Skip to Content

MJ_July-2016_11.அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

  1. ஆசியர்கள், மங்கோலியர், வெள்ளையர் என பல இனங்கள் இருந்தாலும், எந்த ஓர் இனமும் கலப்படமில்லாமல் தூய்மை- யாய் இன்று உலகில் இல்லை.
  2. ஒரு கல்லைச் சிருஷ்டிப்பதற்கு இறைவன் எடுத்துக்கொள்ளும் முயற்சியும், மனிதனைச் சிருஷ்டிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியும் ஒன்றே. இறைவனுடைய கணிப்பில் கல்லுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் மிகக் குறைவு.
  3. யோகம் முதிர்ச்சியடைந்தால், தன் கழுத்தைப் பிடித்து நெறிக்கும் கைகளிலும் இறைவனைத் தீண்டும் இன்பத்தை நுகரலாம்.
  4. ஒருவனது ஆயுள் முடியும் காலத்தில் அவனது ஆத்மா வெளியே வந்து, அந்தப் பிறப்பின் அனைத்துச் செயல்களையும் க்ஷண நேரத்தில் விமர்சனம் செய்து, அடுத்த பிறப்பில் எங்கு ஜனிப்பது என்று முடிவு செய்து, மீண்டும் தன்னிடத்திற்குப் போய் விடுகிறது.
  5. மிருகங்களைக் கொடுமைப்படுத்துபவன், விலங்குக்கும் கீழான உணர்ச்சியுடையவன்.
  6. தேவாலயங்களில் வணங்குபவர்கள் பவித்திரமாக இருக்கும்வரை பிரதிஷ்டை செய்த தெய்வங்கள் அங்கு இருக்கும். பக்தர்களுடைய தூய்மை குறைந்த காலத்து அத்தெய்வங்கள் அங்கு இரா. வணங்குபவர்களின் தன்மைக்குத் தக்கவாறு வேறு தெய்வங்களோ, ஆவிகளோ அங்கு வந்து குடியேறும்.
  7. பூரண யோகம் இறைவனது யோகம்; மனிதனது யோகமில்லை. மனிதன் செய்யக்கூடியதெல்லாம் தன் சரணாகதியைப் பூரணமாக்கி, இறைவனுக்குக் கருவியாக மாறுவதுதான்.
  8. உலகத்தில் பூரண யோகம் பூரணமாகப் பலித்தால், இறைவனது சத்தியம் உலகில் வந்து நிரம்பும். அது மரணம், மூப்பு, பொய்மை, அறியாமை போன்றவற்றை அடியோடு அழித்துவிடும்.
  9. அன்னையை ஏற்றுக்கொண்டு புதிய சத்திய வாழ்வை நாடும் பக்தன், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜோஸ்யம், சகுனம், நல்ல-கெட்ட நேரங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் அவற்றின் ஆட்சிக்கு உட்பட்டவனில்லை.
  10. மேலைநாடுகள் லௌகீகச் சிறப்பை, பொருளாதாரப் பெரு வாழ்வை நாடுகின்றன. அவை மனித குலத்திற்கு நாசம் விளைவிக்கக்கூடியவை.
  11. மனிதன் தெய்வங்களைவிட ஆத்மீகத்தால் உயர்ந்தவன். தெய்வங்கள் அபரிமிதமான சக்தியுடையவை. அவற்றின் அளவு பூமியின் அளவு. ஒவ்வொரு கடவுளும் பூமி அளவு பெரியவர் ஆவர். அவர்கள் வசிக்கும் லோகம் சிருஷ்டியில் பூலோகத்தைவிட 3 நிலைகள் மேலானதாகும். ஆனால் தெய்வங்கள் சிருஷ்டி முடிய தெய்வங்களாகத்தான் இருக்க முடியும். தங்களுடைய ஆத்மீக நிலையை உயர்த்திக்கொள்ளும் திறன் அவர்களுக்கில்லை. மனிதனுக்கு ஆத்மாவும், அதன் பிரதிநிதியான (psychic being) சைத்திய புருஷனும் உண்டு. சைத்திய புருஷன் வாழ்க்கையில் செயல்படுகிறான். ஆத்மா சிருஷ்டிக்கு அப்பாற்பட்டது. சைத்திய புருஷன் சிருஷ்டியில், வாழ்க்கையில் செயல்படுபவன்; அவனுக்கு