Skip to Content

09. அடுத்த கட்டம் – I

 

  • “நான் அன்னையை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஏராளமான நல்லவை நடக்கின்றன”.
  • “என் வாழ்வை அன்னை மாற்றியமைத்ததற்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை”.
  • “அன்னை என் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்துகிறார்”.
  • “அன்னை என்றால் நிதர்சனமான தெய்வம்”.
  • “அம்மா எதையும் க்ஷணத்தில் முடிக்கின்றார்”.
  • “நினைத்தாலே உடல் கூசுகிறது”.
  • “இனி அன்னையில்லாமல் நானில்லை”.
  • “இன்று நானும் ஒரு மனிதனாக உலவுகிறேன் என்றால், அது அன்னையால்தான்”.
  • “எதுவும் முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது”.
  • “மனதிற்குப் புதிய தெம்பும், சந்தோஷமும் வந்துவிட்டன”. 

உண்மையான பக்தி, பக்தியுள்ள நம்பிக்கை நிறைந்தவர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டு பெற்ற அனுபவத்தை மேலே குறிப்பிட்டேன். “இதற்கு மேல் என்ன வேண்டும்? இது போதாதா?” என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள். விமரிசனத்திற்கு அன்னை பற்றிய புத்தகம் போயிற்று. ஆசிரியர், புத்தகத்தை விமரிசனத்திற்காகப் படித்தவர் பக்தராகிவிட்டார். ஆனால் அவரே அன்னையை நினைப்பது இல்லை. என் பிரச்சினைகள் உள்ள இடங்களில் அன்னை எனக்கு முன் சென்று, அவற்றைத் தீர்த்துவைத்து, “நானிருக்கிறேன்” என்று ஒவ்வொரு முறையும் எனக்குத் தம்மை நினைவுபடுத்துகிறார்கள். எந்தப் பிரச்சினையானாலும் இந்தப் புத்தகத்தைப் பிரித்தால், உடனே பதில் கிடைக்கிறது. “அன்னை என்னுடனேயே எப்பொழுதும் இருக்கின்றார்” என்றார் புத்தகத்தை விமரிசனத்திற்காகப் படித்த ஆசிரியர்.

“இதுவே போதும்” என்பவர்களுக்கு இது போதும். இதற்கு அடுத்த கட்டம் உண்டு. அங்குப் போக வேண்டும் என்பது அவசியம் இல்லை. போக வேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்குச் சொல்லக் கூடியது உண்டு. அவை மூன்று: 

  1. அன்னைக்குரிய சட்டங்களில் குறைந்தபட்சம் சில சட்டங்களையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  2. வாழ்க்கை என்பதென்ன? அதன் அடிப்படை நியதிகள் எவை? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
  3. பழைய வாழ்வின் அடிப்படைகளை விட்டுவிட முன்வர வேண்டும். 

அன்னையின் வாழ்வுக்கு அஸ்திவாரமானது சத்தியம். நம் வாழ்வுக்குரியது தோற்றம். தோற்றத்தைப் புறக்கணித்து, அதனுள் உள்ள ஜீவனைப் பாராட்டும் வகையில் நாம் நம் மன நிலையையும், செயலையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விவரிப்பது முதற் பகுதி. உண்மையில் அன்னையை ஏற்றுக்கொள்வது என்றால், உண்மையை வாழ்வில் ஏற்றுக்கொள்வதாகும். வாழ்வில் பொய்யின் வடிவங்களைப் புறக்கணித்து, மெய்யின் வடிவங்களை நெஞ்சில் நிறுத்தும் 27 உண்மைகளை இப்பகுதியில் எழுதியிருக்கின்றேன். பெரும்பாலானவற்றிற்கு விளக்கமும் அளித்திருக்கின்றேன்.

இரண்டாம் பகுதி அன்னையைப் பற்றியதன்று, வாழ்வைப் பற்றியது. வாழ்வை ஏற்றுக்கொள்ளும் யோகம் என்பதால் வாழ்வின் அஸ்திவாரங்களை அறிவது வாழ்வை அறிய உதவும். மனிதன் வாழ்வைப் பற்றி பல விஷயங்களை அறிவான். பலவற்றை அவன் தெரிந்துகொள்ள முயன்றதில்லை. சில குழப்பமானவையாகவும், பல தலைகீழாகவும் தென்படும். இன்றுவரை வாழ்வு, மனிதனை ஆண்டு வருகிறது. அதன் முன் அவன் துரும்பு. அவனால் வாழ்வை மீறிப் போக முடியாது. அந்தச் சட்டங்களை நான் சுமார் 100 வரை எழுதி இருக்கின்றேன். இவையெல்லாம் வாழ்வின் சட்டங்கள் என்றும், அவற்றை மனிதன் மீற முடியாதென்றும் அறிவதுடன், அடுத்த கட்டத்திற்கு வந்த பக்தரை அந்தச் சட்டங்கள் ஆள முடியாதென்றும் தெரிய வேண்டும். இந்த 100 சட்டங்களையும் மீறிச் செயல்பட அடுத்த கட்டத்திற்கு வந்த பக்தரால் முடியும்.

மூன்றாம் பகுதி, மனிதனுடைய இன்றைய பொதுவான மனநிலை. அடுத்த கட்டத்திற்கு வர முயலும் பக்தர் முதற்காரியமாக இந்தப் பொதுவான மனநிலையினின்று அகன்று அன்னையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் சுமார் 100 நியதிகளையும் எழுதியிருக்கிறேன். இவற்றை விடுவது அவசியம்.

முதற்பகுதியை ஏற்பதும், மூன்றாம் பகுதியை விட்டுவிடுவதும், இரண்டாம் பகுதியைத் தெளிவுற அறிவதும் அவசியம்.

அடுத்த கட்டம் என்றால் என்ன?

அரசியல் சுதந்திரம் வந்தது நாட்டிற்கு முதற்கட்டம். பொருளாதாரச் சுதந்திரம் இரண்டாம் நிலை. கல்வி பெருகி, சொந்த டெக்னாலஜி உற்பத்தியாகி, தொழிலின் டெக்னாலஜி அஸ்திவாரம் ஏற்படுவது மூன்றாம் நிலை. நாட்டில் அரசியல் வலுவான அஸ்திவாரத்தில் அமைவது 4ஆம் நிலை. ஊழலற்ற நிர்வாகம் ஐந்தாம் கட்டம். உயர்வு பெற்ற நீதிமன்றம் ஆறாம் நிலை. நாட்டின் கல்வி நிலை உயர்ந்து, உலக இலக்கியத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் சேவை செய்வது அடுத்த நிலை. நாட்டின் ஆன்மீகப் பொக்கிஷத்தை அனைவரும் போற்றி, நம் பண்பை முதன்மையாக்குவது அடுத்தது. உலகம் இந்தியப் பண்பையும், ஆன்மீகத்தையும் இலட்சியமாக்கி, இந்தியாவை ஜகத்குருவாக ஏற்றுக்கொள்வது ஒன்பதாம் கட்டம். அவை உயர்ந்து சிறப்படைவது பத்தாவது கட்டம்.

நாட்டிற்குப் பத்துக் கட்டங்களில் உயர்வுள்ளதைப் போல் பக்தனுக்கும் பத்துக் கட்டங்கள் உண்டு. பத்தாவது கட்டம் வாழ்க்கையின் அடிப்படை யோகமாக மாறி, யோக வாழ்வு மலர்வது ஆகும். பக்தனுள்ள நிலை முதல் நிலையானால், பழைய மனப்பான்மையை விட்டு, அன்னை சட்டங்களை ஏற்றுக்கொண்டு, வாழ்வை ஆழ்ந்து புரிந்துகொள்ள முயல்வது இரண்டாம் கட்டம். அதை விவரிப்பதே இப்புத்தகத்தின் மூன்று பகுதிகள்.

இந்த மூன்று பகுதிகளின் சாரத்தை சுருக்கமாக 5 அம்சங்களாகக் கடைசியில் எழுதியிருக்கின்றேன்.

முதற்பகுதி: 

  1. அன்னையை நாம் ஏற்றுக்கொண்டபின் எந்த அளவு நாம் மாறியிருக்கின்றோம் என்று கணிக்க வேண்டும்.

    அன்னையைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு, “நாம் செய்யும் பிரார்த்தனை பலித்தால் போதும்” என்பவர்கள் மாற வேண்டிய அவசியமில்லை. ஒரு காரியம் கூடிவர வேண்டும் என்றபொழுது நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால், தவறாது அது பலிக்கும்.

    அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்து, அன்னையை மேலும் நெருங்கி வர வேண்டும். நாம் வாழ்வின் அடிப்படைகளை அன்னைக்கு உகந்தது போல் அமைக்க வேண்டும் என்பவர்களே மாற வேண்டியது அவசியம்.

    வாழ்க்கை நிலையுயர வேண்டுமானால், மனிதன் தன் அடிப்படைப் பழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். கிராமத்திலிருந்த மிராசுதார் நகரத்தில் வந்து தொழில் அதிபரானாலும், சிற்றூரிலிருந்த அதிகாரி மாநிலத் தலைமைச் செயலகத்திற்குப் பதவி உயர்வால் மாற்றப்பட்டாலும், நம்மூர் கல்லூரியில் பயின்றவன் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயில ஆரம்பித்தாலும், செல்வம் உயர்ந்த காலத்தும், செல்வாக்கு உயர்ந்த காலத்தும், மனிதன் தன் அடிப்படைகளை மாற்றிக்கொள்ளும் அளவுக்கே புதிய நிலையின் பயனை அடைகிறான்.

