Skip to Content

பகுதி 5

அருள் தடையற்றுச் செயல்படும்

- வாழ்வின் ஆரம்பத்தில் மீற முடியாத தடைகள் உண்டு. காட்டு மனிதனுக்கு அது இருந்தது. அமெரிக்காவுக்கு 400 ஆண்டுகட்கு முன்போனவர்கட்கும் அது உண்டு. இயற்கையில் உள்ள பெரிய தடை அருள், தடையற்றுச் செயல்படும் அருள். 100 ஏக்கர் காட்டை நிலமாக்க 400 பேர் முனைந்தால் 300 பேர் இறந்து 100 பேரே அதை அனுபவிக்க முடிந்தது. ஓர் ஏக்கர் நிலம் உற்பத்தி செய்ய 3 பேர் உயிரைத் தரவேண்டும் என்பது ஆரம்பக் காலத்து நிலை. இன்று நம் நாகரீக வாழ்வு அன்று இயற்கை கொடுத்த பெரிய கொடை. அது அருள். வெறும் உடல் உழைக்கும் பொழுது உடல் பெற்ற அருள் அது. உடல் அருள் பெற பெரிய அளவில் உடல் அழிய வேண்டியதாயிற்று. எது அருள்பெற வேண்டுமோ அது பெரிய அளவில் அழிய வேண்டும். மனம் அருள்பெற மனத்தின் அறிவு அழியவேண்டும். அருள் வசதியை அளிக்கிறது. பின்னர் வரும் தலைமுறைகள் வசதியை அனுபவிக்கலாம். வசதியை அனுபவிப்பனுக்கு அருளில்லை. இன்றைய வசதி நாளைய அழிவு.

- மனித முன்னேற்றம் ஸ்தாபனங்களையும், கருவிகளையும் - சமூகம், திருமணம், பணம்

 

போன்றவை - ஏற்படுத்துகிறது. அவற்றைத் தன் பாதுகாப்புக்காகப் பயன்படுத்துகிறான் மனிதன்.

- மனிதனுக்கு அருள் மட்டுமே பாதுகாப்பு, அது தரும் வசதிகளில்லை.

- அபரிமிதமான செல்வத்தை உற்பத்தி செய்த அமெரிக்கர்கள் பணம் சாதிக்கிறது என நம்ப ஆரம்பித்துவிட்டனர். இது பரிதாபம். மனிதன் உற்பத்தி செய்தது பணம். பணம் மனிதனை உற்பத்தி செய்தது என நினைப்பது அழிவுக்கு ஆரம்பம், இது தவிர்க்க முடியாதது.

- பொதுவாக நாம் சமூகத்தையும், கம்பனியையும், சர்க்காரையும், மார்க்கட்டையும், குடும்பத்தையும், நம் திறமைகளையும், பணத்தையும், கல்வியையும் பாதுகாப்பாக நம்புகிறோம்.

- அவை பாதுகாப்புத் தருவது உண்மை. அது தற்காலிகமானது. புறத்திற்குரியது. புறப் பாதுகாப்பு பொருள்களால் வருவது. ஏதாவது ஒரு சமயம் அவை பயனற்றுப் போகும். அவற்றை உற்பத்தி செய்த அருள் அகத்திற்குரியது. அது நிரந்தரமானது. அதனால் ஏமாற்ற முடியாது.

- பாதுகாப்பு என்பது திறமை. அகத்தில் திறமை வித்தாக உள்ளது. அங்குத் திறமையின் சாதனைகள் இல்லை.

- அத்திறமையின் சாரம், இரகஸ்யம் என்பது அருள் மீதுள்ள நம்பிக்கை. அது அகலாது.

- புற நெருக்கடி அருளை ஏற்கும் நிர்ப்பந்தம் தரும்.

- அகத்தில் அருளை நாம் வாய்ப்பாகத் தேட வேண்டும் -an adventure of consciousness அனைத்தையும் விட்டு அருளை நாடும் ஆனந்தம்.

- எதிர்காலம் அருளுக்குரியது. ஆபத்தை ஆனந்தமாகக் கருதுவது அருள்.

- ஆபத்து ஆனந்தமாகும் அருள் எதிர்காலத்து நாட்களுக்குரிய நடைமுறை.

- இருப்பது போதும், வசதி வேண்டாம் என்பது அழிவின் குரல், ஆத்மாவின் அழைப்பில்லை.

- சம்பளம் தேடும் மனப்பான்மை சமர்ப்பணத்திற்கு எதிரானது.

- மனிதனாய்ப் பிறந்தவன் சாதிக்க வேண்டும், சம்பளத்தை நாடக்கூடாது.

