கள்? எப்படி முடிகிறது?

தம்பி - தவற்றைச் செய்தால் நஷ்டமும், கஷ்டமும் நமக்கு என்றவரை பிறர் செய்கிறார்கள். கஷ்டம் அவருக்கே வந்தால் செய்யமாட்டார்கள். பிறகு அவர்கட்கு பெரிய கஷ்டம் வரும் என்று தெரியாதவரை செய்வார்கள்.

அண்ணன் - அதுபோல் எனக்கு அந்தப் புரொபசர் செய்தார். என் நஷ்டம் ஆயிரம், பத்தாயிரம். பிறகு அவருக்கே அது வந்தபொழுது பல இலட்ச நஷ்டமாயிற்று. இப்பொழுது என்ன செய்கிறார்?

தம்பி - தீமையேயில்லை என்றால் இதை எப்படிப் புரிந்து கொள்வது?

அண்ணன் - இரு வகைகளாகப் புரியும். ஒன்று இலாபத்தில் நஷ்டம் என அறியலாம். அதாவது இப்படி ஏற்படும் நஷ்டமெல்லாம் பெரிய இலாபத்தைச் சிறிய இலாபமாக்குகிறது.

அடுத்தது தீமை இவ்வழியாக நன்மையாக மாறுகிறது எனலாம்.

தம்பி - அறிவால் மாறினால் சிரமமிருக்காது. வாழ்வு நம்மை மாற்றும்பொழுது சிரமமேற்படுகிறது. அதுவும் நல்லதுதானே.

அண்ணன் - தத்துவம் எதுவானாலும் நான் அன்னையிடம் வந்தபின் அறிந்தது.

  1. அதன்பின் பிரச்சினை வரவில்லை.
  2. நானே வலிய அறியாமையால் உற்பத்தி செய்ததே பிரச்சினை.
  3. எனக்குத் தொந்தரவு செய்த நண்பர்கள், உறவினர்கள், அவர்களுக்கு என் மீதுள்ள கெட்ட எண்ணத்தால் சிக்கலில் மாட்டியதை விலக்கப் போய் அவர்கள் எனக்கு ஏற்படுத்திய ஆபத்தைத் தவிர வேறே எதுவும் எனக்கு வரவில்லை. 

தம்பி - ஆமாம், அதுதான் உண்மை. அது மட்டுமே உண்மை. கெட்ட எண்ணக்காரர்களை நண்பர்களாகப் பெற்றது மட்டுமே பிரச்சினை.

அண்ணன் - அவர்கள் தாமே விலகும்வரை காத்திருந்தேன். நானே விலகக்கூடாது என்றிருந்ததால் வந்த வினைதான் நான் அனுபவித்தது, வேறெதுவுமில்லை.

தம்பி - மனிதர்கள்தாம் தொந்தரவுக்கு உற்பத்தி ஸ்தானம், விஷயமன்று.

அண்ணன் - அவர்கள் மீது நமக்குள்ள பற்று, நமக்குத் தொந்தரவு. யாராக இருந்தாலும், அவர்களை நாம் தொடர்ந்து பாராட்ட அவர்கள் அன்னையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அன்னையை அதிக அளவில் ஏற்கவேண்டும். நம்மைவிட அதிகமாக அன்னையை அவர்கள் ஏற்றால் நம்மால் அவர்கட்குத் தொந்தரவு. குறைவாக ஏற்றால் அவர்கட்கு நம்மிடம் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களால் நமக்குத் தொந்தரவு.

தம்பி - இது அன்னை விஷயத்தில் மட்டுமன்று. அந்தஸ்து, பண்பு, படிப்பு, உத்தியோகம், செல்வம் ஆகியவற்றிலும் இதுதானே சட்டம். பழகப்பழகப் பாலும் புளிக்கும் என்று உலகம் கூறுயதே.

அண்ணன் - பால் புளிக்கலாம். அன்னை புளிக்கமாட்டார். Methods முறைகளை வலியுறுத்தினால் ஜீவன் போய்விடும், பிறகு புளிக்கும். புளிப்பது உண்மை. புளிப்பது அன்னையன்று. முறைகள் புளிக்கும். ஜீவனிருந்தால் புளிக்காது. அன்னைக்கு என்றுமே ஜீவனுண்டு. ஜீவனில்லை எனில் அன்னையில்லை.

தம்பி - இந்த விஷயத்தில் அன்னை விதிவிலக்கு.

அன்னைக்கு என்றுமே விதியில்லை. விலக்கே அவர்கள் உரிமை.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் எதுவுமே எழுதவில்லை. அவருக்குச் சில குறிப்பான எண்ணங்களுண்டு. ஆனால் அவற்றை வெளிப்படுத்த பகவான் ஆர்வம் கொள்ளவில்லை என்கிறார் அன்னை.

அண்ணன் - இந்தத் துறையை ஸ்ரீ அரவிந்தருடைய சிஷ்யர்கள் நாடியதாகத் தெரியவில்லை.

தம்பி - பகவான் எழுதிய ஒரு விஷயம் எனக்குத் தெரியும். மேல்நாட்டவருக்கு yogic force யோக சக்தியை அனுப்பினால் சோர்ந்திருந்த மனிதன் எழுந்து வேலை செய்து பலன் பெறுகிறான். அதே சக்தியை இந்தியருக்குக் கொடுத்தால் மயக்கம் தெளிந்து எழுந்து கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் மயக்கமுறுகிறான். யோகசக்தி மேல்நாட்டவரிடம் வேலை செய்கிறது. நம்மவரிடம் பலன் தருவதில்லை என்கிறார்.

யோகசக்தி இந்தியரிடம் அதிகம் பலன் தரும் என நான் எதிர்பார்த்தேன். பகவான் கூறுவது தலைகீழாக இருக்கிறது.

அண்ணன் - மேல்நாட்டார் ஜடத்தில் பிரம்மத்தைக் கண்டவர்கள். நாம் ஆன்மாவில் பிரம்மத்தைக் கண்டோம். அவர்கள் கடின உழைப்பாளிகள். ஏராளமான உழைப்பு ஏராளமான பலனைத் தருகிறது. உழைப்பின் பலனை வீடு, ஊர், கட்டிடம், ஸ்தாபனம், வேலை, பொருள்கள் என மாற்றி, முறைப்படுத்தி வாழ்வு நிலையை உயர்த்தி அனுபவிக்கிறார்கள். இதை அங்கு சுத்தமாகக் காணலாம். ஊரும், தெருவும் சுத்தமாக இருக்கும். வீடு சுத்தமாக இருக்கும். பொருள்கள் வரிசையாக இருக்கும். ஒழுங்கு, குறித்த நேரம், வரிசை, சுத்தம், அங்கு ஏராளம். பிறரிடம் உதவியை மனிதன் ஏற்கமாட்டான். சுயகௌரவம் அதிகம். பொய் சொல்வதில்லை. விழிப்பாக இருக்கிறான். எதையாவது புதியதாகக் கண்டுபிடித்துக் கொண்டே யிருக்கிறான். வாழ்வு வளமாக இருக்கிறது, வளர்ந்தபடியிருக்கிறது. வேலையைச் சுலபமாகச் செய்ய எதைக் கண்டுபிடிக்கலாம் என்ற ஆர்வம் மிகுதி. They are conscious and organised விழிப்போடும், முறையோடும் செயல்படுகின்றனர். அங்கு சக்தி செயல்படக் கருவி, தெளிவான மனிதன் என்ற கருவியுள்ளது. இந்தியாவில் மனிதனேயில்லை, 2½ பேர் உள்ளனர் என ஸ்ரீ அரவிந்தரின் தமையனார் கூறினார். ஸ்ரீ அரவிந்தர் ஒன்று, அவர் தம்பி பரீன் இரண்டு, திலகர் ½ ஆக 2½ மனிதர்களே இருப்பதாகச் சொன்னார்.

தம்பி - அப்படி அமையக் காரணம் என்ன? ஸ்ரீ அரவிந்தர் ஏதேனும் கூறியுள்ளாரா?

அண்ணன் - நேரடியாக எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் கூறியவற்றிலிருந்து நாம் யூகமாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா பிரம்மத்தைக் கண்டது. ஆன்மாவில் கண்டுவிட்டது. வாழ்வு படிப்படியாக அமைந்துள்ளது. முதலில் உடல் - ஜடம் - அஸ்திவாரமாக இருக்கிறது. அடுத்தது வாழ்வு - சக்தி, vital - உடலைத் தெம்பால் நிரப்புகிறது. உச்சியில் மனம் - அறிவு - வாழ்வையும், உடலையும் வழி நடத்துகிறது. ஆன்மா தலைவனாக அமைகிறது.

தம்பி - மேல்நாட்டு மதம், கிருஸ்துவர், சர்ச் போன்றவை ஆன்மாவில் பிரம்மத்தைக் காணவில்லையா?

அண்ணன் - ஆசியாவில் ஆன்மாவும், ஐரோப்பாவில் வாழ்வும் வளர்ந்ததாகக் கூறுகிறார். இனி இவை இணைய வேண்டும். இந்தியர் உடல் ஒளியுள்ளதாயும், மேல்நாட்டார் உடல் இருளாகவுமிருப்பதாக அன்னை கூறுகிறார்.

தம்பி - ஆன்மாவில் பிரம்மத்தைக் கண்ட இந்தியர் வாழ்வைப் புறக்கணித்து வாழ்வு சூன்யமாக இருப்பதாக அன்னை கூறும்பொழுது, வாழ்வைத் தாண்டி உடலில் ஒளியிருப்பதாகக் கூறினால் எப்படிப் புரியும்?

அண்ணன் - உடலும், வாழ்வும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் ஆன்மாவிலுள்ள அபரிமிதமான ஒளி உடல்வரை ஊடுருவுகிறது. இந்தியர் வாழ்வையும், உடலையும் கவனித்தால் இந்தியா வீறுகொண்டு எழும்.

தம்பி - உடல் என்பது நாடு, பூமி என்பதால் 56 தேசங்களாக - 350 சிறு ராஜ்யங்கள், 500 குறுநில மன்னர் என சரித்திரம் கூறுகிறது - இருந்ததாகக் கதைகள் கூறும். இந்தியா ஒன்றுபட வேண்டும் என்பதே அடிப்படை. அதைச் சாதிக்க முடியவில்லை என்பதால் Nature இயற்கை அன்னியப் படையெடுப்பை மேற்கொண்டது எனவும் பகவான் கூறுகிறார். 800 ஆண்டுகளாக முஸ்லீம் ஆட்சியும், 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர் ஆட்சியும் நாட்டை ஒற்றுமைப்படுத்தின. 1947இல் அது 3ஆகப் பிரிந்தது. அடுத்தது என்ன?

அண்ணன் - மேல்நாட்டார் வாழ்வில் கண்ட பிரம்மத்தை ஆன்மாவில் காண வேண்டும். இந்தியர் வாழ்வில் பிரம்மத்தைக் காண வேண்டும்.

தம்பி - அதற்கு இன்னும் 500 வருஷமாகுமா? அல்லது நவீன சாதனங்களால் 50 ஆண்டில் சாதிக்க முடியுமா?

அண்ணன் - சட்டங்களை ஸ்ரீ அரவிந்தர் கூறியதிலிருந்து நாம் கீழ்க்கண்டபடி புரிந்து கொள்கிறோம்.

  1. அன்னைக்கு உலகை ஒரே நாளில் Supramentalise சத்தியஜீவிய வாழ்வாக மாற்றமுடியும்.
  2. மேல்நாட்டார் 500 ஆண்டுகளில் சாதித்ததை நாம் சாதிக்க 500 ஆண்டு போதாது.
  3. நவீன டெக்னாலஜியிருப்பதால் 500 என்பதை 50இல் சாதிக்கலாம். ஆனால் கடந்த 50 ஆண்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
  4. அதற்கு மேல் சொல்ல psychic being சைத்திய புருஷனை விவரிக்க வேண்டும்.

தம்பி - சைத்தியப்புருஷன் என்பதை நம் அன்பர்கள் நன்றாக அறிவார்கள். அதை எப்படி இங்குக் கொண்டு வருவது? அண்ணன் -

  1. Being, Becoming, Being of the Becoming.
  2. புருஷன், பிரகிருதி, பிரகிருதியின் புருஷன்.
  3. ஆன்மா, வாழ்வு, வாழ்வின் ஆன்மா (சைத்தியப் புருஷன்). 

இப்பிரிவினையைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் ஸ்ரீ அரவிந்தர் கூறும் 3 நிலைகளை - மேலே சொன்னவற்றிற்குரிய நிலைகளை - விளக்க முடியும். எளிய பாஷையில், மேற்சொன்ன மூன்றை - மூன்றும் ஒன்றே -

துறவறம் - இல்லறம் - இல்லறத்தில் துறவறம்

என்று கூறலாம்.

மேலும் விளக்கம் தேவைப்பட்டால்,

  1. இல்லறம்(மனிதன்) - இன்று நாம் வாழ்வது, இன்ப துன்பங்களுடையது, கர்மத்திற்குக் கட்டுப்பட்டது, அதிர்ஷ்டம் நமக்கில்லை, எப்போதோ தானே வரலாம். நல்லது நடக்க வெகு நாளாகும். காலத்திற்குட்பட்டது. (வாழ்வு; பிரகிருதி, காலம்)
  2. துறவறம்(தவசி) - தவம், இல்லறத்தின் இடர்ப்பாடுகளற்றது. வாழ்க்கைக்குரியதன்று. கடவுளை நாடுவது, காலத்தைக் கடக்கவல்லது. (இறைவனுக்குரியது) புருஷன், காலத்தைக் கடந்தது. இறைவன் செயல் விரைவாக நடக்கும்.
  3. இல்லறத்தில் துறவறம் (பூரண யோகி) துறவியின் தூய்மையுடன் இல்லறத்தை நடத்துவது, இல்லறம் தாழ்ந்தது என்ற மனநிலையிலிருந்து மாறி, இல்லறம் துறவியைப் பூரணப்படுத்தும் என அறிந்து, இறைவனின் கடமைகளை அவன் சார்பில் உலகில் பூர்த்தி செய்வது, காலமும், காலத்தைக் கடந்த நிலையும் சந்திக்குமிடம். (பூரணயோகிக்குரியது, சைத்தியப்புருஷன்; காலமும் காலத்தைக் கடந்த நிலையும் சேருமிடம்) Instantaneous miraculousness க்ஷணத்தில் பூர்த்தியாகும் என்று பகவான் கூறும் நிலை. 

மனித செயல் பூர்த்தியாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும்.

தவசிக்கு இறைவன் செயல் விரைவில் பூர்த்தியாகும் - வாழ்வில்லை.

பூரணயோகிக்கு வாழ்வில் எந்தக் காரியமும் க்ஷணத்தில் பூர்த்தியாகும்.

