Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னை புரிந்த ஏராளமான அற்புதங்களில் சிலவற்றைக் கூறுகின்றேன். ஏனெனில், அனைத்தையும் கூறவேண்டுமானால் வாழ்க்கை முழுவதும் கூறிக்கொண்டே இருக்கலாம். "ஆயிரம் தவறுகள் செய்துவிட்டாலும் கவலையை விடு. நினைவுடன் என்னைப் பற்றிகொள்ளமட்டும் மறந்துவிடாதே''என்று அன்னை கூறியது என்னை அடிக்கடி நெகிழச்செய்கிறது. அன்னை நமக்கு எவ்வாறு, எப்பொழுது உதவலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்னையைச் சிறிது நினைத்தாலும் உடனே சிறிதுகூட தாமதிக்காமல் உடனே வந்து அருள் புரிவார்கள். அன்னையின் பேரருளை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது.எனக்கு அன்னை புரிந்த உதவிகளைக் கூற விரும்புகிறேன்.

அன்னையின் அருளால் எனக்கு பி.காம். சேர காலேஜில் இடம் கிடைத்தது. என் கல்லூரியில் ஓரளவு எல்லா டிபார்ட்மெண்ட்டிலும் அன்னை அன்பர்கள் இருப்பார்கள். அத்தகைய இடத்தில் படிக்கின்றோம் என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கும்.

பைனல் செமஸ்டர் exam நடந்துகொண்டிருந்தது. 2.5.05 எனக்கு Income tax exam. முதல் நாள் (1.5.05) அன்று தியானம் அன்னையின் அருளால் நன்றாக நடந்தது. இரவு குளிர்ந்த காற்றுடன் மழை பொழிந்தது.அன்னையின் அருள் என்று சந்தோஷமாகப் படித்துக்கொண்டிருந்தேன்.கரண்ட் இல்லை. இருப்பினும் அன்னை பார்த்துக்கொள்வார்கள்என்ற நம்பிக்கையுடன் படித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் (2.5.05) அன்றும் மழை காலையில் பெய்தவண்ணம் இருந்தது. அன்னையிடம் சமர்ப்பணம் செய்த பூக்களைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பது என் வழக்கம்.

படித்தபின்பு பூக்களை என் புக்ஷெல்பில் வைத்துவிட்டு examக்குக் கிளம்பினேன். பின்னர் அன்னையிடம் பிரார்த்தனை செய்து "சாவித்ரி''புத்தகத்தில் உள்ள 15வது பக்கம் படித்துவிட்டு, இல்லத்திலிருந்து அன்னையை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். அன்னையை எப்பொழுதும் என்னுடன் அழைத்துச்செல்வது வழக்கம். அதேபோல்

அன்றும் செய்தேன். அம்மா என்னைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்வார்கள். தினமும் என்னுடன் என் தந்தை பஸ் ஸ்டாண்டுக்கு வருவார். 2.5.05 அன்று பஸ் வரவில்லை. அரை மணி நேரமாக பஸ் இல்லை. பஸ்ஸ்டாண்டில் கூட்டம் குவிந்தது. வழுத்தூர் அருகே அதிக மழையால் பாலம் உடைந்துவிட்டது. ஆகவே, பஸ் எல்லாம் வருவது நிச்சயமில்லைஎன்று சிலர் பேசிக்கொண்டு இருந்தனர்.பிரைவேட் பஸ் ஒன்று வந்தது. அதிகக் கூட்டமானதால் நான் அதில் ஏறவில்லை. பிறகு பஸ் ஏதும் வரவில்லை. அன்னை, அன்னைஎன்று மனதில் கூறினேன். டவுன் பஸ் வந்தது. என் தந்தை, "ரூட் பஸ் வாராது. இதில் போகிறாயா?'' என்றார்.

