Skip to Content

பகுதி 2

  1. பெரிய மகான்களை அண்டியிருந்தவர்கள் தங்கள் குறைகளைப்பற்றி, நான் பெரியவர் திருவடியில் இருந்தேன். ஒன்றிரண்டு கறுப்புப் புள்ளிகள் இருக்கலாம், என்பார்கள். உண்மை வேறு. அருகிலிருப்பதால் மனிதன் மாறுவதில்லை. அதையே வேறு வகையாகச் சொல்லலாம், பெரியவர் பாதத்திலேயே இருந்ததால், ஓரிரு துளி ஒளி உற்பத்தியாகியுள்ளது எனலாம்.

சிறுதுளியைப் பெருவெள்ளமாக்குபவர்கள்.

அன்னையை நாடிவந்த சாதகர்கள், பக்தர் அனைவரும் பூர்வ ஜென்மங்களில் அன்னையுடனிருந்தவர்கள். உலகம் சுவர்க்கமாகும் பொழுது, நாங்களும் உங்களுடனிருக்க வேண்டும் என அந்த ஜன்மங்களில் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தவர்கள். அன்று அன்னை அவர்கட்குக் கொடுத்த வரம் இன்று அவர்கள் வாழ்வில் பலித்தது. அவர்கள் கேட்டதை மறந்துவிட்டார்கள். கிடைத்தது பெரியது என்று இருந்துவிட்டார்கள். அதனால் இந்த ஜன்மத்தில் அன்னையுடனிருந்தால் போதும், வேறெதுவும் வேண்டாம், யோகமும் வேண்டாம்என இருந்துவிட்டார்கள்என அன்னை கூறுகிறார். அன்னையின் அருகிலிருக்க என்ன தவம் செய்ய வேண்டும் என்பதைச் சோதனை செய்துபார்த்தால் தெரியும். அன்னை வசித்த அறையையும் இன்று வருஷத்தில் இருமுறைதான் திறக்கிறார்கள். பகவான் வசித்த அறையை இன்று தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கின்றார்கள். அவர் சமாதியானபின் நெடுநாள் வரை அது போலில்லை. பல வருஷம் கழித்து சிலரை அன்னையே பாஸில் கையெழுத்திட்டு அனுமதிப்பார்கள். பல ஜென்மங்கள் பிரார்த்தனை பலித்து இந்த ஜென்மத்தில் அது கிடைக்க வேண்டும். கிடைத்ததால் நம் நிலையிலிருந்து உயரமுடியும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. உயருவது, நம் முயற்சி, சுபாவம், அம்சம், அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. பெரிய இடங்களில் அருகிலிருப்பதன் பலன்கள் என்ன? அதனால் மட்டும் சில பலன்களை ஏன் பெறமுடியாது? என்பதன் சட்டங்களைப் பொதுவாகவும், குறிப்பாகவும் எழுதுகிறேன்.

  1. பெரிய இடத்திற்கு அருகில்வர ஏதாவது ஒரு வகையில் பெரிய அம்சமின்றி முடியாது.
  2. வந்தபின் தானும் பெரியதாக உயர்வது என்பது, வந்ததால் மட்டும் முடியாது.

  1. வந்தபின் முயற்சியாலோ, அம்சத்தாலோ, அதிர்ஷ்டத்தாலோ, சுபாவத்தாலோ, சூழலாலோ உயரமுடியும் என்பது உண்மை என்றாலும், அதற்கு உண்டான பலன் மட்டுமே வரும். முயற்சியால் முழுப் பலன் வரும், ஓர் அம்சத்தால் எல்லாப் பலன்களுமோ, அடுத்த பலனோ வாராது.
  2. அருகிலிருப்பது வாய்ப்பை அளிக்கிறது. சுபாவம் எந்த அளவுக்கு உயரலாம், முயன்றால் உயரலாம் என்பதை நிர்ணயிக்கும். முயற்சி இருக்கும் வாய்ப்பைப் பூர்த்தி செய்யும். சூழல் இருப்பதை ஆதரிக்கும். அதிர்ஷ்டமிருந்தால் அடுத்த ஜன்மத்தில் பூர்த்தியாக வேண்டியது இப்பொழுதே பூர்த்தியாகும்.
  3. வாய்ப்புக்கு எதிரான குணங்களிருந்து அதை வலியுறுத்தினால் அதுவே மேலே போவதைத் தடுக்கும். இருப்பதையும் அழிக்கும்.
  4. Skill திறன், attitude நோக்கம், motive ஆழ்ந்த நோக்கம், opinion அபிப்பிராயம், values பண்புகள் வாய்ப்பை அனுபவிக்கும் அளவை நிர்ணயிக்கும்.

நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்திலும், அரசியலும், பொதுவாழ்விலும் இருந்த சிலர் பெற்ற வாய்ப்புகளையும், அதனால் உயர்ந்ததையும், அதனாலும் உயரமுடியாததையும் மேற்சொன்ன சட்டங்களை விளக்கும் வாயிலாக எழுதுகிறேன்.

  • மோதிலால் நேருவின் மூதாதையர் மொகலாயச் சக்ரவர்த்திகட்குப் துவ்பாஷிகளாக (translator) இருந்து பெருஞ்செல்வாக்கும், செல்வமும் பெற்றனர். மோதிலால் "இந்தியா சுதந்திரம் பெற்றால் நானே முதல் பிரசிடெண்ட் என்று அடிக்கடி சொல்வார். Federal Court பெடரல் கோர்ட்டிலும், பிரிவீ கௌன்சிலிலும் வக்கீலாக இருந்த பெருஞ்செல்வர். நேர்மைக்கும், திறமைக்கும் அவர் போன்றவரை தாம் பார்த்ததில்லை என நேரு சொல்வார். அவருடைய சந்ததி 3 தலைமுறைகளாகப் பிரதமராக இருந்தார்கள். மகாத்மா காலடியில் நேரு இருந்ததால், அவர் நேருவைத் தலைவராகத் தயார் செய்தார்.
  • முதன்மந்திரி, பிரதம மந்திரி செக்ரடேரியட்டில் குமாஸ்தாவானாலும் செல்வாக்கு அதிகம். ஆனால் குமாஸ்தாவின் சர்வீஸ் நிலை மாறாது.
  • 8-ஆம் வகுப்பு படித்த V.P. மேனன் திறமையாலும், ஆங்கில அறிவாலும், குமாஸ்தாவாகி, மத்திய சர்க்கார் உள்துறை காரியதரிசியாகி, கவர்னராக ரிடையராகி, சுதந்திரத்தைப்பற்றி 10 வால்யூம் எழுதினார்.

  • எவ்வளவு பெரிய நூலகத்திலும் புத்தகங்களைத் துடைத்து வைப்பவருக்கு அறிவு வருவதில்லை.
  • வேப்பூர் திருடர்களை திருத்த அவர்களுக்குத் தறி கற்றுக்கொடுத்து, படிக்க வைத்ததில் ஒரு பையன் M.A. பாஸ் செய்து மத்திய சர்க்கார் அதிகாரியானான்.
  • விதவையாகி இட்லி சுட்டு விற்றவர் மகன் S.S.L.C பாஸ் செய்து தாலுக்காபீஸ் குமாஸ்தாவாகி, திறமை, நேர்மை, ஆங்கில அறிவால் D.R.Oவாக ரிடையரானான்.
  • மத்திய சர்க்கார் மந்திரியாக நெடுநாள் இருந்து, கவர்னராக ஓய்வு பெற்றவருடைய ஒரே மகன், திறமை, பொறுப்பு இல்லாததால் T.V காபினட் செய்து விற்கமுடியாமல், வீடு கட்டும் காண்ட்ராக்டராக இருக்கிறான்.
  • புத்திசாலியான வேலைக்காரி மகன் தாய் வேலை செய்த வீட்டின் உதவியால் படித்து இன்ஜீனீயரானான்.
  • ரோடு மேஸ்திரி மகன் 60 ஆண்டுக்குமுன் M.A. படித்தும் 10 ஆண்டு வேலையில்லாமலிருந்து பல்கலைக்கழக ஆசிரியராகி, இலட்சியச் சேவையால் பேராசிரியராகி, வேலையை இழந்து, உயிருக்கு ஆபத்து வந்து, நேரிடையாய் MLC ஆக அழைக்கப்பட்டும் பயத்தால் இழந்து பேராசிரியராகவே ஓய்வு பெற்றார்.
  • ஞானசித்தி பெற்றவருக்குச் சமையல் செய்தவர், சித்திபெற்றவர் இறந்தபின் சமஸ்கிருத ஸ்லோகம் உள்ளிருந்து எழுந்ததால் நாட்டில் பிரபலமானார்.
  • இங்கிலாந்தில் cabin man ரயில்வே கூலியாக இருந்தவர் தென்னிந்திய இரயில்வேயில் ஜெனரல் மானேஜரானார்.
  • அந்தமான் ஜெயில் சூப்ரரெண்ட்டின் மகன் சென்னையில் கல்லூரியில் பயிலும்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் மாணவர் தலைவனாகி, அந்தமான் M.P.யாகி, மத்திய மந்திரியானார்.
  • ஜமீன்தார் மகன் வக்கீலுக்குப் படித்துவிட்டு முதன்மந்திரி ஆதரவால் M.P.யாகி, பேச்சுத்திறமையால் மத்திய சர்க்கார் மந்திரியாகி, கவர்னரானார்.
  • இன்கம்டாக்ஸ் ஆபீஸ் குமாஸ்தா வேலையை இராஜினாமா செய்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்து ஜெயிலுக்குப்போய், தம் கட்சி சிதறியதால்

தம் வாழ்விலும் சிதறி, பணக்காரர் உதவியை நாடி வாழ, சொரணையையும் இழந்து, எந்தப் பதவியும் பெறாமல், போராடி இறந்தார்.

