Skip to Content

பகுதி 5

 

தாயார் : பெரிய இடம் பணிவுள்ளது. அது பக்குவம்.

பெண் : நான் அண்ணனைச் சொல்கிறேன். கார் வந்தபின் எனக்கு ஆட்டோவில் போக மனம் இடம் தரமாட்டேன் என்கிறது. என் மனம் மாறினால் அண்ணன் மனம் மாறுமா?

தாயார் : அது சரி. பிரச்சினை பெரியது. ஆரம்பத்திலேயே இப்படியிருந்தால் என்ன செய்வது?

பெண் : இதற்கு வழியேயில்லையா? அப்பா வருகிறார் அம்மா.

கணவர் : பெரியவன் செய்வது தவறு. கோயம்புத்தூருக்குக் காரில் போகவேண்டும் என்கிறான்.

பெண் : நீங்கள் சொல்லக்கூடாதா?

கணவர் : எனக்கு, பையன் காரில் போகவேண்டும் என்ற நினைப்புள்ளது. நான் சொன்னால் அது எப்படி நடக்கும்? விசேஷம் என்னவென்றால் பார்ட்னர் பெரியவனை, காரில் போகச் சொல்லி யிருக்கிறார்.

பெண் : அவர் பெருந்தன்மையாகச் சொன்னால் நாம் அதை ஏற்கலாமா?

தாயார் : பெரியவன் என்ன செய்யப் போகிறான்?

கணவர் : நிச்சயமாக அவன் காரில் போவது தவறு. நான் கூடாது என்று சொல்லி விடுகிறேன்.

பெண் : ஏதாவது சொல்லம்மா? பேசாமலிருக்கிறாயே.

தாயார் : அவனுக்குப் புத்திமதி சொல்லவேண்டும். அவன் காரில் போகக்கூடாது. அத்துடன் நிற்காது, காரில் போக வேண்டும் என்ற எண்ணம் தவறு என அவனுக்கும் புரியும்வரை நமக்கு நிம்மதியில்லை.

கணவர் : அவன் சிறு பிள்ளை. அவனைச் சொல்லிப் புண்ணியமில்லை. எனக்கே இது விஷயத்தில் மனம் சரியில்லை. விஷயம் என வருமுன், வந்துவிட்டது போல் மனம் நிலை இழந்து செயல்படுகிறது.

பெண் : எனக்கும் அப்படித்தானிருக்கிறது. அம்மா, பேசுங்கள் அம்மா.

தாயார் : அவன் காரில் போவது தவறு என்று தெரிந்தாலும், என் மனம் அவன் பஸ்ஸில் போக சம்மதிக்கவில்லை.

பெண் : நாமெல்லாம் மாறாமல் அண்ணனைச் சொல்வதில் பயனில்லை.

கணவர் : போய் அண்ணனைக் கூட்டி வா.

பெண் : அண்ணா போனில் இருக்கிறார், வருகிறார்.

பெரியவன் : அப்பா, நான் இரவு ரயிலுக்குப் போகிறேன்.

அனைவரும் : என்னாச்சு?

பெரியவன் : என் நண்பன் கூப்பிட்டான். போனில் அவனுடன் பேசினேன். கோயம்புத்தூருக்குப் போகிறேன் என்றேன். காரில் போகிறாயா எனக் கேட்டான். என் பதிலை எதிர்பார்க்காமல் பேசாமல் பஸ்ஸில் போ. இந்தத் தப்பைச் செய்யாதே என்றான். ஏம்பா, கார் இருக்கும்பொழுது ஏன் காரில் போகக்கூடாது? பார்ட்னர் "காரில் போ'' என்றாரே. ஏன் இவன் இப்படித் திட்டுகிறான்?

கணவர் : வந்தது நிலைக்க வேண்டாமா? ஆர்ப்பாட்டம் செய்தால் அனைத்தும் போகும். சேட் கடையிலிருந்து ஆள் வந்தானா?

பெண் : எதற்கப்பா?

கணவர் : ஒரு ஜதை கம்மல் கேட்டேன். அவன் காட்டிய மாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. வேறே கொடுக்கிறேன் என்றான்.

தாயார் : அவன் வீட்டுக்கு எடுத்து வருகிறேன் என்றானா?

கணவர் : நான் எடுத்துவரச் சொன்னேன்.

பெண் : அப்படி வழக்கமில்லையே.

கணவர் : இனிமே அவன்தான் கொண்டு வரவேண்டும். ஏன் நாம் போகவேண்டும்?

பெரியவனும், கணவரும் போய்விட்டனர். பெண், தாயாருக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிந்து விபரம் கேட்டாள்.

தாயார் : நமக்கு அந்தஸ்து வந்ததாக நடக்க முடியுமா? அவன் நம் அந்தஸ்தை ஏற்க வேண்டாமா?

பெண் : இதில் என்ன தவறு?

தாயார் : மனம்தான் காரணம். நம்மை முக்கியமாக நினைத்தால் உள்ள முக்கியம் போய்விடும்.

பெண் : அப்பாகிட்டே சொல்றதுதானே?

தாயார் : நான் சொல்ல முடியாது. எடுபடாது. முடிந்தாலும் நான் சொல்லக்கூடாது.

சற்று நேரத்தில் சிறியவன் வந்தான். யாரோ அவன் நண்பன் வந்து தன்னை வீட்டிற்கு வரச்சொன்னதாகச் சொன்னான். யார் என விபரம் அறிந்தபொழுது அது தாலுக்கா ஆபீஸ் பியூன் மகன் எனத் தெரியவந்தது. தாயாருக்கு உடனே புரிந்தது. Life response உடனே வருகிறது எனப் புரிந்தது.

பெண் : என்னம்மா இது அநியாயமா இருக்கிறது. அந்த ப்யூன் வீட்டுப் பையன் தம்பியை வரச் சொல்றான். Life response என்றால் அப்பாவுக்கு அல்லவா வரவேண்டும்?

தாயார் : அப்பாவுக்கு வந்தாலும், மகனுக்கு வந்தாலும் ஒன்றுதானே? Life ஒரு நிமிஷம் தாமதிக்காது. உடனே அதன் குணத்தைக் காட்டிவிடும்.

பெண் : நீங்கள் போகுமுன் எனக்கு விளக்கம் சொல்லி விட்டுப் போங்கள்.

தாயார் : நமக்கு அடக்கம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

கொஞ்ச நாள் கழித்து வீட்டில் அனைவரும் சேர்ந்தனர்.

பெண் : அம்மா, எனக்கு பலர் அனுபவங்களையும் விளக்குகிறேன் என்றீர்களே.

சிறியவன் : அக்கா, நீ பேசாதே. நான் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன்.

கணவர் : அன்னையைப் பற்றியா, வெறும் பேச்சா?

பெரியவன் : ஏன் அவன் அன்னையைப் பற்றிப் பேசுவான்? அவன் எப்பொழுதும் ஒரு விஷயத்தைப் பற்றித்தான் பேசுவான்.

சிறியவன் : நான் உன்னைப் பற்றி மட்டுமே பேசுவேன் என நினைக்கிறாயா? எனக்கு வேறே வேலையில்லையா?

தாயார் : சொல்லேன்பா.

சிறியவன் : என்னை டீம்லே சேர்க்கமாட்டேன் என்றார்களே. நேற்று நாங்கள் வாலிபால் விளையாடுவதை ஒரு பெரிய கோச் வந்து பார்த்தார். இப்போ நான்தான் கேப்டன்!

பெண் : விவரமாகச் சொல்.   சிறியவன் : கோச் நாங்கள் விளையாடுவதைப் பார்த்துவிட்டு என்னைப் பற்றிக் கேட்டார். நான் டீமில் இல்லை என்றார் டிரில் மாஸ்டர். கோச் இவன் கேப்டனாக இருக்க வேண்டும்' என்றார். வாக்குவாதம் நடந்தது. முடிவில் நான் கேப்டனானேன்.

பெண் : அன்று டீமில் சேர்த்திருந்தால், இன்று கேப்டனாகி இருக்க முடியாதே. இது Mother's Grace.

பெரியவன் : இல்லேம்மா, இது பெரியவன் grace. நான் அன்றைக்கே சொன்னேன் அல்லவா. இதைத்தான் உன் விஷயம் என்று கூறினாயா?

அவர்கள் எல்லாம் போனபின் பெண் தாயாரை, "பியூன் மகன் கூப்பிட்டதையும், கேப்டனானதையும் எப்படிப் புரிந்துகொள்வது'' எனக் கேட்டாள். தாயார், "நமக்கு நல்லது நடக்கப் போகிறது என்று தெரிந்தவுடன், அதைப் பியூன் மகன் அப்படிச் சுட்டிக்காட்டுகிறான்'' என்றார்.

பெண் : சேட்டுக் கடைச் செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது?

தாயார் : சேட்டுக் கடை, பியூன், கோச், கேப்டன் எல்லாம் ஒன்றானவை. நாமாகச் செய்யும் தவற்றுக்குப் பரிகாரமில்லை. பிறர் செய்வது நம்மைப் பாதிக்காது. ஆனால் இரண்டையும் கவனித்துப் புரிந்துகொள்ள வேண்டும். புதிய சூழல் கோச்சைக் கொண்டு வருகிறது. காரைக் கொடுக்கிறது. நம் புத்தி சேட்டுக் கடையில் அதிகாரம் செய்யச் சொல்கிறது. நம் சூழல் பியூன் மகனைப் பேச வைக்கிறது.

பெண் : இப்போ, புரிகிறது. என் தோழியின் அக்கா கடிதம் எழுதி என்னை அவள் வீட்டிற்கு வரச் சொல்லி யிருக்கிறாள்.

தாயார் : போய்விட்டு வா. கார் கேட்காதே.

பெண் : நான் கேட்கமாட்டேன். ஆனால் காரில்தான் போகிறேன்.

தாயார் : என்ன சொல்கிறாய்?

பெண் : அவளைப் பார்க்க நம்மூர் வக்கீல் மகள் போகிறாள். அவளுடன் என்னை வரச்சொல்லியிருக்கிறாள்.

தாயார் : இதுவே உனக்கு முதல் முறை ஒருவர் காரில் அழைத்துப் போவது. நீ கார் கேட்கமாட்டேன் என்றவுடன், கார் வருகிறது.

பெண் : நானும் அப்படித்தான் நினைத்தேன். இவையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது? நமக்கு மட்டும் இப்படிப் புரியுமா?

தாயார் : நடப்பது அனைவருக்கும் ஒன்றே. அன்பர்கட்கு அதிகம் நடக்கிறது. எல்லோரும் இதை மனத்துடன் தொடர்பு செய்து புரிந்துகொள்வதில்லை.

பெண் : நினைத்தமாத்திரம் நடப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

தாயார் : மனத்தைவிட சமர்ப்பணம் பெரியது.

பெண் : நான் மனம்தான் பெரியது, மனமாற்றம் பெரியது என இருக்கிறேன்.

தாயார் : மனமாற்றம் பெரியது. சமர்ப்பணம் மனத்தையே சரணம் செய்வதில்லையா?

பெண் : இந்த யோகம் செய்ய எங்கும் போக வேண்டாம் போலிருக்கிறதே.

தாயார் : எல்லாம் உள்ளேயிருக்கிறது. பார்வையை உள்ளே செலுத்தவேண்டும்.

ஒருநாள் கணவரும், பெரியவனும், பார்ட்னருடன் வந்தார்கள். அவருடன் அவருடைய மைத்துனர் வந்திருந்தார். மைத்துனர்

அன்னையைப் பற்றி அறியவேண்டும் என்றதால் இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என மனைவியிடம் கூறினார்.

பார்ட்னர் : என் மைத்துனர் நெடுநாளாக அன்னை பக்தன். நானும் அவரும் அன்னையைப் பற்றிய சொற்பொழிவு ஒன்றிற்குப் போனோம். அவர்கள் பேசுவது எல்லாம் நம்ப முடியாத அளவுக்குப் பெரிய விஷயமாக இருக்கிறது. என் மைத்துனர் தமக்கு அன்னையை நெடுநாளாகத் தெரியும், அன்னை உயிரோடு உள்ளபொழுது தரிசனம் செய்ததாகவும் கூறுகிறார். ஆனால் சொற்பொழிவில் கூறுவதுபோல் அவர் புரிந்துகொள்ளவில்லை. சொற்பொழிவாளரைச் சந்திக்க வேண்டும் என்றார். நான் பெரிய பக்தை இருக்கிறார் என உங்களிடம் அழைத்து வந்தேன்.

