Skip to Content

பகுதி 3

ஆன்மீக மாறுதல் மறுபிறப்புத் தேவையில்லாமல் செய்கிறது. உடல் பரிணாம வளர்ச்சி பெற்றால் மறுபிறப்புத் தேவையில்லை. ஆன்மா வளரும் பொழுது, அதற்கேற்ப மனமும், உயிரும், உடலும் ஆன்மீக வளர்ச்சி பெற்றால் மறுபிறப்புத் தேவையில்லை. அதுவே மனித இலட்சணம். அவனை பகவான் மனிதன் பிறந்தான் என்கிறார். அத்திறனை அடுத்தவர்க்கு அளிப்பவன் ஆன்மீக மனிதன். மனிதன் ஆன்மீக மனிதனான பின் திருவுருமாற வேண்டும். அத்திருவுருமாற்றம் 3 நிலைகளில் உள்ளது. சைத்தியத் திருவுருமாற்றம், ஆன்மீகத் திருவுருமாற்றம், சத்தியஜீவியத் திருவுருமாற்றம்என அவை மூன்றாகும். அதன் மூலம் சத்தியஜீவியத்தை எட்டலாம். அதனால் சத்தியஜீவன் பிறப்பான். அவன் வாழ்வு தெய்வீக வாழ்வு. இத்துடன் நூல் முடிகிறது. மேலும் முக்கிய விஷயங்கள், சிக்கலானவை, சிக்கலான சிறப்புடையவை என 50 முதல் 300 வரை ஏராளமானவையுண்டு. அவற்றுள் பலவற்றைக் காண்பது பலன் தரும்.

தெய்வீக வாழ்வு

இது மனத்தை மையமாகயுடையதன்று. சத்தியஜீவியத்தை மையமாக உடையது. இதன் வாழ்வு பிரபஞ்சம் முழுவதும் பரவும். இதன் சக்தி என்றும் தோற்றதில்லை. இதைக் கடந்து எதுவுமில்லைஎன்ற முழுமையையுடையது. என்றும் ஆத்ம விழிப்புடையது. இதைத் திருவுருமாற்றத்தால் மட்டும் அடைய முடியும். திருவுருமாற்றம் பெற ஒரே கருவி சரணாகதி. அப்படிப்பட்ட தெய்வீக வாழ்வு,

  • எளிமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • எளிமையாகவோ, வளமாகவோ இருக்கலாம்.
  • எப்படியுமிருக்கலாம் என்பது வழக்கமான பழக்கங்களிலிருந்து நாம் பெறும் சுதந்திரம்.
  • Freedom is the final law and the last consummation..

  • பூரணச் சுதந்திரமே முடிவான கட்டுப்பாட்டின் சட்டம்.

அமர வாழ்வு

துறவிகளில் பலர் காயகல்பம் தேடினர். அவர்களில் பலர் பெரிய வைத்தியரானார். மரணமிலா வாழ்வு பெருவாழ்வு. அதைப் பெறும் நிலைகள் பல. வேத ரிஷிகள் அதை யோக லட்சியமாகக் கருதினர். அதை ஆத்மா அடைவது பேறு. அதன் இறுதி இலட்சியம் உடல் மரணத்தை வெல்வது. மருத்துவம் வலியை வென்றது. வாழ்வை நீட்டித்தது. மரணத்தை வெல்ல முயல்கிறது. ஆத்மா அழியும் உடலை விட்டு அடுத்த உடலை நாடி மறுபடியும் பிறக்கிறது. ஆத்மாவுக்கு அடுத்த பிறப்பற்ற நிலை உலகிலில்லை. பிரபஞ்சத்திலுண்டு. அதை Non-birth,Non-Becoming  என்பார்கள். ஆத்மா அதனுலகில் பிறவியை வெல்லுதல் வேதம் நாடிய அமரவாழ்வு. ஆத்மா வளரும் பொழுது உடல் வளராவிட்டால் சிறுகுடும்பம் பெரிய குடும்பமாகும் பொழுது சிறுவீட்டை விட்டு பெரிய வீட்டுக்குப் போவது போல் ஆத்மா அடுத்த உடலை நாடுவது மறுபிறப்பு, புனர்ஜன்மம். குடும்பம் பெரியதாகும் பொழுது வீடும் பெரியதாக முடியுமானால் வீடு மாற வேண்டியதில்லை. பகவான் கூறும் அமர வாழ்வு அத்தகையது. அவ்வாழ்வு வந்த பின் மனிதன் பிறக்கிறான், என்று கூறுகிறார். (Evolution of Man).

Oneness is different from One

ஒன்று என்பது ஒருமையிலிருந்து வேறுபட்டது

நான் மனித குலத்தைச் சார்ந்தவன். மனிதர்கள் எத்தனை கோடியானாலும் நான் அவர்களுடன் ஒன்றிய மனிதன் என்பது மாறாது. ஒன்று என்பதும் ஒருமை என்பதும் வேறு வேறான கருத்து. இது ஒரு பேனா. அது ஒன்று. ஆயிரம் பேனாக்களுடன் இதுவும் ஒரு பேனா என்பது இதற்குப் பேனா என்ற அம்சமுண்டுஎனக் காட்டுகிறது. ஒருமையைத் தவறாக ஒன்று எனப் புரிவது குழப்பம் விளைவிக்கும்.

கடவுள், சுதந்திரம், ஜோதி, அமரவாழ்வு

நூலின் முதல் அத்தியாயத்தில் முதற் பாராவில் மனிதன் தேடுவது கடவுள். அதை ஜோதியாகவும், சுதந்திரமாகவும், அமரவாழ்வாகவும்  தேடுகிறான்  (God, Light, Freedom,Immortality) என்கிறார். கடவுள் என்பது பிரம்மம். மனத்தில் அது ஜோதியாகவும், உடலின் ஆழத்தில் மரணமிலா வாழ்வாகவும், ஜீவனில் சுதந்திரமாகவும் காணப்படுகிறது. பூரணயோகம் எல்லாப் பகுதிகளிலும் கடவுளை நாடுகிறது. தவம் ஆன்மாவுக்கு மட்டும் விடுதலை மோட்சம் தேடுகிறது. இந்த இலட்சியத்தை ஆரம்பத்திலேயே பகவான் குறிப்பிடுகிறார்.

மாயை

இது நாமறிந்த சொல் "மாயமாய் மறைந்து விட்டது" என்கிறோம். மாயம் என்றால் புரியாதது, மறைவது, இல்லாதது என்பது வழக்கு. மயன் என்பவன் தெய்வலோக சிற்பிஎன அறிவோம். இந்த சிற்பி கட்டுவது கட்டடமில்லை. பாண்டவர் இந்திரப்- பிரஸ்தத்தில் மாளிகைகள் கட்டியது மயன். மயன் கட்டிய கட்டடம் உலகம், சொர்க்கம். இவன் பிரம்மாவின் சிற்பி. உலகை ஏற்படுத்தியது மாயை என்பதை பகவான்

  • மாயை - தெய்வீக மாயை - பிரம்மத்தின் ஜீவியம் என்கிறார்.

உலகம் மாயை என்பதை சங்கரர் கருத்து மூலம் ஏற்கின்றனர். சங்கரர் மாயை என்பதை இல்லாதது என்று கூறுகிறார். பரமாத்மா சத்தியம், உள்ளது, நிலையானது. மற்றவையெல்லாம் ஜீவாத்மா உட்பட மாயை இல்லாதன. அதனால், இல்லாத மாயையை விட்டகன்று, இருக்கும் பரமாத்மாவை நாடுவது அத்துவைதம்.