ஆன்மீக அரங்கில் ஸ்ரீ அரவிந்தம்

தாம் ஓர் அவதாரப் புருஷர் என்பதை பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிற்காலத்திலேயே அறிந்தார். புரட்சிகரமான அரசியல்வாதியாக இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் அவர் இறங்கினார். நான்கு ஆண்டு அரசியல் வாழ்வில் ஸ்ரீ அரவிந்தர் கர்மயோகி

யோக சக்தியால் சூட்சுமத்தில் சுதந்திரம் பெற்றார். பிரபஞ்சம் முன்னேற இறைவன் இட்ட பணியை மேற்கொண்டு அரசியலிலிருந்து அவர் விலகினார். அவருடைய யோகம் 4 ஆண்டில் அவருக்கு அன்னையை அளித்தது. அன்னையுடன் உலகப் போரும் வந்தது.

உலக வாழ்வை ஸ்ரீ அரவிந்தர் வாழ்வாக நாம் எடுத்துக் கொண்டால், 500 ஆண்டுகள் சாதனை 50 ஆண்டுகளில் முடிந்துள்ளது. உலகப் போர், தொழில் நுணுக்கம், உரிமை, கல்வி, விடுதலை, ஆகியவற்றுள் அபரிமிதமான முன்னேற்றம் தெரிகிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் காரண, சூட்சும லோகங்களினின்று உலகை நடத்துகிறார் எனக் கொண்டால், உலகின் முக்கிய நிகழ்ச்சிகள் அவர் யோகத்தைப் பொதுவாகவும், குறிப்பாகவும் பிரதிபலிப்பதைக் காணலாம்.

இந்தியச் சுதந்திரப் போராட்டம், வங்காள வரலாறு, பாண்டி வாழ்வில் மாற்றம் ஆகியவை பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய பிரபஞ்சப் பிரயோகமாகத் தெரியும். அது சூட்சும சாஸ்திரத்திற்குரிய ஆராய்ச்சி. மனிதன் தன் வாழ்வை இக்கோணத்தில் கருதலாம். அது பிறருக்கு அர்த்தமற்றதாகத் தோன்றும். தமக்கே அது முக்கியமானது. சூட்சும உலக இரகஸ்யங்களைப் பிரபஞ்சம் முழுவதும் அறிய முற்படுபவருக்கு இந்த ஆராய்ச்சி ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. மனிதன் உலகுக்காக வாழ்கிறான் என்ற பேருண்மையின் பெருவிளக்கம் இந்த ஆராய்ச்சியில் தெரியும். அது புத்துலகம் ஆரம்பிப்பதாகும். அவர் எழுதிய நூல்கள், அவருடைய யோகக் குறிப்புகள் வெளிவந்துள்ளதால்

அணுவில் அனந்தனைக் காணும் முயற்சிக்குப் பலனுண்டு. சிறியது உலகைப் பெரியதாகக் காணும் முயற்சிக்கு இவை பெரும் ஆதரவு.

சத்தியத்தின் சங்கநாதம்

- அன்னை என்ற நூல் அன்னையின் 4 அம்சங்களைப் பகவான் எழுதுகிறார். அச்சொற்கள் சிருஷ்டிக்கும் திறனுடையவை.

- படித்தால் புரியும். அதனால் அந்த சக்திகளை நாம் பயன்படுத்த முடியாது.

- வாழ்வில் முக்கியக் கட்டங்களுண்டு. உன் அரசியல் கட்சி உன்னைத் தலைவனாக ஏற்க முடிவு செய்திருக்கலாம். 35 வயதுவரை பிரம்மச்சரியத்தை மேற்கொண்ட நிலையில் இலட்சியமான கற்புக்கரசி உன் உயர்வை அறிந்து உன்னை விரும்பலாம். உன் அனுபவக் குறைவைக் கடந்து உன் கம்பனி உன் தலைமையை விரும்பலாம். தீராத வியாதி வந்ததை டெஸ்ட் சொல்லலாம். மனைவி உன்னை விட்டுப் போக முடிவு செய்திருக்கலாம். ஸ்டாக் மார்க்கட் உன்னை அளவு கடந்து பாதித்திருக்கலாம். இது போன்ற நேரங்களில் பிரச்சினையை மனத்தைவிட்டு அகற்ற முடியாது. கெட்டதைவிட நல்லதை விலக்குவது கடினம். பற்றறுப்பதில் பயிற்சி இருந்தால், தீவிர முயற்சிக்கு அல்லது

நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிக்கு முழுப்பலன் உண்டு. வெற்றி, சத்தியத்தின் சங்கநாதம்.