அன்னையின் அருளால் "நான் இதில் செல்லமாட்டேன்'என்று சட்டென்று கூறிவிட்டேன். எப்பொழுதும் யோசித்து பதில் கூறும் நான்,அன்று சட்டென கூறியது அன்னை அருளால்தான். அந்த பஸ்ஸிலும் ஏறவில்லை. பிறகு அரை மணி நேரம் சென்றது. ஒரு பஸ்ஸும் வரவில்லை.பிறகு பதட்டத்துடன் அன்னை என்று கூறியபடி இருந்தேன். மணி எட்டரை ஆனது. பிறகு என் தந்தை இனி தாமதித்தால் examக்குத் தாமதமாகிவிடும். ஆகையால் காரில் சென்றுவிடலாம் என்றார். சரி என்று ஒரு டாக்ஸியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். அப்பா உள்ளே சென்று காருக்குப் பணம் கொடுக்க பணம் எடுக்கச் சென்றார்.அதற்குள் என் மனம் கலங்கி "அன்னையே நீங்கள்தான் என்னை காப்பாற்றவேண்டும்'' என்று கூறியபடி, (அன்னை கண் படம் entranceஇல் மாட்டியிருக்கும்) அன்னையின் கண்களைப் பார்த்தபடி "அம்மா, என்ன குழப்பம் இது, நீங்கள்தான் என்னை காக்கவேண்டும்''என்று பிரார்த்தனை செய்தேன். பின்னர் இல்லத்திலிருந்து புறப்பட்டோம். காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தோம். கரந்தை அருகில் பார்த்தால்

"நான் ஏறமாட்டேன்'என்று கூறிய டவுன் பஸ்ஸுடன் ஏராளமான பஸ்ஸும், காரும் நின்றவண்ணம் இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே எங்களின் கார் டிரைவர் நாங்கள் சென்ற காரை முன்னே செலுத்தினார். அங்கு பார்த்தால் சாலைமறியல். இரு புறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. எங்களது கார் புறப்பட முற்பட்டபோது அக்கூட்டம் எங்களை நோக்கியது.

அதில் சிலர் காரை அடித்து, "நாங்கள் இங்கு போராடுகின்றோம்.உங்களுக்கு என்ன அவசரம்? காரை நிறுத்தப்போகிறாயா, இல்லையா?''என்று மிரட்டினர். அன்னை அருளால் right side இல் ஒரு ரோடு போனது,குறுகிய தெரு. அங்குள்ள டீக்கடைக்காரர்கள் விரைவாக இந்த ரோடு வழியாகச் செல்லுங்கள் என்று வழிவிட்டார்கள். சட்டென்று அதில் புகுந்து 9.10 மணிக்கு காலேஜ் சென்றோம். 9.30க்கு exam.Examhallக்கு வெளியில் வந்தபோது என்னுடன் பயிலும் மாணவி நடந்ததை கேள்விப்பட்டு நீ இன்று examக்கு வந்தது நீ கும்பிடும் அந்த அன்னையின் அருள்தான்என்றாள். அன்னையைப்பற்றி அவள் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டே exam எழுதினேன். அனைத்து தடைகளிருந்தும் அன்னை என்னைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பூரித்துப் போனேன். அன்னையின் அருளால் கேள்வித்தாள் ஈஸியாக இருந்தது.

அன்னைக்கு நன்றியைச் சமர்ப்பித்தேன். 14.6.05அன்று ரிசல்ட் வந்தது.அன்னையின் அருளால் first classஇல் பாஸ் செய்தேன். 2.5.05அன்று எழுதிய income tax paperஇல் அதிக மதிப்பெண்களை எனக்கு அளித்த அன்னைக்கு கோடான கோடி நன்றிகளைச் சமர்ப்பணம் செய்கின்றேன்.அன்னை நம்மை எப்பொழுதும் காப்பாற்றுவார்கள். அன்னையின் அருளால் நான் MBA படித்து, நல்ல உயர்ந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு அன்னைதான் அருளவேண்டும். என்னை நல்ல வழியில் அன்னைதான் அழைத்துச்செல்லவேண்டும்.

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எப்பொருள் நமக்கு ஏராளமாகத் தேவைப்படுகிறதோ அதைச் சுலபமாகப் பெறும் வழியொன்றுண்டு. தெய்வத்திற்கு அப்பொருளைக் காணிக்கையாக அளித்தால் அபரிமிதமாக அது நம்மை நாடிவரும். அதைவிடச் சிறந்த முறை அப்பொருளை அடுத்தவர்க்குக் கொடுப்பதாகும். உதாரணமாக அபரிமிதமான அன்பு தேவைப்பட்டால், உன் அன்பை மற்றவர்க்குச் சமர்ப்பணமாகவும், தெய்வக் காணிக்கையாகவும் செலுத்தவேண்டும்.

மனிதனிலுள்ள தெய்வத்தின் அபரிமிதமான அம்சம்.


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut