Skip to Content

05.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                                                              (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கோல்ட் மெடல் என நான் கூறியதை, சேர்மன் நம்பவில்லை போலும். நான் மெடலைக் கொண்டு வந்து காண்பிக்கிறேன் என்றேன்:

. நம் திறமை மற்றவர்க்குத் தெரிந்தால் தான் நல்லது என்பது நமது அனுபவம். அது உண்மை. அதைக்கடந்த உண்மைகள் உண்டு.

. அது நாம் சொல்லாமல் பிறருக்குத் தெரிவது நல்லது.

. நம் திறமை எந்த வழியிலும் பிறருக்குத் தெரியாவிட்டால், சூட்சுமமாக அவர்கள் நமக்கு அதிக உதவி செய்வார்கள்.

. கணவர் இவ்வுண்மைகளை அறியாதவர். தாம் பெற்ற கோல்ட் மெடலைப் பற்றித் தாமே சொல்லிக்கொள்பவர். பண்போ, பக்குவமோ இல்லாதவர்.

. நாமே கோல்ட் மெடலைப் பற்றிப் பேசினால் சேர்மனுக்கு நம்பிக்கை இருக்காது. கணவரை, சேர்மன் நம்பவில்லை என, கணவர் புரிந்து கொண்டு, தாமே மெடலைக் கொண்டு வந்து காட்டுவதாகக் கூறினார்.அப்படிக் காட்டுவது பலன் தாராது.

. திறமை பலன் தருவது எப்பொழுது?

. ஆன்மீகத்தில் மட்டுமன்று, வாழ்விலும் உலகம் தானே ஏற்காத திறமை பலன் தாராது.

. நாமே நம் திறமையை உலகுக்கு அறிவித்தால் உலகம் சந்தேகப்படும், மறுக்கும்.

. ஏற்றால், பலன் தர முன்வாராது.

. பலன் தந்தால் சிறிய பலனாக இருக்கும், அது நீடிக்காது.

. பெரும்பலன் தருவது, நீடிப்பது எவர் வாழ்விலும் தானே வந்த பலனாகும். நம் திறமையை உலகம் தானே ஏற்றுத் தருவது அது.

. கதையில் இக்குடும்பம் பெற்ற அனைத்தும் தானே வந்தவை.

. கம்பனி வந்தது,

. பவர் பிராஜெக்ட் வந்தது,

. டெய்வான் பாங்க் அழைத்தது,

. கணவரோ, தாயாரோ அறியாத வாய்ப்புகள்.

. மனம் அன்னையை நோக்கிப்போனால், அதிர்ஷ்டம் நம்மை நோக்கி வரும்.மனம் அன்னையை நோக்கிப் போகாவிட்டாலும், அதிர்ஷ்டம் வருமா, வாய்ப்பு வருமா என எதிர்பார்க்காத இடத்தில் வாய்ப்பு செயல்படும். மனம் எதிர்பார்த்தால் செயல் தடைபடும்.

. இக்கதையில் வேலைக்காரனுக்குத் தோப்பு வந்தது; பெரியவனுக்கு வந்த ஆபத்து விலகியது; பெண்ணின் தோழியின் பிரச்சினை தீர்ந்தது ஆகியவை அத்தகையவை. அதற்கெதிரான சட்டமும் உண்மை. சிறியவன் இடைவிடாது பாட்மிண்டன் டீம் ஜெயிக்க செய்த பிரார்த்தனை பலித்தது எதிரான சட்டம். அதிலும் பைனல்ஸ் வரை வந்தது எதிர்பாராத நிகழ்ச்சி.

போனில் பார்ட்னருடன் பேசிவிட்டுத் திரும்பிய கணவர் முகம் மலர்ந்திருந்தது:

. சமர்ப்பணம் செயல்படும் விதம்:

. சமர்ப்பணம் அர்ப்பணத்தைவிட (self-giving) பெரியது. சரணாகதி 9ஆம் கட்டமானால் அர்ப்பணம் 6ஆம் கட்டம். முயற்சியின்றி செய்வது சரணாகதி. முயன்று செய்வது தவம், பிரார்த்தனை. எளிமையாகச் செய்வது சமர்ப்பணம் (consecration). முயலவேண்டிய தேவையேயில்லாமல் ஜீவன் சத்புருஷனில் மலர்வது சரணாகதி.

. கணவர் மட்டமாகப் பழகினாலும், அவர் சமர்ப்பணச் சூழல் இருப்பதால் அது சேர்மன் நல்ல குணத்தால் செயல்பட்டு, "அனுபவம் போதாது. அப்படிப்பட்டவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்" என்று பேசுகிறார்.

. அன்னை கைவிடமாட்டார் என்பதை நாம், அன்னை இருக்கும் சந்தர்ப்பம் மூலம் செயல்படுவார் என அறியவேண்டும்.

. சேர்மன், "தம் குறையைப் பாராட்டவில்லை, தம்மை நல்லவர் என்று நினைக்கிறார்" என்றவுடன் கணவர் இனியும் சமர்ப்பணம் செய்ய வேண்டுமா எனக் கேட்கிறார். சேர்மன் தப்பபிப்பிராயம் கொள்ள வில்லை என்பதால், நம் குறை அகன்றதாக அர்த்தமில்லை. நடந்தது என்ன என்று அவர் அறியார்.

. பார்ட்னர் பக்குவமானவர். கணவர் மனம் புண்பட எதையும் சொல்லமாட்டார். மற்றவர்கள் பார்ட்னரிடத்திருந்தால்,

சேர்மன் கூறியதைப் பார்ட்னரிடம் கூறுவார்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. தாம் கோல்ட் மெடலைப் பற்றிப் பேசியது அசம்பாவிதம் எனக் கணவர் அறியவில்லை. பவர் பிராஜெக்ட் எங்கிருக்கிறது, பார்ட்னர் செய்தியைக் கேட்டு முகம் மலரும் கணவர் எங்கிருக்கிறார்?

. ஒரு நல்ல குடும்பத்தில் ஒரு சிறு செய்தியானாலும் அனைவரும் அறிவார்கள். இக்குடும்பம் அதுபோலில்லை. சிறு செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது நெருக்கம் எழும். நெருக்கம் நட்பாகி, உறவாகும். உறவு நல்லுறவானால் குடும்பம் பண்புடையதாகும்.

. தாம் தவறாகப் பேசியது தவறாகத் தெரியவில்லை. சேர்மன் நல்லபிப்பிராயம் மனத்தை மலரச்செய்கிறது. அப்படிப்பட்டவர் திருந்தமாட்டார். "இப்படிப்பட்டவரிடம் நாம் அப்படிப் பேசி

விட்டோமே" என்ற வெட்கம் எழவில்லை. அருள் சூழல் கனத்திருக்காவிட்டால் இச்சொல் விஷயத்தைக் கெடுத்திருக்கும்.பொதுவாகக் கணவர் வெட்கமில்லாதவர். தமக்கு வெட்கமில்லை எனவும் அறியாதவர்.

. கடவுள்கள் நம்மைக் கொடுமைப்படுத்தக்கூடியவர்கள். அவர்கள் பிரியப்பட்டால் எதுவும் செய்வார்கள் என்று அன்னை கூறுகிறார்.அத்துடன் கடவுள்களை நாம் நம்புவதால் தான் அவர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் கூறுகிறார். அது கடவுள்களிடமே உண்மையானால், பவர் பிராஜெக்ட், பேங்க் சேர்மன் விஷயத்தில் அதிகமாக உண்மையாகும். நாம் எந்த அளவு சேர்மனை நம்புகிறோமோ - அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்கிறோமோ - அந்த அளவு சேர்மன் நம் விஷயத்தில் செயல்படமுடியும். இதை நுணுக்கமாக அறிவது உதவும்.

மனைவி - Serious vs.silly; Truth vs.falsehood;Selfish vs.selflessnessஎன்பதை நிதானம், பக்குவம், சில்லறை, சபலம், உண்மை, பரநலம் எனலாம். இம்மூன்றையும் முழுமையாகப் பின்பற்றினால் போதும்:

. தெய்வம் என்பது சத்தியம். வாழ்வு பொய்யும், மெய்யும் கலந்தது.

. நிதானம், பக்குவமாக இருக்க பொறுமை, திறமை, சக்தி தேவை. சக்தியற்றவரைத் தெம்பில்லாதவர் என்கிறோம். புன்சிரிப்பு அனைவரும் விரும்புவது. சிடுமூஞ்சியை எவரும் விரும்பமாட்டார். புன்சிரிப்பு எழ உள்ளே சக்தி பிறக்கவேண்டும். வேலை செய்யும் பொழுது பாட்டுப் பாடுகிறான் எனில் உள்ளே வேலை செய்வதற்குப் போதிய சக்தியும்,பொங்கி வழியும் சக்தியுமிருப்பதாக அர்த்தம். சந்தோஷமில்லாமல் பாட்டு எழாது. தெம்பில்லாமல் சந்தோஷம் வாராது. நிதானமிருக்கத் தெம்பு அதிகமாக வேண்டும்.

. நிதானமானவரை அனைவரும் பாராட்டலாம்.

. சிடுமூஞ்சியை எவரும் ஒதுக்குவர்.

. ஏன் சிடுமூஞ்சி, சிடுமூஞ்சியாக இருக்கிறான் என அறிய சாதாரண அறிவு போதாது. அவனோடு நாம் உணர்வால் ஐக்கியமானால், அவன் தன்னை உணர்வதுபோல் நாமும் உணர்ந்தால், ஏன் அவன் அப்படியிருக்கிறான் எனத் தெரியும். அதைப் பிறர் நோக்கம் என்கிறோம். அது ஆத்மஞானம்.

பிறர் கண்ணோட்டம் பிரம்மத்தின் கண்ணோட்டம்.

அவன் ஏன் சிடுமூஞ்சியாக இருக்கிறான் என்றறிந்த பின் நமக்கு அவன்மீது அனுதாபம் எழுகிறது. அது உணர்வில் அடுத்தவர் நோக்கம். அக்காரணம் தெரிந்தபின் அவன் அதிலிருந்து விடுதலை பெறும் திறனை அன்னை சக்தி நமக்களிக்கிறது. அதைச் செய்யும் அன்பர் அன்னையின் கருவியாகிறார்.