அது சக்தி வாய்ந்த நேரம். அம்மனநிலை சில நிமிடம் நீடிக்குமானால், எதிரான செய்தி வரும். டாக்டர் மாறிப் பேசுவார். மனைவி மனம் மாறும். மார்க்கட் சரிவது நிற்கும். அவை உடனே நடக்கும். பிரச்சினையிலிருந்து விலகியதுபோல் நாம் நம்மிருந்தும் விலகலாம். பிரச்சினை மனதை ஆட்கொண்டது போல், நாமே நம்மை ஆட்கொண்டது தெரியும். பிரச்சினை விலகும், நம்மை விலக்க முடியாது. முடியாது என்பதன்று, சிரமம் அதிகம். முடிந்தால் அது யோகம் பலித்த நேரம். இதற்கடுத்த கட்டம் உண்டு. நம்மிருந்து விடுபடுவது, நம் மேல்மனத்திலிருந்து விடுபடுவதாகும். அதேபோல் ஆழ்மனத்தில் இருந்தும் விடுபட வேண்டும். அது முடிந்தால் உன்னை நீ காண்பாய். அது தூய்மையான ஆத்மாவாக இல்லாவிட்டாலும், அது பெரிய நேரம்.

அன்னை என்ற நூல் விவேகிக்கு அன்னை ஜோதிமயமான விவேகத்தை அளிக்கிறார் என்றொரு கருத்துண்டு. அன்னையின் அநேக சக்திகளில் இது ஒன்று. நம் ஜீவனின் பெரு வெளியில் நாம் ஒரு கதவைத் திறந்துள்ளோம். இவையிரண்டும் சந்திப்பது அன்னை சக்தியை

நம் ஜீவன் சக்தியாக அனுபவிக்கும் நேரம். இது பெரிய புதிய ஆத்மானுபவம். ஒரு நிமிஷம் அனுபவிக்கும் இச்சக்தி ஐயம் என்றிருந்த அத்தனையையும் கரைத்துவிடும். இப்பொழுது உன்னை நீ அறிவாய். ஆனால் அது ஆயிரம் கதவுகளில் ஒன்று. அன்னையின் சக்தியும் அதேபோல் பலவற்றுள் ஒன்று.

  1. நாம் நம் ஜீவனை முழுமையாக்கலாம் - எல்லா வாயில்களையும் திறக்கலாம்.
  2. அன்னையை முழுமையாக அறியலாம்.

அவை சந்திப்பது சரணாகதி பூர்த்தியாவது. நூலின் ஆரம்பத்தில் நாம் அருளை விலக்கும் 14 வகைகளையும், நாம் விலக்க வேண்டிய 30 குறைகளையும் கூறுகிறார். குறைகளைக் களைந்து, நம்மை முழுமையாக்கி; அன்னையை முழுமையாக அறிந்து அவை சேர முயன்றால் சேரும் நேரம் உயர்ந்த ஜீவியம் நிலைபெறும் நேரம். அடிக்கடி இதைச் செய்ய முடியுமானால் உயர்ந்த ஜீவியம் உன் உலகில் ஏதோ ஓரளவு நின்று நிலைபெறும்.

சித்தார்த்தா

ஹெர்மென் ஹெஸ்ஸா என்ற ஜெர்மானியர் நோபல் பரிசு பெற்றவர். அவர் புத்தர் நூல்களில் ஈடுபாடுள்ளவர். அவற்றைப் பயின்று பாராட்டியவர். புத்தருடைய நிர்வாணம் முடிவானதன்று. நிர்வாணமும் சம்சாரமும் இணைந்ததே முடிவு என்ற கொள்கை உடையவர். இக்கருத்தை, சித்தார்த்தா' என்ற கதை மூலம் எழுதுகிறார். இதுவே ஸ்ரீ அரவிந்தம். ஸ்ரீ அரவிந்தத்தை ஹெர்மென் ஹெஸ்ஸா மனத்தால் (as a concept) ஏற்றுக்கொண்டதை, கதையில் நாயகன் பெற்றதாக எழுதுகிறார். ஸ்ரீ அரவிந்தருடைய யோகம் உடலில் சித்திப்பது. ஹெர்மன் கதையில் நாயகனுக்கு மனத்தில் கருத்தாக அது சித்தித்தது.

