Skip to Content

பகுதி 1

  1. உறுதி (will) அறிவை ஏற்றுக் கொண்டால் அபிப்பிராயம் ஏற்படுகிறது. உணர்வு மனத்தின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டால் நோக்கம் (attitude) ஏற்படுகிறது. உடல் நோக்கத்தை ஏற்றுக் கொண்டால் சக்தி (power) பிறக்கின்றது.

ஆன்மாவின் அமைதியுடன் ஜீவன் உடலின் சக்தியை ஆமோதித்தால் உணர்வின் நோக்கமும், மனத்தின் அபிப்பிராயமும் அதற்குட்படும். அதற்கு பண்பு எனப் பெயர்.

உறுதி, அறிவு, உணர்வு, நோக்கம் சேர்ந்தவை பண்பு.

மனம், அறிவு, உறுதி (will) அல்லது செயல்திறன் என்ற இரண்டு பகுதிகளையுடையது. உறுதியில்லாத அறிவு பலன் தாராது. அதேபோல் அறிவில்லாத உறுதிக்கும் பலனிருக்காது. மனம் பெற்ற தெளிவை மனத்தின் உறுதி ஏற்றுக் கொள்வது பலன் தரும். அதை அபிப்பிராயம் என்கிறோம். பட்டம் பெற்றால் உத்தியோகம் கிடைக்கும் என்பது பலர் அபிப்பிராயம் என்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மனத்தின் அபிப்பிராயத்தை உணர்வு சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளும், சில சமயங்களில் மறுக்கும். ஓர் இளைஞன் திருமணத்தால் இலாபம் பெறக்கூடாது என்ற அபிப்பிராயம் உள்ளவனாக இருந்து, திருமணம் செய்யும்பொழுது அபிப்பிராயத்தின் படியும் நடக்கலாம், மாறாகவும் நடக்கலாம். மாறாக நடந்தால் உன் அபிப்பிராயம் என்ன ஆயிற்று என்று கேட்பார்கள். அபிப்பிராயம், அபிப்பிராயமாகவே நின்றுவிட்டது, செயல்படவில்லை என்கிறோம். மனத்தின் அபிப்பிராயத்தை, உணர்வு ஏற்றுக் கொண்டால், அதற்கு வலிமை அதிகம். அப்பொழுது அது நோக்கமாகிறது. நோக்கம் இலாபமாக இருந்து, அபிப்பிராயம் இலட்சியமாக இருந்தால் நோக்கமே ஜெயிக்கும்.

உணர்வு ஏற்றுக்கொண்டதை உடலும் ஏற்றுக்கொண்டால் அது பண்பாகிறது. ஒரு வெள்ளைக்கார ஜட்ஜ் முன்னால் ஆந்திராவில் ஒரு மிராசுதாரரைக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்டார். அவர் சொத்து பெரியது. சட்டம் எதிரிக்குச் சாதகமாக இருக்கிறது. ஒரு பொய் சொன்னால் சட்டம் மிராசுதாரர் கட்சி பேசும். மிராசுதாரர் வக்கீல் தன்னால் இயன்ற அளவு வாதம் செய்த பின்னும், தம் கட்சிக்காரர் ஒரு பொய் சொல்ல மறுப்பதால் கேஸை இழந்துவிட்டார். சொத்தே போனாலும் சரி ஒரு பொய் சொல்ல மாட்டேன் என்ற மிராசுதாரரை ஆச்சரியமாகப் பார்த்த ஜட்ஜ் தம் வாழ்க்கைக் குறிப்பில் அதை எழுதி இருக்கின்றார். அதைப் பண்பு என்கிறோம்.

மனம் புரிந்து கொள்வதை அறிவு எனவும், மனத்தின் உறுதி ஏற்றுக் கொண்ட அறிவை அபிப்பிராயமெனவும் (opinion), உணர்வு ஏற்றுக்கொண்ட அபிப்பிராயத்தை நோக்கம் (attitudes) எனவும், உடலும் ஏற்றுக் கொண்ட நோக்கத்தைப் பண்பு (values) எனவும் கூறுகிறோம்.

******

  1. வேண்டியவர் மீதுள்ள நல்லெண்ணம் சுயநலமான நல்லெண்ணமாக இருக்க முடியும். அனைவரிடமும் உள்ள நல்லெண்ணமே தன்னலமற்ற நல்லெண்ணமாகும்.

தன்னலமற்ற நல்லெண்ணமே நல்லெண்ணம்.

*******

  1. பிறருக்கு நீ சொல்லும் புத்திமதி உனக்கே பொருந்தும் என்று தெரியாமலிருப்பது மனம் தன் கண்களை மூடிக் கொண்டிருப்பதாகும்.

புத்திமதி சொல்பவருக்கு மட்டுமே பயன்படும்.

********

  1. பணம், சுயநலம், பொய் வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றை விட்டுவிட முயல்பவர்கள் சில சமயங்களில் பிறருக்காக இவற்றை நாடுகிறார்கள். பிறருக்காக என்று நினைத்தாலும், உண்மையில் தம் ஜீவனின் ஆழத்தில் தமக்காகவே இவற்றை நாடுகிறார்கள்.

பிறருக்கு என்பது பிறருக்காக, செய்வதெல்லாம் தனக்காகவே. நாம் விட்டு விட்ட குணங்கள் நம் ஜீவனின் ஆழ்ந்த பகுதிகள் பிறருக்காக என்று சாக்குச் சொல்லி பின்பற்ற முயலும். அதையும் செய்ய, மறுக்க முயன்றால் இவருடைய உண்மை தெரியும். சுயநலத்தைக் கைவிட முன் வருபவர்கள் குறைவு. அவர்களுக்கும் ஒரு நிலை தாண்டியவுடன் சுயநலத்தை விடுவது சுலபமன்று. இந்தக் கடைசிக் கட்டத்தில் தூய்மையுடனிருப்பது கடினம். இருந்தால் வெற்றி கிடைக்கும். அப்படியிருந்தால் இதுவரை அவர் சேகரம் செய்துள்ள பொருள், உரிமை, சலுகை, வசதி ஆகியவற்றில் பெரும் பகுதியை அவர் இழந்துவிடுவார். அதனால்தான் பெரும்பாலோர் இம்முயற்சியில் தோல்வியடைகின்றனர்.

********

  1. உடலுக்குத் தெளிவேற்பட்டால் எதையும் செய்ய முடியும். உனக்கு எந்த நிலையில் தெளிவிருக்கிறது (மனம், உணர்வு, உடல்) என்று கண்டு கொண்டால், அடுத்த நிலைக்குச் செல்ல முயலலாம்.

உடல் பெற்ற தெளிவே பலன் தரும்.

இவற்றையெல்லாம் நான் கண்ணை மூடிக் கொண்டு செய்வேன், இந்த வேலை எல்லாம் எனக்குச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதுபோல என்று சொல்லக் கூடியவை நம் வாழ்வில் உண்டு. நீண்ட நாள் அனுபவமுள்ள வேலைகள் இதுபோல் அத்துபடியாகியிருக்கும். ஒரு வேலையைக் கற்றுக் கொண்டு செய்யும்பொழுது நின்று, நிதானித்து, ஒன்றையும் மறக்காமல் செய்தால் அது கூடி வரும்.

ஆனால் செய்யும் போது டென்ஷனிருக்கும். பரீட்சை எழுதும்பொழுதுள்ள உணர்வு இது. நாம் ஆசையாகச் செய்யும் வேலைகளுள் பலவற்றில் முடிந்தபிறகுதான் நிச்சயமாகச் சொல்ல முடியும். திறமை இருந்தாலும், முடிவை நிர்ணயமாகச் சொல்ல முடியாது. இருபது வருஷம் சர்வீஸ் ஆனவர் ஒரு வாரம் லீவு எடுக்க இதுபோன்ற நிலைமையிலிருப்பார். பிரசித்தி பெற்ற பேச்சாளருக்கு உள்ளூர் மன்றப் பேச்சு, வீணை வித்வானுக்கு ஒரு கீர்த்தனை வாசிப்பது, அனுபவமான டைப்பிஸ்டுக்கு 5 பக்கம் டைப் செய்வது போன்றவை அத்துபடியான வேலைகள். அவர்களுக்கு அந்த நிலையில் உடலில் தெளிவு இருக்கிறது என்று கொள்ளலாம். இது ஒன்பதாம் கட்டத் திறமை.

மனம், உணர்வு, உடல் ஒவ்வொன்றையும் மூன்று பாகங்களாகப் பிரித்து 9 கட்டங்கள் ஏற்படுத்தினால் முதற் கட்டம் மனத்திலும், 9ஆம் கட்டம் உடலிலும் அமையும். முதற் கட்டம் யோசனை செய்தபடி காரியம் செய்யும் நிலை. ஒன்பது அத்துபடியான நிலை. நாம் பல விஷயங்களிலும் பல கட்டங்களில் இருக்கின்றோம். காரியங்கள் முடிந்துவிட்டால் பிரார்த்தனை செய்வதில்லை. தடையேற்பட்டால் பிரார்த்திக்கின்றோம்.