வளர்ச்சியுண்டு. அதன் மூலம் மனிதன் தன் ஆத்மீக நிலையில் தொடர்ந்து முன்னேறுகிறான். தெய்வங்களுக்கு இந்த ஆத்மாவின் பிரகிருதியான சைத்திய புருஷன் கிடையாது. ஆதலால் தங்களுக்கென ஏற்பட்ட அளவிறந்த சக்தியை அவர்கள் பிரயோகம் செய்து மகிழலாம். தங்கள் ஆத்மீக நிலையை உயர்த்திக்கொள்ள முடியாது. அவர்கள் அப்படி விரும்பினால் பூவுலகத்தில் மனிதராகப் பிறந்தால்தான் முடியும் என்பது ஸ்ரீ அரவிந்தரது கருத்து.
  12. மனிதப் பிறவியில் 99% இறைவனுக்கு எதிரான சக்தியாகும்.
  13. ஒரு கணம்கூட மனிதனால் (ego) தான் எனும் உணர்வை வெளிப்படுத்தாமல் செயல்பட முடியாது.
  14. இதுவரை (ego) மனிதனுடைய அகந்தை இறைவனுக்குப் பெரிய சேவை செய்தது. சிருஷ்டியின் சிறப்பை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது இதுதான். எதிர்காலத்தில் இதுவே மனிதனுடைய ஆத்மீக வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.
  15. மதங்களுடைய காலம் முடிந்துவிட்டது. எதிர்காலம் ஆன்மிகத்திற்கேயுரியது.
  16. யுகாந்த காலமாகவுள்ள சிருஷ்டியில் சிறப்பான நேரங்களுண்டு. அதை இறைவனின் ‘நாழிகை’ என்பர். ஆயிரமாயிரம் ஆண்டுகளில் சாதிக்க முடியாத காரியங்களை இப்படிப்பட்ட நேரத்தில் உடனே சாதிக்கலாம். இன்று அப்படிப்பட்ட ஒரு விசேஷ காலமாகும். இதை ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தர் Hour of God என்கிறார்.
  17. தன் பாவத்தை இறைவன் அழிக்கும்பொழுது மனிதன் புளகாங்கிதமடைகிறான். தன் புண்ணியத்தை இறைவன் அழிக்கும் பொழுது மனிதன் கவலைப்படுகிறான். பாவமும், புண்ணியமும் இறைவனை அடையத் தடையாக இருப்பதை அவன் உணருவது இல்லை.
  18. அற்புதங்கள் அரிபொருளாக இருக்கின்றன. அன்னையை ஆத்மாவில் பிரதிஷ்டை செய்தபின் அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன.
  19. ஒரு பாடத்தை (கணிதம், மொழி, இலக்கியம், சரித்திரம்) நன்கு கற்றுக்கொண்டால் அவனது படிப்பு முடிந்துவிடும். மற்ற பாடங்களை அவனே பயில முடியும்.
  20. பணம் தெய்வத்தின் சொத்து. ஆன்மிகவாதிகள் பணத்தைப் புறக்கணித்தால், அநியாயவாதிகள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள். இறைவன் சார்பில் பணத்தைத் தீய சக்திகளிடம் இருந்து இறைவனுக்காகக் கொண்டுவருவது ஆன்மிகவாதிகளின் கடமை.
  21. அன்னையின் பாதம் ஊன்றிய இடமெல்லாம் ஆனந்தம் பெருக்கெடுக்கின்றது.
  22. அன்னையிடமிருந்து கிடைக்கும் தண்டனையும் அவரது அருள் நிறைந்ததாகும்.
  23. உணர்ச்சிகளை, புலன்களை அவிப்பது மரபு. அது இறைவனின் திருவுள்ளமில்லை. அவற்றைத் தூய்மைப்படுத்தி இறைவனின் கருவியாக்குவதே பூரண யோகத்தின் நோக்கம்.
  24. உடலின் ஆழத்தில் ஏராளமான சக்தி புதையுண்டிருக்கின்றது. சித்தர்கள் வெளிப்படுத்தும் சக்திகளுக்கெல்லாம் உடலே உறைவிடம்.
  25. மனிதனுக்கு எழும் பிரச்சனைகள் எல்லாம் அவனுடைய திறமைக்கு உட்பட்டவையே. அவனை மீறிய பிரச்சனைகளை இறைவன் அவனுக்குக் கொடுத்ததில்லை.