கதாநாயகன் சித்தார்த்தா என்ற பிராம்மண இளைஞன், தகப்பனார் சாஸ்திரம் கற்ற விற்பன்னர். சாஸ்திரம் சொல். கறிக்குதவாது, நாமே நம் ஆத்மானுபவத்தால் கண்டறிந்ததே சத்தியம், நிலைக்கும் என்பது சித்தார்த்தனுடைய கருத்து. அதை நாடிச் சமணர்களுடன் போக விரும்பி தகப்பனாரை அனுமதி கேட்கிறான். மறுக்கிறார். மௌனமாகப் பணிவாக எதிர்க்கிறான். தகப்பனார் சம்மதிக்கிறார். சமணர்களுடன், நண்பன் கோவிந்தனும் இவனும் சேர்ந்து விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். அங்கு புத்தர் வருவதைக் கேள்வியுற்று சமணர்கள் தரிசனத்திற்காகப் போகின்றனர். புத்தர் உபதேசம் செய்கிறார். கோவிந்தன் புத்தபிஷுக்களுடன் சேர்ந்து விடுகிறான்.

சித்தார்த்தன், தகப்பனாரிடம் எழுப்பிய அதே கேள்வியை புத்தரிடம் எழுப்புகிறான். தத்துவத்தை

விளக்கலாம். அனுபவம் சொந்தமாகப்  பெற வேண்டியதாயிற்றே என்பது கேள்வி.சித்தார்த்தன் சாமர்த்தியத்தை நம்புவது சரியில்லை என புத்தர் எச்சரிக்கிறார்.

சித்தார்த்தன் வெகுதூரம் பிரயாணம் செய்து ஒரு நதிக் கரைக்கு வந்து ஓடக்காரனைக் கண்டு பேசுகிறான். ஓடக்காரன் நிதானமாகக் கேட்டுக் கொண்டு "போங்கள், ஒரு நாள் திரும்பி வரவேண்டியவர் தானே'' என வழியனுப்புகிறான். நதிக்கரையில் இருந்து எதிர்க்கரைக்கு வந்தபொழுது பல்லக்கில் தாசி போவதைக் காண்கிறான். தாடி மீசையை எடுத்துவிட்டு அவளிடம் புகலிடம் தேடுகிறான். அவள் அவனைக் காமசாமி என்ற வியாபாரியிடம் அனுப்புகிறாள். அங்கு ஏராளமாகச் சம்பாதிக்கின்றான். தாசி கமலாவோடு நிரந்தரமாக இருக்கிறான். அவள் தன்னைப் போலவே மனதால் எவரோடும் ஒட்டாதவள் எனக் காண்கிறான். பணமோ, கமலாவோ அவன் மனத்தைத் தொடவில்லை. பல ஆண்டுகள் கழித்து கமலாவை விட்டு நதிக்கரைக்கு வருகிறான். கமலா இவனுக்குக் கருவுருகிறாள். ஆண் மகவு பிறக்கிறது. ஓடக்காரனுடன் தங்கி உபதேசம் பெறுகிறான்.

சில ஆண்டுகட்குப்பின் புத்தர் இறுதிப் படுக்கையில் இருப்பதால் ஏராளமான பேர் அவரை நாடுகிறார்கள். கமலாவின் பையனுக்கு 11 வயது. தன் சொத்தெல்லாம் புத்த பிஷுக்களுக்குக் கொடுத்துவிட்டு புத்தர் தரிசனத்திற்காக பையனுடன் புறப்பட்ட கமலா சித்தார்த்தனைச் சந்திக்கிறாள். அங்கே இறந்து போய் பையனை அவனிடம் விட்டுச் செல்கிறாள்.

பையன் தகப்பனாரை விட்டு ஓடிவிட்டான். புத்திர சோகத்தை கடக்க முடியாமல் தவிக்கும் சித்தார்த்தன் ஓடக்காரன் ரிஷி என அறிகிறான். ஓடக்காரனும் காட்டுக்குப் போகிறான். போகுமுன் நிர்வாணமே முடிவன்று; சம்சாரமும் நிர்வாணத்துடன் சேரவேண்டும் என உபதேசிக்கிறான். கோவிந்தன் தற்செயலாய் சித்தார்த்தனைச் சந்தித்து விபரம் அறிவதுடன் கதை முடிகிறது.

********

  • ஹெர்மன் ஹெஸ்ஸா புத்தர் நிர்வாண தத்துவத்தைப் படித்துப் புரிந்துக் கொண்டு மனதால் ஏற்றுக் கொண்டார். அத்துடன் நிர்வாணம் மட்டும் வாழ்வுக்குப் போதாது, சம்சாரம் என்ற வாழ்வையும் நிர்வாணம் ஏற்றுக் கொண்டால்தான் தத்துவம் பூர்த்தியாகும் என்பது ஹெர்மன் கொள்கை.