    இன்றைய உலக வாழ்வை வெற்றிகரமாக நடத்த முக்கியமான நேரங்களில் தேவையான அளவு பொய்யைக் கடைப்பிடிக்க வேண்டும். மனித வாழ்வை யோக வாழ்வாக மாற்ற, அன்னையின் அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்வது அவசியம். நம் மனித வாழ்வு சூழ்நிலைக்குட்பட்டது. யோக வாழ்வுக்குச் சூழ்நிலை உட்பட்டது. அதாவது அதில் பிரச்சினை இருக்காது. நமக்குத் தேவைப்பட்ட வாய்ப்பை உற்பத்தி செய்து, நாமே அதைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நிலை இன்று உலகில் இல்லை. அது வேண்டுமானால், நாம் அடிப்படைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இதை அறிந்து, இதை நாடுபவர்கள் அன்னையிடம் வந்தபின், தாம் எந்த அளவுக்கு மாறியிருக்கின்றோம் என்று கணிக்க வேண்டும். அது அவசியம்.

    நம்மிடம் இருந்த படபடப்புக் குறைந்துள்ளதா? கோபத்தை அடக்க முயன்றதில் எந்த அளவு பலன் கண்டுள்ளோம்? நம் குறைகளைப் பட்டியலாக எழுதி, சோதனை செய்ததில் எந்த அளவு குறைகளை விலக்கியுள்ளோம்? என்று கணித்தால், நாம் உள்ளத்தில் பெற்றுள்ள முன்னேற்றம் புற வாழ்விலுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

    கொஞ்ச நாளைக்கு ஒரு முறை இதை மீண்டும் மீண்டும் செய்து, என்ன முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று கண்டறிய வேண்டும்.
     
  2. முடிவான இலட்சியம் முக்கியமானாலும், நடைமுறையில் அடுத்த கட்டம் மட்டுமே பலிக்கும்.

    அன்னையை அறிந்தவுடன் யோகம் பயில ஆவல் ஏற்பட்டு, ஆசிரமத்தில் சாதகர்களாகச் சேர விரும்பியவர்களை அன்னை உடனே ஏற்றுக்கொள்வதில்லை. சிறுபான்மையோரையே அன்னை ஒரு மூன்று மாத சோதனைக்குப் பின் சேர்த்துக்கொண்டதுண்டு.

    இன்று அன்னையை அறிந்தவுடன், “தியானத்தை மேற்கொள்ள வேண்டும்; அன்னையின் பெரிய இலட்சியங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்ற அவா தீவிரமாக எழுவதுண்டு. அன்னையின் கோட்பாடுகளில் தலைசிறந்தவற்றைப் பொறுக்கி எடுத்து, அதை உடனே பூர்த்தி செய்ய முயல்பவர் பலர். இது ஆர்வத்திற்கு அறிகுறி; நல்லது. எவரால் அதைச் செய்ய முடியுமோ, அவருக்கு அது சிறப்பு.

    இலட்சியம் என்பது ஒன்று, நடைமுறை என்பது வேறு. பொதுவான நடைமுறை இலட்சியத்திற்கு எதிராக அமையும். தம் நிலையை அறியாமல், யோகத்தைப் புரிந்துகொள்ளாமல், யோகத்தைத் தீவிரமாக ஏற்றுக்கொண்டதாக நினைத்துக்கொண்டு, 30ஆம் வயதில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டவர், 50 வயதில் “தமக்கும் யோகத்திற்கும் சம்பந்தமில்லை; தம்மால் அது சம்பந்தமான சேவையைக்கூட சரிவரச் செய்ய முடியவில்லை” என்று கண்டு கொண்டு, அன்னைக்கு எதிரான கோட்பாடுகளை மேற்கொண்டு, திருமணமும் செய்துகொள்ள விரும்பி, அன்னைக்கும் சாமானியன் வாழ்வுக்கும் பொருந்தாத திருமணத்தைச் செய்துகொண்டு, வெகு சீக்கிரம் அதுவும் தவறு என்று கண்டார். இப்படிப்பட்டவர் நூற்றுக்கணக்கானவர்.

    எனவே எது நடைமுறை, எது இலட்சியமான நடைமுறை என்று காண்பது நல்லது. நாம் கொண்ட நோக்கம் பூர்த்தியாக 20 கட்டங்கள் இருந்தால், நடைமுறையில் அடுத்த கட்டத்தை மட்டுமே நாம் விழைய முடியும் என்பது உண்மை. 20ஆம் கட்டத்தையோ, 19வது கட்டத்தையோ நேரடியாக அடைய முயல்வது இயற்கைக்குப் பொருந்தாது; நடைமுறையில் நடக்காது. 8ஆம் வகுப்பு மாணவன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், 9ஆம் வகுப்பை அடைய முயல்வது மட்டுமே நடக்கும். ஒரு கட்டத்தை மட்டுமே ஒரு சமயத்தில் தாண்ட முடியும். திறமை அதிகமாக இருந்தால் சீக்கிரமாகத் தாண்டலாம். ஆனால் எந்தக் கட்டத்தையும் (you cannot skip) விலக்க முடியாது. அதுவே பூரண யோகத்தின் அடிப்படையாகும்.

    அடுத்த கட்டமாக நமக்கு அமைந்தது எது என்று அறியும் முன், நாம் உள்ள நிலை எது என்று அறிய வேண்டும். யோகத்தின் முடிவு சத்தியஜீவனாவது என்றால், அதற்கு முன் உள்ள நிலைகள் இரண்டு. அதற்கு முன்னும் உள்ள நிலைகளை வரிசையாகக் கூறுவது என்றால், மேலிருந்து கீழே சொல்லப்போனால், பிராணமயப் புருஷனைக் காண்பது, ஆசையை அழிப்பது, மனத்தில் மௌனத்தை மேற்கொள்வது, மனத்தின் ஆழத்தை அடைவது, சமர்ப்பணத்தை மேற்கொள்வது, இடையறாத அன்னை தரிசனம் பெறுவது, இடையறாத நினைவு சித்திப்பது ஆகும்.

    இடையறாத நினைவு இரவும், பகலும் பிரியாது, வணங்க தனக்குச் சித்திக்க வேண்டும் என்று நாயனார் பாடினார். அதுவே ஆரம்பமான முதல் நிலை. பக்தன் இன்று எப்படி அதை நாட முடியும்?

    நாம் உள்ள நிலையில் கோபத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், ஆசை அளவுக்கு மீறியிருந்தால், வேண்டாத குணங்களிருந்தால், செயலில் திறமையில்லாவிட்டால், தேவைப்பட்டால் பொய் சொல்வது உண்டு என்றால், இவற்றை விட்டு அகல்வதே நமக்குரிய முதல் நிலை.

    மேற்சொன்னவை எதுவுமே இல்லை. ஆனால் இடையறாத நினைவு தினமும் 1 மணி நேரம்தான் இருக்கிறது என்றால், அந்நினைவை பல மணி நேரமாக மாற்றிவது நமக்குரிய அடுத்த கட்டம்.

    நம் வாழ்வு பிரச்சினைகளால் நிறைந்திருக்கிறது. அவற்றைப் போக்க பல வழிகளையும் மனம் கருதுகிறது என்றால், அவற்றை அன்னை மூலமாக மட்டுமே அகற்ற முயல்வது அடுத்த கட்டமாகும்.

    பிரச்சினைகளில்லை என்றால், வாய்ப்பை உற்பத்தி செய்வது அடுத்த கட்டம்.

    சாதாரண மனிதர்களுக்கு அடுத்த கட்டமாக அடையக்கூடிய சிலவற்றைக் குறிக்கின்றேன்.

    இந்த அடுத்த கட்டம் என்பது கடமைகளைப் பூர்த்தி செய்வனவாகவும், வாழ்வு நிலையை உயர்த்துவனவாகவும் அமையும்.
    • பரீட்சையில் தவறிய மாணவனுக்குப் பாஸ் செய்வது அடுத்த கட்டம்.
    • தவறாமல் பாஸ் செய்யும் மாணவன் அதிக மார்க் வாங்க முயல வேண்டும்.
    • சச்சரவுள்ள குடும்பம் சுமுகத்தை நாட வேண்டும்.
    • சுமுகமான குடும்பம் ஒற்றுமையைத் தேட வேண்டும்.
    • ஒற்றுமையான குடும்பம் உயர்வை விரும்ப வேண்டும்.
    • பல வழிகளிலும் உயர்வடையும் குடும்பம், நல்ல முறையில் மட்டும் உயரப் பாடுபட வேண்டும்.
    • சிறு தொழில் உடையவர், தொழிலை விருத்தி செய்தல் நல்லது.
    • உத்தியோகம் செய்பவர், அங்கு முன்னேறத் தகுதியைப் பெற வேண்டும்.
    • உயர்ந்த உத்தியோகஸ்தர் குடும்பத்தைக் கவனிக்காதவராக இருந்தால், குடும்பத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
    • நான்கு பிள்ளைகள் உள்ள வீட்டில் அனைவருக்கும் தடையின்றி உத்தியோகம் கிடைக்கும் நிலையிருந்தால், ஒருவருக்காவது உயர்ந்த உத்தியோகத்தைப் பெற முயல வேண்டும்.
    • வீட்டில் ஒருவர் மட்டும் அன்னை அன்பரானால், அனைவரும் அன்பராவது அடுத்த நிலை.
    • கஷ்டம் வந்தபொழுது அன்னையை நினைக்கும் பழக்கம் இருந்தால், நல்லது வரும்பொழுதும் அன்னையை நினைக்கப் பழக வேண்டும்.