இந்தியர் இந்த மூன்றாம் நிலைக்குரிய மனநிலையை நாட்டை அபிவிருத்தி செய்வதில் மேற்கொண்டால் எந்த வேகத்திலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

தம்பி - வாழ்வில் பிரச்சினை தீருவதையும், க்ஷணத்தில் அன்னை தீர்ப்பதையும் நடந்த காரியங்கள் மூலம் விளக்கினால் புரியும்.

அண்ணன் - ஒரு ஏழை கிராமம் வசதி பெறுவது, உலகில் ஆயுதக்குவியலைக் கலைப்பது, ஒதுக்கப்பட்டவன் நிலை உயர்வது, சமூகம் எவரை அழிக்க முயல்கிறதோ அவர் முன்னேறுவது, பிள்ளைகள் படிப்பு வேகம் போன்றவற்றைப் பற்றி நம் அபிப்பிராயம் என்ன?

தம்பி - இவையெல்லாம் நடக்காத காரியம், அப்படி நடக்க நெடுநாளாகும், பல தலைமுறைகளாகும்.

அண்ணன் - நீ சொல்லிய பதில் வாழ்வுக்குரியது. இந்நிலையை Becoming, பிரகிருதி, வாழ்வு, இல்லறம் என்ற பல சொற்களால் சொன்னோம். துறவறம் என்பது மோட்சம் பெறும் நிலை என்பதால் அதை நாம் விவரிக்கத் தேவையில்லை.

தம்பி - பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவதைத் துறவறமும், இல்லறமும் இணைந்த நிலையாக நான் புரிந்து கொண்டேன்.

அண்ணன் - நிதானமான குடும்பஸ்தன் கட்டுப்பாடாக நடப்பதை நாம் அறிவோம். கட்டுப்பாடு எனில் ஆசை, கோபம் எழுவதைக் கட்டுப்படுத்துவதாகும். அது போன்றவை எழாமல், கட்டுப்பாடு தேவைப்படாத நிதானம் சமத்துவம் எனப்படும். அந்நிலையில் சைத்தியப்புருஷன் வெளிப்படுகிறான். அம்மனநிலையில் செயல்படும்பொழுது காரியங்கள் அபரிமிதமாக வெற்றி பெறுகின்றன.

தம்பி - அம்மனநிலையில் காரியங்களைச் செய்தால் நம் பத்திரிகை விற்றதுபோலிருக்கும் அன்றோ? ஒரு பிரதிகூட விற்க முடியாது என்பது போன்ற பத்திரிகை அளவுகடந்து விற்றதன்றோ!

அண்ணன் - Mother's Force அன்னை சக்தி அம்மனநிலை - சமத்துவம், நிதானம் - மூலம் செயல்படுகிறது. நாட்டின் முன்னேற்றம் விரைவாகப் பூர்த்தியாக தலைமை அதுபோல் செயல்பட வேண்டும். அப்பொழுது அன்னை சக்தி உள்ளே வரும். இந்தியருடம்பில் உள்ள ஒளி அன்னை சக்தி செயல்பட உதவும். குடும்ப முன்னேற்றத்திற்கும் சட்டம் அதுவே.

தம்பி - இன்று நாம் செயல்படுவதற்கும், நாம் இருக்க வேண்டிய நிலையையும் ஒப்பிட்டுக் காட்ட முடியுமா?

அண்ணன் -

              இன்று நாமுள்ள நிலை                             இருக்க வேண்டிய நிலை

1. Casual
    கவனமற்ற, கவலையற்ற நிலை
Fully serious
பொறுப்பான இலட்சிய மனநிலை
2. Scattered attention
    மனம் நிலைப்படாமல் இருப்பது
Concentrated attitude
இலட்சியமே குறியாக
இருப்பது
3. ஆசை, கோபம் வருவது,
    வந்து கட்டுப்படுத்துவது
அவை எழாத நிதானம்
4. பிரச்சினை வந்தால்
   அன்னையை அழைப்பது
இடையறாத அன்னை நினைவு
5. சூழலைக் கவனிப்பதில்லை
சூழலைச் சூட்சுமமாகக் கவனிப்பது
6. சமர்ப்பணமற்ற செயல்,வேலையை    ஆரம்பித்த பின் சமர்ப்பணம் செய்தல்
சமர்ப்பணமே முதற்கடமை. முடிவும் சமர்ப்பணமேயாகும்.

 

தம்பி - சில சமயங்களில் பெரிய காரியங்களும் எளிதாக நடந்து விடுகின்றன. சிறிய காரியங்களும் நடப்பதில்லை, ஏன்? உதாரணமாக இப்பொழுது கரண்ட் 1½ மணி நேரமாக இல்லை. நான்கு, ஐந்து பேர் கூப்பிட்டுப் பார்த்தனர். 4, 5 முறை கூப்பிட்டால் வரும் கரண்ட், 1½ மணியாக வரவில்லை.

அண்ணன் - இன்று ஏன் கரண்ட் வரவில்லை என எனக்குத் தெரியும். காரணங்கள் ஆயிரம். பொதுவாகச் சொல்வது கஷ்டம். இன்று 6 பேர் உட்கார்ந்து கரண்டைக் கூப்பிடுகிறார்கள். அவர்கள் உட்காருமுன் என்ன சொன்னார்கள் தெரியுமா? வரும், கரண்ட் வரும், பாரேன் என்பார்கள். கரண்ட் கூப்பிட்டால் வரும், வரும் பாரேன் என்றால் வராது, எதிர்பார்த்தால் வாராது. ஒரு முறையை வலியுறுத்தினால் முறை சக்தியை இழக்கும்.

தம்பி - பல காரணங்களுண்டு என்றீர்களே. சிலவற்றைச் சொல்லுங்கள்.

அண்ணன் -

  1. எதிர்பார்ப்பது.
  2. Challenge செய்வது, வருதா, இல்லையா எனப் பாரேன் என்பது.
  3. நான் கூப்பிட்டால் வரும் என்பது - egoistic attitude.
  4. நம்பிக்கையில்லாமல் கூப்பிடுவது.
  5. வீடு முழுவதும் அசுத்தமாயிருந்தால் கரண்ட் இதுபோல் வாராது. 

அன்னைக்குப் புறம்பான எந்த விஷயமும் ஊன்றிப் போன இடங்களில் அருள் செயல்படாது.

தம்பி - இது சிலருக்குத்தான் முடியுமா? எல்லோராலும் முடியுமா?

அண்ணன் - எல்லா விஷயங்களும் எல்லோராலும் முடியும். ஒருவரால் முடியும், அடுத்தவரால் முடியாது என்பதே பொதுவிதியில் இல்லை. அன்னையை அறிந்த முதலில் இந்த சக்தி வந்து விடும். நாளாகும் என்பதேயில்லை. எல்லாத் திறமைகளும் (கரண்ட்டைக் கூப்பிடுவது போன்றவை) ஆரம்பத்திலேயே வரும்.

தம்பி - இவற்றையெல்லாம் கட்டுரையாக எழுதினால் புரியாது, கதையாக எழுதினால் புரியும்.

அண்ணன் - கதை மூலம் நன்றாகச் சொல்லலாம். அனுபவம் என்பது ஒருவருக்கு ஓர் அனுபவம் வருகிறது. எல்லா அனுபவங்களும் ஒருவருக்கே வாரா. அதைப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்தால் கதை எழுத வருமா? கதை எழுதுபவருக்குப் புரியவேண்டும். அன்னை பக்தராக இருந்து, இவற்றையெல்லாம் புரிந்துகொள்பவர் கதை எழுதக் கூடியவரானால், ஒரு நீண்ட நாவல் எழுதினால் போதும். எல்லாச் சட்டங்களும் அதனுள் அடங்கும். அம்முயற்சி 25 வருஷமாகப் பலிக்கவில்லையே. இலக்கியம் சக்தி வாய்ந்தது. இலக்கியத்தைச் சரிவரப் பயன்படுத்தினால், அதாவது பயன்படுத்தியிருந்தால், பிரெஞ்சுப் புரட்சியைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார் ஓர் ஆசிரியர்.

தம்பி - அன்னையின் கொள்கைகள், வாழ்வின் எதிரொலி, ஸ்ரீ அரவிந்தரின் தத்துவங்களை உலகப் பேரிலக்கியங்களைப் படித்தவர்கள் அவை மூலம் எளிதில் அறிய முடியும்.

அண்ணன் - நான் அதிகம் படித்ததில்லை. சில கதைகள் படித்திருக்கிறேன். அவற்றை நீ சொல்லியதுபோல் புரிந்து கொண்டிருக்கிறேன். 200 வருஷத்திற்கு முன் எழுதிய ஆங்கில நாவல் அது*(* பார்க்க: Pride and Prejudice - கர்வம், தப்பபிப்பிராயம் ஒரு தனவந்தருக்கு 5 பெண்கள். அவர் வருமானம் ஆண்டுக்கு 2000 பவுன் (£ 2000). ஆனால் அவர் வாழ்நாளுக்குப் பின் அந்தச் சொத்து பெண்களுக்கில்லை. அவர்கள் நாட்டில் பெண்கள் தாங்களே வரன் தேடிக் கொள்ளவேண்டும். முதல் பெண் சாது, அடுத்தவள் அக்காபோல் அழகியல்லள். ஆனால் தெளிவாகப் பரவசமாக இருப்பவள். அடுத்த 3 பேரும் வெறும் பெண்கள். தங்கள் நிலையறியாதவர்கள். பெரிய பெண்கள் இருவரும் நிதானமானவர்கள். அவர்கள் ஊருக்கு இரு பெரிய தனவந்தர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள். ஒருவருடைய வருமானம் £ 5000. அடுத்தவர் மிகப் பெரிய செல்வர், வருமானம்

£10,000. இருவரும் திருமணமாகாதவர். இவர்கள் உள்ளூர் தனவந்தர் குடும்பத்தைச் சந்திக்கிறார்கள். மூத்த பெண்ணை ஒருவர் விரும்புகிறார். திருமணம் நிச்சயம் என்ற அபிப்பிராயம் பரவுகிறது. விரும்புகிறவரும் சாது. பெரிய செல்வர், உள்ளூர் தனவந்தரை மட்டமாக நினைக்கிறார். அவருக்கு இரண்டாம் பெண் மீது தன்னை மீறிய பிரியம் எழுகிறது. அவரை அனைவரும் கர்வி என்கிறார்கள். இரண்டாம் பெண்ணுக்கு அவரைக் கண்டாலே கசப்பு, தன்னை அளவுகடந்து விரும்புபவர் மீது வெறுப்பு. விருப்பம் அளவு கடந்திருந்தாலும் அவர் நடைமுறை அவள் மனதைப் புண்படுத்துகிறது. அதை விளக்க முயன்றவர் அவளை இழித்துப் பேசுகிறார். 

எதிர்பார்த்த திருமணம் நடைபெறவில்லை. வந்த தனவந்தர்கள் போய்விட்டனர். இரண்டாம் பெண்ணுக்கு தன் தமக்கை திருமணத்திற்கு தடை கர்விதான் என்று புரிகிறது. அவர்கள் ஊருக்கு இராணுவம் முகாமிட வருகிறது. ஆபீசர்கள் உள்ளூரில் எல்லோரிடமும் கலந்து பழகுகின்றனர். தனவந்தரின் கடைசி மூன்று பெண்களும் ஆபீசர்களுடன் பார்ட்டி, நடனம் என பலமுறை கலந்து கொள்கின்றனர். அவருள் ஓர் அழகன். இனிமை நிறைந்தவன். அனைவரும் அவனை விரும்புகின்றனர். அவன் தனவந்தர் வீட்டிற்கு வருகிறான். இரண்டாம் பெண்ணைச் சந்திக்கிறான். அவளுக்கு அவன் முகம் மனம் நிறைந்ததாக இருக்கிறது. அவன் கர்வியின் பால்ய நண்பன். தனக்குக் கர்வி செய்த துரோகத்தைக் கூறுகிறாள். பெண் மனம் இரணமாயிற்று.

இரண்டாம் பெண் உறவினர் ஊருக்குப் போகிறாள். தற்செயலாய் கர்வியைச் சந்திக்கிறாள். இனிமையாகப் பேச முயல்கிறாள். அன்று கர்வி அவளைப் பார்த்து தன்னை மணக்கும்படிக் கேட்கிறான். "உன் போன்றவரை என்னால் ஏற்க முடியாது' எனக் கோபமாக மறுக்கிறாள். அவன் செல்வம் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. அழகன் உருவம் மனதைத் தொடர்ந்து நிரப்புகிறது. பேச்சு கடுமையாக வருகிறது. பெண் அழகாகப் பழகினாலும், மனத்தில் உள்ளதை அவளிடம் கொட்டினாள். "என் தமக்கைத் திருமணத்தைத் தடை செய்தாய், நண்பனுக்குத் தீங்கிழைத்தாய்" என்கிறாள்.

மறுநாள் கர்வி நீண்ட கடிதம் எழுதி அவளிடம் தருகிறான். திருமணத்தைத் தானே தடை செய்தது உண்மை. தாழ்ந்தது உன் குடும்பம். தடுப்பது என் கடமை. நண்பன் தவறானவன். அவன் கூறியது பொய். என் தங்கையை கடத்த முயன்றான் என்று கடிதம் கூறுகிறது.

அவள் அத்தை, கர்வி ஊரில் குடியிருந்தவள். அவ்வூர் வழியாகப் பிரயாணம் செய்ய இரண்டாம் பெண்ணை அழைக்கிறாள். கர்வி ஊருக்கு வந்ததும் கர்வியின் வீடு அரண்மனை போலிருப்பதால் அனைவரும் பார்க்கும் இடமானதால் பெண்ணை அழைக்கிறாள். கர்வி ஊரிலில்லை எனத் தெரிந்து போய் பார்த்துத் திரும்பும்போது வழியில் அவனைக் காண்கிறாள். அவன் மிருதுவாகப் பேசுகிறான். உபசாரம் செய்கிறான். தன் தங்கையை வந்து பார்க்கும்படி அழைக்கிறான். மறுத்துவிடுகிறாள். ஹோட்டலுக்கு வருகிறாள். தன் தங்கையை அழைத்து வந்து கர்வி பெண்ணுக்கு அறிமுகப்படுத்துகிறான்.

