Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

61. சிறந்த நண்பர்கள் கடுமையான எதிரியாவது - தலைகீழ் திருவுருமாற்றம்.

  • பற்றறுத்தல் சன்யாசிக்கு முதற்கடமை.
  • பூரண யோகம் வாழ்வை ஏற்றாலும், பற்றறுப்பது அவசியம்.
  • குடும்பத்தைப் பாசத்தால் ஏற்காமல், பற்றால் ஏற்காமல், பண்பாலும், கடமையாலும் ஏற்க வேண்டும்.
  • ஏற்றால் பாசமாக ஏற்பான். இல்லையெனில் ஏற்கமாட்டான்.
  • உயர்ந்த முறையில் செய்வது மனிதனுக்கு உகந்த வழியில்லை.
  • கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பது, பாட்டரி மாற்றுவது, பாசத்தால் செய்வதில்லை. கடமை.
  • கடமை தவறாது, பாசம் எழாது.
  • பாசமும், பற்றும் எழாமல் கடமையைச் செய்வது செயலுக்குரிய பண்பு (work value).
  • சிறந்த நட்பு, நெகிழ்ந்த உணர்வாகும். உணர்ச்சியில்லாமல் நட்பில்லை.
  • சிறந்த நண்பர்கள் உணர்வின்றி விலகி, கடமையைச் செய்வது மனித இயல்பில்லை.
  • மனித சுபாவம் நண்பர்கள் விலக அவர்களை எதிரியாக்கும்.
  • கடுமையான எதிர்ப்பு, ஆழ்ந்த வெறுப்பாக்கி, காத தூரம் விலக்கும்.
  • ஒருவருக்கு யோகப் பக்குவம் வந்தபின், உறவு நட்பு விலகும் மார்க்கம் எதிரியாவது.
  • எதிரியாக்காமல், இயல்பாக விலக, தன் நிலையுணர்ந்து விலக பக்குவம் வேண்டும்.
  • அன்பருக்குப் பக்குவமிருந்தாலும், அடுத்தவர் எதிரியாகத் தவறமாட்டார்.
  • பக்குவமிருந்து எதிரியாகாமல் பிரிபவர் பிரிவின் கண் பீழை தராதவர். கீழ் மக்களது நட்பு விலகும் பொழுது மனம் கசங்குவதில்லை என்பது திருக்குறள்.
  • சிஷ்யர் ராமானுஜரை விட்டு குரு யாதவப் பிரகாசர் பிரிந்திருக்கலாம். ஆனால் அவருக்குச் சிஷ்யரைக் கொலை செய்யும் எண்ணம் எழுந்தது.
  • சிஷ்யன் ஆன்மீக விளக்கம் பெற குருவுக்குப் பணிகிறான்.
  • குரு ஆன்ம விழிப்பற்ற, வெறும் மனிதனானால், சிஷ்யன் ஆன்ம விளக்கம் பெற்ற உயர்ந்த ஆத்மாவானால், குருவுக்குப் பணிவு தெரியும். பணிவால் சிஷ்யன் உயிரும் தன் கைவசம் உள்ளது தெரியும்.
  • பணிந்தவனைத் தண்டிக்காமலிருக்கப் பக்குவம் வேண்டும். பணிவதால் குருவுக்குச் சிஷ்யன் மீது அதிகாரம் ஏற்படுகிறது. அது தன்னைச் செலுத்தத் தவறாது. அவசியமில்லாவிட்டாலும் அதிகாரம் தன்னைச் செலுத்தி மகிழும்.
  • பொதுவாக குருவுக்கு உள்ளபடி பணிபவர்கள் அதிகாரத்தைச் செலுத்த முடியாத பக்குவம் உள்ளவராக இருப்பார்கள்.
  • இது அவர் ஆத்ம உயர்வால் எழும் சுதந்திரம்.
  • இந்தச் சுதந்திரத்தை உடனுள்ளவர் தவறாகப் பயன்படுத்துவார்கள்.
  • தாய், தகப்பனார் முதல் இந்த இடத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள்.
  • மகன் ஏமாந்தவன் எனக் கருதுவார்கள். அவனுக்குரியதைத் தரமாட்டார்கள். கேலி செய்வார்கள். வெறி ஏற்றுவார்கள். ஆன்ம விளக்கமுள்ளவர் அளிக்கும் சுதந்திரத்தை இப்படித் தவறாகப் பயன்படுத்தினால், வேலை போகும், உயிர் போகும், சொத்து அழியும், வந்த வியாதி வாழ்நாள் முழுவதும் போகாது. பலன் நாள் கழித்து வருவதால் அது தெரிவதில்லை. ஆத்ம பலன் பெற்றவர் அப்படி நடந்தால், அத்தனையும் போகும், உடலிலுள்ள தேஜஸ் மாறி கறுப்பாக மாறும். எல்லாமிருந்தும் எதுவும் சாப்பிட முடியாது. சொந்த உடைமையை உரிமையுடன் அனுபவிக்க முடியாமல் கெஞ்சிக் கேட்டு சிறிது பெற வேண்டும்.
  • வாழ்க்கை நண்பர்களை எதிரியாக்குவது, விலக்குவது, பூரண யோக வாயில் திறப்பதாகும்.
  • கருமியாக சொத்து சேர்த்தவர், வட்டிக்குச் சம்பாதித்தவர், ஆன்ம விளக்கமுள்ளவர்க்குச் சொத்து கொடுக்க விரும்பினால், அந்தச் சொத்து, இந்த ஆத்மாவை வந்தடையாது.
  • நம் நண்பர்கட்குச் செய்யும் சிறந்த சேவை அவர்களை நாம் மறப்பது என்கிறார் அன்னை.
  • அன்பர்கள் வாழ்வு பொலிவு பெறுவதை அறிவோம். அவர்களுடன் தூர உறவுள்ளவர் வாழ்வில் அமோகமாக செல்வம் பெருகுவதைத் தவறாது காண்கிறோம். தூர இருந்தாலும் அருள் அவர்கள் வாழ்வில் செயல்படுகிறது. எட்ட இருப்பதால் கெட்ட எண்ணம் அருளைத் தடுப்பதில்லை என்பதால் பெருஞ்செல்வம் திரள்கிறது.
  • ஒரு அன்பரால் சில நாட்களுக்கு எந்த மனக்குறையுமின்றி, எந்தக் கெட்ட எண்ணமுமின்றி இருக்க முடியுமானால், அந்தக் குறுகிய காலத்தில் பெரும் செல்வம் பெருகுவதைக் காணலாம்.
  • விலகும் நண்பர் விலகும் தரித்திரம்.

தொடரும்.....

*******



book | by Dr. Radut