    தன்னிலை என்பது வாழ்வு நிலை, மனநிலை, இலட்சியக் கொள்கை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. இதிலிருந்து அடுத்த நிலை என்பது சுலபமாகத் தெரியும். அதை நாடுதல் நடைமுறைக்குப் பொருந்தும். அதை அன்னை வழியில் மட்டும் பெற முனைவது இலட்சிய நடைமுறையாகும். இலட்சிய நடைமுறையை ஏற்றுப் பூர்த்தி செய்வது, வாழ்வை யோகமாக மாற்றுவதாகும். இதற்கு மேல் முனைந்தாலும் செய்ய முடியாது. எவ்வளவு உயரத்தில் ஆரம்பித்தாலும் சில ஆண்டுகட்குப் பின் பூர்த்தியாவதைப் பார்த்தால், இந்த அளவிலேயேதான் பூர்த்தியாகும். எனவே அதையே முன்கூட்டி அறிந்து செய்வது பொருத்தம்.

  3. பொய்யின் வித்தான சத்தியத்தை அறிய வேண்டும். நம் வாழ்வின் வழிகள் பொய் நிறைந்தவை என்று கண்டு, அவற்றுள் நிறைந்துள்ள பொய்ம்மையைக் காண வேண்டும்.

    B.A. படித்தவன் தன் படிப்பை M.A. என்று சொன்னால், அது இல்லாதது, பொய்யாகும். இருப்பது மெய்; இல்லாதது பொய்.

    இது நேரடியான பொய்யானால், வேறு பல வகைகளான பொய்களும் உண்டு. உயர்ந்த உடையும், தாழ்ந்த பழக்கமும் உண்டானவனுக்கு நாம் உடைக்குத் தகுந்த மரியாதை கொடுப்பது தோற்றத்தை ஏற்றுக்கொள்வதாகும். தோற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், உடையை நம்பி அவனிடம் பழகினால், மோசம் போகிறோம். தோற்றத்தை நம்புவது பொய்யாகிறது. வருமானம் இல்லாத வீட்டில், மாமனார் உதவி சௌகரியமாக இருக்கிறது. இது தற்காலிகமான சௌகரியம்; இந்த நேரம் சௌகரியமானது; நீண்ட நாளில் பொய்த்துவிடும். சொந்த உழைப்பு மெய்; மாமனார் உதவி பொய் எனப் பிற்காலத்தில் விளங்கும். எனவே நெடுநாள் நீடிப்பது மெய் என்றும், கைக்கு மெய்யாயிருப்பது மெய்யன்று என்றும் ஆகிறது.

    பயங்கரவாதிகள் வன்முறையால் தங்கள் காரியத்தைச் சாதிக்கின்றார்கள். நாட்டிற்குப் பிற்காலத்தில் இது நல்லதன்று. எனவே பயங்கரவாதம் பொய்.

    நம் வாழ்விலுள்ள பழக்கங்களை எடுத்துச் சோதனை செய்தால் நாம் எந்த அளவு பொய்யை வாழ்வில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் எனத் தெரியும். நூறில் பத்து பாகமும் மெய் தேறுவது அரிது. அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள முற்படுபவர்கள் தங்களிடம் உள்ள பொய் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்வது அவசியம்.
     
  4. இன்றைய வாழ்வில் நம் அளவில் சர்வ ஆரம்பப் பரித்தியாகியாக வேண்டும்.

    நம் பொருளை மற்றொருவருக்குக் கொடுப்பது தியாகம். நம் உரிமையை விட்டுக் கொடுப்பது தியாகம். தங்கள் தொழிலை விட்டுவிட்டு மகாத்மா காந்தியின் பேச்சை ஏற்று நாட்டுக்குச் சேவை செய்ய முன்வந்த தியாகிகளை நாம் அறிவோம்.

    யோகம் செய்பவர்கள் உடமையையும், உரிமையையும் தியாகம் செய்வதுடன், தங்கள் உயிரையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள். ஆவியும், உடமையும் உன்னுடையதே என்பதை உடல், பொருள், ஆவி என்ற சொல்லால் குறிக்கின்றார்கள். உயிரை இறைவனுக்குத் தியாகம் செய்வதென்றால் இறந்துவிடுவது என்று பொருளன்று. மனித வாழ்வும், இறைவன் திருவுள்ளமும் எதிரெதிராகச் செயல்படுகின்றன. நம் உயிர் இறைவனுக்குப் பொருந்தாததை விரும்புகிறது. நமக்குப் பிரியமானதை விடுத்து, இறைவனுக்குப் பிரியமானதை ஏற்றுக்கொண்டால், உயிர் இறைவனுக்கு உரியதாகிறது. ஒரு மணி நேரத்தில் நூறு முறை செயல்படுகிறோம். ஓர் எண்ணம் தோன்றுகிறது. ஓர் உணர்வு உந்துகிறது. பல காரியங்களைச் செய்கிறோம். இவை எல்லாம் இறைவன் செயல்கள் அல்ல. நம்முள் இருந்து நம் அபிலாஷைகள் உந்துவதால் ஏற்படுபவையாகும். எண்ணம் தோன்றினால் அதைச் செயல்படுத்துகிறோம். உணர்ச்சி ஏற்பட்டால் அதை வெளிப்படுத்துகிறோம். அவற்றின் அடிப்படையில் செயல்களை ஆரம்பிக்கின்றோம். ஆரம்பம் தொடர்கிறது. உயிருடைய உந்துதல், அபிலாஷைகளின் வெளிப்பாடு, அவற்றின் அடிப்படையில் நாம் ஆரம்பிக்கும் செயல்களே நம் வாழ்வெனப்படும். நம் வாழ்வு நாம் ஆரம்பித்த செயல்களால் உருவானது. இந்த ஆரம்பத்தைத் தியாகம் செய்ய முன்வந்து சர்வ ஆரம்பத்தையும் தியாகம் செய்தவன் சர்வ ஆரம்பப் பரித்தியாகியாகும்.

    நாம் ஆரம்பிப்பதை நிறுத்திய அடுத்த நிமிஷம் இறைவனின் எண்ணம் நம் மனதில் தோன்றிச் செயலாக மாறுகிறது. வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களை “எப்படி ஆரம்பித்தீர்கள்?”எனக் கேட்டால், பலர் “ஏதோ தோன்றியது, ஆரம்பித்தேன்; பலித்தது”என்பார்கள். தானே நம்மை நாடி வந்த செயல்கள், தற்செயலாகத் தோன்றிய எண்ணங்கள் பெரிய சாதனையை முடிப்பதைக் காணலாம். அவை இறைவனால் ஆரம்பிக்கப்பட்டவை. நாம் செயலற்று இருக்கும் பொழுது இறைவன் செயல்படுவதால், நடப்பவை அவை. நம்மால் செயல்பட முடியும்பொழுது நம் செயலைத் தியாகம் செய்து, இறைவன் செயலுக்காகக் காத்திருந்தால் நாம் அருளைப் பெறுகிறோம்.

    முக்கியமான காரியங்களில் இதைச் சோதனை செய்ய மனம் வாராது; தைரியமிருக்காது. இக்காரியங்களில், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமிடங்களில் இவற்றைப் பயின்றால், அவை அபரிமிதமாகப் பூர்த்தியாவதைக் காணலாம்.

    பிறகு முக்கியமான விஷயங்களில் பயில முயலலாம். பேப்பர் படிப்பது, ஆபீஸுக்குப் போவது, T.V. பார்ப்பது போன்ற இவ்விஷயங்களில் உரிமையைத் தியாகம் செய்ய முன்வந்து அது பலித்தால், அங்கு அன்னையைக் காணலாம். அதே போன்ற காரியங்கள் அனைத்திலும் நம் உரிமையைப் பூரணமாக விட்டுக் கொடுக்க நாம் எடுக்கும் முயற்சி, சர்வ ஆரம்பப் பரித்தியாகியின் பக்குவத்தை நம் அளவில் நமக்கு அளிக்கும். இது யோகத்திற்குரிய பக்குவம். இது இருந்தால் அங்கு அன்னை நிரந்தரமாக இருப்பார்கள்.
     
  5. மனிதன் குடும்பத்துடன் இணைந்து பண்பு பெறுகிறான். அன்னையை நெருங்க வேண்டுமானால், குடும்பப் பற்று, பாசம், உறவு, உணர்வு விலக வேண்டும்.
    திருமணமாகாமல், குடும்பம் இல்லாமல் தனியாகச் சிலர் வாழ்வதுண்டு. சுமார் 40 அல்லது 50 வயதில் அவர்களைப் பார்ப்பவர்கள், “பிரம்மச்சாரி, அப்படித்தான் இருப்பார்” என்று சொல்லும் அளவுக்கு அவர் பழக்கங்களிருக்கும். பெண்மணியானாலும், அவளுக்குத் திருமணமாகவில்லை, குடும்பமில்லை, குழந்தைகளில்லை, அதனால் மனதில் ஒட்டுறவு இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை சுவையற்றதாகவும், பண்பற்றதாகவும் இருக்கும். அதுவே ஓர் இலட்சியத்திற்காக குடும்பமில்லாமலிருந்தால், குடும்பம் இல்லாத குறையை இலட்சியம் பூர்த்தி செய்வதாக அவர்கள் பழக்கம் இருக்கும். மேலும், அவர்களுக்குத் தாராள மனப்பான்மை, விட்டுக் கொடுக்கும் பழக்கம், பிரியமாகப் பழகுவது போன்ற நல்ல குணங்கள் அதிகமாக இருப்பதுண்டு. அதைப் பார்ப்பவர்கள், “குடும்பத்தில் செலுத்த வேண்டிய பாசத்தை நம் மீது செலுத்துகிறார்” என்பார்கள்.