ஏதாவது ஒரு விஷயத்தில் ஒன்பதாம் கட்டத்திலிருந்து விஷயம் அத்துபடியானவர்கள் அன்னையை வணங்க ஆரம்பித்தால், எட்டாம் கட்டக் காரியங்களுக்கும் அது போன்ற பலன் ஏற்படும். எடுத்த பத்து கேசில் நாலு ஜெயிக்கும் பழக்கமுள்ள வக்கீல் அன்னையிடம் வந்த பின் 9 ஜெயிக்கிறது. சில சமயங்களில் பத்தும் ஜெயிக்கின்றது என்றவுடன் திருப்திபடுவார். அவர் உள்ளூர் கோர்ட்டிலிருந்து ஜில்லாக் கோர்ட்டுக்குப் போய் அங்கும் அதேபோல் கேஸ் நடத்த முயன்றால், செய்தால் அது பலிக்கும். தொடர்ந்தும் முயற்சியை மேற்கொண்டால், தொடர்ந்து பெரும் பலனிருக்கும். பலனைக் கண்டவுடன் அது எந்த அளவிலிருக்கிறது, அடுத்த கட்டத்திற்குரிய முயற்சி எது, அங்குப் போக தடை எது என அறிந்து தடையை விலக்கி, முயற்சியை மேற்கொண்டால், தொடர்ந்த முன்னேற்றம் இடையறாது வரும். தானே வரும் முன்னேற்றம் தாமதமாகவும், தெளிவால் ஏற்படுவது உடனேயும் பலன் தரும்.

அன்னையை நினைத்துச் செய்யும் காரியங்களில் நம்பிக்கை முழுமையாக இருக்கும்பொழுது முதற் கட்டச் செயல்கள் ஒன்பதாம் கட்டச் செயல்களாக நடப்பதைக் காண்கிறோம். ஆனால் அது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று தீர யோசிப்பதில்லை. அது போன்று நடக்கும்பொழுது அன்னை நினைவு அளவு கடந்து மேலிட்டும், நம் குறைகள் தாமே விலகியும் இருக்கும். தாமே சந்தர்ப்பத்தால் விலகியும் இருக்கும். தாமே சந்தர்ப்பத்தால் விலகிய குறைகளை முனைந்து முழுமையாக விலக்கினால், தானே மேலிட்ட அன்னை நினைவை விரும்பி மனம் நாடினால் ஒரு நாளில், பல காரியங்கள், தங்கள் இன்றைய மூன்றாம் கட்டம், ஐந்தாம் கட்டம் போன்றவற்றிலிருந்து ஒன்பதிற்குப் போவதைக் காணலாம். காரியம் கூடி வருவது நல்லது. அதை விட அன்னை நம்மை நாடி வருவதால் காரியம் பூர்த்தியாவதால், அது அன்னை நம்மை அணைக்கும் செயல். நாமே விரும்பி, நம் குணங்களை விட்டு, எல்லாக் காரியங்களிலும் அன்னையை விரும்பி நாடினால், அன்னை நம்மை விட்டு அகல மாட்டார். காரியங்கள் இரண்டாம்பட்சமாகும். காரியங்களே முக்கியமானாலும் எந்தக் காரியத்தையும் ஒன்பதாம் கட்டத் தெளிவில் செய்ய நாம் பயின்று பலன் பெறலாம். காரியங்களைக் கருதாது, அன்னையை மட்டும் கருதும் நிலை, அற்புதமான மனநிலை.

*******

  1. உன்னை ஏமாற்றவே தீய சக்திகள் உலவுகின்றன. எந்த முறையில் அவற்றின் வலையில் நீ விழுவது வழக்கம் என்று நீ கண்டு கொள்.

தீயசக்திகளின் ஏமாற்றத்தை அறிவது பலம்.

கூட்டமான இடங்களில் பிக்பாக்கட்கள் நிறைந்து இருப்பார்கள். கோர்ட், செக்ரடேரியட், பாங்க் போன்ற இடங்களுக்கு அதிக விவரம் தெரியாதவர்களை எதிர்ப்பார்த்து ஏமாற்று பேர்வழிகள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். காட்டு வழியே சென்றால் முள் நிறைந்திருக்கும், கவனமாக இருந்தாலே குத்தும்,

கவனமில்லாவிட்டால் காலே போய்விடும் என்பவை வாழ்க்கையில் நிறைந்தவை. பெரிய அதிர்ஷ்டம் திடீரென வந்தவர்களைக் கேட்டால், அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் அசந்தர்ப்பங்கள் வருவதை அவர்கள் அனுபவப்பூர்வமாகச் சொல்வார்கள். அன்னையை அழைத்து, பெரிய நல்ல காரியங்கள் நடக்க இருக்கும் நேரத்தில் க்ஷண நேரத்தில் மாற்று நடந்து காரியம் கெட்டு விடும். பத்து லக்ஷம் தொழில் நடத்தியவருக்கு 4 கோடி வியாபாரம் கூடி வந்தது. தானே வந்தது. அவர்கள் சந்தித்துப் பேசும் நேரம், அவருடைய பார்ட்னர் சமாதிக்குப் போய் காரியம் முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வந்தார். அந்த நேரம் வலிப்பு வந்த ஒருவர் சமாதியருகே விழுந்துவிட்டதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகக் கார் உதவி தேவை என்று ஒருவர் வந்து கேட்டார். கேட்டவர் தம் கார் ஷெட்டில் 6 கார்கள் வைத்திருக்கிறார். ஷெட் எதிரேயிருக்கிறது. பார்ட்னருக்குத் தயக்கம். எப்படி உதவியில்லை என்பது தயக்கம். கொடுத்தால் வலிப்புள்ளவன் காரில் உட்கார்ந்தால், தீயசக்திகள் நுழைய வழி ஏற்படும். இன்னும் 1 மணி நேரத்தில் வலிய வந்த பெரிய ஆர்டர் கையெழுத்தாக இருக்கிறது. காரைக் கொடுத்தார். ஆர்டர் ரத்தாகிவிட்டது. இது தீய சக்திகள் செய்யும் சோதனை என்றறிந்தும், இல்லை என்று சொல்லத் தயக்கப்பட்டதால் வந்த விளைவு இது.

இந்தச் சோதனைகள் எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றின் அடிப்படை ஒன்று தான். உன்னால் விலக்க முடியாத மனிதர்கள், நிகழ்ச்சிகள் மூலம் வரும். தீய சக்திகள்ஏராளமாக உலவுவதுபோல் அன்னைக்குச் சேவை செய்ய (good being) நல்ல சக்திகளும் உலவுகின்றன. அவையும் இதேபோல் நமக்கு நல்ல சந்தர்ப்பங்களை முக்கியமான நேரங்களில் அளித்தபடியிருக்கும். அவற்றை ஏற்றுக்கொள்ளுதலோ, விலக்குவதோ, நம் பங்கு, நம் மனநிலையைப் பொருத்தது.

சுமார் 35 வருஷத்திற்கு முன் ஓர் இலட்ச ரூபாய் ரொக்கம் வைத்திருப்பவரிடம், அவரிடம் ரொக்கம் இருப்பது தெரியாத ஒருவர், அந்த ரொக்கம் வருஷத்திற்கு இலட்ச ரூபாய் சம்பாதிக்கும் திட்டத்தைப்

பேச்சுவாக்கில் சொன்னார். தாம் அன்னையை ஏற்றுக் கொண்டவுடன், ஆசிரமத்திலிருந்து வந்தவுடன், இது வருகிறது என்று அவர் அறியவில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டார். இரண்டு நாட்களுக்குள் இவரிடம் ரொக்கமும் இருப்பது தெரிந்து, அதை முழுவதும் அழிக்கும் வழியை அழகாக இருவர் வந்து விவரித்தார்கள். பக்தர் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டார். ஒன்று மூலதனம் பத்திரமாகவும், முயற்சியால் பெரிய இலாபம் வரும் வழி. மற்றது ஏமாற்றுப் பேர்வழி சொல்லும் பேராசைக் கதை. மனம் பேராசையை நாடியது.

சர்க்கார் உத்தியோகத்தில் கெஜட் பதவியிலிருந்து ரிடையரானவர்க்கு இவர் இலாக்காத் தலைவருக்கு மேற்பட்டவருடைய உத்தியோகத்தைக் கொடுக்க நண்பர் முன் வந்து, நண்பர் தொலைதூரம் பிரயாணம் செய்து இவரை அழைத்துப் போய் உத்தியோகம் கொடுப்பவரிடம் அறிமுகப்படுத்த வந்தார். ரிடையரானவர் நண்பரை சந்தித்து வேறொரு நாள் போகலாம் என்று கூறினார். வந்தது போய்விட்டது.

ஆயிர ரூபாய் உத்தியோகத்திலுள்ளவருக்கு ரூ. 20,000 மூலதனம் செய்து பெரிய கம்பெனியில் பங்குதாரராக இருக்கும் வாய்ப்பு வந்தது. ஏற்றுக்கொண்டார். 10 வருஷத்தில் தினமும் 20,000 சம்பாதித்தார்.

பிரபலமான பேராசிரியரை, நீதிபதி உத்தியோகம் வேண்டாம் எனப் பல முறை சொல்லிய வக்கீல் M.L.C ஆக நிற்கும்படிக் கேட்டார். பேராசிரியர் இது அன்னையைப் பார்த்தவுடன் கிடைத்தது என்பதை அறியாமல் தயங்கினார். சந்தர்ப்பம் விலகியது. வக்கீல் மத்திய மந்திரியானார். சிபாரிசு செய்தவர் மத்திய மந்திரியாகவும், கவர்னராகவுமானார். இவருக்கு வந்தது, இவர் மீது நல்லெண்ணமுள்ளவருக்குப் போய்விட்டது.

நமக்குக் கோபம் வருமென்றால், நல்ல சந்தர்ப்பத்தில் தீய சக்திகள் கோபத்தைக் கிளப்பும். மானஸ்தனானால்

மானப்பிரச்னையைக் கிளப்பும், பேராசைக்காரனானால், ஆசையைக் கிளப்பும், எதை நம்மால் மறுக்க இயலாதோ அதை நம் முன் தீயசக்திகள் வைக்கும். நம் குணத்தைக் கருதாது, ஏன் இந்நிகழ்ச்சி நடக்கிறது என்று நாம் யோசனை செய்தால், அன்னையை மட்டும் நினைத்தால், தீய சக்திகள் விலகும். நம் குணத்திற்கு இடம் கொடுத்தால் அவை வெற்றி பெறும்.

நல்ல காரியங்கள் நடக்கும்பொழுதும், நம்மால் மறுக்க முடியாதவை குறுக்கிடும். அந்த நேரம் நாம் விழிப்பாக இருந்து, ஏன் இந்த நல்ல காரியம் நடக்கிறது என்று சிந்தித்தால், தவறுதல் வாராது.

*******

  1. பிரகிருதி எனும் இயற்கை இன்று செயல்படுகிறது. அதனால் சிருஷ்டிக்க முடிகிறது. அதற்குரிய சட்டங்களையும் அமைப்பையும் இயற்கை உற்பத்தி செய்கிறது. சைத்தியப்புருஷன் இன்று மறைந்துள்ளது. வெளியில் வந்து தனக்குரிய அமைப்பையும், சட்டங்களையும் ஏற்படுத்திக் கொண்டால் அதனால் சிருஷ்டிக்க முடியும்.

பிரகிருதி, ஜீவாத்மா, சைத்தியப் புருஷன் ஆகியவை சிருஷ்டிக்கலாம். சைத்தியப் புருஷனுடைய சிருஷ்டியே நாம் நாடுவது. ஜீவாத்மா இன்றுள்ள நிலையில் அதற்கு மாற்றம் கிடையாது. அதனால் இன்று சிருஷ்டிக்க முடியாது. அதற்குரிய சட்டங்களையும், அமைப்பையும் ஏற்படுத்தி நம் கரணங்களில் செயல்பட அனுமதித்தால் ஆன்மீகத் திருவுருமாற்றம் ஏற்படும்.

ஓர் ஆபீஸில் பத்து வருஷம் வேலை செய்தவருக்கு அது போன்ற வேலையைத் திறமையாகச் செய்ய முடியும். அந்த வேலையைச் செய்து முடிக்கும் அமைப்பையும், சட்டங்களையும் அவர் பின்பற்றுவார். ஆபீஸ் பைலை வீட்டில் யாரும் தொடக் கூடாது, பைல் பார்க்கும்பொழுது T.V. போடக் கூடாது, ஆபீஸ் போகப் புறப்பட்டால் அவர் புறப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், ஆபீஸ் விஷயங்களைப்

பிறரிடம் அவர் பேசுவதில்லை என்பன போன்ற சட்டங்களையும், செயல்படும் அமைப்பையும் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். நம்முடைய பாஷையில் இது vital work உணர்ச்சிபூர்வமான வேலை. எழுத்தாளருடைய வேலை mental workஅறிவால் செய்யக்கூடியது. அவர் தம் எழுத்துச் சிறக்கும் வகையில் வீடு, ஆபீஸ், மனநிலை இவற்றிற்குரிய அமைப்பையும், சட்டங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பார். எலக்ட்டிரீஷியன் செய்வது physical work கையால் செய்யும் காரியம். தம் வேலை சிறக்கும்படித் தம் சாமான்களையும், செயல் முறைகளையும், அதற்குண்டான கட்டுத்திட்டங்களையும் அவர் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

உடலால் உழைப்பவரும், உணர்ச்சியால் உழைப்பவரும், அறிவால் செயல்படுபவரும் தங்களுக்குரிய சட்டங்களையும், அமைப்பையும் வகுத்துக் கொண்டனர். இவை மூன்றும் பிரகிருதி எனும் இயற்கையின் செயல்.

இதேபோல் சைத்தியப் புருஷனுக்கு வேண்டிய அமைப்பும், சட்டமும் இன்று நம்மிடையில்லை. சைத்தியப்புருஷன் மறைந்திருப்பதால் அவையில்லை. அவையில்லாததால் சைத்தியப்புருஷன் மறைந்து உள்ளான். அவனுக்குரிய அமைப்பு சமர்ப்பணம், சட்டம் கரணங்கள் விலக்குதல். மனம் சிந்தித்தால் சைத்திய புருஷன் விலகுவான். அவன் செயல்பட மனம் மௌனமாக வேண்டும். உடல் சௌகரியத்தை நாடக்கூடாது, வாய் குறை சொல்லக்கூடாது. செயல்கள் சமர்ப்பணமாக வேண்டும் என்ற சட்டங்களையும் அதற்குரிய அமைப்பையும் ஏற்படுத்தினால் சைத்தியப் புருஷன் வெளிவந்து செயல்படுவான்.

இதற்கடுத்த கட்டம் ஜீவாத்மா வெளிவந்து செயல்படும் நிலை. இன்று மனம் எண்ணத்தால் செயல்படுகிறது. ஜீவாத்மா வெளிவர மனம் ஜோதியால் நிரம்ப வேண்டும், உள்ளம் தெய்வீக அன்பால் நிரம்ப

வேண்டும், உடல் தன் பழக்கங்களை விட்டு ஆன்மீகக் கருவியாக விழைய வேண்டும். அந்த அமைப்பும், சட்டமும் ஜீவாத்மா நம் வாழ்வில் செயல்பட உதவும். அதற்கு ஆன்மீகத் திருவுருமாற்றம் என்று பெயர்.

********

  1. மனம் செயல்பட விழையும்பொழுது மன உறுதி willஉற்பத்தியாகிறது.

உறுதி என்பது செயலாற்றும் விருப்பம்.

மனத்தின் பகுதிகள் இரண்டு : அறிவு, உறுதி. அறிவு தெளிவையுடையது. அதற்கு விவரம் தெரியும். விவரம் தெரிவதால் காரியத்தைச் செய்யும் உறுதி வந்துவிடாது. உறுதி வேறு, தெளிவு வேறு. 10 வருஷம் கோர்ட்டிலிருந்த வக்கீலைக் கூண்டில் ஏற்றிக் கேள்வி கேட்டால், சாதாரணக் கட்சிக்காரன் குழம்புவதுபோல் திகைப்பதைக் காணலாம். ஆயிரம் பேரைக் கூண்டில் வைத்துக் கேள்வி கேட்பது சட்டத்திலுள்ள தெளிவு. கூண்டில் ஏறிப் பதில் சொல்வது மன உறுதி. இலட்சக்கணக்காகக் கடன் வழங்கிய பாங்க் மானேஜருக்குத் தொழிலைப் பற்றிய தெளிவு அதிகம். அதனால் அவருக்குச் சொந்தத் தொழில் செய்யும் திறமை உண்டு என்று சொல்லமுடியாது. தெளிவுள்ளவருக்குச் செயல்பட ஆசை ஏற்பட்டால் உறுதி உற்பத்தியாகும். உறுதி சிறிது சிறிதாக வளர வேண்டும். உறுதி வேண்டுவோர் செயல்பட விழைய வேண்டும்.

*******

  1. உடல் தான் பெற்ற சொரணை (sensitivity) மூலம் செயல்படுகிறது.

சொரணை மட்டுமே கருவி.

மறுப்பு, வெறுப்பு, சொரணை என்ற மூன்று நிலைகளில் மனம் செயல்படுகிறது. மனம் சில விஷயங்களை விரும்பி ஏற்கிறது. சிலவற்றை மறுக்கிறது. குடியிருக்கும் வீட்டை மாற்றப்

பிரியமில்லாதவர் அக்கருத்தை மறுக்கிறார். ஆனால் அதைப்பற்றிப் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருப்பார். அதுவே அவர் சொந்த வீடானால் அதை வாடகைக்கு விட்டுவிட்டுப் போகலாம் என்ற கருத்து அவருக்கு வெறுப்பு ஏற்படுத்துமானால் அதைப் பற்றி பேசவே அனுமதிக்கமாட்டார். மனம் அதை வெறுக்கும். ஊரில் தம்முடைய எதிரிக்குத் தம் சொந்த வீட்டை வாடகைக்கு விட வேண்டும் என எவராவது பேசினால் அவருக்கு ஆத்திரம் தாங்காது. சண்டைக்கு வந்து விடுவார். அது அவருக்குச் சொரணையுள்ள இடம். அதுபோன்ற பேச்சை எடுத்தாலே மனம் கொதிக்கும். அதை ஆங்கிலத்தில் sensitivity என்றும் தமிழில் சொரணை என்றும் கூறுகிறோம்.

அதேபோல் உணர்வுக்கும் மறுப்பு, வெறுப்பு, சொரணையுண்டு. குடும்பத்தைப் பற்றியோ ஊரைப்பற்றியோ குறைவாகப் பேசுவதை உணர்வின் சொரணை தாங்காது. தானே கை நீண்டு விடும். உடலுக்கும் மறுப்பு, வெறுப்பு, சொரணையுண்டு. கசப்பான பொருளை நா வெறுக்கிறது. குடும்ப ரகஸ்யங்களை வெளிப்படையாகப் பேச நேர்ந்துவிட்டால் காது கேட்டுக் கொள்ள முடியாமல் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறது. உடல் தன் சொரணையை வெளிப்படுத்தும் முறை.

எந்த விஷயங்களில் மனிதனுக்கு உடலளவில் சொரணை ஏற்பட்டுள்ளதோ அதே அளவில் அவன் வாழ்வு பாதுகாக்கப்படும். அது இல்லாதவன் வாழ்வு சீரழியும். அவனைச் சொரணையில்லாதவன் என்பார்கள். உயர்ந்த பண்புகளை உடல் ஏற்று அவ்விஷயங்களைப் போற்றி சொரணையுடனிருந்தால் அப்பண்புகளுக்கேற்ற நிலை அவருக்கு வரும். பரமஹம்ஸருக்குப் பணம் பகை என்பது உடல் அளவில் சொரணையாக மாறி, அவர் மீது தங்கம்பட்டாலே உடல் லஜ்ஜைப்படும் அளவுக்கு வந்துவிட்டது.

மறுப்பு, வெறுப்பு, சொரணை என்பவை விலக்க வேண்டியவற்றைப் பற்றிய உணர்வுகள். விரும்ப வேண்டியவற்றைப் பற்றிய அதே உணர்வுகளுக்கு ஏற்பு, விருப்பு, சொரணை எனப் பெயர். மனம்

விரும்பி ஏற்கிறது. அதிக விருப்பத்தால் அதை விரும்பி நாடுகிறது. அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே மனம் புளகாங்கிதமடைகிறது. உத்தியோகத்தில் இருப்பவருக்குப் பிரமோஷனும் அரசியல்வாதிக்குப் பதவியும், அனைவருக்கும் பணமும் இவ்வுணர்வுகளை ஏற்படுத்தும். திருமணத்திற்காக நிற்பவர்களுக்குத் திருமணம் இதே உணர்வுகளை உண்டு பண்ணும். மனத்தையும் உணர்வையும் தாண்டி உடல் இந்நிலைகள் ஏற்பட்டால், அக்காரியங்கள் அதிவிரைவில் நடைபெறும். அதே நிலையில் அன்னையை ஏற்பவருக்கு அவருடைய உடலும் அன்னையின் பொறுப்பில் வந்து, இன்றைய உலகில்லாத அற்புத உணர்வுகளையும், அபூர்வ நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்தும்.

********

  1. ஒரு காரியத்தைச் செய்ய மனம் உண்மையாக விழையுமானால், அதற்குரிய ஆன்மீக முயற்சி அதைப் பூர்த்தி செய்யும்.

ஆன்மா உண்மையான தேவையைப் பூர்த்தி செய்யும்.

ஒரு காரியத்தை முடிக்க மனத்தாலும், உணர்வாலும், உடலாலும் உழைத்துப் பூர்த்தி செய்ய வேண்டும். அவற்றுள் குறையிருந்தால் அது குறையாகவே இருக்கும். வீடு கட்டியவர்கள் இதை நன்கு அறிவார்கள். ஆன்மீக முயற்சியுள்ளவர்க்குக் காரியம் மனத்தளவிலேயே முடிந்துவிடும். எல்லோரும் உடலாலும் உழைத்துப் பூர்த்தி செய்ய வேண்டியது, ஆன்மீக முயற்சியுள்ளவர்க்கு மனத்தின் முயற்சியிலேயே முடியும் என்ற உண்மையை இக்கூற்று வலியுறுத்துகிறது. வீடு கட்ட மனம் உண்மையாக விழையுமானால், அவர் மனத்தின் முயற்சியைச் சமர்ப்பணத்தால் ஆன்மீக முயற்சியாக்கி விட்டால், உணர்வாலும், உடலாலும் எடுக்க வேண்டிய முயற்சிகள் தாமே முடிவு பெறும். அதுவே ஆன்மீகத்திற்குரிய முயற்சியின் சிறப்பு. அவர்களுக்கு உடல் உழைப்பும் இருந்தால் காரியம் பெரிய அளவில் பூர்த்தியாகும். அன்னையின்

அருள் ஆன்மீக முயற்சியைவிட உயர்ந்தது. மனம் உண்மையாக விழையும் காரியத்தை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால் அன்னை நம் சூழலில் உள்ள அனைவரையும், அனைத்தையும் நம் காரியத்தைச் செய்யும்படிப் பணிப்பதைக் காணலாம். சமர்ப்பணத்தை ஆன்மாவுக்குச் செய்வது ஆன்மீக முயற்சி. சமர்ப்பணத்தை அன்னைக்குச் செய்வது அருளை அழைப்பதாகும்.

வாழ்வு செயலுக்குரிய பலனை அளிக்கிறது. ஆன்மீகம் மனத்தின் முயற்சிக்கு உடலுக்குரிய பலனை அளிக்கிறது. அன்னை நினைவின் பவித்திரத்திற்குக் கடைசி கட்டப் பலனை அளிக்கின்றார். வீடு கட்ட வேண்டிய நினைவும், அதற்குரிய சந்தர்ப்பமும் இல்லாதவர்க்குத் தானே மனை அமைந்து, குறுகிய காலத்தில் பொதுவாக வீடு கட்டுவதிலுள்ள எந்தத் தடையுமின்றி அதற்கெதிரான சௌகரியங்களுடன் கட்ட முடிந்தது. அவர் மனம் அன்னையில் மட்டும் லயிக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டபொழுது தானே நிகழ்ந்தது இக்காரியம்.

*******

  1. குழந்தை தெய்வீகமானது. குழந்தையின் தெய்வீகம் பூர்த்தியாக நாம் குழந்தையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக தெய்வீகத்திற்கு நாம் கட்டுப்பட வேண்டும். மனைவியின் ஆன்மாவுக்குக் கட்டுப்படும் மனிதன் தன் ஆன்மாவை அவள் வாழ்வில் பூர்த்தி செய்து கொள்கிறான்.

குழந்தையின் தெய்வீகத்தை நாம் ஏற்றுக் கொள்வதால், குழந்தை பெற்றோரைவிட உயர்ந்த நிலைக்கு வர முடிகிறது. அந்தச் சுதந்திரத்தை குழந்தை தவறாகப் பயன்படுத்தினால் கண்டிக்கின்றனர். பெற்றோர் குழந்தையைக்

தாழ்ந்ததிலுள்ள தெய்வீகத்தை உயர்ந்தது ஏற்றுக் கொள்வதால் உலகம் நாகரீகமடைந்து பண்பு பிறக்கின்றது.

மேலெழுந்த மனத்திலுள்ள புருஷன், ஆழ் மனதிலுள்ள சக்திக்குச் சரணடைவதால், புருஷன் உயர்ந்து ஈஸ்வரனாக முடிகிறது.

பிறர் தெய்வீகம் நம் வாழ்வைப் பூர்த்தி செய்யும்.

புருஷன் என்பது சாட்சியாகச் செயல்படுகிறது. ஈஸ்வரன் சக்தியைத் தன்னிச்சைப்படிச் செயல்பட வைப்பது. புருஷநிலையிருந்து ஆன்மா ஈஸ்வர நிலையை அடைய தன்னைச் சக்திக்குச் சரண் அடையச் செய்து சக்தியின் திருவிளையாடல்களைச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முழு அதிகாரமிருந்தும் புருஷன் தன் அதிகாரத்தைச் செலுத்தாமல், தன் அதிகாரத்திற்குட்பட்ட சக்தி எனும் பிரகிருதிக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதால், ஆழ்ந்த மனம் சிறந்து, அதனால் வாழ்வு உயர்ந்து, புருஷ நிலையும் உயர்ந்து ஈஸ்வர நிலையை எட்டுகிறது.

மனிதனைப் படைத்த இறைவன், தன்னிஷ்டப்படி மனிதனை நடத்தாமல், அவனிஷ்டப்படி நடக்கச் சம்மதித்து, அவன் போகும் வழிக்கெல்லாம் சென்று, பொறுமையாக இருப்பதால், மனிதன் தெய்வமாக உயர்கிறான்.

உலகம் நாகரீகம் அடைந்ததும், புருஷன் ஈஸ்வரனாக மாறியதும், பெரியது சிறியதற்குத் தானே விரும்பி அடங்கி நடப்பதால்தான். அதுவே மனிதன் தெய்வமாகும் வழியாகும்.

******

  1. பிரபஞ்சம் முழுவதையும் உணரத் தேவையான எல்லாச் சூழ்நிலைகளும் மனிதனுக்குண்டு.

மனிதனுக்கு பிரபஞ்ச வீச்சுண்டு.

ஒரே நிலையிலுள்ள இருவர் முப்பது ஆண்டு கழித்துச் சந்தித்தால் ஒருவர் ஆரம்பநிலையிலேயே சற்று வசதியாகவும், அடுத்தவர் சமூகத்தில் உயர்மட்டத்திற்கும் சென்றிருப்பதுண்டு. இவர்களிருவரும் தங்கள்

வாழ்க்கை நிகழ்ச்சிகளை மனம் விட்டுப் பேசினால் ஒருவர் தொடர்ந்த முயற்சியுடையவராகவும், அடுத்த வெற்றி பெற இன்றிருப்பவற்றையெல்லாம் விட நேர்ந்தாலும் பரவாயில்லை என்று செயல்படுவராகவும், தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கவனித்து அவற்றால் எப்படிப் பயன்படலாம் என்ற மனப்பான்மை உடையவராகவும், நல்லது என்றால் எதையும் செய்யத் தயாராக இருப்பவராகவும், எந்த ஊருக்குப் போகவும் தயாராக இருப்பவராகவும், எந்தப் புதிய தொழிலையும் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவராகவும், அடுத்தவர் முயற்சியற்றவராகவும், இருப்பதைவிட மனமில்லாதவராகவும், தம் சௌகரியம் தவிர எதையும் கவனிக்காதவராகவும், தமக்கு மட்டும் நல்லதானவற்றை மட்டும் செய்யும் மனப்பான்மை உடையவராகவும், இருக்கும் இடத்தை விட்டு நகரப் பிரியமில்லாதவராகவும், எதையும் புதிதாகக் கற்றுக் கொள்ள மனமில்லாதவராகவும், இருப்பது தெரியும்.

ஒரே சூழ்நிலையில் பிறந்து வேறு வேறு மனப்பான்மையுடையவர்களில் ஒருவர் உள்ளூரில் குமாஸ்தாவாக ரிடையர் ஆவதும், மற்றவர் சென்னையில் மேயராவதும் நாம் காணும் நிகழ்ச்சிகள். மனிதனுக்கு அறிவுண்டு, உணர்வுண்டு, முயற்சியுண்டு, ஆன்மாவுண்டு. முயற்சி முடிந்த பின்னரே உணர்வு சிறக்கும். அதன் பின்னரே அறிவு வெளிப்படும்.அதையும் கடந்த நிலைமையில் ஆன்மா தலை தூக்கும். மனிதனுடைய ஆன்மா பிரபஞ்சத்தின் ஆன்மாவின் பகுதி. முழு ஆர்வமுள்ளவர்க்கு அதுவும் பலிக்கும். ஆர்வமில்லாதவர்க்கு இருப்பது போதும் என்பதே உயர்ந்த கொள்கையென தம் சோம்பேறித்தனத்திற்கு விருது கொடுத்தால், இருப்பதும் சுருங்கிவிடும்.

ஆத்ம சமர்ப்பணம் பூர்த்தியாகும்பொழுது மனிதன் காலத்தைக் கடந்தவனாகிறான். சிருஷ்டியில் தன் பூர்வோத்திரத்தை நாடும் மார்க்கம் அது.

******

  1. என்னை உன் உடமையாக்கிக்கொள்.

தன்னை வழங்குதல் self giving, self offering என்பது ஆன்மா இறைவனை நாடி தன்னை அவனில் கரைத்துக் கொள்ள விரும்பும் உணர்வாகும். தாய் தன்னை அளவு கடந்து குழந்தைக்காகத் தியாகம் செய்வாள், கணவன் வாழ்வு மலர மனைவி தன்னை மறந்து அவனில் கலந்து தன்னை அவனுக்கு அர்ப்பணம் செய்வாள், நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் தேச பக்தர்களும், நண்பனுக்காகத் தன்னை வழங்குபவனும், தலைவனுக்காகத் தன்னை மாய்த்துக் கொள்பவனும் தன்னை மேலும் மேலும் மற்றவர் பயன்படுத்துவதை விழைவார்கள். இதுவரை எதைக் கொடுத்தோம் என்ற நினைவிருக்காது. மீதியையும் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். என்னை உன் உடமையாக நீ அனுபவிக்க வேண்டும். யுகாந்த காலத்திற்கும் உனக்கே நான் உரியவனாக இருக்கவேண்டும் என்ற உணர்வு மேலிடும்பொழுது அகந்தை கரைந்து, ஆன்மா மலர்கிறது. அதுவே பக்திக்குரிய நிலை. பக்தன் விழையும் கட்டம்.

*******

  1. அறிவு திறன் சித்தி.

குதர்க்கம் மாறும் சக்தியைத் தருவது சித்தி.

அறிவுடையவரிடம் அறிவுக்கு மரியாதையுண்டு. குதர்க்கமானவர்கள் தவறான வாதங்களைச் சமயோசிதமாகவும், சாதுர்யமாகவும், பயன்படுத்தி அறிவை திகைக்க வைப்பார்கள்.

Power திறன் ஓரளவுக்குக் குதர்க்கவாதியை சமாளிக்கும். சமாளிக்க முடியாதபொழுது குதர்க்கத்தை விருப்பத்திற்கு மாறாக ஏற்றுக் கொள்கிறது.

சித்தி பெற்றவர் குதர்க்கவாதி மாறுவதற்குரிய சக்தியை அவனுக்கு அளித்து அவனை மாற்றி விடுகிறார்.

நல்ல ஸ்தாபனங்களிலும், குடும்பங்களிலும் பெரிய காரியங்களைச் செய்ய முனையும்பொழுது, குதர்க்கவாதிகள் குறுக்கே நிற்பார்கள். குடும்பம் உயர்ந்ததாக இல்லை எனில் குதர்க்கவாதி வாயே திறக்க முடியாது. திறந்தால் வெளியே போக வேண்டியிருக்கும். உயர்ந்த ஸ்தாபனம் என்பதால் எவரும் மட்டமாகப் பழக மாட்டார்கள், மட்டமானவரை விலக்க மாட்டார்கள். அதனால் குதர்க்கவாதிக்கு இடம் கிடைக்கும். நல்ல காரியங்களுக்குக் குறுக்கே நிற்பார்கள். தடை செய்வார்கள். அவர்களை அறிவால் வெல்ல முடியாது. குதர்க்கம் அறிவை விடச் சாமர்த்தியமானது. Power திறனிருந்தால், அதைக் கண்டு குதர்க்கவாதிகள் பெரும்பாலும் பணிவார்கள். அதுவும் ஒரு நிலையைத் தாண்டியபொழுது, அவர்களால் சும்மாயிருக்க முடியாது. தலை தூக்க ஆரம்பித்தால் திறனுடையவர்களே பணிந்து போக வேண்டும்.

நல்ல குடும்பம், நல்ல ஸ்தாபனம் என்பதால் தவறானவர்களுக்குத் தொந்தரவு செய்யக் கிடைக்கும் இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதை வெல்ல இரு வழிகள் உண்டு. ஒன்று இவர்கள் விஷயத்தில் நல்லவர்களாக இருக்கத் தேவையில்லை என முடிவு செய்து மற்ற இடங்களைப்போல் நடந்தால் உடனே அடங்குவார்கள். நாமெப்படி அதுபோல் நடக்க முடியும் என்று கருதினால் அடுத்த வழி சித்தி பெறுவதேயாகும். சித்தி பெற்றால், குதர்க்கனுக்கு அவன் மாற வேண்டிய ஆன்மீகச் சக்தியைக் கொடுத்து அவனை மாற்றலாம்.

*******

  1. அறிவால் ஒரு காரியம் பூர்த்தியாகிறது. ஒரு காரியம் செய்வதால் அறிவு ஏற்படுகிறது. அறிவும், செயலும், மனம் நிறையும் உணர்வை எழுப்ப முடியும். அறிவாளி, உணர்ச்சி வசப்பட்டவன், திறமைசாலி என்பவர்கள் இந்நிலைகளை விளக்குபவர்கள். உன் நிலை எது என்று கண்டு கொண்டால், அடுத்த கட்டத்திற்குப் போக என்ன வேண்டும் என்று புரியும்.

அறிவு, உணர்வு, செயல், திறமை ஆகியவைகள் மனித நிலைகள்.

திறமை முதற் கட்டம், உணர்வு அடுத்தது. அறிவு கடைசி நிலை. அறிவுள்ளவன் முன்னேற அவன் ஆன்மவிளக்கம் பெற வேண்டும். திறமையாகச் செயல்பட்டு பெரிய சொத்து சம்பாதித்தவனுக்கு மனம் நிறையும் திருப்தி எனும் உணர்வு ஏற்படுகிறது. அறிவால் அதே சொத்தைச் சம்பாதித்தவனுக்கும் திருப்தி ஏற்படுகிறது. மனிதன் உணர்வாலானவன். எனவே அவனுக்குத் திருப்தியே முக்கியம். திறமைசாலிக்கும், அறிவாளிக்கும் திருப்தி ஏற்படுவதால் இருவரும் சமம் என அவன் கருதுவான். அது உண்மையன்று. ஒருவன் முதற்கட்டத்திற்குரியவன், அடுத்தவன் மூன்றாம் கட்டத்திற்குரியவன். நாம் முடித்த காரியங்கள் எதனால் முடிந்தது என்றறிந்தால்தான் நாமுள்ள நிலை தெரியும். அது தெரிந்தால்தான் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். பலனைக் கொண்டு மனிதனை நிர்ணயிக்காமல், அவன் உள்ள அந்தரங்க நிலையைக் கொண்டு நிர்ணயிப்பதே மேல்.

********

  1. நமக்கு எதைச் செய்ய முனைப்பிருக்கிறதோ, அது தேவையில்லாத சின்ன விஷயம். நம்மையறியாமல் நம்மை மீறிய நிலையில் எதைச் செய்வதற்கு உள்ளிருந்து உந்துதல் இருக்கிறதோ அது பெரிய தெய்வ காரியம்.

சிறிய விஷயத்திற்கு முனைப்பு, பெரியதற்கு உள் உந்துதல்.

மனம் ஏதாவது ஒன்றை நினைத்தபடி இருக்கும். கை ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பும். ஒரு நாள் முழுவதும் நாம் நம் மனதில் ஏற்படும் முனைப்புகளைக் கவனித்தால், சில காரியங்கள் பல முறையும், பல காரியங்கள் சில முறையும் திரும்ப திரும்ப வந்தபடி இருக்கும். அவற்றைச் செய்வதற்குப் பதிலாக அது என்ன எண்ணம், ஏன் ஏற்படுகிறது, செய்தால் என்ன பலன் கிடைக்கும், செய்யாவிட்டால் என்ன நஷ்டமாகும் என்று யோசனை செய்தால் அவை அனைத்தும் தேவையில்லாத சிறிய விஷயங்கள் எனத் தெரியும். நம் மனம் இவற்றாலானது.

அவற்றைப் புறக்கணித்து சும்மா இருந்தால் ஏற்படும் எண்ணத்தைக் கவனித்தால், நம்மோடு தொடர்பில்லாதது போலிருக்கும். கவனமாக மனதில் அதை நிறுத்தி, தொடர்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தால், நமக்குத் தோன்றியது பெரிய விஷயம், தெய்வம் மனதில் தோன்றிச் சொல்லிய விஷயம் என்று விளங்கும்.

நம் முனைப்பைப் புறக்கணிக்கவும், தானே உள்ளிருந்து எழும் எண்ணங்களைக் கவனிக்கவும் நாம் பயில வேண்டும். ஒரு பெண்ணிற்கு இதுபோல் உள்ளிருந்து எழும் எண்ணம் உன் தம்பிக்கு உடல் நலம் சரியில்லை என்று சொல்லியது. உடனே அவர் ஆசிரமத்திற்கு எழுதி தம்பிக்குப் பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, தம்பிக்கு எழுதினார். தம்பியின் உடல் நிலை அளவு கடந்து மோசமாக இருப்பதாகப் பதில் வந்தது. தம்பிக்கு அன்னையைத் தெரியாது. பிரசாதம் வந்தபின் உடல்நிலை குணமாயிற்று என்று பின்னால் தெரிய வந்தது.

********

  1. அளவு கடந்த ஆசையாலோ, பதட்டத்தாலோ ஆட்கொண்டபோது அதைச் சமர்ப்பணம் செய்ய முனைவது நல்லது. சமர்ப்பணம், நிலையை நிதானமாக்கும். அந்தப் பதட்டத்தையே சமர்ப்பணம் செய்தால், அதை விடப் பெரிய நல்லதில்லை.

சமர்ப்பணமான பதட்டம் பெரிய நல்லது.

பொதுவாக சமர்ப்பணம் நினைவு வாராது. காரியம் கெட்ட பின் நினைவு வருவதுதான் வழக்கம். அதுவும் ஆசை, பதட்டம் ஏற்பட்டால் அன்னையே மறந்துவிடும். யாராவது ஏன் கஷ்டப்படுகிறாய்? உன் நிலையைச் சமர்ப்பணம் செய் என்றால் காதில் விழாது. விழுந்தாலும் எரிச்சல்தான் வரும். சமர்ப்பணம் செய்ய முனைந்தால் சமர்ப்பணம் மறந்து போகும். பதட்டம் தன்னை மீறும். ஆசை பிடித்துக் தள்ளும். மீண்டும் மனம் ஆசையையே நாடுமேயன்றி, அன்னையை நினைக்காது. இவற்றையெல்லாம்

தாண்டி நிலைமையைச் சமர்ப்பணம் செய்ய முடிந்தால், உடனே நிலைமை நிதானமாகும். இதுவே பெரிய விஷயம்.

நம்மைப் பிடித்து ஆட்டிய ஆசையை அல்லது பதட்டத்தைச் சமர்ப்பணம் செய்யத் தோன்றாது. சமர்ப்பணம் செய்ய முனைந்தால் ஆசை கட்டுப்படாது. மனம் ஆசையைப் பூர்த்தி செய்ய விழையும். வெகு நாள் சிரமப்பட்டு ஆசையைச் சமர்ப்பணம் செய்துவிட்டால், நாம் புது மனிதராவோம். உள்ளே சலனமிருக்காது. ஒரு முறை இதைச் சாதிப்பது பெரியது.

*******

  1. மேலெழுந்தவாரியான மனம், உணர்வு, உடல் ழுமையானவையல்ல. அவை நேராகவுமிருக்காது. அவை ஆழ்ந்த நிலையில் செயல்பட்டாலும், ஆன்மாவை வெளிப்படுத்த முயன்றாலும், அவை முழுமையுடனும், நேராகவும் செயல்படும்.

ஆன்ம வெளிப்பாடு நேரான முழுமையுடையது.

நம் முழு வாழ்வும் மேலெழுந்த மனம், உணர்வைச் சேர்ந்ததே. நாம் சாதித்தது அனைத்தும் நாம் நினைத்தது முழுவதும், உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய அனைத்தும் மேலெழுந்தவற்றைச் சேர்ந்ததே. அவற்றிற்கும் ஆன்மாவுக்கும் தொடர்பில்லை. நாம் சாதித்த எதுவும் முழுமையானதன்று. ஆழ்ந்த நிலைக்குச் சென்று சிந்தனை செய்தால்தான் முழுமை எது என்று தெரியும். மனித வாழ்வு முழுமையைத் தேடவில்லை. It seeks success or survival. இருக்கும் நிலையில் இருப்பதற்கும், செய்யும் காரியங்களில் வெற்றியையும் நாடுகிறதே தவிர முழுமை என்று ஒன்றுள்ளது, அது எது என்ற நினைவு மனிதனுக்கில்லை. வாழ்நாள் முழுவதும் தேடிய அனுபவம் ஆன்மாவுக்கு ஒரு படிப்பினையைத் தருகிறது. எனவே முழுமைக்கு ஏது இடம்?

********

  1. தாம் எழுதியவற்றைப் பிரெஞ்சு மொழியில் பயின்றால்தான் முழுப் பலன் உண்டு என்கிறார் அன்னை.

அன்னை எழுத்தின் ஜீவன் பிரெஞ்சு.

கதைகள், கட்டுரைகளை மொழி பெயர்ப்பில் படித்துக் கருத்தைப் புரிந்து கொள்ளலாம். எழுத்தாளருடைய நிலை உயர, உயர, மொழி பெயர்ப்பு பலன் தருவது குறையும். ஆன்மீக எழுத்து வரி வடிவத்தில் ஆன்மீகச் சக்தியை அளிக்க வல்லது. மொழி பெயர்ப்பு வரி வடிவத்தைப் பெயர்க்கும். ஆன்மீகச் சக்தியை மொழி பெயர்க்க முடியாது. அதை மூலத்தில்தான் படிக்க முடியும். ஒரு வீட்டை போட்டோ எடுத்தால், அதன் உருவத்தைப் போட்டோ மூலமாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். வீட்டின் உபயோகத்தை போட்டோ மூலம் பெற முடியாது. ஆன்மீகச் சக்தியுள்ள எழுத்தை மொழி பெயர்ப்பால் படிப்பதில் பலன் மிகக் குறைவு.