பகவான் மாயை என்பதை பிரம்மத்தின் ஜீவியம் என்றார். இது இரு உலகங்களையும் சிருஷ்டித்தது என்றார். அவற்றை அஞ்ஞான மாயை, ஞான மாயை (higher and lower Maya) எனப் பிரித்தார். அஞ்ஞான மாயை ஜீவாத்மாவுக்கே அர்த்தமில்லை

என்கிறது. அஞ்ஞான மாயையை ஏற்றுத் தழுவி, அதைக் கடந்து தெய்வீக மாயையை - higher Maya, ஞான மாயை - ஏற்க வேண்டும் என்கிறார். அஞ்ஞான மாயையும், தெய்வீக மாயையும் கருத்தில் சந்திக்குமிடத்தை நாம் அறிவது அவசியம் என்கிறார் பகவான். அது அஞ்ஞானம், ஞானமாகுமிடம். அஞ்ஞானமும், ஞானமும் சேர்ந்த முழுமை பூரணயோக அடிப்படை. அடிப்படையைக் கருதினால் அர்த்தம் அர்த்தபுஷ்டியாகும். சிருஷ்டியின் இரகஸ்யம் (key) தெரிந்து விட்டது. எந்தப் பூட்டில் இந்தச் சாவியைத் திறப்பது தெரியவில்லை என்கிறார். அந்த பூட்டு சிருஷ்டி. சிருஷ்டியின் முழுமையை அறிவது தெய்வீக மாயையும், அஞ்ஞான மாயையும் எண்ணத்தில் சந்திக்குமிடம். இக்கருத்து தெய்வீக மாயை என்ற அத்தியாயத்தின் கரு, சூட்சுமம், இலட்சியம், இரகஸ்யம். இதன் வழி பகவான் சங்கரர் அத்துவைதத்தைக் கடந்து வருகிறார். புத்தரைக் கடந்து வந்த சங்கரரை பகவான் கடந்து வந்த வாயில்கள் அநேகம். அதனுள் முக்கியமானவற்றுள் இது ஒன்று.

ஜீவியம், பிரகிருதி, இயற்கை, புறம், சலனம்

ஜீவன் செயல்பட ஜீவியம் உதவுகிறது.

புருஷன் பிரகிருதியால் செயல்படுகிறான்.

இறைவனின் கருவி இயற்கை.

அகம் புறமாக வெளிப்படுகிறது.

அமைதியின் செயல் சலனம்.

வாய் செயல்படுவது பேச்சு.

உடலின் அசைவு செயல்.

ஒரு நிலை அடுத்த நிலைக்குப் போகும் பொழுது அதன் பெயர் நிலைக்கேற்ப மாறுகிறது. பெயர் எதுவானாலும் கருத்து ஒன்றே. பிரம்மம் செயல்பட மாயை உதவுகிறது. மாயை பிரம்மம் செயல்பட உதவும் அடுத்த நிலைக் கருவி. இவை தத்துவம்

பயன்படுத்தும் சொற்கள். எனவே மாயை என்றாலும் ஜீவியம் என்றாலும் ஒன்றேயாகும். அகம் புறமானதால் - பிரம்மம் செயல்பட முடிவு செய்ததால் - பிரம்மத்தின் அகம் பிரம்மம், அதன் புறம் சிருஷ்டி. சிருஷ்டிக்கு இரகஸ்யம் அகம், புறமாவது. அது பிரம்மம் எடுத்த முடிவு. பகவான் கூறுவது, பிரம்மம் வேறு, உலகம் வேறு, எப்படி உலகம் சிருஷ்டிக்கப்பட்டதுஎனத் தெரியவில்லை என்பதன் முதற்பலன்,

  • நம் வாழ்வு கர்மத்திற்கும், காலத்திற்கும் கட்டுப்பட்டது.
  • நாம் பிரகிருதியை மட்டும் அறிந்து, புருஷனிலிருந்து எப்படி பிரகிருதி எழுந்ததுஎன அறியாவிட்டால் கடைசிக் கட்டமான சட்டம் கர்மம். அசையாத புருஷன், அசையும் பிரகிருதியாயிற்று என்று அறிந்தால், முடிவான சட்டம் ஜீவன். ஜீவனுக்குக் கர்மமில்லை. காலம் ஜீவனைக் கட்டுப்படுத்தாது. உலகம் பிரகிருதியில் வாழ்வதை பகவான் ஜீவனுக்கு - புருஷனுக்கு - மாற அழைக்கிறார்.
  • இதன் இரகஸ்ய சூட்சுமம் முழுமையிலுள்ளது. ஆபீசில் அதிகாரியின் சட்டத்திற்கு ஊழியர் கட்டுப்பட்டவர். 10 நிமிஷம் வெளியே போக உத்தரவு வேண்டும். அதிகாரிக்கு உத்தரவு தேவையில்லை. நாம் ஊழியராகவோ, அதிகாரியாகவோ இருக்கும் (choice) முடிவு நம்முடையது.

கம்பனியில் சிருஷ்டி

இறைவன் என்பது அனந்தம், அனைத்தையும் தன்னுட் கொண்டவன், அவனன்றி அணுவும் அசையாது, உலகமே அவன், அவனைக் கடந்து எதுவுமில்லை, அவனில் இல்லாதது அவனியிலில்லைஎன நாம் கூறுகிறோம். இதை தத்துவமாக

  • இறைவனை அனந்தம் (infinity) என்கிறார்.
  • இறைவனை அனந்தம் எனக் கூறியவர் உலகிலுள்ள அனைத்தும், அணுவும், அனந்தம் என்கிறார்.

  • அது உண்மையானால் அணுவினின்று அனந்தம் வெளிவரும். வாழ்வை இறைவனுக்கு ஏற்ப வாழ்ந்தால் நமக்கு ஏழ்மை, பஞ்சம், பற்றாக்குறையில்லை என ஆகும். இதை Practical concept of infinity, தொட்டனவெல்லாம் பொன்னாக வேண்டும் என்று அறியலாம். வாழ்வு சுபிட்சமாவது வாழ்வு தெய்வமாவது.
  • இறைவனில் அனைத்தும் அனைத்துள் உள்ளது, (all is in all). அதை மாயை சிருஷ்டியாக மாற்றுகிறது. இங்கு அனைத்தும் ஒன்றிலும், ஒன்று அனைத்துள்ளும் உள்ளன. (all is in each, each is in all).

கம்பனியின் முதலாளி இறைவன். கம்பனி உலகம். கம்பனியெனில் பணம், சரக்கு, அதிகாரம், சட்டம், சம்பளம், போனஸ், இலாபம், நஷ்டம் எனப் பல உண்டு. அவ்வளவும் முதலாளியுள் உள்ளன. பணமே சரக்கு, சரக்கே இலாபம், இலாபமே நிர்வாகம்என அனைத்தும் அனைத்தில் உள்ளன. முதலாளி கம்பனியானபின் பணம் என்பது சரக்காகவும், சட்டமாகவும், ஒழுங்காகவும், உற்பத்தியாகவும் காணப்படுகிறது. அதேபோல எதுவும் அனைத்துள் உள்ளது. அனைத்தும் இதனுள் காணப்படுகிறது சிருஷ்டியில் இதைச் செய்வது மாயை. கம்பனியில் இதைச் செய்வது முதலாளியின் செயல். அதை முதலாளியின் ஜீவியம் எனலாம்.

புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும்

நாட்டில் ஒரு புதுச் சட்டம் ஏற்பட நாம் நினைத்தால், பலருக்கு அது நினைவாகவே இருக்கும். சிலருக்கு அதைச் செய்ய முடியும். எவ்வளவு நாளில் அது முடியும் என்பது அவர் யார் என்பதைப் பொருத்தது. சிறிய மனிதனுக்கு நெடுநாளாகும். பெரிய மனிதனுக்கு சீக்கிரம் முடியும். சிறிய மனிதன், பெரிய மனிதன், மக்கள் அனைவரும் புறம், சர்க்கார் அகம். பிரதமர் அகத்தின் மையம். வெளியிலுள்ள மனிதர் பிரதமரானால், எண்ணம் உடனே சட்டமாகும்.

வாழ்வு மனத்தையும் உடலையும் இணைக்கும் லோகம்

உடல் உணரும் உணர்ச்சிகளை வாழ்வு மனத்திற்குக் கூறி அவ்வுணர்வுகளை எண்ணமாக மாற்றுகிறது. அந்த எண்ணத்திற்கு உடல் கட்டுப்படுகிறது என்பது நம் அனுபவம். காfற்று சில்லென வீசினால் உடல் குளிருகிறது. உடல் ஜடமாக இருந்தால், அது குளிரால் வாடும். என்ன செய்வதுஎன உடல் அறியாது. ஆடு அதுவும் செம்மறி ஆடு மடமைக்குப் பெயர் போனது. ஓர் ஆடு தவறி பள்ளத்தில் விழுந்தால், அதன் பின் எல்லா ஆடுகளும் பள்ளத்தில் விழும். என்ன செய்கிறோம் என அறியாமல், அறிய முடியாமல் செய்வது அறியாமை, மடமையாகும். நமக்கு மனம்என ஒன்றில்லையெனில், வாழ்வுமில்லா விட்டால், உடல் குளிரால் நடுங்கினால், என்ன செய்வது என அறியாது. நடுங்கிக் கொண்டேயிருக்கும். உணர்ச்சி என்பது உயிருக்குடையது. நாம் அதை வாழ்வு என்கிறோம். காற்று சில்லென வீசினால் உணர்ச்சி அறிவுக்கு அதை அறிவிக்கிறது. அறிவு அவ்வுணர்வை எண்ணமாக்கி, எழுந்து கதவைச் சாத்து என உத்தரவிடுகிறது. உயிர், வாழ்வு என்பதன் தன்மை,

  • உடலையும், மனத்தையும் இணைப்பதாகும்.
  • இணைப்பதன் மூலம் உடலை மனத்தின் அதிகாரத்துள் கொண்டு வருவதாகும்.

காலம், இடம்

காலம், இடமில்லாமல் உலகமில்லை. நாம் சிந்தனையிலாழ்வது கற்பனை. இறைவன் கற்பனை செய்தால் அகத்தில் எழுவது காலம், புறத்தில் எழுவது இடம்.

  • காலம் இறைவனின் கற்பனை.
  • காலம் அகம், இடம் புறம்.

SPIRITUAL RANGES OF MIND

தெய்வீக மனம், ஆன்மீக மனம் என்பவை நான்கு நிலைகளில் அடுக்கடுக்காக அமைந்துள்ளன

ஜடமான உடல், சக்திமயமான உயிர் (பிராணன்), அறிவின் உறைவிடமான மனம், மௌனமாய் சிந்திக்கும் முனிவர் மனம், ஞானதிருஷ்டியுள்ள ரிஷியின் மனம், நேரடி ஞானம் பெற்ற யோகியின் மனம், தெய்வங்கள் பெற்றுள்ள தெய்வீக மனம், சத்தியஜீவியம் பெற்ற சத்தியஜீவியம், ஜீவியம், ஜீவன், பிரம்மம் ஆகியவை மனித ஜீவனின் பகுதிகள். அது போக இருண்ட பாதாளம், அதைக் கடந்த ஜடமான இருள், நம்மைச் சூழ்ந்துள்ள சூழலின் ஜீவியம், நம் கரணங்களிடையே சூட்சுமமாக நிலவும் ஜீவியம் ஆகியவையும் நம் ஜீவனுக்குரிய பகுதிகள் (Parts of the Being). கை, கால், கண், மூக்கு, இதயம், ஈரல் போன்றவை உடலின் உறுப்புகள் (Parts of the body). அதேபோல் ஜீவன், மனித ஜீவனுக்கு இத்தனைப் பகுதிகளுண்டு. அவற்றுள் மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடையேயுள்ள நான்கு நிலைகளை ஆன்மீக மனம்என பகவான் பெயரிட்டழைக்கிறார். முனிவர் மனத்திலிருந்து சத்புருஷன்வரை உள்ள பகுதிகளை நாம் அறிய முடியவில்லை என்பதால் அவற்றை Superconscient பரமாத்மாஎனக் குறிப்பிடுகிறார்.

ஜீவியம் என்பது Consciousness சிருஷ்டிக்குரிய முறைகள் மூன்று. அவை தன்னிச்சையாக சிந்திப்பது ( Self-conception,), தன்னைத் தானே அளவிட்டுக் கொள்வது (Self-limitation), தன்னைத் தன்னுள் கிரகிப்பது (Self-absorption) என்பவை. ஜீவியம் தன்னைத் தன்னுள் கிரகித்துக் கொண்டால் ஜீவியம் அறிய முடியாத நிலை ஏற்படுவதை Superconscient பரமாத்மா என்ற நிலை எழுகிறது. எந்த நிலைக்கும் எதிரான நிலையுண்டு என்பதால் inconscient ஜட இருளும் ஏற்படுகிறது. ஜட இருளுக்கும் சக்தியுண்டு. அது அளவு கடந்த சக்தி. உலகம் அதனால் இயங்குகிறது. அது ஜடம், இருண்டது, ஆனால் சக்தியுடையது, இயங்க வல்லது. அந்த இயக்கமே பூவுலக வாழ்வு, மனித வாழ்வு.

இங்கு ஆன்மீக மனம் என்ற 4 நிலைகளை மட்டும் விளக்குவோம்.

1) முனிவர் மனம் - இது நம் மனத்தைவிட ஏராளமான சக்தியுடையது. சிந்திக்காமல் புரியும் சக்தியுடையது. நம் மனம் அறிவால் செயல்படுவது. புலன்களால் நம் மனம் உலகையறியும். சிந்தனையால் புரிந்து கொள்ளும். இன்று உலகில் நாம் காணும் விஞ்ஞான விந்தைகளை எல்லாம் உற்பத்தி செய்தது நம் மனம், மனித மனம். முனிவர் மனம் மௌனம் காப்பது. பார்த்தவுடன் அறியும் பாங்குடையது. சிந்தனை அறிவின் கருவி. முனிவர் மனம் சிந்தனையற்ற மௌனமுடையது.Silent will சக்தி வாய்ந்தது. அதன் உறைவிடம் முனிவர் மனம்.

  • சிந்தனை அறிவின் ஊற்று.
  • சிந்தனையற மௌனம் பெரிய ஊற்று.