    குடும்பம் மனிதனைப் பண்புள்ளவனாகச் செய்கிறது. அதனால் குடும்பப் பாரத்தை ஏற்பவனை உலகம் பொதுவாக சிறப்பான மனிதனாகக் கருதுகிறது. அன்னையின் யோகம் வாழ்வை ஏற்றுக் கொள்ளும் யோகம். அன்னையை ஏற்றுக்கொண்ட பின் வாழ்வைப் புறக்கணிப்பது என்பது கிடையாது. அன்னை பக்தர்கள், அன்னையை மேலும் நெருங்கி வர வேண்டுமானால், குடும்பத்தில் அவர்களுக்கு உரிய பங்கை நிறைவேற்றுவது எப்படி?

    அன்னை பக்தர்களுடைய குடும்ப வாழ்வுக்கும் அடிப்படை யோகமே. அன்னையின் யோகத்தை மேற்கொண்ட சாதகர்களின் யோகத்திற்கும் அடிப்படை, வாழ்வே.

    இவை இரண்டும் முரண்பாடாகத் தோன்றும் கருத்துகள். நம் எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் உரியது முதற்பகுதியே. பக்தருடைய குடும்ப வாழ்க்கைக்குரியது யோகம் என்றால், அந்த வாழ்வு எப்படி அமையும்?

    பாசத்தால் செய்வதை அன்பால் செய்தால், கடமையின் தரம் உயர்கிறது. “இவர் என் தாயார்; அவர் மீதுள்ள பாசத்தால் நான் என் கடமைகளை அவருக்கு நிறைவேற்றுகிறேன்” என்பது நல்ல மனிதனுடைய நல்ல குணம். பாசமும், பற்றும் மனித நிலை. அன்பு அவற்றைக் கடந்து நிற்கும் உயர்ந்த தெய்வீக நிலை. மனிதனுக்குப் பாசமுண்டு. அன்பை உள்ளிருந்து எழுப்புவது ஆன்மா. மனத்திற்கும், உடலுக்கும், இதயத்திற்கும் அன்பு செலுத்தும் திறனில்லை என்கிறார் அன்னை. அவற்றால் பற்றோடு செயல்பட முடியும், பாசமாக இருக்க முடியும். ஆன்ம விளக்கம் பெற்றவருடைய அன்பு அவர் பற்றுடனும், பாசத்துடனும் கலந்து வருகிறது. அன்புடைய அனைவரும் அந்த அளவில் ஆன்ம விளக்கம் பெற்றவர்கள். தாய் மீது அன்புள்ளவருக்கு எவர் மீதும் அன்பிருப்பது இயற்கை. தாய் மீதுள்ள பாசம், மற்றவர்கள் மீது பாசமாக வரும். அது ஒரு சிறு வட்டத்திற்குள்ளிருக்கும். அன்பு அந்த எல்லைக்குட்படாது. எனவே பாசத்தையும், பற்றையும் உடைய கிருஹஸ்தன் அன்னை அன்பனாக மாறும்பொழுது தன் கடமைகளை அன்பால் நிறைவேற்ற முயன்றால், தன் கடமைகளை உயர்ந்த அளவில் பூர்த்தி செய்தவனாவான். அத்துடன் பாசத்தின் பிணைப்பு விலங்காக இருப்பதைப் போல், அன்பின் ஆர்வம் விலங்காக இருக்காது.

    பாசம் உள்ளவர்களைப் பிரித்தால் வருத்தம் ஏற்படும். மீண்டும் பார்க்கும் வரை மனம் துடிக்கும். அன்புள்ளவரைப் பிரிந்தால், மனத்தின் தொடர்பு துடிப்பில்லாமல், இனிமையுடன் தொடரும். பிரிவால் வருத்தம் ஏற்படாது. மீண்டும் சேர்வதால் பிரியம் அதிகம் ஆகும்; கடமை குறையாது.

    அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள பாசத்தை அன்பாக மாற்ற வேண்டும். கடமைகளை அதிகமாக, இனிமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பாசத்தால் பிணைக்கப்படுவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். பாசத்தை அன்பாக மாற்றினால் கணவன் உயர்ந்த கணவனாகவும், மனைவி சிறந்த மனைவியாகவும், பெற்றோர் இலட்சியமான பெற்றோராகவும், குழந்தைகள் மேலும் சிறப்புக்குரியவர்களாகவும் ஆவார்கள். மனித நிலையின் விலங்கு உடைந்து, தெய்வ நிலையில் தொடர்பு ஒளிமயமாக ஏற்படும்.
     
  6. திறமையால் உனக்குரியது எது, சுபாவத்தால் உன் தகுதி எது, ஆன்மீகத்தால் நீ அடையக்கூடியது என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

    ஒரு காரியம் பூர்த்தியாக, பூர்த்தியான பலனை நாம் முழுவதும் அனுபவிக்க, பலர் ஒத்துழைக்க வேண்டும்; பல சந்தர்ப்பங்கள் கூடிவர வேண்டும் என்பதைப் பெரிய காரியங்களில் மட்டுமின்றி, மிகச் சிறிய காரியங்களிலும் நாம் காணலாம். இது ஒரு பரந்த விஷயம். அவற்றுள் திறமை, சுபாவம், இராசி மூன்றும் இங்கு நம் கவனத்திற்கு உரியது.

    பொதுவாகத் திறமையில்லாமல் ஒரு காரியம் பூர்த்தியாவதில்லை. சில சமயங்களில் திறமையிருந்தும் காரியம் பூர்த்தியாவதில்லை. நமக்குத் திறமை குறைவாயிருந்த காலத்தில், குடும்பத்தின் உதவியால் காரியம் பூர்த்தியாகிறது. நண்பர்களுடைய ஆதரவால் வேறு காரியங்கள் பூர்த்தியாகின்றன. நம் உத்தியோகத்திற்காகச் சில பூர்த்தியடைகின்றன. நம்முடைய திறமையால் மட்டுமே பூர்த்தி ஆனவையும் உண்டு. இவற்றையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. இன்று நம் பழைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளை நினைவு படுத்தினால், எவை, யார் உதவியால், எந்தக் காரணத்தால், எந்தச் சந்தர்ப்பத்தால் பூர்த்தியாயின எனத் தெரியும். பொதுவாக வாழ்வில் படிப்பு, திருமணம், உத்தியோகம், பிரமோஷன், வீடு ஆகியவை முக்கியமென்றாலும், இது தவிர சீக்கிரத்தில் எலக்டிரிக் கனெக்ஷன் தேவை, ஆஸ்பத்திரியில் டாக்டர் கவனம் தேவை, லைப்ரரியில் நமக்கு வேண்டிய புத்தகம் வெளியில் போயிருப்பதை நாம் பெற வேண்டும், முக்கியமான வேலைக்குத் தடையில்லாமல் ரயிலில் பூனாவுக்கு டிக்கட் தேவை என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுண்டு. நம் வாழ்வில் அது போல் கடந்த காலத்தில் 100 நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்வோம். தன்னை அபாரத் திறமைசாலி என்று கருதுபவர் ஒருவர், அது போன்ற 100 நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்தால், சுமார் 25 அல்லது 30 நிகழ்ச்சிகளையே தம் திறமையால் பூர்த்தி செய்ததையும், மற்றவற்றை மற்றவற்றால் சாதித்ததையும் அறிவார்.

    தன் நிலையை அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு. யோகத்தை self awareness தன்னையறிதல், அதாவது ஆன்மா தன்னை அறிதல் என்று சொல்வதுண்டு. ஆன்மா தன்னிலை அறிவதற்கு முன்பு, மனம் தன்னிலையை அறிய வேண்டும். அது முதற்படி. முதற்படி, அடுத்த கட்டத்தை எட்ட உதவும்.

    30 காரியங்கள் திறமையால் முடிந்தன என்று கண்டபொழுது, அவை முடிவு பெற நம் சுபாவமும், இராசியும் ஒத்துழைத்தன எனப் புரியும். தம்மை அபாரத் திறமைசாலி என நினைப்பவர் 30க்கு மேற்பட்டவற்றைத் தம்மால் சாதிக்க முடியவில்லை என்று காண்பது அவரைப் பொருத்தவரை ஆன்ம விளக்கமாகும். பிறருக்குத் திறமை இல்லை என்று பேசும் குணம் உடையவர் இச்சோதனையில் தாம் 10 காரியங்களுக்கு மேல் முடித்ததில்லை என்பதை அறிவார். தம் திறமைக்கு நிகரில்லை என்று வாய் ஓயாமல் பேசுபவர் இதே ஆராய்ச்சியால் தம் வாழ்நாளில் ஒரே ஒரு காரியத்தைக்கூட தம் திறமையால் பூர்த்தி செய்ததில்லை எனக் காண்பார். தாம் கண்டதை மனம் ஏற்றுக்கொண்டால் வாழ்வில் அபார முன்னேற்றம் ஏற்படும்; முதன்முதலாக ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்யலாம்! அவரைப் பொருத்தவரை அது அபார முன்னேற்றம்.

    30 காரியங்கள் முடித்தவர் மேலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தால், தம்மால் முடிக்க முடியாத காரியங்களைப் பிறர் உதவியால் முடித்ததைக் காண்பார். அத்துடன் தம்மால் முடிக்க முடியவில்லை என்றவற்றில், தம் சுபாவம் குறிக்கிட்டுக் கெடுத்ததை அறிவார். “திறமைக்குக் குறைவில்லை; அவசரப்பட்டுவிட்டேன்” என்று தெரியும்; “ஆசை வந்து கெடுத்துவிட்டது” என்று விளங்கும். ஆசை, அவசரம், சுயநலம், பிடிவாதம் போன்ற நமக்கே உரிய சுபாவங்கள் வந்து காரியத்தைக் கெடுத்ததை அறிவோம். அப்படிக் கெட்டவை 60 வரை இருக்கும்.