அன்னையின் கருவி அனந்தத்தின் கருவி

இதுபோல் உண்மை, பரநலத்தைப் பேணுபவர் உயர்ந்த அன்பர்.

. இக்குடும்பம் மேற்சொன்ன உயர்வுகட்கு விதிவிலக்கு.

. விதிவிலக்கான குடும்பத்திற்கு விலக்கிற்கு விலக்காகத் தாயார் அதிர்ஷ்டம் கொண்டு வந்துவிட்டார். திருடனுக்கு அரசப் பட்டம் கட்டியாகி விட்டது. ராஜபார்வை வருமா? திருடனுக்கு ராஜபார்வை வேண்டுமென்ற ஆர்வமிருந்தால், அது வரும்.

அது அன்னை சக்திக்குரிய சிறப்பு.

மிக ஏழையும் இன்று காரில் போகமுடிகிறது, TV பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் பெரிய பணக்காரன் நிரந்தரமாகப் பெறும் வசதிகளை மிக எளிய ஏழையும் கொஞ்சம் அனுபவித்துப் பார்க்கலாம் நம்மூரிலும். அந்த நிலை ஏற்பட்டுவிட்டது.

கம்பன் இராமாயணம் எழுதிய அற்புதத் தமிழை நாம் அன்றாட வாழ்வில் பேசப் பயன்படுத்துகிறோம்.

அன்னை திருடனுக்கும் ராஜபார்வை தருகிறார்.

யோகத்தை மேற்கொண்ட எவரும், எத்துறையிலும் செயல்பட விரும்பினால் செயல்படலாம்.

கணவர் - எப்படிப் பொய் சொல்லாமலிருப்பது?

. பொய் என்பது மனிதனுக்குரியது. அன்பனுக்குப் பொய் என்பது விலக்கு.அவதாரம் பொய்யைத் தேடிவருகிறது.

. மனம் பிளவுபட்டது என்பதால் பொய், மெய் என்ற இரு இடங்கள் உண்டு. வாழ்வு பொய்யும், மெய்யும் கலந்த அரங்கம். மனிதனுடைய வாழ்வு மெய், பொய் கலந்தது. அவன் பொய்யை விலக்கி, மெய்யை நாடினால், அன்னை அவனுக்குப் பொய் சொல்லும் சந்தர்ப்பம் தரமாட்டார். பெரியவன் பேசாததை வக்கீல் அடியாளிடம் சொன்னதால் வந்த பேராபத்து விலகியது அன்னை நம்மிடமிருந்து பொய்யை விலக்கும் வகை. அன்பன் பொய்யை நாடக்கூடாது. அவனே பொய்யை விலக்கவேண்டும். அன்பனே பொய்யை நாடினால் அதிக தண்டனை கிடைக்கும். முடிவில் அதுவும் சில சமயங்களில் அதிகப் பலன் தரும்.பொய்யின் ஆழத்தில் மெய் இருப்பதால், அன்பன் மற்ற விஷயங்களில் மெய்யைப் பாராட்டியிருப்பதால் அது தரும் பலன் அது. அவதாரம் சத்திய லோகத்திலிருந்து பொய் லோகத்திற்கு வந்து, பொய்யிலிருந்து மீளும் மெய்க்குத் துணையாக நடக்கிறது. அவதாரம் பொய்யின் எதிராகப் போராடுவதின் விளைவு அது.

. பொய் சொல்லாமலிருக்கவேண்டும் என்பதும் மூச்சுவிடாமலிருக்க வேண்டும் என்பதும் ஒன்றுபோலத் தோன்றும். தெளிவாகச் சொன்னால் பொய் சொல்லாமலிருக்கவேண்டும் என்பது பேசாமலிருக்கவேண்டும் என்பதைப் போன்றது. மூச்சுவிடாமல் வாழமுடியாது. பேசாமல் வாழ முடியும். ஆனால் நாம் பேசாமலிருக்கப் பிரியப்படுவதில்லை.

. பொய் சொல்லாமல் வாழ்வது கடினம் என்றால் ஓரளவு மெய் சொல்லாமல் முழுப்பொய்யனும் வாழமுடியாது. முழுப்பொய்யன் கூட்டாளியிடமாவது, மனைவியிடமாவது, மெய் சொல்லாமலிருக்க முடியாது. அதையும் கடந்து வந்தால் மனத்துடன் மெய் சொல்யே தீரவேண்டும்.

. Verdict தீர்ப்பு என்றொரு படம். பிராங்க் என்ற வக்கீல் தம் பார்ட்னர்கள் ஊழல் செய்ததை எதிர்த்தார். ஊழல் செய்தவரே பிராங்க் என்று கூறி அவரைச் சிறைப்படுத்தினர். எதிர்ப்பை வாபஸ் செய்து விடுதலை பெற்றார். குடித்து வாழ்வை நாசமாக்கிக்கொண்டார். மனைவி அவரை விட்டுப் போய்விட்டாள். மிக் என்ற நண்பர் பிராங்க் மீது பரிதாபப்பட்டு ஒரு நல்ல வழக்கு கொண்டு வந்தார். பெரிய டாக்டர்கள் அலட்சியமாக ஒரு பிரசவத்திற்கு வந்த பெண்ணை comaவில் இருக்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். அப்பெண் சார்பாக பிராங்க் கேஸ் நடத்த வேண்டும். ஆஸ்பத்திரி நிர்வாகம் கேஸ் எடுக்காமலிருக்க அப்பெண்ணிற்கு 1 கோடி ரூபாய் தர முன்வருகின்றனர். அப்பெண் சார்பாக பிராங்க் கேட்டது 3 கோடி ரூபாய். வக்கீல் அதைப் பெற மறுக்கிறார். வக்கீலுக்கு பீஸாக அதில் 1/3 பாகம் உண்டு. கேஸ் கோர்ட்டிற்குப் போகிறது. எதிரி வக்கீல் பிரபலமானவர். அவரிடம் 12வக்கீல்கள் வேலை செய்கின்றனர். அவர்களுள் லாரா என்றொரு பெண் வக்கீலை வேவு பார்ப்பதற்காக பிராங்கிடம் அனுப்புகிறார்கள். பிராங்க் விவரம் தெரியாமல் அவள் மீது பிரியம் கொண்டு தம் வீட்டிற்கு அழைத்துப் போகிறார். லாராமூலம் எல்லாச் செய்திகளும் எதிரிக்குத் தெரிவதால் திறம்பட பிராங்க் செய்யும் ஏற்பாடுகள் முறியடிக்கப்-படுகின்றன. கோமாவில் உள்ள பெண்ணின் சகோதரியும், அவள் புருஷனும் வாதிகள். வாதி பிராங்க் 1 கோடியை மறுத்ததால் கோபம் கொண்டு அவரை அடித்துவிடுகிறான். பிராங்கிற்குப் பெரிய டாக்டர் சாட்சி சொல்ல முன் வருகிறார். எதிரி அவரைக் கலைத்துவிடுகிறான்.மனம் ஒடிந்து பிராங்க் மீண்டும் எதிரியிடம் 1 கோடியைப் பெற முனைகிறார். அவர்கள் மறுத்துவிடுகின்றனர். ஆப்பரேஷன் சமயம் இருந்த நர்ஸ் தவிர அனைவரும் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.பிராங்க் விட்டுப்போன நர்ஸை சந்திக்க முயல்கிறார். அவள் நியூயார்க் போய்விட்டாள். அவள் போன் நம்பர் கிடைக்க அவர் செய்த யுக்தி பலிக்கிறது*. அவளை கோர்ட்டிற்கு வரவழைக்கிறார்கள். கோமாவில் இருந்த பெண் ஆப்பரேஷனுக்கு முன் 1 மணிக்கு வயிறு நிரம்ப சாப்பிட்டதாக நர்ஸ் வாக்குமூலம் தருகிறாள். பைல் 9 மணி முன் சாப்பிட்டதாக எழுதியுள்ளது. டாக்டர் 1 மணி என்பதை 9 மணி எனத் திருத்தியதாக நர்ஸ் வாக்குமூலம் தருகிறார். நர்ஸ் அந்த பைலுக்கு ஜெராக்ஸ் காப்பி வைத்திருக்கிறார். ஜட்ஜ், "ஜெராக்ஸ் செல்லாது,அப்பெண் வாக்குமூலம் செல்லாது" என்கிறார். ஜுரி பிராங்க் பக்கம் தீர்ப்பளித்து 3 கோடியைவிட அதிகத்தொகை தர முன்வருகிறார்கள்.லாரா, பிராங்க்கைச் சந்திக்க முயல்கிறாள். எதிர்க்கட்சி வக்கீல் லாராவுக்குப் பணம் எடுத்து, அவள் கவனமில்லாத பொழுது அவள் பையில் வைக்கிறார். லாரா மனம் மாறி இனி பிராங்க்கிற்கு உண்மை- யாக இருக்க விரும்புகிறாள். பிராங்க்கிற்கு அவள் மனம் மாறியது தெரியாது.

*பிராங்க் நியூயார்க்கில் நர்ஸைப் பார்க்கப்போன சமயம் பிராங்க்கின் நண்பர் மிக், லாரா எதிர்கட்சி வக்கீலிடம் பணம்பெற்றதைக் கண்டுபிடித்து அவரும் நியூயார்க் போய் பிராங்க்கை எச்சரிக்கிறார். பிராங்க் லாராவை சந்தித்து கன்னத்தில் அறைகிறார்.

. உலகில் பொய்யின் பலமும், மெய்யின் பலஹீனமும் விளக்கும் கதையிது.

. மெய் தடுமாறுகிறது. விழுந்து எழுந்திருக்கிறது. முடிவில் சிரமப்பட்டு ஜெயிக்கிறது. நடுவில் மனம் உடைகிறது.

. மிக் கொண்டு வந்த உதவி மனித உதவி. அதுவே அன்னை உதவியாக இருந்தால் எப்படியிருக்கும்? அன்னை உதவியை பிராங்க் அதிகபட்சம் பெற்றிருந்தால் கோமாவில் இருந்த பெண் பிழைத்துக் கொண்டிருப்பாள்.பிராங்க்கை முதலில் விலக்கிய வக்கீல் ஆபீஸ் விரும்பிச் சேர்த்துக் கொண்டிருக்கும். . அதிகபட்சமும், குறைந்தபட்சமுமில்லாமல், பொதுவாக பிராங்க் அன்னை உதவியைப் பெற்றிருந்தால் உதவி வருமுன் சில நாட்களுக்கு முன் பிராங்க் குடிப்பதை நிறுத்தியிருப்பார்.