2) ரிஷியின் மனம் - மனிதச் சிந்தனையை முனிவர் கடந்து மௌனத்தில் உறைந்து பெரிய ஞானம் பெறுகிறார். ரிஷி மௌனத்தைக் கடந்து ஒளியை நாடி திருஷ்டி பெற்று, ஞானத்தை ஞானதிருஷ்டியாக அடைகிறார்.

3) யோகியின் மனம் - அறிவின் கருவிகள் பல. மனிதனுக்குச் சிந்தனை, முனிவர்க்கு மௌனம், ரிஷிக்கு ஜோதி. யோகிக்கு எந்தக் கருவியும் தேவையில்லை. அவர் ஞானத்தை நேரடியாகப் பெறுகிறார். அதை நேரடி ஞானம் intution என்கிறார்.

4) தெய்வீக மனம் - மனிதனும், முனிவரும், ரிஷியும் கருவிகள் மூலம் ஞானத்தைப் பெறுகின்றனர். யோகி கருவியின்றி ஞானத்தைப் பெறுகின்றார். தெய்வத்திற்கு இவை எதுவும் தேவையில்லை. தெய்வீக மனம் ஞானத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஏற்கனவே அங்கு ஞானம் உள்ளது. ஆனால் ஞானம் மட்டுமன்று, அத்துடன்  ஞ்ஞானமும் கலந்துள்ளது. அதற்குக் காரணம் தெய்வீக மனத்தில் அகந்தையுள்ளது. தெய்வீக மனமானாலும், அது மனம். இது சத்தியஜீவியமன்று. தெய்வங்கள் சில சமயங்களில் நம்மைப் போல் வம்பில் மாட்டிக் கொண்டு தவிப்பதுண்டு. விஷ்ணு வந்து காப்பாற்றுவார். விஷ்ணு தெய்வீக மனத்தின் சிறப்பான உச்சகட்டம். இது சத்திய ஜீவியப் பிரதிநிதி. இதற்கும் சத்தியஜீவியத்திற்கும் இடையே பொன்மூடி ஒன்றுண்டு.

கிருஷ்ணாவதாரம் இந்நிலைக்குரியது. பிரம்மா இந்த லோகத்தைச் சேர்ந்தவர். அதனால் பிரம்மா உலகை சிருஷ்டித்தார் எனில் மனம் உலகை சிருஷ்டித்தது எனப் பொருள். இதன் திறன் infinity யை finite ஆக்குவது. அகண்டத்தைக் கண்டமாக்குவது. அதைக் கடைசிவரை செய்வதால் துச்சேன என்று கூறப்படும் (infintesimal) அணுவரை தெய்வீக மனம் பொருள்களைப் பிரிக்கும். சத்தியஜீவியம் சத்திய லோகத்திற்குரியது. நம் லோகம் அசத்தியமான லோகம். தெய்வீக மனம் சத்தியஜீவியத்தின் பிரதிநிதியாக நம் லோகத்திற்கு வந்துள்ளது.

சிருஷ்டி - தலைகீழ் மாற்றம்

பிரம்மம் ஒளிந்து வெளிவர முடிவு செய்ததால் ஏற்பட்டது இந்த சிருஷ்டி. ஒளிவது என்றால் தன் ஆரம்ப நிலைகளை மறப்பது. ஏழு வகை அஞ்ஞானம் அப்படி ஏற்பட்டது. இப்படி ஒளிவதைப் பல வகைகளாகக் கூறலாம்.

1) ஒளிந்து ஞானம் அஞ்ஞானமாயிற்று.

2) சச்சிதானந்தத்தின் எட்டு அம்சங்கள் அதற்கெதிரான எட்டு அம்சங்களாக மாறுவதும் ஒளிவதே. ஞானம் அஞ்ஞானமாவது அவற்றுள் ஒன்று.

3) சத்து, சித்து, ஆனந்தம், சத்தியஜீவியம் மேலேயுள்ளது. ஜடம், சைத்தியப்புருஷன், வாழ்வு, மனம் கீழேயுள்ளது. இந்த மாற்றம் ஒளிவதாகும். இதில்,

சத்து ஜடமாகிறது. சித்து வாழ்வாகிறது. ஆனந்தம் சைத்தியப்புருஷனாகிறது. சத்தியஜீவியம் மனமாகிறது.

4) சிருஷ்டி பரிணாமமாவது மற்றொரு வகை.

5) அனந்தன் அணுவாவது ஒரு வகை.

6) process of Creation சிருஷ்டி ஏற்பட்ட வழி என்பதும் ஒளிவதாகும்.

இதை ஜீவனின் எழுவகை என்கிறார். முதற் புத்தகம் 27ஆம் அத்தியாயம் இதை விளக்குகிறது.

வேதாந்த ஞானம்

வேதாந்தம் வேதத்தைக் கடந்தது. மனிதனுக்கு அறிவு (Reason) உண்டு. அறிவு புலன்களால் உலகையறிகிறது. புலனின்றி நேரடியாக மனத்தால் உலகை அறிய முடியும். மனம் புலன்களினின்று விடுபட்டால் அறிவு ஞானமாகிறது (Reason becomes intution). இது வேதாந்தம் கண்ட உண்மை. மனிதன் ஞானம் பெற்றால் பாதாளமும், பரமாத்மாவும் ஞானத்தில் இணையும். பரமாத்மாவில் ஞானம் நேரடியாக ஒளியாக இருக்கிறது. பாதாளம் வாழ்வுக்குரியது. வாழ்வில் ஞானம் செயலாகத் தலைகீழாக உள்ளது. வாழ்வு தலைகீழே மாறினால் ஞானம் வெளிவரும். மேலேயுள்ள பரமாத்மாவின் ஞானமும், கீழே பாதாளத்தின் ஞானமும் இணைந்தால் அது (Self) பிரம்மம். அதுவே உலகம்.

மனம், வாழ்வு, ஜடம்

இன்றுவரை விஞ்ஞானமோ, ஆன்மீகமோ இவை என்ன என்று ( definition) விளக்கம் தரவில்லை. சர்க்கார், சட்டம், கல்வி, பொருளாதாரம் போன்ற எல்லாக் கருத்துகளும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் மனம், வாழ்வு, ஜடம் விளக்கப்படவில்லை. உலகில் அறிவு வளர்ந்துள்ளது. அது விஞ்ஞான அறிவு. ஆனால்

- விஞ்ஞானி ஜடம் என்ன என்று கூற முடியாமல் தவிக்கிறான்.

- Biologist வாழ்வு என்ன என்று கூற வேண்டும்என நினைக்கவில்லை.

- Psychologist மனம் என்ன என்று அறியவில்லை.

- Doctor உடல் நலம் என்றால் என்ன என்று கூறுவது முக்கியம் என நினைக்கவில்லை.

- Philosopher energy என்றால் என்ன எனக் கூறவில்லை.

பகவான் இவற்றை 1914இல் விளக்கியுள்ளார். அவர் கூறிய விளக்கங்கள் புரிந்தால் மனம் நமக்குக் கட்டுப்படும், வாழ்வு கட்டுப்படுவது தோல்வியில்லை என்பது தெரியும். ஜடம் விளங்கினால் நம் ஆத்மாவுக்கு அது கட்டுப்படும்.