- இக்கொள்கை புத்தர் நிர்வாணத்தைவிட ஒரு படி உயர்ந்தது. இக்காலத்திற்குரியது. ரிஷிகள் கண்டதை விடப் பெரியது. ஸ்ரீ அரவிந்தம் என நாம் கூறுவதைப் போன்ற தத்துவம் இது. ஸ்ரீ அரவிந்தம் இதனின்று அடிப்படையில் வேறுபடவில்லை என்றாலும் தத்துவத்தை ஸ்ரீ அரவிந்தம் உடலால் பூர்த்தி செய்ய வேண்டும் என்றபொழுது ஹெர்மன் மனதால் ஏற்றுக் கொள்கிறார். தான் ஏற்றதை, சித்தார்த்தன் ஏற்றதாகக் கதை மூலம் கூறுகிறார். சித்தார்த்தன் இக்கொள்கையை - நிர்வாணமும்

சம்சாரமும் சேர்ந்ததே யோகம் - படித்தோ, கேட்டோ ஏற்கவில்லை. வாழ்ந்து, அனுபவித்து ஏற்றுக் கொண்டான். சித்தார்த்தன் 40 ஆண்டு பிரம்மசரியம், சமணம், வியாபாரம், பெண்ணோடு வாழ்வு ஆகிய அனுபவங்களுக்குப் பின் மனதால் ஏற்றுக் கொண்டதை அன்பர்கள் The Life Divine நூலைப் படித்து ஏற்றுக் கொள்ளலாம்.

  • சித்தார்த்தன் இக்கொள்கையை வாழ்வில் ஏற்றுக்கொண்டிருந்தால் அவனுக்கு மகன் ஓடிப் போனபின் பதைக்காது. பதைக்கிறது என்றால் உணர்வு ஏற்கவில்லை எனப் பொருள்.
  • புத்தர் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. அவரது சிஷ்யர்கட்கு அது ஒத்துவரவில்லை. புத்தர் சிலையை வழிபட ஆரம்பித்த பின்னரே புத்தமதம் தழைத்தது.
  • புத்தர் ஏற்காத உருவ வழிபாட்டை அம்மதத்தினர் நாடினர் என்றால் அவரது கொள்கைகளை பௌத்தர் மனத்தால் மட்டும் ஏற்றனர். உணர்வால் ஏற்கவில்லை எனப் பொருள். இந்த நூலின் முன் பக்க அட்டையில் புத்தர் படம் போடப் பட்டிருக்கிறதே! ஹெர்மன் ஹெஸ்ஸாவும் புத்தரை மனத்தால் மட்டும் ஏற்றிருக்கிறார் எனத் தெரிகிறது. நாம் பொய் சொல்லக் கூடாது, கடமைகளைச் செய்ய வேண்டும், பிரியமாக இருக்கவேண்டும் என்ற கருத்துகளை மனதால் ஏற்கிறோம். நடைமுறையில் - உணர்வால் - ஏற்பதில்லை.

  • இந்நூலின் முக்கியக் கருத்து, மையக் கருத்து சத்தியம் கேட்டு, படித்து அறிவதில்லை. சொந்தமாக ஆத்மாவில் கண்டு அறிய வேண்டியது என்பது. இது மேல் நாட்டாரின் இலட்சியம். நூல் அந்த இலட்சியத்தை சித்தார்த்தன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் எடுத்துக் காட்டுகிறது. தானே ஆராய்ந்து அறிவதே அறிவு என்பது மனிதன் மனம் உடையவன், மனத்தால் வாழ்பவன் (mental stage of life) என்று காட்டுகிறது.
  • மனமும், அகந்தையும் பல வழிகளில் ஒன்றாகும். என்றாலும் வேறுபட்டவை. மேல்நாட்டார் சொந்தமாக அறிவது நம்மவர் சிந்திக்காமல் ஏற்பதைவிட மேல் என்றாலும், இதில் ஒரு தத்துவம் உள்ளது. ஏற்க மறுப்பது அகந்தை. தானே சொந்தமாகக் கண்டுபிடிப்பது அகந்தை. கண்டுபிடித்தபின் அது அகந்தையின் அறிவாக இருக்குமே தவிர, ஆத்மாவின் ஞானமாக இருக்காது.
  • இதுவரை யோக சித்தி அகந்தை பெற்ற சித்தி, மேல் மனத்தின் சித்தி என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.
  • திருடன் திருடுவது தவறு என உணர்வது பெரியது.உணர்ந்த பின்னும் திருடினால், மனம் மட்டும் ஏற்றது செயல் ஏற்கவில்லை எனப் பொருள். திருடுவதை நிறுத்தினால் உணர்வும், செயலும், மனம் ஏற்றதைத் தாங்களும் ஏற்றனர் என்றாகும்.
  • மனம் புரிந்து கொள்ளும். இதற்கு இருபுறமுண்டு. தவறான புறம் குதர்க்கமாகவும், தீமையாகவும், மட்டமாகவுமிருக்கும். தவற்றைப் பூர்த்தி செய்ய முனைந்தால் மனிதன் மட்டமானவன் ஆவான். புத்தர் சித்தார்த்தனை எச்சரிக்கிறார், அறிவை நம்பக் கூடாது என எச்சரிக்கிறார்.
  • இக்குதர்க்கத்திற்கு மாற்று உண்டா?
  • இந்தியர்கள் இன்று, நாங்களே கண்டுபிடிக்காத

