Skip to Content

அன்பர் அனுபவம்

"அனுபவக் கட்டுரை"

தர்மபுரியைத்  தம்மகத்தே  ஏற்ற  தாயார்

அன்னையின் பொற்பாதங்களை நமஸ்கரித்து எங்கள் குடும்ப வாழ்க்கை ஸ்ரீ அன்னையை ஏற்பதற்கு முன்னால் எப்படியிருந்தது, ஏற்றுக் கொண்ட பிறகு எப்படி ஸ்ரீ அன்னை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்ரீ அன்னை அன்பர்களுக்குக் கட்டுரையாகச் சமர்ப்பணம் செய்கிறேன்.

மூதாதையர் மற்றும் என் தாய் தந்தையார் அனைவரும் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஒரு சகோதரியுடனும், 2 மூத்த சகோதரர்களுடனும் ஈரோட்டில் பிறந்தேன். அக்காலத்தில் என் பெற்றோர்கள் ஈரோடு காவேரிக்கரையிலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி, மற்றும் நவ பிருந்தாவன் ஆகியவற்றிற்கு விசேஷ தினங்களில் முன் நின்று வேலை செய்து வருபவர்கள். விசேஷ தினங்களில் என் தாயார் மேற்குறிப்பிட்டுள்ள தலங்களுக்கு வரச் சொல்லி வற்புறுத்துவார்கள். ஆனால் தகப்பனார் வற்புறுத்தாமல் எங்களுக்குச் சாப்பாடு மட்டும் செய்து வைத்துவிட்டு வரும்படி என் தாயாரிடம் சொல்லுவார்கள். கோயில் கூட்டம் திருவிழா என்றால் கொஞ்சம் கூட எனக்குப் பிடிக்காது.

நான் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் 1961-இல் என் தாயார் காலமான பிறகு தந்தையாருடன் வாழ்ந்து வந்தேன்.

1963 இல் எனக்கு மின் வாரியத்தில் வேலை கிடைத்ததால், பொள்ளாச்சி, கோவை, ஊட்டி, தாராபுரம் போன்ற நகரங்களில் வாழ்ந்துவரும் சமயத்தில் கோயிலுக்குச் செல்ல மாட்டேன். அப்பொழுதும் என் தந்தையார் கோயிலுக்குச் செல்லும்படி வற்புறுத்தமாட்டார்.

1985- இல் மின் வாரியத்தில் என் துணைவியாருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சகோதரி அமுதசுரபி மாத இதழ் ஒன்றைக் காண்பித்து "கர்மயோகி என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பார்'' என்று சொல்லி இதழைக் கொடுத்தார்கள். அவ்விதழைப் படித்துப் பார்த்த பிறகு என் துணைவியார் வீட்டிற்கு எடுத்து வந்து "கர்மயோகி என்பவர் எழுதிய கட்டுரையைச் சற்றுப் படித்துப் பாருங்கள்'' என்று என்னிடம் கொடுத்தார். எனக்கு எப்பொழுதும் செய்தித்தாள் தவிர புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. இருந்தாலும் மேலும் மேலும் வற்புறுத்தியதின் பேரில் படித்துப் பார்த்து சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். எந்தக் கட்டுரை என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அதுதான் முதன்முதலாக தமிழ் மக்களுக்கு ஸ்ரீ அன்னையைப் பற்றி எழுதப்பட்ட முதற் கட்டுரை என்று நான் நினைக்கிறேன். இதுபோல் மாதந்தோறும் என் துணைவியார் கொடுப்பார், படிப்பேன். ஆனால் தீவிரமாகத் தெரிந்து கொள்ள மனதில் நாட்டம் வரவில்லை. என் துணைவியாரும் நானும் நாளடைவில் அவர்களின் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கமுற்பட்டோம்.

1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 - ஆந்தேதி  நாங்கள் முதன்முதலில் ஈரோட்டிலிருந்து உறவினர்கள் 7 பேர்கள் சேர்ந்து பாண்டிச்சேரி சென்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் அன்னை சமாதியைத் தரிசித்தோம். அன்று ஆசிரமத்திலிருந்து மதர் சர்வீஸ் சொஸைட்டியில் உள்ளவர்களிடம் நேரடியாகத் தொலைபேசி மூலம் பேசி எப்பொழுது எங்கு வருவது என்று கேட்டறிந்து சுமார் மாலை 3 மணிக்கு அவர்கள் இல்லமாகிய மதர் சர்வீஸ் சொசைட்டி வெங்கட்டா நகர் சென்றோம்.

