Skip to Content

05.அஜெண்டா

"Agenda"

In the subtle physical the living and dead are together.

சூட்சும லோகத்தில் இறந்தவரும், உயிரோடிருப்பவரும் ஒன்றாக வாழ்கின்றனர்.

. ஓரூரில் உள்ள ஆபீசர்கள் மாற்றலானால், அவர்கட்கு வேலை போவதில்லை. வேறு ஊரில் வேலை செய்கிறார்கள். சூட்சும வாழ்வில் மரணம் மாற்றலாகும். அது இடமாற்றம்.

. உலகில் ஒரு செயல் நடப்பதன் முன், அது சூட்சும உலகில் உருவம் பெறும். அது நடந்து முடிந்தபின், அச்செயல் சூட்சும உலகில் வந்து தங்கி வளரும்.

. ஒரு மனிதன் பிறப்பதன் முன்னும், மரணத்திற்குப் பின்னும் சூட்சும உலகில் வாசம் செய்கிறான். சூட்சும உலகில் மரணமில்லை. ஏனெனில், அங்குள்ளவர்க்கு உடலில்லை. மரணம் உடலுக்குத்தான், ஆத்மாவுக்கில்லை.

. நம் எண்ணங்கள் உலகில் சூட்சுமமாக உலவுகின்றன. நம் மனத்துள் நுழைகின்றன. நாம் மறந்த எண்ணம் அழிவதில்லை. சூட்சும உலகில் எண்ணத்திற்கு அழிவில்லை.

. உலகில் சிருஷ்டிக்கப்பட்ட எதற்கும் உலகம் உள்ளவரை அழிவில்லை. அதனால் மனிதனுடைய ஆத்மாவுக்கு அழிவில்லை.

. என்றும் உயிரோடிருப்பவரை நாம் இறந்தவர் என்கிறோம் என அன்னை கூறுகிறார்.

. பூமியின் நினைவு ஒரு லோகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்தவை அனைத்தும் அங்குப் பதிவில் காணப்படும்.

. மரணதேவதை, இருளின் தெய்வம் இறந்ததாக அன்னை கூறுகிறார். அவர் அவர்களைச் சூட்சுமத்திலும் அழித்துவிட்டார்.

.அப்படி அழிக்க அழிப்பவர் அழிபவனை விட உயர்ந்த நிலையிலிருக்க வேண்டும்.

. ஒருவரை மாற்றல் செய்தால் அழிவது posting. அழிவது job வேலையில்லை. Jobஐ அழிக்கவேண்டுமானால், அதை உற்பத்திசெய்தவர் அழிக்கலாம். மற்றவரால் அழிக்கமுடியாது.

. மேலைநாடுகளில் ஏழ்மை அழிந்துவிட்டது. ஆசியாவில் ஏழ்மை உயிருடன் இருக்கிறது. இங்கும் ஏழ்மை அழிந்தால் அது உலகைவிட்டுப் போகும். ஆனால், சூட்சும உலகில் உயிருடனிருக்கும். யார் மூலமாவது ஒரு நுனி தலைகாட்டும். சூட்சும உலகிலும் அது அழிந்தால், அதன் சுவட்டை நாம் எங்கும் காணமுடியாது.

. சமஸ்கிருதம், கிரீக், இலத்தீன் மொழிகள் அழிந்துவிட்டன. ஆனால், அவை சூட்சுமத்தில் உயிருடனிருக்கும். ஒரு கிரீக் பேராசிரியருடைய வேலைக்காரி ஜன்னியில் பக்கம் பக்கமாக அவர் படித்ததை கூறினாள். அவள் அவ்வறிவை சூட்சுமமாகப் பெற்றாள். சூட்சுமத்தில் அம்மொழி உயிரோடில்லை எனில் அவளால் அதை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்க முடியாது.

. உலகில் பொய் அழியவேண்டும் என ஸ்ரீ அரவிந்தர் கூறும்பொழுது பொய் திருவுரு மாறவேண்டும் என்கிறார். சூட்சுமத்திலும் அப்பொழுது பொய்க்கு உயிர் இருக்காது.

. இனி வரப்போவதை சூட்சுமத்தில் முதலில் உற்பத்தி செய்யவேண்டும். அன்னையின் சூழல் அப்படிப்பட்ட சூட்சுமச் சூழல். எனவே அன்பர் செய்யும் புதிய காரியங்கள் சூட்சுமமாக உயிர்பெற்று, உலகில் பவனிவரும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னை மீறி கரணங்கள் அவனை நாடுவதே ஆர்வம். சில சமயங்களில் வரும் நினைவு ஆர்வம் ஆகாது.

அணை கடந்த வெள்ளமே ஆர்வம்.


 


 



book | by Dr. Radut