Skip to Content

பகுதி 15

இறைவன் புதிரல்லன்,

வாழ்வில் நாம் இறைவனைப் புதிராகக் காண்கிறோம்.

வாழ்வைவிட்டு சொர்க்கத்திற்குப் போனால் இறைவன் புதிராக இல்லை.

வாழ்வை நீத்து மோட்சத்திற்குப் போனாலும் இறைவன் புதிர் இல்லை என்பது தெரியும்.

இறைவன் மனிதனுக்குப் புதிர், ஞானிக்குப் புதிர், பூரணயோகிக்குப் புதிரல்லன்.

பூரணயோகிக்கு உலகம் ஓர் அற்புதம், இறைவன் அனந்தமான ஆனந்தம்.

மனிதனை இறைவனாக்க வந்த யோகம் பூரணயோகம்.

மனிதன் இறைவனாக முடியும் என்று பகவான் எழுதினார்.

தம் யோகநிலையை இறைவன்நிலைக்கு உயர்த்தினார்.

தாமே இறைவனானார்.

அனைவரும் இறைவனாகும் மார்க்கத்தை வகுத்தார்.

அதை உலகுக்கு அறிவித்தார்.

அவனை நாம் அடையமுடியும். அவனாக நாம் ஆக முடியும். ஆனால் புதிர் புதிராக இருக்காது. புதிரானது அற்புதமாக மாறும். புதிருக்கு விடை அவனே. அவனே புதிர். அதற்கு விடையும் அவனே. அவனை அடைந்து, அவனாக மாறி, புதிரை விண்டு, அற்புதமாகக் கண்டு, திருவுருமாறுதல் பூரணயோகம். பூரணயோகம் அவனையடைய உதவும் என்ற பகவான், யோகமும் அவனே, யோகசித்தியும் அவனே என்றார்.

பணத்தின் இரகஸ்யம் என்ன என்று தேடுபவர்கட்குப் பணத்தைச் சம்பாதித்தவர்கள் சொல்லும் விடை, "உழைப்பு''. பிரபலமடைய விரும்புபவர் அநேகர் நல்ல குணமும், திறமையும், பிரபலத்தைத் தரும்என்று அவர் அறியும்பொழுது பிரபலம் என்ற புதிருக்கு விடை நாணயம் என்றறிகிறார்.

பகவான், இறைவன் ஒரு புதிர், இதற்கு விடை "இறைவனாகும்'' என்று கூறும் பதில் மற்றொரு புதிராக அமைகிறது. வாழ்வில் உள்ள இலக்குகள் பணம், பதவி, புகழ், பெண், போன்றவை வாழ்வின் பல பகுதிகளாகும். வாழ்வென்பதே சிருஷ்டியில் பகுதி. இறைவன் என்ற முழுமையில் வாழ்வு பகுதியாகும். பகுதியான ஒரு திறமைக்கு அல்லது இலக்கிற்கு விடை அதன் வெளியே அமைய முடியும். இறைவன் என்பது சிருஷ்டியைக் கடந்த முழுமை.

ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து மோட்சம் பெற்றால் ஜீவாத்மா என்ற பகுதி பரமாத்மா என்ற முழுமையை அடைகிறது என்று தெரியும். பரமாத்மாஎன நாம் கூறுவதே இறைவனின் பகுதியாகும்.

இறைவன் என்பது பிரம்மம்.

அது முழுமுதற் கடவுள் எனப்படும்.

அதன் முழுமை சிதறாது, சிதையாது.

சிருஷ்டியால் இறைவனின் முழுமை குறைவதில்லை.

ழுமையான இறைவன் என்ற புதிருக்கு, பகுதியான உபாயம் விடையாக இருக்கக்கூடாதா எனலாம்?

பகுதியானஉபாயம், இறைவனை அடைய உதவலாம், இறைவனாக உதவாது. அப்படி அடைந்தால் புதிர் புதிராகவேயிருக்கும், விடை வெளிவாராது.

இறைவனை அறிய இறைவனாவது தவிர வேறு வழியில்லை என்பதால் இறைவன் என்ற புதிருக்கு இறைவனே விடை என்றார் பகவான்.

  • இறைவன்என சச்சிதானந்தத்தைக் கூறுகிறோம்.
  • இறைவன், பிரம்மம் என்பது, சச்சிதானந்தத்தைக் கடந்தது.
  • Unmanifest என்ற நிலையைப் பரவெளிஎனக் குறிப்பிடுகிறார்கள்.
  • சச்சிதானந்தம் manifest சிருஷ்டியின் பகுதி.
  • சச்சிதானந்தமும், சிருஷ்டியும் இறைவனின் பகுதிகள்.
  • சிருஷ்டியில் வெளிப்படும் இறைவனே முழுமையுடையவன்.

********

  • 747 இதையே மற்ற எதற்கும் சொல்லலாம். அன்பின் பிரச்சினைக்கு அன்பே விடை எனலாம். தன் குறையால் அன்பு பிரச்சினையை எழுப்புகிறது. குறையை நிவர்த்தி செய்தால் பிரச்சினை மறைகிறது.

புதிரான விடை, விடையான புதிர்.

உலகில் அன்புக்கு ஏங்குபவருண்டு, அவருக்கு அன்பு ஒரு புதிர். பணத்திற்காக அலையும் பணக்காரருண்டு, பணம் அவருக்கு ஒரு புதிர்.

பதவிக்காக உயிர் வாழ்பவர் உண்டு, பதவி அவரை ஏமாற்றும் பொழுது அதை ஒரு புதிராகக் காண்கிறார்.

பிறருக்காகவே வாழ்ந்தவர் நன்றி கொல்வதையே பார்க்கிறார், அவருக்கு மனித சுபாவம் ஒரு புதிர்.

போரில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள், பொதுச் சேவையில் எழும் புரியாத நிலைகள், அவற்றைப் புதிராகக் காண்கின்றனர்.

விஞ்ஞானி உலகத்தையே ஆண்டாலும், உலகத்தின் சிருஷ்டி அவனுக்குப் புதிராகவே இருக்கிறது.

இறைவன் மட்டும் புதிராக இல்லை. அவன் சிருஷ்டியில் அனைத்தும் புதிராகவே உள்ளன.

புதிர் என்றால் என்ன? அதற்கு விடை எப்படிக் கிடைக்கிறது?

புரியாதது புதிர். பிறர்க்குப் புரிந்து நமக்குப் புரியாதது, புரியாதவர்க்கு மட்டும் புதிராகும். எவர்க்கும் புரியாதது எல்லோர்க்கும் புதிர். விடுகதை புரியும்வரை புதிராக இருக்கிறது. புரிந்தபின் எளிமையாகிவிடுகிறது. புரிந்தபின் கிடைக்கும் எளிமையை, புரிவதன்முன் பெற வழியிருந்தால் புதிர் என்பதன் தன்மை குறையும், விடை காண்பதின் சிரமம் குறையும்.

பகுதியை முழுமையாகக் கருதினால் அது புதிராகிறது.

பகுதியை முழுமையிலிருந்து பார்த்தால் புதிர் அவிழ்கிறது. கர்நாடகமும், தமிழ்நாடும் தங்கள் நலனை மட்டும் கருதினால் காவிரி நீர் பிரச்சினையாகிறது. நாட்டுடன் நம்மை இணைத்து நாட்டுப் பிரச்சினையாகப் பார்த்தால், அது பிரச்சினையாகாது. மாமியாரைப் பற்றி அனைவரிடமும் குறை சொல்லும் மருமகளும், மருமகளைப் பற்றி குறை சொல்லும் மாமியாரும், குடும்பத்தின் பேர் கெடக்கூடாதுஎன நினைத்தால் குறை சொல்ல மாட்டார்கள். பணத்தைப் பணமாகக் கருதி அதை நாடினால் - பகுதியாகக் கருதினால் - பணம் ஓடுகிறது. மனிதனுடைய திறமையின் ஒரு வெளிப்பாடு பணம்என நினைத்தால் பணம் புதிராக இருப்பதில்லை. அவனை நாடி வரும்.

விதையிலிருந்து மரம் எழுந்தால், மரத்தை விதை விளக்குகிறது, விதையை மரம் விளக்குகிறது. ஆனால் எப்படி என்று விளக்க முடியவில்லை. அவை புதிராகின்றன. சிருஷ்டியின் பகுதியாக விதையையும், மரத்தையும் கருதினால் அவையிரண்டும் உற்பத்தியான வகையை சிருஷ்டி விளக்குவதால் புதிர் புரிகிறது என்கிறார் பகவான்.

அன்பை நாடிப் போகிறவர்களைவிட ஆசையை நாடுபவர்கள் அதிகம். ஆசை சில சமயங்களில் பூர்த்தியாகும், பல சமயங்களில் பூர்த்தியாகாது. ஆனால் அன்பைத் தேடிய எவருக்கும் உலக வாழ்வில் அன்பு பூர்த்தியானதில்லை. அது புதிராகவேயுள்ளது. I have loved since my birth,no one loved me. பிறந்ததிலிருந்து அன்பு செலுத்தினேன், அதை எவரும் திருப்பித் தரவில்லை என்பது சாவித்ரி' காவியத்தில் ஒரு வாக்கியம். Vision of Dante டான்தேயின் திருஷ்டி என்பது உலகப் பெருங்காவியம். டான்தே பியாட்ரிஸ் என்பவளை விரும்புகிறான். அவள் மற்றொருவனை திருமணம் செய்து 9 குழந்தைகள் பெற்றபின் அவள் மீதுள்ள அன்பு அனலாக எழுந்து காவியமாக மாறியது. இது இத்தாலியக் காவியம். ஏன் அன்பு புதிராகவேயுள்ளது?

ஓர் இளம் பெண் புத்த பிக்ஷுவைப் பார்த்து அவனை விரும்பி அவன் பின்னால் போகிறாள். அது பலன் தாராது என்றறிந்தபின் விரக்தியடைந்து தன்னை அழித்துக்கொள்கிறாள். விபச்சாரியாகி தீராத வியாதியடைந்து அலைந்து மயக்கமடையும்பொழுது அந்த பிக்ஷு அவளைக் கண்டு, வாரி எடுத்து, மடியில் போட்டு, ஆறுதல் கூற முயலும்பொழுது, அவள் கண் விழித்து, "அன்றே இதை செய்திருந்தால் நான் அழிந்திருக்கமாட்டேன்'' என்கிறாள். உடலின் தேவையை அன்பு என்று கருதுபவர் பாமரர். உணர்வின் உயர்வை உலகம் அன்பு என்றறியும். அது சில சமயங்களில் பலிக்கும், பல சமயங்களில் பலிக்காது. பலித்தபின்னும் அதனுள் அன்பு இருப்பதில்லை. அதனால் டான்தேயின் அன்பு உட்பட அன்பு இன்றுவரை புதிராகவேயுள்ளது.

அன்பின் உறைவிடம் உணர்ச்சிஎன நாம் அறிந்தாலும், அன்பு உணர்ச்சிக்குரியதன்று. ஆங்கிலத்தில் sensation என்ற உணர்ச்சியே அது. feeling,emotion என்று கூறப்படும் உணர்ச்சிகள் இதயத்திற்குரியவை, இவை அன்பல்ல. இவை தாழ்ந்த (sensation,), உயர்ந்த (emotion) உணர்ச்சிகள். God is Love என்று நாம் கூறும் Love அன்பை மனதில்கொண்டு, அதை நாம் உலகில் தேடி அலைந்து அது புதிராக உள்ளது என்கிறோம். அந்த Love அன்பு எப்படி உற்பத்தியாகிறது என்று Life Divineஇல் பகவான் எழுதுகிறார். அது சச்சிதானந்தத்தில் எழுகிறது.

சத்(தியம்), சித்தம், ஆனந்தம் என்பது சச்சிதானந்தம்.

சத் என்பது பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் எனவும்,

சித் என்பது ஞானம் (knowledge), செயல்திறன் (will) எனவும்,

ஆனந்தம் என்பது அன்பு, சந்தோஷம், அழகு (Love,Joy,Beauty) எனவும் பிரிகின்றன என்கிறார்.

ஆனந்தம் உடல் வெளிப்பட்டால் அது அழகாகிறது.

ஆனந்தம் நரம்பில் வெளிப்பட்டால் அது சந்தோஷமாகிறது.

ஆனந்தம் ஆன்மாவில் வெளிப்பட்டால் அது அன்பாகிறது என்பது தத்துவம்.

ஆன்மா முழுமையானது. அன்பு அதன் உருவம். இதயமும், நரம்பும், உடலும் பகுதிகள். பகுதிகளிலிருந்து அன்பைப் புரிந்துகொள்ள முயன்றால் அது புதிராக இருக்கும். ஆன்மா என்ற முழுமையிலிருந்து அன்பைப் புரிந்துகொள்ள முயன்றால், அன்பு தானே சுரக்கும், எதிர்பார்ப்பின்றி ஓடையாக ஊறி ஓடும். தன்னை அர்ப்பணிப்பதிலேயே அன்பு பூரணத்தைப் பெறும். பிரதிபலன் எதிர்பார்க்காது, தன்னை ஏற்கவேண்டும் எனவும் எதிர்பார்க்காதது தூயஅன்பு என்கிறார் அன்னை.

மனித முழுமையை நாடி அதன் பகுதியாகப் பணத்தைக் கண்டவருக்குப் பணம் புதிரன்று. அவர்கள் பணத்தைச் சம்பாதித்தவர் மட்டுமல்லர், பணத்தை உற்பத்தி செய்தவர்கள். பாங்குகளை நிறுவி நாட்டில் பெரும்பணத்தைச் சேர்த்து பலருக்கும் பணத்தின் சேவையைக் கிடைக்கும்படிச் செய்தவர்கள். அவர்களுக்குப் பணம் ஒரு கருவி, புதிரன்று. பணம் எங்கு உற்பத்தியாகிறது, எப்படி உற்பத்தியாகிறது என்று கண்டவர்கள் அவர்கள். அதனால் ஆலைகளையும், பாங்குகளையும், பெரிய ஸ்தாபனங்களையும், இன்ஷுரன்ஸ் கம்பனிகளையும் நிறுவி பணத்தை உற்பத்தி செய்தனர். அவர்கள் பணத்தை முழுமையானதாகக் கருதவில்லை. மனிதன் என்ற முழுமையில் கடமை, திறமை, காரியம், செயல், உழைப்பு என்பவை பகுதிகள். அவற்றின் பலனாக எழுபவற்றுள் பணமும் ஒன்று என்று கண்டனர். They are nation builders அவர்கள் சமூகச் சிற்பிகள். சமூகத்தை உருவாக்கியவர்கள். பணத்தைக் கருவியாகக் கருதியவர்கள்.

பதவி சேவைக்குரிய கருவி. எனவே சேவையின் பகுதி. பகுதியான பதவியை மனம் நாடும்பொழுது, பதவி தூரப் போகிறது, புதிராக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் உழைத்தவனைவிட்டு இன்று வந்தவனை நாடுகிறது. பணத்தாலோ, சாமர்த்தியத்தாலோ

அடுத்தவர் பெறும்பொழுது எதுவும் புரிவதில்லை. பதவியை நினைக்காமல் முழுமையாகச் சேவையைமட்டும் கருதியவரை பதவி தேடிவருவது சரித்திரம். அந்நிலையில் பதவி புதிராக இருப்பதில்லை.

மனிதச்சுபாவத்திற்குத் தன்னைப் பூர்த்தி செய்துகொள்வதே பாங்கு. நன்றியறிதல் அதன் பகுதியில்லை. நன்றியறிதல் மனித சுபாவத்திற்குத் தேவையில்லை. சுயநலமான மனிதன் இப்பிறவியில் சுயநலத்தின் பூரணஅனுபவத்தைப் பெற வந்திருக்கிறான். அவனுக்குச் சுயநலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவும் தேவையில்லை. நன்றியறிதலும் தேவையில்லை, ஏமாற்று வித்தையும் தேவையில்லை. முனிசிபாலிட்டியில் வேலை செய்பவன், தன் கடமையை முனிசிபாலிட்டியில் செய்கிறான். அவன் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை, நிலத்தில் பயிரிடவில்லைஎனக் குறை சொல்வது அவனைப் புரிந்துகொள்ளவில்லைஎன்று பொருள். கோபமான சுபாவமுள்ளவனுக்கு முக்கியமாகக் கோபமும், வாழ்வுக்குத் தேவையான மற்ற குணங்களும் வேண்டும். பொறுமையோ, கருணையோ, ஏமாற்றுவதோ, அவனுக்கு இப்பிறவியில் தேவைப்படாவிட்டால், அவற்றை அவன் நினைக்கப் போவதில்லை. பொதுவாக மனிதன் வாழும் வாழ்வுக்கு, கருணை, நன்றியறிதல் தேவையில்லை.

மனித வாழ்வுக்கு நன்றியறிதல் அவசியம்என நினைப்பது சரியில்லை. ஒரு குறிப்பிட்ட சுபாவத்திற்குப் பல குணங்கள் தேவைப்படலாம். பல தேவைப்படா. தேவைப்படும் குணங்களை விலக்கினால் காரியம் பூர்த்தியாகாது. தேவைப்படாத குணத்தைச் சேர்த்துப் பார்த்தால் விஷயம் புரியாது. சுபாவத்தைச் சுபாவமாகப் புரிந்துகொள்ள முயன்றால் ஏன் நன்றியறிதல் தேவை, சில சமயங்களில் தேவையில்லை என்று புரியும்.

விதை எப்படி மரமாக வளர்கிறது என்பதை முழுவதுமாகக் கண்டுகொண்ட விஞ்ஞானி விதையைக் கொண்டு மரத்தை அறிகிறான். விதையும், மரமும் ஏற்பட்ட காரணத்தை விதையிலிருந்து

கண்டுபிடிக்க முயல்வது அறிவீனம். மார்க்கட்டில் சோப் விற்கிறதெனில் வாங்குபவர்களைக் கொண்டு, அவர்கள் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து, சோப் எப்படி உற்பத்தியாகிறது என அறிய முடியாது. சோப் பேக்டரியில் உற்பத்தியாகிறது, கண்டுபிடித்தவன் விஞ்ஞானி. சோப்பின் உற்பத்தியை அறிய பாக்டரிக்கும், விஞ்ஞானியிடமும் போகவேண்டும். வாங்குபவர் பின்னால் வந்தவர். பின்னால் ஏற்பட்டதை ஆராய்ந்து முன்னால் நடந்ததை அறிய முற்படுவது இயலாது, மூடநம்பிக்கையாகும். மரம் விதையிலிருந்து வருகிறது, விதை மரத்திலிருந்து எழுகிறது. மீண்டும் மீண்டும் அதே கேள்வி, அதே பதில். விடை அங்கில்லை. விதையும், மரமும் உலகத்தின் பகுதிகள். பகுதியால் தன்னை உணரமுடியாது, முழுமை பகுதியை விளக்கும்.

போர் சர்க்கார் தொடுப்பது. சர்க்கார் சமூகத்தின் பகுதி. சமூகம் புரிந்தால் போரின் நுணுக்கங்கள் புரியும். ரஷ்யா மீது படையெடுத்த நாடுகளெல்லாம் ரஷ்யரிடம் மாட்டித் தோற்றன. ரஷ்யக் குளிர் கடுமையானது என்று புரியாமல் போரை எப்படி நடத்துவது என்ற நுணுக்கம் போரில் வெற்றியைப் பெற்றுத் தாராது.

அழகான பெண்களுக்கு எளிதில் திருமணமாவதுண்டு. வசதியில்லாத அழகான பெண்ணுக்குத் திருமணம் தள்ளிப்போகும். அழகு உயர்ந்தது என்றாலும் திருமணம் செய்துகொள்ள வசதி தேவை என்பதை மறந்துவிட்டால், காரியம் பூர்த்தியாகாது. தன் வசதியைக் கொண்டு தன் திருமணத்தைக் கணித்த பெண்ணுக்கு, தனக்கு திருமணமாகாது என்று புரிந்தபோது, இதுவரையில்லாமல் வரன் வந்தது. விஷயங்கள் விநோதமாக மாறி, பணம் செலவில்லாமல் இரண்டு கல்யாணமும், ஓர் உபநயனமும் நடந்தன. அழகு பகுதி, வசதி திருமணத்திற்கு முழுமை. முழுமையை அறியும் மனத்திற்குத் திறன் உண்டு. பிரச்சினை புதிராக இருக்காது.

புதிராகக் காண்பது பகுதியின் அறிவு.

முழுமையை நாடினால் புதிர் மறையும்.

வாழ்வில் இறைவன் புதிராக இருக்கிறான்.

இறைவனில் வாழ்வு புதிரை இழந்து தெளிவாகிறது.

வேலை, திருமணம், படிப்பு, ஆகியவை முக்கியமானவை. சில சமயங்களில் வேலையில் குறை ஏற்படும். அது திருமணத்தால் ஈடு கட்டப்படும். ஒன்றில் ஏற்படும் குறையை சில சமயங்களில் வாழ்வு மற்றதால் ஈடு கட்டும். அவை வாழ்வின் பகுதிகளாக இருப்பதால் ஒரு பகுதி அடுத்ததின் குறைவை ஈடுகட்டலாம்.

அன்பு முழுமை பெற்றது. அதனளவில் முழுமை பெற்றது எனலாம். தாயன்பு இல்லாவிட்டால் அக்குறையை தீர்க்கவோ, ஈடுகட்டவோ முடியாது. அங்கு அன்பின் பிரச்சினைக்கு அன்பே விடைஎனக் கூறலாம்.

படிப்பால் ஏற்படும் குறைவை வேலை அல்லது திருமணம் ஈடுகட்டுவதுண்டு. அறிவால் ஏற்படும் குறையை அதுபோல் ஈடுகட்ட முடியாது.

படிப்பைப் பகுதியாகக் காணலாம்.

அறிவு முழுமையுடையது.

ஆன்மாவின் அம்சங்கள் எதுவும் அதுபோல் முழுமையுடையன. சத்தியம், ஞானம், நன்மை, உறுதி, அழகு, ஆனந்தம், அன்பு, மௌனம், அனந்தம், காலத்தைக் கடந்த நிலை ஆகியவை ஆன்மாவின் அம்சங்கள்.

சத்தியம் என்பதை Truth என்றால் அதன் பகுதியான fact உண்மை நிகழ்ச்சி எனலாம். ஞானம் என்பதை முழுமையுடையது என்றால் பட்டம், படிப்பை பகுதி எனலாம்.

நன்மை முழுமைஎனில் நல்ல செயலை (உதவி) பகுதி எனலாம்.

முழுமை பகுதி

உறுதி வாக்குறுதி

அழகு அழகி

ஆனந்தம் சந்தோஷம்

அன்பு ஆதரவு

வாழ்வில் முழுமையை முழுமையாலே அடையலாம். பகுதி ஒன்று தவறினால் அடுத்ததைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்கலாம்.

இறைவன்என்ற புதிருக்கு அவன் மட்டுமே விடையாகும்என பகவான் எழுதியதின் உட்கருத்து இதுவாகும்.

********

  1. பரம்பொருள் நம்மைத் தீண்டாமல் பரம்பொருள் நமக்குச் சித்திக்காது. அவனால் முடியாததைச் சாதிக்கச் சமூகம் உதவாமல் மனிதனால் சாதிக்க முடியாது. தனிமனிதனுடைய ஆர்வமே வளர்ந்து சமூகத்தின்மூலம் அவனிடம் மீண்டும் வருகிறது. மனிதனே ஆரம்பம்.

பரம்பொருளால் சித்திக்கும் பரம்பொருள்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பரம்பரை இந்துக்கள். எந்தக் காரியம் முடியவும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் சம்மதிக்கவேண்டும் என்பது ஆன்மீகச் சட்டம்.

பரம்பொருள் நமக்குச் சித்திப்பது என்றால் என்ன? உடலாலான மனிதன் மனத்தால் செயல்பட்டாலும் ஆன்மாவே அவனுக்குத் தலைவன். ஆன்மா மனிதனுக்குச் சித்தித்தால்தான் பிறகு எதையும் சித்திஎன நாட முடியும்.