தன் ஊரில் அழகன் தங்கையுடன் பழகி அவளைக் கடத்திப் போகிறான். செய்தி பெண்ணுக்கு ஹோட்டலில் கிடைக்கிறது. பதறிப் போகிறாள். இனி 5 பெண்கள் வாழ்வும் அழிந்துவிட்டது. அந்த நேரம் கர்வி வருகிறான். தன் கர்வத்தை மறந்து தனக்குக் கர்வியின் நண்பன் செய்ததைக் கூறுகிறான். அவசரமாக ஊர் திரும்புகிறான். அத்தையும், மாமாவும் லண்டனுக்குப் போய் காணாமற் போனவளைத் தேடுகிறார்கள். கண்டுபிடித்து அழகனை மணக்கச் சொன்னால் மறுத்து பணம் கேட்கிறான்.  பவுண்ட் 5000 பேரம் முடிகிறது. பணம் கிடைக்கிறது. ஓடிப்போன பெண் கணவனுடன் வீடு திரும்புகிறாள். தம் கல்யாணத்திற்கு கர்வி வந்ததாகக் கூறுகிறாள். அதன் மூலம் கர்விதான் ஓடிப்போனவளைக் கண்டுபிடித்ததாகவும், பெருந்தொகை கொடுத்து அழகனைச் சமாதானப்படுத்திப் பெரிய வேலை வாங்கிக் கொடுத்ததாகவும் இரண்டாம் பெண் அறிகிறாள். சாதுவும், கர்வியும் மீண்டும் பெண்ணின் ஊருக்கு வருகிறார்கள். சாது மூத்த பெண்ணை மணக்கிறான், கர்வி இரண்டாம் பெண்ணை மணக்கிறான் என்பது கதையின் சுருக்கம்.

தம்பி - எப்படிப்பட்ட குடும்பத்தில் எவ்வளவு அவமானம் நேர்ந்தது. எப்படியோ, நல்லபடியாக முடிந்தது.

அண்ணன் - இக்கதையில் ஸ்ரீ அரவிந்தர் கருத்துப்படி நானறிந்தவை,

  1. பெரிய துர்ப்பாக்கியம் என நாம் கருதுவதே, அக்குடும்பத்திற்கு அதிர்ஷ்டம்.
  2. இரண்டாம் பெண் தறுதலையான அழகனை மனம் உவந்து விரும்பியதால் அழகன் அவர்கள் குடும்பத்திற்குத் தீங்கு செய்ய முடிந்தது.
  3. அவ்வளவு பெரிய அவமானத்தைத் தன் குடும்பத்திற்குக் கொண்டுவந்தது தறுதலை என்றாலும், பெண்ணின் அறிவு அவன் தவற்றை அறிகிறதே தவிர, அவள் மனம் அவனைக் குறை கூறவில்லை. தொடர்ந்து விரும்புகிறது. 

தம்பி - தலைகீழாக இருக்கிறதே நீங்கள் கூறுவனவெல்லாம்!

அண்ணன் - பெரிய பெண்ணும், அவள் கணவனும் சாந்தமானவர்கள். அங்கு உயிரில்லை, உயிர்ப்பு இரண்டாம் பெண்ணிடம் இருக்கிறது. உயர்ந்த செல்வன் அவளை விரும்பினாலும், அவளுக்குக் கர்வம் மட்டும் தெரிகிறது. மனம் தறுதலையான அழகனை நாடுகிறது. உயிர்ப்புள்ள பெண் தன் மனத்தை அவனிடம் கொடுத்ததால், அவனால் தவறு செய்ய முடிகிறது. ஓடிப்போன பெண்ணிடம் எந்த நல்லதும் இல்லை. உடல் உறுதியுள்ளது. உடல் உறுதியில் சக்தியுள்ளது. அந்த சக்தி தவறாகச் செயல்பட்டு பெரிய நல்லதைக் கொண்டு வருகிறது. அதனால் அவளை அக்குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் கொண்டு வந்தவள் எனலாம். இதுவே எனக்குப் புரிந்தது. எவரும் ஏற்கமாட்டார்கள் என நான் அறிவேன்.

தம்பி - எதுவும் விளங்கவில்லை.

அண்ணன் - யார் எதைச் சாதித்தாலும் அது தனி மனிதனுக்குரியதன்று, சமூகத்திற்குரியது. ஏனெனில் மனிதன் சமூகத்தின் சார்பாகச் செயல்படுகிறான். பலன் சமூகத்திற்குரியது. £ 10,000 சம்பாதிப்பவருக்கு 2000 ஏக்கர் நிலம் உண்டு.சமூக நியாயப்படி இதில் வரும் வருமானத்தை இங்கு வேலை செய்பவர் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும். இதுவே ஆன்மீக நியாயம். கதையில் உலக வழக்குப்படி முதலாளிக்கு (கர்வி) இப்பணம் முழுவதும் வருகிறது. ஆரம்ப நாட்களில் சொத்தைச் சம்பாதித்தவன் வலிமையானவன் என்பதால் அவன் வருமானத்தைப் பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியில் இவைபோன்ற உடமைகள் பறிபோயின. கதையை விமர்சனம் செய்பவர் "பெருமிராசுதார் ஏழைப் பெண்ணை மணப்பதால் புரட்சியைத் தவிர்க்க முடிகிறது" என்கிறார். புரட்சி மூலம் ஏழைகட்குப் போகும் சொத்து திருமணம் மூலம் போகிறது என்கிறார். எனவே புரட்சி விலகுகிறது. இரண்டாம் பெண்ணுக்குக் கர்வி வரனாக அமைவது புரட்சி போன்றது. இது பெண்ணின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம்.

தம்பி - இதுவரை புரிகிறது.

அண்ணன் - கதையில் இந்த அதிர்ஷ்டம் வர கடைசி பெண் ஓடிப் போன நிகழ்ச்சியே காரணமாகிறது.

தம்பி - அதுவும் புரிகிறது.

அண்ணன் - வாழ்வு இரண்டு பெண்கள் மூலம் இந்தக் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் தர, கடைசிப் பெண்ணை ஓடும்படிச் சொல்கிறது.

தம்பி - அதுதான் கதை. ஓடிப்போன பெண் அதிர்ஷ்டத்தின் கருவி என நினைக்கவும் மனம் கசக்கிறதே.

அண்ணன் - எல்லா பேரிலக்கியங்களிலும் இந்த அம்சம் உண்டு. வாழ்விலும் உண்டு. நாம் கவனிப்பதில்லை. இந்தக் குடும்பத்திற்கு வந்த பெரிய அதிர்ஷ்டம் பெரிய அவமானத்தின் மூலம் வந்தது. எனவே நாம் எதை - அவமானம் - துர்ப்பாக்கியம் - எனக் கருதுகிறோமோ அது வாழ்வுக்கும், இறைவனுக்கும் எதிரானவை என்பது மட்டும் புரிந்தால் போதும். தோற்றம் வேறு; உண்மை வேறு.

உண்மை, தோற்றத்திற்கு எதிரானது.

நல்லது மூலம் கெட்டதும், கெட்டது மூலம் நல்லதும் வெளிவரும். வாழ்வுக்கு இரண்டும் தேவை என்பதை இக்கதையில் காண்கிறோம். கடைசிப்பெண் ஓடிப்போனது கெட்டது, கர்வி மனம் மாறியது நல்லது என நாம் கருதுகிறோம். வாழ்வுக்கு இரண்டும் அவசியம். அவள் ஓடிப்போய் இவர்கள் வீட்டில் பிரச்சினை எழாவிட்டால் கர்வி இக்குடும்பத்திற்கு உதவி செய்யும் சந்தர்ப்பம் வாராவிட்டால், நல்லது என நாம் கருதும் 3 திருமணங்கள் நடந்திருக்கா.

தம்பி - புதியதாக இருக்கிறதே இக்கருத்தும், இந்த விளக்கமும், வேறேதும் உண்டா?

அண்ணன் - இக்குடும்பத்தில் நடந்த இந்தப் பெரிய நல்ல காரியங்களைச் சாதித்தது அருள்.

தம்பி - அருள் இங்கே எப்படி வந்தது?

அண்ணன் - நாம் அருளாகப் பெறுவதை அன்பாக (love) வெளியிடுகிறோம் என்கிறார் அன்னை. கர்வியின் கர்வம் எவரும் விரும்பாதது. ஆனால் அவனை உந்துவது அழகோ, மணமோ இல்லை. இரண்டாம் பெண் அழகற்றவள் என்று கூற முடியாது. ஆனால் முதற் பெண்போல் அழகியல்லள். அழகும், பணமும் இல்லாத பெண்ணை அன்பால் கர்வி விரும்புகிறான். அந்த அன்பே எல்லா நல்ல காரியங்களையும் செய்கிறது.

தம்பி - ஏன் கர்வியின் அன்பை மட்டும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்? முதற்பெண், கடைசி பெண், எல்லாப் பெண்களுக்கும் அன்பில்லையா?

அண்ணன் - கவர்ச்சி, தேவை, பிரியம், பாசம், பற்று, அன்பு என உணர்ச்சியைப் பிரித்தால், உடலுக்குத் தேவை, உணர்ச்சிக்கும் இளமைக்கும் கவர்ச்சி, மனதிற்குப் பிரியம், உறவுக்கு பாசம், பற்று எனக் கூறலாம். உச்சகட்டத்தில் அன்பை வைத்தால் அது ஆன்மாவுக்குரியது. உலகில் நடப்பனவெல்லாம் Divine Love தெய்வீக அன்பால் என அன்னை கூறுகிறார். அன்பு என்பதை நாம் இக்கதையில் கர்வியிடம் மட்டுமே பார்க்கிறோம். அது அன்பு, மற்றவை எல்லாம் அடுத்த நிலைகளைச் சார்ந்தவை.

தம்பி - எப்படி அதை மட்டும் அன்பு எனக் கொள்வது?

அண்ணன் - அவன் நாடுவது பணமோ, அழகோ அல்ல.

தம்பி - இளம்பெண்ணை இளைஞன் நாட எதுவும் தேவையில்லை.

அண்ணன் - தேவை, கவர்ச்சி போன்ற அனைத்தும் தன்னை மட்டும் கருதுவது, அன்பு பிறரை மட்டும் கருதுவது. கர்வி பலன் எதுவும் எதிர்பார்க்கவில்லை, அவள் அன்பை பெறவும் முனையவில்லை. அவளைத் திருப்தி செய்வது பற்றியே அவன் மனம் நாடுகிறது. அது அன்புக்கு அடையாளம். இரண்டாம் முறை அவன் தன்னை மணக்கும்படிக் கேட்டபொழுதும் "உன் மனம் மாறவில்லை எனில் அதுவும் எனக்குச் சம்மதம். நான் உன்னை வற்புறுத்தமாட்டேன்" என்று கூறுகிறான். அது அன்பால் மட்டுமே கூறமுடியும்.

தம்பி - இரண்டாம் பெண்ணுக்கு, இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் கூற முடியுமா?

அண்ணன் - அதுவும் ஓர் அன்னை சட்டம்.

தம்பி - 200 ஆண்டுகட்கு முன் எழுதிய கதை இது. அன்னை 100 ஆண்டுகட்கு முன் வந்தவர்.

அண்ணன் - மனித உருவம், அவதாரம், என்பனவற்றிற்கு 100 ஆண்டு. உலகம் ஏற்பட்ட நாளாக ‘அன்னை' இருக்கிறார். எல்லாச் சட்டங்களும் அவர் சட்டங்களே. 100 ஆண்டாக அதிகமாக சட்டம் செயல்படுகிறது. ஒரு தகப்பனார் 6 பிள்ளைகட்குச் சமமாகச் சொத்துக் கொடுத்தால், பிள்ளைகள் தங்கள் வாழ்வின் முடிவில் சமமாக இருப்பதில்லை. பெற்றது சமம். பயன்படுத்திய வழிகள் வெவ்வேறு. பலன் அதற்கேற்ப மாறுகிறது. 5 பெண்களுக்கும் வந்த அதிர்ஷ்டம் அளவில் ஒன்றே. சுபாவத்திற்குத் தகுந்ததுபோல் பலன் மாறி வருகிறது.

தம்பி - இதுவரை கேள்விப்பட்டதில்லையே.

அண்ணன் - இதே கருத்தை அன்னை வேறு வகையாகக் கூறுகிறார். அதன் அம்சங்கள் பல.

  • சூரியன் எல்லாப் பொருள்கள் மீதும் ஒரே அளவு தன் பிரகாசத்தைச் சொரிகிறான். வீட்டை மூடி வைத்தால் உள்ளே இருட்டாக இருப்பதால், சூரியன் வீட்டின் மீது இருளைப் பொழிகிறான் என்று பொருள் அன்று.
  • அருளை அனைவர்க்கும் சமமாக அன்னை அளிக்கிறார்.
  • சமமாக இல்லாதது அருளாக இருக்க முடியாது.
  • நம் சௌகரியம், பிரியம், சுபாவம் ஆகியவற்றிற்கேற்ப நாம் அருளைப் பயன்படுத்துகிறோம்.
  • அருள் காலத்தைக் கடந்தது. காலம் அன்பனுக்குத் தடையில்லை. "வயதாகிவிட்டது. இனி என்ன செய்யமுடியும். அப்பொழுது அலட்சியமாக இருந்தேன். விட்டுப் போயிற்று” என்பது அன்னையிடம் இல்லை. இப்பொழுது உணர்ந்தால் எதையும் பெறலாம். நாம் பெறுவது நாம் உணர்வதைப் பொருத்திருக்கிறது. காலத்தையோ, சந்தர்ப்பத்தையோ, புற நிகழ்ச்சிகளையோ பொருத்ததில்லை. பெரிய பதவியிலுள்ள அன்பர், பெருஞ்செல்வரான அன்பர், எளிய அன்பருக்குக் கட்டுப்பட்டிருப்பதன் உட்பொருள் இதுவே. அனைவரும் சமம் என்பது அருளுக்குரிய ஆன்மீக உண்மை.
  • எந்த அன்பரும் எதையும், எந்த அளவிலும் பெற முடிவு செய்தால், முடிவுக்குரிய முயற்சி எடுத்தால் பலிக்கும் என அன்னை கூறுகிறார். 

இரண்டாம் பெண் நாடுவது உண்மை. அடுத்த பெண்கள் அன்றாடச் சௌகரியத்தைக் கருதுகிறார்கள். அவரவர்கள் விழைவது அவரவர்கட்குக் கிடைக்கிறது. அன்னைச் சட்டப்படி, அன்னையை ஒரே அளவில் ஏற்கும் அன்பர்கள் அனைவரும் பெறும் அருள் சமம். அதன் தோற்றம் வேறு, தோற்றத்தை நாம் நிர்ணயிக்க முடியும். IAS ஆபீசர்களில் ஒருவர் கலெக்டராக இருக்கிறார். அடுத்தவர் நில ஆர்ஜிதம் பார்க்கிறார்கள். வேறொருவர் record room (Archives) பொறுப்பிலிருக்கிறார். கலெக்டருக்கு முழு அதிகாரம். Recordலிருப்பவருக்கு அதிகாரமேயில்லை. ஆனால் சம்பளம், rank ஒன்றே. அடுத்த நாளே கலெக்டர் பதவிக்கு அவரும், recordக்கு இவரும் மாற்றப்படலாம்.

தம்பி - இந்தக் கதை மூலமாகச் சொல்லக்கூடிய அன்னைச் சட்டம் வேறெதாவதுண்டா?