. தற்சமயம் ஊழலான ஜட்ஜ் இருக்கிறார். அன்னை உதவி வந்திருந்தால் உண்மையான ஜட்ஜ் ஒருவர் இருப்பார்.

. பெரிய டாக்டர் எதிரியிடம் பணம் பெற்று மறைந்துவிட்டார். அன்னை உதவி அதைத் தடுத்திருக்கும். அவரே மறைந்தாலும், அந்த இடத்திற்கு வரும் டாக்டர் உண்மையான திறமைசாலியாக இருப்பார்.

. வாதி பிராங்கை அடிக்க வந்தவர் லாராவை அடித்திருப்பான்.

. 1 என்பதை 9 என திருத்தியது வேறு, வேறு இங்க்காக லென்ஸ்மூலம் தெரியும்.

. எதிரி வக்கீல் ஆபீஸில் உள்ள ஒரு வக்கீல் மோசடிப் பழக்கங்களை எதிர்த்திருப்பார்.

. இவையெல்லாம் நம் வாழ்வில் நடப்பதை நாம் அருளின் செயல் என அறியாமல் ஏதோ நடந்தது எனக் கொள்கிறோம்.

. கோமாலிருந்த பெண் பிழைத்துப் பெரும்பணம் பெற்றிருந்தால் அவள் வாழ்வே மாறியிருக்கும்.

. பிராங்க் தானே தெளிந்து தம் வீட்டைச் சுத்தம் செய்திருப்பார்.செய்தவுடன் மிக் என்பவர் உதவியைக் கொண்டு வந்திருப்பார்.

. எதிரி வக்கீல் லாராவுக்குக் கொடுத்த செக், மிக் கண்ணில்பட்டது குட்டை உடைத்தது.

. அன்னை உதவியிருந்திருந்தால் லாரா வேவு பார்க்க வந்தவள், பிராங்க் மீது அனுதாபம் கொண்டு எதிரி செய்யும் அத்தனை மோசடிகளையும் பிராங்கிற்குச் சொல்லியிருப்பாள்.

. பிராங்கே அன்னை பக்தனாகியிருந்தால் பெரிய ஆபீசிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் வேறு ஆபீஸ், அதைவிடப் பெரிய ஆபீஸ் அவரை ஏற்றிருக்கும்.

. அன்னை சக்தி யார் மூலம் வெளிப்படுகிறதோ, அதற்கேற்பச் செயல்-படும்.

. அன்னை சக்தி இக்கதையில் பிராங்க், மிக், லாரா, டாக்டர், ஆஸ்பத்திரி, கோமாவில் உள்ள பெண், அவள் சகோதரி, அவள் கணவன், நர்ஸ் என வெவ்வேறு நபர் மூலம் வந்திருந்தால் எப்படி கதையின் போக்கு மாறியிருக்கும் எனக் கற்பனை செய்வது அன்னையை அறிய உதவும்.

கணவன் - தன்னம்பிக்கை போனால் எல்லாம் போய்விடும்;

மனைவி - சில்லறையை யாரும் விரும்பமாட்டார்கள்:

. அன்னை நம்பிக்கை நம்மை அருளுக்குப் பாத்திரமாக்குகிறது.அதேபோல் தன்னம்பிக்கை நம்மைச் சமூகத்தில் மரியாதையுடன் வாழ அனுமதிக்கிறது. தன்னம்பிக்கையில்லாதவர் பிறரை அண்டி வாழ வேண்டும். பிறரை நம்பி வாழ்ந்தால் பிறர் நம்மைப் போற்றமாட்டார்கள்.நம்மைக் கேலி செய்து அழிக்க "பிறர்" என்ற சமூகம் முயலும்.

. கதையில் வயிற்றுவலியுள்ள குமாஸ்தாவைக் கணவர் போற்றிப் பாராட்டவில்லை. அவன் வலியால் வதைந்தான். சிறியவன், சின்ன பையன் என்பதால் வீடு அவனை ஆதரிக்கவில்லை. பெரியவன் கேலி செய்தபடியிருக்கிறான். தாயாருக்கு தன்னம்பிக்கையும், அன்னை நம்பிக்கையுமிருப்பதால், குடும்பமே அவரை நம்பி வாழ்கிறது.

. பார்ட்னருக்குப் பண்பும், நம்பிக்கையுமுண்டு.

. கணவருக்கோ, பெரியவனுக்கோ அது இல்லை.

. அவர்கள் தாயாரை நம்பவேண்டும்.

. அவர்கள் ஆதாயமுள்ள பார்ட்னரை நம்புகின்றனர்.

. அவரோ தாயாரை நம்புகிறார்.

. அன்னை நம்பிக்கையுள்ள தாயாரை பார்ட்னர் நம்புவதால், அவரைக் குடும்பம் நம்புவதால், தாயாருக்கு நிலையாகச் செயல்பட முடிகிறது. அன்னை செயல்படும் விதம் இது. குடும்பம் அன்னையை ஏற்கவேண்டும். அல்லது தாயாரை ஏற்கவேண்டும். அவர்கள் பார்ட்னர்மூலம் தாயாரை ஏற்கின்றனர். இது இரண்டாம் பட்சமான ஆதரவு.

. சில்லறை என்றால் என்ன?

. விஷயம், தோற்றம் என்பவை உண்டு.

தோற்றத்தைவிட விஷயம் முக்கியம்.

விஷயத்தை விட்டுத் தோற்றத்தைப் போற்றுவது சரியில்லை.

தோற்றத்தில் தம்மை இழப்பவர் சில்லறை.

கவர்னர் பார்ட்டிக்கு புது டிரஸ் அப்படிப்பட்டது.

. ஏன் மனிதன் சில்லறையாக இருக்கிறான்?

மனிதன் பிரம்மம்.

பிரம்மம் என்பது பரமாத்மாவும், பாதாளமும் இணைந்தது.

மனிதன் தன்னை பிரம்மமாக அறியவில்லை.

பரமாத்மாவாகவும் அறியவில்லை.

பாதாளத்திலுள்ள இருள் பிரபஞ்சம் முழுவதும் பரவி அடிமனமாக இருக்கிறது.

மனிதன் தன்னை அடிமனமாகவும் அறியவில்லை.

அடிமனம் தலைகீழே மாறி மேல்மனமாயிற்று.

மனிதன் தன்னை மேல்மனமாக அறிகிறான்.

அதனால் அவன் சில்லறையாகிறான்.

. சில்லறையான கணவர் நிதானமான பார்ட்னரைப் போற்றுகிறார்.தாயார் பெண் என்பதாலும், தமக்கு மனைவி என்பதாலும் கணவரால் பார்ட்னரிடத்தில் தாயாரை வைக்கமுடியவில்லை.பார்ட்னர் தோற்றம், விஷயம் தாயாரிடமுள்ளது. விஷயத்தை விட்டு தோற்றத்தைப் பாராட்டும் குடும்பம் சில்லறை. சில்லறை சில்லறையை விரும்பாது. சில்லறை நிதானத்தைப் போற்றும். கணவர் பார்ட்னரைப் போற்றுகிறார்.

மனைவி - சுயநலமியே சுயநலத்தைப் பாராட்டமாட்டான்;

கணவன் - வாழ்வில் இம்மூன்றும் - நிதானம், மெய், பரநலம் - அருளுக்குரியவை:

. வாழ்வு என்பதென்ன?

. ஏன் மெய், நிதானம், பரநலம் அருளுக்குரியவை?

. மனம் அறிவு, உறுதி எனப் பிரிக்க, அறிவு உறுதிமேல் செயல்பட்டுத் தன்னை இழந்து ஏற்படும் சக்தி வாழ்வு. வாழ்வை அறிவில்லாத ஆர்ப்பாட்டமான உறுதி எனலாம். அனைவருள்ளும் நாமுள்ளோம்,நம்முள் அனைவரும் உள்ளனர் என்பது அறிவு. அதுவே பரநலம். "என் வாயால் ரங்கன் மந்திரியாவான் எனக் கூறினால் அவன் மந்திரியாகி விடுவான் என்றால் அந்த பாவத்தை நான் செய்யமாட்டேன்" என்பது பெரியவனின் சுயநலம். தாயாரால் கம்பனி வந்தது எனில் தாயார் வணங்கும் அன்னையை தாமும் வணங்குவோம் என்று நினைக்காமல்,

"எங்களுக்காகத் தாயாரே பிரார்த்தனை செய்யவேண்டும்" என்பது சுயநலம்.

. தொழிலாளர் தலைவன் நம் கம்பனியில் நுழைந்துவிட்டான் என்பதால் படபடத்தவர் கணவர். பார்ட்னர் நிதானமாக இருந்தார்.

. நமக்குமேல் அன்னை இருக்கிறார் என்பது நிதானம்.

. நாமே முடிவு, நம்மால் முடியாதுஎனக் கருதுவது படபடப்பு, சில்லறை.

. நமக்கு மேலுள்ள அன்னையை மெய் எனக்கொள்ளாமல், நாமே மெய் எனக்கொள்வது பொய்.

அன்னை மெய்.

அன்னையை நம்புவது மெய்.

நாம் என்பது அன்னையின் தோற்றம்.

மெய்யான அன்னையை மறந்து பொய்யான தோற்றமான நம்மை

நம்புவது சில்லறை.

அன்னை மெய்.

அன்னையை நம்பும் தாயார் மெய்.

தாயாரை நம்பும் பார்ட்னர் மெய்.

பார்ட்னர் அந்தஸ்து தோற்றம்.

பார்ட்னர் மூலம் வரும் கம்பனி மெய்யன்று. அவருக்குத் தாயார் மீதுள்ள நம்பிக்கை மெய்.

பவர் பிராஜெக்ட் மெய்யன்று; பார்ட்னர் நாணயம் மெய்.

பவர் பிராஜெக்ட் தரும் கமிஷன் 150 கோடி பணம். அது பொய்.

. குடும்பம் தலைகீழேயிருக்கிறது.

நம்பவேண்டிய அன்னை, தாயார், பார்ட்னர், நாணயத்தை நம்பாமல், நம்பவேண்டாத பணம், பிராஜெக்ட், கம்பனியை நம்புகிறது.