*********

14. ஸ்ரீ அன்னையின் கருத்துகள்

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அடிப்படையில் ஒருவரே. அவர்களது செயலையும், சிந்தனையையும் பிரித்துப்பார்க்க முடியாது. ஒருவர் ஓர் இடத்தில் சொல்லியதை, மற்றவர் வேறோர் இடத்தில் சொல்லியிருப்பதால் எது ஸ்ரீ அரவிந்தர் கருத்து, எது அன்னையினுடையது எனப் பல இடங்களில் தீர்மானிக்க முடியாது. கூடியவரை அவரவர் கருத்துகளை அவரவர் பெயரிலேயே கொடுக்க முயல்கிறேன்.

1. ஒருவர் அன்னையிடம் வந்தால், அவருக்கு எந்த விஷயத்தில் அதிக ஆர்வமிருக்கிறதோ, அதையே அன்னை அவருக்கு அளிக்கிறார்.

மனிதன் தன் தேவையை அறிவதைவிட அன்னை அவனுடைய தேவையையும், உண்மையான ஆர்வத்தையும் அறிந்துகொள்கிறார். அறிந்தபின் அவன் கேட்டதை விட்டு, கேட்காமலிருந்த ஒன்றை அவனுக்கு அளிப்பது அவர் வழக்கம்.

ஒரு பட்டதாரி ஆசிரியர். அவருக்கு உள்ளூரில் வேலை கிடைக்க வேண்டி முயன்றார். அவர் வீடு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் இருந்தது. அவர் பட்டம் பெற்று வந்ததும் அங்கு வேலை கேட்டார். கிடைக்கவில்லை. 3 மைல் தூரத்தில் உள்ளூரிலேயே அதனைச் சார்ந்த மற்றொரு பள்ளியில் அவருக்கு வேலை கிடைத்தது. வீட்டிற்கு எதிரில் உள்ள பள்ளியில் வேலை கிடைத்தால் சௌகரியம் என்பதுடன், அந்தப் பள்ளி மாணவர்கள் அவரிடம் வந்து ட்யூஷன் படிக்க வசதியாய் இருக்கும். அது நடக்கவில்லை. பல ஆண்டுகள் கழிந்தன. அடுத்த பள்ளியில் அவர் சீனியர் ஆசிரியராகிவிட்டார். அன்னையிடம் பக்தி கொண்டு, ஒருமுறை ஒரு குறிப்பிட்ட பிரச்சனை தீர வந்து பிரார்த்தித்தார். பிரச்சனை தீரவில்லை. பிரார்த்தனை செய்து, பிரச்சனை தீரவில்லை என்பது கேள்விப்படாத ஒன்று. மேலும் விசாரிக்கப்போனால், சற்றும் எதிர்பாராத வகையில் அவருக்கு வீட்டிற்கு எதிரேயுள்ள பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது. தீராத பிரச்சனையை ஒதுக்கிவிட்டு, மறந்துவிட்டு, வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அவர் திளைத்திருந்தார்.

ஒருவர் அன்னையின் எதிரே சென்றவுடன் அவருடைய ஆழ்ந்த உணர்ச்சிகள் அன்னையின்மீது அலைபோல் சென்று படிகின்றன. அவர் அன்னையிடம் சொல்லிய சொற்கள் அன்னையின் காதில் விழுகின்றன. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகள் அன்னையின் ஜீவனில் படிகின்றன. அன்னையை அறியாமலேயே அவை உத்தரவு பெற்று, செயல்பட்டுவிடும். அக்காரணத்தாலேயே அன்பர் பிரார்த்தனை செய்தாலும், செய்யாவிட்டாலும், அவர் மனத்தில் ஆழத்திலுள்ள அபிலாஷைகள் அன்னையிடம் வந்தவுடன் பூர்த்தியாகின்றன. எம்.பி. சீட் கிடைக்காதவர் அன்னையிடம் பிரார்த்தனை செய்தபொழுது அவருக்கு மந்திரி பதவி கிடைத்தது. வாயால் கேட்டது M.P. சீட்டாக இருந்தாலும், அவர் மனத்தின் அடியில் மந்திரி பதவி இருந்தது போலும்.

(தொடரும்)

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரிணாம வளர்ச்சி பெறும் ஆத்மாவுக்குரிய உடலாக உடல் மாறுவது காயகல்பம்.

**********



book | by Dr. Radut