என் மச்சினரின் மனைவிக்கு 3 முறை குறை பிரசவம் ஏற்பட்டு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இந்தப் பிரச்சினையை மதர் சர்வீஸ் சொசைட்டியில் வேலை செய்து வரும் ஸ்ரீ அன்னை அன்பர்களிடம் கூறி அன்னை அவர்களின் அருளாசி வேண்டும்  என்று கேட்டோம். இப்பிரச்சினையைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அன்பர் அவர்கள் தமக்கு குழந்தை இல்லை என்பதை மறந்து பிரச்சினையை ஸ்ரீ அன்னையிடம் கூறி சமர்ப்பணம் செய்து தியானிக்க வேண்டும், மற்ற குழந்தைகளைப் பார்க்கும்பொழுது தம் குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி முதன் முதலாக ஸ்ரீ அன்னையின் தரிசனம் போன்ற 10 புத்தகங்களை எங்களுக்குக் கொடுத்தார்கள். அன்னையை தரிசித்தோம். அப்பொழுது முதல் அளவில்லா சந்தோஷமும் அடைந்தோம். மீண்டும் பாண்டிச்சேரி வந்து மஹாசமாதியையும் அன்னையையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது. அடிக்கடி அன்னை தரிசனம் கொடுக்கும்பொழுது எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வந்து ஆசீர்வாதம் வாங்கிச் செல்வோம்.

அன்னையின் அருளாசிப்படி மச்சினன் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் அவர்கள் குடும்பத்தில் குழந்தையின் தாய் இறக்க பெண் வீட்டார்கள் பிறந்த குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டார்கள். மேலும் மச்சினன் அவர்கள் பிடியில் சிக்கி கடன் தொல்லையும், கலவரமும் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். அந்தச் சமயத்தில் என் துணைவியார் பல முறை குழந்தையை அவர்களிடமிருந்து மீட்க பல ஆலோசனைகளையும் அருளாசியையும் சொசைட்டியிடம் கேட்டார். அருளாசியுடன் நல்ல ஆலோசனைகளை அவர்களிடம் பெற்ற பின்பு குழந்தையும், நகை, வெள்ளிப் பாத்திரம் போன்றவைகளும் மீட்கப்பட்டு கடன் உபாதைகளும் தீர்ந்து என் மச்சினர் இரண்டாந்தாரம் திருமணம் செய்துகொண்டு தற்சமயம் குடும்பமும், குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் ஸ்ரீ அன்னையிடம் நாங்கள் வைத்திருந்த பூரண நம்பிக்கையும், அருளாசியும் என்றால் அது மிகையாகாது.

நான் மின் வாரிய அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு நாள் சென்னையிலிருந்து ஓர் உயர் அதிகாரி கொண்ட தணிக்கைக்குழு வந்து சில பணி ஏடுகளை (service roll) random - ஆக எடுத்து தணிக்கை செய்யும் பொழுது, எனது ஊதியத்தில் 2 increment (வருடாந்திர ஊதிய உயர்வு) விடுபட்டு சரியாக fixation செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அன்று மதியம் 2 1/2 மணிக்கு தணிக்கைக்குழு என்னை அழைத்து ஊதிய உயர்வு விடுபட்டதை remark-இல் எழுதி உடனே நிலுவைத் தொகையை அளிக்கும்படி எழுதிவிட்டுச் செல்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் 3 மாதம் ஆகியும் எனக்கு விடுபட்ட ஊதிய உயர்வு நிலுவைத் தொகை அளிக்கப்படவில்லை. இந்த இடத்தில் சற்று ஸ்ரீ அன்னை அன்பர்கள் கவனிக்க வேண்டும், எப்படி என்றால் ஸ்ரீ அன்னை மீது முழு நம்பிக்கை வைத்தால் ஸ்ரீ அன்னை வேறு ஓர் அன்பர் மூலமாகச் செயல்படுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. எப்படி என்றால் அந்த சமயத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும் வேறொரு தணிக்கை குழுவில் பணியாற்றுபவருமான உடன் அதிகாரி ஒருவர் எங்களுக்கு அன்னை அன்பராக அறிமுகமானார்.