  • கீரீஸில் கவி ஒருவருடைய வேலைக்காரிக்கு ஜுரம் வந்தபொழுது கவியின் செய்யுள்களை மனப்பாடமாக ஒப்பித்தாள்.
  • அபரிமிதமான திறமைசாலி தாம் சேர்ந்த கட்சி முன்னுக்கு வாராததால், அதன் அகில இந்தியத் தலைவராகி, M.P., M.L.A., எதிர்கட்சித் தலைவராகி, பிறரால் முதன் மந்திரி பதவிக்குரியவர் எனப் போற்றப்பட்டார்.
  • நேர்மையான கணக்குப்பிள்ளைக்கு 200 ஏக்கர் முதலாளி தாம் சென்னைக்குப் போவதால், நிலத்தை அவரிடம் கொடுத்து, இதில் சம்பாதித்து, இதன் கிரயத்தை எனக்கு மெதுவாகக் கொடு என்றார்.
  • M.A. பட்டதாரிக்கு 85ரூபாய் சம்பளமுள்ள நாளில் சிலோனில் S.S.L.C படித்து சரளமாக ஆங்கிலம் பேசுபவர் சென்னைவந்து நூல் விற்கும் கம்பனியில் சேல்ஸ் மானேஜராக ரூ.1000/- சம்பளம் பெற்றார்.
  • LMP டாக்டர் இலட்சியத்தால் சிம்ஸன் கம்பனி டாக்டராகி, ஆராய்ச்சியால் industrial medicine தொழிலுக்குரிய வைத்தியத் துறையில் சிறந்து ஆசிய மகாநாட்டுக்குத் தலைவரானார்.
  • சாதுரியமான எஸ்டேட் கணக்குப்பிள்ளை ஊரறியத் திருடினாலும்,முதலாளியின் நம்பிக்கையை இழக்காமல் முதலாளியைவிட அதிகம் திருடிச் சேர்த்துவிட்டான்.
  • பிரபலமான முதன் மந்திரிக்கு மனைவி என்பதால் தாமும் கொஞ்சநாள் முதன் மந்திரியானார்.
  • பெரிய குடும்பத்துப் பையன் அட்டண்டர் வேலைக்குப் போனாலும் பெரிய முதலாளிகளால் அவர் இனிமைக்காக ஆதரிக்கப்பட்டு, துரோகத்திற்காக விலக்கப்பட்டு அரை அங்குல முன்னேற்றமில்லாமல் ஓய்வு பெற்றார்.
  • அளவுகடந்த உழைப்பு, திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்பு என்று வந்தபொழுது அவர்கள் தொழில் 30 வருஷமாக இழந்த அனைத்தையும் 5,6 வருஷங்களில் பெற்று தலைமைப் பதவிக்கு வந்து, முதன்மையாக முன்னணிக்கு வந்தனர்.
  • வண்டிக்காரன் மகன், பள்ளிக்கூடம் போகாதவன், தேசபக்தருடன் இருந்ததால் தவறாக ஜெயிலுக்குப் போய், அங்குப் படிக்கக்

கற்றுக்கொண்டு, பேச்சாளனாகி, தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகி, MLCயாகி, பெரிய தொழிலதிபர்களும் நாடி வரும் நிலைமை ஏற்பட்டு சாஸ்திரி, இந்திராவையும் சந்தித்துப் பேசும் அளவுக்கு உயர்ந்து நின்றான். திறமையும், உழைப்பும், வாய்ப்பால் பலன் தந்தன.

  • நெடுநாள் தொண்டு பலன் தந்து கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமையிலேயே இருந்து, படிப்பின் சிறப்பாலும், அனுபவ முதிர்ச்சியாலும், இனி தமக்கு எதிர்காலமில்லை, M.P. எலக்ஷன் ஜெயிக்கமுடியாது என்று நிற்காதவருக்கு பிரதமமந்திரி பதவி மெஜாரிட்டி கட்சித் தலைமைக்கு வந்து, பிரதமராக இருந்தார் ராவ்.
  • தகப்பனாரின் முழுத் திறமையுடன், பரம்பரையின் முழுப் பலத்துடன், M.P பதவியும் நாடாமலிருந்தவருக்குப் பிரதமமந்திரி பதவி தேடிவந்தது.
  • பிரதமர் பதவி வேண்டியதில்லை, விமானம் ஓட்டுகிறேன் என்றவர் மீது பிரதமர் பதவி திணிக்கப்படும் அளவு பரம்பரைத் திறமை நிறைந்திருந்தது.
  • ஜமீன் கணக்குப்பிள்ளை மகன் வக்கீலாகி தேசசேவை செய்து ஜமீன்தார் பெற்ற முதல் மந்திரி பதவியைப் பெற்று, கவர்னர் ஜெனரலாக உயரமுடிந்தது.
  • வேதம், உபநிஷதங்களை ஊன்றிப் பயின்றால், ஆன்மீகப் பலன் உண்டு. ஆன்மீகப் பலன் பெறமுடியாதவர்க்கு ஆங்கிலம் அற்புதமாகத் தெரிந்ததால் உலகப் புகழ் வந்து, ஜனாதிபதியாக்கியது.
  • இளம்விதவை பெற்ற பிள்ளைகள் அறிவாலும், அருளாலும் உலகப்புகழ் பெற வந்த வாய்ப்பை வெறுத்து ஒதுக்கி பிறப்புக்குரிய துரோகத்தைப் பாராட்டி, துரோகத்தின் பரிசைப்பெற்று தங்கள் பெரும் ஸ்தாபனங்களில் தலைமைப் பதவி பெறும் வாய்ப்பையும் பொறுப்பற்ற வெறுப்பால் தவறவிட்டு, அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அடுத்தவர்கள் பெற்றதைப் பார்த்தும் அறிய முடியாமல், வேதனைப்படுபவர் இருவர்.
  • நதி தீரத்தில் கருடன் காலிலிருந்து விழுந்த எலியைப் பெண் குழந்தையாக்கி வளர்த்த ரிஷி, அவளுக்குச் சூரியன், இமவான், சந்திரன் போன்ற வரன்களை அளித்தபொழுது, அவள் அவற்றை எல்லாம் மறுத்து மீண்டும் எலியாகி, எலியை மணந்தாள்.
  • கல்கத்தா ஹைகோர்ட் பிரதம நீதிபதி, கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தராகி, நாட்டில் அவர் கண்ணில்பட்ட திறமைவாய்ந்த

இளைஞர்களை முன்னுக்குக் கொண்டுவந்தார். அவர் மகன் அவர் பதவிக்கு வந்து, மத்திய மந்திரியானான். அன்னையைத் தரிசிக்க அவர் வந்தபொழுது "இந்தியாவை உச்சகட்டத்திற்குக் கொண்டுவரக் கூடியவர் இவர்'' என்றார் அன்னை.

  • செல்வரும், தேசபக்தரானவருமான ஒருவரின் ஒரே மகன் திறமை, நாணயம், நல்ல குணமற்றவன். டாக்டரை மணந்து ஹைகோர்ட் வக்கீலாகி கேஸே வாராமல், வாய் சவடாலுடன் காலம் கழித்து வாழ்க்கையை முடித்தான்.