    திறமையுள்ள இடத்தில், “காரியம் கெட்டுப் போகக்கூடாது”என்று முனைந்து சுபாவத்தைக் கட்டிக்காத்தாலும், வேறு காரணங்களால், அதாவது நம் திறமை குறைவற இருந்தும், நம் சுபாவம் குறுக்கிடாமலிருந்தும், காரியம் கெட்டுப் போவதுண்டு. அது போல் மீதி பத்துக் காரியங்கள் கெட்டிருக்கும். அதை இராசி என்கிறோம். ஆன்மீகப் பாஷையில் அதை “ஆன்மாவுக்குச் சம்மதம் இல்லை” என்பார்கள். Spiritual sanction இல்லை என்பார்கள்.

    அன்னையை வணங்கி, பிரார்த்தனை செய்து பெற்றதைவிட அதிகப் பலனைப் பெற வேண்டும்; வாழ்வில் ஆன்மீகப் பலனைப் பெற வேண்டும்; ஓரளவு வாழ்வை யோக வாழ்வாக மாற்ற வேண்டும் என்பவர்களுக்கு அத்தியாவசியமான self awareness ஞானம் இது.

    திறமையைச் சுபாவம் கெடுப்பதையும், திறமை, சுபாவம் இரண்டையும் இராசி கெடுப்பதையும், பூரணமாகப் புள்ளிவிபரத்துடன் அறிந்தபின், இந்த நூறு காரியங்களில் கூடிவந்தவை எத்தனை என்று கணக்கிட முயன்றால், அது எளிதன்று.

    அதையும் தெரிந்துகொள்வது நல்லது. கூடிவந்த 100 காரியங்களைத் தெளிவான மனத்தோடு ஆராய்ச்சி செய்து, எவை நம் சக்தியால் கூடிவந்தவை, எவை நண்பர்களால் முடிந்தவை, எவை அந்தஸ்தால் பூர்த்தியானவை, குடும்பத்தால் பூர்த்தியானவை எத்தனை என்று கணக்கெடுத்தால், தன்னிலை பூரணமாக விளங்கும். பொதுவாக, அவை கீழ்க்கண்டவாறு அமையும்:
    தன்னால் மட்டும் முடிவு பெற்றவை
    10
    குடும்பத்தின் உதவியால் முடிவு பெற்றவை
    72
    நண்பர்களால் முடிந்தவை
    10
    சந்தர்ப்பத்தால் பூர்த்தியானவை
    5
    காரணம் புரியாமல் காரியம் கூடிவந்தது
    3

     இந்த 100 காரியங்களும் இறைவன் அருளால் முடிந்தவை என்றாலும், காரணம் புரியாமல் கூடிவந்தவை இறையருளால் முடிந்தவையேயாகும். இந்த ஆராய்ச்சியால் தன் திறமை தனக்கு விளங்கும். தன்னைப் பற்றிய அதிகமான நினைவுக்கு அஸ்திவாரம் போய்விடும்.

 

  1. வாழ்வை தலைகீழாகப் புரிந்துகொண்டவைகளை ஆராய்ந்து உணர வேண்டும்.

    Inverted values ஒன்றை மற்றதாகப் புரிந்துகொள்ளுதல் மனிதனுடைய வழக்கம். ஆங்கிலம் சரளமாகப் பேசுவதை புத்திசாலித்தனம் என்று புரிந்துகொள்வது வழக்கம். சரளமாகப் பேசுவதும், புத்திசாலித்தனமாகப் பேசுவதும் வேறு வேறு என்பது தெளிவு. இனிமையாகப் பழகுவதும், நாணயமாக இருப்பதும் வேறு வேறு. நடைமுறையில் இனிமையானவரை நாணயமானவர் என நாம் நினைப்பதுண்டு. ஆனால் அவருக்குத் தம் நாணயம் எந்த அளவுக்கு உண்டு என்று தெரியும். நாணயமில்லாதவரைப் பிறர் அவர் இனிமையைக் கண்டு நாணயமானவர் என்று நினைப்பதைப் போல், தாமே தம்மை நினைத்துக்கொண்டால், அதை தலைகீழாகப் புரிந்து கொள்கிறார் எனலாம். நமக்குள்ள திறமை எது, இல்லாத திறமை எது என்பதை நாம் அறிதல் அவசியம். வாழ்க்கையில் எந்தப் பெரிய காரியத்தைச் செய்ய முற்பட்டாலும், அது அவசியம். வாழ்வில் யோக அடிப்படையை ஏற்படுத்த முயன்றாலும், அன்னையை அதிகமாக நெருங்கி வர முயன்றாலும், அந்த அறிவு அவசியம்.

    பொதுவாக தன் மனம் தனக்குத் தெரியும். நீண்ட நாளாக தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அதனால் தன் மனத்தை தலைகீழாகப் புரிந்துகொள்வதுண்டு. இது அனைவருக்கும் உள்ள நிலை. இதைச் சிந்தனையின் மூலம் குறைப்பது நல்லது. தலைகீழாகப் புரிந்துகொண்டவை அனைத்தையும் நேராகப் புரிந்துகொள்ளுதல் யோக வாழ்வுக்கு இன்றியமையாதது.

    பல சகோதரர்கள் உழைத்து வேலை செய்யும் குடும்பத்தில் ஒருவர் ஊதாரியாகத் திரிந்து வந்தார். திரிவதிலும், அரசியல் தொடர்புடன் அலைந்தார். அவருடைய அரசியல் தொடர்பால் குடும்பத்தில் பல காரியங்கள் நிறைவேறின. பல ஆண்டுகள் குடும்பத்திலுள்ள அனைவரும் அவருடைய செல்வாக்கால்தான் குடும்பம் நடப்பதாக நினைத்தனர். பிறகு அவருடைய செல்வாக்கால் நடந்த காரியங்களை அந்த செல்வாக்கில்லாமல் நடத்திக்கொள்ளும் பொழுதுதான் உண்மை வெளிவந்தது. அவர் தவிர அனைவரும் நன்றாகச் சம்பாதிக்கின்றார்கள் என்ற அபிப்பிராயம் ஏற்பட்ட பின், குடும்பம் அளவு கடந்து செழித்தது. அவரையும் சம்பாதிக்க வேண்டும் என்று மற்றவர்கள் கேட்டபொழுது, தம்மால்தான் மற்றவர்கள் சம்பாதிக்கின்றார்கள் என்று அவர் தீவிரமாக நம்புவது தெரிந்தது. அனைவரும் அவரிடமிருந்த உணர்வால் பிரிந்துவிட்டார்கள். உடன் பிறந்தவர்கள் இலட்சக்கணக்காகச் சம்பாதிக்கும்பொழுது தமக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை என்று அந்த நிலை அவருக்கு உணர்த்தியது. அறிவாலும், ஆராய்ச்சியாலும் அதை உணர்வது சிறப்பு. அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள உதவும் பண்பு அது.

  2. அன்னையின் எந்தக் கருத்துகளை ஏற்றுச் செயல்படுகிறாய் எனக் கணக்கிடு.

    அன்னையை நோக்கிப் பிரார்த்தனை செய்ய எந்தக் குறிப்பிட்ட தகுதியும் தேவையில்லை. அனைவருக்கும் உள்ள உரிமை அது. பீச்சில் சென்று காற்று வாங்க தனித் தகுதி தேவையில்லை என்பதைப் போன்றது அது.

    அதிகமாக அன்னையைப் புரிந்துகொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆன்மீகப் பலனையடைய வேண்டும் என்றால், அன்னையின் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் நம்மை அறியாமல் பல்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம். அவை உயர்ந்தனவாகவும் இருக்கும்; தாழ்ந்தனவாகவும் இருக்கும். வாழ்க்கையில் உள்ள கோட்பாட்டிற்கும் அன்னையிடம் ஒரு கோட்பாடுண்டு. பெரும்பாலும் அது இதற்கு எதிரானதாக இருக்கும்; அல்லது மாறுபட்டதாக இருக்கும். இதுவரை பல அன்னை கோட்பாடுகளை நாம் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். நாம் ஏற்றுக்கொண்டவை எத்தனை? அவற்றை நாம் எந்த அளவில் பின்பற்றுகிறோம்? மொத்தமுள்ள கோட்பாடுகள் எத்தனை? அவற்றுள் நாம் ஏற்றுக்கொண்டவை என்ன பகுதி? என்று கணித்தால், நாம் அன்னையிடம் எவ்வளவு நெருங்கி வந்திருக்கின்றோம் என்று தெரியும்.

    வாழ்க்கைக் கோட்பாடுகளில் நல்லவை, கெட்டவைகளைக் கலந்து சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்: பொய் சொல்லக்கூடாது, முக்கியமான விஷயத்தில் பொய் சொல்லாமலிருக்க முடியாது, நண்பனுக்குத் துரோகம் செய்யக்கூடாது, பொருள்களை விரயம் செய்யக்கூடாது, ஊருக்கு எதிராகப் போகக்கூடாது, தனக்கு மிஞ்சிதான் தருமம், கல்யாண விஷயத்தில் உள்ளதைச் சொல்வது அறியாமை, வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டும், சர்க்கார் கடனைத் திருப்பித் தாராவிட்டால் பரவாயில்லை, பணத்திற்கு மரியாதையுண்டு, படிப்புக்கு மரியாதையுண்டு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்; எந்தக் காரியத்தையும் நாம் செய்யும் பொழுது தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கோட்பாட்டின்படியேதான் செய்கிறோம். அன்னையை முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள், தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னணியான வாழ்க்கைக் கோட்பாட்டைக் கண்டுகொண்டு, அதற்குச் சரியான அன்னை கோட்பாடு எது என அறிந்து, அதைப் பின்பற்ற வேண்டும். மற்றும் இதுவரை எத்தனை கோட்பாடுகளைப் பின்பற்றுகிறோம் என்று தெரிந்துகொள்வது நல்லது.