மனம் என்பது மனோசக்தி. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியுமிடத்தில் ஏற்படுகிறது. பிரியுமிடத்தில் உற்பத்தியாகும் மனம் பிரிக்கும் கருவியாகிறது. சத்தியஜீவியம் முழுப்பார்வையுடையது. அதன் பார்வைக்கு உலகம் முழுவதும், ஏன் பிரபஞ்சம் முழுவதும் தெரியும். சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியும் பொழுது இடையில் ஏற்படும் மனம் ஒரே பார்வையில் இருபுறமும் பார்க்க முடியாது. ஒரு பகுதியை ஒரு பார்வையிலும், திரும்பி மறுபகுதியையும் பார்க்க வேண்டும். பார்வை பகுதியாகிறது. இது பிரிக்கும் மனத்தின் தன்மை. அதிலிருந்து நம் மனம் வரை எந்த நேரத்திலும் மனம் ஒரு பகுதியை மட்டும் பார்க்கும். அதனால் அதன் பார்வை பகுதியானது. பகுதியாகச் செய்வது பிரிப்பது. பிரிப்பது தொடரும். ஏனெனில் மனம் அனந்தமானது. அனந்தம் முடிவற்றது. அதனால் முடிவற்று மனம் பிரிக்கிறது. பிரிப்பது தொடர்வதால் அகண்டம் கண்டமாகி, அணுவாகி, "துச்சேன" என்ற சிறு பகுதிக்கு வருகிறது. இதகு மேல் பிரிக்க முடியாது என்பதாலும் பிரிக்கும் மனம் அனந்தமானது அதனால் அது செயல்படாமலிருக்க முடியாது என்பதாலும், பிரிந்த அணுக்கள் சேர்ந்து ஜடம் உருவாகிறது.

வாழ்வு

மனத்தில் ஞானம், உறுதியுண்டு. உறுதியில் ஒளியில்லை. ஞானம் ஒளிமயமானது. ஒளி உறுதிமேல் செயல்பட்டால் சக்தி பிறக்கிறது. இதை சக்தி லோகம், வாழ்வு என்கிறோம். ஒளி உறுதியில் மறைவது வாழ்வு. ஒளி முழுவதும் உறுதியில் மறைந்தால் சக்தி ரூபம் பெறு இருண்டு ஜடமாகிறது. ஜடத்தை பல வகைகளாக வர்ணிக்கலாம். அவற்றுள் இது ஒன்று.

ஜடம்

- பிரம்மத்தின் முடிவு - சிருஷ்டிக்க முடிவு செய்தது - சச்சிதானந்தத்தில் தெரிகிறது.

- சச்சிதானந்தம் சத் எனப்படும். இது ஜீவன். முழுமையான விழிப்புடைய ஜீவன் Conscious Being. பகவான் இதை Self- Conscious being எனவும் கூறுவார்.

- இது தன்னிச்சையாகச் செயல்படும். (Self-Conception)

- தன்னைப் பிரபஞ்சத்துள் வெளிப்படுத்த சத் முடிவு செய்தது.

- அவ்வெளிப்பாடு substance பொருளாயிற்று. அது Spiritual substance.

- பிரபஞ்சம் சத்தின் வெளிப்பாடு. (பிரம்மத்தின் வெளிப்பாடு எனவும் கூறலாம்.)

- பிரபஞ்சத்தில் மனமும், வாழ்வும் செயல்படுகின்றன.

- மனம் பிரிக்கும், வாழ்வு சக்தியை வெளிப்படுத்தும்.

- மனத்திற்குப் பிரபஞ்ச கடமையொன்றுண்டு.

- மனம் எதையும் அணுவாகும்வரைப் பிரிக்கும் திறனுடையது.

- அணுவைப் பிரிக்க முடியாது. ஆனால் மனம் செயல்படுவதை நிறுத்தாது.

- பிரிக்க முடியாத மனம் செயல்படுவதை நிறுத்த முடியாது என்பதால் சேர்க்கும். பிரிப்பதும், சேர்ப்பதும் ஒன்றன்றோ! - அணுக்கள் சேர்ந்த தொகுதி ஜடமாகும்.

- இதுவே ஜடத்தின் விளக்கம். சத்புருஷன் தன்னைத் தன்னிச்சையாகப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்திப் பொருளாகி, அப்பொருள் மனத்தால் அணுவாகப் பிரிக்கப்பட்டுச் சேர்ந்த தொகுதி ஜடம்.

- ஜடம் பிரம்மம். மனமும், வாழ்வும் பிரம்மம்.

- ஜடம் ரூபம் பெற்றது. சக்தியை உட்கொண்டது.

- மனம் ஜடத்திற்கு ரூபமளித்தது. வாழ்வு ஜடத்திற்கு சக்தியளித்தது. இச்சக்தி ஜடத்துள் மறைந்துள்ளது.

- பிரம்மம் தன்னைத் தன்னுள் கிரகித்துக் கொண்டதால் ஜடம் ஏற்பட்டது.

- அதனால் ஜடத்தில் பிரம்மம் தன்னை மறந்து விட்டது.

- பிரம்மம் ஜடத்துள் கலந்து ஒளிந்து சிக்கியுள்ளது.

- ஜடத்துள் இரகஸ்யமாக மறைந்துள்ள கடவுளை - பிரம்மத்தை - கண்டுபிடிக்க வேண்டி மறைந்துள்ள ஜீவியத்திற்கு ஜடம் ஆசை காட்டுகிறது.

Page NO..239 The Life Divineஇல் Matter என்ற அத்தியாயத்தின் கடைசி பாராவில் உள்ள 7 கருத்துகள் 7 வாக்கியமாக அமைகின்றன. அவற்றுள் இது முக்கிய கருத்து. அதன் விளக்கம் கீழேயுள்ளது:

  • ஜடம் என்பது சத் என மேலே கூறினோம்.

சத் ஜடமாக மாற சித் வழியாக வருகிறது.

சத் ஜடமாக மாற உதவுபவை மனமும், வாழ்வும் என்பதை மேலே கூறினோம்.

ஜடம் என்பது ரூபம் பெற்றது.

ஜடத்திற்கு இந்த ரூபத்தை அளித்தது மனம். ஏனெனில் எல்லா ரூபங்களும் மனத்தால் அளிக்கப்பட்டவை.

மனம் தந்த ரூபத்தை சித்திக்க வைத்தது வாழ்வு.

ஜடம் பெற்ற ரூபத்துள் சித் - ஜீவியம் - மறைந்துள்ளது.

இந்த ஜீவியத்துள் ஜீவன் மறைந்துள்ளது. ஜீவன் என்பது சத்.

சத் - சித் - சக்தி - ரூபம் - ஜடம் என்ற வரிசைஏற்படுகிறது. அதையே ஜீவன் - ஜீவியம் - வாழ்வு -ரூபம் - ஜடம் எனலாம்.

ஜடத்துள் அதன் சத்தியமான ஜீவியம் ஒளிந்துள்ளது.அந்த ஜீவியத்துள் சத் என்ற ஜீவன் மறைந்துள்ளது. - மறைவது சிருஷ்டி (involution).

- வெளிவருவது பரிணாமம் (evolution). -

சத் தன்னைத் தன்னுள் மறைத்து ஜடமாயிற்று.

ஒளிந்ததைக் கண்டுபிடிப்பது பரிணாமம். அதுவே சிருஷ்டிக்குக் காரணம்.

- கண்டுபிடிக்கும் வேலை ஜீவியத்திற்கு. கண்டுபிடிக்கப்பட வேண்டியது சத் - ஜீவன் - ஒளிந்துள்ள கடவுள் என்ற பிரம்மம்.