குடும்பம் சில்லறை, சுயநலம், மட்டம்.

குடும்பம் திருவுருமாற வேண்டும்.

மாறும் ஆர்வம் மெய்.

அது இன்று குடும்பத்திற்கில்லை.

மனைவி - பொய் சொல்பவனும், பொய் சொல்பவனை நம்பமாட்டான்.

பொய் சொல்லாதவனை நம்புவான்:

. சுயநலமி சுயநலமியைப் பாராட்ட மாட்டான்.

பொய் சொல்பவன் பொய் சொல்பவனை நம்பமாட்டான்.

திறமையற்றவன் காரியம் ஆக வேண்டுமானால் திறமையற்றவனை நாடமாட்டான்.

அதனால்தான் எதிரானவை ஒன்றையொன்று நாடுகின்றன.

அதுவே முரண்பாடு உடன்பாடாவதாகும்.

. மோசடி செய்பவன் வியாபாரம் ஆரம்பித்தால் உண்மையான சிப்பந்திகளைத் தேடுகிறான்.தறுதலையான கணவன், பத்தினியான மனைவி வேண்டும் என நினைக்கிறான்.ஏராளமான அதிகாரம் செய்யும் அதிகாரி, கீழ்ப்படியும் சிப்பந்திகளை நாடுகிறார்.

. ஆண்மகனுக்குக் கற்பில்லை; பெண்ணிற்குக் கற்புண்டு என்பது உலக நியாயம்.அதிகாரத்தை ஏற்கவேண்டும் என்ற அநியாயம் ஊர் நியாயம், உலக நியாயம்.அதிகாரத்தை ஏற்பது அநியாயமன்று, நியாயம் என்பது ஆண்டவன் வாதம்.அதிகாரம் மாறி அன்பாக வேண்டும் என்பது பரிணாமத்தின் நியாயம்.ஏழை திருடினால் தூக்குத்தண்டனை, பணக்காரன் திருடினால் தண்டனையில்லை என்பது அந்த நாள் சட்டம். இந்த உலகம் இந்த அளவு முன்னேறுவது அந்தச் சட்டத்தால்தான்.

. இந்த இரண்டு சட்டங்களும் சரி என்பதிலுள்ள தத்துவம் என்ன? பிரம்மம் ஆதியில் எல்லா ஜீவராசிகளிலும் சமமாகப் பிறந்தது.ரூபம், குணம் மாறி பல பொருட்கள் உற்பத்தியாயின. பிரம்மத்தின் அநேக அம்சங்கள் அநேக ஜீவராசிகளாயின. எல்லா ஜீவராசிகளும், எல்லா அனுபவங்களும் பெறுவது பிரம்மம் சிருஷ்டியில் முழுமை பெறுவதாகும்.ஆயிரக்கணக்கான அனுபவங்களிருப்பதால், ஒவ்வொரு ஜீவனும் வெவ்வேறிடத்தில் ஆரம்பிக்கின்றன.

இரண்டு ஜீவன்கள் அன்பு, கோபம் என்பனவற்றை அனுபவிக்க வேண்டுமானால் ஒன்று அன்பிலும், அடுத்தது கோபத்திலும் ஆரம்பிக்கிறது.

ஒரு ஜீவன் அன்பைக் கொஞ்சமாக அனுபவித்து பல ஜன்மங்களில்

அன்பைப் பூரணமாக அனுபவிக்கிறது.

அடுத்தது அதேபோல் கோபத்தை அனுபவிக்கிறது.

அன்பை அனுபவிக்கும் ஜீவன் கோபத்தில் சிறியது, அன்பில் பெரியது.

கோபத்தை அனுபவிக்கும் ஜீவன் கோபத்தில் பெரியது, அன்பில் சிறியது.

ஆரம்பத்திலும், முடிவிலும், அனைத்து ஜீவன்களும் சமம். இடையில்

வேறுபட்டிருப்பது தோற்றம்.

அது சிருஷ்டிக்குரிய நிபந்தனை.

. அதனால் அவ்வுயர்ந்த ஆன்மீகச் சட்டப்படி பொய் தாழ்ந்ததில்லை,

மெய் உயர்ந்ததில்லை.

இந்த ஞானம் பெற்ற ஜீவன் முடிவான அனுபவத்தை முதலிலேயே பெறும்.

அதுவே instantaneous miraculousness எனப்படும்.

புறவாழ்வில் அது வேறுபடும். அகவாழ்வுக்கு மாறினால் யுகம் க்ஷணம் ஆகும்.

. நாம் எங்கிருக்கவேண்டும் என்பது நம் இஷ்டம்.

கதையில் தாயார் அகத்திலும், குடும்பம் புறத்திலும் உள்ளனர்.

யோகத்தில் தாயார் புறத்திற்குரியவர்.

இயற்கை மெதுவாக, நிதானமாக தனக்குரிய அனந்தத்தை அனுபவிக்கிறது.

ஆன்மா அத்தனையையும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

வளரும் ஆன்மா அத்தனையிலும் ஆன்மீகச் சட்டப்படி பங்கு கொள்கிறது.

வளரும் ஆன்மா psychic beingஎன்பது பூரணயோகத்திற்குரியது. நாம் இயற்கையா, ஆன்மாவா, வளரும் ஆன்மாவா என்பதை நிர்ணயிப்பது நாமேயாகும்.

மனைவி - ..... அனைவரும் நம்பவேண்டுமானால், எந்தப் பொய்யும்

சொல்லக்கூடாதல்லவா:

. திறமைக்கும், பண்பிற்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டு. எந்த அளவு திறமையுண்டோ, அந்த அளவு பலன் உண்டு. முழுமையில்லாத பண்புக்குப் பலனில்லை.

. பண்பு அனுபவத்தால் உற்பத்தியாகும், ஆத்மாவால் உற்பத்தியாகும்.இயல்பாக மனிதன் சுயநலமாகச் செயல்படுகிறான்.நடைமுறையில் மற்றவர்களுடன் பழகும்பொழுது சுயநலம் செல்லாது எனக் கண்டு, சுயநலத்தை விட ஆரம்பிப்பது பண்பு.ஆத்மாவால் செயல்படும்பொழுது இயல்பாகச் சுயநலமின்றிச் செயல்-படுவதால் ஆரம்பத்திலேயே பண்புடன் நடக்கிறான்.

. இக்குடும்பத்தில் உயர்ந்தவர் தாயார்.

அவர் ஆத்மாவால் செயல்படவில்லை.

அவருக்கு அன்னைமீது பக்தி, நம்பிக்கையுண்டு.

குடும்பம் முன்னுக்கு வரவேண்டும் என்பது அவர் கருத்து.

குடும்பம் அன்னையால் அதிகமாக முன்னுக்கு வரும் எனக் கண்டார்.

பிறப்பிலேயே பண்பானவர் தாயார்.

அவர் பண்பு அவருடைய குடும்பத்தால் வந்தது.

தாயாரின் பண்பு ஆத்மாவால் வந்ததில்லை; அவர் பிறந்த குடும்பம் பெற்ற பண்பு.

அந்தப் பண்பிற்கு அளவுண்டு.

ஆத்மாவால் பிறந்த பண்பிற்கு அளவில்லை.

. பொய் சொல்ல க்கூடாது எனப் பயில்பவன் பெரியவர்களிடம், நண்பர்களிடம், குடும்பத்தில் பொய் சொல்வதில்லை.

பயிற்சியால் பொய் சொல்லாமலிருக்க முயற்சி வேண்டும்.

சம்பந்தமில்லாதவரிடம் பேசும்பொழுது முயற்சி எடுப்பதில்லை.

இயல்பாகப் பொய் சொல்ல முடியாதவன் எவரிடமும் பொய் சொல்ல மாட்டான்.

அவனை எவரும் நம்புவர்.

சில இடங்களில் பொய் சொல்பவனைக் கவனித்து உலகம் ஏற்கும்.

அனைவரும் நம்மை ஏற்கவேண்டுமானால், நாம் அனைவரிடமும் மெய் சொல்லவேண்டும்.

. கணவர் குடும்பத்தலைவர் என்பதால், அவரை எவரும் மறுத்துப் பேசுவதில்லை.மறுத்துப் பேசாத இடத்தில் எதையும் சொல்லத் தோன்றும். மெய் மட்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அப்படிப் பேசுவதால், அவருக்கு மெய் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டது.

பெரியவன் ஒரு படி அதிகமாகச் செல்பவன்.

அது அவனிடம் கேலியாகிவிட்டது.

சின்னவனைக் கேலி செய்வான்.

வேறு எங்கும் கேலி செய்யமுடியாது.

கேலி என்பது பொய்யின் கடுமையான, கொடூரமான உருவம் என்பதை

ஓரளவு ஏற்கனவே எழுதியுள்ளேன். என்றாலும் கேலி என்பது சமுத்திரம்.

கேலி என்பதில் சுபாவம், சமூகம், சுறுசுறுப்பு, நடைமுறை, occupation,

பொழுதுபோக்கு என பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

. எந்த விஷயத்திலும், எல்லாவிஷயங்களும் சம்பந்தபட்டிருக்கும் என்பது சட்டம்.

. அதனால் கேலி சம்பந்தப்படாத விஷயமேயிருக்காது.

. கேலியை ஆராய்ச்சி செய்தால், ஆராய்ச்சியை, கோடிவரை கொண்டு போனதாக அர்த்தம்.

மனைவி - .... பொய் சொன்னால் தன்னம்பிக்கை போய்விடும்:

. மெய் என்பது உள்ளது. நாம் செய்தது. நாம் நல்லது என நம்பிச் செய்தது.

. ஏன் பொய் சொல்கிறோம்? நாம் செய்தது சரியில்லை என இல்லாததைச் சொல்கிறோம்.

. செய்தது சரியில்லை எனில், நாம் சரியில்லை எனப் பொருள். நாம் சரியில்லை எனில் நமக்கு நம்மீது நம்பிக்கையில்லை எனப் பொருள். அது தன்னம்பிக்கையை இழப்பதாகும்.