    மேற்சொன்னவற்றுக்குப் பொருத்தமான அன்னை கோட்பாடுகளையும் எழுதுகிறேன்: மெய் மட்டும் சொல்ல வேண்டும், எந்த விஷயத்திலும் பொய்யே சொல்லக்கூடாது, தெய்வத்திற்குத் துரோகம் செய்யக்கூடாது, பொருள்களை தெய்வமாகப் பாவிக்க வேண்டும், ஊர் நேராக இருந்தால் அதனுடன் சேர வேண்டும், சமர்ப்பணம் அனுமதியளித்தால் தர்மம் செய்யலாம், கல்யாண விஷயத்திலும் உள்ளதை மட்டும் சொல்ல வேண்டும், பணத்திற்கு மரியாதையில்லை, படிப்புக்கு மரியாதையில்லை, பெருமையுள்ளவர்க்கெல்லாம் மரியாதை உண்டு, வயதால் உயர்ந்தவர்க்கு உயர்வுண்டு, எல்லாக் கடனையும் திருப்பித் தர வேண்டும்; இவை வாழ்க்கைக்குரிய அன்னை கோட்பாடுகள்.

    இடைவிடாத நினைவு, இடைவிடாத தரிசனம், ஆத்ம சமர்ப்பணம், தாழ்ந்த குரல், பொறுமை, மற்றவரின் கருத்தை ஏற்றல் போன்றவை யோக வாழ்வுக்குரிய அன்னை கோட்பாடுகளாகும்.

    அன்னையின் எந்தக் கருத்தை (அல்லது எத்தனை கருத்துகளை) நீ ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றாய் என்று கணக்கிடு.

    அன்னையை அறிந்த நாள் முதலாய் அன்னையை வணங்குகிறோம் என்பது உண்மை. இந்த முதல் கட்டத்திலிருந்து அன்னையை நோக்கி நெருங்கி வந்து இரண்டாவது கட்டத்தை அடைவதே இப்பொழுதுள்ள நோக்கம். இது பக்தனுக்கு அத்தியாவசியமானதொன்றில்லை என்றாலும், யோகத்தை மேற்கொண்ட சாதகனுக்குரியதன்று. வணங்குதல் முதல் கட்டம். அன்னை இதை வழிபாடு என்கிறார். இதுவரை நாம் எப்படி தெய்வ வழிபாட்டை மேற்கொண்டிருந்தோமோ அதே போல் இன்று அன்னையை வணங்குகிறோம். அது சரி. இங்கிருந்து யோகப் பாதை முடிவு வரை சுமார் 10, 15 உயர்ந்த கட்டங்களுண்டு. அவை நமக்குப் பொருட்டல்ல. வாழ்க்கையின் அடிப்படையை யோகமாக மாற்றி, யோக வாழ்க்கையாக அமைத்து, அதன் ஆரம்ப நிலையை எய்துவதே நோக்கம். இது பக்தனுக்குரிய உயர்ந்த நிலை. ஆனால் சற்றுக் கடினமானது. இதையடையத் தேவையான ஆரம்ப நிபந்தனைகளை இப்பகுதியில் எழுதி வருகிறேன். அவற்றுள் ஒன்று அன்னையின் கோட்பாடுகள்.

    நான் அடுத்த கட்டத்தை எட்ட வேண்டுமானால், அன்னையின் கோட்பாடுகளை ஏற்றுப் பயில வேண்டும். எத்தனைக் கோட்பாடுகளை நான் முழுவதும் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன் என்ற கேள்விக்குப் பதிலாக எதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று மனம் கூறுகிறது. எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை, முடிவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், எத்தனைக் கோட்பாடுகளை அரைகுறையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றேன் என்ற கேள்வி என்னைத் திணற வைக்கின்றது. பதிலுக்காகத் திணற வேண்டியிருக்கின்றது என்றால், அம்முயற்சியை மேற்கொள்ளவில்லை என மனம் உணருகிறது.

    நான் தவறாது அன்னையை வணங்குகிறேன், தரிசனங்களுக்குப் போகிறேன், அன்னையைத் தெய்வமாக மனம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றால், இவையெல்லாம் நல்ல செயல்கள்; ஆனால் வழிபாட்டுக்குரியவை.

    “ஒவ்வொரு செயலுக்கு முன்னும் அன்னையை நினைக்க வேண்டும்” என்பது ஒன்று. அது என்னால் முடியவில்லை; ஏதோ ஓரளவுக்குத்தான் முடிகிறது. “பிறரும் பிரம்மம் என்பதால், மற்றவருடன் பழகும்பொழுது அவர்களுடைய நோக்கில் விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு கொள்கை. அதை முயன்று பார்த்த பொழுது நம் உரிமைகளையெல்லாம் பிறருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று கண்டு, அதை விட்டுவிட்டேன் என்று நினைவு வருகிறது. “அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு” என்பது அடுத்தது. இதை முயன்றேன்; ஆரம்பிக்க முடியவில்லை. இவற்றைத் தவிர வேறெதையும் பயிற்சியாக எடுத்துக்கொள்ளவில்லை என்று இப்பொழுது தெரிகிறது.

    அடுத்த கட்டத்திற்குரிய தகுதிக்குத் தீவிர முயற்சி எடுக்கவில்லை என்று தெரிவது ஒரு வகை ஞானம். இதை எட்ட விரும்புவோர்க்குத் தேவையான பயிற்சி இது.
     
  3. அதிகாரம், வழக்கம், சட்டம், பழக்கம் ஆகியவற்றால் சாதித்தவையனைத்தும் மனித சாதனைகள். அவற்றுள் எதுவும் யோகத்திற்கு உதவா; யோக வாழ்க்கைக்கும் உதவா.

    மனித வாழ்விலும், நாட்டின் வாழ்விலும், மரத்தின் வாழ்விலும் ஜீவனற்ற பகுதிகள் உண்டு; ஜீவனுள்ள பகுதிகளும் உண்டு. ஜீவனுள்ள நேரத்தில் சிருஷ்டியானதை ஜீவனற்ற வாழ்வு கட்டிக்காக்கின்றது. ஜீவனற்ற வாழ்வால் புதியது பிறக்காது.

    காந்தியும், நேருவும் நாட்டின் வாழ்வுக்குப் புத்துயிர் அளித்தார்கள். சுதந்திர இயக்கம் நாட்டை உயிர்ப்பித்தது. ஆகஸ்ட் 15, 1947இல் வந்த சுதந்திரம் இந்தியாவுக்குப் “பாரதம்” என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது. தீண்டாமையை ஒழித்த நேரம் நாட்டின் வாழ்வில் புனித நேரம். பசுமைப் புரட்சி நாட்டிற்குப் புதிய ஜீவனை அளித்து, புதிய திறனைக் கொடுத்தது. இவை ஜீவனுள்ள நேரம்.

    இந்நேரத்தில் சிருஷ்டித்ததை மற்ற நேரத்தில் நாம் முயன்று காப்பாற்றுகிறோம். அது ஜீவனற்ற நேரமாக அமையும்.

    விதை முளைக்கும் நேரமும், துளிர்க்கும் சமயமும், மலரும் தருணமும், பழுக்கும் தினமும் மரத்திற்கு உயிர்ப்பானவை. முளைத்ததை வளர்க்க, துளிர்த்தது தழைக்க, மலர்ந்தது பழுக்க, பழுத்தது பலன் தர மற்ற சாதாரண நேரம் பயன்படுகிறது.

    மனிதனுக்கும் ஜீவனுள்ள நேரங்களுண்டு; ஜீவனற்ற நேரமும் உண்டு. ஜீவனுள்ளவை க்ஷணங்களாகவும், ஜீவனற்றவை வருஷங்களாகவும் அமைகின்றன. உடலைப் பொருத்தவை, உயிரைப் பொருத்தவை, மனதைப் பொருத்தவை, ஆன்மாவைப் பொருத்தவை என அவை பிரியும்.

    உடல் வளர்ச்சி ஜீவனற்றதானால், மலர்ச்சி ஜீவனுள்ளதாகும். முறைமையுடன் பழகுதல் ஜீவனற்ற உணர்வானால், இனிமையாக இருப்பது ஜீவனுள்ள உறவாகும். அதிகாரம் ஜீவனைக் கொல்லும். அன்பின் பிணைப்பு ஜீவனை வளர்க்கும். சட்டம் ஜீவனில்லாதது; நியாயம் சட்டத்திற்கு ஜீவனையளிக்கும்.

    பழக்கத்தில் உயிரில்லை; உயிரில்லாத பழக்கத்தை உயிர்ப்பிப்பது பண்பு.

    கடுமையான கட்டுப்பாட்டில் வளர்ந்து முதல் மாணவனாக வரலாம். அதனால் அவன் அறிவு மலராது. அன்பு நிறைந்த கவனத்தைப் பெறும் மாணவனின் அறிவு மலர்ந்து, அதில் மேதை பிறக்கும் வாய்ப்புண்டு.