மனைவி : என்ன சொன்னார்கள் சொற்பொழிவில்?

மைத்துனர் : போன உயிர் வரும், பெரிய, பெரிய அதிர்ஷ்டம் வரும் என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார். நம்பக்கூடியதாக இல்லை.

மனைவி : நான் சமையல் செய்பவள். நீங்கள் ஆண்கள், உலகில் செயல்படுபவர்கள்.

பார்ட்னர் : சொற்பொழிவாளர் சொல்வனவெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

மனைவி : நான் படித்திருக்கிறேன்.

மைத்துனர் : பார்த்திருக்கிறீர்களா?

மனைவி : உங்கள் வாழ்வில் ஏதாவது பெரிய அதிர்ஷ்டம் நடந்திருக்கிறதா?

பார்ட்னர் : என் வாழ்வில் உங்கள் கணவர் வந்தது எனக்குப் பெரிய அதிர்ஷ்டம்.

கணவர் : நான் உங்களை அறிந்ததையே அப்படி நினைக்கிறேன்.

பார்ட்னர் : நான் கிளப்பில் உங்களைப் பார்த்துப் பேசிய அன்று எனக்கு எதிர்பாராமல் இந்த லைசென்ஸ் கிடைத்தது அதிர்ஷ்டமல்லவா?

மைத்துனர் : எனக்கு அப்படி ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லையே.

பார்ட்னர் : வெகுநாள் முன்பு இவர் மகன் மெடிகல் காலேஜுக்கு அப்ளிகேஷன் போட்டபொழுது எல்லோரும் சிரித்தனர். அவனுக்குக் கிடைத்துவிட்டது. மைத்துனர் : அது எதிர்பாராதது. அது கிரிக்கெட்டால் கிடைத்தது. இன்டர்வியூவில் ஒரு பெரிய கிரிக்கெட்காரர் இருந்திருக்கிறார். இவன் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசியது அவருக்கு சந்தோஷம். அதனால் கிடைத்தது.

மனைவி : எந்த வருஷம்?

மைத்துனர் : 10 அல்லது 12 வருஷமிருக்கும்.

மனைவி : அன்னை தரிசனம் எப்பொழுது?

மைத்துனர் : எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. நான் அன்னையைத் தரிசித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். செய்தி காத்திருந்தது. இதனால் என நான் நினைக்கவில்லை.

மனைவி : தரிசனம் அதன் வேலையைத் தவறாது செய்யும்.

மைத்துனர் : சொற்பொழிவில் கூறியவை உங்களுக்கு அனுபவம் உண்டா?

பார்ட்னர் : அது உண்மையானால், நானும் அன்னை பக்தனாவேன்

கணவர் : இவற்றையெல்லாம் நீ எனக்குச் சொல்லவில்லையே, ஏன்?

பார்ட்னர் : இந்த உறவில் எப்படிச் சொல்வது?

மைத்துனர் : எந்தப் புத்தகங்களை நான் படிக்கலாம்? எனக்கு அன்னை மீது இப்பொழுது நம்பிக்கை வருகிறது. இத்தனை நாள் புரியவில்லை.

மனைவி : அன்னை எழுதியவை, அன்னையைப் பற்றி எழுதியவை ஒரு செட் 18 புத்தகங்கள், அடுத்தது 13 வால்யூம், அடுத்தது 100 முதல் 200 புத்தகங்கள் உள்ளன. எதையும் படிக்கலாம்.

மைத்துனர் : உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகம் எது?

மனைவி : The Mother என்று ஸ்ரீ அரவிந்தர் எழுதியது.

பார்ட்னர் : நானும் அப்புத்தகங்களைப் படிக்க விரும்புகிறேன். அதுவரை நான் எதை மேற்கொள்வது நல்லது?

மனைவி : எந்தக் காரியம் செய்யும்முன் அன்னையை நினைவுகூர்வது சமர்ப்பணம் எனப்படும்.

மைத்துனர் : சமர்ப்பணத்தைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்.

மனைவி : நாம் நமக்காகச் செயல்படுகிறோம். அன்னைக்காகச் செயல்படுவது சமர்ப்பணம்.

பார்ட்னர் : நாம் இலாபத்திற்காகக் காரியம் செய்வதற்குப் பதிலாக அன்னையின் திருவுள்ளம் உலகில் பலிக்க நாம் அக்காரியத்தைச் செய்வது சமர்ப்பணமா?

மைத்துனர் : அப்படி, சமர்ப்பணமாகச் செய்த காரியம் ஒன்றைக் கூறுவீர்களா?

மனைவி : ஒருவர் ஒரு சரக்கிற்கு ஜில்லா டீலர்ஷிப்புக்கு முயன்று தோற்றபின், சமர்ப்பணத்தை மேற்கொண்டு, அந்தச் சரக்கு உற்பத்தியாகும் கம்பெனியில் டைரக்டர் ஆகிவிட்டார்.

 

மைத்துனர் : இது எவ்வளவு நாளில் நடந்தது?

மனைவி : ஒரு வருஷ காலத்தில் நடந்தது.

மைத்துனர் : சொற்பொழிவில் க்ஷணத்தில் நடக்கும் என்றார்களே?

மனைவி : அதே டீலர்ஷிப் க்ஷணத்தில் கிடைக்கும். கிடைப்பது பெரியது என்பதால் 1 வருஷமாயிற்று.

பார்ட்னர் : சமர்ப்பணம் பலிப்பது பலனின் அளவைப் பொருத்ததா?

மனைவி : பலனின் அளவையும், செய்பவர் மனநிலையையும், சூழலையும் பொருத்தது.

பார்ட்னர் : செய்பவர் மனநிலைக்கு உதாரணம் தரமுடியுமா?

மனைவி : செய்பவன் முழு சுயநலமியானால் அவனுக்கு மட்டும் பலிக்கும். திருடனானால் பலன் திருட்டில் வரும். பரநலம் உடையவன் செய்தால் அனைவருக்கும் பலன் உண்டு.

மைத்துனர் : அன்னை எவரையும் விலக்குவதில்லையா? உங்கள் அனுபவத்தில் அன்னையிடமிருந்து அதிகபட்சப் பலன் பெற்றது எந்த நிகழ்ச்சி?

