Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

  1. 23.1.2004 வெள்ளி: எனது பக்கத்து வீட்டில் நான்கு நாட்களாக சுயநினைவு இல்லாமல் இருந்த 75 வயது பெண்மணி ஒருவர் இருந்தார். அன்று இரவு சுமார் 12 மணிக்குத்தான் எனது வேலையை முடித்துக்கொண்டு எனது வீட்டிற்குச் சென்றேன். அப்போது அங்கு ஒரே கூட்டமாகக் கூடியிருந்தார்கள். என்ன என்று கேட்டபொழுது அவர் நான்கு நாட்களாக கோமா ஸ்டேஜில் (சுயநினைவின்மை) இருப்பது தெரியவந்தது. அப்போது என்னுடைய வீட்டில் இருந்து அன்னையின் திருவுருவப்படத்தையும், மலர்களையும் அந்த பெண்மணியின் தலைமுதல் கால்வரை காண்பித்தேன். இரண்டு நிமிடம் கழித்து அந்த பெண்மணி கண்விழித்து, வாய் திறந்து பேசி அனைவரையும், "ஏன் இவ்வளவு கூட்டமாக நிற்கிறீர்கள்?'' என்று கேட்டார். இது அன்னையின் அதிசயங்களுள் ஒன்று.
  2. என் அண்ணார் காவேரிப்பட்டினம் உயர்நிலைப்பள்ளியில் ரெக்கார்டு கிளார்க் ஆகப் பணிபுரிந்துவருகிறார். 11.2.2004 அன்று பள்ளி முடித்து பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு ஆட்டோ வந்தது."தருமபுரி வருபவர்கள் வாருங்கள், போகலாம்'' என்று ஆட்டோ ஓட்டுநர் அழைத்தார். அவர் மட்டும் ஆட்டோவில் ஏறி தருமபுரி வந்தார். பேருந்து நிலையம் அருகில் வந்தவுடன் இறங்கிவிட்டார். அவர் ஆட்டோவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களின் சம்பளப் பதிவேட்டை அந்த ஆட்டோவிலேயே தவறவிட்டுவிட்டார். அப்போது சுமார் இரவு 7 மணி இருக்கும். அவர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு அந்தச் சம்பளப் பதிவேடு தொலைந்துவிட்டதுஎன பதறிக்கொண்டே கூறினார். "நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம். அந்த பதிவேடு கிடைத்துவிடும். அன்னை இருக்கிறார், அன்னையிடம் கூறுவோம்'' என ஆறுதல் கூறி தியானமையத்திற்கு நானும், என்னுடைய அண்ணாரும் சென்று அன்னையைப் பணிந்து, அந்தப் பதிவேடு கிடைக்குமாறும், அதற்குச் சிறிய காணிக்கையை அளிப்பதாகவும் வேண்டிக்கொண்டு இருக்கும் போது, என் காதில் "டாக்டர் கிருஷ்ணன் மருத்துவமனைக்கு செல்லவும்'' எனக் குரல் கேட்டது. அன்னைக்கு நன்றி கூறிவிட்டு, தியானமையம் விட்டு வெளியே வந்து, இருவரும் நேராக டாக்டர் கிருஷ்ணன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, இவர் பதிவேட்டை தவறவிட்டுவந்த ஆட்டோ ஓட்டுநர் இவரை பார்த்து, "நீங்கள் தானே காவேரிப்பட்டினத்தில் இருந்து வந்தீர்கள். உங்களுடைய பதிவேட்டை என்னுடைய வீட்டில் வைத்திருக்கிறேன்'' என அவருடைய பிடமனேரியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச்சென்று பதிவேட்டைக் கொடுத்தார். அவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு உடனே தியான மையம் வந்து அன்னைக்குக் காணிக்கையும், நன்றியையும் தெரிவித்துவிட்டுச் சென்றோம்.
  3. 28.2.2004 அன்று அன்னசாகரத்தில் உள்ள என் மனைவியின் அக்கா அவர்கள் அன்னையை வணங்குபவர். அவர் அன்று இரவு உறங்கும்பொழுது விடியற்காலை 5 மணிக்குக் கனவில் அன்னை தோன்றி ஒரு தங்கப்புதையலை ( Gold Globe) கையில் கொடுக்கிறார். அவரும் மகிழ்ச்சியுடன் பெறுகிறார். மெய்சிலிர்த்து கண்விழித்துப் பார்க்கிறார். அன்று சுமார் 10 மணிக்கு அவருடைய கடைக்கு நான் சென்றபோது இந்த நிகழ்ச்சியை என்னிடம் கூறினார்."அன்னை உங்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்து விட்டார். இனி எந்த கஷ்டமும் உங்கள் வாழ்வில் இல்லை'' என்று கூறினேன்."29.2.2004 அன்று "கோல்டன் டே'. அன்னை உங்களுக்குத் தங்கப்புதையலை அளித்திருக்கிறார். இனி வாழ்வில் ஒளிமயம்தான். எனவே அன்னைக்கு நன்றி கூறுங்கள்'' என்று கூறிவிட்டு வந்தேன். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து ஒரு வீட்டுக் காலிமனை வாங்கினார்கள். தற்போது அந்த காலிமனையில் ஒரு பெரிய மாடி வீடாக கட்டி விரைவில் கிரஹப்பிரவேசம் செய்ய உள்ளார்கள். அவர் கனவு கண்டதற்கும், நிகழ்ச்சி நடந்ததற்கும் இடையில் ஒரே ஒரு வருடம் தான்.
  4. 16.6.2004 அன்று 9ஆம் வகுப்பு படிக்கும் என் மகள் அன்று மாலை பள்ளி முடித்து 6 மணிக்கு பேன்சி ஸ்டோரில் மணி அல்லது கவரிங் செயின் வேண்டும் என்று கேட்டாள். என் மகளுக்கு பிடித்தமான மணியும், கவரிங் செயினும் அந்தக் கடையில் இல்லை. "சரி,வேண்டாம், வாங்கப்பா'' என்று என் மகளும் அழைத்து வந்துவிட்டாள். கடையைவிட்டு வெளியே வந்த நான், "சரி, விடம்மா. அன்னை உனக்குத் தங்க செயின் வாங்கிக் கொடுப்பதற்காகத்தான் தள்ளிப் போடுகிறார். இந்தப் பொருள் உனக்குப் பிடிக்கவில்லை''என சமாதானம் சொல்லிவீட்டிற்கு அனுப்பிவைத்தேன். அப்பொழுது மணி 6 ஆகும். அன்று இரவு 9 மணிக்குத் தொழில் மையம் சென்று வருமாறு என் முதலாளி வேலை வைத்திருந்தார். சுமார் 9.15 மணிக்கு என்னை செல்போனில் அழைத்து, "வீட்டிற்கு வந்து போ'' என அழைத்தார். 9.45 மணிக்கு என் முதலாளி வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னை அழைத்து 2 பவுன் தங்கச்சங்கிலி ஒன்றை கையில் கொடுத்து, "இதன் விலை 6,500/-. இதற்கு 6000 ரூபாய்மட்டும் கொடுத்தால் போதும். அதுவும் மாதாமாதம் சிறிய தொகையாக கொடுத்து எடுத்துக்கொள்''என என்னிடம் கொடுத்தார். உடனே அன்னைக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், உடனே தியான மையம் வந்து அந்தச் செயினை அன்னையின் பாதங்களில் வைத்து, அன்னைக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீட்டிற்குச் சென்று என் மனைவியிடம் அன்று மாலை முதல் இரவு வரை நடந்த அன்னையின் அதிசயத்தைக் கூறி குடும்பமே மகிழ்ச்சியடைந்தோம்.

மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி வெளியீடான "அருளமுதம்'' புத்தகம் ஓர் அமுதம் என்பதைவிட பொக்கிஷம், அமுதசுரபி, தங்கப்புதையல் என்று சொல்லலாம். அன்னையின் அன்பர்களாகிய நமக்கு, இந்த நூலை அன்னை நமக்கு அளித்ததற்கு நம் ஜென்மம் உள்ளவரை நன்றியறிதல் வேண்டும். ஏனெனில் அன்னையைப் பற்றியும், பகவான் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும் அறியவைத்தது மட்டுமல்லாது, நமது வாழ்க்கை மேலும் மேலும் உயர வழிகாட்டிய அன்னை அவர்களுக்கு பூரண சரணாகதி அடைந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

புதிய கொள்கையை, பழைய சௌகரியத்திற்காக, பகுத்தறிவின்பேரில் மாற்றிக்கொள்வது தெய்வச் சேவையின் பேரில் தெய்வத்தை, தனக்குச் சேவை செய்ய வைக்க முயல்வது, மனிதத் திறமைகளில் சிகரம் வகிப்பது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மனிதன் செய்யும் அம்முயற்சி தன்னை ஏமாற்றுவதாகிறது.

காப்பாற்ற முயலும் மனிதன் தன்னை ஏமாற்றிக்கொள்கிறான்.

*****     

Comments

06. அன்பர் கடிதம்      Please

06. அன்பர் கடிதம்

      Please highlight the last paragraph starting with the following line.

        மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி வெளியீடான "அருளமுதம்'' புத்தகம் ஓர் அமுதம் என்பதைவிட பொக்கிஷம், அமுதசுரபி, தங்கப்புதையல் என்று சொல்லலாம்...



book | by Dr. Radut