அகந்தை அழிந்தபின் ஆன்மா விடுதலையடைகிறது. விடுதலையடைந்த ஆன்மா உயர்ந்து சென்று சச்சிதானந்தம்வரை செல்லும். சச்சிதானந்தம் எட்டினால் அங்கு பரம்பொருளின் புருஷனைத் தொடலாம். அதைக் கடந்து நிர்வாண சித்தியை நாடுபவர்களும் உண்டு. அதையும் கடந்து பிரம்மத்தை எட்டித் தொடலாம். இதுவரை உலகம் அறிந்தது. இது மேல் நோக்கியப் பயணம். அடுத்தது கீழ்நோக்கிய பயணம். அப்பயணத்தை மோட்சம்மூலம் பெற முடியாது. சத்தியஜீவியம் மூலம் பெறலாம். கீழ்நோக்கிய பயணத்தில் பரம்பொருள் இறங்கிவந்து நம் வாழ்விலும் பலிக்கமுடியும். இது பலிக்க நம்மைப் பரம்பொருள் தீண்டி இருக்கவேண்டும். பரம்பொருள் நம்மைத் தீண்டாமல், நமக்கு உலகில் பரம்பொருள் சித்திக்காது.

ஓர் உதாரணத்தால் இதை விளக்க முயல்கிறேன். பரம்பொருள் வாழ்வில் சித்திப்பதுஎனில் பரம்பொருள் நம் வாழ்வை ஏற்று நடத்துவதாகும். அது சத்தியஜீவிய சித்தி.

சமூகத்தில் வாழும் நாம் ஒரு வகையில் தனிமனிதர். மற்றொரு வகையில் நாம் அதன் அங்கம். தனிமனிதன் ஆலைகள் கட்டியிருக்கிறான், பல்கலைக்கழகங்கள், பாங்குகள் நிறுவியுள்ளான். சமூகம் தனிமனித வாழ்வில் பலித்ததால் தனிமனிதன் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ முடிந்தது. ஒரு மனிதன் தனியாக நின்று, சமூகத் தொடர்பில்லாமல், சமூகம் அவனுக்குதவ முன்வாராமல் பாங்கையோ, ஆலையையோ, நிறுவமுடியாது. இவன் பாங்கு ஆரம்பித்தால் அனைவரும் டெபாசிட் போடவேண்டும், கடன் வாங்கவேண்டும். ஆலை ஆரம்பித்தால் தொழிலாளர் வேலைக்கு வரவேண்டும், அவன் சரக்கை மார்க்கட் வாங்கவேண்டும். இவை ஓரிரு அம்சங்கள். சமூகம் தனிமனிதனை வாரி அணைத்து உச்சிமோந்து உயிர் கொடுத்தாலன்றி அவனால் எதையும் சாதிக்கமுடியாது. அதேபோல் பரம்பொருள் மனிதனை நாடித் தீண்டி ஆதரவு அளிக்காமல் மனிதனால் வாழ்வில் பரம்பொருளைச் சித்திக்க முடியாது.

இதற்கடுத்த கட்டமும் உண்டு. தனிமனிதன் ஜீவாத்மா என்பதால் அவ்வகையில் சமூகத்தைவிட உயர்ந்தவன். சமூகம் இவனுக்கு உதவுவதால்தான் தனிமனிதன் சாதிக்கிறான். அதற்கு அடிப்படையானது தனிமனிதனுடைய ஆர்வம். முன்னோடியான மனிதன் தன் எண்ணத்தாலுயர்ந்து, செயலால் பத்து, உணர்ச்சியால் மலர்வதால், அத்தகைய தனிமனிதர்களுடைய ஆர்வம் சமூகத்தில் அடித்தளத்தை நிரப்பி, அதிலிருந்து எழுச்சியாக உயர்ந்து சிகரத்தைத் தொட்டு சாதிக்கிறது. சமூகச்சாதனைஎன முடிவாக நாம் காண்பது ஆரம்பத்தில் தனிமனிதச் சாதனையேயாகும். மனிதனே முதல், அவனே ஆரம்பம், அவனே முடிவு. ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி என்பதால் மனிதனுக்குச் சமூகத்தைவிட உயர்ந்த இச்சிறப்புண்டு.

  • மனித முயற்சியால் எதுவும் முடியாது, அருள் அவசியம்.
  • மனித முயற்சியும், மனிதனுமே அடிப்படை, அஸ்திவாரம்,

என்ற இரண்டு கருத்துகளும் எதிரானவையாகத் தோன்றும். தற்கருத்து நம் மரபில் "அவனருளாலே அவன் தாள் வணங்கி'' என வழங்குகிறது. அடுத்தது எதிராகக் காணப்பட்டாலும் ஜீவாத்மாவே பரமாத்மாஎன்ற ஸ்ரீ அரவிந்தர் கருத்துப்படி முரணில்லை என்று கொள்ளலாம்.

தனிமனித முயற்சியே சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதால் தனிமனிதனே ஆரம்பம். சமூகத்தின் உதவியின்றி தனிமனிதன் பல காரியங்களைச் சாதிக்கமுடியாது என்பதுபோல், பரம்பொருளின் ஸ்பர்சமின்றி நாம் பரம்பொருளை அடையமுடியாது.

கல்லூரி, ரயில்வே, கஜானா, போலீஸ், போன்றவையின்றி மனிதன் எங்கே? அவன் வாழ்வை நடத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களும் தேவை. காட்டில் தவம் செய்யும் முனிவர்போல் ஊரில் குடும்பம் நடத்தமுடியாது.

நாட்டில் அரசியல் சாதிக்க மனிதனுக்கு நாடு அவனைத் தீண்டவேண்டும். தனிமனிதன் அரசியல் சாதிக்கமுடியாது. அதற்குக் கட்சிஆதரவு தேவை, மக்கள்ஆதரவு வேண்டும்.

நாட்டின் ஆதரவின்றி, நாட்டு மக்களின் ஆதரவின்றி அரசியல் மனிதன் எதையும் சாதிக்கமுடியாது. அரசியல் என்பது மக்களின் ஸ்பர்சமாகும்.

பரம்பொருளின் ஸ்பர்சமின்றி பரம்பொருள் சித்திக்காது என்பதில் ஸ்ரீ அரவிந்தர் சிறப்பாகக் கூறுவது மேலுலகிலுள்ள பரம்பொருளையன்று, நம்முள்ளேயுள்ள பரம்பொருள் எழாமல், எழுந்து நம் வாழ்வில் மிளிராமல் பரம்பொருள் சித்திக்காது என்கிறார்.

பரம்பொருள் சித்திப்பது மனித முயற்சியாலன்று, பரம்பொருளின் அருளால் என்பதை இப்படிக் கூறுவது லீலையின் உட்கருவை உணர வைப்பதாகும்.

******

  1. அவதாரம் கண்டத்தில் அகண்டம்.

Avatar is the infinite in the finite.

மனிதன் சிறியவன். இறைவன் அனைத்தையும் தன்னுட் கொண்டவன், அகண்டம். மனிதன் கண்டம். அவதாரப்புருஷன் சிறிய மனிதனிடையே பெரிய புருஷனாக அவதரித்தவன். தத்துவம் இறைவனை அகண்டமாகவும், சிருஷ்டியின் ஜீவராசிகளைக் கண்டமாகவும் வர்ணித்ததுடன், நாம் கண்டமாக (சிறியதாக) காண்பது உண்மையில் அகண்டமான பிரம்மம் என்றும் கூறுகிறது. நம் கண்ணுக்குச் செங்கல் களிமண். ஞானதிருஷ்டிக்குச் செங்கல் பிரம்மம். எல்லா மனிதர்களும் அப்பார்வைக்கு அகண்டம், இறைவன், பிரம்மம். இதை நாம் அறியமுடியாவிட்டாலும் அவதாரப்புருஷனை இறைவனாக மனம் ஏற்கும். அவதாரத்தில் ஆண்டவனைக் காணும்

பார்வையை மேலும் கூர்ந்து கவனித்தால் அனைவரும் ஆண்டவன் என்றறியலாம்.

இராஜகுமாரன் நாடகத்தில் பிச்சைக்காரனாக நடித்தால், பிரதம மந்திரி கிரிக்கெட் விளையாடினால், பெர்னார்ட் ஷா ஆஸ்பத்திரியில் படுக்கையாக வந்து சேர்ந்தால், நாம் அவர்களைப் பிச்சைக்காரனாகவோ, வியாதியஸ்தராகவோமட்டும் புரிந்து கொள்வதில்லை. இராஜகுமாரன், பிரதம மந்திரி, பேரறிஞர் நம் கண்ணுக்குத் தெரியாமற் போவதில்லை. மகாத்மாவையும், மார்ட்டின் லூதரையும், ஏசுவையும், இன்று உலகில் பிரபலமான பலரையும் வெறும்மனிதர்களாக உலகம் நடத்தியதுண்டு. அவர்கள் பெருமை வெளிவந்தபின்னரே அவர்களை உலகம் பாராட்டியது. அவர்களுடைய திறமை செயல்பட்டு பலித்தபின் உலகம் அவர்களை ஏற்றது. நம் ஆன்மீகத் திறமை செயல்பட்டு வெளிவந்தால் எல்லா ஜீவராசிகளும் இறைவன்என அறியலாம். கண்டமான மனிதனை அகண்டமான பிரம்மமாகக் காணமுடியும். அதுவே பூரணயோகத்திற்குரிய பார்வை. சூட்சுமப் பார்வையாக ஆரம்பித்து ஞானதிருஷ்டியாகி, திரிகாலத் திருஷ்டியாக மாறுவது யோகம்.

