07.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்
ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
N அசோகன்
161. பர்சனல் சௌகரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் வேலைக்கேற்ற மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள். மாறாக வேலையைவிட பர்சனல் சௌகரியங்களைப் பெரிதாக நினைக்கின்றவர்கள் வேலையை வெற்றிகரமாகச் செய்யமாட்டார்கள்.
162. கிரியேட்டிவ்ஆன வேலை செய்கின்றவர்களுக்குச் சுதந்திரம் மிகவும் அவசியம். கிரியேட்டிவ் ஆன வேலையை அதிகாரத்தின் கீழ் செய்யும் வழக்கமான வேலை போல் செய்ய முடியாது.
163. நாள்தோறும் அர்த்தமில்லாத வேலைகளைச் செய்துகொண்டு ஒருவர் தம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம். அதனால் அவர் உருப்படியாக ஏதேனும் சாதிக்கிறார் என்று சொல்ல முடியாது.
164. பண்புகளைக் கடைப்பிடிப்பதில் பல நிலைகள் இருக்கின்றன. சுத்தம், காலம் தவறாமை, தரம், மற்றும் செயல் நேர்த்தி என்று இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பதில் நிறைவை எட்டிவிட்டோம்என்று அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட முடியாது.
165. ஆகவே பண்புகளைக் கடைப்பிடிப்பதில் நாம் எந்நிலையில் உள்ளோம் என்று அடிக்கடி நம்மைப் பரிசீலனை செய்துகொள்வது அவசியமாகிறது.
166. எண்ணிக்கை அதிகரிக்கும்பொழுது தரம் குறைகிறதுஎன்பதை நாம் மருத்துவம் மற்றும் கல்வித்துறைகளில் பார்க்கிறோம். இதற்கு விதிவிலக்கு உண்டு என்றால், அதை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
167. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் கருத்துப்படி எண்ணிக்கை மற்றும் அளவு, தரம் என்று இவற்றிலுள்ள வித்தியாசங்கள் எல்லாம் நமக்கு நிஜமாகத் தெரிகின்றனவேயொழிய சத்தியஜீவிய நிலையில் இவையெல்லாம் வெறும் பிரமைதான்.
168. ஆன்மீக குணங்கள் நம் அறிவின்மூலம் வெளிப்படும்பொழுது பண்புகளாக உருவெடுக்கின்றன. உதாரணமாக, உண்மை ஆன்மீகத்திற்கு உரியது. நம் அறிவின்மூலம் பண்பாக வெளிப்படும்பொழுது நேர்மையாக வெளிப்படுகிறது.
169. சிறு விஷயங்களில் நாம் வெளிப்படுத்தும் நேர்த்தி முக்கியமான இடங்களில் நேர்த்தி இருப்பதற்கு அறிகுறியாகவும் அமையும்.
170. முதல், டெக்னாலஜி, மார்கெட் மற்றும் விற்பனையாகும் பொருள் என்று இவையெல்லாம் கண்ணுக்குத் தெரிந்த கம்பெனிச் சொத்துக்களாக அமைகின்றன. ஆனால், ஆர்கனைசேஷன்என்பது கண்ணுக்குத் தெரியாத சொத்தாகும்.
171. அழகாக, தெளிவாகப் பேசக்கூடிய திறமை ஒருவருடைய சாதிக்கும் திறனைப் பல மடங்கு அதிகரிக்கும்.
172. சுருக்கமான பேச்சு சிந்தனையின் தெளிவைக் குறிக்கும். அழகான மேடைப் பேச்சு சொல்வன்மையைக் குறிக்கும்.
173. அரசியல் தலைவர்கள் தம்முடைய பேச்சுத் திறனால் ஒரு நாட்டிற்கே போர் வெறியை உண்டாக்கியுள்ளார்கள். அதே சமயத்தில் அதே பேச்சுத் திறனால் வருகின்ற தாக்குதலைச் சமாளித்து நாட்டைப் பாதுகாக்கவும், மக்களை கிளர்ந்து எழவும் செய்துள்ளார்கள். பேச்சுத் திறன் இப்படி இரு வகைகளிலும் செயல்படக்கூடியது.
174. அதிகாரமாகப் பேசும்பொழுது நம் குரலை உயர்த்திப் பேசுவது வழக்கம். அதனால் நம் நெடுநாள் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது நம் குரலைத் தாழ்த்திப் பேசுவது நம்முடைய எனர்ஜியைச் சேகரிக்க உதவும்.
175. ஒரு தெளிவான மற்றும் முறையான கம்யூனிகேஷன் நெட்வொர்க் இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் அதனுடைய துறையில் முன்னணிக்கு வர முடியாது.
176. வெளிப்படையாகச் சொல்லிக் கேட்பதைவிட மௌனசக்தி காரியத்தை விரைவுப்படுத்தும். ஏனென்றால் நாம் மௌனமாக இருக்கும்பொழுது சக்தி விரயமாகாமல் முழுமையாக வேலைக்குச் செயல்படுகிறது.
177. பெருமையடித்துக்கொள்ளும்பொழுது நம்முடைய எனர்ஜி விரயமாவதால் அந்த அளவிற்கு அது வேலையைக் கெடுக்கும். பெருமையடித்துக் கொள்ளாமல் அமைதியாக வேலையைச் செய்கின்றவர்கள் அந்த அளவுக்கு வேலையை வெற்றிகரமாகச் செய்வார்கள்.
178. பகவான் ஸ்ரீ அரவிந்தரின் கருத்துப்படி மனிதன் பேசும் மொழிக்கு ஆழமும் இல்லை, உயரமும் இல்லை. அதனால்தான் அந்நாட்களிலேயே பரம்பொருளை வார்த்தைகளால் விவரிக்க இயலாதுஎன்று ஞானிகளும், ரிஷிகளும் கூறியிருக்கிறார்கள்.
179. ஆன்மீக அனுபவங்களை விவரித்துச் சொல்வதைவிட அமைதியான முறையிலேயே அதை மற்றவர்களுக்கு நாம் வழங்கலாம். ஏனென்றால் அந்த அனுபவங்கள் சம்பந்தப்பட்ட உணர்வுகளும் நாம் கையாளும் அமைதியைப்போல் மிகவும் சூட்சுமமானது.
180. நம் அறிவு மற்றும் உணர்வு மற்றும் உடம்பு ஆகியவை செய்கின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக நம் ஆன்மாவின் குரல் வெளியில் கேட்காமலேயே போய்விடுகிறது. மேற்கூறிய இம்மூன்றும் ஆர்ப்பாட்டம் இன்றி அடங்கிப்போனால் நம்முடைய ஆன்மாவின் குரல் தெளிவாகக் கேட்கும்.
தொடரும்.....
****
ஸ்ரீ அரவிந்த சுடர் கருணையும், இனிமையும் தெய்வத்தின் சுபாவம். ஒருவரிடமாவது மனிதன் கருணையுடனும், இனிமையுடனும் இருக்கலாம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வான். கருணையை ஏற்று கடவுளாகும் மனிதன். |
- Login to post comments