. கம்பனியில் யூனியன் தலைவரை வைத்தது சரியில்லை என்றவுடன் கணவருக்குப் பயம் வந்துவிட்டது. எல்லாம் போய்விட்டது போலாகிவிட்டது. பார்ட்னருக்கு அப்பயம் வரவில்லை. பெரிய கம்பனி அவனை விரும்பி அழைக்கிறது. ஏன்? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது. அவன் கெட்டிக்காரத் தொழிலாளி. அக்கம்பனியில் தொழிலாளர்கள் திறமைமிக்கவர்கள். திறமையுள்ள தொழிலாளி அதிகம் சம்பாதிப்பான். அவனுக்கு யூனியன் தேவைப்படாது. திறமையுள்ள இடத்தில் தில்லுமுல்லு செல்லாது. தில்லுமுல்லு இல்லையெனில் யூனியன் நிர்வாகத்திற்கு ஆதரவு.

. தன்னம்பிக்கை self-confidence.. அதுவே Self-confidence ஆவது ஆத்மா விழிப்பதாகும். Selfக்குப் பொய் உதவாது; self பொய்யில் வாழ்வது; self பொய்யில் வாழ்ந்தாலும் அதன் வித்து மெய். எல்லாப் பொய்யும் மெய்யால் உயிர் வாழ்கின்றன. பொய் சொன்னால் வளர்வது அகந்தை. மெய் சொன்னால் வளர்வது ஆத்மா.

ஆத்மாவின் ஆதரவின்றி தன்னம்பிக்கை எழாது.

. Verdict என்ற கதையில் பிராங்க் மெய்சொன்னதால் அவர் வேலை செய்த வக்கீல் ஆபீஸ் அவரைச் சிறையிலடைத்தது. பொய்யை ஆதாரமாகவுள்ள சமூகத்தில் மெய்க்கு ஆதரவில்லை, எதிர்ப்புண்டு. கதையின் போக்கு பிராங்கிற்கு ஆதரவாக மாறியபின் பிராங்க் பல சிறிய பொய்களைச் சொல்கிறார்.

1) தம் ரூம் குப்பையாக இருப்பதை மறைக்க கிளார்க் வெளியில் போயிருப்பதாக வாதிகளிடம் கூறுகிறார்.

2) நர்ஸுடைய மெயில் பாக்ஸை உடைத்துத் திறந்து டெலிபோன் நம்பரை எடுத்துக்கொள்கிறார்.

3) பிராங்க் இருக்கும்பொழுதே மிக் அங்கு பிராங்க் இல்லை என்கிறார்.

4) நியூயார்க் நர்ஸிடம் தாம் ஒரு பத்திரிகை ஆபீஸில் வேலை செய்வதாகக் கூறுகிறார்.

5) ஆஸ்பத்திரி நர்ஸிடம் தாம் நியூயார்க் நர்ஸோடு பேசியதாகக் கூறுகிறார்.

. இத்தனைப் பொய்களையும் மீறி அவர் கேஸ் ஜெயிக்கிறது.

. பொய் சொன்னாலும் ஜெயிக்கும் என்று பொருளா, பொய் சொன்னதால் ஜெயித்தது என்று அர்த்தமா, பொய் சொல்வதற்கும், ஜெயிப்பதற்கும் தொடர்பு இல்லை எனப் பொருளா?

. பொய்சொல்வதை எப்பொழுதும் ஏற்கமுடியாது.

. அவருடைய கேஸின் மெய்க்குட்பட்ட பொய் அவரை அப்பொழுது பாதிக்காது. ஆனால், நிச்சயமாகப் பிறகு பாதிக்கும்.

. பொய்யானாலும், வலுவான மெய்க்குட்பட்டதானால் மெய்யை அழிக்க முடியாது.

கணவர் - விரயத்தைப் பெருமையாக நினைப்பவர், பெரிய இடத்தில்

பழகினால் விரயம் தவறு என அறிவார்:

. பணம் அதிகமாக உள்ள இடத்தில் பலபொருள்கள் ஏராளமாக விரயமாவதை அங்குப் பழகுபவர்கள் கண்டு, விரயம் செல்வத்திற்கு அடையாளம் எனப் புரிந்துகொள்கின்றனர். அது உண்மையன்று.

. அதே சமயத்தில் பெரிய இடங்களில் விரயம் ஏராளமான இடங்களில் முயன்று தவிர்ப்பதை அவர்கள் காண்பதில்லை.

. விரயத்தின் வகைகள் பல:

1) நிர்வாகம் குறைவாக இருப்பதால் ஏற்படும் விரயம்.

2) தொழில் நிர்ப்பந்தத்தால் ஏற்படும் தவிர்க்கமுடியாத விரயம்.

3) கவனக் குறைவு, அலட்சியத்தால் ஏற்படும் விரயம்.

4) பெருமைக்காகச் செய்யும் விரயம்.

. நான்காம் வகை விரயம் வேகமாக ஸ்தாபனத்தை அழிக்கும்.

. மூன்றாம் வகை விரயம் ஸ்தாபனத்தை நிதானமாக அழிக்கும், வளர்வதைத் தடுக்கும்.

. இரண்டாம் வகை விரயம் ஸ்தாபனத்தை அழிக்காது. வளரவும் உதவும்.

. முதல் வகை விரயம் இலாபத்தை அழிக்கும். எந்தநேரமும் அதை மீண்டும் பெறலாம்.

. பொதுவாக விரயம் என்பதில் இந்த 4 அம்சங்களும் கலந்து இருக்கும்.

. புரிந்துகொள்பவர் பாகுபாடற்றவரானால், ஒன்றை மற்றதாகப் புரிந்துகொண்டு அதை இலட்சியமாக்கிப் "பலனை"ப் பெறுவர். அது அறிவுக்குப் பொருந்தாது.

. சுயநலத்திற்கும், விரயத்திற்கும் தொடர்புண்டு.

. சுயநலமி விரயத்தை அனுமதித்தாலும், பிறருக்கு அது பயன்படக் கூடாது என நினைப்பான்.

. அவனுக்கு அதிகப்பணம் சேரும். அப்பணம் அவன் சுயநலத்தை வளர்க்கும்.

. ஸ்தாபனத்தில் தவிர்க்கமுடியாத விரயத்தைக் காண்பவர்,

"இப்படியெல்லாம் வீணாகிறது. நம்மை அனுபவிக்க விடமாட்டார்கள்" எனப் பொருமுவார்கள்.

. தவிர்க்கமுடியாத விரயமும் பலவகைகளாக இருக்கும்.

.ஸ்தாபனத்திற்குத் தவிர்க்கமுடியாதது, காண்பவருக்கு விரயமாகத் தெரியுமே தவிர, தவிர்க்கமுடியாத விரயமாகப் புரியாது.

. ஸ்தாபனத்தின் நோக்கில் காணாமல் தங்கள் சுயநலப் பார்வைக்கு அப்படித் தெரியும்.

. சுயநலமான முதலாளியை சுயநலமான பிறர் அறியும் பாணியிது.

அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் தண்ணீர்ப்பஞ்சம் போகுமே:

. ஒரு பக்கம் விரயம் செய்துகொண்டு அடுத்தப் பக்கம் பிரார்த்தனை செய்தால் பலிக்குமா? அப்படிப் பிரார்த்தனை செய்யவே முடியாது.

. பொதுவாக நாம் பிரார்த்தனை என்றால், எந்தப் பிரார்த்தனையும் பலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

. பிரார்த்தனைக்குரிய முறை என்று ஒன்றில்லையா?

. ஏதாவது ஒரு பொருளை விரயம் செய்தாலும், அடுத்த பொருளுக்காக செய்யும் பிரார்த்தனை பலிக்காது.ஏனெனில் விரயமும், பிரார்த்தனையும் எதிரிகள். தண்ணீரையே விரயம் செய்தால், எப்படிப் பிரார்த்தனை பலிக்கும்?

. கணவர் மேற் சொன்னது போல் பேசுவது, எதுவும் புரியாதவர் பேச்சாகும்.

. இது வாழ்க்கைக்குரிய சட்டமாயிற்றே. வாழ்க்கையில் பிரச்சினை இல்லாத சௌகரியம் என்றுண்டா? பெய்யும் மழை இரவில் பெய்யக் கூடாதா என்பவருண்டு. நான் வெளியில் போகும் பொழுது மழை பெய்யக் கூடாது என்பவரும் உண்டு. மழை நம் சௌகரியத்திற்குப் பெய்ய வேண்டும்என நினைப்பது பொருந்துமா?

. வலிக்காமல் பிரசவமாகவேண்டும் என எதிர்பார்க்க முடியுமா?

. போர்க்களத்தில் உயிர்ச்சேதம் கூடாது என நினைப்பது பொருந்துமா?

. குழந்தை அழாமல் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுமா?

. அறிவுக்குப் பொருந்தாததைக் கேட்கக்கூடாது.

. இப்படிப் பிரார்த்திப்பவர் பிரார்த்தனை என்றால் என்ன என்று அன்னை

எழுதியவற்றைப் படிக்கவேண்டும்.

. நினைவு - அன்னை நினைவு - வருவதில்லை.

. நினைவு வந்தால் இதுபோன்ற பிரார்த்தனை தோன்றாது.

. நினைவு என்றால் என்ன?

. நினைவு என்பது அன்னை நினைவாகும்.

. நாம் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

. அன்னை நினைவு நிலைத்ததும், நம் நினைவு விலகும்.

. அன்னை நினைவுக்கு மழை தானே பெய்யும்.

. பெய்யும் மழையை வரவேற்கும் மனம் வேண்டும்.

. நினைவுள்ள மனத்திற்கு வரவேற்பு முடியும்.

. வரவேற்கும் பொழுது குறை தெரியாது.

. கூட்டத்திற்குத் தலைவர் இரவு 10 மணிக்கு வருவது தாமதமாகத்

தெரியாது. தலைவர் வந்து விட்டது தான் தெரியும்.

. குறை காணமுடியாத மனம் நிறைவுக்குரியது.

. காரியம் முடியவேண்டும் என்ற இடத்தில் குறை நமக்குத் தெரிவது இல்லை.

. குறை தெரியுமிடத்தில் காரியம் முடியாது.

. மழை பெய்யும் பொழுது குடைபிடிப்பதே அருளுக்குத் தடை என்கிறார் அன்னை.

. அருளை அன்னை அழைக்கப் பெரும்பாடுபடுவதாகக் கூறுகிறார்.

. நாம் மழைக்கு நிபந்தனை விதிக்கமுடியுமா?