டெக்னாலஜி வேண்டியதில்லை. எதுவானாலும் நாங்களே கண்டுபிடித்து ஏற்கிறோம் என்று கூறினால் அது போற்றத்தக்கது. அவ்வழி இந்தியா 500 ஆண்டுகட்குப் பின் போகும்.

  • நாம் கடந்த கால அறிவைப் பணிந்து ஏற்பதுபோல,சித்தார்த்தன் புத்தர் கொள்கைகளைப் பணிவாக ஏற்று, சொந்தமாக அனுபவித்துக் கண்டுபிடித்திருந்தால் பலன் அதிகமாக இருந்திருக்கும். 40 வருஷ அனுபவம் 4 ஆண்டுகளில் கிடைத்திருக்கும். கோவிந்தன் சொல்லை ஏற்றான். வாழ்நாள் முழுவதும் வழிபட்டான். சித்தார்த்தன் சொல்லை மறுத்து அனுபவத்தை நாடி வாழ்நாள் முடிவில் அதைப் பெற்றான். இந்தியர்கள் மேல்நாட்டு டெக்னாலஜியை காப்பியடிப்பதற்குப் பதிலாக சொந்தமாகக் கண்டுபிடிப்பது போல் ஏற்றுக் கொண்டால் பலன் அதிகம்.
  • சித்தார்த்தன் தகப்பனார் பேச்சைக் கேட்கவில்லை.மறுத்தான். எதிர்க்கவில்லை silent disobedience.   முடிவாக தகப்பனார் விட்டுக் கொடுத்து மகன் வேண்டுகோளை ஏற்கிறார். அவன் சமணர்களுடன் சேர விரும்புவதை ஏற்கிறார்.

  • இந்நேரம் சித்தார்த்தன் முன்னுள்ளவை இரண்டு. சமணர்களுடன் சேர்வது. தகப்பனாரை ஏற்று அதைக் கைவிடுவது. மனம் சமணத்தை ஏற்கிறது. உடல் தகப்பனாரை மறுக்க மறுக்கிறது.
  • பரிணாமச் சட்டம் நாம் கடந்து வந்ததை விலக்கக் கூடாது. விலக்கினால் முழுமை குறையும். சித்தார்த்தன் தகப்பனாரை ஏற்றுப் பணிந்திருந்தால் அவர் சொல்லாக ஏற்ற உபநிஷதச் சத்தியம் அவனுக்கு உள்ளுறை சத்தியமாகச் சித்தித்திருக்கும். சமணர்களுடனோ, புத்தரிடமோ, கமலாவோடோ போக வேண்டியிருந்திருக்காது. சித்தார்த்தன் அகத்தைப் புறக்கணித்து புறத்தைப் பாராட்டினான்.

- தகப்பனார் சமணர்களுடன் செல்ல அனுமதித்தார்.

- தன் மகன் ஓடியபொழுது சித்தார்த்தனுக்குத் தகப்பனார் முகம் எதிரில் வந்து உலுக்கியது. மகனை இழந்து ஓடக்காரன் உபதேசம் 40 ஆண்டுகள் கழித்துப் பலித்தது, தகப்பனாருக்கு அடங்கி இருந்தால் அப்பொழுதே பலித்திருக்கும்.

- 2000 ஆண்டுகளுக்கு முன் சித்தார்த்தனுக்கு கிடைக்காதது ஹெர்மன் ஹெஸ்ஸா நூலை எழுதியபொழுது ஸ்ரீ அரவிந்தமாகக் காத்திருந்தது.

- சட்டம் சித்தார்த்தனுக்கும் ஹெர்மனுக்கும் ஒன்றே. இன்று பலிப்பது எளிது, அன்று சிரமம்.