    அதிகாரம், வழக்கம், சட்டம், பழக்கம் ஆகியவை அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. ஆனால் அவற்றிற்கு மனித மனத்தையோ, ஆன்மாவையோ மலரச் செய்யும் திறமையில்லை. அன்னையை நெருங்கி வர வாழ்க்கைக்கு இன்றியமையாத எதுவும் உதவா; ஜீவனுள்ளவை மட்டுமே உதவும். வளர்ச்சியும், முறைமையும், அதிகாரமும், சட்டமும், பழக்கமும் அன்னையை அதிகமாக ஏற்றுக் கொள்ள உதவா; தடையாகவும் இருக்கும். மலர்ச்சியும், இனிமையும், அன்பின் அரவணைப்பும், நியாயமும், தர்மமும், பண்பும், அவை போன்ற மற்றவைகள் மட்டுமே உதவும்.
     
  4. இன்றுவரை நம் வாழ்வில் நடந்த அனைத்தும் இறைவனைப் பொருத்தவரை நல்ல செயல்களாகும்.

    இன்று நாட்டை ஆளும் தலைவர்கள், அன்று சிறைவாசம் செய்தவர்கள். அன்றைய சிறைவாசம் இன்று நாட்டிற்குச் சேவை செய்யும் தகுதியைப் பதவி மூலம் கொடுத்துள்ளது. அதனால் சிறைவாசம் தவறு, பதவி சரி என்பதில்லை. சிறைவாசமும், பதவியும் வாழ்வின் இரு இன்றியமையாத பகுதிகளாகும் என்பது ஓர் உண்மை.

    குழந்தை, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துகிறது. குழந்தை சந்தோஷமாக விளையாட வேண்டுமானால், அதற்கான சாப்பாட்டை மற்றொருவர் தயார் செய்ய வேண்டும். “விளையாட்டு சரி, சமையல் தவறு” என்பது குழந்தையின் அறிவு. குழந்தை பெரியவளான பின்னும் "சமையல் தவறு' என்ற கருத முடியாது. வளர்ந்த பின் மனம் பரந்த நோக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விளையாட்டு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் சமையலுக்கும் உண்டு என்ற தெரிந்துகொள்ள வேண்டும். இதுவே வளர்ச்சிக்கு அறிகுறி.

    வாழ்வை லேசாக ஏற்றுக்கொண்டு, மேலெழுந்தவாரியாக வாழும் பொழுது, உணவு நல்லது எனவும், மலம் கெட்டது எனவும் கொள்ளலாம். வளர்ந்த பின், Physiology உடற்கூற்றைப் பற்றிப் படித்த பின் மனித உயிருக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கழிவுப் பொருளை உற்பத்தி செய்வது என்று அறிகிறோம்.

    சந்தோஷத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்; கஷ்டத்தை விலக்க முற்படுகிறோம். இது சாதாரண மனிதனுடைய தெளிவு. மனம் வளர்ந்த பின், மனித வாழ்வின் கூறுகளை அறிவு தெரிந்து கொண்ட பின், சந்தோஷமும், கஷ்டமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனப் புரிகிறது.

    ஓர் உடலில் மலம் உற்பத்தியாகவில்லை என்றால், உயிர் தரிக்காது.

    ஒரு வாழ்வில் கஷ்டம் ஏற்படவில்லை என்றால், சந்தோஷம் ஏற்பட முடியாது.

    நடவை நல்லதாகவும், அறுவடையைக் கெட்டதாகவும் நாம் புரிந்துகொள்வதில்லை. இரண்டும் பயிரிடுவதின் இரு அங்கங்கள்; ஒன்றில்லாமல் மற்றதில்லை.

    “கள்ள மார்க்கட்காரரைக் கண்ட இடத்தில் தூக்கில் போடு”என்று கோஷமிட்டார் நேரு. இது பதவிக்கு வரும் முன். வந்த பின், தேர்தலுக்குப் பணம் வேண்டும். கட்சிக்குப் பணம் கொடுப்பவர்கள் கள்ள மார்க்கட்டில் சம்பாதிக்கின்றார்கள். கோஷத்தை நிறுத்தி விட்டார். பணம் வசூல் செய்வதைச் சர்தார் பட்டேலிடம் கொடுத்து விட்டார். பதவிக்கு வந்து, பொறுப்பை ஏற்கும் முன் பேசிய வீரியம் ஜவகர்லால் நேருவுக்கே, பதவிக்கு வந்த பின் இல்லை. அதனால் கள்ள மார்க்கட் சரி என்பதாகாது. பெரிய பொறுப்பு வரும்பொழுது பெரிய நோக்கம் வந்துவிடும். முன்பு நாம் தள்ளி வைத்ததை, இப்பொழுது மனம் ஏற்றுக்கொள்ளும். இதற்கு அனுபவம், முதிர்ச்சி, விவேகம் எனப் பெயர்.

    வாழ்வில் பல்வேறு வகைகளில் கஷ்டப்பட்டு, பிறகு தெளிந்து, இன்று வசதியாக இருக்கும்பொழுது பழைய நாட்களை நினைக்கப் பிரியப்படுவதில்லை. இது சாதாரண மனிதனுக்குரிய அறிவு. அன்று பட்ட கஷ்டங்களால்தான் இன்று இந்த வசதி வந்துள்ளது என்பது விவேகமுள்ளவர் அறிவது. அன்னையை ஏற்றுக்கொண்டு, வாழ்வை “யோக வாழ்வாக” மாற்ற முயலும்பொழுது புது ஞானம் பிறக்க வேண்டும். அதை மனம் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே யோக வாழ்க்கைக்குரிய அடிப்படை; தேவையான அடிப்படையும் ஆகும். அது உண்மையானால் கீழ்க்கண்டவாறு நாம் கூற வேண்டியிருக்கும்:

    என் சிறு வயதில் தகப்பனாரை இழந்தது என் வாழ்வுக்குத் தேவையானதே.

    எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு உறவினர் விரட்டியதில் உண்மையுள்ளது.

    23 வருஷமாக அடிக்கடி ஆஸ்பத்திரி வாசம் செய்தது எனக்குச் சரி.

    15 வயது மகன் அகால மரணமடைந்தது தவறில்லை.

    என் மீது பொறாமைப்பட்டு, அநியாயமாக என்னை டிஸ்மிஸ் செய்தது திருவுள்ளம்.

    என் சொத்தெல்லாம் பங்காளி பறித்துக்கொண்டதும் தெய்வச் செயலாகும்.

    என் கணவன் என்னை விட்டுப் போனது என் ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவையானது!

    என் வாழ்வில் நடந்த அத்தனை அநீதிகளும், கொடுமைகளும்,துர்அதிர்ஷ்டங்களும் என் ஆன்மீக வாழ்வை வளப்படுத்த இறைவன் அளித்த பரிசு என்பதை உணர்ந்த பிறகே யோக வாழ்க்கைக்குரிய ஞானம் பிறக்கும். எல்லாம் நன்மைக்கே என்றாகும்.
     
  5. சலிப்பு, விரக்தி, ஏமாற்றம், எரிச்சல் ஏற்படும் இடங்களில் எல்லாம் உன் சுபாவம் மாற வேண்டிய இடங்களாகும்.

    நமக்கு முழுத் திறமையுள்ள இடங்களில் ஏமாற்றம் ஏற்படுவது இல்லை. அங்கு நாம் செய்யும் காரியங்கள் முழு நிறைவு பெறும். அதனால் திருப்தி ஏற்படும். திறமைக்கேற்ற அளவு எதிர்பார்த்தால் நிச்சயமாகக் கிடைக்கும்; ஏமாற்றமிருக்காது. மனம் ஆசைக்கேற்ப எதிர்பார்க்கிறது. திறமையின் தகுதிக்கு மீறி எதிர்பார்க்கும்பொழுது ஏதோ ஒரு சமயம் கூடிவருகிறது; பல சமயங்களில் கூடிவருவதில்லை. கூடிவாராதபொழுது ஏமாற்றம் ஏற்படுகிறது. நாம் அதிகமாக எதிர்பார்ப்பது தவறு என்று அறிய வேண்டிய நேரம் அது. பாங்கில் 5,000 ரூபாய் போட்டுவிட்டு, பல முறை பணம் எடுப்பவர், ஒரு சமயம் 800 ரூபாய்க்கு செக் அனுப்பினால், “பணம் இல்லை” என்றவுடன் ஆத்திரப்படுகிறார். போட்ட பணத்தில் 4,500 ரூபாயை பல முறைகளாக அவர்தான் எடுத்திருக்கின்றார். மீதி 500 ரூபாய் இருந்தால், அது எவருடைய தவறும் இல்லை. ஆனால் ரூ.800 செக் பாஸாகவில்லை என்றால் அளவு கடந்த எரிச்சல் வருகிறது. அதற்காகப் பாங்கில் சண்டையும் வருவதுண்டு. இது மனித சுபாவம். இந்த நேரம், “நாம் எரிச்சல்படுவது தவறு. நம் கணக்கில் பணம் இல்லாவிட்டால் பாங்க் மீது கோபம் வரும் சுபாவம் மாற வேண்டும்” என்று நாம் அறிய வேண்டும்.