மனைவி - நமக்கு நம்பிக்கைவேண்டும். உள்ள நம்பிக்கை வளர வேண்டும் என்பது நல்ல பிரார்த்தனை:

. நம்பிக்கை மலை போன்றது. மலையை நகர்த்தகூடியது.

. நமக்கு அது போன்ற நம்பிக்கை இல்லை. நமக்கு நம்பிக்கை மனிதர்கள் மேலுண்டு, பணத்தின் மீதுண்டு. ஹாலந்திலிருந்து மாஸ்கோவிற்குப் போனவர் கோர்பஷாவைப் பார்க்கப் போகவேண்டிய நேரம், தாயார் தத்துக்குத்தலாக இருப்பதாக வந்த தகவலை தட்டுத்தடுமாறி நண்பர்கள் கூறியதை அன்பர் புரிந்துகொண்டு, அடுத்த விமானத்தில் புறப்பட்டு வந்தார். இடையில் கோர்பஷாவை சந்தித்தார். மனம் ஒரு நிலையிலில்லை. அதற்குள் தாயாரை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஆக்ஸிஜன் தருகிறார்கள். இனி பிழைக்காது என்பதால் டாக்டர்கள் வர மறுத்தனர். 5 நாட்களாயிற்று. கோமாவிலிருந்த தாயாருடன் மானஸீகமாகப் பேசினார். பிழைத்து எழுந்து ஓராண்டு உயிரோடு இருந்தார். அது நம்பிக்கை.

. அந்த நம்பிக்கை ஆழத்தில் நம்முள் இருப்பதால், நாம் உயிர் வாழ்கிறோம்.

. அது மேலெழுந்த நிலையில் வந்து செயல்படுதல் அரிது.

. ஆபத்தான நேரத்தில் சிலருக்கு வரும். அந்த நேரமும் அனைவருக்கும் வாராது.

. அந்நம்பிக்கை மேலேவர ஆபத்து வருவதாகத் தத்துவம்.

. ஆபத்தில் எழும் நம்பிக்கை அனுதினமும் எழுவது சாதனை, யோகம்.

. எவ்வளவு சிறு விஷயத்தில் நம்பிக்கை எழுகிறதோ, அவ்வளவு நம்பிக்கை உயர்ந்தது.

. ஆபத்து வந்து நம்பிக்கை எழுவதற்குப் பதிலாக, பிரார்த்தனையால் நம்பிக்கை உயர்வது பக்தி.

. நம்மால் முடியாத நேரம் நம்பிக்கை, முடிந்த நேரம் அன்னை நினைவு வாராது. நம்பிக்கை எழுந்து செயல்படாது.

. இளவயதில் உடல் துள்ளும். வயதானால் எடுத்த அடியை மீண்டும் தரையில் வைக்கமுடியுமாஎன ஐயம் எழும். இளவயதில் எழாத ஐயம் அது. ஐயம் எழாததுடன் காடு, மேடு, முள் எனப் பாராமல் ஓடும் வயது இளமை. அப்படி ஓடினாலும், எந்தமுள்ளும் அவன் காலில் குத்துவது இல்லை. நமக்கில்லாத நம்பிக்கை நம்உடலுக்கிருப்பதால் எந்த முள்ளும் குத்துவதில்லை.

. இது unconscious faith, கண்மூடியான மூடநம்பிக்கை.

. இது விலங்குகட்குண்டு. விலங்கிற்கு கால் காட்டிலுள்ள முள் குத்துவதில்லை.

. பிரார்த்தனையால் வரும் நம்பிக்கை conscious faith, அறிவோடு உள்ள நம்பிக்கை.

. கண்மூடியான நம்பிக்கை நம்மை விலங்காக்கும்.

. அறிவுள்ள நம்பிக்கை நம்மை தெய்வமாக்கும்.

. நம்பிக்கை வளரப் பிரார்த்தனையைப் பயன்படுத்துவது பிரார்த்தனையை நல்ல முறையில் பயன்படுத்துவதாகும்.கல் சுவரெழுப்பி - மண்சுவரை இடித்துவிட்டு - கூரை போட்டு "கல்வீடு"கட்ட கனவு கண்டவர் கனவு கனவாக இருந்தபொழுது, அன்னை வந்ததால் மச்சுவீடு கட்டினார். மனம் "கல்வீட்டை" விட்டு மச்சு வீட்டிற்கு மாறுவது மேற்சொன்னதைப் போன்ற உயர்ந்த பிரார்த்தனை.கனவு காண முடியாத மச்சுவீட்டை நனவில் நடத்திக் கொடுக்கும் தெய்வம் வீட்டில் பல ஆண்டுகளிருந்தபொழுதும், அதைத் திரும்பிப் பார்க்கமுடியாத மனம் உயர்ந்து, அதனுள் மச்சுவீட்டை இருத்தி சாதித்தது உயர்ந்த பிரார்த்தனைகளில் சிறந்தது.இது மனிதனால் முடியாது.

. செய்த சேவை இந்த அன்பருக்கு அஸ்திவாரமாக அமைந்ததால் கனவு, நனவாயிற்று.

. நம்பிக்கை உயரப் பிரார்த்திப்பவரைக் காண்பதரிது.

. பிரார்த்தனை பலிப்பது அரிதினும் அரிது.

. அருள் தாயாருக்கு இக்கதையில் அதையும் கேளாமல் தருகிறது.

கணவர் - மனதால் போற்றினால் போதாதா?

மனைவி - செயலுக்கு எண்ணத்தைவிட சக்தியுண்டு:

. பெரியவர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் ரோட்டில் நடைபாதை மீது நடந்து கொண்டிருந்தபொழுது, எதிரேயுள்ள நடைபாதையில் போய்க் கொண்டிருந்த தொழிலதிபர் விரைவாக ஓடிவந்து இளைஞரை அவர் பாக்டரி துவக்கவிழாவுக்கு அழைத்தார். அவர் போனபின் இளைஞர் பெரியவரை, "ஏன் இப்படி இத்தொழிலதிபர் ரோட்டில் அசம்பாவிதமாக ஓடிவருகிறார்" எனக் கேட்டார். "இத்தொழிலதிபருக்கு நீ உதவி செய்திருக்கிறாய். அவர் விழாவிற்கு உன்னை அழைக்கவில்லை.அதனால், அவர் உன்னை அழைக்கவேண்டும் என நான் ஆழ்ந்து நினைத்தேன். என் எண்ணம் செயல்பட்டு அவர் ஓடிவந்தார்" எனப் பெரியவர் விளக்கம் தந்தார். எண்ணத்திற்கு சக்தியுண்டு.

. உணர்ச்சி எண்ணத்தை விட சக்தி வாய்ந்தது.

. செயல் உணர்ச்சியை விடத் திறனுடையது.

. ஆன்மீக எண்ணம் செயலையும் ஆட்கொள்ளவல்லது.

. ஆன்மீகச் செயல் அனைத்திலும் சக்தி வாய்ந்தது.

. உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு யோகி தன்சக்தியை உலகில் எங்கும் அனுப்பலாம் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

. சும்மா உட்கார்ந்து நினைப்பது வெறும் எண்ணம்.

. அறிவோடு திட்டமிட்ட எண்ணம் திறனுடையது.

. ஆத்திரம் எழும்பொழுது, பாசம் வெளிப்படும் பொழுது, அதனால் உந்தப்பட்டு அதே எண்ணம் தீவிரமாகச் செயல்படும்.

. உடல் தானே செயல்படுவது அதை விடப் பலமானது.

. Ascent, descent, மேலே செல்வது, கீழே வருவது என இரண்டு பாதைகள் உள்ளன.

. மேலே செல்லும் பாதையில் மனிதன் உடல் -> உயிர் -> மனம் -> ஆன்மா என்று வளர்ந்துவிட்டான். இனிக் கீழே வரவேண்டும்.

ஆன்மாவை எட்டியபின் ஆன்மா மனத்தில் எழுவது -> உயிரில்

வெளிப்படுவது -> உடல்வெளிப்படுவது என்பது கீழே வரும் பாதை.

எனவே செயல் முதற்கட்டத்திலும், முடிவான கட்டத்திலும் உள்ளது.

. முதற்கட்டம் எளியது.

. முடிவான கட்டம் சிறப்பான சிகரம்.

. செயலுக்கு எண்ணத்தைவிட சக்தியுண்டு என்பது முடிவான கட்டம்.

. மனம் ascentஇல் கீழிருந்து மேலே போவதில் உடலை விடத்

திறமானது.

. கீழே வருவதில் உடல் மனத்தை விடத் திறமையுள்ளது.

. இக்கதையில் எச்செயல், எவரால், எந்த நிலையில் செயல்படுகிறது என அறிய முயல்வது வாழ்வில் யோகத்திற்குரிய ஆராய்ச்சி.

. "என் வாயால் ரங்கன் "மந்திரியாகிவிடுவான்" என்று கூறினால், அது பலித்துவிடும் என்றால், நான் அதைக் கூறமாட்டேன்" என்று பெரியவன் சொல்வது அவன் வீட்டுச்சூழல் அவனுடைய சொல்லிலே பலித்துவிடும் என்று கூறுகிறது. அந்நிலையில் மனதால் போற்றினால் போதும், நடந்துவிடும். சாதாரணமாக அது போதாது.

கணவர் - பிள்ளைகளைச் செய்யச் சொல்வோம்:

. ஒரு வேலை என்றால் நம்மைத் தவிர யார் செய்யலாம் எனத் தோன்றும்.ஏன் அன்னை நமக்காக இதைச் செய்யக்கூடாது என நினைப்போம்;பிரார்த்திப்போம்.

நமக்குப்பதிலாக பிள்ளைகள் செய்யக்கூடாதா எனக் கருதுவோம்.செய்பவருக்குப் பலன் போகும். ஒருவர் செய்வதால் பலன் அடுத்தவருக்கு வாராது.

. இந்தியாவை எப்படி முன்னேற்றலாம் என்பதற்குப் பதிலாக அமெரிக்கா செய்யுமா, .நா. செய்யுமா, சர்க்கார் செய்யுமா எனப் பலரும் பேசுவதை நாம் கேட்கிறோம். இந்தியா முன்னேற வேண்டுமானால், இந்திய மக்கள் நாட்டை முன்னேற்ற வேண்டும்.

. கணவர் மனநிலை எல்லாவிஷயங்களிலும் அப்படிப்பட்டதே.

