முன்னுரை
அமிர்தம் என்றால் மரணமிலா வாழ்வை அளிப்பது என்று பொருள். அருள் மனித வாழ்வில் பல வகையில் செயல்பட்டு, தன்னைப் பூர்த்தி செய்துகொள்கிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இருந்து, வாய்ப்பை உற்பத்தி செய்வது வரை பல காரியங்களைச் செய்வது அருள். அவற்றுள் தலையாய காரியம் மனிதனுக்கு அமிர்தத்தைத் தரக்கூடியது. அருள் அன்னையிடம் இருக்கிறது. அமிர்தம் மனிதனுக்குத் தேவைப்படுவது. அருளால் அமிர்தத்தை உற்பத்தி செய்வது நம்பிக்கை, பிரார்த்தனை, வழிபாடு, சாந்தி, அழைப்பு, ஒளி போன்றவை. தத்துவரீதியாக இவற்றின் உண்மை என்ன? நடைமுறையில் அவற்றைப் பயன்படுத்த, பயன்படுத்தி முழுப்பலன் பெற தேவையான முறைகள் எவை? சாதாரண பக்தனுக்கு அன்னையின் பேரொளியில் முழு நம்பிக்கை இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் அப்பேரொளியின் பிரத்யட்சத்தைப் பார்ப்பது எப்படி? நோயின் மூலம் எது? அதன் ஆணிவேரும் சல்லிவேரும் அழிந்து, ஆரோக்கியம் வளர்வது எப்படி? என்பன போன்ற கருத்துக்களை விரிவாகவும், விளக்கமாகவும் சொல்ல முயன்று எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு இந்நூல்.
தியான மைய அங்கத்தினர்களுக்காக எழுதப்பட்டு, பின்னர் அவர்களுக்காக அச்சிடப்பட்டு விநியோகம் செய்யும் காலத்தில் மற்ற அன்பர்களுக்கும் இந்த வெளியீடுகள் தொகுப்பாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணத்தால், இந்த முதல் 8 வெளியீடுகளை "அருளமுதம்'' என்ற தலைப்பில் வெளியிடுகிறோம்.
கர்மயோகி
- Login to post comments