அண்ணன் - எல்லாச் சட்டங்களையும், எந்தக் கதை மூலமாகவும் சொல்லலாம்.

தம்பி - இரண்டாம் பெண்ணைத் தேடி பெரும் பணம் எப்படி வருகிறது?

அண்ணன் - அதற்கு முன் பணம்* (* பார்க்க :பணம்) என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளவேண்டும். இந்தக் கதையைப் பொருத்தவரை இரண்டு விஷயங்கள் முக்கியம். 1) பணம் அதைவிட முக்கியமானதை நாடி வரும் (இது எல்லா விஷயங்களுக்கும் பொது). சமூகப் புரட்சி ஏற்படும்பொழுது பணம் அதற்கெதிரானதை அல்லது அதற்குத் தேவையானதை நாடிவரும். இக்கதை அதற்கு உதாரணம். கர்விக்கு £ 10,000 வருமானம். அவனுக்கு அவன் முக்கியம். அவனுக்கு வரும் மனைவி முக்கியம். வரும் மனைவி எஸ்டேட்டிற்கு மகுடமாக இருக்க வேண்டும். அதாவது தன்னைவிட உயர்ந்தவளாக இருக்கவேண்டும். அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனை போற்றும் மனப்பான்மையுடன் இருப்பதால், அவனைவிட உயர்ந்த குண லட்சணங்களுள்ள பெண்ணை அவன் மனம் நாடுகிறது. சமூகம் மாறுகின்ற காலம் என்பதால், அவனைவிட உயர்ந்த குணமுள்ள இரண்டாம் பெண் - அவன் கர்வத்திற்குப் பணியாதவள் அவளொருத்திதான் - அடுத்த தாழ்ந்த செல்வ நிலையிலிருந்து அவனுக்கு அமைகிறாள்.

தம்பி - சமூகப் புரட்சிக் காலம் எது?

அண்ணன் - அந்த நேரம் பிரெஞ்சுப் புரட்சி நடந்து தனவந்தர்களை ஏராளமாகக் கொலை செய்தார்கள். பணமுள்ளவன் பணமில்லாத பெண்ணை மணப்பது பணத்தைக் "கொலை" செய்வது போலன்றோ? அதுவே புரட்சிக்குப் பதிலான மாற்றம். ஆளும் வர்க்கத்தைக் கொலை செய்வது புரட்சி, அவர்களுடைய குணங்களை - கர்வம், அலட்சியம் - மாற்றுவது புரட்சியன்றோ? புரட்சி நடந்து 20 ஆண்டுகளுக்குப்பின் கர்வம், அலட்சியத்தை, ஆளும் வர்க்கத்தினர் கைவிடுகின்றனர். தாமே முன்வந்து அக்குணங்களைக் கைவிடுதல் புரட்சிக்குச் சமம். இந்த மாற்றத்தில் பணம் இருக்குமிடத்திலிருந்து இல்லாத இடத்திற்கு மாறுகிறது. அதுபோல் இரண்டாம் பெண் பணம் பெறுகிறாள்.

தம்பி - திடீரெனப் பெரும் பணம் இரண்டாம் பெண்ணுக்கு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

அண்ணன் - அன்பர்கள் பணத்தை அளவு கடந்து பெற முடியும் என்று ‘பணம்' என்ற கட்டுரை கூறுகிறது. அதில் முறை விளக்கமாக இருக்கிறது. இரகஸ்யம் முறையிலில்லை. கருவில் உள்ளது. கரு self - giving பரநலம். மனிதன் தான் சம்பாதிப்பதைவிடப் பிறர் சம்பாதிக்கக் கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறான். இது மனித வாழ்வு. மனித வாழ்வில் உள்ளவனுக்கு அன்னை முறை பயன் தாராது. பிறர் வளம் பெறுவதில் மனம் மலர்வதே அன்னைச் சட்டம். அம்மனப்பாங்குள்ளவர்க்கே "பணம்" என்ற கட்டுரை பயன்படும். முதலிரண்டு பெண்கட்கும் தாழ்ந்த உள்ளமில்லை. அதனால் உயர்ந்த செல்வம் வருகிறது.

குறிப்பாகப் பெரும் பணம் பெற்ற இரண்டாம் பெண்ணுக்கு ஆதாயத்தை நாடும் மனம் இல்லவேயில்லை. She is not at all mercenary. ஆதாயத்தை நாடாதவரை பணம் விரைந்து நாடும் என்பது சட்டம்.

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் ஒரு சட்டம் உண்மையானால் அதன் எதிர்ச்சட்டமும் உண்மை என்கிறாரே. அதற்கு இங்கு உதாரணம் உண்டா?

அண்ணன் - ஓடிப்போன பெண் அதற்கு உதாரணம். அவள் ஆதாயத்தை மட்டும் கருதும் பெண். அவள் ஒருபடி மேலே செல்கிறாள். தான் ஓடிப்போனது தவறு என்றே அவளால் நினைக்க முடியவில்லை. அவளுக்குத்தான் முதலில் திருமணமாகிறது. திருமணம் எனப் பெண்ணின் மனத்தின்படி அவளுடைய திருமணமே மிக உயர்ந்தது. கண் நிறைந்த கணவன் பெண்ணுக்கு முக்கியம். திருமணத்தைப் பொருத்தவரை கடைசியாக நினைவுக்கு வருவது குணம். பெண் அழகியானால், ஆணுக்கு அவளுடைய கெட்ட குணம், மட்ட குணம் கண்ணுக்குத் தெரியா. அவள் எந்தத் தவறு செய்தாலும் ஆசையின் மனம் அவள் அழகை மட்டுமே கருதும். காளிதாசனை அப்படித்தான் அரசகுமாரி மணந்தாள். மாதம் ரூ.3000/- கைச்செலவு செய்யும் பெண் மாதம் ரூ.3000/- சம்பளம் வாங்கும் அழகனை, அவன் அழகுக்காக மட்டும் ஆர்வமாக விரும்பினாள்.

பல பெண்களை வெட்கமின்றி நாடுபவன் அழகன் எனப் பெயர் பெற்றவன். அவன் அழகனாயில்லை. அழகுணர்ச்சி உள்ளவர் அவன் விகாரமானவன் என அறிவார். சிவந்த மேனியுடையவன். பெண்களைத் தவறாக நாடியதால் அவனைப் பிடித்து உதைத்து, துணிகளைப் பிடுங்கிப் கொண்டு நிர்வாணமாக விரட்டினர். அதை அறிந்த பின்னும், அவனை மனமார பெண்ணுள்ளம் நாடுகிறது. "அவர், நல்லவர் என பெண் மனம் மணக்கிறது''. 'அவரை' நினைத்தால் கணவனை "அவன்" என்கிறது மனம். மனிதன் ஆசை வெட்கமறியாது என அனுதினமும் நிரூபிப்பவன். இக்கதையில் அழகன் ஒரு பெண்ணுடன் ஓடிப்போன பின்னும் எந்தப் பெண்ணின் மனமும் அவனைத் தவறு என நினைக்கவில்லை. அத்தனைப் பேர் மனங்களும் அவன் அழகைப் போற்றுகின்றன. ஆண், பெண் கவர்ச்சிக்கு அடிப்படை அழகு என்பதைக் கதை எல்லாவிடங்களிலும் எடுத்துக் கூறுகிறது.

தம்பி - கதையில் பணத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளுண்டா?

அண்ணன் - பொதுவாகப் பணத்தின் குணங்கள் பல. பணத்தால் வருபவை பல, பணத்தை நாடுபவர் குணங்கள் சில. பொதுவாக வெளிப்படாத குணங்களைப் பணம் வெளிப்படுத்தும். இக்கதையில் அவற்றில் சில விவரமாக வருகின்றன. முக்கியக் கருத்து அது இல்லை. கதையில் வெளிப்படுபவை:

  • பணம் அனுபவம் தரும்.
  • நெடுநாள் பணம் பெற்றவர்க்கு நிதானம் உண்டு.
  • "நயத்தக்க நாகரீகம்' பல வழிகளில் வரும். நீண்ட நாள் செல்வம் ஒரு வழி.
  • பணம் தன்னை மட்டும் உயர்வாகக் கருதும்.
  • எல்லா வழிகளும் அடைபட்ட பின், பணம் வழியுண்டு பண்ணும்.
  • எட்டாத பணம் வெறுப்பையும், அது எட்டியவுடன் வெறுப்பு விருப்பாக மாறுவதும் மனித இயல்பு.
  • பணத்தையும் மீறி அழகு பெண்ணுள்ளத்தை நெகிழ வைக்கும்.
  • மேல்நாட்டு நாகரீக உள்ளம், பணத்தைக் கடந்து செயல்படும் திறனுள்ளது.
  • பணம் அவசியமானபொழுது அனைவரும் வெறுக்கும் குணத்தையும் மீறி மனம் பணத்தை நாடும், விரும்பி ஏற்கும்.
  • அடிப்படைச் சுபாவம் பணத்திற்கும் கட்டுப்படாது.
  • உயர்ந்த அன்பு பணத்தின் சட்டங்களை மீறிச் செயல்படும்.
  • உயர்ந்த பண்பால் ஈர்க்கப்படும் பணம், நல்ல வழியில் சம்பாதித்ததாக இருக்கும்.
  • தன்மானமுள்ளவருக்குப் பணமும் கண்ணுக்குத் தெரியாது.
  • கர்வமான தன்மானம் பொதுவாகப் பணத்திற்கு எதிரி. உயர்ந்த தன்மானத்திற்குப் பணம் பணியும்.
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற பழமொழி உண்மை. Character, self-respect, goodness உயர்ந்த சுபாவம், தன்மானம், நல்லெண்ணம் இவற்றிற்கு விலக்கு. பண்பும் அக்கருத்திற்கு விலக்காக நடக்கும்.

உதாரணங்களை எடுத்துக் கூறினால் கதை அதிகமாக நீளும். இது போன்ற எழுத்தாளர்களுக்கு life knowledge வாழ்வின் ஞானம் உண்டு என்கிறார் அன்னை. உயர்ந்த அன்பு கர்வியிடம் மட்டும் காணப்படுகிறது. உயர்ந்த அன்பு செயல்படும்பொழுது கட்டுமீறிச் செயல்படும். பிரதிப்பலனாக எதையும் எதிர்பார்க்க அன்பால் முடியாது. அந்த அன்பு எழுந்த பின் மனம் எத்தனை நாளானாலும் தன்வயமிருக்காது. உயர்ந்த அன்பு எந்த நல்லதைப் பெற்றாலும், இவ்வுலகில் உயர்ந்த அன்பைத் திரும்பப் பெறுவதில்லை. உயர்ந்த அன்பு வாழ்வில் வெளிப்படும்பொழுது பொதுவாக நிகழ்பவை - கீழே காணப்படுபவை - பல இக்கதையில் வருகின்றன.

  • எவர் கண்ணிலும் அது அன்பாகப் படாது.
  • வெறுப்புக்கு ஆளாகும்.
  • அது பண்பாக மாறுமிடங்களில் வாழ்வு துரோகம் செய்யும்.
  • அன்புக்கு ஜெயிக்கும் வலிமையில்லை. பணத்திற்குண்டு.
  • அன்பும், பணமும் சேருமிடத்தில் பணம் தவறாது வெற்றியைப் பெற்றுத்தரும்.
  • அன்பின் பலனாக எவர் எதைப் பெற்றாலும், பலனை மட்டும் கருதுவர். அன்பு கண்ணுக்குத் தெரியாது.
  • அன்பு பொதுவில் தவறாக வெளிப்படும். உயர்ந்த நேர்மையாக வெளிப்பட்டாலும் தவறாகவே பெறுபவர் கண்ணுக்குத் தெரியும்.
  • பணம் தரும் வலிமை தவிர அன்புக்கு இவ்வுலகில் பாதுகாப்பேயில்லை. 

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் எந்த உண்மையைப் பற்றிப் பேசினாலும் அதற்கெதிரானதும் உண்மை என்கிறாரே, அதற்கு இக்கதையில் உதாரணம் உண்டா?

அண்ணன் - நேரடியான உதாரணமில்லை. அத்துடன் கதைச் சுருக்கத்தில் அதை நான் சேர்க்கவில்லை.

"ஒரே சட்டம் எதிரான சந்தர்ப்பங்களில் எதிரான பலன் தரும்" என்று ஒரு சட்டம் நீ அறிந்ததாகும். குழந்தை அதிக முன்னேற்றமடைய வேண்டும் என்று ஏராளமாகச் சிறு வயதில் பாடம் கற்பித்தால், தொடர்ந்து முதல் ராங்க் வருவதும் உண்டு. பாடத்தில் கசப்பு ஏற்பட்டுப் படிப்பை விட்டுவிடுவதும் உண்டு. அந்தச் சட்டத்திற்கு இங்கு ஓர் உதாரணம் வருகிறது.

சமூகத்தில் மந்திரியாக இருப்பவர், செல்வர், செல்வாக்குள்ளவர் சாதாரண மக்கள் வாழ்வில் தலையிட்டால், சாதாரண மக்கள் அவர்களை மீறமாட்டார்கள், மீற முடியாது. மீறினால் மீறுபவர்கள் தரைமட்டமாக்கப்படுவார்கள். அது எதிராகவும் நடக்கும்.

கர்வியின் சிற்றப்பா பட்டம் பெற்றவர். அவர்கள் நாட்டில் மாமன் பெண்ணை மணப்பதில்லை. சிற்றப்பாப் பெண்ணை மணப்பதுண்டு. சிற்றப்பா பெருஞ்செல்வர். காலமாகிவிட்டார். சின்னம்மா கர்வியை தம் பெண்ணை மணக்க விரும்பினார். அந்தஸ்தில் தாழ்ந்த பெண்ணை மணக்க இருப்பதாகக் கேள்விப்பட்டார். அதிகக் கோபம் வந்தது. இரண்டாம் பெண் வீட்டிற்கு வந்து அதிகாரத்தோடு, கோபமாக "நீ என் தமக்கை மகனை மணக்கக் கூடாது" என்கிறார். இந்த அந்தஸ்திலுள்ளவரை எளியவர் மீற முடியாது. ஆனால் இரண்டாம் பெண் தன்மானம் அதிகமுள்ளவள். நிலைமை வேறு. கர்வி இரண்டாம் பெண்ணை மணக்கும்படிக் கேட்டான். அவள் மறுத்துவிட்டாள். அதன் பிறகு கர்வியின் உண்மையைப் பெண் அறிகிறாள். அத்துடன் ஓடிப்போன பெண்ணைக் கர்வி காப்பாற்றுகிறான். எனினும் பெண் மனத்தை அவன் அறியவில்லை. தன் மீதுள்ள வெறுப்பு பெண்ணுக்கு மாறுமா என அவன் காத்திருக்கிறான்.