  • சமணர்களிடமிருந்து விரதங்களைச் சித்தார்த்தன் கற்றான்.அவை பயன்படவில்லை. விரதம் வளராத ஆத்மாவுக்கு உரியது என்கிறார் அன்னை.
  • அங்கிருந்து கமலாவிடம் போகிறான். ஆசையை அனுபவித்துத் தீர்க்கலாம், மறுத்து வெல்லலாம். அறிவால் உணர்ந்து தாண்டி வரலாம். சித்தார்த்தன் அனுபவிப்பதை எடுத்துக் கொண்டான்.
  • கமலா அவன் ஆசையின் உருவம். அவள் ஆசைக்கு அடிமையாயில்லை. எவரிடமும் மனதைப் பறி கொடுக்காமல் பற்றற்றிருக்கிறாள். அவனுக்கு பணத்திலோ, கமலாவிடமோ பற்றில்லை. இருவருக்கும் பற்றில்லாததால் பிரிய முடிந்தது. உடல் ஆழமானது. உணர்விலிருந்து பிரியலாம். உடலிலிருந்து பிரிய முடியாது. அவள் கருவுருகிறாள். சித்தார்த்தனுக்கு முடிவான சோதனை மகனிடமிருந்து வந்தது.
  • மகனை மறந்தபின் சித்தார்த்தன் பெற்ற சித்தி மனம் பெற்ற சித்தி. ஹெர்மன் ஹெஸ்ஸா எழுதியபொழுது ஸ்ரீ அரவிந்தர் வாழ்ந்தார். சித்தார்த்தனோ, அவன் மகனோ திருவுரு மாறவில்லை. ஸ்ரீ அரவிந்தர் ஞானம் உலகின் சூழலிலிருந்தது, ஹெஸ்ஸாவால் நிர்வாணத்தை ஏற்க முடிந்தது. அதனுடன் சம்சாரத்தையும் இணைக்க முடிந்தது. இதை அவர் மனம் செய்தது. ஹெஸ்ஸா சித்தார்த்தன்போல் தானே சத்தியத்தைக் காண வேண்டும் என, தன்னை வலியுறுத்தாமருந்தால், அவருக்குத் திருவுருமாறும் வாய்ப்பு கிடைத்திருக்கும், அன்பர்கள், சாதகர்கள் ஹெஸ்ஸாபோல் தம்மை வலியுறுத்துவது

துர்அதிர்ஷ்டம். உலகில் உள்ள ஞானத்தை தாமே கண்டுபிடிக்க வேண்டும் என வற்புறுத்தாமல் ஏற்பது அறிவுடைமை. கற்பதைச் சொந்தமாகக் கற்பதே முக்கியம். அதன்படி, சொல்லை மட்டும் ஏற்காமல், அதன் கருத்து ஆத்மாவில் சித்திக்கும். சித்தார்த்தன் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தவன் என்பதனால் அவனை மன்னிக்கலாம். இன்று வாழ்ந்த ஹெஸ்ஸாவையோ, அன்னையை அறிந்தவர்களையோ மன்னிக்க முடியாது. மன்னிக்கக் கூடாது.

  • ஓடக்காரன் நதியின் ரீங்காரத்தைக் கேட்டு ஞானமாக அதைப் பருகுகிறான். பிரகிருதியை சக்தியாகக் கண்டு அதன் விவேகத்தை சூட்சும உலகில் பெறுவதாகும்.
  • ஸ்ரீ அரவிந்தர் சைத்தியப்புருஷனைப் பற்றிக் கூறுகிறார்.அது 4ஆம் டைமென்ஷனில் இருக்கிறது. அங்கு வாழ்வு அற்புதமாகத் தெரியும்.
  • மனித வாழ்வை காலம், நிலை, உணர்வுக்கேற்ப பிரிக்கலாம்.ஒவ்வொன்றையும் அளவுகோலால் அளக்கலாம். எந்த அளவுகோலும் நேரானதன்று. நிலை மாறினால் ஜீவியம் தலைகீழே மாறும். சூட்சுமம் எழும். நடப்பது தெரியாது. இவற்றை அறிய விரும்புவோர் token actஐ ஆரம்பிக்க வேண்டும்.

- Token Actஐ 100 மடங்கு வெற்றியாக்க வேண்டும். முறையைப் பயிலவேண்டும்.

- முறை தெரிந்தால் உலகில் வாழ்வு, அரசியல், விஞ்ஞானம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை விமர்சனம் செய்ய வேண்டும். அவற்றைப் பற்றி தன் அபிப்பிராயங்களை ஆராய வேண்டும்.