மனைவி : 1) 400 ரூபாய் சம்பளக்காரர் 400 கோடி சொத்து பெற்றது.

2) 200 ரூபாய் வருமானம் இலட்ச ரூபாயானது.

3) போன உயிர் திரும்பி வந்தது.

4) சட்டம் மாறி சலுகை வந்தது.

5) புதுச் சட்டம் வந்து புது வசதி வந்தது.

பார்ட்னர் : அப்படியானால், அன்னையே கொடுத்தாலும் பலன் நம் மனத்தையும், பர்சனாலிட்டியையும் பொருத்தது என்று தெரிகிறது. நீங்கள் சொல்வனவற்றிலெல்லாம் வசதி, நன்மை பயப்பன உண்டா?

மனைவி : நல்லெண்ணம் உள்ளவர்க்கு நன்மை பயக்கும். அன்னையை அழைத்தவுடன் வேணுகானம் ஒருவருக்குக் கேட்டது. மற்றொருவருக்கு மனத்தில் தோன்றும் கெட்ட எண்ணங்கள் மறைந்தன. பிறர் வாழ மனம் ஏக்கமுற்றது.

பார்ட்னர் : அவை பலித்தனவா?

மனைவி : எல்லாம் பலித்தவையே. பக்கும் அளவு எண்ணத்தின் தீவிரத்தைப் பொருத்தது.

பார்ட்னர் : சமர்ப்பணம் கொடுத்த உச்சகட்ட நல்லதுண்டு என்றால் நான் அறியப் பிரியப்படுகிறேன்.

மனைவி : அதற்கு, சமர்ப்பணம் காரியத்தை நினைக்கக்கூடாது.

பார்ட்னர் : அதை, சற்று சொல்லவும்.

மனைவி : அது தத்துவம்.

பார்ட்னர் : அதுதான் எனக்கு வேண்டும்.

மனைவி : நாம் அன்னையைவிட்டு அகன்றிருப்பதால் நாம் அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறோம். அன்னையை மனத்தில் பிரதிஷ்டை செய்திருந்தால் - நாம் அவருக்குச் சரணடைந்திருந்தால் - சமர்ப்பணம் தேவைப்படாது. தானே செயல்கள் சமர்ப்பணமாகும். அதற்குரிய உச்சகட்டப் பலனை வாழ்வில் காணமுடியாது. அது மௌனம், சாந்தி, ஜோதியாகவும்,

பிரம்மமாகவும், அனந்தம், ஆனந்தமாகவுமிருக்கும். அது எல்லா அன்பர்களுடைய அனுபவத்திற்கும் பின்னணியிலிருந்தாலும், தெரிவதில்லை.

பார்ட்னர் : நான் எதைச் செய்தால் சிறப்பு?

மனைவி : புதிய தொழிலை அன்னை முறைப்படிச் செய்வது சமர்ப்பணம், சரணாகதியாவதாகும். சொந்த வாழ்வில் நினைவு வழிபாடாவது நல்லது.

மைத்துனர் : நான் இதுவரை அன்னையை அறியவில்லை. நீங்கள் பேசும்பொழுது மனம் நீங்கள் கூறுவனவற்றை எல்லாம் சற்று உணர்கிறது.

மனைவி : நீங்கள் அவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. வாழ்க்கைப் பலனான மெடிகல் அட்மிஷன் வந்தது. அதையும் கவனிக்கவில்லை.

பார்ட்னர் : கவனிப்பது அவசியமா?

மனைவி : கவனிக்காமலிருந்தால் தொடர்ந்து நடக்கும், கவனித்தால் நின்றுவிடும். அலட்சியமாகக் கவனிக்காமலிருந்தால் பலன் ஏற்படாது. மனம் அன்னையில் ஈடுபட்டு நெஞ்சு நிறைந்து, ஏற்படும் பலன்களைப் பலனெனக் கருதி கவனிக்காமல் இருந்தால் தொடர்ந்து நடக்கும்.

கணவர் : நீ சொல்வது பிரார்த்தனை செய்தால் பலிக்கும், மனம்மாறினால் அதிகம் பலிக்கும்,தீவிரமானால் மேலும்பலிக்கும், ஆதாயத்தை நாடாவிட்டால் பலன் உள்ளேவரும், அமைதியை நாடினால் பலன் உள்ளும் புறமும்வரும் என்பதா?

பார்ட்னர் மைத்துனர் மனைவி : (ஒரே சமயத்தில்) இது நல்ல சுருக்கமாகும்.

கணவர் : எனக்கென்ன உபதேசம் செய்வாய்?

மனைவி : நான் உபதேசம் செய்யக் கூடாது. உங்களுக்கு நான் எதுவும் சொல்லக் கூடாது என்பதே எனக்குரிய சட்டம்.

பார்ட்னர் : நான் மீண்டும் வருகிறேன்.

மைத்துனர் : நானும் அவருடன் வருகிறேன்.

ஒரு மாதம் கழித்து பார்ட்னரும், அவர் மைத்துனரும் கணவருடன் வந்தனர். அவர்கள் கண்டன ஏராளம், பெற்றவை பல, அனுபவித்து ஆனந்தப்பட்டவை எண்ணிலடங்கா. தொட்டனவெல்லாம் வெற்றி. நினைவுக்கெட்டாத அனுபவங்கள் ஏராளம். கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரம். பார்ட்னரும், மைத்துனரும் புதுப்பிறவிகளாகக் காட்சியளித்தனர். கணவர் முகம் அப்படியில்லை. பெண்ணும், பிள்ளைகளும் கலந்துகொண்டனர். வந்தவர்கள் பேசப் பேச, பிள்ளைகள், "ஏம்மா, நமக்கு இப்படியெல்லாம் நடக்கவில்லை?'' என்றனர். அதைப் பலமுறை கேட்டனர். அதே கேள்வி கணவர் மனத்திலும் இருந்ததால் அவருக்கு எரிச்சலும், கோபமும் ஏராளம். மைத்துனர் : எத்தனை வருஷமாக எனக்கு அன்னையைத் தெரியும்? நான் இதுவரை அன்னை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவில்லையே.

பார்ட்னர் : எதற்கும் நேரம் வரவேண்டாமா?

பெண் : எங்க அம்மா வேண்டாம் என்பார்.

மைத்துனர் : அது என்ன?