இரண்டாம் பெண் கர்வியினுடைய சின்னம்மாவின் வேண்டுகோளை மறுத்தவுடன், சின்னம்மா கர்வியிடம் போய் பெண் தலைக்கனமானவள், அவளை மணக்காதே எனக் கூறி நடந்த உரையாடலை விவரமாகக் கூறுகிறார். கர்விக்கு இதன் மூலம் பெண்ணின் மனம் தெரிய வருகிறது. தன்னை வெறுக்கவில்லை என அறிந்து நேரே பெண்ணை வந்து பார்த்து தன் திருமணத்தை முடித்துக் கொள்கிறான்.

சின்னம்மா தடை செய்ய எடுத்த முயற்சி தடையை விலக்கித் திருமணத்தைப் பூர்த்தி செய்கிறது. நேர் எதிர்மாறான பலனைத் தருகிறது.

நெடுநாளாக ரிக்ஷாவில் போனவர், கார் வாங்கினார். ரிக்ஷாக்காரன் அவரிடம், "கார் வேண்டாங்க ஐயா. பெட்ரோல் செலவாகும். எப்பொழுது கூப்பிட்டாலும் நான் வருகிறேன். காரை விற்றுவிடுங்கள்" என்றான். இதைக் கேட்பவனுக்கு என்ன புத்தியிருக்கும்? நாம் இவனை மடையன் என்பதா? என்னென்பது? பெரிய உத்தியோகஸ்தர். அவர் மகன் IAS பாஸ் செய்து வேலையிலிருக்கிறான். தான் முன்னேறுவதைவிட அடுத்தவர் முன்னேற்றத்தைத் தடை செய்வதில் அக்கரை கொண்ட உள்ளமுடையவர். அன்னை மையம் வந்தார். எதற்கும் உதவாத உறவினர் பையனை அங்குக் கண்டார். அவனுக்குப் பிரார்த்தனையால் IAS பாஸாயிற்று. இவர் மனம் பொறுக்கவில்லை. எப்படியாவது இவன் IASஐ விட வேண்டுமென நினைத்தார். "IASஇல் என்ன இருக்கிறது. அதில் சேராதே" என அறிவுரை கூறினார். தம் அந்தஸ்தைப் பயன்படுத்தி எதிரியைக் கெடுக்க விரும்பினார். அவர் பேசிய இடம் அன்னை மையம். அன்னைச் சூழல் உள்ள இடம்.

இவருடைய மகன் IASயை விட்டு வெளியேறினான். இவர் மனம் விரும்பியதற்கு எதிரான பலனை அன்னைச் சூழல் தரவல்லது என்று இவர் அறியார். பிறர் வாழ்வு மலர்வதில் பெருமிதம் கொள்பவரே அன்பராவார். இவர் அன்னை அன்பராக முடியாது. இவர் உறவினர் பையனை "வாழ்த்திய" பொழுது அவனுக்கு செலக்ஷன் ஆகியிருந்தாலும் போஸ்ட்டிங் வர அதிகத் தாமதமானதால் போஸ்ட்டிங் வாராமல் போய்விடுமோ என அவன் பயந்து கொண்டிருந்த நேரம். இந்தச் செய்தியைப் பையன் மையத்தில் வந்து சொன்னான். சொல்லிய 3ஆம் நாள் பையனுக்கு போஸ்ட்டிங் வந்தது. அவருடைய மனம் கீழ்த்தரமானது. எவரும் வெட்கப்படும் எண்ணங்களை விருப்பமாகப் பேசுகிறார். அன்னையிடம் பலன் என்ன? தாமதமான போஸ்ட்டிங் வந்துவிட்டது.

தம்பி - மேலும் விளக்கினால் நல்லது.

அண்ணன் - நான் கூறப்போகும் சட்டம் வினோதமாகத் தோன்றும். அன்பர்கட்கு இது அடிப்படையான சட்டம்.

"வாழ்வில் தவறு என்பது இல்லை. அன்னைச் சூழலில் தவறு என நாம் கருதுவதும் திருவுருமாறும். நல்லது மட்டுமே நடக்கும். கேவலமான கயவர்களாலும் அன்பர்கட்கு நல்லது மட்டுமே செய்ய முடியும்".

தம்பி - விரிவான விளக்கம் தேவை.

அண்ணன் - அருள் பையனுடைய தாமதமாகும் ஆர்டரை விரைவுபடுத்த விரும்புகிறது. அவன் மனதில் ஆழ்ந்திருப்பவர்கள் அவன் உறவினர்கள். (அவன் உறவில் நல்லெண்ணம் உள்ளவரிருந்தால் அவர்கள் மூலம் அருள் செயல்படும். ஒருவேளை எவரும் இல்லை போலிருக்கிறது.) இருப்பவர் மூலம்தான் அருள் செயல்பட முடியும். அவர்கள் இப்படித்தான் மட்டமாக நினைப்பார்கள். எனவே அருள் மட்டமான எண்ணத்தின் மூலம் செயல்பட அவர்களை மையத்தில் சந்திக்க வைக்கிறது. மட்டமான எண்ணம் வெளிப்பட்டவுடன் மையம் அதை நல்லதாக மாற்றுகிறது. அது பலிக்கிறது.

தம்பி - வினோதமாகவேயிருக்கிறது. உறவில் நல்லவர்களே இல்லையா?

அண்ணன் - விபரம் தெரியவில்லை. பொதுவாகக் கீழ்க்கண்டவை நடப்பது வழக்கம்.

  • பையன் மனதில் நல்லவர்களிருக்கமாட்டார்கள். தவறானவர்களே இருப்பார்கள். அவர்களை ஜெயிக்க வேண்டும் எனப் பையன் நினைத்தால் அவர்கள் மட்டுமேயிருப்பார்கள்.
  • நல்லவர்களிருந்தால், பையன் தானே அவர்களை விட்டு விலகியிருப்பான்.
  • நல்லவர்கள் மூலம் நல்லது நடக்கும்பொழுது, அவர்களை விட்டு விலகுவது எல்லோரும் செய்வது. இவன் விஷயம் தெரியவில்லை. 

தம்பி - ஏன் நல்லவர்களை விட்டு விலகுகிறான்?

அண்ணன் - இந்தக் கேஸை விபரம் தெரியாமல் பேச முடியாது. பொதுவாக உதவி செய்யப்போனால், காரியம் முடிவதற்குள் செய்தவரை அவமானப்படுத்த முயல்வதால், விலகுவார்கள். தான் கெட்டுப்போக வேண்டும் என முயல்பவர்களை வலுவாக நம்புவார்கள். அதுதான் வழக்கம். விபரம் தெரிந்தால் தெளிவாகப் பேசலாம்.

தம்பி - இரண்டு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது.

  • அவர் (திட்டியவர்) பையன் IASஐ விட்டு வெளியேறியது.
  • போஸ்டிங் வந்தது.

அருள் எப்பொழுதும் இப்படித்தான் செயல்படுகிறதா? 

அண்ணன் - இப்படி மட்டுமே என அடித்துப் பேசுகிறார் அன்னை. நம்மிடம் விஷயம் வரும்பொழுது ஒரு பகுதிதான் வருவதால், நாம் விளக்க முடிவதில்லை. நம் சொந்த விஷயங்களை மட்டுமே விபரமாக அறியலாம். அதிலும் எதிரியின் பங்கு தெரியாது.

தம்பி - அன்பர்கள் அன்பரல்லாத மற்றவருடன் பழகினால் உடல் சோர்ந்துவிடுகிறது. உடனே தவறு நடக்கிறது. ஆபத்தும் வருகிறது. இது விஷயத்தில் அன்பர்கள் என்ன செய்வது என அறியாமல் தவிக்கிறார்கள்.

அண்ணன் - நாமெல்லாம் ஆரம்பத்தில் அனுபவித்த சிரமம்தானே இது.

தம்பி - நாம் உறவினர்களையும், நண்பர்களையும் அன்பர் அல்லாதவரானால் விட்டுவிட்டோம். எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை.

அண்ணன் - அப்படிச் சொன்னால் சரி எனப்படும். நாம் செய்தது பெரிய காரியமில்லை. எல்லோரும் அவர்கள் விஷயத்தில் செய்வதை நாம் அன்னை விஷயத்தில் செய்கிறோம்.

தம்பி - எப்படி?

அண்ணன் - அக்கா மகன் மெடிகல் கல்லூரியில் சேரக்கூடாது எனத் தம்பி கங்கணம் கட்டிக்கொண்டிருந்தால் அந்த அட்மிஷன் விஷயமாக அக்கா தம்பியிடம் எவ்வளவு பேசுவாள்?

தம்பி - ஒரே வீட்டிலிருந்தாலும், தம்பி காதில் படாதபடி விஷயத்தை முடித்துவிடுவாள்.

அண்ணன் - நண்பர்களும், உறவினர்களும் அன்னையை ஏற்கவில்லை, அதனால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று நாம் கூறுகிறோம். உண்மை வேறு. அவர்கள் நாம் முன்னுக்கு வருவதை அன்னை பேரால் எதிர்க்கிறார்கள். உன் அனுபவத்தை யோசித்துப் பார்.

தம்பி - ஆமாம், ஆமாம், அப்படித் தெரிந்தால் யார் எதை எவரிடம் சொல்ல முடியும்?

அண்ணன் - வாழ்க்கையில் நாம் பொருள், அந்தஸ்து, காரியம், நல்லது என்பவற்றைக் காப்பாற்றுவதுபோல் அன்னை மீதுள்ள பக்தியைக் காப்பாற்றினால் போதும்.

தம்பி - இது எளிமையாக இருக்கிறதே. யோசனை செய்தால் விஷயம் இங்குதானிருக்கிறது. பேருக்கு ஆசிரமம், ஸ்ரீ அரவிந்தர், அன்னை.

அண்ணன் - நாம் அன்னையை முக்கியமாகக் கருதவில்லை என்பதே முக்கியம். மெடிகல் காலேஜ் அட்மிஷன் முக்கியமாக இருப்பதைப்போல் நமக்கு அன்னை முக்கியமில்லை. அப்படி முக்கியமாகக் கருதினால், நமக்கு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும்.

தம்பி - நெடுநாளைய சந்தேகம் எளிமையாகத் தீர்ந்துவிட்டது. பெரிய பாரம் இறங்கியதுபோல் தோன்றுகிறது. நீங்கள் சொல்லிய கதையில் முடிவு நல்லதாக இருந்தாலும், பெண் ஓடிப்போனாள் என்பது நன்றாக இல்லையே. அதற்கு ஏதாவது காரணம் உண்டா?

அண்ணன் - காரணமுண்டு. கதையை ஊன்றிப் படித்த பின்னரே விளக்கம் விளங்கும். நான் சுருக்கமாகத்தானே சொன்னேன். சொல்லப்பார்க்கிறேன். எலிசபெத்திற்கு விக்காம், டார்சி தங்கையோடு ஓட முயன்றது தெரியும். லிடியா பிரைட்டனுக்குப் போகும்பொழுது தாயாரிடமும், தகப்பனாரிடமும் எச்சரிக்கிறாள். பெற்றோரிடம் விவரமான பதில் சொல்லியிருந்தால் - விக்காமின் பழைய விஷயத்தைக் கூறியிருந்தால் - லிடியாவை அனுப்பியிருக்கமாட்டார்கள். அசம்பாவிதம் நடந்திருக்காது.

தம்பி - பின் ஏன் அது நடந்தது?

அண்ணன் - அதுவே கதையின் உயர்வைக் குறிக்கிறது.

தம்பி - எப்படி?

அண்ணன் - முக்கியமானவை மூன்று விஷயங்கள். உனக்குப் புரியும்படிச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. 

  1. Strategy யுக்தி சரியில்லாவிட்டால் பலிக்காது.
  2. அழகனைக் குறை கூறப் பெண் மனம் சம்மதிக்காது.
  3. லிடியாதான் அதிர்ஷ்டம் கொண்டு வரமுடியும். லிடியாவால் இப்படித்தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரமுடியும்.

"நான் எச்சரித்தேன், நீங்கள் ஏற்கவில்லை" என எலிசபெத் சொன்னால், அது சரியாகாது. எச்சரிக்கை பலன் தர மனம் தவறானவனை நாடக்கூடாது. தவறானவன் மீது மனம் இதமாக இருந்தால், அவனால் அவளுக்குத் தீங்கு செய்ய முடியும். விக்காம் மோசமானவன் லிசூதாடி, பொய் சொன்னான், துரோகம் செய்தான் - என்று தெரிந்த பின்னும் எலிசபெத் மனம் அவனைக் கண்டிக்கவில்லை. அவனால் தவறு மட்டும்தான் செய்யமுடியும். டார்சிக்கும், லிடியாவுக்கும், எலிசபெத்திற்கும், எவர்க்கும் விக்காமால் தவறு மட்டும்தான் செய்ய முடியும். தவறு செய்பவனை மனம் அன்பாக ஏற்கிறது எனில் அவன் மீண்டும் தவறு செய்வான். லிடியா திருமணத்திற்குப் பின்னும் எலிசபெத்தால் விக்காமை மனதால் கண்டிக்க முடியவில்லை. அழகான பெண்ணை ஆண் மனம் கண்டிக்காது. அழகனைப் பெண்மனம் போற்றும். தவறு தெரியாது, தெரியவே தெரியாது.

தம்பி - அப்படியானால் தவறு உற்பத்தியானது லிடியாவால் இல்லை, எலிசபெத்தால்தான் என்றாகுமா?

அண்ணன் - அதுவே பெரிய கருத்து.

தம்பி - அகந்தையை அழிக்க அகந்தை மூலமே நாம் முயல்வதால் அது தடையாகிறது என்று பகவான் கூறுவதன் அர்த்தம் என்ன?

அண்ணன் - கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதைவிட உயர்ந்த கருவியைப் பயன்படுத்த வேண்டும். கோபம் என்பது vital உணர்ச்சி. உணர்ச்சியை அதற்கடுத்த உயர்ந்த கருவியான மனத்தால், மனத்தின் அறிவால் கட்டுப்படுத்துகிறோம். அதுபோல் அகந்தையை அழிக்க அடுத்த உயர்ந்ததான அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

உண்மையாக முயல்பவர் "நான் என் அகந்தையைச் சரணம் செய்கிறேன்". என்கிறார். அதுவும் நல்லதே. பலன் மிகக் குறைவாக இருக்கும். நாம் ஒரு சூத்திரத்தைப் - என் அகந்தை அழியவேண்டும் - பயன்படுத்துகிறோம். சூத்திரம் என்பது சொல். சொல் சிந்தனைக்குரியது. சிந்தனை அகந்தையின் கருவி. அகந்தைக்கடுத்த ஆன்மாவின் கருவி மௌனம். ஆன்மாவால் அகந்தையை அழிக்க மௌனம் கருவியாகும். சிந்தனை - சூத்திரம், சொல் அகந்தையின் கருவியாவதால், அகந்தையால் அகந்தையை அழிக்க முடியாது. முடியாது என்பதன்று. அங்கும் sincerity உண்மை பூரணமாக இருந்தால் சூத்திரத்தைச் சொல்லும்பொழுது மௌனம் தானே எழும். மௌனம் ஆத்மாவுக்குக் கொண்டு செல்லும். ஆத்மாவுக்கு அகந்தை கட்டுப்படும்.