பெரிய இடத்திலிருப்பது வாய்ப்பு. வாய்ப்பு தானே பலன் தாராது. ஏதோ ஒருமுறை தானே பலனும் தரும். ரஷிய அரண்மனையில் barmaid வேலையாக இருந்த காதரீனை அவள் இனிமைக்காகப் போற்றாதவரில்லை. Peter the Great பீட்டருக்கு அவள் மேல் பிரியம். பீட்டருக்கு அளவு கடந்த கோபம் வந்தால் அடுத்த சில நாள் அதற்கு ஆயிரம் பலியுண்டு. அவனுக்குக் கோபம் எழும் அறிகுறிகளை காதரீன் கண்டவுடன் அவன் தலையைத் தன் மார்பில் பொருத்தி இதமாக வருடிக்கொடுத்து கோபத்தைக் கரைப்பாள். சக்ரவர்த்தியின் கோபம் வேலைக்காரியின் இனிமைக்கு அடிமையாயிற்று. காதரீன் அவன் மனைவியானாள். வாய்ப்பு பெரியது. அது பலன் தர பலன் பெறும் அம்சங்கள் - திறமை, பண்பு, அறிவு, நாணயம், உழைப்பு, அம்சம் - தேவை. அம்சமிருந்தால் அதுவே ஏதோ ஒரு சமயம் பலன் தரும். அம்சம் பலன் தர தேவையான மற்றவற்றைக் கொடுத்தால் பலன் வருகிறது. இல்லையெனில் உயர்ந்த இடத்தின் தாழ்ந்த மனிதனாக இருக்க வேண்டியிருக்கிறது. வாய்ப்புப் பலனாகப் பழுத்துப் பூர்த்தியாவது நம்மைப் பொறுத்தும், மற்ற இதர விஷயங்களைப் பொறுத்துமுள்ளது. படிக்காத தொண்டர் பகவான் ஸ்ரீ அரவிந்தர் திருவடியில் வாழ்வைக் கழிப்பதே பாக்கியம். அதனால் மட்டும் இருள் அகலாது. இருள் அகல ஞானம், பக்தி, சேவை, அடக்கம், சரணாகதி தேவை. அவையில்லாவிட்டாலும் ஓரிரு புள்ளியாக ஒளியை அருள் கொடுக்கிறது. அறியாமையால் செயல்படும் அகந்தை அதை மாற்றி ஓரிரு புள்ளி தவிர மீதி அனைத்தும் ஒளி என்று கொள்கிறது.

******

  1. புதுமை உள்ளே எழுவதால், புத்துணர்ச்சி பொங்கி எழுகிறது.

Freshness என்ற கருத்தைத் தமிழில் இங்கு புதுமை என்று குறிப்பிடுகிறேன். Freshness is indicated by a surge of fresh energy என்று ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மேற்சொன்னவாறு மொழிபெயர்த்தேன். சிறுவயது வளரும் பருவமாதலால் காலையில் எழுந்தவுடன் உடலும், உணர்வும், மனமும், புத்துணர்வால் நிரம்பியிருக்கும். வயதானால் அது இருக்காது. புதுக் கருத்து மனத்திற்கும், புதிய நட்பு உணர்வுக்கும், புதிய காரியம் செயலுக்கும் புத்துணர்வை அளிக்கும். புதிய நோக்கம் ஏற்பட்டால், எல்லாச் சொற்களிலும் புத்துணர்வு ஏற்படும். புதிய இலட்சியத்தை ஏற்றால், புது வாழ்வு மலர வேண்டிய தெம்பு நிரந்தரமாக எழுந்தபடியிருக்கும்.

செல்வம் வளமாக உள்ள குடும்பங்களில் உள்ளவர் உடல் ஒரு செழிப்புத் தெரியும். மனநிறைவு அதனால் ஏற்படும் (Security) பாதுகாப்புணர்வு, தெம்பு மனத்தை நிரப்பி வழிந்து உடல் வெளிப் படுவதால் தோலும், சதையிலும் மினுமினுப்பு இருக்கும். பதவியில் உள்ளவர்களுக்கும் இது ஓரளவு இருக்கும். குடும்பத்தில் அனைவரும் பிரியமானவர்கள், கடுஞ்சொல் காதில் விழாது, எதிலும் இனிமை நிறைந்துள்ளது என்ற குடும்பத்து குழந்தைகள் முகத்தில் அன்பால் இதே செழிப்பு தெரியும். பிறவியில் புத்திசாலித்தனமிருந்து, படிப்பால் அறிவு அதிகமாகப் பெற்றவர்க்கு முகம் அறிவால் பிரகாசமாக இருக்கும். பூஜை, பக்தி போன்றவை, ஞானம் கொடுக்கும் தேஜஸை முகத்தில் வெளிப்படுத்தும். உலகில் பலருக்கு இல்லாதது, சிலருக்குக் கிடைப்பதால், அவர்களைப் பொறுத்தவரை புதுமை இப்பலனை அளிக்கிறது. இதுவரை உலகில்லாத உணர்வின் செழிப்பை, ஜீவியத்தின் நிறைவாக அன்னை அளிப்பதால், அன்னையை உணர்விலோ, ஜீவியத்திலோ ஏற்றால், உள்ளமும், உணர்வும் புத்துணர்ச்சி பெறும்.

அன்னையை முழுமையாக ஜீவன் ஏற்ற நிலையில் நமக்குக் கிடைப்பது உலகில் இன்று உச்சகட்டத்திலுள்ளது. அன்னை அதைத் தவறாது அனைவருக்கும் கொடுக்கிறார். நம்மால் பெற முடியாமற் போகிறது. பெறுவதற்குரிய சாதனங்கள் அநேகம். அவற்றுள் புத்துணர்ச்சியும், புதுமைஎன மேலே குறிப்பிடுவதும் ஒன்று. பொதுவாக உள்ளே எழும் புத்துணர்ச்சி அன்னை உள்ளே நிறைந்திருந்தால் அது அன்னையின் புத்துணர்ச்சியாக (Mother's fresh energy) இருக்கும். இதை இயல்பாகச் செய்வது சமர்ப்பணம். சமர்ப்பணம் வாழ்வை அன்னை வாழ்வாகத் துலக்கப் பயன்படுத்தும் வழிகளில் புத்துணர்ச்சியும் ஒன்று.

அதற்குண்டான கருவியில்லாமல் மரத்தில் துவாரம் போட முனைவது சிரமம். துவாரம் போடும் கருவி (drill) பெருமுயற்சியை எளிமையாக்குகிறது. (Powerdrill) மின்சாரத் துரப்பணம் மேலும் எளிதாக்குகிறது. சாதாரண மனிதனுக்குப் புத்துணர்ச்சிக் கருவிபோல. அன்னை கருவிக்கு மின்சாரசக்தி கொடுப்பதுபோல் ஆன்மீகச் சக்தியை அளிக்கிறார்.

பொதுவாகப் புதுமை உணர்வு பெற மனம் கடந்ததைக் கருதக் கூடாது. தெம்பு அபரிமிதமாக இருக்கவேண்டும். எதையும் புதிய நோக்கோடு புரிந்துகொள்ள வேண்டும். புதிய மனப்பான்மையை நாட வேண்டும். இரண்டு பரமவைரிகள். ஒருவர் பெயரை அடுத்தவர் கேட்கப் பிரியப்படமாட்டார். அவர்களில் ஒருவரிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்து, இதனுள் பெரிய சக்தியுள்ளது. முழுவதும் புதியதாக மனம் மாறிப் புதுமை உணர்வு எழுந்தால் அதன் மூலம் எழும் சக்தியால் எதையும் சாதிக்கலாம் எனக் கூறியதை அவர் ஏற்று எதிர்ப்புணர்வை மாற்றி நட்புணர்வாக்கச் சம்மதித்த சமயம், ஆஸ்பத்திரியில் ஒருவர் சேர்ந்தார். அவருக்கு முக்கியச் சிகிச்சை நேரம் தியான அறை பல்பு நின்றுவிட்டது. அன்னை சம்பந்தமான புத்தகத்தைப் பிரித்துப் பார்த்ததில் மரணம் இயல்பானது என்றிருந்தது. மறுநாள் அவருடல் சூட்சுமப்பார்வைக்கு மட்டும் தெரியுமாறு கறுப்பு படிந்திருந்தது. நின்ற பல்ப், புத்தகம் சொல்வது, படிந்த கறுப்பு

அத்தனையையும் மாற்றும் சக்தி புத்துணர்வுக்குண்டு. மனம் மாறியது. புத்துணர்வு ஒரு கீறல் போல் எழுந்தது. அவர் போய்விட்டார். அடுத்த அரை மணியில் அவருடம்பில் கருமையைக் கண்டவர் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து, கருமை விலகுகிறது, பெரும்பாலும் விலகிவிட்டது என்றார். மறுநாள் காலை முழுவதும் விலகியது. இது புத்துணர்வின் சக்தி.

*******

  1. நோக்கம் என்பதே மனிதனைக் குறிக்கிறது. ஞானம், பக்தி, செயல் சேருமிடத்தில் மனிதனுக்கு நோக்கம் பிறக்கின்றது என்பதால் பகவத்கீதை நோக்கத்தைச் சரணம் செய்யச் சொல்கிறது.

நோக்கமே மனிதன்.

ஒரே சந்தர்ப்பத்திலிருந்து இருவர் பத்து வருஷம் கழித்து உயர்ந்தும், தாழ்ந்துமிருந்தால் அவர்கள் நோக்கம் உயர்ந்தும், தாழ்ந்துமிருக்கும். உழைத்து வாழவேண்டும் என்ற நோக்கமுடையவன் உயர்வதையும், யார் உதவியாவது பெற்று வாழ வேண்டுமென்பவன் இருக்கும் நிலையிலிருந்து இறங்குவதையும் காண்கிறோம்.