தாயார் : எதற்கும் நேரம் வரும்வரை காத்திருக்கவேண்டும் என்பது நம் மரபு. நம் மனம் தயாரானால் நேரம் வரும் என்பது அன்னை. நேரத்தை வரவழைக்கலாம் என்பது அன்னை.

பார்ட்னர் : கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்.

தாயார் : இராமபிரான் வந்து அவர் பாதம் பட்டால் அகல்யா சாபம் தீரும் என்பது கதை. கல்லான அகல்யா, இராமனுக்காகக் காத்திருக்கிறாள். இது கர்மம். அது கரைய நேரம் தேவை. அது விதிக்கப்பட்டது. மைத்துனர் : அதை மாற்ற முடியுமா?

தாயார் : காலத்திற்குக் கட்டுப்பட்டவரால் காலத்தை மாற்ற முடியாது.

பார்ட்னர் : காலத்திற்குக் கட்டுப்படாத மனிதன் உண்டா?

தாயார் : ஆத்மாவை அறிந்தவனுக்கு அது இல்லை. காலம் அவனுக்குக் கட்டுப்படும். அவன் நேரத்தை வரவழைக்க முடியும்.

பார்ட்னர் : எங்கள் பாக்டரியைத் திறக்க இன்னும் 6 மாதமாகும். கட்டடம் கட்டவேண்டும். நேற்று எஸ்டேட் மானேஜர் அங்குக் கட்டடம் தயாராக இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். காலத்திற்காக நாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. இது எப்படி?

தாயார் : அன்னை காலத்தைக் கடந்தவர். நம் மனம் காலத்திற்குட்பட்டது. அன்னையை ஏற்றவுடன் மனம் காலத்தின் பிடியினின்று வெளிவந்தது. எஸ்டேட் கட்டடம் வருகிறது. இதுவே நாம் காலத்தைக் கடப்பது, நேரத்தை வரவழைப்பதாகும்.

மைத்துனர் : நான் ஏற்கனவே அன்னையை அறிந்தது கணக்கில்லையா?

பார்ட்னர் : அறிவது வேறு, ஏற்றுக்கொள்வது வேறா?

தாயார் : அன்னையை அறிந்தது முதல் உங்கள் ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும்.

பார்ட்னர் : சொற்பொழிவில் ஜாதகம் பார்க்கக் கூடாது என்றாரே.

தாயார் : ஜாதகத்தை நம்பக் கூடாது. பார்ப்பது நல்லதன்று. அன்னையை அறிந்த இந்தப் பல வருஷங்களில் ஜாதகத்தில் கூறிய தவறுகள் நடந்திருக்கா. அதில் இல்லாத நல்லவை நடந்திருக்கும்.

மைத்துனர் : எங்கள் பாட்டி அடிக்கடி சொல்வாங்க, அவருக்கு என் ஜாதகம் மனப்பாடம், "இதெல்லாம் ஜாதகத்தில் இல்லையே'' என்று.

பார்ட்னர் : எனக்கு, பாக்டரிக்கு மானேஜரிலிருந்து வாட்ச்மேன் வரை நியமிக்க வேண்டும், என்ன செய்ய?

தாயார் : செய்ய வேண்டியவற்றை எல்லாம் - விளம்பரம், இன்டர்வியூ - தவறாது செய்யுங்கள். மற்றவர்கள் போல்லாமல், அன்னை முறைப்படி செய்யுங்கள்.

மைத்துனர் : நேர்மையாகச் செய்ய வேண்டுமா?

பார்ட்னர் : அன்னையை நினைத்துச் செய்ய வேண்டும்.

கணவர் : என் மானேஜர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். தம் மைத்துனருக்கு நம் தொழில் நல்ல பெயர். அவரை நியமிக்க முடியுமா எனக் கேட்டார்.

பார்ட்னர் : அவரைப் பற்றித்தான் போனில் பேசினீர்களா? இத்தொழில் நாட்டில் முதன்மையானவராயிற்றே. தேடிப்போனாலும் கிடைக்கமாட்டாரே.

கணவர் : என் மானேஜர் என்ன சொன்னார் தெரியுமா? சம்பளம் சற்றுக் குறைவாயிருந்தாலும் பரவாயில்லை.

அவர் குடும்பத்தார் அனைவரும் இங்கிருப்பதால் அவர் இங்கு வேலை தேடுகிறாராம்.

மைத்துனர் : எல்லாம் அன்னை செயல்.

சிறியவன் : Mother's Grace.

கணவர் : Mother's Grace என்மூலமா வருவதில் எனக்கு சந்தோஷம்.

பார்ட்னர் : என்னைப் பொருத்தவரை உங்கள் கணவர்தான் எனக்கு Mother.

கணவர் : நீங்கள் எனக்குச் செய்தது பெரியது.

மைத்துனர் : நீங்கள் பெரியவர் அல்லவா? அம்மா, recruitmentஐப் பற்றிச் சொல்லுங்கள்.

தாயார் : நினைவு அங்கிருக்கும்வரை எல்லா postக்கும் நல்ல ஆட்கள் தாமே அமையும்.

பார்ட்னர் : பணத்தைவிட ஆட்கள் முக்கியமாக இருக்கின்றனர்.

கணவர் : அதுதான் உங்களுக்குக் கவலை.

தாயார் : கவலைதான் கவலையைக் கொண்டுவரும். கவலையைவிட்டு அன்னையை ஏற்கவேண்டும்.

பார்ட்னரும், மைத்துனரும் போனபின் வீட்டினர் கலந்து பேசினார்கள்.

கணவர் : ஏண்டா, உன் கிண்டலெல்லாம் - Mother's Grace- பார்ட்னரிடம் காட்டலாமா?

பெரியவன் : அவன் என்னைக் கேலி செய்கிறான்.

பெண் : அம்மா, உடனே அதைக் கண்டியுங்கள்.

கணவர் : கண்டிப்பதா, இனி அப்படிப் பேசினால் தோலை உரித்துவிடுவேன்.

பிள்ளைகளும், கணவரும் போனபின் பெண்ணும் தாயாரும் பேசிக்கொள்கின்றனர்.

பெண் : நீங்க தம்பிக்குச் சொல்லணும்.

தாயார் : அப்பா இப்படிப் பேசுவதும், தம்பி அப்படிப் பேசுவதும் ஒன்றே.