- இதைச் சரி வரச் செய்தால் சூட்சுமமாக இன்று கண்ணுக்குத்  தெரியாதது அப்பொழுது தெரியும்.

- அப்பொழுது The Life Divine கதை, காவியம் போலிருக்கும்.

- அற்புதம் அறிவைக் கடந்த உணர்வுக்கு எட்டும்.

- சூட்சுமம், காரணம் பிறருக்கு விளங்கும்படிச் சொல்ல முடியும்.

- தன் சொந்த அனுபவங்கள் உலக நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும்.

  • இதைக் கடந்து மனத்தால் புரியக் கூடியவையில்லை.
  • சித்தார்த்தன் பெற்ற சித்தி, ஓடக்காரன் பெற்ற ஞான சித்தி கிடைத்தலரிது.
  • ஒரு பாதையில் இறங்கினால், மீண்டும் வெளிவர முடியாது.
  • ஸ்ரீ அரவிந்தருக்கு அதுவும் உண்மையில்லை.
  • ஓடக்காரன் காலத்தை அறிந்தவன், கடந்தவனும் கூட.

  • எந்த சத்தியத்திற்கும் எதிரான சத்தியமும் உண்மை என்பது சத்தியஜீவிய உண்மை. ஹெஸ்ஸா இதைக் கூறுகிறார்.
  • ஓடக்காரன் காலத்தைக் கடந்தவன். ஸ்ரீ அரவிந்தம் காலத்துள் காலத்தைக் கடந்த நிலையை நாட வேண்டும் என்கிறது.
  • எண்ணத்தை உணர்வு ஏற்பது, மனத்தை மௌனமாக்குவது,திருஷ்டி பெறுவது, ஞானம் சித்திப்பது, ஆழ்மனம் விழிப்பது, ஆகியவை அடுத்த நிலைக்குப் போவது. கடற்கரையில் நிற்பவன் நீச்சல் கற்க மறுத்தால் கடைசிவரை அங்கேயே நிற்கலாம். கப்பல் ஏறினால் உலகெங்கும் உலாவலாம். ஒவ்வொரு கட்டத்திலும் அது போன்று பெரிய மாறுதல் தேவை. கடலைக் கப்பல் கடக்கலாம். நீந்திக் கடக்க முடியாது. நீச்சல் பெருமுயற்சி. கப்பல் அடுத்த பெரிய கட்டம்.
  • கோவிந்தனைவிட சித்தார்த்தன் மேல். வெறும் மனிதனைவிட கோவிந்தன் மேல்.
  • அன்னையை அறிந்தவர் வாயிலை மூடாவிட்டால் சித்தார்த்தன் ஒரு ஜென்மத்தில் பெற்றதை உடனே பெறலாம்.
  • வாயிலை மூடுவது அகந்தை.
  • எந்த நேரமும் வாழ்வில் choice உண்டு. எப்பொழுதும் ஒரு வழி என்பதேயில்லை. போகப்போக பல வழிகள் உள. இருவழிகள் இல்லாத நேரமில்லை.

  • நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது சித்தார்த்தனைவிட ஹெஸ்ஸாவிலும், கோவிந்தனைவிட சித்தார்த்தனிலும் தெரிகிறது.
  • இருவழிகள் சித்தார்த்தனுக்குப் பலமுறை வருகின்றது. வீட்டை விட்டுப் போனபொழுது, கமலாவை அடைந்தபொழுது, காமசாமியை அடைந்தபொழுது, ஓடக்காரனுடன் வாழ்ந்தபொழுது, மகனைத் தேடிக் சென்றபொழுது அவன்முன் இருபுறம் தெரிந்தன.
  • இரு வழிகள் இல்லாத இடமில்லை, நேரமில்லை.
  • காரணம் கடக்கப்பட வேண்டியது என்பது சித்தார்த்தன் கண்டது.
  • இது ரிஷிகள் கூறியது. ஹேக்ஸ்பியர் கடைப்பிடித்தது.
  • ஸ்ரீ அரவிந்தர் அன்றாட வாழ்வுக்கு அச்சட்டத்தைக்

கொண்டு வருகிறார்.

  • வளர்ச்சி நின்றால் தளர்ச்சி என்ற கருத்துக்கு அருகில்

வந்த ஹெஸ்ஸா அதைப் பாராட்டவில்லை.

  • எந்த இலக்கியத்தையும் ஸ்ரீ அரவிந்த நோக்குடன்

ஆராய்வது ஆன்மீகப் பலன் தரும்.

***********



book | by Dr. Radut