எங்களைப்பற்றியும், தர்மபுரியில் தியானமையம் நடத்துவதைப்பற்றியும் ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் முகாம் செய்யும்பொழுது கேள்விப்பட்டு எங்கள் இல்லத்திற்குப் பல முறை வந்து தியானித்துச் செல்லுவது வழக்கம். ஒரு நாள் அந்த உயர் அதிகாரி அவர்களிடம் ஊதிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்பதை கூறினேன். இதைப் பற்றி என்னுடைய அலுவலகத்திற்கு வந்த தணிக்கை குழு அதிகாரியிடம் கேட்டு அதில் எனக்குப் பணம் கண்டிப்பாக வழங்கப்படுவதுடன் அதன் report அனுப்பப்பட வேண்டும். இதில் ஏதும் சந்தேகம் வேண்டாம் என்று பதில் எழுதினார். அவர் கூறியபடி எனக்கு 1977 முதல் 1992 முடிய pay fix செய்த ஆர்டர் வந்தது. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் தொகை வரவில்லை. அந்தச் சமயத்தில் என்னுடன் என் கீழ் பணிபுரியும் இளநிலை எழுத்தர் அவர்கள் பில் போட்டு தயார் செய்து உடன் தொகையை வழங்க உதவினார்கள். இவையாவும் ஸ்ரீ அன்னையின் அருளால் நடைபெற்றது என்றால் மிகையாகாது.

1986-இல் என் துணைவியாருக்கு மின் வாரியத்தில் வீடு கட்டும் கடன் ரூ.5000/- கிடைத்தது. நிலம் பெற்றவர் எங்களுக்கு 40'' X 40'' என்ற அளவுப்படி 1600 சதுர அடி கொடுத்தார். ஆனால் அஸ்திவாரம் போட அளக்கும்பொழுது எங்களது மனையில் 40 அடி நிளத்தில் 1 1/2அடி அகலத்தில் மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரியும் பக்கத்து பிளாட்டுக்காரர் அஸ்திவாரம் போட்டுவிட்டார் என்பது தெரிய வந்தது. எங்களுக்கு அவரை அணுகி எப்படிக் கேட்டு நம் இடத்தை மீட்பது என்று இருக்கும் பொழுது பல பேர் பலவாறாக, "அவர் மிகவும் கோபக்காரர், மற்றும் பணக்காரர் கூட, கொடுக்கமாட்டார், மேலும் கேட்டு பிரயோசனம் இல்லை" என்றார்கள். அப்பொழுதுதான் ஸ்ரீ அன்னையின் நினைவு வந்தது. அதாவது எந்த ஒரு பிரச்சினையையும் ஸ்ரீ அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால் ஸ்ரீ அன்னையின் அருள் செயல்பட்டு வெற்றி கிட்டும் என்பதும் அதுவும் ஸ்ரீ அன்னையால் மட்டும்தான் முடியும் என்றும் தெரியும். ஆகவே நாங்கள் சிறிய ஸ்ரீ அன்னையின் திருவுருவபடத்தின் முன் நின்று நியாயமான கோரிக்கையைக் கூறி சமர்ப்பணம் செய்துவிட்டு மாலை நேராகப் பக்கத்துப் பிளாட்டுக்காரரான உதவி செயற்பொறியாளர் அவர்களிடம் சென்று கேட்டோம். மறுநாள் ஸ்ரீ அன்னையின் திருவுருவபடத்தை வைத்து பூஜை செய்து அஸ்திவாரம் எடுக்க வேண்டும். என்னே ஸ்ரீ அன்னையின் அருள் மழை! ஆச்சரியம்! ஸ்ரீ அன்னையின் அருளால் பிளாட்டுக்காரர் வரச்சம்மதித்ததுடன் இடத்தை அளந்து அதிகம் பெற்றிருந்தால் திருப்பித் தந்து விடுகிறேன், என்று கூறி மறுநாள் அளந்து எங்களுக்குண்டான இடத்தைத் திருப்பித் தந்துவிட்டு அஸ்திவாரம் போடும்படிக் கூறிவிட்டார். ஸ்ரீ அன்னையின் அருளால் வீட்டை எங்கள் மனையில் கட்ட ஆரம்பித்தோம்.