பெண் : என்ன செய்வது?

தாயார் : மதர்கிட்டே சொல்வது தவிர வேறு வழியில்லை.

அவர்கள் அனைவரும் போனபின் பெண் தாயாரை ஏன் நம் வீட்டில் அன்னை அவர்கள் வீட்டில் செயல்படுவதுபோல் செயல்படுவதில்லை எனக் கேட்டாள். அன்னைக்குரியது higher consciousness உயர்ந்த பண்புள்ள வாழ்வு. நம் வீடு அதற்கெதிரானது. அதனால் அன்னையின் அருள் நம் வீட்டுச் சூழலில் potential வித்தாக வந்து தங்கிவிடும். பலன் தாராது என்று தாயார் கூறினார்.

பெண் : Low consciousness தாழ்ந்த பண்பு என எதைக் கூறுகிறீர்கள்?

தாயார் : போட்டி, பொறாமை, விட்டுக்கொடுக்காதது, பிறர் விஷயத்தை அறிய முயல்வது, குறுக்கே பேசுவது, சிறு விஷயங்களில் உள்ளம் மலர்வது, அழுக்கு, ஒழுங்கீனம், கோள் சொல்வது ஆகியவை. இத்தனையும் பொய்யிலிருந்து வருகின்றன.

பெண் : கிண்டல், கேலி, மனம் புண்படும்படிப் பேசுவது, சின்ன புத்தி அதில் சேருமா?

தாயார் : கொடுமை, கடுமை, அதன்மீது பாசத்தால் உறவு அனைத்தும் இதைச் சேர்ந்தவையே.

பெண் : நம் வீட்டில் பெரும்பாலும் இவை ராஜ்யம் நடத்துகின்றன. நாமென்ன அவ்வளவு மட்டமான குடும்பமா?

தாயார் : நாம் மட்டமானவர்கள் என்று அறியமுடியாத அளவுக்கு நாம் மட்டம்.

பெண் : விளக்கமாகச் சொல்லுங்களேன்.

தாயார் : பெரியவன் தம்பியைப் புண்படும்படிப் பேசுவான். திரும்ப தம்பி அதுபோல் பேசினால் தவறு என்பான். தான் பிறர்க்கு உரிமையுடன் செய்வதை, பிறர் நமக்குச் செய்வது அநியாயம் என்பது மட்டமான மனிதர் எண்ணம்.

பெண் : இதை விட்டு வெளிவர நமக்கு வழியேயில்லையா?

தாயார் : இருக்கிறது. நாம் செயல்படுத்த முடியாது.

பெண் : என்ன?

தாயார் : நம் நிலையை அறிந்து வெட்கப்பட வேண்டும்.

பெண் : நாம் பெருமைப்படுகிறோம்.

தாயார் : பிரச்சினை அதுவே. எதற்கு வெட்கப்படவேண்டுமோ அதற்குப் பெருமைப்படுபவன் மட்டமானவன். அவனுக்கு வழியில்லை.

பெண் : பார்ட்னரைப் பார்த்து நாம் திருந்திக்கொள்ளக் கூடாதா?

தாயார் : பார்ட்னர் அப்பாவை அன்பர் என்பதால், போற்றுவதால் நாம் எப்படித் திருந்த முடியும்?

பெண் : எனக்குச் சொல்லுங்கள்.

தாயார் : நம் செயல் automatic தானே நடக்கிறது. அறிவுக்குக் காத்திருப்பதில்லை. சமர்ப்பணம் ஆரம்பித்தால் ஓரளவு கட்டுப்படும். ஆழ்ந்து போனால் சமர்ப்பணம் எடுபடாது. நம் மனத்தின் ஆழம் (sensitivity) எது என நாம் அறிவோம். அங்கு, சமர்ப்பணம் பலித்தால் வாழ்வு கட்டுப்படும்.

பெண் : தீவிரமான ஆசைகளுக்கு இடம் தரக்கூடாது என்கிறீர்களா?

தாயார் : அது ஆரம்பம். அடுத்தது ஆசை. அடுத்தது urges வேகம். அங்கு மனம், உயிர், உடலென கீழே போகப் போக ஆசையோ, வேகமோ கட்டுப்படாது. கட்டுப்படுவது சமர்ப்பணம்.

பெண் : அந்த ஆசைகள் ஜெயிப்பதே இலட்சியமாக இருக்கிறது இப்பொழுது. எனக்கு அதுபோல் ஆசை எழுந்தால் அடக்க முடியாது.

தாயார் : உயிர் நாடியான இடம் அதுவே. நாம் பெற்ற நாகரீகம் அதுபோன்ற ஆசைகளை வென்றதால்தானே.

பெண் : அதைப் பூர்த்தி செய்வது சமர்ப்பணம் பூர்த்தியாவதா?

தாயார் : ஆசை அழிந்தபின் அகந்தையிலிருக்கும். அது வேகமாக urges செயல்படும். அகந்தையைக் கட்டுப்படுத்துவது யோகம்.

பெண் : ஆசைக்கு உயிர் கொடுப்பது அகந்தையன்றோ? நான் என்ன செய்யலாம்?

தாயார் : அண்ணன், தம்பி பேசுவது எரிச்சலை உண்டு- பண்ணினால் உனக்கு அது ஆழத்தில் இருக்கிறது எனப் பெயர்.

பெண் : இவர்கள் செய்யும் அட்டூழியம் எரிச்சல் உண்டுபண்ணாமலிருக்க முடியுமா?

தாயார் : எரிச்சல் என்பது ஆழத்தில் நாம் அவர்களைப் போலிருக்கிறோம் என்பது.

பெண் : உங்களுக்கு, கோபம், எரிச்சல் வந்து நான் பார்த்ததில்லையே?

தாயார் : அளவுகடந்து வரும். அடக்கிக்கொள்வேன். வரும்வரை நாமும் அவர்கள் போலிருக்கிறோம்.

பெண் : அவர்கட்குப் புரிந்து மாற வழியில்லையா?

தாயார் : வெட்கம் எழுவது முதல் கட்டம். அல்லது நஷ்டம் வந்தால் யோசனை செய்வார்கள்.

பெண் : அமெரிக்காவில் credit card payment யாரும் தவறுவதில்லை. தவறினால் credit கிடைக்காது.