உலகம் இயங்குவது ஒரு சட்டப்படி. உயர்வதும் இன்னொரு சட்டப்படி. உயர்வதற்குரிய கருவிகள், சாதனங்கள் பல. முதற்கருவி உழைப்பு. Skill திறமையால் உழைப்பு உயர்வதால் திறமையான உழைப்பு, வெறும் உழைப்பைவிட உயர்ந்தது. இவையிரண்டும் உடலைச் சார்ந்தவை. உற்சாகமிருந்தால் உழைப்புக்கு அதிக சக்தியுண்டு. உற்சாகத்திற்குப் பல நிலைகளுண்டு. அதை நிர்ணயிப்பது பலன். பெரிய பலன் அதிக உற்சாகத்தையும், சிறிய பலன் சிறிய உற்சாகத்தையும்அளிக்கும். எந்தப் பலனை நாடுகிறோம் என்பது நாமறிந்ததைப் பொருத்தது. அறிவு அதிகமானால், பலன் அதிகமாகும். அனுபவம் அறிவை உயர்த்தும். அறிவு அனுபவப்பட்டால்,

அபிப்பிராயம் ஏற்படும். ஏற்கனவே படிப்புக்குச் செலவு செய்வது வீண் என்ற அபிப்பிராயம் கிராமத்திலிருந்தது. இன்று படிப்பு முக்கியம் என்ற அபிப்பிராயம் இருக்கிறது. அபிப்பிராயம் அறிவு நிலையை உயர்த்தும். அபிப்பிராயமிருந்தால் உணர்வு அதிகப் பலனை நாடி உழைப்பின் திறன் அதிகமாகச் சாதிக்கும். அபிப்பிராயத்திற்கும் சக்தியை அளிப்பது உணர்வு. உணர்வு ஏற்றுக்கொண்ட அபிப்பிராயம் அதிகமாகப் பலிக்கும். உணர்வு ஏற்றுக்கொண்ட அபிப்பிராயத்தை நோக்கம் என்கிறோம். உழைப்பு, திறமை, உற்சாகம், அறிவு, அனுபவம், அபிப்பிராயம், உணர்வு என்ற நிலைகளுக்கு உயர்ந்த மனிதன் முடிவாக உணர்வும் அபிப்பிராயமும் சேர்ந்த நோக்கத்தைப் பெறுகிறான். எனவே நோக்கமே மனிதன்.

முன்னேற்றமில்லாதவனுக்கு, முன்னேற்றமுள்ளவனுடைய நோக்கத்தை ஏற்றுக்கொண்டால், முன்னேற்றம் வரும். முன்னேறாதவன் இக்கருத்தை ஏற்றுக்கொண்டால் தன் நோக்கத்தை மாற்றுவது எளிதன்று எனக் காண்பான். யாரைப் பார்த்தாலும் உதவி கேட்டு வாங்குபவனை, யாரையுமே உதவி கேட்காத அவனைப்போன்ற ஒருவரைக் காண்பித்து நீ உள்ளூரில் சாதாரண வக்கீலாக இருக்கிறாய், அவன் உன்னைப்போன்றவன், ஹைகோர்ட்டில் பெரிய வக்கீலாகி விட்டான், ஒரே வித்தியாசம் நோக்கம் என்று கூறினால் அவன் ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். மாறுவது எவ்வளவு சிரமம்? மாறினால் எவ்வளவு பெரிய பலன்? அதனால் நோக்கமே மனிதன்.

சரணாகதியை பகவத்கீதை வலியுறுத்துகிறது. மனிதன் தன் நோக்கத்தைச் சரணம் செய்ய வேண்டும் என்கிறது. நோக்கம் சரண் செய்யப்பட்டால், முழு மனிதனும் சரணாகதியடைந்துவிடுகிறான். அபிப்பிராயமும், உணர்வும் சேர்ந்து நோக்கம் எழுவதாகச் சொன்னோம். ஞானம் அபிப்பிராயத்தைக் குறிக்கிறது, பக்தி உணர்வைக் குறிக்கிறது. எனவே ஞானமும் பக்தியும் சேர்ந்து நோக்கத்தை உருவாக்குகின்றன. அதுவே செயல் வெளிப்படுவதால்,

ஞானமும், பக்தியும், செயலும் சேர்ந்தது நோக்கம். இவற்றிற்குப் புறம்பாக மனிதனில்லை.

வாழ்வில் உயர, எந்தக் குறிக்கோளையும் எட்ட இதை ஒரு முறையாகப் பயன்படுத்தலாம். நாம் எந்த நிலைக்கு உயர வேண்டுமோ, எந்தக் குறிக்கோளை எட்ட வேண்டுமோ, அதற்குரிய நோக்கம் எது எனக் கண்டு, இன்று நாம் எந்த நோக்கத்தால் செயல்படுகிறோம் என உணர்ந்து, இன்றுள்ள நோக்கத்தைக் கைவிட்டு, குறிக்கோளுக்குரிய நோக்கத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தால், நம் நிலை உயரும், நாம் விரும்பும் குறிக்கோளை எட்ட முடியும். இதைவிட சக்திவாய்ந்த முறை வாழ்வில் உயருவதற்கில்லை.

*******

  1. மனத்தைப் பிடித்து உலுக்கும் எண்ணத்தை (preoccupation ) விடாமல், ஒருநிலைப்படுதல், சமர்ப்பணம், சரணாகதி, ஆர்வம் ஆகியவை நிரந்தரமாக நிற்கா. நாமே உவந்து அவற்றை விடுவது கடினம். உயர்ந்த எண்ணத்தை ஏற்று, அங்கு மனம் நிலைத்தால், உலுக்கும் பேயின் ஆட்டம் குறையும்.

எழுத்தாளர்கள் எழுதும் உற்சாகத்திற்காகக் காத்திருப்பார்கள். அனுபவசாலிகள் எழுத ஆரம்பித்தால் உற்சாகம் வரும் என்பார்கள். உற்சாகம் எழுந்து பிறகு எழுதுவதே நாம் அறியக்கூடியது. ஆனால் எழுத ஆரம்பித்தபின், ஓரிருபக்கங்கள் எழுதியவுடன் உற்சாகம் வருவதுண்டு. இதுபோன்ற இயற்கை அமைப்புண்டு. பலவருஷங்களாகப் பிரிந்துள்ள நண்பர்கள், கணவன், மனைவி எதிரிகளாக நினைத்தாலும் பழக ஆரம்பித்தபின் துவேஷம் மறைந்து, பழைய பிரியம் எழுவதுண்டு. பள்ளியை முடித்தபின் காலேஜில் சேர்ப்பார்கள். முடிக்காமல் சேர்க்கமாட்டார்கள். மனம் உலுக்கப்படுவதை நிறுத்தாமல், யோக அம்சங்களான சரணாகதி

போன்றவை நிலைக்காது என்பது உண்மை. பள்ளியை முடித்து கல்லூரிக்கு வருவதுபோல் சட்டத்தைத் திட்டவட்டமாகப் போட்டால், எல்லையைக் கடந்து வரும் திறமையுள்ள பலருக்கு இது தடையாக அமையும். உலுக்கும் எண்ணத்தை விலக்க முயன்றால், விலக்க டியாது எனத் தெரியும். சிலசமயங்களில் அது வலுப்படும். எனவே உலுக்கும் எண்ணத்தை சற்றுப் புறக்கணித்து உயர்ந்ததை ஏற்று அதனுடன் நெருங்கி வந்தால், உலுக்கும் எண்ணம் வலுவிழந்து மறைவதைக் காணலாம். இதுபோல் எல்லைக்கோட்டைத் தாண்டுதல் முடியும்.

குளத்தில் அடிமட்டத்தில் சேறுள்ளது. நீர்மட்டம் உயர்ந்தால் நீர் தெளிவாக இருக்கும். அதனால் சேறு போய்விட்டது என்று பொருளன்று. நம்மை உலுக்கும் எண்ணங்கள் யோகசித்தி அளவுகடந்து முதிர்ந்து கனிந்த பிறகும் அடியில் குளத்துச் சேறுபோல் இருக்கும். பூரணயோகம் திருவுருமாற்றத்தை நாடுவது. முதல் மனமும், பிறகு உணர்வும், முடிவில் உடலும் திருவுருமாற்றம் அடைய வேண்டும். இங்கு நாம் பேசுவது திருவுருமாற்றமில்லை. அதற்கு ஆரம்ப நிலையான ஆர்வம், சரணாகதி, சமர்ப்பணம் ஆகியவை. மனத்தை நிலைப்படுத்தி ஒரு சில யோக அம்சங்களைப் பெறுதல் முதல்நிலை. அதனால், உலுக்குவதைப் புறக்கணித்து, சமர்ப்பணத்தை நாடுதல் பெரும்பலனைத் தரும். அடுத்த நிலையில் மனம் திருவுருமாற்றமடைய இதே முறை பலன் தரும் எனினும், இந்த அளவு பலன் இருக்காது. அடுத்தாற்போல் உணர்ச்சி திருவுருமாற்றமடையும் பொழுது பலன் மேலும் குறைவாக இருக்கும். அன்னை, இவையிரண்டும் எளியவை என்கிறார். முடிவான உடல் திருவுருமாற்றத்தில் இம்முறை எதிரான பலன் தரும். ஏனெனில் உடலே சேறு. சேற்றைவிலக்கி, மனத்தில் திருவுருமாற்றத்தை நாடினோம். உடல் சேற்றையே திருவுருமாற்றம் செய்ய வேண்டும்.