கட்டும் வீடு நாங்கள் வேலை பார்க்கும் மின் வாரிய அலுவலகக் கட்டிடத்தின் அருகில் இருப்பதால் நாங்களிருவரும் மாறி மாறி கட்டிடப் பணியைக் கவனித்து வந்தோம். அந்தச் சமயத்தில் என் பிரிவில் பணிபுரியும் ஓர் உதவியாளர் குடிபோதையில் வேலை செய்து கொண்டிருக்கும் மற்றொரு உதவியாளரை சுத்தியால் அடிக்க முற்பட்ட பொழுது திசை மாறி வேறு இடத்தில் விழுந்துவிட்டது. எனது அறையல்லாத மற்றொரு அறையில் இது நடந்ததால் எனக்கு எந்த நிகழ்ச்சியும் தெரியாது. ஆனால் எங்களுக்கெல்லாம் உயர் அதிகாரியான உதவி செயற்பொறியாளர், அலுவலகப் பணியின் பொருட்டு ஓசூர் சென்றதால் நான்தான் அலுவலகப்பிரிவிற்கு முழுவதும் பொறுப்பாக பார்க்க வேண்டிய கட்டாயம். வேலை பார்க்கும் மற்ற தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டார்கள், குடிபோதையில் உள்ளவரிடம் "வீட்டிற்குச் சென்று நாளை வா" என்று கூறி அனுப்பிவிட்டேன். மறுநாள் எங்களுடைய உயர் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை நான் தனியாகவும், மற்ற தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து விண்ணப்பம் எழுதித்தரும்படி அறிவுறுத்தினார்கள். எழுதி கொடுத்ததை உரிய மேல் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிக்கு அனுப்புவதாகக் கூறினார்கள். நான் எழுதிக் கொடுத்த நிகழ்ச்சியின் விண்ணப்பத்தை தெரிந்து கொண்ட குடிபோதைத் தொழிலாளி  என் மீது சினம் கொண்டு போதையில் அலுவலகம் முன்னாலும் வீடு கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கும் இடத்திலும், கல்லைப் பின்னால் கையில் மறைத்து வைத்துக்கொண்டு அடிக்க வருவார். விலகித் தப்பித்து வந்தேன். இவையெல்லாம் என் துணைவியாருக்குத் தெரியாது. ஒரு நாள் கட்டிடப் பணி பார்த்துக் கொண்டிருக்கும் என் துணைவியாரிடம் வந்து கத்தியைக் காண்பித்து மிரட்டி, கட்டிடம் கட்டி முடிப்பதற்குள் உங்கள் கணவரைக் கொலை செய்து விடுவேன் என்று கூறிச் சென்றார். இதை அறிந்த என் துணைவியார், "இந்த வீண் வம்பு ஏன்?ஏன் எழுதிக் கொடுத்தீர்கள். நமக்கு டிபார்ட்மெண்ட் எந்தவிதமான பாதுகாப்பும் கொடுக்க மாட்டார்கள். தயவு செய்து எழுதிக் கொடுத்ததை வாபஸ் பெறுங்கள் எனக் கூறினார். ஆனால் நான் அதற்குச் செவி சாய்க்கவில்லை. இச்சம்பவத்தை நான், துணைவியார் மற்றும் 2 புதல்வர்கள் (மூத்த மகன் அப்பொழுது வயது 13 இளையவர் வயது 10 இருக்கும்) அனைவரும் சேர்ந்து ஸ்ரீ அன்னையின் திருவுருவப்படம் முன்பு நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லியதுடன் நான் பார்த்ததாக எழுதிக் கொடுத்த பொய்யான  தகவலையும் சொல்லிப் பிரார்த்தித்தோம். என்ன அதிசயம்! அவன் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும் முன் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து தான் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டுச் சென்று விட்டான். இந்நிகழ்ச்சி மூலம் ஸ்ரீ அன்னையின் அருள் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