தாயார் : அதுபோல பெரிய இலாபமிருந்தால், தங்கள் நடத்தையால் அந்த இலாபத்தை இழக்கக்கூடாது என்றால், இவர்கள் மாறுவார்கள். இலாபத்திற்காக மாறுபவர் - உடலால் வாழ்பவர் --- physical

வெட்கத்திற்காக மாறுபவர் - உயிரால் வாழ்பவர் --- vital

தெளிவுக்காக மாறுபவர் - அறிவால் வாழ்பவர் --- mental

பெண் : அன்னை பக்தராகி அவருக்காக மாறலாமே.

தாயார் : மாறலாம்.

பெண் : நாம் எதுவும் செய்ய முடியாதா?

தாயார் : குறைப்படாமலிருக்கலாம். சொல்லித்திருத்தலாம் என நம்பாமலிருக்கலாம்.

பெண் : சொல்லித் திருத்த முடியாதா?

தாயார் : சொன்னால் பதில் வரும். வற்புறுத்திச் சொன்னால் குதர்க்கமான பதில் வரும்.

பெண் : சொன்னால் கெட்டுப் போகுமா?

தாயார் : சொல்லாமலிருக்கக் கட்டுப்பாடும், நினைக்காமல் இருக்கப் பக்குவமும் வேண்டும்.

பெண் : நான் என்ன செய்ய?

தாயார் : எரிச்சல் வரும்பொழுது அன்னையிடம் மட்டும் சொல்.

பெண் : சொன்னால்?

தாயார் : எரிச்சல் வாராது.

பெண் : காரியம் நடக்குமா?

தாயார் : எரிச்சல் உற்பத்தியாகாமல் சந்தோஷம் எழுந்தால் காரியம் கூடிவரும்.

பக்கத்து வீட்டு அம்மாள் வந்தார். தம் கணவர் வெளிநாடு போவதாகச் சொன்னார். போனால் சம்பளம் பல மடங்கு மாறும் என்றார். அவர் மட்டும் போவதாகவும், தாம் போகவில்லை எனவும் சொன்னார். இவர்கட்கு பாக்டரி வந்துள்ள விஷயமோ, கார் வரப்போகிறது என்றோ பக்கத்து வீட்டிற்கு இன்னும் தெரியாது. நமக்கு வரும் அருளின் சாயல் பக்கத்து வீட்டிலும் தெரிகிறது என்று இவர் நினைத்தார். நம் விஷயம் தெரியாததால் பொறாமை எழ வழியில்லை. அதனால் அருள் செயல்படுவதாகவும் கருதினார். தம்

கணவர் வெளிநாடு போனால் சீக்கிரம் கார் வாங்கிவிடுவோம் என, பக்கத்து வீட்டு அம்மா உற்சாகமாகப் பேசினார். கணவரிடமிருந்து தாமும் பார்ட்னரும் வருவதாகப் போன் வந்தது. கணவர் பார்ட்னருடன் பேசினாராம், ஏதோ முக்கியமான விஷயமாம். பதட்டமாகப் பேசினார். இருவரும் வருவதற்குள் பக்கத்து வீட்டு அம்மாள் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார். கணவர் பேயறைந்த முகத்துடனும், பார்ட்னர் கலகலப்பாகச் சிரித்துக்கொண்டும் வந்தனர். பெண் காபி கொடுத்தாள். கணவர் காப்பியைத் தொடவில்லை. பார்ட்னர் காப்பியைச் சாப்பிட்டுக்கொண்டே பேசினார். பெண்ணை விசாரித்தார்.

பார்ட்னர் : இன்று காலையில் காலேஜில் ஏதாவது விசேஷமுண்டா?

பெண் : ஒன்றும் குறிப்பாக இல்லை.

பார்ட்னர் கணவரைக் காப்பி சாப்பிடச் சொன்னார். கணவருக்குக் கை ஓடவில்லை.

பார்ட்னர் : அம்மா, ஒரு முக்கியமான விஷயம் தவறாகப் போய்விட்டது. அதனால் கம்பெனியில் அனைவரும் கலவரமுற்றுள்ளனர். நானும் அப்படித்தான் இருக்கிறேன்.

தாயார் : உங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே?

கணவர் காப்பியைச் சிறிது சாப்பிட்டுவிட்டு வைத்துவிட்டார்.

கணவர் : எனக்குச் சேதி கேட்டதிலிருந்து வயிற்றைக் கலக்குகிறது. நீங்கள் காலேஜில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்கள்.

பார்ட்னர் : மீதி காப்பியையும் சாப்பிட்டுவிட்டால் பிரச்சினை தீரும். ஒரு சிறப்பான தொழிலாளியை அதிக அனுபவம்

உள்ளவனென்று வேலைக்கு வைத்தோம். கம்பீரமாக இருக்கிறான், தன்மையாகப் பேசுகிறான். நாங்கள் எல்லோரும் பிரியப்பட்டு அவனை எடுத்தோம்.

கணவர் : அவன் யூனியன் தலைவர். நம் கம்பனியில் யூனியன் ஆரம்பிக்க வந்திருக்கிறான். அது வயிற்றைக் கலக்குகிறது.

பார்ட்னர் : எனக்கும் அப்படித்தானிருக்கிறது. ஆனால் என்னை ஆண்டவன் ஒருபொழுதும் கைவிட்டதில்லை. அன்னையை அறிந்தபிறகு பயமாக இல்லை. முழு நம்பிக்கையிருக்கிறது. அன்னை வழியென்ன?

தாயார் : வழியிருக்கிறது. தானே போய்விடுவான். நாம் செய்தது தவறு என உணர்ந்து பிரார்த்தனை செய்தால் நிலைமை மாறும்.

பார்ட்னர் : கேட்க மனம் குளிர்கிறது. இன்று மாலை தியானத்தில் நான் அன்னையிடம் கூறுகிறேன்.

தாயார் : நம் தவற்றை ஏற்றபின் பிரச்சினை நொடியில் தீரும்.

கணவர் : பாரம் இறங்கியது போலிருக்கிறது. ஆனால் வயிறு கலங்குவது நிற்கவில்லை.

கம்பனியிலிருந்து கணவருக்குப் போன் வந்தது. யூனியன் தலைவருக்கு நம் கம்பனி பிடிக்கவில்லையாம். அவன் நண்பர்கள் வற்புறுத்தலால் வந்தானாம். ராஜினாமா செய்ய வேண்டும் என அவன் சகாக்களுடன் பேசுவதாகச் செய்தி.