அன்னை ஆசிரமத்தில் நடந்துபோய்க்கொண்டிருக்கும் பொழுது புதிய carpet கம்பள விரிப்பின்மீது நடந்தவர், திடீரென நின்று கீழே பார்த்தவர், "இக்கம்பளம் என்னுடன் பேசிற்று. நான் அழகாக இருக்கிறேன், பார் என்றது'' என்று கூறினார். அன்னைக்குக் கம்பளத்தின்குரல் கேட்டது. சக்ரவர்த்தி சாலமனுக்கு விலங்கு பாஷை புரியும்.

கண்டமான ஜடப்பொருள்களிடையே நாமும் ஜடமாக, கண்டமாகப் பிறந்துவிட்டோம். நாம் நம்மை, கண்டமில்லை, உள்ளுறை இறைவனை நான் கண்டபோது அது அகண்டம் (infinity ) என்று அறிந்தேன் என்ற நிலைக்கு வந்தால், உலகில் அனைத்தும் அகண்டமாகத் தெரியும். ஆரம்பத்தில் மலரிலும், குழந்தையிலும், கடற்பரப்பிலும், வானவெளியிலும் அகண்டம் தெரியும். பாரதி சிறிய

கழுதைக்குட்டியைப் பார்த்தவர் அதன் அழகை ரசித்துக் கட்டி முத்தமிட்டார். பாரதியின் கண்ணுக்கு அது கழுதைக்குட்டியில்லை, அழகுவாய்ந்த இறைவனின் திருவுருவம்.

அவதாரப்புருஷர்களையும் சிறுவயதில் உலகமோ, உடனுள்ளவரோ பிரம்மமாக அறிவதில்லை. ஒரு சிலர் கண்ணுக்கே அது தெரியும். ஜோஸ்யர் சொல்வதுண்டு. ஜோஸ்யம் பலிக்கட்டும் என்று உலகம் காத்திருக்கும்.

பரமஹம்சர் கண்ணுக்கு நரேன் மனிதனாகத் தெரியவில்லை. நரேனுடைய விசேஷ அம்சம் தெரிந்தது. நிஷ்டையில் நரேன் பிறந்த சந்தர்ப்பத்தை அவரால் பார்க்க முடிந்தது. அதை அறிந்தபின் நரேனைத் தேடி காலேஜுக்குப் போய் இந்தப் புரோகிதர் நரேனுக்கு அவமானத்தைத் தருவார். என்னைத் தேடி கல்லூரிக்கு வரவேண்டாம், எனக்கு வெட்கமாயிருக்கிறது என்பார். உன்னைக் காணாவிட்டால் என் நெஞ்சத்தைப் பிழிந்தெடுக்கிறது என்பார் பரமஹம்சர்.

அவதாரம் தன் தெய்வாம்சத்தை வெளியிட்டபின் அனைவரும் அறிவர். வெளியிடுமுன் ஒரு சிலர் அறிவார்கள். அன்னை மனதில் பலித்தால் மனிதரெல்லாம் பிரம்மம் (அகண்டம்) என பக்தரால் அறியமுடியும். கடல் அளவு கடந்தது. பிரம்மாண்டமான நீர்ப்பரப்பு. அதன் நீர் உப்பு ஆனதால் பயன்படுத்த முடியாது. பரவெளியை நிரப்பியுள்ள பரம்பொருள் அத்தகையது.

வெய்யிலால் தூய நீர் உப்பிலிருந்து பிரிக்கப்பட்டு மேகமாகி, மழையாகப் பொழிந்து ஏரி, குளம், ஆறு, வாய்க்கால், கிணறு ஆனால் அகண்டமான கடலைக் கண்டமான கிணறாகக் காண்கிறோம்.

வற்றாத ஊற்றுள்ள கிணறு தன் தன்மையால் அகண்டமாவதைப் போல் மனிதப் பிறவியில் அவதாரம்.

பரம்பொருள், பரமாத்மா, பராத்பரா, பரபுருஷா என்ற சொற்கள் அகண்டமான ஆண்டவனைக் குறிக்கின்றன. பரமாத்மா ஜீவாத்மாவாகி உடலை ஏற்று மனிதனாகப் பிறக்கிறது. உடலான மனிதன் பரிணாம வளர்ச்சியால் உணர்வையும், மனத்தையும் பெறுகிறான். தபஸ்வி மனத்திலுள்ள மனோமயப்புருஷனைக் கண்டு, அதன்மூலம் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் அடைந்து மோட்சம் பெறுகிறான். இது மனிதமுயற்சி. அருள் செயல்பட்டு ஆண்டவன் மனிதனாகப் பிறப்பெடுப்பது அவதாரம்.

  • மனித ஜீவனுக்கு உடல், உணர்வு, மனம், ஆன்மா, என்பவை பகுதிகள்.
  • இவை அனைத்தும் சேர்ந்தது ஜீவன்.
  • பரமாத்மா, ஜீவாத்மாவைத் தேடி வரும்பொழுது உடல் ஆன்மவிழிப்புள்ளவன், உணர்வில் அதுபோன்றவன், மனத்தால் பரம்பொருளைப் பெறுபவன், ஆன்மாவால் பலன் பெறுபவன் என்பவருண்டு.
  • ஜீவாத்மாவைத் தேடிவரும் பரமாத்மாவை மனித ஆன்மா ஏற்றால், மனிதன் மகாத்மாவாகிறான்.
  • அதேபோல் மனோமயப்புருஷன் பெற்றால், genius மேதை பிறக்கிறான்.
  • உணர்வில் பரமாத்மா செயல்பட்டால் மாவீரன் ஜனிக்கிறான்.
  • ஜீவனில் பரமாத்மா ஏற்கப்பட்டால் அவன் அவதாரம் ஆகிறான்.
  • ஜீவனில் ஏற்ற பரமாத்மா, உடலால் ஏற்கப்பட்டதைப்போல் தெரியும்.
  • ஏனெனில் ஜீவனுக்குள்ள முழுமையான அம்சம் உடலுக்கும் உண்டு.

சத்தியஜீவன் அவதாரத்திலிருந்து வேறுபட்டவன்:

  • சைத்தியப்புருஷன் விழித்து மௌனம், திருஷ்டி, யோகம், தெய்வீகம்மூலம் சத்தியஜீவியத்தை அடைந்தால், அதே சமயம் பரிணாம மாற்றம் உணர்விலும், உடலுக்கும் போய் சைத்தியப் புருஷனுக்கு(substance)உடலுக்குள்ள உரமும் வலிமையும் வந்து, உடலின் சைத்தியமாக மாறும்பொழுது மனோமயப் புருஷன் ஈஸ்வரனாகிறான். அதுவே சத்தியஜீவன். அவதாரம் உயர்ந்த மனிதன். சத்தியஜீவன் மனிதனைக் கடந்த அடுத்த (species) நிலைக்குரிய பிறவி.

*******

  1. மனிதன் விழிப்பற்று இருப்பதால், அவன் முன்னேற்றமும் அப்படியேயிருக்கிறது. உள்மனம் பெறும் ஆன்மீக அனுபவங்களை மனிதன் அறியாமலிருப்பதுண்டு.

விழிப்பற்ற மனிதனின் ஆன்மீக வளர்ச்சி.