. கம்பனியைப் பார்ட்னர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

. அன்னையை மனைவி கவனித்துக் கொள்ள வேண்டும்.

. அதிகாரம் தமக்கு, பொறுப்பு மனைவிக்கு என்பது அவர் நிலை.

. மனம் அப்படியிருந்தால் தண்ணீர்ப்பஞ்சம் போக பிள்ளைகள் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்று நினைக்-கிறார்.

. வாழ்க்கையில் பிழைக்கமுடியாதவர் ஒருவர். பெரியவீட்டு மாப்பிள்ளை. அவருக்கு உதவி செய்ய எவர் முன்வந்தாலும், எந்தத் தொழிலை அவருக்குச் சிபாரிசு செய்தாலும் அவர், "ஒரு ஆள் போட்டுப் பார்க்கலாம்" என்பார். அதுபோன்ற "ஆள்" வேலை கிடைக்காமல் நடுத்தெருவிலிருக்கும்பொழுது பேச்சு இப்படி வருகிறது. அவருக்கும் ஒரு தொழில் வைத்துக்கொடுத்து பெரிய வருமானம் சம்பாதித்தபின்,"ஆள்" போட்டுப்பார்க்கலாம் என்ற மனப்பான்மை அத்தொழிலையும் அழித்துவிட்டது.எவர் செய்கிறாரோ, பலன் அவருக்குப் போகும் என்பதுடன் பிறர் செய்ய வேண்டும் என நினைப்பவர் திட்டத்திலிருந்து விலக்கப்படுவார் என்பது அனுபவம், சட்டம்.

. பூஜையைப் பெரிதாகக் கருதும் குடும்பம் அடுத்த தலைமுறையில் பிள்ளைகளைப் பூஜை செய்யச் சொல்வார்கள். அதற்கு அடுத்த தலைமுறையில் பூஜையில்லாமல் போகும்.

உடலால் செய்யும் வேலையைப் பிறரிடம் கொடுக்க முடியும்.

மனத்தால் செய்யும் வேலையைப் பிறரிடம் தர விரும்புவது பொருந்துமா?

ஒருவருக்காக அடுத்தவர் படிக்க முடியுமா?

ஒருவருக்காக அடுத்தவர் மருந்துண்ண முடியுமா?

ஒருவர் உணர்ச்சியை அடுத்தவர் அறிய முடியுமா?

ஏன் மனம் நமக்காகப் பிறர் செய்ய வேண்டும், நம் வேலையைப் பிறர்

செய்ய வேண்டும் என நினைக்கிறது?

இது என்ன பொருத்தமற்ற எண்ணம்?

அந்த ஆராய்ச்சி பெரிய ஆராய்ச்சி.

மனைவி - எண்ணம் நம்முடையதன்று;

கணவர் - புதியதாக இருக்கிறதே:

. எண்ணம் நம்முடையதன்று என்பது ஆன்மீக உண்மை. ஆன்மீகச் சம்பந்தமில்லாதவர்க்கு அது புதிய கருத்து.

. காற்று உலவுவதுபோல் எண்ணம் ஆகாயத்தில் உலவுகிறது. நம் மனத்திலும் நுழைந்து வெளிவருகிறது. எண்ணம் நமக்குரியதன்று.

. எண்ணம் நமக்குச் சொந்தமானதில்லை.

. உணர்ச்சி நமக்குச் சொந்தமானதில்லை.

. உடலே நம்முடையதன்று.

. உலகில் உள்ளது ஒரு மனம்.

உலகில் உள்ளது ஓருடல்.

உலகில் உள்ளது ஓர் உயிர்.

. மனம் என்பது ஒரு லோகம்.

அது பரந்த வெளி.

நம் மனம் அதனுள் உள்ள ஒரு பகுதி.

. புவியில் காணி, கொல்லை, நிலம் என்றில்லை.

. பூமாதேவியின் அகண்ட மார்பு பூமி.

. நாம் அங்கு ஒரு எல்லையை ஏற்படுத்தி என் மனை, என் நிலம் எனக் கூறுவது போல் மனம், உயிர், உடல், ஆத்மாஎன உலகில் உள்ளது.நாம் அதனுள் ஒரு புள்ளி. அந்தப் புள்ளியை நாம், நம் எண்ணம், நம் மனம் எனக் கூறுவது மனித இயல்பு.

. கடலை சாம்ராஜ்யங்கள் அப்படிப் பங்குபோட்டுக் கொண்டன.கடல் ஆண்டவன் ஏற்படுத்தியது.நாம் கடலைப் பகுதிகளாகப் பிரித்துப் பெயரிட்டிருக்கிறோம்.

. மனமே உலகில் ஒன்றென்றால், எண்ணம் நம்முடையது எனக் கூற முடியுமா?

. ஆற்றில் நீர் ஓடுகிறது.

. நம்மூர் வழியாக ஓடுகிறது.

. நம் ஆற்றில் எனப் பேசுகிறோம்.

. இது மரபு.

. ஆறு அனைவரும் புரிந்துகொள்வது.

. எண்ணம் எவரும் புரிந்துகொள்ளாதது.

. ஆன்மீகவாதிகள் மட்டும் அறிவது எண்ணத்தின் விவரம்.

. கணவர் அப்பாவி, எதையும் அறியாதவர்.

. இது தத்துவ விசாரம்.

. அவருக்கு இது புதிய எண்ணம்.

. அவர் பிரார்த்தனையையே பிள்ளைகளிடம் ஒப்படைக்க முயல்பவர்.

மனைவி - நம்மை எண்ணத்திலிருந்து பிரிப்பது கஷ்டம்:

. பிரிக்கும் கருவி மனம்.

. ஓர் எண்ணத்தை மற்ற எண்ணங்களினின்று பிரித்தால்தான் புரியும்.

. பல விஷயங்களை ஒன்றாகப் பேசினால், "போட்டு குழப்பாதே. ஒரு விஷயமாகப் பேசு. தெளிவாக இருக்கும்" என்கிறோம்.

. எண்ணத்தைச் சிந்திக்க அதை மற்ற எண்ணங்களினின்று பிரிக்க வேண்டும். மனம் எண்ணத்தை விஷயத்திலிருந்து பிரித்துத் தனியே சிந்தனை செய்வதை (intellectuality) அறிவுக்குரிய ஆராய்ச்சி என்கிறோம். கம்பனிக் கணக்கு என்பது கம்பனியை நாம் புரிந்துகொள்ள உதவுவது. ஆடிட்டர் கம்பனியை தனியே எடுத்து தூரவைத்துவிட்டு கணக்கைத் தனியே எடுத்து ஆராய்ச்சி செய்து வரி எவ்வளவு கட்டவேண்டும் என நிர்ணயிப்பார்.

. நாமே எண்ணம். நாமும் நம் எண்ணமும் ஒன்றே. நம் எண்ணம் நமக்குப் புரிய நாம் நம்மிலிருந்து எண்ணத்தைப் பிரித்துப்பார்க்க வேண்டும்.நம்மில் பகுதியான எண்ணத்தை நம்மிலிருந்து பிரிக்கமுடியாது. அதைச் செய்வது மனம்.

. அதனால் மனம் சிந்தனைக்குரிய சிறப்பான கருவி.

. அதே காரணத்தால் முழுமையை - சத்தியம், பிரம்மம் - அறிய மனம் தடை.

. நம் எண்ணத்திலிருந்து நாம் பிரிவது சிந்தனையைச் சிறப்பாக்கும்.

. நம் மனத்திலிருந்து நாம் பிரிவது யோகத்தைப் பூர்த்திசெய்யும்.

. பிரிவது ஆராய்ச்சிக்கும், வாழ்வுக்கும் அவசியம்.

. சேர்வது யோகத்திற்கும், பரிணாமத்திற்கும், பிரம்ம ஜனனத்திற்கும் அவசியம்.

. பிரிவதையும், சேர்வதையும் ஒரே சமயத்தில் ஏற்பது பூரணயோகம்.

. குடும்பம் என்றால் இரகஸ்யமில்லை.

. குடும்பத்திலும் முக்கியமானவரிடமிருந்து மறைக்க வேண்டிய இரகஸ்யம் உண்டு. அதை மறைக்கும் திறனற்றவர் குடும்பத்தைப் பெரிய நேரத்தில் காப்பாற்றப் பயன்படமாட்டார்.

. எதையும் குடும்பத்திலிருந்து மறைக்காதவர், முக்கிய விஷயத்தை குறிப்பிட்டவரிடமிருந்தோ, குடும்பத்திலிருந்தோ மறைக்கும் திறன் உள்ளவரானால் அவர் குடும்பத்திற்குச் சேவை செய்யமுடியும்.குடும்பத்தைக் காப்பாற்றமுடியும்.

. இது முடியாது என்பவருக்குப் பூரணமில்லை.

. எதுவும் முடியும் என்பவருக்குப் பூரணமுண்டு.

மனைவி - எண்ணத்திற்குப் பின்னால் உணர்வும், செயலும் உள்ளன:

. அறிவுக்குரியது எண்ணம்.

பிராணனுக்குரியது உணர்வு.

உடலுக்குரியது செயல். .

அறிவு மட்டும் ஏற்பட்டால் போதாது, அது ஏற்றாலும் போதாது. அறிவு ஏற்பதை உணர்வும், உணர்வு மகிழ்ந்து ஏற்பதை உடல் உவந்து ஏற்பதும் காரியம் பூர்த்தியாக அவசியம்.

. ஏற்றால் போதாது, அக்கறை வேண்டும். அதுவும் போதாது, திறமையுள்ள உழைப்பு வேண்டும் என்று அதையே வேறு வகையாகக் கூறலாம்.பையனிடம் படிக்கச் சொன்னால் கசங்குகிறான். விளையாடத் தயாராக இருக்கிறான். படிக்காவிட்டால், படித்து 95க்கு மேற்பட்ட மார்க் வாங்காவிட்டால் எதிர்காலமில்லை என நாம் அவனுக்கு விளக்கிச் சொல்கிறோம். "சரி" என்கிறான். அது அறிவு ஏற்பது. TV பார்ப்பதில் உள்ள ஆர்வம், வாரப்பத்திரிகை படிப்பதில் உள்ள ஆர்வம் படிப்பில் வருமா?அது உணர்வு ஏற்பது. கிரிக்கெட் ஆடும்பொழுது வெய்யில் தெரியாது,உடல் வலிக்காது, உடலே ஆட ஆர்வம் கொள்ளும். படிக்க, எழுத,படம் (map) போட உடல் அப்படி ஆர்வம் கொள்வது செயலும் ஏற்பதாகும்.