கணவர் : இவற்றையெல்லாம் நம்ப முடியுமா? நாம் ஆர்டர் அடித்துக் கொடுத்துவிட்டோமே?

பார்ட்னர் : வழியிருக்கிறது என்றவுடன் இந்த நல்ல செய்தி வருகிறது. நாமிருவரும் தியானத்தில் பிரார்த்தனை செய்வோம். ஏன் பயப்பட வேண்டும்?

பார்ட்னர் மனைவியிடமிருந்து போன் வந்தது. பார்ட்னர் பேசினார். அந்த யூனியன் தலைவர் அவர் வீட்டிற்கு வந்து அவரைப் பார்க்க விரும்பினாராம். பார்ட்னரே அவருடன் பேசினார். அவருக்கு வேறொரு பெரிய கம்பனியில் வேலை கிடைத்துவிட்டதாம். அவர்களிடம் அவருடைய எதிரிகள் போய் அவன் யூனியன் தலைவர், எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர். அது பெரிய கம்பனி. இவன் கெட்டிக்கார டெக்னீஷியன். அங்கு இவன் கொட்டம் பலிக்காது. அவர்கள் எடுக்கப் பிரியப்படுகின்றனர். இவன் போகப் பிரியப்படுகிறான். எதிரிகள் இவனுக்கு வேலை ஆர்டர் வந்துவிட்டது என்று பெரிய கம்பனியில் கூறியதால், அவர்கள் பார்ட்னரிடமிருந்து கடிதம் எதிர்பார்க்கின்றனர். அதைக் கேட்க அவன் வந்திருக்கிறான்.

கணவர் : உடனே கடிதம் எழுதி, ஆர்டரைக் கான்சல் செய்யுங்கள்.

பார்ட்னர் : அன்னை சக்தி வாய்ந்த தெய்வம்.

தாயார் : மனமாற்றம் சூழலை மாற்றும், தவறாது.

பார்ட்னர் : இது எந்தப் புத்தகத்திலிருக்கிறது?

கணவர் : எந்த எந்தப் பிரச்சினைக்கு என்ன என்ன தீர்வு, எந்தப் புத்தகத்திலிருக்கிறது என்று எனக்கு எழுதிக் கொடு.

பார்ட்னர் : நாம் அவசரப்படக் கூடாது. முக்கியமாகப் பயப்படக் கூடாது.

கணவர் : இடி விழுந்தால், எப்படிப் பயப்படாமலிருக்க முடியும்?

தாயார் : அன்னை சொல்வதும் அதுவே. பயப்படக்கூடாது. மேலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறார்.

கணவர் : எப்படி சந்தோஷம் வரும்? பயம்தான் வரும்.

பெண் : அப்பா, பார்ட்னர் சந்தோஷமாக இல்லையா?

பார்ட்னர் : நமக்கு மேலே அன்னையிருக்கிறார் என்ற எண்ணம் சந்தோஷம் தருகிறது.

கணவர் : எனக்கு வரவில்லை, வாராது.

பார்ட்னர் : அம்மா, மேலும் இதைப் பற்றி அன்னை ஏதாவது கூறியிருக்கிறாரா?

தாயார் : வேண்டாதவனை நிச்சயமாக விலக்கலாம், திருவுருமாற்றலாம்.

பார்ட்னர் : அப்படி என்றால்?

தாயார் : அவனே சிறந்த தொழிலாளியாகி, மற்றவரைக் கட்டுப்படுத்துவான்.

பார்ட்னர் : விவரமாகச் சொல்லுங்கள்.

கணவர் : வேண்டாம், கேட்கவே பிடிக்கவில்லை. அது விஷப்பரிட்சை.

தாயார் : இது எப்படி நடந்தது?

கணவர் : நான் அவனைப் பார்த்தவுடன் இவனை விடக்கூடாது என நினைத்தேன். அமைதியாக இருக்கிறான். ரொம்ப தன்மையாகப் பேசுகிறான்.

பார்ட்னர் : எனக்கும் அவனைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. ஏன் கேட்கின்றீர்கள்?

தாயார் : முதல் ஆர்டர் கொடுத்தபொழுது நடந்தவை பின்னால் வரப்போவதை விளக்கும்.

பார்ட்னர் : அப்படியும் ஒரு சட்டம் உண்டா? ஆர்டர் கொடுத்தபொழுது அமைதியாகப் பிரியப்பட்டுக் கொடுத்தோம்.

தாயார் : அப்படியானால், போவதும் அமைதியாகப் பிரியமாக நடக்கும்.

பார்ட்னர் : அது நடந்தேவிட்டதே. இதுபோன்ற அன்னைச் சட்டங்களை நான் தெரிந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.

கணவர் : அதெல்லாம் அப்புறம். அவன் ஆர்டரை வாங்கிக் கொண்டு கடிதம் எழுதி அவனை முதலில் அனுப்புங்கள். அனைவரும் கலைந்தனர்.

பெண்ணின் கல்லூரி ஆசிரியை வீட்டிற்கு வந்தார். பெண்ணை வீட்டில் வந்து பார்க்கும் ஏற்பாடு கல்லூரியில் உள்ளது.

ஆசிரியை : உங்கள் மகளை என்ன செய்வதாக உத்தேசம்? மேற்படிப்புக்கு அனுப்பப் போகிறீர்களா?

தாயார் : அவளுக்குப் படிக்க இஷ்டம். அவருக்கு B.A. போதும் என்றபிப்பிராயம். கல்யாணம் ஆகும்வரைப் படிக்கலாம் என நான் நினைக்கிறேன். எப்படியாகுமோ தெரியவில்லை.

பெண் : நான் M.A. முடித்துவிட்டு கல்யாணம் செய்து கொள்கிறேன் அம்மா.

ஆசிரியை : பெரிய படிப்புக்குப் பெரிய மாப்பிள்ளை தேடவேண்டும். அதுவும் சரிதான். மேல்நாட்டிற்கு அனுப்பும் யோசனை உண்டா?

தாயார் : அவர் எதுவும் சொல்லவில்லை.

ஆசிரியை : உங்களுக்கு அபிப்பிராயம் என்ன? அவரைக் கேட்கவில்லையா?



book | by Dr. Radut