சரியான முறை என்பது சூத்திரத்தைச் சொல்லாமல், ஆழ்ந்த தியானம் செய்து மனத்தைக் கடந்து ஆத்மாவுக்குப் போய், ஆன்ம விழிப்புப் பெற்று, அகந்தை கரைய நினைத்தால், அகந்தை கரைய ஆரம்பிக்கும். அது பலன் தரும்.

தம்பி - ஒரு விஷயம் எனக்குச் சமீபத்தில் தெளிவாயிற்று. அதற்கு நீங்கள் இக்கதையில் சொன்ன விளக்கம் உதவியாயிற்று. ஆணோ, பெண்ணோ அழகைக் கண்டுவிட்டால் - அழகு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அழகு என நினைத்துவிட்டால் - அவர்கள் மீது குறை தெரியாது, தெரிவதேயில்லை. அவர்களால் ஆபத்து வந்தாலும், வேறு காரணம் சொல்வார்களே தவிர, இது கண்ணுக்குத் தெரியாது. தெரியவே தெரியாது.

அண்ணன் - அழகும் அப்படித்தான். பணமும் அப்படியே. பதவியும் அது போன்றதே. மனம் அழகு, பணம், பதவியை இதமாக நினைப்பதைப்போல் நியாயத்தைக் கருதுவதில்லை. அன்னைக்கு மனம் "அந்த" இடத்தைக் கொடுப்பதில்லை. அன்னைக்கு மனத்தில் அந்த இடம் கொடுப்பவனே பக்தன். அது போன்ற பக்தரைக் காண்பது அரிது. நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் தேறுவாரா? ஏன், நாம் தேறுவோமா? நாம் பிறரை நினைக்க வேண்டாம். நாம் இவ்விஷயத்தில் தேறினாலும், நாம் அன்பர்கள் எனக் கூறலாம்.

தம்பி - நாம் தேறிய இடங்களிலெல்லாம் காரியம் கூடி வந்துள்ளது. நாமும், பிறர்போல நினைத்தபொழுது காரியம் கெட்டுப் போயிருக்கிறது. காரியம் கெட்டுப்போன பின்னும் நாம் அவர்களை மனதிலிருந்து எடுக்கவில்லையே. அதனால்தானே சூழல் சரியாக மாறவில்லை. விஷயம் நூற்றுக்கு நூறு சரியாக வரவேண்டுமானால், நம் மனம் நூற்றுக்கு நூறு அன்னை பக்கமேயிருக்க வேண்டும்.

அண்ணன் - விஷயம் நமக்குக் கெட்டுப் போகிறது எனில், நாம் வேறெந்தத் தவறும் செய்வதில்லை. உறவு, நட்பு, நியாயம், இதம், இங்கிதம், "எப்படிச் சொல்வது", "நல்லாயில்லையே" என நாம் தயங்கித் தயங்கி எதிரியை ஆதரித்ததால் மட்டுமே நமக்குக் கெட்டது, ஆபத்து வந்தது. சட்டம் தெளிவாக இருக்கிறது. 

  • தவறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும், மனம் இதமாக அவர்களை நினைக்கக்கூடாது.
  • அன்னைக்குத் தவறு செய்பவர்களை நாம் மனதாலும் நினைக்கக் கூடாது. அவர்களை விட்டுக் காத தூரம் போகவேண்டும்.
  • அவர்களால் நடப்பதை மறந்து, அவர்கள் சொல்வதை ஏற்பது அறிவீனம்.
  • இந்தத் தவறு மட்டும் செய்யவில்லை எனில் நமக்கும், மற்ற அன்பர்கட்கும், தொந்தரவு என்பதே இல்லை என்பதே நமது நெடுநாளைய அனுபவம்.

தம்பி - பிறருக்கு உதவவேண்டும் என்பதால் மட்டும் "வரும் தீங்கன்றோ இது'. எலிசபெத் விக்காம் விஷயத்தில் கனிவாக நடப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது. இது புரிய இத்தனை நாளாயிற்று. இனி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அன்னையும் அருளும் நமக்கு அழியா இலக்கியம், அமரத்வம், குபேரச் சம்பத்து, பூலோகச் சுவர்க்கம் தருகிறார்கள். நாம் நஷ்டம், கஷ்டம், விபத்து, ஆபத்து என்பதிலிருக்கிறோம்.

அண்ணன் - அழியா இலக்கியத்தை ஷேக்ஸ்பியர் எப்படி எழுதினார் என (Centenary Vol. No. 12ல் 33ஆம் பக்கத்திலிருந்து 43ஆம் பக்கம் வரை) பகவான் எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் எழுத்து சகஸ்ரதளத்தின் கீழ் இருந்து உற்பத்தியாயிற்று. வேதம் சகஸ்ரதளத்திற்கு மேலிருந்து எழுதியது என்கிறார்.

தம்பி - நான் அதைப் படித்திருக்கிறேன். தெளிவாக இருக்கிறது. அதுபோல் மற்றவற்றிற்கு விளக்கம் எழுதவில்லையா?

அண்ணன் - பூலோகச் சுவர்க்கம், காயகல்பம், குபேரச் சம்பத்து, அழியா இலக்கியம் ஆகிய அனைத்திற்கும் சட்டம் ஒன்றே. இவற்றையெல்லாம் விளக்கினால் பொதுவாகப் பயன்படாது. யாராவது செய்தால், கண்ணால் பார்த்தால் புரியும்.

தம்பி - மற்றனவெல்லாம் புரியா. குபேரச் சம்பத்து புரியும்.

அண்ணன் – ‘பணம்' என்ற கட்டுரையிலும், "அதிர்ஷ்டம்" என்பதிலும், 'பூலோகச் சுவர்க்கத்திலும்' இவ்விளக்கமிருக்கிறது.

தம்பி - விளக்கம் தேவையில்லை. உதாரணம் தேவை.

அண்ணன் - உதாரணம் இல்லை என்று கூறுமுடியாது. உதாரணம் ஏற்பட்டால் பொறாமை வருமே தவிர பின்பற்ற முன் வரமாட்டார்கள்.

தம்பி - அனைவரும் அப்பலனையடைய என்ன செய்யலாம்?

அண்ணன் - அந்த எண்ணம் (பிறர் பலன் பெற வேண்டும் என்ற எண்ணம்) தவறு என உணர்ந்தால், அது பலிக்கும் வாய்ப்புண்டு.

தம்பி - மீண்டும் மனம் அதையே நாடுகிறது. நேற்று என் B.A. கிளாஸ்மேட் வந்தார். அவர் பிரச்சினையைக் கூறினார்.

அண்ணன் - அதுவே பெரிய உதாரணமாயிற்றே. 1 கோடி உபரி லாபம் சம்பாதித்தார்கள் அவருடைய நண்பர்கள். அதன்பின் ஒரே ஆட்டம் ஆடினார்கள். கடனாயிற்று. "உன்னால்தான் கெட்டோம்" என இவர் மீது திரும்பினார்கள்.

தம்பி - அதைக் கேட்கத்தான் வந்தார். நான் தெளிவாகக் கூறிவிட்டேன். "உன் சிபார்சில் 1 கோடி சம்பாதித்து விட்டு, உனக்கு எதிராகப் போய் நஷ்டப்பட்டு, பிறகு உன்னையே விரட்டினார்கள். உனக்கு இன்னும் அவர்கள் மீது பாசம். இப்பொழுது நீ சிரமப்படுகிறாய். உனக்குக் கெடுதல் செய்த அவர்கள் எப்படியாவது கடனைத் தீர்த்து நல்லபடியாக இருக்கவேண்டும் என நீ நினைப்பதால் அவர்கள் கடையை மூடவில்லை. அது உனக்குத் தவறான எண்ணம். அது உள்ளவரை உனக்கு ஆபத்து. வந்த 5 பேராபத்தும் அவர்களால்தான்' என்று கூறினேன்.

கேட்டுக் கொண்டு போய்விட்டார். அவர் போனபின் நம் மாமா நினைவு வந்தது. இவர் விஷயம் தெளிவானது. கெட்ட எண்ணக்காரப் பையனுக்குச் செல்லம் கொடுக்கிறார். அது அவர் விஷயம். நம் பேச்சை அவர் கேட்கப்போவதில்லை. வயதில் பெரியவர். புத்திமதி சொல்ல முடியாது. ஆனாலும் அவரைப் போய்ப் பார்க்க நினைத்தேன். அவர் தவறு செய்ய ஆரம்பித்ததிலிருந்து அவரைப் போய்ப் பார்த்தால் நமக்குக் கெட்ட செய்தி வருகிறது எனத் தெரியும். நான் எப்படிப் பிறருக்குச் சொல்ல முடியும்? அப்படித் தோன்றியவுடன் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன். "தண்டனைக்குரியவரிடம் மனம் இதமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கும்' என்றிருந்தது. அத்தோடு அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். சரி, பணத்தைப் பற்றிச் சொல்லுங்கள். என்வரைக்கும் கேட்டுக் கொள்கிறேன். பிறருக்குச் சொல்ல வேண்டும் என்பதை விட்டுவிடுகிறேன்.

அண்ணன் - 1945இல் மேற்கு ஐரோப்பா (பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹாலண்டு, போர்ச்சுகல், பெல்ஜியம்) தரை மட்டமாயிற்று. USA 17 பில்லியன் டாலர் கொடுத்து அந்த நாடுகளைப் புதுப்பித்தார்கள். World Bank  ஏற்பட்டதே அதற்காகத்தான். அந்த 17 பில்லியன் இன்று அவர்கள் கணக்குப்படி 100 பில்லியனாகும். (இன்று 1 பில்லியன் டாலர் 4000 கோடி ரூபாய். இன்று இந்தியாவிலுள்ள அத்தனை பாங்கு டெப்பாசிட்டும் சேர்ந்த தொகை) அமெரிக்கா அதைச் சாதித்தது. உலகம் இன்றுவரை அதை மட்டுமே அறியும்.

தம்பி - இது economics படித்தவர்கட்கெல்லாம் தெரியுமே!

அண்ணன் - அதில் ஒரு விசேஷம் உண்டு. உலகம், 100 பில்லியன் டாலரில் ஐரோப்பா புதுப்பிக்கப்பட்டது என இன்று வரை நம்பினாலும், மேலும் ஒரு 100 பில்லியன் மீண்டும் ஓர் 100 பில்லியன் பணம் கொசுராக வந்ததை உலகம் அறியாது.

தம்பி - அது எப்படி அவ்வளவு பணம் வந்தது தெரியாமற் போகும்? கொசுர் என்றால் 100க்கு 1 அல்லது ½ தான். நீங்கள் முதல் 100 ஆனால் கொசுர் 200 என்கிறீர்களே?

அண்ணன் - ஏராளமான பணத்தை மனம் உற்பத்தி செய்ய முடியும் என்று நான் அதனால்தான் கூறுகிறேன். கொசுர் முதலைவிட அதிகம்!

தம்பி - சொல்லுங்க.

அண்ணன் - செட்டியார் வீட்டில் 1960இல் பாகப் பிரிவினை. 3 பேர் உடன்பிறந்தவர்கள். ஆளுக்கு 12 கோடி பிரித்துக் கொண்டனர்.

தம்பி - தெரியும்.

அண்ணன் - மூத்தவருக்கு P.A. இருந்தார். அவர் "85இல் காலமானார். அவருக்குச் சம்பளம் ரூ. 500/-. இறக்கும்பொழுது அவருக்கு என்ன சொத்து தெரியுமா?

தம்பி - என்ன 1 லட்சமிருக்குமா?

அண்ணன் - 50 லட்சம் எனக் கேள்வி.

தம்பி - அவ்வளவு திருட முடியுமா?

அண்ணன் - P.A. நல்லவர், திருடமாட்டார். செட்டியாரிடம் திருடவும் முடியாது. செட்டியார் தமக்கு நஷ்டமில்லாமல் எவரும் பயன்படுத்த முடியாத சௌகரியங்களை P.A.க்குக் கொடுப்பார். அது 50 லட்சமாயிற்று.

தம்பி - பெரிய இடம், கொசுர் பெரியது. நீங்கள் கொசுரே முதலைவிட இரண்டு மடங்கு என்கிறீர்களே.

அண்ணன் - வெள்ளைக்கார ஆலையை 10 கோடிக்கு வாங்கியது உனக்குத் தெரியுமன்றோ?

தம்பி - சேலத்தார் வாங்கினார். அது நஷ்டமான ஆலையன்றோ?

அண்ணன் - ஆலையில் உள்ள மனை மட்டும் இன்று 500 கோடி பெறும். ஆலை நஷ்டமானால் என்ன?

தம்பி - கொசுர் 50 மடங்கா?

அண்ணன் - இன்று monetary system பணம் நடமாடும் இடத்தில் நேர்மையான முறையில் உபரிப் பணம் உற்பத்தி செய்ய ஏராளமான வழிகளுண்டு.

தம்பி - எப்படி 200 பில்லியன் வந்தது எனக் கூறவில்லையே.

அண்ணன் - பணம் உள்ள இடத்திலுள்ள எல்லாமே பணம்தான். நம் கண்ணுக்குத் தெரியாது. தெரிந்து நேர்மையான முறையில் அதைப் பெற முயன்றால் அளவு கடந்த பலன் உண்டு.

தம்பி - மனிதனுக்கு நேர்மையான முறை தெரியாது.

அண்ணன் - அதனால்தான் அவனுக்குத் தெரிவதில்லை. மேலும் இந்தத் தவணை முறை வந்தபிறகு பணம் அதிகமாகப் புரள்கிறது அன்றோ? அதுபோல் சொத்து - பணமில்லை - உள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான "பணம்" இருக்கிறது. அதுவும் தெரிவதில்லை.

தம்பி - எப்படி economist எல்லாம் சும்மாயிருக்கிறார்கள்?

அண்ணன் - எல்லாரும் புத்திசாலிகள்தான். அபாரப் புத்திசாலிகள்தாம். அவர்கள் போகிற வழியில் இது கண்ணுக்குப் படாது.

தம்பி - கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லவேண்டும்.