1991-92-இல் என் மூத்த மகன் தொழிற்கல்வியில் எந்த பட்டப் படிப்பு சேருவது என்ற நிலையில் குடும்பத்தில் விவாதம் ஏற்பட்ட சமயத்தில் எனது ஆசை, என் மகன் M.B.B.S பட்டப்படிப்பில் தான் சேர வேண்டுமென்றிருந்தது. ஆனால் என் துணைவியார் மகனிடம் "ஸ்ரீ அன்னையிடம் உன் பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்து விடு'' என்று கூறி, ஸ்ரீ அன்னை எது கொடுக்கிறார்களோ அதையே மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டு படிக்க சேரும்படிக் கூறினார். ஸ்ரீ அன்னையின் அருளால் என் மகனுக்கு கால்நடை மருத்துவப் படிப்பு (B.Vsc ) கிடைத்து நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு செமஸ்டரிலும் முதன்மை மார்க்கு பெற்று தற்போது M.Vsc உத்திரப்பிரதேசத்தில் IVRI-இல் படித்து வருகிறார். எங்கள் மூத்த மகன் M.Sc Bio Technology மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கிடைத்து இடையில் அதை இழந்து நின்ற சமயம் மீண்டும் ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தனை செய்ததில் M.Vsc ஸ்காலர்ஷிப்புடன் உத்திரப்பிரதேச பரேலியில் கிடைத்தது என்பது ஸ்ரீ அன்னையின் அருள் என்றே சொல்ல வேண்டும். படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்காலர்ஷிப் நிலுவைத் தொகையில் ஒரு தொகையை புத்தக சேவைக்குக் கொடுக்குமாறு அனுப்பியிருந்தான். அன்னையின் சேவைக்கு அளித்த பணம், மாதந்தோறும் ரூ.2500/- என்றிருந்த ஸ்காலர்ஷிப்பை ரூ 5000/- ஆக மாற்றிய அதிசயம் எங்களை நெகிழ வைத்தது. சட்டத்தையும் மாற்றும் சக்தி ஸ்ரீ அன்னையின் அருள் என்று தெரிந்து கொண்டோம். 

எங்கள் இளைய மகன் 1994 ஆம் ஆண்டு +2 பரீட்சை எழுதிக் கொண்டிருந்தான். 23.3.94-ஆந் தேதி இரசாயனப் பரீட்சை எழுதிவிட்டு தன் அம்மாவிடம் நான் இந்தப் பரீட்சை நன்கு தயார் செய்தும் கடைசி நேரத்தில் 20 மார்க்கு கேள்வியைத் தெரிந்தே நேரமில்லாததால் விட்டுவிட்டேன். எப்படி எனக்கு chemical technology கிடைக்கும் என்று கூறி அழுதான். உடனே அவன் அம்மா, "என்னிடம் சொன்னால் நான் என்ன செய்ய முடியும், improvement எழுது என்றுதான் சொல்லுவேன். அறையில் அமர்ந்திருக்கிறார்களே ஸ்ரீ அன்னை அவர்களிடம் சொல்லு, ஏதேனும் அவரின் அருளால் நல்வழி கிடைக்கும்'' என்றார். உடனே அவன் ஸ்ரீ அன்னையிடம் ஒரு கடிதம் எழுதி வைத்து கேட்டான். என்னால் improvement எழுத முடியாது என்று கூறி மனதாரப் பிரார்த்தித்தான். செல்வனின் குரல் ஸ்ரீ அன்னைக்குக் கேட்டது. மதியம் விளையாடச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியவன் டி.வியை போட்டுச் செய்தி கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது T.V. செய்தியில் ராசிபுரத்தில் இரசாயன பாடக் கேள்வித்தாள் அவுட் ஆனதால் மீண்டும் 31.3.94-ஆந் தேதி அன்று மறு தேர்வு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவன் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. ஸ்ரீ அன்னையின் அருளால் improvement எழுதாமல் மறு தேர்வில் இரசாயனப் பாடத்தில் 200க்கு 192 மார்க்கு பெற்றான்.

அதே மாதிரி அவன் ஸ்ரீ அன்னையிடம் chemical technology, Regional engineering college இல் கிடைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி வைத்து பிரார்த்தித்ததால் அவன் கேட்டபடியே ஸ்ரீ அன்னையின் அருளால் REC, Warangal, AP Stateஇல் chemical technology கிடைத்தது. மேலும் 3ஆம் ஆண்டு காலேஜில் கலவரம் நடந்ததால் வெளியேறும்படிக் கட்டளையிட்டார்கள். ஹாஸ்டலை விட்டு இரவு 10 மணிக்கு மேல் புகை வண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். இந்நிலையில் வாரங்கல் வழியாகச் சென்னை வரும் வட இந்திய ரயில் அனைத்தும் இரவு 10 மணிக்கு மேல் கிடையாது. கடைசியில் இரவு 9.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வண்டி மட்டும் வரும். இந்த நிலையில் கூட இருந்த அவருடைய நண்பர்கள் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தவித்த பொழுது, அவன் நண்பர்களிடம், "Mother நம்மைக் கைவிட மாட்டார்கள். நிச்சயம் நமக்கு வண்டி கிடைக்கும்'' என்று சொல்லி ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கும், டெல்லியிலிருந்து வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வண்டி பிளாட்பாரம் வந்து சேருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. குழந்தையின் குரலுக்கு ஸ்ரீ அன்னை செவி சாய்த்து அருள் பாலித்துவிட்டார். தன்னை நம்பி வந்தவர்களை ஸ்ரீ அன்னை கை விடுவதேயில்லை என்பதற்கு இந்நிகழ்ச்சி எல்லோருக்கும் எடுத்துக்காட்டு.