கொலை, கொள்ளை, நடந்ததைப்பற்றிப் படிக்கும்பொழுது மனம் அருவருப்பு அடைகிறது. நம்மூரில், நம் குலத்தினரைக் கொலை செய்த விவரத்தைப் படித்தால், மனம் சலனமற்றுக்

கேட்டுக்கொண்டிருந்தால், மனம் திருவுருமாற்றமடைந்ததாகப் பொருள். உடல் ஊசியால் குத்தினால், தேள் கொட்டினால், வலி தெரியாமல், வலிக்குப் பதிலாக ஆனந்தம் எழுந்தால் உடல் திருவுருமாற்றமடைந்ததாகும்.

நாமிருப்பது முதல் நிலையின் முதற்படி. இங்குச் சில உபாயங்களைப் பயன்தரும் வகையில் பின்பற்றலாம். யோக வாழ்வை மேற்கொள்ள இந்த உபாயமும், இதுபோன்ற எந்த உபாயமும் அதிகப் பலன் தரும். யோகத்தை மேற்கொண்டால் பலன் குறையும். யோகம் முதிர்வதால், உபாயங்கள் பயன் தாரா. தடையாகவுமிருக்கும். அந்நிலையில் நமக்கு ஒன்றே ஒன்றுதான் உதவும், அது sincerity உண்மை என்கிறார் அன்னை.

********

  1. இறைவனின் செயலை ஸ்பர்சிக்கும் உணர்வு நன்றியறிதலாகும்.

கண் ஒளியை ஸ்பர்சிப்பது பார்வை. பிறர் குரல் ஒலியாகக் காதில் விழுவது காது பிறரைக் கண்டு கொள்வதாகும். வெயில் உதவியிருப்பதையோ, ஆபத்திருப்பதையோ மனம் கண்டுகொள்வது அறிவு எனப்படும். உலகமே இறைவன். உலகில் இருப்பவை அனைத்தும் இறைவன். அசைவெல்லாம் அவன். அணுவெல்லாம் அவன் என மனம் அறிகிறது. ஆனால் நிதர்சனமாக இல்லை. ஆன்மாவுக்கே அது நிதர்சனமாக இருக்கும். ஆன்ம விழிப்புற்று - சைத்தியப்புருஷன் வெளிவந்து - இறைவனை அவன் செயல்களில் காணும்பொழுது இறைவனின் ஸ்பர்சத்தை உணர்கிறது. அந்நேரம் கருணை உள்ளே எழுகிறது. அவ்வுணர்வை நன்றியறிதல் என நாம் அறிகிறோம்.

ஓர் ஊரில் ஒரு பள்ளி சிறப்பான ரிஸல்ட் கொண்டுவந்தால் அது மாணவர்கட்குச் செய்யும் சேவை. அது அனைவருக்கும் தெரிந்தது. எவரும் அதற்காகப் பள்ளி நிர்வாகத்திற்கு

நன்றியுடையவராக இருப்பதில்லை. அப்பள்ளியைப்பற்றிப் பேச நேர்ந்தால் நல்ல அபிப்பிராயம் சொல்வார்கள். சமூகத்தில் நமக்கு கடை, வக்கீல், காய்கறித்தோட்டம், முனிசிபாலிட்டி, பள்ளி, போலீஸ் ஸ்டேஷன் மற்ற ஊர்களிலில்லாத நல்ல சேவையைச் செய்வதுண்டு. அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என நமக்குத் தோன்றுவதில்லை. நல்ல கடையோ கெட்ட கடையோ, கடை வீதி மக்களுக்குச் செய்யும் சேவை பெரியது. ஒரு நாள் கடையில்லை எனில் சிரமம். சிறப்பான இடங்களுக்கே நன்றி சொல்லத் தோன்றாதபொழுது, கடை வீதிக்கும் ரோடுக்கும் நன்றி சொல்லவேண்டும் என்ற கருத்தே வியப்பாக இருக்கும். கடை வீதியில்லாத குக்கிராமம், ரோடில்லாத ஊர், நல்ல பள்ளிகளில்லாத டவுன், திறமையான வக்கீல் இல்லாத கோர்ட், போலீஸ் ஸ்டேஷனில்லாத இடத்தில் அவை தேவைப்படும் நேரம், அவற்றின் அருமை தெரியும். இருந்தால் அவற்றைப் போற்றுவதில்லை.

கண்ணுக்கு நேராகத் தெரியும் சமூகஸ்தாபனங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. நகரத்திலிருந்து ஒருவர் கொஞ்சநாள் கிராமத்தில் தங்கியிருக்கும்பொழுது, கிராமப்பஞ்சாயத்துக் கூடி ஒரு குடும்ப பாகப்பிரிவினையில் அண்ணனுக்கு 8 காணியும் தம்பிக்கு 11 காணியும் கொடுக்க அநியாயமாகத் தீர்ப்பளிக்கிறார்கள். தம்பியால் அதை மீற முடியவில்லை என்றபொழுது நகரப்புறத்தில் இது நடக்காது. அது நாகரீகம் உள்ள இடம். அதர்மம் நடக்காது என அறிகிறோம். நாகரீகமான இடங்களில் பொதுவான பாதுகாப்பு எந்த அளவு இருக்கிறது எனத் தெரிய நாகரீகமில்லாத இடங்களில் வசித்தால் தெரியும். தமிழ்க்குடும்பம் பீகாரிலிருந்தபொழுது, அக்குடும்பப் பெண்ணை ஒருத்தி வந்து வேலைகொடுப்பதாக அழைத்துப்போய் விபசார விடுதியில் சேர்த்ததைப் போலீஸில் சொன்னால், "இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடு. தொடர்ந்தால் உன் உயிருக்கு ஆபத்து'' என்று போலீஸ் சொல்லவே அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஓடி வந்துவிட்டார்கள். நம்மூர் போலீஸ் ஆதரவு அளித்து ஊருக்குப் போகப் பணம் கொடுத்தது. வெளியூர் போனால் உள்ளூர் அருமை தெரிகிறது. சமூகம் மனிதனுக்கு அளிக்கும் ஆதரவு, பாதுகாப்பு

வெள்ளிடை மலையாக உள்ளது. நாம் அதை அறிவதில்லை. அறிந்தால் நன்றி சொல்வதில்லை.

"நீ இன்று வாழ்வில் உயர்ந்துவிட்டால், ஏதோ ஒரு காலத்தில் உனக்கு உதவியவரை நினைவுபடுத்திக் கொள்'' என்ற சொல்லை Lions Club இல் பிரபலப்படுத்தினார்கள். குடும்பம் செய்தது ஆயிரம் உதவிகள். நண்பர்களும், உறவினர்களும், ஊராரும் அன்றாடம் உதவிகளைச் செய்தபடியிருக்கிறார்கள் என்பதை நாம் உணருவதில்லை. பிறர் வாழ்வில் நாம் எப்படிப் பங்குகொள்கிறோம் என்றறிந்தால், அதன் மூலம் நம் வாழ்வில் தினமும் எத்தனை ஆதரவுகள் வருகின்றன என்றறியமுடியும். இவற்றையெல்லாம் காணும் தெளிவு நமக்கிருப்பதில்லை.

இறைவன் செயலை அறிவதும், காண்பதும், அதனால் தீண்டப்படுவதும் மனிதனுக்கில்லை, ஆன்மாவுக்குண்டு. அதுவே நன்றியறிதலுக்கு விளக்கம் என்கிறார் அன்னை.

*******

  1. புதுமை பொங்கி உணர்வைக் கடந்தால், நிறைவு ஏற்படும். வெளியிலிருந்து அது வந்தால் தற்காலிகமாகவும், உள்ளிருந்து எழுந்தால் நிரந்தரமாகவுமிருக்கும்.

மனிதனுக்குரிய நிலைகள் பல. பொதுவாக நாம் நன்றாக இருக்கிறோம் (நல்லா இருக்கேன்), நன்றாக இல்லை, எதுவும் சரியில்லை, சுறுசுறுப்பாக இருக்கிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது இப்படியே இருந்தால் தேவலை, ஏதோ இருக்கிறேன், பிரச்சினை என்று ஒன்றும் இல்லை ஆனால் சுரத்தில்லை, நல்ல காலம் வரும் போலிருக்கு, நல்ல காலம் நமக்கும் வந்துவிட்டது, அதிர்ஷ்டமே வந்துவிட்டது, சப்பென்றிருக்கிறது, ஒரே எரிச்சலா இருக்கிறது, விரக்தியாக இருக்கிறது, ஏன் பொழுது விடிகிறது என்றிருக்கிறது, நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பன போன்ற

மனநிலைகளை நாம் அறிவோம். விளக்காமல் தெளிவாகும் நிலைகள் இவை.