ஓர் ஊரில் உள்ள சந்தர்ப்பங்களை அனைவரும் அறிவதில்லை, பயன்பெறுவதில்லை. ஒரு குடும்பத்து வாய்ப்புகளை ஓரிருவர்தான் அறிந்து பலன் பெறுகிறார்கள். இன்று நாட்டில் வியாபாரம் பெருகுகிறது. T.V. பெருநகரங்களில் எல்லா வீடுகளிலும் உள்ளன எனப் பத்திரிக்கை கூறுகிறது. ஆனால் 30கோடி பேர் வறுமையிலுள்ளனர். 50 ஆண்டுக்குமுன் வறுமை இருந்ததுஎனில் அன்று வாய்ப்பில்லை. இன்று 50 கோடி பேர் வறுமையைக் கடந்து வந்துள்ளனர். இந்த நிலையிலும் 30 கோடி பேருக்கு வாய்ப்பு கண்ணில் படவில்லை. அவர்கள் விழிப்பற்றுள்ளனர்.

இதே நிலையை பகவான் சுட்டிக்காட்டுகிறார். மனிதனுக்கு விழிப்பில்லை என்கிறார். பிரபஞ்சத்தின் உச்சியில் தெய்வங்களும், அடிமட்டத்தில் விலங்குகளும் உள்ளன. விலங்குகட்கு மனம் இல்லை. அதனால் உணர்வால் செயல்படுகின்றன. உணர்வுக்கு விழிப்பில்லை.

உணர்வுக்கு உணவும், உறக்கமும் தெரியும். விலங்கினம் மன நிறைவோடுள்ளது. உணவும், உறக்கமும் உள்ளவரை அதன் வாழ்வில் நிம்மதியுண்டு. அதற்குமேல் விலங்குக்கு நினைக்கத் தெரியாது. ஏனெனில் நினைக்கும் அறிவு அதற்கில்லை. சிருஷ்டியின் உச்சியில் தெய்வங்கள் உறைகின்றன. தெய்வங்கள் பூமிஅளவுள்ளன. அவர்களால் எதுவும் முடியும், முடியாததில்லை. நம்மைப் போன்ற ஸ்தூல உடல் அவர்கட்கில்லை. சைத்தியப்புருஷன்எனும் ஆன்மாவும் இல்லை. ஆனால் அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். உலகம் அவர்கட்குக் கட்டுப்பட்டது. ஒளிமயமான விஷ்ணுவும், சக்தி வாய்ந்த சிவனும், உலகைப் படைத்த பிரம்மாவுக்கும் என்ன வேண்டும்? எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. இந்திரலோகத்தை அடைய நாம் கனவு காண்கிறோம். தவம் பலித்தால் இந்திரபதவியை நினைக்கலாம். இந்திரனுக்கு என்ன தேவை? மனிதன் செல்வத்தை நாடுகிறான். அதன் தெய்வமான லக்ஷ்மியைத் துதிக்கிறான். லக்ஷ்மிக்குச் செல்வம் தேவையா? சரஸ்வதிக்கு ஞானம் தேவையா? The Gods are satisfied with their splendours. . உலகையே உற்பத்திசெய்து காத்து அழிக்கும் கடவுள்களுக்குத் தங்கள் பிரபலம் திருப்தி அளிக்கிறது என்கிறார் பகவான். அவர்களுக்கும் முன்னேற்றமுண்டு. அதை அவர்கள் நாடுவதில்லை. நாடினால் முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும் சைத்தியப்புருஷன் தெய்வங்களில்லை. தெய்வலோகத்திலேயே இல்லை. அது பூவுலகில் மட்டுமேயுண்டு. அதை நாடினால் தெய்வம் மனிதப் பிறவி எடுக்கவேண்டும்.

பிரபஞ்சத்தின் அடித்தளம் இருள், ஜடமானது; சிகரம் ஜோதி, சச்சிதானந்தம். இருள் முழுஇருளாக இருப்பதால் கண்ணுக்கு அது தெரியாது. ஜோதி ஜகஜ்ஜோதியாக இருப்பதால் கண் கூசும், அதைப் பார்க்க முடியாது. இவையிரண்டும் தனித்து, விலகியுள்ளன. ஜோதியே இருளாக மாறி, மீண்டும் தன்னைக் கண்டுகொள்ள முயல்வது சிருஷ்டி என்கிறார் பகவான். அந்த இலட்சியம் பூர்த்தியாக, இருளுள் புதைந்துள்ள ஜோதி வெளிவந்து, எழுந்து, உயர்ந்து, மேலேபோய்

ஜோதியுடன் கலக்கவேண்டும். இதுவே இறைவனின் சித்தம். அதை விலங்குகளால் அறிய முடியாது. தெய்வங்களுக்கு அறியும் ஆவலில்லை.

இறைவனின் சித்தம் சிருஷ்டியின் பரிணாமமாகப் பூர்த்தியாக வேண்டுமானால், அதற்குரிய கருவி மனிதன். ஏனெனில் அவனுக்கு உணர்வுடன், மனம் உண்டு. மனம் விழிப்படையக் கூடியது. மனம் விழித்தெழுந்தால் அவனுக்கு ஜோதி விளங்கும். தான் புதைந்துள்ள இருள் தெரியும். இருளிலிருந்து வெளிவர அவனால் முடியும். இருளையும், ஜோதியையும் இணைக்கும் பாலமாக மனிதன் அமைவான். இதைப் பூர்த்தி செய்ய அவதாரங்களால் முடியாதுஎன இறைவனே உலகுக்கு வந்ததுதான் ஸ்ரீ அரவிந்தம்.

யோக வாழ்வு இக்குறிக்கோள் முன்னால் கடுகு. எனினும் யோக வாழ்வின் அடிப்படையும் இதுவே. யோகவாழ்வில் பிரபஞ்சத்தின் ஜோதியையும், இருளையும் இணைப்பதற்குப் பதிலாக நம்முள் உள்ள ஜோதியையும், இருளையும் இணைக்க முயல்கிறோம்.

மனிதனுக்கு விழிப்பில்லை unconscious. அவனது உள்மனம் inner mind விழிப்பாக இருக்கிறது. உள்மனம் வளர்வது அவன் மேல் மனத்தில் தெரியாது.

நன்செய் நிலம், ஏரி, ஆறு, வாய்க்கால் உள்ள இடங்களை வளமான இடங்கள்எனப் பார்த்தவுடனே தெரியும். அளவுகடந்து பூமிக்கடியில் நீருள்ள பாலைவனத்தை எவரும் பாலைவனம் என்றே அறிவர். இந்தியாவில் விவசாய முன்னேற்றத்தில் தலைமையான மாநிலம் பஞ்சாப். அங்கு மழை 10''. 10'' மழை பெய்யுமிடம் பாலைவனம்என நிர்ணயிக்கப்படும். 5 நதிகள் ஓடுவதால் பஞ்சாப் விவசாயச் சிறப்புப் பெற்றது.

போர்ட் டிரஸ்ட் ஆபீசில் சீனிவாச ராமானுஜத்தின் மேதாவிலாசம் தெரியாததுபோல் உள்மனம் பெறும் சித்திகள், அனுபவங்கள், ஞானம் மனிதருக்குத் தெரிவதில்லை.

20 ஆண்டு சத்பிரேம் அன்னையுடன் Agenda அஜெண்டா எழுத உதவினார். ஸ்ரீ அரவிந்தர் சத்பிரேமின் ஆன்மீகச் சிறப்பை அன்னைக்குப் பலமுறை கூறியுள்ளார். அவை சத்பிரேம் அறிந்ததே. எனினும் தமக்கு 20 ஆண்டு ஆசிரம வாழ்வில் எந்தப் பலனும் தெரியவில்லைஎன அன்னையிடமே குறைப்பட்டுக்கொள்வார். அன்னையின் விளக்கங்கள் அவருக்கு முழுதிருப்தி தரவில்லை. வாழ்விலுள்ள சில அனுபவங்கள்:

  • பள்ளி, கல்லூரியில் எந்தச் சிறப்புமில்லாமலிருந்தவர் வாழ்வில் பெருஞ்சிறப்புப் பெறுவதுண்டு.
  • எல்லா வகைகளிலும் சிறந்தவர்என்று இளவயதில் கண்டவர்கள் பின்னர் பேர், ஊர், தெரியாமல் போவதுண்டு.
  • ஊர், பேர் தெரியாத கம்பெனி சில வருஷத்தில் நாட்டில் பிரபலமாவதுண்டு.
  • 70 வயதுக்குமேல் எழுத்து, பேச்சு, பாட்டு, அரசியல் திடீரென பிரபலம் அடைவதுண்டு. அது அரிது.