4 ஆம் ஆண்டு campus interview கல்லூரியில் நடந்ததில் அவனுடன் படித்துக் கொண்டிருந்த நண்பர்களுக்குப் பல கம்பெனிகளில் வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. சுற்றியிருக்கும் நண்பர்களுக்கெல்லாம் வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து விட்டது என்று மனதில் கவலையும் பொறாமையும் கொள்ளாமல், அவர்கள் என்னை விடத் திறமைசாலிகள், சராசரி மாணவனாகிய எனக்கும் ஸ்ரீ அன்னை ஒரு நல்ல கம்பெனியில் வேலை கொடுப்பார்கள், என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அமைதியாக இருந்தார். மே, 98-இல் project மற்றும் இறுதித் தேர்வு.இதற்கிடையில் 3.3.98 அன்று Indian Petro Chemical Corpn. Ltd. Baroda என்ற நிறுவனத்தினர் போக்குவரத்து செலவிற்குப் பணம் கொடுத்து interview க்கு அழைத்திருந்தார்கள். பல நேர்முகத்தேர்வுக்குச் சென்று பல கேள்விகளை சந்தித்துப் பழக்கப்பட்டதால் 3/4 மணி நேரம், சுற்றிலும் 5 டைரக்டர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திணறடித்தாலும் ஸ்ரீ அன்னையிடம் தன்னுடைய எண்ணங்களை மற்றும் தைரியத்தையும் சமர்ப்பணம் செய்துவிட்டதால் நன்கு பதில் சொல்லிவிட்டு தருமபுரிக்கு தன் நண்பர்களுடன் வந்திருந்தான். 2 நாட்கள் கழித்து மேலும் சென்னையில் ஒரு நேர்முகத்தேர்வு நடந்தது. அதிலும் நேரில் ஆஜராகிவிட்டு வாரங்கல் திரும்பி விட்டான். நண்பர்களுக்குச் சென்னைக் கம்பெனியில் வேலை கிடைத்தது. அவனுக்கு கிடைக்கவில்லை. மேலும் மேலும் தோல்வியே சந்தித்தாலும் ஸ்ரீ அன்னை மேல் நம்பிக்கை இழக்காமல் project மற்றும் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தான். பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் பரோடாவிலுள்ள M/s.Indian Petro Chemical Corpn.,நிறுவனத்திலிருந்து 24.9.98 அன்று Management traineeஆக, சேரும்படி வேலைக்கு உத்திரவு வந்தது. இது சுற்றியுள்ளவர்களையெல்லாம் பார்த்துப் பொறாமைப்படாமல் ஸ்ரீ அன்னையின் மேல் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டதால், அத்தகைய மனநிலைக்கு அன்னை கொடுக்கக்கூடிய பரிசாக அமைகிறது.

இதனால் கம்பெனியில் ஹாஸ்டல் வசதி, சாப்பாடு மற்றும் போக்குவரத்து எல்லாம் ஸ்ரீ அன்னையின் அருளால் இலவசமாக கிடைத்து வருகிறது.