அவசியமான தேவைகள் (உணவு, உடை, வீடு, செலவுக்குப் பணம்) உள்ள நிலையொன்று, இல்லாத நிலை மற்றொன்று. தேவைகளைப் பெறும் திறமையிருந்து தேவை பூர்த்தியாவது, அத்திறமையின்றி வேறு வசதிகளை நம்பி அவை பூர்த்தியாவது; தேவையில்லாமல், பிரச்சினையில்லாமல் பிரியம் உள்ள நிலை, இல்லாத நிலைகள் அடுத்தவை; தேவையும், பிரியமும் குறைவில்லாமல், நம் திறமை, அறிவால் செய்வது கூடிவருவதால் வெற்றிபெறும் நிலை, அவை குறைந்து கூடிவாராத நிலை; தேவை, பிரியம், திறமை, அறிவு இருந்து பிறர் நம்மை ஏற்கும் நிலை, போற்றும் நிலை, அவையிருந்தும் பிறர் ஏற்காத நிலை, போற்றாத நிலை; அடிப்படைத் தேவையில் ஆரம்பித்து பிறர் போற்றும் நிலைவரை இருப்பதும் இல்லாததும் கலந்த பல்வேறு நிலைகளில் மனிதனிருப்பதை முதலில் சொன்ன வழக்குச் சொற்களால் நாம் குறிப்பிடுகிறோம். தேவை உடலுக்கும், திறமை அதன் வெளிப்பாடாகவும்; பிரியம் உணர்வுக்கும்; பிறர் ஏற்பது சமூக உணர்வுக்கும் உரியவை. மனமும் அறிவும் இவற்றைக் கடந்தவை. அதை நாடுபவர்களும், அது உள்ளவர்களும் மிகக் குறைவு.

புதுமை என்பது உடல், உணர்வு, சமூகம், மனம், ஆன்மா ஆகிய எல்லா நிலைகளுக்கும் உரியது. இவ்வளவு நாள் நாம் அறிந்தது போக, புதியதாக எழுவது புதுமை. புதுமை எழுந்தால் புது உணர்வு ஏற்படும். புது உணர்வு புதிய தெம்பை அளிக்கும். வெளி நிகழ்ச்சியோ, உள்ளுணர்வோ இதை ஏற்படுத்த முடியும். புதுத் தெம்பு அதிக அளவில் எழுந்து உணர்வை மீறிய நிலையில் நிறைவைக் காண்கிறோம்.

தினமும் 3 மைல் நடந்து பள்ளிக்குப் போகும் பையனுக்கு, சைக்கிள் உடல் அளவில் நிறைவைத் தரும். சிறிய தாயார் வீட்டில்

பலவருஷம் அன்பில்லாத சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளை தாய் வீட்டிற்கு வந்தபொழுது உணர்வில் நிறைவு ஏற்படும். கம்பனி பலவருஷமாக நஷ்டத்திலிருந்து, புதுசௌகரியத்தால் இலாபம் கண்டால்; மானேஜ்மெண்ட் நம் திறமையைப் பாராட்டினால்; கணவன் தன்னைப் பிரிந்திருந்த காலத்து வாடிவிட்டான் என்று மனைவி புரிந்துகொண்டால் உணர்வில் புதிய நிலை ஏற்பட்டு நிறைவு எழும். பத்து வருஷமாகத் தனக்குப் புரியாத பாடத்தை M.A. வகுப்பில் நடத்தி சமாளிப்பவருக்கு அது புரிந்தால் மனநிறைவு ஏற்படும். ஏற்படும் புதுநிலை அளவு கடந்திருந்தால், உணர்வு எழுவதற்குப் பதிலாகப் பொங்கி எழும். பொங்கி எழுந்தால் ஏற்படுவது நிறைவு. பிறரை நம்பிய சூழ்நிலையிலிருந்து வருவது தற்காலிகம். நமக்கே உள்ளே திறமை, தெளிவு ஏற்பட்டு அதனால் ஏற்படும் நிறைவு நிரந்தரமானது.

********

  1. வெளியிலிருந்து ஒரு நிகழ்ச்சி மூலம் வரும். உள்ளிருந்து வரும்பொழுது ஒரு இலட்சியம், அல்லது தெய்வீக ஆர்வத்திலிருந்து வரும். (refer 627)

புற நிகழ்ச்சி, உள்ளுறை இலட்சியம் நிறைவு தரும்.

இந்த course படிப்பை மாற்றப்போவதால், பரீட்சை எழுதியவர்க்கெல்லாம் பாஸ் போட்டுவிட்டார்கள். சர்க்கார் கண்ட்ரோல் வந்துவிட்டதால் நம் சரக்குக்குக் கிராக்கி வந்துவிட்டது; பெரிய இடத்துப்பெண் நம் பிள்ளையை விரும்புவதால் நம் நிலை உயருகிறது; உள்ளூருக்குக் காலேஜ் வருவதால் மகன் படிப்புக்குச் செலவில்லை என்பவை வெளி நிகழ்ச்சி மூலம் வரும் சௌகரியம். சௌகரியத்தை அனுபவித்து அதனால் புது உணர்வு பொங்கி நிறைவு வந்தாலும், மனதில் நம்மைப்பற்றி நமக்குள்ள அபிப்பிராயம் உயர வழியில்லை என்பதால், இந்த நிறைவு நாளடைவில் கரைந்துவிடும்.

குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞன், கொள்கைக்காக உயிரைக்கொடுக்கும் தொண்டன், கணவனுடைய திருப்திக்காக வாழும் மனைவி, ஒரு ஸ்தாபனத்தை நிறுவும் முயற்சியை மேற்கொண்ட சேவை, தியானத்தை நாடும் ஆர்வம், மௌனத்தை விழையும் மனம், அன்னைக்குச் சேவை செய்ய எழும் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் உற்சாகம் போன்றவை உள்ளிருந்து எழுபவை. உள்ளிருந்து எழும் ஆர்வம் தரும் நிறைவு நிரந்தரமானது.

தாமிறக்கும் தருணத்தில் "வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சியத்திற்காகச் செலவிட்டேன்'' என்ற நிறைவு எனக்குண்டு என்று லெனின் கூறினார். தம்மைச் சுட்ட எதிரியையும் தண்டிக்க வேண்டாம் என மகாத்மா காந்தி சொன்னபொழுது, கடைசி மூச்சுள்ளவரை தம் கொள்கையைப் பின்பற்றிய நிறைவை அவர் வெளிப்படுத்தினார்.

லெனினுக்கும் மகாத்மாவுக்கு மட்டும் உள்ளதன்று இந்நிறைவு. என்னைக் கொடுமைப்படுத்திய மாற்றாந்தாய்க்கு, வேலைக்குப் போனவுடன் முதற்காரியமாகப் பெரிய நகை செய்து கொடுத்தேன், அவருடைய பிள்ளைகளைப் படிக்கவைத்தேன் என்பவர், நான் என் கடமைகளைத் தகப்பனாருக்கும், தம்பிகளுக்கும் செய்வதற்கு எந்தத் தடையையும் அனுமதிக்கமாட்டேன்' என்ற இலட்சியத்தைக் கொண்டார். அவருக்கும் இம்மனநிறைவு மகாத்மாவுக்கு எற்பட்டது போல் ஏற்படும்.

நாமிருக்கும் நிலை நம் நிறைவை நிர்ணயிக்காது. நம் ஆர்வமும், இலட்சியமும் நிறைவை நிர்ணயிக்கும். உடலெல்லாம் எரியும் மெழுகுவர்த்தியைப் பொறுத்தியபின்னும் இலட்சியத்தை விட்டுக்கொடுக்காதவர், அதுவே தம் வாழ்நாளில் மிகப் பெரிய நிறைவான நேரம் என்றார்.

குழந்தைக்குக் கடமையைச் செய்வதும், பெற்றோர் பொறுப்பைப் பிரியமாக ஏற்பதும், தன் வாழ்விலுள்ள எந்த நிலைமைக்கும் உரிய இலட்சியத்தைச் செலுத்துவதும், ஆழ்ந்த மனநிறைவைக் கொடுக்கும்.

அம்மனநிறைவு, புதுத் தெம்பை அளிக்கும், புதுமையை எழுப்பும். உள்ளம் புதுமையானால், உணர்வு புது மெருகு பெறும்.

சர்க்கார் ஆபீசில் 1 1/4 ரூபாய் கட்டிப்பெற வேண்டிய செய்தியைக் கட்சிக்காரன் நண்பர்மூலம் ரிஜிஸ்டரைப் பார்த்து தெரிந்து கொண்டான், அதனால் ஆபீசுக்குச் சேரவேண்டிய 1 1/4 ரூபாய் நஷ்டமாகிவிட்டது, அதுவும் தம் ஆபீசில் நடந்தது என்பதால், ஆபீசர் அந்த 1 1/4 ரூபாயைக் கட்டி அந்த விஷயத்தைத் தம் பெயரில் எடுத்துக் கொண்டார். ஆயுள் முடியும்வரை இவர் மனத்தின் நேர்மை இவருக்கு இலட்சிய உணர்வையும், புதுமையையும், புத்துணர்வு பொங்கும் நிறைவையும் அளிக்கும்.