- இவ்வேலையை ஆரம்பிப்பது ஜடம்.

ஜடம் ஜீவியத்தை ஜீவனைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது, ஆசை காட்டுகிறது.

தூண்ட உணர்ச்சியைக் கருவியாக்குகிறது. -

உணர்ச்சியால் செயல்படும் மனிதன் தன் ஜீவியத்தால் ஒளிந்துள்ள ஜீவனை (கடவுளை) அடைய முயல்கிறான்.

- செயல் (மனிதச் செயல்) இறைவனைத் தேடுவதாகும்.

செயலுக்கு ஆரம்பம் உணர்ச்சி.

ஜடம் அவ்வுணர்ச்சியால் மறைந்துள்ள ஜீவியத்தை

அதனுள் ஒளிந்துள்ள ஜீவனைக் காணத் தூண்டுகிறது.

இதை பாஸிட்டிவாகவும், நெகட்டிவாகவும் கூறலாம்.

இரண்டும் இறைவனை நாடும் தவமாகும்.

கடமையுணர்ச்சியால் மனிதன் தன் ஜீவியம் செயல்பட்டு

கண்ணுக்குத் தெரியாத இலட்சியத்தை அடைய முயல்வது மனிதன் இறைவனை நாடுவதாகும்.

மனிதனுடைய எந்த செயலும் வாழ்வில் இறைவனை அடையும் தவமாகும், யோகமாகும்.

குடும்பம் முன்னுக்கு வரும் இலட்சியம் தன் உணர்வில் மறைந்துள்ளதை செயலால் அடைய முயலும் மனிதன் உண்மையில் இறைவனை குடும்பத்துள் தேடுகிறான்.

திருடனுக்கும் இதுவே உண்மை. திருட்டை நாடும் திருடன் இறைவனைத் தேடி தவம் செய்கிறான்..

- பிரபஞ்சத்தில் வெளிப்பட்ட பிரம்மம் ஜடம். - ஜடம் சக்தி பெற ரூபம். - இந்த ரூபம் பிரம்மம் தன்னைத் தனக்கே அடையாளமாகக் காட்டுவது. - ஜீவியம் தன்னை ஆனந்தமாக அனுபவிக்கும் புறம் ஜடம். - ஜடம் சச்சிதானந்தம். சச்சிதானந்தம் தன்னைத் தானே அனுபவிக்க மனம் என்ற அரங்கத்தில் புறமான ஞானமாகவும், செயலாகவும், ஆனந்தமாகவுமானது ஜடம்.

ஜடம் சச்சிதானந்தம் தவிர வேறில்லை.

- மனம் ஆத்மாவைப் புலன் வழி ஜடமாகக் காண்கிறது.

உடல் மீது வெறுப்பு

அழியும் உடலுக்கு அர்த்தமில்லைஎன தவசிகள் உடலைப் புறக்கணித்தனர். உடலை ஒதுக்குவது ஜடத்தை விலக்குவது. பூமாதேவியைப் புறக்கணிப்பது. பழைய நாகரீகங்கள் - மாயன், சால்டியன், வேதம், கன்பூசியஸ் - பூமியைத் தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் வர்ணித்ததை பகவான் சுட்டிக் காட்டி, உடலை விலக்குவது சரியில்லை என்கிறார். மேலும் உடலே உயிருக்கும், ஜீவனுக்கும் உரிய பீடம் என்றும் கூறுகிறார்.

தர்மம், அதர்மம்

மனிதன் தர்ம நியாயத்திற்கும், பாவ புண்ணியத்திற்கும் கட்டுப்பட்டவன். அவனுக்கு மேலேயுள்ள தெய்வத்திற்கும், கீழேயுள்ள விலங்குக்கும் தர்மம், நியாயமில்லை. தெய்வம், மனிதன், விலங்கென மூன்றாகப் பிரியும் பிரபஞ்சம் நம் கொள்கையைப் பூர்த்தி செய்யாது. நம் கொள்கை பூரணம், முழுமை. அதனால் இந்த மூன்றுக்கும் பொதுவானது என்ன? ஆனந்தம் மறைந்தும், வெளிப்பட்டுமுள்ளது. மறைந்துள்ள ஆனந்தம் வெளிப்படுவது பரிணாமம். மேல் லோக ஆனந்தம் பூலோகத்தில் மின்னலெனத் தெறிக்கும். நிலையான மின்னலை நாடுவது பூரணயோகம். பெரிய மனிதனைத் தெரியுமானால் அவர் செல்வாக்கு ஒரு நேரம் நம் வாழ்வில் க்ஷணம் செயல்படும். நமக்குப் பதவி, அந்தஸ்து இருந்தால், அவருக்கு நாம் தேவைப் படுமானால், அவர் செல்வாக்கு நமக்கு நிலையாகப் பயன்படும். நம் உலகில் ஜடம் ஆனந்தத்தைப் பெற்றால் ஆனந்தம் நிலையாகும். பரிணாமத்தில் சச்சிதானந்தம் ஜடத்தில் - பொருள்களில் - தன்னை வெளிப்படுத்த முயல்கிறது. மனிதன் வெறும் ஜடத்தை நாடி ஏமாந்து போகிறான் என்று பகவான் கூறுகிறார். ஆனந்தம் ஜடத்தில் வெளிப்படுவது பூலோகச் சுவர்க்கம். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி மறுப்பது வழக்கு.

ஆனந்தம் ஜடத்தில் வெளிப்படுவது பூசாரி சாமியிடம் நமக்காக வரம் கேட்டுப் பெற்று அளிப்பது. படித்ததற்கு அடையாளமாகப் பட்டம் பெறுகிறோம். இப்பொழுது பணம் கொடுத்து பட்டம் படிக்காமல் பெற்றுக் கொள்கின்றனர். அதற்கு அர்த்தமில்லை. கேலிக்கு உரியவராவோம். பட்டம் படிப்பால் நிறைவு பெறுவது ஆனந்தம் பொருளில் வெளிப்படுவது, பண்ணிய புண்ணியம் பயிரில் தெரியும் என்ற சொல் ஓர் அம்சத்தைக் குறிக்கும்.

விஞ்ஞானியும் துறவியும்

துறவி விஞ்ஞானியை ஏற்கவில்லை. விஞ்ஞானி துறவியை ஏற்கவில்லை. துறவி அவனது துறையில் முடிவான பிரம்மத்தை எட்டிவிட்டான். விஞ்ஞானி அவனது துறையில் அனைத்தும் சக்தி (energy) எனக் கண்டதுடன் நிறுத்திக் கொண்டான். அடுத்த கட்டம் போனால் energy is existence சக்தி என்பது பிரம்ம வாழ்வு, existence is being. அவ்வாழ்வு ஜீவன் என அறியலாம். விஞ்ஞானி அதைச் செய்ய வேண்டும் என்கிறார் பகவான்.