அண்ணன் - நம்மூர் ஆலை தெரியுமில்லையா? 170 வருஷமாக இருக்கிறது. முதல் 100 வருஷத்தில் போட்ட முதலைப் போல் 100 மடங்கு சம்பாதித்தார்கள். இன்று கரும்பு 1 டன்னுக்கு ரூ. 600 அன்று ரூ. 10. ஆலை 100 மடங்கு சம்பாதித்தது உண்மை. சுரண்டுகிறான் என நாமெல்லாம் கோஷம் போட்டோம். ஊரில் என்ன பழமொழி, கிராமத்தில் கல் வீடு என்றால் கரும்பு குடித்தனக்காரன் என்று பழமொழி. 1950இல் தமிழ்நாட்டில் 1500 மோட்டார்கள் உண்டு (நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் மோட்டார்). அவற்றில் இந்த ஆலையைச் சுற்றி 1200 மோட்டார்கள். அந்த நாளில் பணக்காரர்கள்தான் மோட்டார் போட முடியும். 20,000 ஏக்கர் கரும்பு பயிராயிற்று. ஆலை சம்பாதித்தது எவ்வளவு? இந்த 20,000 ஏக்கர் சம்பாதித்தது எவ்வளவு எனப் பார்.

தம்பி - விவசாயிகள் அதிகமாகச் சம்பாதித்திருப்பார்களே.

அண்ணன் - இன்று உலக பாங்க்களிலெல்லாம் பணம் உபரியாக இருக்கிறது. நம்மூரில் பாங்க் 12% வட்டி தரும். அமெரிக்காவில் 3%தான் தரும். பணம் ஏராளமாக இருக்கிறது. இதைவிட பாங்க், சர்க்கார், கம்பெனிகளைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத பணம் பெருவாரியாக இருக்கிறது. சுமார் 2000 ஊர்களில் கரன்சிபோல சிறு அளவில் உலகில் நடத்துகிறார்கள். அது பரவுகிறது.

தம்பி - 200 பில்லியன் எப்படி வந்தது!

அண்ணன் - பாங்க்கைச் சுற்றியுள்ள பணமுள்ள இடங்களில் சர்க்கார் அனுமதியின் பேரில் இலாபகரமாகச் செயல்பட்டால் பணம் உபரியாக உற்பத்தியாகும்.

தம்பி - அது புரியவில்லை. நமக்கு புரிந்த இடங்களைச் சொல்லுங்கள்.

அண்ணன் - 10,000 ஏக்கர் பண்ணை, பெரிய ஆலை, பாங்க், சர்க்கார், ஹைகோர்ட் இவற்றைச் சுற்றி ஏராளமான குடும்பங்கள் சம்பாதிப்பது தெரியுமா?

தம்பி - ஹைகோர்ட் கிளார்க்குக்கு மாதம் 120 ரூபாய் சம்பளமிருக்கும்பொழுது, வராந்தாவில் அவசரக் கேஸுக்கு டைப் அடித்துக் கொடுப்பவன் தினமும் 100 ரூபாய் சம்பாதிப்பான்.

அண்ணன் - இன்று உலகில் புழங்கும் பணம், மொத்தம் உள்ள பணத்தில் 10%தான் என்பது ஒரு கணக்கு. அதனால் அதிகப் பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.

தம்பி - அவையெல்லாம் போகட்டும். நம்ம விஷயத்தைப் பேசுவோம்.

அண்ணன் - எல்லாருக்கும் உண்டானது, நமக்கும் உண்டு. நம் வருமானத்தைப் பல மடங்கு உயர்த்த முடியும். நம்மைச் சுற்றிப் பணமிருக்கிறது. நேரம் பணம், பொருள் பணம், ஒழுங்கு பணம், யோசனை பணம், குணம் பணம், நம்மைச் சார்ந்த எவையும் பணம்தான் என நாம் அறிவதில்லை. பணம் எப்படி உற்பத்தியாயிற்று? பணத்தினுள் என்னென்ன இருக்கிறது என்று விவரமாக அறிந்தால் நம்மிடம் ஏராளமான பணம் உற்பத்தியாக வழியுள்ளது எனப் புரியும். "மனம் சாதிக்கும்' என்பதுபோல் "மனம் பணத்தை உற்பத்தி செய்யும்' என்று கூறலாம். இதுவரை யாரும் செய்யவில்லை. எவரும் இப்படிப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் புதிராக இருக்கிறது. யாராவது முதலில் செய்யவேண்டும். பிறகு பலர் செய்தால், அனைவரும் ஏற்பார்கள். இப்பொழுது எவரும் கேட்டுக் கொள்ளமாட்டார்கள்.

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் இப்படி எழுதியுள்ளாரா?

அண்ணன் - ஸ்ரீ அரவிந்தர் இதைப் பற்றி எழுதவில்லை. மற்றதைப் பற்றி எழுதியுள்ளார். அடிப்படைத் தத்துவத்தை எழுதியுள்ளார். நாம் எந்தத் துறையிலும் செய்து பார்க்க முடியும். முதல் நிபந்தனை, "பிறரை வாழவைக்கும் மனம்'' பெரியது. அதைக் கடந்தவர்க்குரியது இது.

தம்பி - சிறியது பெரியதாகும். 

  • சிறியதும் பெரியதும் ஒன்று.
  • மனிதன் மறைபொருளான தெய்வம்.
  • உலகம் மனிதனில் உள்ளது, போன்ற தத்துவங்களைக் கூறுகிறீர்களா?

அண்ணன் - ஆமாம். இன்று உன் கம்பெனியில் 5 கோடி வியாபாரமாகிறது. ஆனால் திடீரென 5 லட்சம் பணம் அதிலிருந்து எடுக்க முடியாது. 50 லட்சம் எடுக்க முடியும் எனில் அது உன் கம்பெனிக்குப் பெரிய விஷயமாயிற்றே.

தம்பி - அதை நான் செய்யவில்லை. ஆனால் முடியும் எனத் தெரிகிறது.

அண்ணன் - அதைச் சாதித்த பின் என் விளக்கம் புரியும்.

  • நம் அறிவில் 1/10% கூட நாம் பயன்படுத்துவது இல்லை. 
  • நம் உடற்சக்தியில் 1/100% கூட நாம் அறிவதில்லை என்று நாம் கேள்விப்பட்டால் நம்புவதில்லை.

தம்பி - நான் நம்புகிறேன்.

அண்ணன் - நம்புவது சரி. போதாது. செய்தால் அடுத்ததைச் சொல்லலாம். நம் சம்பாதிக்கும் திறமையில் நாம் 1%தான் பயன்படுத்துகிறோம் என்பது உண்மை.

தம்பி - நமக்கு நோய் தேவையில்லை, பிரச்சினை தேவையில்லை, கவலை தேவையில்லை, சிக்கல் தேவையில்லை என்பதுபோல் பணத்தட்டுப்பாடும் தேவையில்லையா?

அண்ணன் - இன்றைய தினம் குழந்தையைப் படிக்க வைக்க மறுப்பவர் உண்டு. உலகம் எங்கிருக்கிறது? இவர்கள் எங்கிருக்கிறார்கள்? நாம் பணம் விஷயத்தில் அவர்களைப் போலிருக்கிறோம். அறிவு உயர்ந்தது, ஆன்மீகம் உன்னதமானது, அன்னை அவற்றைத் தாண்டியவர். அன்னையின் ஆன்மீக அறிவை நாம் பெற்றுக் கொண்டோமா? நாமெல்லாம் ஆங்கிலம் படித்தவர்கள். அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் 60 வால்யூம் எழுதியிருக்கிறார்கள். நாம் எத்தனைப் படித்திருக்கிறோம்? உயர்வையும், உன்னதத்தையும் கடந்த அறிவு புத்தகமாக அலமாரியில் இருக்கிறது. நாம் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறோம். 1% என்று கூற முடியுமா? அதேபோல் நம் வாழ்வுக்குரிய திறமையில் சிறு பகுதியையே நாம் அறிவோம். முழுவதையும் நாம் முதலில் அறிய வேண்டும். அறிவது முதலில், பெறுவது பிறகு.

தம்பி - நான் 50 லட்சத்தை என் கம்பெனியில் எடுத்துவிட்டு பிறகு கேட்கிறேன்.

அண்ணன் - அதைச் செய்தால், பணம் என்ன என்று புரிய உதவும். எல்லோரும் ஒரு தொழில் செய்கிறார்கள். அன்னையை ஏற்றபின் அதைப் 10 மடங்கு சிறப்பாகச் செய்ய முடியும். அதைச் செய்தவர்க்குப் பணத்தைப் பற்றிப் பேசினால் விளங்கும். அந்த அனுபவத்தில் காலம், நேரம், பொருள், சத்தம், சுத்தம், கணக்கு, ரிஜிஸ்டர், லாபம், நஷ்டம், விரயம் எல்லாம் விளங்கும். எல்லோரைப் போலவுமிருப்பவர்க்குரிய அறிவு இல்லை இது. சிறப்பானவர்க்குரியது. சொந்த வேலையில் சிறப்பெய்தியபின் பேசினால் விளங்கும்.

நம் வீட்டில் பல பொருள்களிருக்கின்றன. அவை எல்லாம் பணத்தோடு தொடர்புள்ளன. பணத்தொடர்பு இல்லாத பொருளோ, செயலோ இல்லை. நாம் பொருள்களைப் பயன்படுத்தும்பொழுது பணக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. கரண்ட் வீணாகிறது என்று பார்ப்பதுபோல், பைப்பில் தண்ணீர் வீணாகிறது என்று நினைப்பதில்லை. அதைக் கருதுபவர்களும், அலமாரியில் உள்ள புத்தகம் 350 ரூபாய்க்கு வாங்கினோம். 10 பக்கம்தான் படித்தேன். அதனால் ரூ. 300 விரயம். 50 ரூபாய் பலன் வந்தது எனக் கருதுவதில்லை.

ஒரு வீட்டில் குழந்தை செல்லமாக இருந்தால் ஒருவருக்குத்தான் செல்லமாக இருக்கும். அத்தனை பேருக்கும் செல்லமான குழந்தை அற்புதமாக வளரும். பணம் தவிர வேறு எந்தப் பொருளும் எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டிருப்பதில்லை. துணி என்றால் அதற்குக் குறிப்பிட்ட உபயோகம், சாப்பாடும் அப்படியே, கடிகாரமும் அப்படியே. எந்தப் பொருளும் சிலவற்றோடு மட்டும் தொடர்புள்ளதாக இருக்கும். பணம் மட்டும் எல்லாப் பொருள்களுடனும், நிகழ்ச்சிகளுடனும் தொடர்புள்ளது. பணத்திற்கு நாம் முழுக் கவனம் செலுத்துவதில்லை. தாயாரோ, தகப்பனாரோ, குழந்தைகட்கே முழுக் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சோதனையாகப் பணத்திற்கு முழுக் கவனம் செலுத்தினால், அதாவது எந்தப் பொருளையும், நிகழ்ச்சியையும், பண நோக்கில் கவனித்தால் நம் கவனம் பணத்திற்குப் 10, 20 மடங்கு அதிகமாகும். இந்தக் கவனத்திற்கே பணம் பெருகும். முழு கவனம் செலுத்திய பின், கவனத்தை organise செய்ய வேண்டும். கவனம் சக்தி வாய்ந்தது. Organisation is power itself. முறை ஏராளமான சக்தி வாய்ந்தது.

கவனமும், organisationஉம் பணத்தைப் பேரளவில்

பெருக்கும் திறனுடையவை.

தம்பி - பெரும் பணத்தை மனம் உற்பத்தி செய்ய முடியும் என இப்பொழுது நம்பமுடிகிறது. மனத்தை ஓரளவு தயார் செய்து கொண்டு பிறகு வருகிறேன். Life Divineலிருந்து இதற்குப் பொருத்தமான கருத்துகளை எடுக்கமுடியுமா?

அண்ணன் - 56 அத்தியாயங்களில் 56 கருத்துகளுண்டு. எல்லாவற்றையும் finite  சிறியது infinite பெரியதாகிறது எனக் கூறலாம். அதனால் சிறு வருமானத்தைப் பெரு வருமானமாக மாற்றலாம் என்று கொள்ளலாம். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கொண்டுள்ள தொடர்பையும் (The Eternal and the Individual என்ற அத்தியாயத்தில் கூறுவது) பெரும் பணம் உற்பத்தி செய்யும் வகையாகக் கூறலாம்.

தம்பி - பணத்தைப் பணமாகக் கருதாமல் இறைவனுடைய சக்தியாகக் கருதவேண்டும் அல்லவா?

அண்ணன் - இந்திய யோக மரபு ஜீவாத்மா, பரமாத்மாவில் கலந்து கரைகிறது என்கிறது. ஜீவாத்மாவுக்குத் தனியான இடம் தருவதில்லை. அதனால் உலகம் மாயை என்றது. உலகத்தை மாயையாக மனம் சிருஷ்டித்தது, ஜீவாத்மா சிருஷ்டித்தது, அதாவது அகங்காரம் சிருஷ்டித்தது என்ற கருத்துகள் பல வடிவங்களில் நிலவுகின்றன. ஸ்ரீ அரவிந்தம் இங்கு மாறுபடுவதை அறிய வேண்டும். ஸ்ரீ அரவிந்தம் தெளிவாக ஜீவாத்மாவே பரமாத்மா எனக் கூறுகிறது. இக்கருத்தைத் தெளிவாக ஏற்றால், அளவு கடந்த பணத்தை மனம் உற்பத்தி செய்யலாம் என்பது விளங்க உதவும்.

தம்பி - ஜீவாத்மாவுக்கும், பணத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் - நம் அபிப்பிராயம் என்ன? பணம் அளவோடு கூடியது என நினைக்கிறோம். பணம் மட்டுமன்று மற்ற எத்தனையோ விஷயங்களை நாம் அப்படி நினைக்கிறோம்.

ஸ்ரீ அரவிந்தம், 

  • ஜீவாத்மா என்பது அகந்தையன்று,
  • புருஷனே ஜீவாத்மா,
  • புருஷன் அகந்தை அழிந்தபின் அழிவதில்லை,
  • எல்லா ஜீவராசிகளின் புருஷன் ஒன்றே,
  • அவனைப் புறத்திலும் காணலாம்,
  • அகத்திலும் காணலாம்,
  • அவனே பிரபஞ்சத்தின் ஆத்மா,
  • உள்ளே சென்று பார்த்தால் ஜீவாத்மா, பிரபஞ்சத்தின் ஆத்மாவினுடைய பகுதி எனத் தெரியும்.
  • மேலும் தொடர்ந்தால் அவையிரண்டும் பரமாத்மாவின் பகுதியாகும்.
  • பரமாத்மா என்பது ஜீவாத்மாவாக நமக்குத் தெரிகிறது எனக் கூறுகிறது. இது ஆன்மிக உண்மை. இது சித்தித்தால், அவர் சித்தி பெற்றவராவார். இந்த ஞானத்தை மனம் ஏற்றுக்கொண்டால், மனம் விசாலமடைகிறது. பிரபஞ்சத்தினளவுக்கு விசாலமடைகிறது. மனம் விசாலமடைந்தால் மனம் உற்பத்தி செய்பவையும் பிரபஞ்சத்தினளவுக்கு விசாலமடையும். அளவு கடந்து பெருகும். மனம் பணத்தை உற்பத்தி செய்யும் என்பதை விளங்கிக் கொள்பவர்க்கு, பணத்தை அளவு கடந்து உற்பத்தி செய்யலாம் எனப் புரியும். இது ஞானம். சக்தியன்று. சக்தியே சாதிக்கும். 