. மேற்சொல்லியது (psychological) மனத்தைப்பொருத்த உண்மை.

. பூரணயோகத்தில் மேலும் ஓர் உண்மையுண்டு.

. மனத்திலிருந்து செயல் உணர்வுக்கும், உடலுக்கும் இறங்கிப் போகும்

பொழுது அதே சமயம் அச்செயல் மௌனம், ஜோதி, ஞானம் ஆகியவற்றை நாடி உயர்ந்து எழுகிறது.

மனத்திலிருந்து உணர்வுக்குச் செயல் நகரும்பொழுது - உணர்வு செயலை ஏற்கும்பொழுது - மனத்திருந்து செயல் மௌனத்திற்குப் போகிறது. நினைத்துச் செய்த காரியம், நினைவு எழுமுன் பூர்த்தியாகிறது. அதனால் அதிகமாகப் பூர்த்தியாகிறது. நினைவு செய்ததை மௌனம் செய்கிறது.

. சத்தியஜீவன் பிறக்க அவன் மனத்தில் சைத்தியப்புருஷனாக அவதரித்து,ஒரே சமயத்தில் கீழே உணர்ச்சி, உடல் என சைத்தியப்புருஷன் வளரும் பொழுது, மேலே சைத்தியப்புருஷன் மௌனம், ஜோதி, ஞானம் என்ற நிலைகளில் ஜனித்து சத்தியஜீவியத்தை எட்டுகிறான்.

. எண்ணத்திற்குப் பின்னாலுள்ள உணர்வும், செயலும், வெறும் உணர்வு, செயலன்று. அவை உணர்வின் சைத்தியப்புருஷன்,செயலின் சைத்தியப்புருஷன் என்பதால் அவை பலம் மிகுந்தவை.

. மௌனத்திலுள்ள எண்ணம் silent will எனப்படும்.

. ஜோதியில் உள்ள எண்ணம் கண்முன் காட்சியாக வரும். வந்தால்,பருத்தி புடவையாகக் காய்த்ததுபோல் பலிக்கும். .

அதற்கடுத்த நிலை ஞானம் (intuition).

ஞானத்தின் எண்ணம் நினைத்தமாத்திரம் செயல் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும்.

கணவர் - அவற்றை எப்படிப் பிரிப்பது?

மனைவி - அப்படி அவற்றைப் பிரித்துச் சமர்ப்பணம் செய்தால் அந்த

நேரம் மழை பெய்யும்:

. மௌனம் எண்ணத்தை மனத்திலிருந்து பிரிக்கும்.

. விரக்தி அதிகமான நேரம், நாம் கடமைகளை மறப்பதில்லை. அவற்றைத் தொடர்ந்து செய்கிறோம். அதை நாம் செய்யவில்லை, யாரோ செய்கிறார்கள் எனத் தோன்றும். விரக்தி நம்மைச் செயலிலிருந்து பிரித்துவிடுகிறது. (Hypnotic sleep) மந்திரத்தால் மயக்கம் போட்டவன் பேசுகிறான். அது அவன் பேசுவதில்லை. அடுத்தவர் எண்ணத்தை அவன் பேச்சாகப் பேசுகிறான். கவலையில் தோய்ந்த நேரம், சந்தோஷத்தால் மலர்ந்த நேரம் நமக்கு எதுவும் புரியாது. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வோம். அது நாம் கூறும் பதிலில்லை. நம்மையறியாமல் எழும் பதில். அந்த நேரம் நாமும், நம் பேச்சும் பிரிந்துள்ளன.

. மௌனம் அதேபோல், எண்ணத்தை நம்மிடமிருந்து பிரித்துவிடும்.

. கவலை, சந்தோஷம், மந்திரம் பிரிப்பதுபோல் மௌனமும் எண்ணத்தை நம்மிலிருந்து பிரிக்கும்.

. அந்த நேரம் செய்யும் சமர்ப்பணம் மௌனத்தின் சமர்ப்பணம், பலமானது.தண்ணீர்ப்பஞ்சம் மனதிலிருப்பதால் மழை உடனே பெய்யும்.

. சமர்ப்பணம் உடனடியாகச் செயல்படும்.

. சமர்ப்பணம் செயல்படவில்லை என்றால் தடை இருக்கும்.

. தடைகளில் தலையான தடை, எண்ணம்.

. எண்ணம் விலகி மௌனம் குடிகொள்ளுமானால் பலன் உடனடியாக எழும்.

. எண்ணத்தைப் பிரித்ததைப்போல் உணர்வைப் பிரித்தால் சமர்ப்பணம் அதிக வலுப்பெறும்.

. செயலை நம்மிடமிருந்து பிரிப்பது - செயலுக்குரிய பழக்கத்தைப் பிரிப்பது

- உச்சகட்ட வலுவைச் சமர்ப்பணத்திற்குத் தரும்.

. எண்ணம் நம்முள் நுழையும்பொழுது நாம் சிந்திக்கிறோம். சிந்தனையால் நாம் உள்ளே வந்த எண்ணத்துடன் இணைந்துவிடுகிறோம்.

. சிந்தனையை நிறுத்தினால் எண்ணமும் நாமும் பிரிவோம்.

. சிந்தனையை நிறுத்துவது ஓடும் நதியைத் தடுத்து நிறுத்துவது போலாகும். அதற்கு அதிக சக்தி வேண்டும் என்பதால், பலனும் அதிகம் உண்டு.

சுமார் 3, 4 நாட்கள் கணவரும், மனைவியும் மழையை சமர்ப்பணம்,

பிரார்த்தனை, கவனத்தால் நினைத்தவுடன், பிள்ளைகள் அதையே

தாமாக எழுப்பி பின்பற்ற வேண்டும் எனப் பேசினர். பெருமழை தொடர்ந்து பெய்தது. அந்த ஆண்டு குறை நிறைவாயிற்று:

. இது ஒரு சோதனை, முடிவான முறையில்லை. சோதனையானாலும் பலன் முழுமையாக வந்தது.

. முடிவான முறை என்பது பிரச்சினைக்குரியவர் அனைவரும்,தீர்வுக்குரிய தடைகள் அனைத்தையும் களைந்து, தீர்வுக்குரிய எல்லா முறைகளையும் பின்பற்றுவது.

. இங்குப் பிரச்சினை நாட்டில் மழையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் விரயம், அலட்சியம் போன்ற எல்லாக் காரணங்களையும் களைந்து,பிரார்த்தனை, சமர்ப்பணம், கவனம் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு வழியில்லை.

. அதற்கடுத்தது தமிழ்நாட்டிலுள்ள எல்லா அன்பர்களும் தமிழ்நாட்டின் சார்பாக அதைச் செய்யவேண்டும். தாயார் தமிழ்நாட்டு அன்பர்கள் அனைவரையும் அப்படிக் கேட்க இயலாது. அப்படிக் கேட்டால் அவர்கள் செய்யப் போவதில்லை.

. அதற்கடுத்தது இக்குடும்பத்தில் அனைவரும் தண்ணீர் மட்டுமல்லாது,எல்லாப் பொருட்களிலும் இம்முறையைப் - விரயம் போன்றதை விலக்கி,சமர்ப்பணம் போன்றதை முழுமைப்படுத்தி - பின்பற்றவேண்டும். அதைக் குடும்பம் பேசினால் நல்லது. தாயாரே கேட்பது பலன் தாராது.

. நாட்டிற்குப் பதிலாக அன்பர்கள் (அனைவரும்) செய்வது பலிக்கும். ஏனெனில், அன்பர்கள் சூழல் அன்னைச் சூழல். அதனால், அவர்கள் தண்ணீரில் மட்டும் அம்முறையைப் பின்பற்றினால் போதும்.

. அன்பர்கட்குப் பதிலாக ஒரு குடும்பம் மட்டும் செய்யும் பொழுது,தண்ணீர்ப் பிரச்சினை தீர எல்லாப் பொருள்களிலும் - அரிசி, பருப்பு,துணி, பணம், மின்சாரம் - அக்கவனத்தை செலுத்தினால் அது பலிக்கும்.

. தாயார் மட்டுமே அதற்குத் தயாராக இருப்பதால் குடும்பத்தைக் கேட்காமல் மனதால் செய்ய ஆரம்பித்த பொழுது கணவர் நேரடியாகப் பங்குகொண்டார். பிள்ளைகள் தாமே அப்பிரச்சினையை எடுத்துப் பேசி ஏற்றுக்கொண்டதால் அது முதல் response சகுனம்; நல்ல சகுனம். இச்சிறு வேலைக்கு (token) நாட்டின் ஆண்டுக்குக் குறைவான தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்தது. ஒருவருடைய சிறப்பு உலகை உய்விக்கும் என்று இதைப் பகவான் கூறுகிறார்.

. குடும்பம் கம்பனி விஷயத்தில் தாயார் போலிருந்தால், தாயார் குடும்பத்தை விட்டு அன்னையை ஏற்றால் பிரார்த்தனை தேவைப்படாது.

. அனைவரும் அனைத்து விஷயங்களிலும் இம்முறையைக் கையாள வேண்டும்.

. அனைவரும் அன்னையை அனைத்து விஷயங்களிலும் அன்னைக்காக ஏற்கவேண்டும்.

. "அம்மா செய்யட்டும்" என்ற மனப்பான்மை மாறவேண்டும்.

. அலட்சியம், கேலி உதவாது.

. பலனைக் கருதாது அன்னையை நாடவேண்டும்.

. ஆதாய மனப்பான்மை கூடாது.

. போட்டியிடக் கூடாது.

. சுருக்கமாகச் சொன்னால், குடும்பம் பண்புள்ள குடும்பமாக வேண்டும்.

தொடரும்.....

****
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அளவுகடந்த தெய்வீகச் சந்தோஷத்தின் அபரிமிதமான சக்திகளை மனிதன் வெட்கத்திலும், மானத்திலும் புதைத்து வைத்திருக்கிறான். உடலுக்குரியது வெட்கம்; உணர்வுக்கு உரியது மானம்.

உடலுக்குரியது வெட்கம்.

உணர்வுக்குரியது மானம்.


 


 


 

 


 


 


 



book | by Dr. Radut