********

  1. நெடுநாள் நீடித்த காரியம் முடியும்பொழுது நாம் ஒரு விஷயத்தை அறிகிறோம். அது உணர்வைப் பற்றியதாகவோ, நோக்கத்தைப் பற்றியதாகவோ இருக்கும்.

அனுபவம் அறிவில் முடியும்.

இதுபோன்ற காரியம் முடிந்த பின் நாம் கேள்விப்படும் விஷயங்கள் பலவாறு :

  1. சொந்தக்காரர்களுடன் வியாபாரம் செய்தால் சரி வாராது.
  2. கணவன், மனைவி தகராற்றில் ஈடுபடக்கூடாது.
  3. கேட்பார் இல்லை என்று நடந்தால், பிறகு நஷ்டம் அதிகமாகும்.
  4. தம்பிதானே என்று ஈடுபட்டேன், அவனுக்கு அண்ணன் என்பதில்லை.
  5. மத்தியஸ்தத்திற்கு வந்தவர் தம் ஆதாயத்தையே கருதினார்.

எத்தனை விஷயங்களை எழுதினாலும், இவை நமக்குப் புதிய புத்திமதியே தவிர உலகத்திற்கு இவை புதிய கருத்தல்ல. உலகம் உணர்ந்த ஒன்றை ஒரு பத்து வருஷம் சிக்கலில் மாட்டி பிறகு நாம் புரிந்து கொண்டோம் என்றால், நமக்குச் சாதாரண அளவும் அறிவில்லை என்று தெரிகிறது. சரி, இனியாவது இதுபோன்ற தவற்றைச் செய்யாமலிருப்போமா என்றால் அதையும் சிலரால் உறுதியாகச் சொல்ல முடியாது. நம்மை விட உயர்ந்தவர்களையும், தாழ்ந்தவர்களையும் விலக்கி, நம்மைப் போன்றவர்களை மட்டும் கவனித்து அவர்களில் அனுபவசாலிகளைக் கண்டு அறிந்ததை மீண்டும் நம் வாழ்வில் சோதனை செய்யக் கூடாது என்ற முடிவிருந்தால், இந்தத் தவறு நடக்காது. இந்தத் தவறு நடக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. மற்றவர்களைவிட நமக்கு அதிகம் தெரியும் என்ற நினைவிருப்பதால் ஆரம்பக் காலத்தில் சொந்தக்காரர்களை வியாபாரத்தில் சேர்க்காதே என்று சொல்பவரிடம் அது மற்றவர்கள் தோற்ற இடத்தில், அவர்களைவிட நாம் திறமைசாலி என்ற நினைப்பதால், நமக்கு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறோம். பின்னால் கிடைப்பது தோல்வியே.

அதனால் பிறர் தோற்ற எந்த முறையையும் நாம் பின்பற்ற முடியாதா? என்ற கேள்விக்கு என்ன பதில்? உனக்கு 30 வயதானால், இதுவரை நீ மற்றவர்கள் தோற்ற இடத்தில் வெற்றி பெற்றிருந்தாய் என்றால், அந்த வெற்றியை ஆராய்ந்து பார்த்தால், எந்த அளவு உனக்குத் திறமையிருக்கிறது என்று தெரியும். பொதுவாக யோசனை செய்பவர் எவரும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். உனக்குள்ள திறமையை அறிந்து பிறகு செயல்படுதல் நலம்.

******

  1. நம்முடைய எல்லா நோக்கங்களையும் மாற்றும் அளவுக்கு நாம் அவற்றைப் புரிந்து கொண்டால் அது ஆயுள் முழுவதற்கும் ஏற்படும் தெளிவாகும்.

நோக்கத்தை மாற்றும் அறிவு ஆயுளுக்கும் தெளிவு.

சிந்தனைக்குப் பலன் உண்டு. 10 வருஷ அனுபவத்தில் கிடைப்பது 10 நாள் சீரிய சிந்தனையில் பெறலாம். ஒரு பிறவியில் சில நோக்கங்களைப் புரிந்து கொள்ள வாழ்க்கையை மனிதன் நடத்துகிறான். பொதுவாக வாழ்வு முடியும்பொழுது அவனுக்கு அவனுடைய எல்லா நோக்கங்களின் அர்த்தமும் புரியும். 30 வருஷ வாழ்வில் புரிந்துகொள்வதை 30 மாதப் படிப்பாலும், கூரிய பார்வையாலும், பெரியவர்களுடைய புத்திமதியாலும், மற்றவர்கள் அனுபவத்தைக் கவனிப்பதாலும், புரிந்து கொள்ளலாம். அப்படிப் புரியும்பொழுது நம் எல்லா நோக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஒரு பிறவியின் பயன் அது என்பதால், எல்லா நோக்கங்களையும் மாற்றிக் கொள்ளும் அறிவு ஒரு ஜன்மத்தில் பெறக்கூடிய ஞானமாகும்.

*****

  1. அருள் நம்மை நோக்கி வந்தால் கேள்வி எழுப்பக்கூடாது. உன் தலைவனிடமிருந்து அது வரலாம். உனக்குப் பிடிக்காத உருவத்திலும் அது வரக்கூடும்.

ஆயுளுக்குமான தெளிவை எவரிடமிருந்தும் ஏற்க வேண்டும். பொதுவாகக் கேள்வி எழுப்பும் மனம் அடங்கிய பொழுதுதான் அருள் வரும். கேள்வி மனப்பான்மையை மீண்டும் கொண்டு வந்தால், அருள் விலகும். அருள் நமக்கு வேண்டியவர்கள் மூலம்தான் வரும் என்பதில்லை. எதிரிகள் மூலமும் வரும். நம்மை நோக்கி வருவது அருள் என்ற தெளிவு முதலில் இருக்க வேண்டும். வாழ்க்கையை ஊன்றிக் கவனிப்பவருக்கு நல்லது கெட்டது பிரித்துப் பார்க்கத் தெரியும். அது தெரிபவர்களுக்கு அருள் வருவது தெரியும். பொதுவாகச் சமாதி தரிசனம் செய்த பின், ஆழ்ந்த தியானம் கலைந்த பின், பகவான் நூல்களைப் பயின்ற பிறகு, மனம் அசாதாரண அமைதியுடன் இருக்கும்பொழுது நடப்பவை அருளின் செயலாக இருக்க முடியும். அந்த நேரங்களில் மனம் இதுவரை கேட்கும் கேள்விகளைக் கேட்காவிட்டால், மனம் பணிந்து நடப்பவற்றைப் பவ்யமாகக் கவனித்தால், நம் வாழ்நாளில் இதுவரை கேள்வியுறாதவை நடக்கும்

சூசகங்கள் தெரியும். பிடித்தவர் மூலமாக வருவது நல்லதானால், பிடிக்காதவர் மூலம் வருவது பொதுவாகப் பெரிய நல்லதாக இருக்கும். வழக்கப்படி அவற்றைப் புறக்கணிக்காமல், குறுக்குக் கேள்வி கேட்காமல், வேறு விளக்கம் கொடுத்து மறுக்காமல் கவனித்தால் அது அருளெனப் புரியும்.

*******

  1. அன்னையின் இலட்சியங்களைப் பூர்த்தி செய்யக் கூடிய ஸ்தாபனங்களும், தனி நபர்களும் இன்று உலகில் உண்டு. அவர்களுடைய நோக்கமும், நம்பிக்கையும், பொதுவாக அர்த்தமற்றனவாக இருக்கும்.

அர்த்தமற்றவர், அன்னை இலட்சியங்களை ஏற்றால் அதன் பலன் அவர்களுடன் நின்றுவிடும்.