வேதம் கண்ட ஒற்றுமை, ஒருமை

வேத ரிஷிகளுக்கு மலை கடவுள், நதி ஜீவநதி என இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். புருஷனும், பிரகிருதியும் ஒன்று எனக் கண்டனர். உபநிஷதம் அவற்றைப் பிரித்தது. அது சன்னியாசத்தில் முடிந்தது. புத்தர் அதை நிலைநிறுத்தினார். இன்றுவரை இந்தியாவில் வாழ்வும், துறவறமும் பிரிந்து நிற்கின்றன. நாம் கூறுவது ஸ்ரீ அரவிந்தம், முழுமை, பூரணமாதலால் எதையும் விலக்க முடியாது. விலக்கிப் பூரணத்தையடைய முடியாது. வேதம் உடல் வாழ்வு, உபநிஷதம் மனம், இடைப்பட்டது வாழ்வு. மனத்தைக் கடந்தது ஆத்மா. அது வளராத ஆத்மா. வளரும் ஆத்மா அதைக் கடந்தது. அது சத்தியஜீவியம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்த ஒற்றுமை சத்தியஜீவிய ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது மனிதன் உபநிஷத காலத்துப் பிளவை விலக்கி, வாழ்வு, மனம், ஆத்மாவைக் கடந்து வளரும் ஆத்மாவையடைய வேண்டும். அங்கு ஒற்றுமையைக் காண வேண்டும் என்கிறார்.

சிருஷ்டி, பரிணாமம்

இறைவன் உலகுக்கு வருவது சிருஷ்டி. மனிதன் இறைவனையடைவது பரிணாமம். மனிதன் சிருஷ்டியை அறிந்தது போல் பரிணாமத்தை அறிய வேண்டும் என விஞ்ஞானியையும், யோகியையும் பகவான் குறிப்பிடுகிறார். புல்லாகிப், பூடாகி, பல்விருகமாகி எனக் கூறிய மரபு பரிணாமத்தையறியும். ஆனால் சர்வம் பிரம்மம் என்றவர் அதைக் கருதாதது போல், பரிணாமத்தை ஒரு கொள்கையாக மரபு ஏற்கவில்லை. அதை ஏற்க வேண்டும். அதுவே பூரணயோகம்.

அறிவும், ஜீவியமும்

- அறிவு அறிய முடியாததை - கடவுளை - ஜீவியம் அறியும்.

- எண்ணத்தைக் கடந்த ஞானமுண்டு. அது வாழ்வு, மனம், சத்தியஜீவியத்தை ஆராயும்.

- மனம், வாழ்வு, ஜடம் என்பது மூவகையான சக்தி. வேலை என்பது சிருஷ்டியும், பரிணாமமுமாகும். உறுதி சிருஷ்டிக்காக சக்தியைப் படைத்தது.

- உறுதி முடிவில்லாத ஞானத்தை நாடுகிறது.

நாத்திகனின் மறுப்பு

- பிரபஞ்ச ஜீவியத்தைக் கடந்து பிரம்ம ஜீவியம் உண்டு.

- சாட்சி என்பது பிரபஞ்ச ஜீவியம். நமது ஜீவியம் விரிவதால் மட்டுமே அதையறிய முடியும்.

- அத்வைதம் கூறும் பிரம்மத்தின் பின்னால் அசத் உள்ளது.

- ஜடம் நித்தியமில்லைஎன துறவி அசத்தைக் கண்டு கூறுகிறான். பிரம்மம் மனித குலம் தவறிவிட்டதுஎனக் கூறுவதில்லை அது. மனிதன் சிறப்படையத் தேவையான

நிபந்தனையை அதன்மூலம் அவன் - பிரம்மம் - கூறுகிறான்.

பரம்பொருள்

- ஜடமும், ஆன்மாவும் முதலில் பிரபஞ்ச ஜீவியத்தில் சந்திக்கின்றன.

- மௌனம் செயலுக்கு ஆதாரம், செயலை மௌனம் நிராகரிக்கவில்லை.

- சிறந்த மனிதன் சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்துள் நுழைய வேண்டும்.

- இது ஜடமும், ஆன்மாவும் பிரம்ம ஜீவியத்துள் சந்திப்பதாகும்.

மனிதனின் ஆன்மீக இலட்சியம்

- சத்தியம் என்பது ஒன்று, அறிய முடியாதது. வேதாந்தம் சச்சிதானந்தத்தைக் கடந்து அசத் உண்டு எனக் கண்டது.

- ஜடமோ, ஆன்மாவோ உண்மையாக இருக்க வேண்டுமானால், சிகரத்தையும் ஜடத்தையும் அறிய வேண்டும்.

- பிரம்மம், பிரபஞ்சம், ஜீவாத்மா ஆகியவை அவசியம். அது மாறவில்லை. மாறுவது நம் கண்ணோட்டம்.

- பிரபஞ்சத்தைக் கடந்தது பாதாளம், மனிதன், பரமாத்மாவை சிருஷ்டித்தது. அகந்தை கூட்டை விட்டு வெளியேறி அவற்றை அறிகிறது.

- எனவே ஜீவாத்மாவே சூட்சும இரகஸ்யம். தெய்வீக ஆன்மா இதர விடுதலை பெற ஆன்மாக்களில் குட்டி போடுகிறது. தாவரம், விலங்கு, மனிதன் குட்டி போடப் பருவம் உண்டு. செடி வளர்ந்து, பூத்து, காய்த்து, பழுத்து, விதை பிடிக்கும். விதை அடுத்த மரத்தை உற்பத்தி செய்யும். விலங்கு வளர்ந்து,

முதிர்ந்து, பருவம் எய்தினால் குட்டி போடும். மனிதன் 16 வயது, பெண் 14 அல்லது 15 வயதானால் பிள்ளை பிறக்கும். The child is an extension of the body. உடல் குழந்தையாக ஜனிக்க உடலுக்குரிய பருவம் 15 வயதளவில் வருகிறது. உடல் குட்டி போடுவது போல் உயிரும் குட்டி போடும். வீரர்கள், கலைஞர்கள், தலைவர்கள் தங்கள் வீரம், கலை, தலைமை குழந்தைகளில் அல்லது சிஷ்யர்களில் எழுவதைக் காணலாம். மகாத்மா காந்தி 1920இல் இராஜாஜி தன் வாரிசு என்றார். நேரு வந்த பிறகு நேருவே தன் வாரிசு என்றார். தலைமை அடுத்த தலைமுறையில் வருவதுண்டு. மாஸிடேனியா பிலிப் மகன் அலெக்ஸாண்டர் அப்படித் தலைமையைத் தகப்பனாரிடம் இருந்து பெற்றவன். மனம் அறிவை உற்பத்தி செய்தால், ஞானத்திற்கும் வாரிசுண்டு. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவேகானந்தர் அப்படி வாரிசாக அமைந்தார். ஆத்மாவுக்குரிய வாரிசும் உண்டு. ஆத்மாவின் வாரிசு சூட்சும உலகில் எழும். அவர் குடும்பத்தில் அது எழவேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. மோட்சம் பெற்ற ஆத்மா முதிர்ச்சி பெற்றது. தெய்வீக ஆன்மா உலகில் ஜனிக்கக் காத்துள்ளது. அது எந்த ஆத்மா மோட்சத் தகுதி பெறுகிறது எனக் காத்துள்ளது.

  • தெய்வீக ஆன்மா மோட்சம் பெற்ற ஆன்மாவில் ஜனிக்கும்.
  • இதே காரணத்தால் ஒரு ஆன்மா சித்தி பெறும் நேரம்பல ஆன்மாக்கள் சித்தி பெறுவதை உலகம் உணர்ந்துள்ளது.

- ஆதியிலிருந்த ஐக்கியத்தை மீண்டும் பெறுவது மனிதனின் கடமை.