தம்பி - நல்லது செய்தால் மனிதர்கள் கோபப்படுகிறார்கள். செய்யாவிட்டால் நல்லபடியாகப் பழகுகிறார்கள். ஏன்?

அண்ணன் - தராதரம் தெரியாமல் பழகுகிறோம் எனப் பொருள். யாருக்கு எது நல்லது என நமக்குத் தெரியவில்லை (strategy தெரியவில்லை) எனப் பொருள். குறைவாகச் செய்தாலும், அதிகமாகச் செய்தாலும் தவறு.

தம்பி - எதிர்த்த வீட்டுக்காரர் முதலாளி சம்பளம் தாராவிட்டால் நல்லபடியாக இருக்கிறார். சம்பளப் பாக்கி வந்துவிட்டால் பழைய குணம் வந்துவிடுகிறது.

அண்ணன் - பாரம் இருந்தால் கட்டுப்பாடிருக்கிறது. பாரம் இல்லாவிட்டால் கட்டுப்பாடு போய்விடுகிறது. இடம் கொடுக்கக் கூடாது என்பார்கள்.

தம்பி - நமக்கு இடம் கொடுத்தால் மடம் பிடுங்குகிறோம். அன்னை ஆயிரம் மடங்கு இடம் கொடுப்பதை முறையாகக் கொண்டுள்ளார்கள். அந்த இடம் வந்தபின் சொந்தமாகக் கட்டுபாடிருந்தால் அருள் செயல்படும்.

இது பெரிய இரகஸ்யம்

ஏன் கொடுப்பதை அன்னை நம்மால் ஏற்க முடியாத அளவுக்குக் கொடுக்கிறார்கள்?

அண்ணன் - மரம் 1 பழம் தரமுடியாது, 100 அல்லது 1000தான் அதனால் தரமுடியும் என்பது ஒரு விளக்கம். நம்மால் ஏற்பதுபோல் கொடுக்க வேண்டுமானால் ஏன் முடியாது என்பதற்கு அடுத்த காரணம் உண்டு. நம்பியவருக்கு மழை வேண்டுமானால் அன்னை எல்லோருடைய பயிருக்கும் மழையைத் தருகிறார். நம் கொல்லையில் மட்டும் பெய்ய முடியாது. நம் பிரார்த்தனையால் எல்லோருடைய பயிரும் மழை பெறுகிறது எனச் சந்தோஷப்படும் மனம் நமக்கு வேண்டும். அதேபோல அதிகமாக வரும்பொழுது அதை அடக்கத்துடன் பெற்று அனுபவிக்கும் தன்மை வேண்டும்.

தம்பி - இந்தக் கதையில் டார்சி எலிசபெத்தை விரும்புவது அவளுக்குத் தெரியாது. டார்சி அவளுக்கு எட்டாக் கனி. அதே சமயம் வாழ்வு அவ்வூருக்கு விக்காமைக் கொண்டு வருகிறது. எலிசபெத் இரண்டில் ஒன்றை ஏற்கவேண்டும். அவள் மனம் அழகை நாடி ஆபத்தை வரவழைக்கிறது. Human choice என்பது எல்லா இடங்களுக்கும் உண்டு போலிருக்கிறது.

அண்ணன் - ஒவ்வொரு செயலிலும் human choice உண்டு. ஒவ்வொரு முறையும் அது Mother's choiceஆக இருந்தால் நாம் பக்தராவோம். பெருஞ்செல்வம் மனம் உற்பத்தி செய்ய தேவையானவற்றுள் இதுவும் ஒன்று.

தம்பி - மனம் நல்லெண்ணத்தாலும், சந்தோஷத்தாலும் பொங்கி வழிந்து ஒரு காரியத்தை அன்னை காரியமாகச் செய்தால் அதன் எல்லாப் பகுதிகளையும் Mother's choice இருந்தால் - அதனால் நாம் சாதாரணமாகப் பெறக்கூடிய ரூ. 1000/- பலன் பத்தாயிரமாகவோ, ஒரு லட்சமாகவோ இருக்கும் என்பதுதான் அந்த இரகஸ்யமா?

அண்ணன் - இரகஸ்யத்தைப் பல்வேறு வகைகளாகக் கூறலாம். 

  • நல்லெண்ணம், சந்தோஷம்.
  • ஜீவன் நிறைந்த செயல்.
  • பலன் பெற்றபின் எழும் சந்தோஷம், பெறுவதற்கு முன் வரவேண்டும்.
  • முழுச் சுதந்திரம் உள்ளபொழுது முழு அடக்கம் தேவை.
  • சமர்ப்பணம்.
  • சிறியதும், பெரியதும் ஒன்றே.
  • ஜீவாத்மாவே பரமாத்மா என அறிவது.
  • பணம் உற்பத்தியாகும் எல்லா வழிகளையும் அறிவது.
  • சோதனை செய்யாமல் நம்பும் மனப்பான்மை.
  • பக்குவம் தேவை.
  • பணத்தைவிட மனிதன் முக்கியம் என அறிவது.
  • பணத்தின் மீது முழுக் கவனம், முறை.

எந்த ரூபத்தில் அன்னை ஜீவனிருந்தாலும் பணம் உபரியாகப் பெருகும். நம் மனம் நமக்கு அடங்க வேண்டும். மனம் அடங்கினால் காரியம் பெரியதாகும்.

தம்பி - Rapid opening of book  ஒரு புத்தகத்தைத் திறந்து பார்த்தால் அது நமக்குரிய கருத்தைச் சொல்வதைச் செய்து பார்த்தேன்.

அண்ணன் - அன்னை அதற்குரிய நிபந்தனைகளைக் கூறியது பற்றிப் படித்திருக்கிறாயல்லவா? 

  1. அமைதியான மனம்.
  2. கூர்மையான கத்தி போன்ற கருவியால் புத்தகத்தைப் பிரிக்க வேண்டும்.
  3. புத்தகம் அதற்கேற்ப அமைய வேண்டும். அதாவது கதை, கட்டுரை போலில்லாமல் பல சுருக்கமான கருத்துகள் அடங்கியதாக இருக்கவேண்டும். 

தம்பி - சாவித்திரி நமக்குரியதைத் துல்லியமாகக் கூறும். அது சமயத்தில் புரியவில்லை என்பதால் புதியதாக வெளிவந்த செய்திகள் நிறைந்த புத்தகத்தை நான் பயன்படுத்துகிறேன். இது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. தனித்தனி செய்தியாக இருப்பது சௌகரியமாக இருக்கிறது. இன்று மையத்திலிருந்து சமாதிப் புஷ்பம் எடுத்துவர வேண்டியவர் வரவில்லை. வேறு வேலையிருப்பதாகச் சொன்னார். இந்தப் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.

"அருளை நாம் அறியவில்லை. பிரசாதத்தின் பெருமை தெரிவதில்லை. அருள் நம்மைத் தேடிவரும்பொழுது பிரசாதத்தை நாம் புறக்கணிப்பது வாய்ப்பை இழப்பது எனத் தெரியவில்லை'' என்றிருந்தது. புத்தகம் பிரசாதத்தைப் பற்றியே பேசுவது ஆச்சரியமாக இருந்தது. எனக்கு, படித்ததைச் சுருக்கமாகச் சொல்ல முடியவில்லை. "செய்தி' நான் படித்தது மிகவும் தெளிவாக, பொருத்தமாக இருந்தது.

அண்ணன் - அருள் பிரவாகமாக இருக்கிறது. நமக்குத் தெளிவுப் போதாது. நான் கோடி வீட்டிற்குப் போயிருந்தேன். அது வசதியில்லாத வீடு. ஒரே நாற்காலியிருந்தது. எப்படி இருவர் உட்காருவது, நின்று கொண்டே பேசிவிட்டு வந்துவிட்டேன். மறுநாள் மையம் வந்திருந்தார் அவர். "வீட்டில் உட்காரவும் வசதியில்லை'' என்றார். அருகிலிருந்தவர் "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? ஒரு நாற்காலி என்ன, 10 வரும்' என்றார். இது போன வருஷச் செய்தி. இப்பொழுது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. அவர் வீட்டில் சரியாகப் 10 நாற்காலிகள் உண்டு. சில cushion போட்ட sofa போலிருக்கிறது.

தம்பி - மையத்தில் பேசினாரல்லவா? சூழல் சக்தி வாய்ந்தது. சொல் பலித்துவிட்டது. அருள் பிரவாகமாக இருப்பது உண்மைதான். நம் தெரு பள்ளியில் வேலை செய்யும் ஆயாவுக்கு அன்னை மீது நம்பிக்கை அதிகம். அதன் அனுபவம் ஆச்சரியமானது. சம்பளம் ரூ.400/- எப்படி குடும்பம் நடத்துவது? 1 கிராம் பவுனில் செயின் வாங்க ஆசை! அந்த ஆசையால் செயின் கழுத்தை அரிக்க ஆரம்பித்தது. ஓகோ! ஆசை தப்பு என்று புரிந்து மனம் அடங்கியது. ஒரு 10 நாளுக்குள் அந்த பள்ளிக்கூட முதலாளி வீட்டில் வந்து 2 நாள் வேலை செய்யச் சொன்னார்கள். வேலையைப் பார்த்து சந்தோஷப்பட்டு அவர் மாமியார் 21/2 பவுன் செயின் செய்து கொடுத்துவிட்டு, "உனக்குப் பணம் கிடைக்கும்பொழுது விலையைக் கொடு'' என்றார். அது 8500 ரூபாய். எப்படி 400 ரூபாய் சம்பளத்தில் என்ன செய்வது? அன்னை விட்ட வழி எனச் செயின் வாங்கி வந்தார். தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு tour வருபவர்கள் அதிகமாயினர். போகும்பொழுது ஆயாவுக்கு ஏதாவது கொடுப்பார்கள். சம்பளத்திற்குச் சமமாக இது வர ஆரம்பித்தது. பெரிய பணக்கார அம்மா வந்தார். அவர் ரூ.2000 கொடுத்தார். அதன்பிறகு 2 பேர் ரூ.500, ரூ.1000 எனக் கொடுத்தார்கள். அந்த 1 வருஷத்தில் ரூ.7000 சேர்ந்துவிட்டது! ஆயாவுக்கு எதுவுமே புரியவில்லை. "நான் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாது. சொன்னால் எது எப்படிப் போகும் எனப் பயமாக இருக்கிறது. மதர் பெரிசு, மதர், மதர்தான். என் வாழ்வில் இதுபோல் நடந்ததேயில்லை'' என்று என்னிடம் அந்தரங்கமாகச் சொல்லிப் பரவசப்பட்டார். ரூ.400 சம்பளம், மேல் காசு ரூ.7000 எப்படி நம்புவது?

அண்ணன் - அன்னை செய்வது ஏதாவது நம்ப முடியும் காரியமாக இருக்கிறதா? எல்லாமே கதையில் படிப்பதுபோல் தானிருக்கிறது. அன்னை என்பது என்ன என நாமறியவில்லை.

தம்பி - பிரம்மா, சிவன், விஷ்ணு, இந்திரன், லக்ஷ்மி, சரஸ்வதி, முருகன், விநாயகர், ஆத்மா (self), புருஷன், ஈஸ்வரன் இவைகட்குள்ள வேறுபாட்டை விளக்கி, அதன் பிறகு அன்னை என்பதை விளக்கினால் புரியும்.

அண்ணன் - நீ கூறிய அத்தனை கடவுள்களும் தெய்வலோகத்திற்கு overmind உரியவர்கள். இவர்களுடைய ஆதி சத்திய ஜீவியம். இத்தனை கடவுள்களும் மனத்தின் வகையைச் சார்ந்தவர்கள். அளவு பூமி அளவானாலும், சக்தி பெரியதானாலும், மனித குணம் ஓரளவுண்டு. கோபம், போட்டி போன்றவையும் உண்டு.

 

பிரம்மம் (Absolute)¹
------------------------------------------------------------------------------------------------------------
                                  சத்                                        சித்                                ஆனந்தம்
--------------------------------------                    ↓
            ↓                      ↓                      ↓                   ↓       
அக்ஷர பிரம்மம்   புருஷா     ஈஸ்வரன்          
(Self) பிரம்மம்                                                   
க்ஷர பிரம்மம்                                                    ↓       
 
Goldenlid                                               சத்தியஜீவியம்
 
-----------------------------------------------------------------------------------------------------------
தெய்வலோகம்                            Mind
             ↓
                                                                           ரிஷி
            ↓
         முனி
                                                                               ↓
                                                            மனிதன் (மனித மனம்)
                                                                              ↓
                                                                        வாழ்வு
           ↓
                                                                         ஜடம்
 
¹(Absolute) என்பது ஆதி.
Self  என்பது க்ஷர, அக்ஷர பிரம்மமாகும்.
 
முன் பக்கத்தில் எழுதியதில் சத் என்பது பிரம்மம், புருஷா, ஈஸ்வரா
எனப் பிரிவதை மட்டும் தனியாக எழுதினால்
 
பிரம்மம் (Absolute)
           -------------------------------------------------------------------------------------------------
           ↓                                                              ↓                                                    ↓
        சத்                                                         சித் (அன்னை)                        ஆனந்தம்
   (Self Conscious Being)
  -------------------------------------------------------------
  ↓                                      ↓                                 ↓    
அக்ஷர பிரம்மம்  புருஷோத்தமா   ஈஸ்வரன்
பிரம்மம் (Self)        புருஷா
க்ஷர பிரம்மம்

 

இந்திய ரிஷிகள் பிரம்மம் எனக் கூறுவது க்ஷரப் பிரம்மம், அக்ஷரப் பிரம்மம் என்பவையாகும். கீதை அடுத்த கட்டத்தில் புருஷோத்தமனைப் பற்றிக் கூறுகிறது. க்ஷர, அக்ஷரப் பிரம்மங்கள் புருஷோத்தமனில் அடக்கம். அன்னையின் பிறப்பிடம் ‘சித்'. சத் என்பதை ஸ்ரீ அரவிந்தர் Self Conscious Being என்கிறார். அதுவே மூன்றாகப் பிரிந்து தெரிகிறது. பிரம்மம் (Absolute) என்பது சிருஷ்டிக்கு அப்பாற்பட்டது. பிரம்மம் Self என்பது உலகுக்கு அப்பாற்பட்டதேயானாலும், சிருஷ்டிக்குட்பட்டது. அன்னை இவற்றிற்கு அப்பாற்பட்டவர்.



book | by Dr. Radut