எந்தக் காரியத்தையும் perfect சிறப்புறச் செய்யும் நபர்களும், ஸ்தாபனங்களும் அன்னையின் இலட்சியங்களைப் பூர்த்தி செய்வார்கள். இதுபோன்ற ஸ்தாபனம் பிலடெல்பியா நகரத்தில் பிறந்த சிறு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முனைந்து வெற்றி பெற்றுள்ளது. மனித மூளையின் திறனை அறிந்தவர் டோமான். நாம் கற்றுக் கொள்வதைப்போல் நூறு மடங்கு கற்றுக் கொள்ளலாம். அப்படிப் பயிலுவதால் குழந்தைகள் போட்டியுணர்ச்சி, பொறாமை உணர்வு, கடுப்பு இன்றி வளர்கின்றன என்பதை 40 ஆண்டுக் காலமாக நிரூபித்துள்ளார். இவ்வளவு சிறப்புள்ள இவர் தம் நிறுவனத்தை உலகில் பரந்து விரியும் நிறுவனமாக்க பிரியப்படவில்லை. தம்மைத் தவிர மற்றவர்கள் சரியாகச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றார். உயர்ந்த திறமையிருந்தாலும், அதற்குரிய உயர்ந்த முறைகள் மூலமாகவே அவை பரவும். மற்றவர்கள் செய்ய மாட்டார்கள் என்பது சரியான நோக்கமன்று. அந்த நோக்கத்தை மாற்றிக் கொண்டால், இவரால் அன்னையின் லட்சியத்தைப் பூர்த்தி செய்ய முடியும். நம்மிடம் அன்னை போற்றும் குணங்கள், திறமைகள் இருப்பதுண்டு. இதுவரை பல ஆண்டுகளாக தடம் மாறிய ஸ்தாபனங்கள் நாம் போனவுடன் அன்னை சேவையைப் பூர்த்தி செய்ய

ஆரம்பிக்கலாம். கெட்டுப் போன பெரிய திட்டங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் அன்னை அம்சம் நமக்கிருக்கலாம். அதே அம்சம் நம் குடும்பத்தை நாட்டின் முதன்மையானதாக மாற்றும் திறனுடையது என நாம் அறியாமலிருக்கலாம். அறிந்தும் இருக்கலாம். அவை வெளிப்பட்டு நமக்கும், பிறருக்கும், அன்னைக்கும் பயன்பட வேறு குணங்களும் தேவை. பிறர் நமக்குச் செய்யும் தவற்றால் மனம் புண்படுவது இயற்கை. பிறர் தவறு செய்தாலும், நாமும் அவர்களைப்போல் மனம் புண்படாமலிருந்தால்தான் நம்மிடம் உள்ள உயர்ந்த அம்சம் வெளிப்படும். நம் மனம் புண்படுவது சரி தானே என்றால், நாமும் மற்றவர்களைப் போலாகி விடுகிறோம். நமக்கு உயர்ந்த மன நிலைகளைப் பெற முயல வேண்டும். அவற்றிற்கெதிரான மன நிலைகளை முனைந்து களைய முன் வரவேண்டும்.

உயர்ந்த அம்சம் ஒன்றாவது இல்லாத மனிதரில்லை. அதை அறிபவர் குறைவு. அறிந்து அதற்கிசைய தம்மை மாற்றிக் கொள்பவர்கள் அதனினும் குறைவு.

முக்கியமான விஷயத்தை மட்டும் கருதினால், சிறியது பெரியது என்பதில்லை. ஒரு H.P. மோட்டாருக்கும் 100 H.P. மோட்டாருக்கும் தத்துவம் ஒன்றே. அணு என்றால் எல்லா அணுக்களுக்கும் அமைப்பு ஒன்றே. முக்கியமில்லாத அம்சங்களிலும், வெளித்தோற்றத்திலும் சிறியது, பெரியது என்பதுண்டு.

பிரம்ம ஞானிக்குச் சிறியது, பெரியது இல்லை. எல்லாம் ஒன்றே. மனிதன் பிரம்ம ஞானியில்லை. என்றாலும் பொதுத்தேர்தல் கோடீஸ்வரனுக்கும், குடிசை வாழ்பவனுக்கும், ஜனாதிபதிக்கும் ஓர் ஓட்டு தான். அங்கு அவர்கள் எல்லாம் சமம். இங்கு அவர்களுடைய சமத்துவம் நமக்குப் புரிகிறது. மற்ற இடத்தில் புரிவதில்லை. எல்லா இடங்களிலும், அதற்குரிய ஞானமிருந்தால் சிறியது பெரியது இல்லை என்பது விளங்கும். பூரண யோக ஞானம் பெற்ற பின் எல்லா நிலைகளிலும் சிறியது பெரியது என்ற

வித்தியாசமில்லை என்பது விளங்கும். ஏதோ ஒரு வகையில் நாமும் அதை உணர முடியும். தொலைந்துபோன குழந்தை கிடைப்பது பெரியது என்பது நம் அனுபவம். பிரார்த்தனையைப் பொருத்தவரையில் இவையிரண்டுக்கும் ஒரே அளவு தான் உண்டு. பத்து ரூபாய் நோட்டு கிடைக்கப் பிரார்த்தனை செய்ததையும், குழந்தை கிடைக்கப் பிரார்த்தனை செய்ததையும் ஒருவர் தம் மனதில் ஒப்பிட்டுப் பார்த்தால் தம்மைப் பொருத்தவரை அவை ஒரே அளவுதான் என்பது தெரியும். அன்னையின் சக்திக்கு அவை இரண்டும் சமம். அப்படியானால் அன்னையின் சக்தியை நாம் நம் சக்தியாகப் பயன்படுத்தும் இடத்தில் ஒன்று பெரியது, மற்றது சிறியது என்பது நமக்கில்லை.

                                                     .......................

124.உலகமும், பூமியும் நிரந்தர இன்பத்தில் திளைக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் தவமிருந்தவர் முகம் சோகத்தால் நிறைந்தது.

சச்சிதானந்தமும் உலகில் சோகமாகவே காட்சியளிக்கும்.

பகவான் ஸ்ரீ அரவிந்தரை அன்னை 1914இல் சந்தித்த போது ஆனந்தசொரூபராய்க் கண்டார். Divine Love அன்பின் அவதாரமாக உணர்ந்தார். தம்முடைய சைத்தியப் புருஷன் பகவான் முன்னிலையில் அன்பில் திளைப்பதை அறிந்தார். உலகப் போர் வந்துவிட்டதால் அன்னை பிரான்சு திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டபின் தம்முடைய சைத்தியப்புருஷன் 10 மாதம் பகவானுடைய அன்பில் திளைத்து விட்டதால், இனி அதனால் அவரை விட்டுப் பிரிந்திருக்கமுடியாது என்று கருதி அதை பகவான் திருவடியிலேயே வைத்துவிட்டுப் பிரான்சு திரும்பினார். 5 ஆண்டுகள் அவர் ஜீவனில்லாத நடைப்பிணமாக வாழ்ந்தார். 1920இல் திரும்ப பகவானிடம் வந்து தாம் விட்டுப் போன சைத்திய புருஷனை ஏற்றுக் கொண்டார்.

அதுமுதல் 1950இல் பகவான் சமாதியாகும்வரை அன்னையின் சைத்தியப்புருஷன் அன்பின் (Divine Love) சூழல் வாழ்ந்தது. 1950இல் பகவான் சமாதியான பின் அதனால் வாழ முடியவில்லை. அதற்கு இருப்பிடமில்லை. அன்பின் சூழல் பகவானோடு போயிற்று; இனி எப்படி அதனால் வாழமுடியும் என அறிந்த அன்னை தம் மனதிற்குள் சைத்தியபுருஷனை சிறைப்படுத்தி பூட்டிவிட்டேன் என்கிறார். பகவான் இருந்த அதே அன்பின் சூழலைத் தாம் 9 வருஷம் கழித்து அடைந்த பின், தாம் சிறைப்படுத்தியிருந்த சைத்தியப் புருஷனை வெளிப்படுத்தியதாகக் கூறுகிறார்.

பகவான் தெய்வீக அன்பின் பிழம்பாக வாழ்ந்தவர். தம்மைக் கொட்டிய தேள் விஷத்தின் வலியை தம்முள் ஆனந்தமாக மாற்றியவர். அவர் பார்வை சற்றுநேரம் பட்டு விஷக்கடியின் விஷம் முறிந்தது. அவர் புதுவை வந்தபின் தம்மைப் போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை. 1950இல் பிரசித்தி பெற்ற போட்டோகிராபர் ஒருவர் வந்தபொழுது அவருக்கு அனுமதி கிடைத்தது. அந்தப் போட்டோவைப் பார்த்த அன்னை ஆச்சரியமாக, இந்தச் சோகமான முகத்தை எனக்குப் பகவான் காண்பித்ததேயில்லை என்றார். அன்னை உள்ளே வரும்பொழுதெல்லாம் மலர்ந்த முகத்துடனிருந்தாலும், அவர் போனவுடன் தம் சொந்த முகத்தைச் சோகத்தால் பகவான் நிரப்பிக் கொண்டிருந்தார். உலகத்தின் மரணம், துன்பம் அழிய தவம் செய்து அதை அழிக்கும் சக்தியை மேலிருந்து கொண்டுவந்தவர் தம் மனத்தையும் முகத்தையும் சோகத்தால் நிரப்பியிருந்தார் என்பது விந்தையாகும்.

உடல் திருவுருமாற்றமடையும்பொழுது சித்திரவதையான வலி ஏற்படுவதை அன்னை 1970இல் கண்டு பகவானிருந்தபொழுது அவர் அது போன்ற வதையை அனுபவித்தும், வெளியில் காட்டிக் கொள்ளாததால், பிறரால் அவர் பட்ட வதையை அறிய முடியவில்லை, அதை இப்பொழுது நினைத்தாலும் மனம் பொறுக்க முடியவில்லை என்று சொன்னார். சொல்லிய பொழுது கண்களில் நீர் பெருகியது.

*******



book | by Dr. Radut