*********

  1. நிறைவு செறிந்து வளமான உணர்வு தோன்றும்.

பல தலைமுறைகளாகச் செல்வமுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகள் உடல் நலம் நிறைந்திருப்பதுடன், உடலே செழிப்பாக இருக்கும். இதைச் செல்வச் செழிப்பு என்கிறோம், அதேபோல் பல தலைமுறைகளாக சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் பயின்ற குடும்பங்களில் குழந்தைகள் முகம் பிரகாசமாக இருக்கும். அதே போல் பரம்பரையான பக்திமான் குடும்பங்களில் குழந்தைகள் முகம் "தளதள'' என உணர்வின் செழிப்பு நிறைந்திருக்கும். பரம்பரையாக எந்தத் திறமை, வளம், கலை நுணுக்கம், செல்வம், சங்கீதம், சொத்து, தைரியம், தொழில் நுணுக்கம் நிறைந்திருந்தாலும், அந்தக் குடும்பக் குழந்தைகன் முகம் அதைக் காட்டும்.

புதுமை, அதனால் எழும் சக்தி, அது உணர்வைக் கடக்கும் நிலையில் நிறைவு என்பது ஒரு நிலை பூர்த்தியாவது. அந்நிறைவு செறிந்து தோன்றும் உணர்வு, விறுவிறுப்பான உணர்வாகவோ, உற்சாகம் நிறைந்த உணர்வாகவோ, வேகம் நிறைந்த உணர்வாகவோ இருக்காது. அது வளம் நிறைந்ததாகும். வளம் நிறைந்த உணர்வு

நிதானமான இனிமையுடையதாகும். இத்துடன் அந்நிலை முடிகிறது. பிறகு எழும் அடுத்த நிலைக்குரிய கட்டங்களும் - புதுமை, சக்தி, உணர்வைக்கடத்தல், நிறைவு, செறிவு, வளமான உணர்வு - அவையேயாகும்.

வாழ்வின் முன்னேற்றம் உழைப்பில் ஆரம்பிக்கின்றது. அது சிறந்து skill திறனாகிறது. அது உணர்வால் சக்திபெற்று, அறிவால் சிறந்து அறிவை உணர்வு மீண்டும் ஏற்றால் பூர்த்தியாகிறது.

ஒரு தலைமுறையில் உழைத்துப் பெறுவதை அடுத்த தலை முறையில் குழந்தைகட்குப் பெற்றோர் அறிவாகவும், பொருளாகவும் தர முடிகிறது. அதேபோல் ஒரு நிலையிலுள்ளவர் சிரமப்பட்டுப் பெறுவதை அடுத்த நிலையில் சிரமமில்லாமல் பெறமுடிகிறது. படிப்பாலும், வாழும் இடத்தாலும், வயதாலும், குடும்பத்தின் நிலையாலும், வாழும் சமூகத்தின் பண்பாலும், அனுபவத்தாலும், நாட்டின் வளம் நிர்ணயிப்பதாலும், நாம் பல்வேறு நிலைகளில் இருக்கிறோம். படிப்பு அதிகமான குடும்பம், படிக்காத குடும்பம் சிரமமாகச் சாதிப்பதை எளிதாகப் பெறுகிறது. நகரத்திலுள்ளவர் எளிதாக இயல்பாகப் பெறுவதைப் பெற கிராமத்தார் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. பண்பான குடும்பம் இயல்பாகப் பெறுவதை பண்பில்லாத குடும்பம் இன்றும் இரு தலைமுறைக்குப் பெற முடியாது. நாட்டிலுள்ள நிலைகள் பல. மனிதனுள்ள நிலைகள் பல. அவற்றுள் நாம் ஏதோ ஒரு நிலையிலிருக்கிறோம். அதிகபட்சம் நம்மால் ஒரு சமயம் ஒரு நிலையைத்தான் தாண்டமுடியும். சமூகத்திலுள்ள சூழ்நிலை உதவியாலும், நம் முயற்சியாலும் அதைச் சிலர் பெறமுடிகிறது. பலர் பெற முடிவதில்லை. பெரும்பான்மையோர் முயல்வதில்லை. தாமுள்ள நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போக முடியும் என்று பெரும்பாலோர் நம்புவதில்லை.

அன்னை வாழ்வைக் கடந்த நிலையிலிருப்பவர். அத்துடன் வாழ்வின் எல்லா நிலைகளையும் தம்முள் சாரமாகக் கொண்டவர். அன்னையை அறிந்து, உணர்ந்து, ஏற்றுக்கொண்டால் நாமுள்ள

நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போக முடியும். அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள தொடர்ந்து முனைந்தால், தொடர்ந்து அடுத்த நிலைக்குப் போய்க் கொண்டேயிருக்கலாம்.

புதுமைபொங்குவதில் ஆரம்பித்து............ வளமான உணர்வுவரை உள்ள சங்கிலித்தொடரை அறிந்துகொண்டால், அது நம் வாழ்வில் செயல்படும்படி நடந்தால் மேற்சொன்ன முன்னேற்றம் விரைவாக நடைபெறும். நாம் செய்ய வேண்டியது புதுமையை நாடுவதேயாகும். நிறைவைத் தேடுவதாகும், அறிந்ததை உணர்வால் ஏற்றுக்கொள்ள முனைவதாகும்.

*******

  1. ஆன்மாவை வாழ்வில் அறிந்தாலும், வாழ்வை உள்ளே கண்டாலும், அது பரம்பொருள் வெளிப்படும் தருணம். அதுவே ஆன்மீக நிறைவு.

வாழ்வில் காணும் பரமனும் உள்ளே தெரியும் வாழ்வும் பரமனே.

மனம் இருபகுதிகளாக உள்ளது. நாம் மனம் என அறிவது மேல்மனம். மேல்மனம் வாழ்வுக்குரியது. முழு வாழ்வும் இதனுள் அடங்கியது. நாம் நினைப்பது, கேட்பது, பார்ப்பது, அனைத்தும் மேல் மனத்தைச் சார்ந்தன. இறைவன் இதனுள் வருவதில்லை. உள்மனம் என ஒன்றுண்டு. இதன் பகுதிகள் பல. இது பரந்து விரிந்தது. நாம் ஒரு கட்டத்திலிருந்தால் ஆயிரம் ஒலியில் சிலவற்றைக் கேட்கிறோம். உள்மனம் அந்த ஆயிரம் ஒலியையும் கேட்கும். பதிவு செய்து கொள்ளும். தேவைப்பட்ட நேரத்தில் அது மேலே வரும். இது யோகத்தால் விடுபட்டால், பிரபஞ்சம் முழுவதும் பரவக்கூடியது. இறைவனை மேல்மனத்தில் சாதாரண மனிதன் காணமுடியாது. தவத்தாலும், யோகத்தாலும் இறைவனைக் காணும்பொழுது, ஆன்மாவைக் காணும்பொழுது, நாம் உள்மனத்திலேயே காண்கிறோம்.

பூரணயோகம், அனைத்தையும் பூரணப்படுத்த முனையும். பூரணயோகத்திற்கு மேலேயும், உள்ளேயும், இறைவனையும், வாழ்வையும் காணவேண்டும். உள்ளேபோனால் நிஷ்டை, தவம், சமாதி என்பதால் புலன்கள் அவிந்து வாழ்வைக் காணமுடியாது. வாழ்வும், வாழ்வுக்குரிய எண்ணங்களும், செயல்களும் உள்மனத்தில் காணமுடியாது.

மேல்மனம் இறைவனுக்கில்லை, உள்மனம் வாழ்வுக்கில்லை என்பது மனிதநிலை. மேல்மனத்திலும், உள்மனத்திலும் இறைவனைக்கண்டு, அதேபோல் இரு இடங்களிலும் வாழ்வைக் கண்டால் பூரண யோக நிபந்தனை பூர்த்தியாகிறது. இதன் ஒரு பகுதியை மேலே குறிக்கின்றேன். அதுவே பரம்பொருள் வெளிப்படும் தருணமாகும். அது ஆன்மீக நிறைவைத் தரும்.