தருமபுரியில் எங்களது இல்லத்தில் தியான மையம் நடந்து கொண்டிருக்கும்போது ஸ்ரீ அன்னை அன்பர் ஒருவர் என் மனைவியிடம் புத்தகச் சேவையை விரிவுபடுத்துங்கள் என்று கூறினார். அதை ஸ்ரீ அன்னை நேரில் கூறியதாக மனதில் எடுத்துக் கொண்டு, நானும் என் மனைவியும் புத்தகச் சேவையில் ழுமுயற்சியுடன் ஈடுபட்டோம். இரவு 11 மணிவரை ஸ்ரீ அன்னை அன்பர்களை வீட்டிற்கு வரவேற்றும், உபசரித்தும் ஸ்ரீ அன்னையை அதிக அளவில் ஏற்றுக் கொண்டு இரண்டு சொற்பொழிவாளர்களை மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டி, பாண்டிச்சேரியிலிருந்து அழைத்து ஆன்மீகச் சொற்பொழிவு நடத்தினோம். எங்கள் இல்லத்தில் அன்பர்கள் மேலும் வந்தால் உட்கார இடம் இல்லை என்ற நிலையில் ஸ்ரீ அன்னைக்கு வெளியில் இடம் தேடி அலைந்தோம். இந்த நேரத்தில் 2-ஆவது சொற்பொழிவு நடந்து முடிந்த பிறகு தருமபுரியைச் சேர்ந்த ஸ்ரீ அன்னை அன்பர் தம்பதியினரான ஒருவர் சொற்பொழிவு நிகழ்த்திய ஸ்ரீ அன்னை அன்பரிடம், நாங்கள் ஸ்ரீ அன்னையின் தியானக் கூடலுக்கு இடம் தருகிறோம் என்று கூறினார்கள். சொற்பொழிவாற்ற வந்த ஸ்ரீ அன்னை அன்பர், "நீங்கள் இனி இடம் தேட வேண்டாம். ஸ்ரீ அன்னை உங்களுக்கு தியான மையம் நடத்த இடம் அளித்துவிட்டார்கள். இனி அந்த இடத்தில் நீங்கள் ஸ்ரீ அன்னை தியான மையத்தை நடத்துங்கள்'' என்று கூறினார்கள். புத்தகச் சேவையினால் எங்கள் மனம் விசாலம் அடைந்ததால் ஸ்ரீ அன்னை விசாலமாக சொந்த இடம் கொடுத்து விட்டார்கள். இடம் கிடைத்த பிறகு பகவான் ஸ்ரீ அரவிந்தர், அன்னை ஆகியோருடைய இரண்டு திருவுருவப் படங்களைத் திருநெல்வேலி நகரைச் சேர்ந்த அன்னை அன்பர் ஒருவரின் அன்பளிப்பாகக் கிடைக்கப் பெற்று அன்னையின் ஆசிகளுடன் 3.1.1995 அன்று தருமபுரிக்கு வரவழைத்தோம். தியானமையத் துவக்க நாளான 5.1.97 அன்று புஷ்பாஞ்சலி செய்து ஸ்ரீ அரவிந்தர் அன்னையை வரவேற்றோம். இன்றுவரை தருமபுரி தியான மையத்தை 28 உறுப்பினர்கள் கொண்ட சர்வீஸ் குழுவின் உதவியுடனும், அன்னையின் ஆசியுடனும் அறிவுரையின் படியும்  நடத்துகிறோம் என்பதை இத்தருணத்தில் மலர்ந்த ஜீவியம் பெற்று படிக்கும் ஒவ்வொரு ஸ்ரீ அன்னை அன்பர் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

ஸ்ரீ அன்னையின் கொள்கைப் பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்பது ஸ்ரீ அன்னையின் எண்ணமோ தெரியவில்லை. என் துணைவியார் ஈரோட்டிற்கு மாற்றலாகி, அங்கேயும் ஸ்ரீ அன்னை தியான மையம் ஒன்றை அவரிருக்குமிடத்தில் துவக்கி ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை, தியானக் கூடல் நடத்தி வருகிறார்.

எங்கள் வாழ்க்கையில் பகவான் ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும், சொசைட்டி வெளியீடு புத்தகத்தில் வரும் ஆன்மீகம் செறிந்த கருத்துகளையும் ஏற்றுக் கொண்ட பிறகு இத்தகைய அதிசயிக்கத்தக்க மேற்குறிப்பிட்ட, நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் நடந்து கொண்டே இருக்கின்றன, எழுதிக் கொண்டேயிருக்கலாம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையே எங்கள் குலதெய்வம்! அன்னையே எங்கள் குரு! ஸ்ரீ அன்னையின் சேவையே எங்கள் நோக்கம்!

குருராஜன் & ரக்குமா குருராஜன்

*******

Comments

para 11 line 2இடங்களி ல் --

para 11 line 2

இடங்களி ல் -- இடங்களில்



book | by Dr. Radut