மனிதனுடைய திறமை, அறிவு, சாதனை ஆகியவை அவனுள் உருவாவது அவனுக்கும், மற்றவர்க்கும் தெரியாமலிருப்பதற்குக் காரணம் மேல்மனம், உள்மனத்தினின்று பிரிந்திருப்பதால்தான். ஒருவரை நாம் அறியவேண்டுமானாலும், அவரே அறிய வேண்டுமானாலும், சூட்சும அனுபவமுள்ளவர், சூட்சும அறிகுறிகளைக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். ஆசிரம வாயில் தம் பிறந்த நாளன்று ஒரு பக்தர் தற்செயலாய் சந்தித்த வெளிநாட்டாரை பகவான் அறைக்கு அழைத்துப் போனார். அச்சமயம் நல்ல மழை. வந்தவர் பக்தருடன் நிரந்தரமாகத் தங்கியதை அருளான மழையும், பகவான்அறையும், பிறந்தநாளும் குறிக்கின்றன. வயதானபின் நாம் வெற்றி பெற்ற விஷயங்களின் ஆரம்பத்தை நினைவுகூர்ந்தால் சூட்சும அறிகுறிகள் என்னஎன அறியலாம்.

******

  1. நல்லவனாக இருப்பது அகந்தையற்ற நிலை. நல்லவன் எனப் பெயரெடுக்க விரும்புவது அகந்தை.

நல்லவனுக்கு அகந்தையில்லை.

இயல்பாக நல்ல குணம், புத்திசாலித்தனம், திறமை, போன்ற உயர்ந்தவை பலருக்குண்டு. இதை அவர்கள் அறிவதும் உண்டு, அறியாமலிருப்பதும் உண்டு. அழகானவரை அனைவரும் கவனிப்பார்கள். சிறு வயதிலிருந்தே குழந்தையின் அழகை மற்றவர் அறிவார்கள், பேசுவார்கள். அழகாக இருப்பதால் அகந்தையில்லை. தான் அழகானவள்என்று நினைத்து அதற்கேற்ப நடக்க ஆரம்பித்தால், அது அழகின் வெளிப்பாடன்று, அகந்தையின் வெளிப்பாடு.

தான்எனும் முனைப்பில்லாமல் எந்த உயர்வுக்கும் போகலாம். எவ்வளவு பெரிய பதவியையும் வகிக்கலாம். அவை வளர்ந்தபடி இருக்கும். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும். நடைமுறையில் இதுபோல் இருக்க முடிவதில்லை.

நல்லவர் என்பவருள் இதுபோன்றவர் உண்டு. இளம் வயதில் ambition வாழ்க்கையில் முன்னேற வேண்டும், பெரிய பட்டம் பெறவேண்டும், பெரிய உத்தியோகம் வகிக்கவேண்டும், அளவுகடந்த சொத்தை அன்றே பெறவேண்டும், தலைவனாக வேண்டும், குடும்பத்தில் அனைவரும் தமக்குக் கட்டுப்பட வேண்டும், ஏராளமான பணத்தை வாரி வீசி வாழவேண்டும், ஊரில் பெரிய மனிதன்எனப் பெயர் பெறவேண்டும், இலக்கியத்தில் இணையற்ற உயர்வு பெறவேண்டும், ஒரு வருஷமாவது மந்திரிபதவி தேவை, எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் பொதுஅறிவு general knowledge வேண்டும் என்றெல்லாம் மனம் நினைப்பதுண்டு. சிலருக்கு அவை பலிக்கும். நினைத்தது பலிக்காவிட்டால் வேறு பலிக்கும். பலருக்கு நினைவோடு வாழ்வு முடியும். அவர்களுள் நல்ல உள்ளம் கொண்டவர் சிலர், எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது,

நல்லவன்எனப் பெயர் வாங்க வேண்டும்

என்பதே என் குறிக்கோள் என்பவருண்டு. உடன் உள்ளவர் அனைவரும் இதைப் போற்றுவார்கள். நல்ல மனிதன்', நம்மால் இதுபோல் இருக்க முடியவில்லையே' என்று கருதுவார்கள். இது நல்லது என்பதில் ஐயமில்லை. ஆனால் இங்கு ஆரம்பித்தால், அது நல்லதில் முடியாது. நல்லது என்பதின் பெயரால் நமக்குத் தவறு ஏற்படும். ஆன்மீகத்தில் அது பெரிய தவறாகும். ஆன்மாவுக்கு ஊறு செய்யும். தவறு செய்பவன் தயங்குவான், பயப்படுவான், தவறுஎன்று தெரிவதால் தன்னைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கும். நல்லவன்என்று பெயர் எடுக்கவேண்டும் என்று நினைப்பது நல்ல எண்ணம் என்பதால் அதனுள் உள்ள குறை தெரியாது. குறை தெரியாததால், குறை வளர்ந்தபடியிருக்கும். இயல்பாக நல்லவனாக இருக்கும்பொழுது நம்மைப் பற்றி நினைப்பதில்லை, நல்லதைப் பற்றியும் நினைப்பதில்லை. ஏனெனில் அது இயல்பாக உள்ளது. நல்லவன்என்று பெயர் எடுக்கவேண்டும் எனில் நாம் இடைவிடாது அதையே நினைக்கின்றோம். அந்நினைவு நம்மைப் பற்றியே நாம் நினைத்துக் கொண்டிருப்பதாக முடியும். நம்மைப் பற்றியே நாம் நினைப்பது சுயநலத்தை வளர்க்கும். அதுவும் (மற்றவர்களைவிட) நல்லவன்எனப் பெயர் எடுக்கவேண்டும் என்றால் தன்னை உயர்வாகக் கருதும், அது அகந்தையை வளர்க்கும்.

மனிதன் உயிரோடு இல்லை என்றால் அவனை நல்லவன் என உலகம் பேசும். காலமானபின் ஒருவரைக் கெட்டவன்என உலகம் கூறுவதில்லை. உயிரோடுள்ளவரை நல்லவன்என ஒருவரைப் பேசினால் அது, "அவன் பணக்காரன், நல்லவன்என அவனைப் பேசாவிட்டால் உபத்திரவம் வரும்'' என்பதே பொது விதி.

  • உலகம் வல்லவனை, அதுவும் எவன் வலிமை நிச்சயமாகப் பாதிக்குமோ அவனை, நல்லவன்என வாயார, மனமார, உளமாரப் புகழும்.
  • இதைப் புகழ்என உலகம் எடுத்துக் கொள்ளும்.

  • அனைத்துலகம் நாடுவது அவ்வலிமையையே.
  • வலிமையை நாடும் மனம், தன்னையே ஏமாற்றிக்கொண்டு தான் நல்லவன்என்று பெயரெடுக்க முனைவதாக அறியும்.
  • நல்லவனாக இருப்பது மேற்சொன்னதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
  • ஒன்றை நாடும் மனம், வேறொன்றை நாடுவதாகக் illusion மாயை எனப்படும்.
  • அகந்தை தன்னை வலுப்படுத்தும் முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

உலகில் சேவை செய்தவர் ஆயிரக்கணக்கானவர். பெரிய சேவை செய்தவர்கட்குப் பெரியபரிசு கொடுத்ததும் உண்டு, எந்தப் பரிசும் கொடுக்காததும் உண்டு. கொடுத்த பரிசை பெரியவர்கள் மறுத்ததும் உண்டு. எந்தச் சேவையும் செய்யாமல் எவரோ செய்த சேவைக்கு ஏராளமான பரிசு பெறுவதும் உலக வழக்கு. மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு அளிக்காத உலகம், அவரைப் பின்பற்றிய மார்ட்டின் லூதர் கிங் என்பவருக்குக் கொடுத்தது. நேருவுக்கு நோபல் பரிசில்லை, ஸ்ரீ அரவிந்தரையும் உலகம் கண்டுகொள்ளவில்லை. ஆஸ்பத்திரி சேவை செய்ததை உலகம் கண்டுகொண்டது. ஆரோவில் நகரம் நிர்மாணித்ததைக் கண்டுகொள்ளவில்லை. ஐன்ஸ்டீனுக்கு 8 ஆண்டு பரிசு தர தயங்கிய உலகம், கொடுத்தபொழுது அவருடைய Theory of Relativity க்குக் கொடுக்கவில்லை. பரிசுகள் சர்க்கார் தருவது. நல்லவன்என்ற பெயரை மக்கள் தருவார்கள். ஷேக்ஸ்பியரின் சிறப்பான 4 நாடகங்களும் tragedies வருத்தமான கதைகள். ஷேக்ஸ்பியர் மனிதவாழ்வின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டினார். ஆனால் அதை மனிதனின் தோல்வி மூலமாகக் (tragedy) காட்ட முடிந்தது. அது 400 வருஷத்திற்கு முன். இன்றும் மனநிலை, உலகத்து மனநிலை, பெரும்பாலும் அது போன்றேயிருக்கிறது. மனிதனின் குணத்தை comedy நல்ல முடிவுமூலமாகப் படம் பிடிக்கும் எழுத்தோவியம் இதுவரை எழவில்லை. கொள்வது

நல்ல பெயர் எடுக்க முனைவது பழைய உலகத்திற்குரியது, நல்லவனாக இருப்பது அன்னை வாழ்வுக்குரியது.