உடல் ஜடமானது. அதற்குத் தொட்டுப் பார்த்தால்தான் புரியும். புலன்கள் ஓரளவு சூட்சுமமானவை. தூரத்திலிருந்து வரும் வாசனை, உள்ள காட்சி, எழும் சத்தம் ஆகியவை புலன்களுக்கு உணரமுடியும். மனம் முழுவதும் சூட்சுமமானது. அதனால் எங்கும் சஞ்சாரம் செய்யமுடியும். மேகமண்டலத்தையும் எட்டமுடியும். ஆன்மா பிரம்மம். அது சிருஷ்டி முழுவதும் பரவும். உடல்நிறைவுபெற, செயல் பூர்த்தியாக வேண்டும். புலன்கள் நிறைவு பெற, கண்டு, கேட்டு நிறைய வேண்டும். மனம் நிறைய எண்ணம் சிறக்க வேண்டும். ஆன்மா நிறைவுபெற, ஆன்மா பிரபஞ்சம் முழுவதும் ஒரு க்ஷணம் பரவவேண்டும். அந்த நேரம் நாம் இறைவனை மின்னலாகத் தரிசனம் செய்கிறோம். பெரிய கவிகளுக்கு இந்த ஆண்டவன் தரிசனம் கிடைத்த பின்னரே புது வாழ்வு ஏற்பட்டு, பேரிலக்கியம் சிருஷ்டிக்கின்றார்கள்.

எழுத்தாளர், கவி, பாடகி, விளையாட்டு வீரன், அரசியல்தலைவன், கற்புக்கரசி என எந்தத் துறையிலும் சிறந்தவர், இந்த இறைத்தரிசனம் கண்டால் அவர் சிருஷ்டிகர்த்தாவாகி,

பேரிலக்கியம், பெரிய சாம்ராஜ்யம், நிறுவுவார்கள். "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா''' எனக் கேட்ட கற்புக்கரசிக்கு, வந்த பிரம்மச்சாரியின் கோபம், அவர் வாழ்வில் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் காண்பித்தது. உள்மனம் பரந்துவிரிந்தது. கடந்த காலத்தையும் தழுவுவது. அதனால் தெரியமுடிகிறது.

பலன் கருதாத கடமையை கீதோபதேசப்படி செய்தால் பலனைக் கருதும் மனப்பான்மை அறவே அழியும் நேரம் திரை விலகி, தெய்வம் தெரிவது, ஆன்மாவை வாழ்வில் காணும் நேரமாகும்.

*********

  1. வளர்ச்சிக்குத் தேவையானதுபோக அதிகசக்தி குழந்தைகட்கும் வாலிபர்கட்கும் உள்ளிருந்து உற்பத்தியாவதால் அவர்கள் உடல் அளவில் ஒரு நிறைவு பெறுகிறார்கள். தொடர்ந்தவெற்றி பெறுபவர் ஒருவர், தமக்குத் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து தமக்குத் தேவைக்கு மேல் பெறுவதால், மனநிறைவு பெறுகிறார். புதிய கருத்து மனதில் தொடர்ந்து ஏற்பட்டால், பழைய மனநிலைகள் அதில் மூழ்கி, புத்துணர்ச்சி எழுகிறது.

தேவைக்கு அதிக சக்தி உடல் நிறைவையும், மனநிறைவையும் தரும்.

குழந்தையின் உடல் வளருகிறது. அதற்குத்தேவையானது physical energy  உடலின் சக்தி, உற்சாகம் வளர வேண்டிய சக்தியை உணர்வு அளிக்க வேண்டும். மனம் வளர mental energy மனோசக்தி வேண்டும். ஆத்மாவளர ஆன்மீகச் சக்தி தேவை.

குழந்தை வளர சக்தி எப்படி வருகிறது? உணவிலிருந்து வருவது உண்மை. ஏன் அதேபோல் 50ஆம் வயதில் உணவிலிருந்து அதே போன்ற அபரிமிதமான சக்தி கிடைக்கவில்லை?

சோர்ந்திருப்பவனுக்கு நண்பன் கிடைத்துவிட்டால் சோர்வு போகிறது, தோல்வியால் சோர்வடைந்தவனுக்கு வெற்றி கிடைத்தால் சோர்வு, தெம்பாக மாறுகிறது. இது எப்படி? உணர்வு உடலைவிட உயர்ந்தது. மனம் உணர்வைவிட உயர்ந்தது. மனத்தை உணர்வு நாடினால் உணர்வில் சக்தி எழுகிறது. நம் நிலையைவிட அதிகமான உயர்ந்த நிலையை நாடினால் உயர்ந்தநிலையிலுள்ள அதிக சக்தி நம்மை நாடி வருகிறது. உலகில் சக்தி (energy) காற்றைப்போல், வெளிச்சத்தைப்போல் எங்கும் நிறைந்துள்ளது. காற்று நிறைந்த வெயில் 4 சுவர்களை எழுப்பி நாம் வீடு' என்பதனுள்ளிருப்பதால், காற்றோட்டம் குறைகிறது. மொட்டைமாடியில் காற்று அபரிமிதமாக வீசுகிறது. குழந்தைப் பருவத்தில் குழந்தை புறச்சூழ்நிலையோடு இரண்டறக் கலந்துள்ளது. குழந்தை சாப்பிடும் உணவு, குழந்தையின் உடலைச் சூழ்நிலையோடு இணைப்பதால், அளவிறந்த தெம்பு சூழலிலிருந்து உள்ளே வந்து குழந்தை வளருகிறது. நாளாக நாளாக குழந்தை மனிதனாகிப் பல கருத்துகளை ஏற்பதால், சூழ்நிலை அவன் ஏற்ற கருத்தின் மூலமே உள்ளே வரமுடியும் என்பதால், நமக்கு குழந்தைபோல் அதிகமான தெம்பு வருவதில்லை.

மேல்நிலைக்கு அதிகத் தெம்பும், கீழ் நிலைக்குக் குறைந்த தெம்புமிருப்பதால், ஒரு நிலை அதனுடைய மேல் நிலையோடு - உணர்வு, மனத்தோடு - தொடர்புகொண்டால், அதிக சக்தியுள்ளே வர முடிகிறது. வாய்ப்பு, புறச்சூழலைச் சேர்ந்தது. வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், நம் உணர்வு புறச்சூழலை அதிகமாக ஏற்கிறது. அதனால் அதிகத் தெம்பு பெறுகிறது.

புதியன சூழலை அனுமதிக்கும் கதவு. பழையவை மூடிய கதவு. எனவே புதிய கருத்தை ஏற்றால், சூழல் தன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரமுடிகிறது. அதனால் உற்சாகம் பெருகுகிறது.

அதிக சக்தி வளர்ச்சிக்கு உதவும், நாமுள்ள நிலையில் சாதிக்க உதவும். நிறைவுபெற்று, மேலும் சக்தி பெருகினால் அடுத்த நிலைக்குப் போக உதவும். குழந்தையும், பெரியவர்களும் வளருவது

அவர்கள் உள்ள நிலையில். கலைஞன், விளையாட்டுவீரன், எழுத்தாளர் போன்றவர்க்கு அடுத்த நிலைக்குப்போகும் வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பு,' புதியன எழுந்தால் கிடைக்கும்.

*********

  1. மனிதனுடைய நிலைகள் பல. மேலெழுந்த மனத்திலும், ஆழ்ந்த உணர்விலும், சூட்சும உடலும், உணர்விலும், உடலும், காரணதேகத்திலும், அகந்தையிலும், சைத்தியப்புருஷனிலும், புருஷனிலும், ஈஸ்வரனிலும் மனிதன் நிலை பெற்றிருக்கிறான். இந்த எல்லா நிலைகளிலும் அன்னையிருக்கின்றார். நம் அழைப்பின் திறனுக்கேற்ற நிலையிலிருந்து அன்னை பதிலளிக்கின்றார். ஆழ்ந்த நிலைக்குப் போனபின்னும், மேல்மனத்தின் பழக்கம் அங்கும் வருமானால், அந்தக் குறையால், அழைப்பின் திறன் குறையும்.

அன்னையில்லாத இடமில்லை. பழைய பழக்கம் அழைப்புக்குத் தடை.

கருவுருதல் என்பது முழுமையான நிறைவான நிகழ்ச்சி. தாவரங்களிலிருந்து, விலங்கு, மனிதன், தெய்வம்வரை அது உண்டு. நிலையின் உயர்வு, தாழ்வு கருதாமல் ஒரு பெரிய செயல், நிலைக்குத் தகுந்தவாறு எல்லா நிலைகளிலும் இருப்பதை நாம் பல விஷயங்களில் அறிவோம். உருவம், உணர்வு, அறிவு, அதேபோல் ஜடத்திலிருந்து, சச்சிதானந்தம்வரை எல்லா நிலைகளுக்கும் உண்டு. வெற்றி, தோல்வி என்பது வாழ்வின் ஆயிரம் நிலைகளிலும் உண்டு. நிலைக்கேற்றபடி செயல் மாறும். பிரம்மத்தை அறிய மந்திரமுண்டு. பிரம்மத்திலிருந்து படிப்படியாக இறங்கி வந்தால் எல்லா நிலைகளுக்குரிய மந்திரம் உண்டு. சூளை கொளுத்து முன்னும் அதற்குரிய மந்திரம்' உண்டு. அதேபோல் அன்னை எல்லா நிலைகளிலும் உள்ளார்.



book | by Dr. Radut