    நமக்கு விரக்தி வரும் ஒவ்வொரு முறையும் நாம் சிந்தித்துப் பார்த்தால் தவறு நம் மீது இருக்கும். குறை என்று ஒன்று இருந்தால் அதற்கு நாமே கர்த்தாவாக இருப்போம். நம் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களை நினைவுபடுத்திப் பார்த்தால், பிறர் மீது குறைபட்ட நேரங்கள், கோபப்பட்ட விஷயங்கள் நினைவு வரும். உதாரணமாக, B.Sc. Ag. I class வாங்கியவர் தம்மை M.P.S.C.இல் செலக்ட் செய்யாமல் II class வாங்கியவரை செலக்ட் செய்ததற்காக ‘M.P.S.C.ஒழிக’ என்று கோஷம் போட்டுவிட்டு வந்ததாகச் சொல்லும் நேரத்தில், ஒரு பெரிய கம்பெனியில் முதன்மையான ஆபீசராக இருந்தார். இவர் கையால் எழுதிய ஆர்டர்கள் ஏராளம். அவற்றில் 90 பங்குக்கு மேல் தகுதியற்றவரையே வேலைக்கு நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. ‘M.P.S.C. ஒழிக’ என்ற கோஷத்தை இவர் வாழ்க்கை அர்த்தமற்றதாக்கிவிட்டது. வேலை பெற மார்க் மட்டும் போதாது. வேறு பல நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை, தாம் வேலைக்கமர்த்திய ஏராளமான பேர் விஷயத்தில் இவர் கண்டுகொண்ட பின்னும், ‘M.P.S.C. தமக்கிழைத்தது அநீதி’ என்றே இவர் மனம் கூறுகிறது. தமக்கு தகுதியில்லாததை மனம் நாடுவது அநீதி என்று இவரால் இத்தனை நாள் கழித்தும் தெரிந்துகொள்ள முடியவில்லை. மார்க் மட்டும் வேலைக்குத் தகுதியளிக்காது. அழகு மட்டும் திருமணத்திற்குப் போதாது. பேச்சு வன்மை மட்டும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. நூறு பேருக்கு மேல் தாம் அமர்த்தியவர்களில், தாம் M.P.S.C. ஆபீஸ் முன் கோஷமிட்ட சட்டப்படி கோஷம் போடும் உரிமையுள்ளவர்கள் என்பதைத் தம் அனுபவத்தில் கண்ட பின்னும் M.P.S.C. மீது கோபம் வருகிறது. இதுவே மனித சுபாவம். இந்தச் சுபாவத்தை மனிதன் மாற்றிக்கொள்ள வேண்டும். மாற்றிக் கொள்ளாவிட்டால் அது விஸ்வரூபம் எடுத்து, அவர் முன் தீர்க்க முடியாத பிரச்சினையாக நிற்கும்.

    சலிப்பு, விரக்தி, ஏமாற்றம், எரிச்சல், கோபம், குறை ஏற்பட்டு அடங்கிய பின் ஆத்ம சோதனை தேவை; மனமாற்றம் தேவை. அதற்கு உட்பட்டவர்க்கே அன்னையை நோக்கி அடுத்த அடி வைக்க முடியும்; மற்றவர்கள் அதற்கு விலக்கு.
     
  6. இன்று நீ உள்ள நிலை நீயே தேடிப் போய் பெற்றது என்று நீ உணர வேண்டும்.

    “என்னை மெடிக்கல் காலேஜில் சேர்க்கத் தகப்பனார் முடிவு செய்த பின், எங்கிருந்தோ அவர் மைத்துனர், அத்தனை வருஷமாக வாராதவர், திடீரென்று வந்து “வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். அதனால் தகப்பனார் மனம் மாறிவிட்டது; என் வாழ்க்கை தடம் புரண்டது”.

    “நான் பாஸ் பண்ணியபொழுது வேலையில்லாத் திண்டாட்டம் உலகெங்கும் பரவியிருந்தது, நம் நாட்டிற்கு மட்டுமன்று. நான் அதற்குப் பலி. B.A. பாஸ் செய்துவிட்டு மணிலா மார்க்கெட் குமாஸ்தாவாக ரிடையரானேன்; என் தலைவிதி”.

    “என்னைப் பெண் கேட்டவர்கள் அனைவரும் கெஜடெட் பதவியில் ரிடையராகிவிட்டனர். என் தாயாரின் சுயநலத்தால் படிக்காதவருக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைக்குப் பலியானேன்''.

    “எனக்கு அறிவுறுத்துபவர் அன்று எவரும் இல்லை. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் இன்று எவ்வளவு உயரத்தில் இருப்பேன்”.

    இவை போன்ற குறைகளை நாம் பரவலாகக் கேட்டு இருக்கின்றோம். அந்தத் தத்துவ விசாரம் ருசியானது. நான் அதை மேற்கொள்ளவில்லை. இந்த குறிப்புக்குத் தேவையான அளவுக்கே சுருக்கமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இவர்கள் அனைவரையும் பற்றி நமக்குத் தற்சமயம் கவலை இல்லை. இவர்கள் உள்ள நிலையில் நாமும் இருந்தால் நம் இன்றைய நிலையே நமக்கு முக்கியம். அவர்களைக் கொண்டு நம் வாழ்வை நாம் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியுமானால், அதுவே நமக்குப் போதுமானது.

    இரு பிரிவுகளாக இவர்களைப் பிரிக்கலாம். ஒன்று, தெரிந்து தம் வாழ்க்கையை அன்று இதுபோல் அமைத்துக்கொண்டவர்கள் இன்று குறைபடுகிறார்கள். தெரிந்தே அன்று செயல்பட்டதற்குக் காரணம் பல வகைகளில் இருக்கும். அவையெல்லாம் ஒரு வகையில் அன்றுள்ள சிறு சௌகரியத்திற்காகச் செய்தவையாக இருக்கும். இது அவர்கள் மனம் அறியும். அன்று வேண்டுமென்று அவர்கள் நாடிப் போன ஒன்று, இன்று அசௌகரியமாகிவிட்டதாக அவர்கள் புலம்புவதை அவருடன் உள்ளவர்கள் அறிவார்கள்.

    நாம் நம் வாழ்க்கையில் குறைபட்டுக்கொள்ளுமிடங்களில் பாதி இது போலிருக்கும். இதில் உள்ள உண்மை நம் மனத்திற்குத் தெரியும் என்பதால், அதை இன்று மனம் ஏற்றுக்கொண்டால்தான் மேலும் அடுத்த பகுதி புரியும்.

    அடுத்த பகுதி சற்றுச் சிக்கலானது. அதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். ஒரு புதிய தொழிலை ஆரம்பித்தவருக்கு தொழிலில் நல்ல மரியாதை, உயர்ந்த வரவேற்பு. எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம், செல்வாக்கு, அந்தஸ்து எல்லாம் ஓரிரு ஆண்டுகளில் குவிந்தன. ஆனால் இவர் தம் தொழிலைச் சிறிய (clients) வாடிக்கையாளர்களிடம் மட்டும் செய்து வந்தார். 40 கோடிக்குட்பட்ட தொழில்களுக்கே சேவை செய்து வந்தார். நண்பருடைய உற்சாகத்தாலும், தமக்கே ஏற்பட்ட ஆர்வத்தாலும் உலகத்தில் முதன்மையான கம்பனியை வாடிக்கைக்காக நாடினார். எதிர்பார்த்த தடைகள் எதுவுமில்லை. தலைவரிடமே இவருடைய கடிதம் போய்ச் சேர்ந்துவிட்டது. இதன் பின் அவருக்குள் ஒரு போராட்டம். “இவை எல்லாம் மிகப் பெரியன, நிச்சயமாகக் கிடைக்கா” என்று ஒரு குரல், “ஒருவேளை கிடைத்துவிட்டால் என்ன செய்வது?” என்று மற்றொரு குரல். போராட்டமாக ஒரு மாதம் ஓடியது. முடிவாகத் தலைவருடைய ஆபீஸைப் போனில் கூப்பிட்டார். இவர் பெயரை அவர்கள் நினைவு வைத்திருந்தார்கள். எதிர்பாராதவிதமாக நல்ல முறையில் இதமாகப் பேசினார்கள். “தலைவர் உங்களைச் சந்திப்பதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை. உங்கள் கடிதம் அவர் மேஜை மீதிருக்கிறது. இன்னும் 15 நாட்களுக்குள் நாங்களே உங்களைக் கூப்பிட்டு முடிவு சொல்கிறோம்” என்றார்கள். இவருக்கு அளவு கடந்த சந்தோஷம் வருவதற்குப் பதிலாக அளவு கடந்த பயம் வந்துவிட்டது. இந்தத் தலைவரைப் பார்த்துப் பேசும் தைரியமில்லை. ஒரு மணி நேரம் அன்னையிடம் பிரார்த்தனை செய்து “இந்தச் சந்திப்பு கிடைக்கக் கூடாது" என்று வேண்டிக்கொண்டார்.

    மனிதனுடைய மனநிலை இப்படி அடிக்கடி இருப்பதுண்டு. இவர் உண்மையானவர் என்பதால் தம் மனத்திலுள்ளதை மறைக்காமல் கூறிவிட்டார். அந்த அளவு உண்மை பொதுவாக இருக்காது.

    நமக்குத் தவறிய நல்ல விஷயங்கள், கிடைத்த மட்டமான விஷயங்கள், கிடைக்காத அறிவுரைகள், நம் வாழ்வை பாழ்படுத்திய நாட்டின் சூழ்நிலை, தற்செயலாக எமனாக வந்த அவச்சொல் ஆகிய அனைத்திற்கும் நம் மனம் உள்ளூர உறுதுணையாக இருந்திருக்கும். மேலே சொன்ன முதற்பகுதியையே ஏற்றுக்கொள்ள முடியாதவர்க்கு இது விளங்காது. அந்த உண்மையை ஏற்றுக்கொண்டவர், இக்கூற்றைச் சிந்தித்துப் பார்த்தால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையைக் கண்டுகொள்ளலாம்.

    அன்னை இக்கூற்றை வெளியிடுவதால் அன்னை பக்தர்கள் இதை எளிதில் ஏற்றுக்கொள்ளலாம். இதை ஏற்றுக்கொள்வது அவசியம். 

 



book | by Dr. Radut