பிரபஞ்சமும் மனிதனும்

- விஷ்ணு மனிதன் அதிகபட்சம் எட்டிய இலட்சியம். சத் தன்னை ரூபத்தில் சித்தித்து ஜீவாத்மாவில் வெளிப்படுத்துவது விஷ்ணு எனப்படும்.

- மனம், உயிர், உடலில் (ஜீவாத்மாவின் பகுதிகளில்) அனந்தம் சிருஷ்டியாக வெளிப்பட உதவுவது விஷ்ணு.

- பிரபஞ்சம் செறிந்து, அச்செறிவின் மூலம் பிரம்மத்தையடைய முயல்வதகாக ஜீவாத்மா ஏபட்டது.

- ஜீவாத்மா பிரபஞ்சத்தின் மூலமே பிரம்மத்தைச் சித்திக்க முடியும்.

- ஜீவாத்மா வாழ்வில் ஆன்மாவைச் சித்திக்கப் பயன்படுவது மனோமயப் புருஷன்.

- தெய்வீக வாழ்வையடைய மனோமயப் புருஷனைக் கடந்த புருஷன் தேவை.

- மேல்மனத்தை ஊடுருவி உள்ளே போனால் அசத் அதற்கு விடை தரும். அசத் சச்சிதானந்தத்தைவிடப் பெரியது.

அகந்தை

- ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவானால் அகந்தையிலிருந்து தப்பலாம்.

உடலின் ஜீவியத்துள் ஆன்மா வெளிப்படுவது அகந்தை அழிய உதவும்.

- மரணம் என்பது மாற்றம்என உயர்ந்த ஜீவியம் அறியும்.

- பூமி சூரியனைச் சுற்றி வருவதை நம் புலன்கள் காண பிரபஞ்சமும், பிரம்மமும் சித்திக்க வேண்டும்.

- பகுத்தறிவு மூலம் நம்முள் பிரம்மம் வர முடியும்.

- சுயநலமாக நாம் செயல்பட மறுத்தால் சுயமான ஆனந்தம் நமக்கு அனுபவமாகும்.

சுய ஆனந்தம் எனில் என்ன?

ஆனந்தம் புறத்திலிருந்தும்,அகத்திலிருந்தும்எழும்.

வசதி, விருந்து, உடை, பதவி, பிரபலம் தருவது ஆனந்தம் புறத்திலிருந்து எழுவது.

அறிவு, திறமை, நாணயம், நிதானம் ஆகியவற்றிலிருந்து எழுவது அகம் தரும் ஆனந்தம்.

இவை அகம் தந்தாலும், இவை நம் புறச் செயல்களால் அகத்தில் சேகரிக்கப்பட்டவை.

சுயம் என்பது இவற்றைக் கடந்த ஆத்மாவிலிருந்து எழுவது.

அது பிரம்மம் நம்முள் உறையுமிடம்.

அந்த ஆனந்தம் இனம் புரியாத இன்பம் எனப்படும் causless joy.

அது ஆத்மானந்தம், பிரம்மானந்தம்.

அதுவும் bliss அல்லது delightஆக இருக்கலாம்.

வளராத ஆத்மா எழுப்பும் ஆனந்தம் bliss அது பகுதியானது.

வளரும் ஆன்மா எழுப்பும் ஆனந்தம் delight. அது முழுமையானது.

இது சுய ஆனந்தம்.

சுய ஆனந்தம் எழ சுயநலம் (selfishness) இருக்கக் கூடாது.

சுயநலம் அகந்தையிலிருந்து எழுவது.

சுய ஆனந்தம் எழ சுயநலமான அகந்தை அகன்று அழிய வேண்டும்.

- இயற்கை ஜீவனில் அனந்தம் மலரக் காத்துள்ளது.

வேதாந்த ஞானம்

- அறிவு புலனைக் கடந்தால் பாதாளத்தின் ஞானத்தையும், பரமாத்மா ஞானத்தையும் இணைக்கவல்லது.

- வேதாந்தம் பிரம்ம ஞானத்தின் மூலம் பிரபஞ்சத்தை அறிய முயல்கிறது.

- அது ஞானத்தால் உள்ளே அறியப்படுவது.

- வேதாந்தம் சோஹம் அஹம்பிரம்மாஸி சர்வம் பிரம்மம் என்பவறை அறியும்.

சத் புருஷன்

- வாழ்வு என்பது சக்தி. இதைக் கடந்த நிலையுண்டுஎன அறிவு கூறுகிறது. அது இடத்தையும், காலத்தையும் கடந்தது.

- கடந்தது பிரம்மம்.

- வாழ்வு என்பது சலனம். சலனம் காலம், இடம், இரண்டும் உண்மை. நித்தியம் சத்தியம். சலனத்தால் ஏற்படும் காலம் பிரம்மம். பிரகிருதி என்பது புருஷன்.

- அது நம்முள் உள்ளது. நாம் அதனுள் சென்று நிலையாக வாழலாம்.

- ஞானம் பிரகிருதியிலுறைந்தால் காலம் உற்பத்தியாகிறது.

- சத் புருஷன், பிரபஞ்ச வாழ்வு என்பவை ஜீவனுடைய சத்தியம், பிரகிருதியின் உண்மை. அவை அடிப்படையான உண்மைகள்.

- இவையிரண்டிற்கும் உள்ள தொடர்பை அறிவது விவேகம்.

- நிலை, சலனம், ஐக்கியம், பன்மை என்பவை மனம் கற்பித்த உண்மை. பிரம்மம் இவற்றைக் கடந்தது.

- சத் என்னஎன அறிவோம். சக்தி என்பதென்ன?

- சத், சக்தி வெவ்வேறானவையா? சக்தி சத்தினுடைய வெளிப்பாடா என்பது முக்கியக் கேள்வி.

சித்-சக்தி

- வாழ்வின் தோற்றங்களை ஆராய்ந்தால், அவை சக்தியாகவும், ரூபமாகவும் முடியும்.

- உலகை நிர்மாணிக்கும் சக்தி விழிப்பான சக்தி. அச்சக்தியில் வெளிப்படும் சக்தி விழிப்பான ஜீவன். சிறப்பான ரூபம் இலட்சியம்.

ஆனந்தம்

- பிரம்மம் மேலும் ஓர் ஆனந்தத்தை நாடுகிறது.

- தீமை, வேதனை என்பவை தார்மீகக் கருத்துகள். அதில் உண்மையில்லை.

- வாழ்வு தர்மத்திற்குக் கட்டுப்பட்டதன்று. மனிதன் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்.

நாம் வாழ்வு என அறிவது ஊர், உலகம் வாழும் வாழ்வு. தத்துவம் வாழ்வு எனக் கூறுவது மனம், வாழ்வு, உடல் வரிசைக்குரியது.

இதன் முழு வரிசை சத் - சித் - ஆனந்தம் - சத்தியஜீவியம்

- மனம் - வாழ்வு - உடல். வாழ்வு Life என்ற அத்தியாயத்தில் இது விளக்கப்படுகிறது.

மனம் ஞானம், உறுதி என்ற இரு பகுதிகள் உடையது.

ஞானத்திற்குத் திறனில்லை. உறுதிக்கு ஞானமில்லை.

பரிணாம வளர்ச்சியை நாம் மேல் நோக்கிப் போவதாக அறிவோம்.

மனம் சிருஷ்டியில் அடுத்த கட்ட வாழ்வாகும்.74

 



book | by Dr. Radut