09.யோக வாழ்க்கை விளக்கம் V
யோக வாழ்க்கை விளக்கம் V
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
914) அடுத்த உயர்ந்த தீவிரத்திற்கு நன்றியறிதல் நகர்ந்தால் முன்னிலையில் நன்றியறிதல் பூர்த்தியாகும்.
பலன் முன்னிலைக்கு வரும்.
ஓராண்டு பயிற்சிக்கு அமெரிக்கா போக ஒரு சர்க்கார் ஊழியருக்கு ஏற்பாடாயிற்று. சர்க்கார் ஊழியர் வெளிநாடு போக சர்க்கார் அனுமதி தேவை. சர்க்கார் அனுமதிபெற ஓராண்டாகும், அல்லது கிடைக்காதுஎன்று அறிந்தவர் சர்க்கார் வேலையை இராஜினாமா செய்தார். அமெரிக்கா போய் வருவது அந்தக் காலத்தில் பெரிய அந்தஸ்து. போய் வந்தால் நடப்பதுபோல் போவதற்கு முன் நடக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு விசா கிடைக்கவில்லை. அத்துடன் அவர் விண்ணப்பத்தைப் பார்த்த அமெரிக்க எம்பஸி "இன்னும் இரண்டாண்டுக்கு விசாவுக்கு விண்ணப்பிக்கக் கூடாது'' என உத்தரவிட்டனர். அதன் பிறகு அவர் அமெரிக்கா போகவே இல்லை.
. மனிதன் இனி வரப்போகும் நிலைக்குரிய அந்தஸ்தை நாடுவான்.
. அந்தஸ்து வர விஷயம் முடிய வேண்டும். முடிந்தும் நாளான பின்னரே
அந்தஸ்து வரும்.
M.L.A. எலக்ஷனில் ஜெயித்துவிட்டால் மறுநாள் அவர் M.L.A.ஆகிவிடுவார். உடனே அவர் வீடு M.L.A. வீடாகும். பதவிக்குரிய அம்சம் அது. படிப்புக்கு அது இருக்காது. பட்டப்படிப்பில் சேர்ந்தால் பாஸ் செய்ய சில வருஷமாகும். பாஸ் செய்த அடுத்த ஆண்டு பட்டம் வரும். பிறகு வேலை உடனேயும் கிடைக்கும், நாள் தள்ளியும் கிடைக்கும். வேலை கிடைத்தபின் படிப்புக்குரிய மரியாதை வரும். வேலை கிடைக்கவில்லைஎனில் அந்த மரியாதையில்லை. பெரிய கம்பனி ஆரம்பிப்பதாக பேப்பரில் பெரிய விளம்பரம் போட்டவுடன் பெரிய கம்பனிக்குரிய அந்தஸ்து வரும். சிறிய கம்பனி ஆரம்பித்தால் அது இருக்காது. கம்பனி ஆரம்பித்து சம்பாதித்து வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தால் கம்பனிக்குரிய மரியாதை வரும்.
. மனிதன் வரப்போகும் நிலைக்குரிய அந்தஸ்தை எதிர்பார்க்கும் பொழுது ஊர்
முந்தையநிலை பலன் கொடுக்குமாஎன நினைக்கும். முந்தைய நிலை பலன்
கொடுத்தாலும் நீடிக்குமா எனப் பார்க்கும்.
. நன்றியறிதலுக்குப் பல நிலைகள் உண்டு.
1. வாயால் நன்றி என்று சொல்லுதல்.
அது பலருக்கு முடியாது, வாராது, மறந்துபோகும்.
2. உணர்ந்து, மலர்ந்த முகத்துடன் வாயால் நன்றி கூறுதல்.
இவர்கள் சொல் உணர்வால் பூரித்து நயமாகச் சிறக்கும்.
3. நெகிழ்ந்து, கண்ணீர் மல்க வாயால் பேச முடியாத நிலை.
4. உள்ளம் பூரித்து, உடல் புல்லரித்து, சொல் சிரமப்பட்டு எழுந்து புன்னகையாக மலரும் நிலை.
எந்த நிலையில் நாமிருந்தாலும் முன்னிலையில் நன்றியறிதல் பூரணம் பெறும்; பூர்த்தியாகும். வாழ்க்கை நம் மனம் போல நடக்கும்; அது நடக்கத் தவறாது. எது செய்தாலும் வாழ்க்கை நம் நிலையை மனதில் கொண்டு அதற்கேற்ப செயல்படும்.
நன்றியை யாருக்குச் செலுத்தினாலும் வாழ்க்கை
அனைவர் மூலமும், அனைத்து மூலமும் தன்
நன்றியைச் செலுத்தும். உள்ளத்தின் நிலைக்கேற்ப
வாழ்வின் பதில் பல மடங்கு சிறப்பாகவும்,
உயர்வாகவும் அமையும்.
நன்றி வாழ்வின் நல்வித்து.
****
915) இலட்சிய உணர்வு, சேவை, உழைப்பு ஆகியவை பத்து வருஷ காலத்தில் முதிர்ந்து அடுத்த பத்து வருஷத்திற்குக் கடின உழைப்பைத் தருகிறது. முதல் பத்து வருஷம் உணர்வில் எழுந்த உருவங்கள் அடுத்த பத்து வருஷ உழைப்பால் வலியுறுத்தப்பட்டு உறுதி செய்யப்படுகின்றன.