******

  1. நிகழ்கால நினைவு சந்தோஷத்தை அளிக்கும். கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ நினைப்பது ஏமாற்றம் தரும்.

ஏமாற்றமெல்லாம் சந்தோஷத்தை உற்பத்தி செய்பவை. கட்டுப்பாட்டிற்குரிய கல்லூரிப் படிப்பு, பட்டத்தில் முடியும். ஆஸ்பத்திரிவாழ்வு உடல்நலத்தைத் தரும். சிறந்த எதிர்காலத்திற்காக அதைப் பொறுத்துக் கொள்ளலாம். அதற்கு அடுத்த நிலையுண்டு. படிப்பில் ஊன்றி நிலைத்து அளவுகடந்த சந்தோஷத்தைக் காணலாம். ஆப்பரேஷனுக்குப்பின் படும் வேதனையில் அதே சந்தோஷத்தைக் காணமுடியாது. எனினும் அங்கும் அது உள்ளது. துரோகத்தால் வதையும் மனிதன், துரோகியின் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அறிய முயன்றால், துரோகத்திலும், துரோக மனப்பான்மையிலும் அதே சந்தோஷத்தைக் காணலாம்.

துரோகத்தின் தூய்மை.

அளவு கடந்து சந்தோஷமாகத் துள்ளி ஓடும் குழந்தை கடந்ததையோ, எதிர்காலத்தையோ நினைப்பதில்லை. வயது வந்தபின் அதுபோன்ற சந்தோஷம் ஒருவர் வாழ்வில் ஏற்பட்டு அவர் தன்னை மறந்திருந்தால், "இவருக்குத் தலைகால் புரியவில்லை. எதிர்காலத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை'' என்பார்கள். எதிர்காலத்தை நினைத்தால் சந்தோஷம் போய்விடும். அப்படி நினைக்காததால்தான் சந்தோஷம் எழுகிறது. அதுவே சூட்சுமம்.

எதிர்காலத்தை மறந்தால் சந்தோஷம் எழும். ஆப்பரேஷனுக்குப்பின் வேதனைப்படுபவர் ஏன் அது தனக்கு வந்தது என்று அறியமுயன்றால், எந்த தன் குணம் இந்த வேதனைக்கு அடிப்படைஎனப் புரிந்தால், வேதனை 98% குறையும். கான்சர் பேராசையுள்ளவர்க்கு வருகிறது என்கிறார் அன்னை. பேராசைக்காரர் அதை அறிவதில்லை, ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொண்டால் கான்சரே குணமாகும். மூலம், பௌத்திரம் வந்தவர்கள் எரிச்சலாகப் பேசுவார்கள். அது வியாதியால் வந்தது. உண்மையில் எரிச்சல்குணம் உள்ளவர்க்குப் பௌத்திரம் வரும். எரிச்சலை விட்டொழிக்க முன்வந்தால் பௌத்திரம் குணமாகும்.

கடந்தது நினைவுக்குரியது. எதிர்காலம் கற்பனைக்குரியது. இரண்டும் மனத்தில் எழுபவை. நிகழ்காலம் ஆன்மாவுக்குரியது. அதிலும் மனம் கலக்கும். கடந்ததிலிருந்து மனத்தை விலக்குவது கடினம். நிகழ்காலத்தில் மனத்தைச் சேர்ப்பது கடினம். ஆன்மாவுக்குரியது என்பதால் அனந்தனுக்குரியது. ஆனந்தம் என்பதற்கு அனந்தம்எனப் பெயர்.

கட்டுப்பாடு சந்தோஷத்தைக் குறைக்கும். கட்டுப்பாடு அதிகமானால் வலி ஏற்படும். அதையே கொடுமை என்கிறோம். கட்டுப்பாட்டிற்கு எதிரானது சுதந்திரம். சுதந்திரம் இருந்தால் சந்தோஷம் எழும். முழுச்சுதந்திரமிருந்தால் கட்டுப்பாடு வரமுடியாது. கட்டுப்பாடற்ற முழுச்சுதந்திரம், ஆனந்தத்தைத் தரும். அதனால் அதை அனந்தம் (சுதந்திரம்) என்றார். நிகழ்காலம் ஆன்மாவுக்கும், ஆனந்தத்திற்கும், அனந்தனுக்கும் உரியது என்பதால் அது சந்தோஷத்தைக் கொடுக்கும்.

உலகவாழ்வை மனிதன் அது உள்ளதைப்போல் ஏற்றுக்கொண்டுள்ளான். அது நல்லதும், கெட்டதும் கலந்தது. நம் விதிப்படி வருவதை ஏற்று அனுபவிக்க மனிதன் முடிவு செய்துள்ளான். வாழ்வில் சந்தோஷம் மட்டும் இருக்கமுடியும் என்பதை மனிதன் இன்று நம்பும் மனநிலையில்லை.

ஸ்ரீ அரவிந்தம், "மனிதன் தன் மனத்தால் இதை நம்பினால் அது உலகில் நடக்கும்'' என்கிறது.

இதன் தத்துவம் என்ன? அதற்குரிய விளக்கம் என்ன? கடந்த காலக் கஷ்டங்கள் என்னாவது? எதிர்கால நிலையற்ற பயங்கரம் எப்படி நம்மைவிட்டு வைக்கும்? ஏமாற்றம், வலி, துரோகம் உள்ளவரை மனம் எப்படி ஸ்ரீ அரவிந்தம் கூறுவதை ஏற்கும்?

  • ஏமாற்றம், வலி, துரோகம் உள்ளவரை எப்படி மனம் நம்பும்? என்பதை மாற்றி,
  • மனம் நம்பினால் ஏமாற்றம், வலி, துரோகம் மறையும்என ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.

அதற்குரிய விளக்கம் :

காரியத்தைச் சாதிக்கக் கட்டுப்பாடு வேண்டும். கட்டுப்பாட்டுடன் படித்தால் படிப்பு, பட்டம் பெற்றுத் தரும், சந்தோஷம் எழும். பட்டத்தில் படிப்பை முடிக்காமல் அறிவை நாடினால் அபரிமிதமான சந்தோஷம் எழும். இச்சட்டமே வலிக்கும், துரோகத்திற்கும் எனினும், லீலை என்ற கருத்தையும், அறியாமை ஏற்பட்டதின் தத்துவ விளக்கமும் தெரியும்வரை அவை விளங்கா. சுருக்கமாகக் கூறலாம். ஆனந்தமே வலியாக மாறியதால் வலியை மாற்றும் இரஸவாதம் தெரிந்தால் ஆனந்தம் வரும். நட்பு இனிமை தரும். துரோகம் கொடுமையானது. இறைவனிடம் உள்ள நட்பை இனிமையாக்குவது நம் கடமை. அதனின்று வழுவும்பொழுது இறைவனின் கருவிகள் இணைந்து வந்து நம்மை இறைவனை நோக்கித் திருப்பும்பாதை நமக்குத் துரோகமாகத் தெரிகிறது. அதன் விவரம் தெரிந்தவுடன் துரோகம் என்பது உயர்ந்த நட்புஎன விளங்கும். அதை விளங்க வைக்கும் கருவி துரோகி.

இதுவரை பட்ட வலியும், நஷ்டமும் அறிவுக்கு ஆனந்தமாகவும், இனிமையாகவும் விளங்கியபின் வாழ்வு தானே சந்தோஷமாக மாறும்.

**********



book | by Dr. Radut