பத்தாண்டு மனப்போராட்டம் பத்தாண்டு அதிர்ஷ்டமான உழைப்பைத் தரும்.
. எண்ணம், உணர்வு, செயல், மனம், உயிர், உடல் எழுகின்றன.
. உடல் எழும் செயலுக்கு உயிரில்லை.
. உணர்வில் எழும் செயல் வேகமாகச் செயல்படும்; அதற்கறிவில்லை.
. மனத்தில் எழும் செயலுக்கு அறிவுண்டு. ஆனால் தெம்பிருக்காது; செயலாக மாற அதற்கு உடலின் ஒத்துழைப்பு வேண்டும்.
. உடல் நடக்கும்.
. வேகம் வந்தால் உற்சாகமாக நடக்கும்; எங்கு போகிறோம் எனத் தெரியாது.
. மனம் கடைக்குப் போக நினைத்தால், அந்த நினைப்புக்குத் தெம்பு இருக்காது; கால் எழுந்து போகாது.
. மனம் நினைப்பதற்கு தெம்பு வேண்டுமானால் உயிர் அதை ஆமோதிக்க வேண்டும்; உடல் ஒத்துழைக்க வேண்டும்.
. மனம் சினிமாவுக்குப் போக நினைத்தால் உயிர் தெம்பு தரும்; கால் எழுந்து ஒத்துழைக்கும்.
. சினிமாவுக்குப் போகும் எண்ணம் உதயமாவதுபோல் ஆபீஸுக்குப் போக மனம் நினைப்பதில்லை.
. அப்படி நினைத்தால் உற்சாகம் வருவதில்லை.
. உற்சாகம் வந்தால் கால் ஒத்துழைக்காது.
. ஒத்துழைக்காவிட்டால் வற்புறுத்தி செய்ய வேண்டும்.
. வற்புறுத்தி செய்யும் காரியம் பலன் சிறியதாக இருக்கும்.
. இலட்சியமான எண்ணம் மனதில் எழுவதில்லை; எழுந்தால் உயிரும், உடலும் ஒத்துழைக்கா.
. இலட்சியம் மனதில் தோன்றி, வளர்ந்து, சிறந்து, செறிவுபட நாளாகும்.
அதற்கு மனம் போராடும்.
போராட்டம் மனத்திற்கு வெற்றி தந்தால், அதற்குள் பத்து வருஷம் ஓடிவிடும்.
அது உயிரால் தெம்பு பெற்று, உடல் ஒத்துழைப்பால் செயல்பட்டால் பத்து வருஷம் செயல் நீடிக்கும். இது சமூகச் சேவை.
. சமூகச் சேவையைவிட தார்மீகச் சேவை - சத்தியத்தைக் கடைப்பிடித்தல், நல்லவனாக இருப்பது - மனத்தில் எழுவது சிரமம்.
. ஆன்மீக இலட்சியம் அதனினும் உயர்ந்தது.
. அன்னையை அறியும் ஆவல் ஆன்மீகச் சேவையைவிடச் சிறந்தது.
அதற்குப் பூர்வஜென்மப் புண்ணியம் தேவை.
அது மனதில் எழுந்து, உணர்வில் கனிந்து, செயலாகச் சிறக்கப் பத்து வருஷம் போதாது; பல ஜன்மங்களாகும்.
. பல ஜன்மங்களில் சேகரம் செய்த புண்ணியத்தை ஆன்மீகப் பலனாக மாற்றுவது யோகம். யோகத்திற்குப் பயன்படுத்தாமல் வாழ்க்கை சௌகரியத்திற்கு அதைப் பயன்படுத்துவது எளிது. அது வாழ்க்கை அபரிமிதமாகப் பரிமளிக்க உதவும். அப்படிச் செய்தால் தொட்டதெல்லாம் பொன்னாகும். செய்யாத வேலையும் பலிக்கும், தகுதிக்குமேல் வாய்ப்பு வரும், திறமைக்குமேல் பலன் கிடைக்கும். எந்தத் தவறு செய்தாலும் தண்டனை கிடைக்காது.
எதிரி எல்லா இடங்களிலும் தோற்பான். வாழ்வு இனிதாகும்.
பல ஜன்மங்களில் சேகரம் செய்த புண்ணியம் சில நாட்களில் முழுவதும் செலவாகும்.
செலவானபின் வாழ்க்கை தடம் புரளும். ஏற்கனவே இருந்ததற்கு எதிராகச் செயல்படும். வாழ்க்கைப் போராட்டம்என்பது என்னஎன்று தெளிவாகத் தெரியும். அந்த நிலையிலும் கொடுத்த காணிக்கை,செய்த சேவை, உள்ளத்து உண்மை ஓரளவு காப்பாற்றும். எந்த நேரமும் அருள் மிச்சமாக இருக்கும். மெனக்கெட்டு விலக்காவிட்டால் நம்மை விட்டு நகராது. துரோகம் செய்யாவிட்டால் அருள் மறையாது.
தொடரும்.....
ஜீவிய மணி குருவுக்குரியது உள்ளத்தின் குகை. |
ஸ்ரீ அரவிந்த சுடர் ஏன் வெளியிலிருந்து நம்முள் எதுவும் வரவேண்டும்? நம் ஜீவனின் அமைப்பு அவற்றை ஈர்த்து ஏற்றுக்கொள்கிறது. அந்த அமைப்பைக் கரைக்க வேண்டும். கரைய வேண்டிய ஜீவனின் அமைப்பு. |
- Login to post comments